இரண்டு நாளும் இரண்டு மணித்துளிகள் போல அதிவேகமாய் கடந்து போயின. ராஜகோபால் அவரது தொழில்முறை சுற்றத்தாருக்கு ‘பிசினஸ் கிளப்’பில் ‘பொது அழைப்பு’ கொடுத்துவிட, அதுத்தாண்டிய பலருக்கு முடிந்த வரை நேரிலும், முடியாத பட்சத்தில் அலைபேசியிலும் அழைப்பு விடுத்திருந்தார்.
விழா காரியங்களை முன்னே நின்று கண்ணும் கருத்துமாய் கவனித்துக்கொண்டிருந்தார் ஜெயதேவ். ராஜகோபாலுக்கு எந்த வேலையும் வைக்காமல், அவரே எல்லாம் செய்ய, இருந்த இரு நாட்களை ‘அழைப்பு விடுக்க’ நிம்மதியாய் பயன்படுத்தினார் ராஜகோபால்.
மதுதேவா தன்யாவுக்கு அலங்காரம் செய்யும் பெரும் பொறுப்பை தனதாக்கிக்கொண்டிருந்தாள்.
இருவீட்டின் மூத்த வாரிசுகளும் சொல்லிவைத்தார் போல வெளிநாட்டில் சுற்றிக்கொண்டிருக்க, கிருஷ்ணாவுக்கு உடனே கிளம்பி இந்தியா வருவது சிரமமாகி போனது. ஆதலால், எப்போதும் போல நிகழ்வு நேரடி ஒளிப்பரப்பில் மதுதேவா மூலம் கிருஷ்ணாவுக்கு ‘காட்சிக்கடத்தல்’ செய்வது எனவும், ஆதியின் திருமணத்திற்குள் ‘விசா’ வாங்கிக்கொண்டு இந்தியா வருவது என்றும் துரிதமாய் முடிவுசெய்யப்பட்டது.
தங்கைக்கு ‘திருமணம்’ அதிலும் ‘காதல் திருமணம்’ என செய்தி கேட்டதுமே, அங்கிருந்த அவசர வேலைகளை முடித்துக்கொண்டு, உடனே கிளம்புவதாய் சொல்லிவிட்டான் சுரேந்தர். ரெசார்ட்டின் இறுதிக்கட்ட பணிகள் சற்றே அவனின் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தது.
பெரும் வேலைகள் கூட குறுகிய இரு நாட்கள் இடைவெளியில் எளிதாய் நடக்க, தன்யாவை சம்மதிக்க வைப்பது மட்டுமே அங்கு கடினமான வேலையாக அமைந்தது.
ஜெயதேவ் குடும்பம் ராஜகோபால் வீட்டிருக்கு வந்திருந்த அன்று காலை அவர் திருமண பேச்சை ஆரம்பித்தபோது, ‘ஆபிஸ் கிளம்புறேன்’ என சொல்லி வேகமாய் சென்ற தன்யா, இரவு வீட்டிற்கு வருகையில் வீடே சற்று சுறுசுறுப்பாக இருப்பதை போல தோன்ற, ‘என்னவோ நடக்கிறது!’ என்பதை மட்டும் கணித்திருந்தாள்.
இரவு உடை மாற்றி உணவருந்த வந்தவள் டைனிங் டேபிளில், காலையில் சந்தித்த ஜெயதேவின் குடும்பம் இன்னமும் இருப்பதைக்கண்டு, “இவங்க இங்கேயே தங்கிட்டாங்களா?” என நினைக்க, அதையே தெய்வாவும் சரியாய் கேட்டார்.
“நாங்க எங்க பையன் இருக்க வீட்டுக்கே போறோம்ன்னு எவ்வளவோ சொன்னோம்! உங்க அப்பா’ம்மா தான் கேட்கல” என அவர் சொல்ல, சம்பிரதாயத்துக்காகவேனும், “அதுக்கென்ன ஆன்ட்டி! இங்கேயே இருங்க!” என்று தன்யா சொல்ல வேண்டியதாய் போனது.
ஆனால், மனதிற்குள், “மறுபடி திருமண பேச்சை தொடங்குவார்களோ?” என்ற நெருடல் எழாமல் இல்லை.
அவசரமாய் உண்டவள் எழுந்து போக பார்க்க, லட்சுமி அப்படியே பிடித்துக்கொண்டார்.
“நில்லு தன்யா! உனக்கு கல்யாணம் பேசலாம்ன்னு இருக்கோம்! இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயதார்த்தம்!” முன்னுரை ஏதுமின்றி லட்சுமி விஷயத்தை போட்டு உடைக்க, திகைத்து போனாள் தன்யா.
“என்னம்மா உளருறீங்க?”
“அவ உளறல! உண்மையை தான் சொல்றா! நிச்சயம் முடியுறவரை நீ ஆபிஸ் வர வேண்டாம்! உன் பிரண்ட்ஸ் யாரையாவது இன்வைட் பண்ணனும்ன்னா பண்ணு! நம்ம வீட்ல தான் பங்ஷன்!” என்றார் ராஜகோபால்.
“வாட் த….!!!” கத்தப்போனவள், புதியவர்களின் பார்வையில் குரலை அடக்கி, “அப்பா நான் ஆல்ரெடி சொல்லிட்டேன்! எனக்கு…..கல்யாணம்….ஆகிடுச்சு!!!!” என்றாள் நிறுத்தி நிதானமாய்.
அவரோ, “பரவால்ல! இன்னொரு முறை பண்ணிக்கோ” என இலகுவாய் சொல்ல, ‘ங்ஞே’ என விழி பிதுங்கி நின்றாள் தன்யா.
[the_ad id=”6605″]
அவள் திகைத்த நொடியை தனதாக்கியவர், “உனக்கும், இதோ இருக்கானே! என் நண்பன் ஜெயதேவ்! அவனோட பையனுக்கும் கூடிய சீக்கிரமே கல்யாணம்! இன்னும் இரண்டு நாள்ல நிச்சயம்! இப்போ போய் தூங்கு” என சொல்ல, தந்தை தன்னிடம் இத்தனை நாட்களுக்கு பின் நேரிடையாய் பேசும் மகிழ்வை இழந்தவளாய்,
“என்னால யாரையும் கல்யாணம் செஞ்சுக்க முடியாதுப்பா! அதுக்கு மேல போர்ஸ் பண்ணா, நான் இங்க இருந்து போய்டுவேன்” என்றாள் அவளுடைய மாமூலான மிரட்டலை கையில் எடுத்து.
அதற்க்கும் அசராத ராஜகோபால், “என்னோட முடிவை நான் சொல்லிட்டேன்! எங்க போறதா இருந்தாலும் கல்யாணத்தை முடிச்சுக்கிட்டு மாப்பிள்ளையோட கிளம்பு!” என திடமாய் சொல்லிவிட்டு செல்ல, “அப்பா சொல்றதை கேளு தன்யா! மாப்பிள்ளை யாருன்னா…..!” என லட்சுமி ஆரம்பித்ததுமே,
“அது எவனா வேணா இருந்துட்டு போட்டும்! எவனையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது” என கத்தி சொன்னவள், சொன்னது ‘ஜெயதேவ் வீட்டினர்’ காதுகளில் விழுந்ததா? என ஒரு பார்வை பார்த்துவிட்டு பின்பக்க ‘கார்டனுக்கு’ சென்றாள்.
லட்சுமிக்கோ கோவம் கோவமாய் வந்தது. மாப்பிள்ளை வீட்டினர் முன்பே அவர்கள் வீட்டு பிள்ளையை மரியாதை குறைச்சலாய் பேசிவிட்டாளே! அவர்கள் தன்யாவை தவறாய் நினைக்கக்கூடுமே!? என்ற சங்கடத்திலும், ‘பிள்ளை வளர்த்துருக்கேன் பார்’ என தன்னையே கடிந்துக்கொண்டு, அவர்களை சமாதானம் செய்யலாம் என போக, அங்கே ஜெயதேவ், “உன் புள்ள லட்சணம் தெரிஞ்சு தான் என் மருமவ அவனை வேண்டாங்குறா!” என சிரித்துக்கொண்டிருந்தார் தெய்வானையை பார்த்து.
கணவரை முறைத்த தெய்வா, “இந்த அளவு தெளிவு எனக்கிருந்திருந்தா நானெல்லாம் உங்களை நம்பி ஊரை விட்டே வந்துருக்க மாட்டேன்! ஹும்ம்!!” என முகத்தை சுளித்துக்கொள்ள,
“உண்மையில ஏமாந்து போனது நான் மட்டும் தான்! உன்னைப்போய் கட்டுனேனே!” என அவர் சொல்ல, தெய்வா, “வெவ்வ வெவ்வே” என பழிப்புக்காட்ட, லட்சுமிக்கு ‘என்ன நடக்குடா?’ என மலைத்து போனது.
மதுதேவா அவளுக்கென கொடுத்த அறைக்குள் காதில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு ஒளிந்துக்கொண்டாள். லட்சுமி அடுக்களைக்குள் சென்று பாலை காய்ச்ச ஆரம்பிக்க, தெய்வா அவர் பின்னோடு கிச்சனுக்குள் நுழைந்தார்.
“என்ன பண்ணப்போற லட்சுமி?”
“எல்லாருக்கும் பாலை காய்ச்சு குடுக்கலாம்ன்னு இருக்கேன் அண்ணி!” என லட்சுமி சொல்ல, “அய்ய.. அசடு! நான் தன்யாவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க என்ன செய்ய போறன்னு கேட்டேன்” என்றிட,
“ம்ச்! தெரியலையே அண்ணி!” என முகம் வாடினார் லட்சுமி.
“என்னவோ அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்புன்னு காலைல வீராவேசம் பேசுன?” என தெய்வா சொல்லிக்காட்ட, இன்னமும் வாடிப்போனது அவர் வதனம்.
அதைக்கண்ட தெய்வா, “சரி நானே ஏதாவது யோசிக்குறேன்” என்று சொல்லி, குறுக்கும் நெடுக்கும் நடக்க, பால் சூடாகிக்கொண்டிருந்தது. லட்சுமி நடக்கும் அவரையே பார்த்துக்கொண்டு நிற்க, சட்டென நின்ற தெய்வா, “உன் பொண்ணுக்கு உன்னை பிடிக்குமா?” என்றார் கேள்வியாய்.
‘இதென்ன கேள்வி?’ என்பதை போல மூக்கை சுருக்கிய லட்சுமி, “பிடிக்குமே!” என பதில் சொல்ல, ‘பட்’ என கைத்தட்டி, “சூப்பர்” என்ற தெய்வா எதையோ யோசித்தவராய் சுற்றும் முற்றும் இருமுறை பார்த்தார்.
பால் பொங்கி வழிய தயாராக, லட்சுமி அடுப்பை அணைக்க செல்ல, அதைக்கண்ட தெய்வா, ஐடியா கிடைத்துவிட்டதை போல “யெஸ்” என சொல்லியபடி, ஒரு ஸ்பூனை எடுத்துக்கொண்டு அடுப்பின் அருகே சென்றார்.
பாத்திரம் நிறைந்த பாலில் இருந்து சில துளிகளை ஸ்பூனில் அள்ளியவர், சடாரென அதை லட்சுமியின் கரத்தினில் தெளிக்க, பாலின் சூட்டால், “ஸ்ஸ்… ஆஆ” என முனகினார் லட்சுமி.
[the_ad id=”6605″]
அதைப்பார்த்த தெய்வா, “என்ன முனகுற? கத்து நல்லா!” என்று சொல்ல, பால் தெளித்த இடத்தை நீரில் காட்டிக்கொண்டே, “போங்கண்ணி… ரெண்டு சொட்டு பாலு பட்டதுக்கு போய் யாராவது கத்துவாங்களா? அதெல்லாம் வலிக்கல” என்றார் லட்சுமி, தெய்வாவின் திட்டம் உணராது.
“வலிக்கலயா?” என்ற தெய்வா, மீண்டும் ஸ்பூனில் பாலை அள்ளி அவரது கரத்தில் வீச, இம்முறை, “ஸ்ஸ்ஸ்… ஆஆஆ” என சிறிது சத்தமாய் முனகினார் லட்சுமி.
தெய்வா, “ஐயோ என்ன நீ கத்த சொன்னா, ‘ஆடலுடன் பாடலை கேட்டு’ன்னு நான் பாடிக்கிட்டு மாறி ‘ஸ்ஸ்..ஆ’ ‘ஸ்ஸ்…ஆ’ன்னு கோரஸ் குடுத்துட்டு இருக்க?”
“எதுக்கு அண்ணி இப்படி செய்யுறீங்க நீங்க?”
தெய்வா, “எதுக்கோ செய்றேன்! கத்த சொன்னா நீ கத்த வேண்டியது தானே? உனக்கு கொஞ்சம் கூட சாமர்த்தியம் பத்தல” என கடிந்துக்கொண்டவர், “சரி ஒழுங்கா சத்தம் போட்டு கத்து” என்றார்.
அப்போதும் லட்சுமி குழம்பிப்போன குட்டையென பாவமாய் தெய்வாவை பார்த்து வைக்க, “இப்போ நீ கத்தல, சட்டில இருக்க மொத்த பாலும் உன் கைல தான் இருக்கும்!” என தெய்வா மிரட்டியதில் சற்றே மிரண்டு போன லட்சுமி,
“ஆஆஆ…” என அவரை பார்த்துக்கொண்டே சத்தம் கொடுக்க, அச்சத்தம் அந்த ‘மாடர்ன் கிட்சனை’ கூட தாண்டாது என்று உணர்ந்த தெய்வா, ‘இனி பேசி பயனில்லை’ என ஓங்கி ஒரே மிதியாய் லட்சுமியின் காலை மிதிக்க, எதிர்ப்பாராத வலியில், உச்ச சுருதியில், “ஆஆஆஆஆஆ…..” என அலறினார் லட்சுமி.
அலறியவரை கீழே அமர வைத்து பால் சிதறிய கரத்தை அவர் முந்தானை கொண்டு தெய்வா சுற்றி முடிக்கவும், வீட்டில் இருந்த எல்லோருமே அந்த இடத்திற்கும் வரவும் சரியாய் இருந்தது.
வேகமாய் வந்த ராஜகோபால், “என்னம்மா ஆச்சு? என்னாச்சு லட்சுமிக்கு?” என பதற, லட்சுமியின் அருகே கீழே அமர்ந்தவருக்கு தன் முட்டை கண்களால் பலவித சிக்னல் கொடுத்தார் தெய்வா.
அதெல்லாம் அவருக்கு எப்படி புரியும்?! மீண்டும் மீண்டும் அவர் விசாரணை செய்ய, ஓடி வந்த தன்யா, “ம்மா! என்னமா ஆச்சு?” என பதறிப்போய் அன்னையை நலம் விசாரிக்க ஆரம்பித்தாள்.
அனைவர் பதட்டத்தையும் கண்ட லட்சுமி, “ஒன்னும் இல்ல….” என ஆரம்பிக்க, முந்தானையில் மறைந்திருந்த அவரது அடிக்கையை ‘நறுக்’கென கிள்ளினார் தெய்வா.
வலியில் மீண்டும் லட்சுமி, “ஆஆஆ…” என கத்த, ராஜகோபால் பதறிக்கொண்டு, “வா வா நம்ம ஹாஸ்பிடல் போலாம்!” என்றார் அவரை தூக்க முயன்றபடி.
தெய்வா தன்னால் முடிந்த மட்டும் ராஜகோபாலுக்கு பலநூறு சிக்னல் கொடுக்க, அதைக்கவனித்த ஜெயதேவ், ‘என்னமோ ப்ளான் பண்ணிட்டா! இது இவ வேலை தான்!’ என சரியாய் உணர்ந்து, “ராஜா, நீ வா! நம்ம டாக்டரை வர சொல்லுவோம்” என வலுக்கட்டாயமாக அங்கிருந்து ராஜாவை நகர்த்தி சென்றார்.
தன்யா பதட்டத்துடன் தாயை ஒருபுறமாய் அணைத்தபடி, “என்னமா பண்ணுது?” என கேட்க, ‘ம்ஹும் ம்ஹும்’ என விசும்பிய தெய்வா, “என்னனு சொல்றது? உங்கம்மா காய்ச்சுன பாலை அள்ளி கைல கொட்டிக்கிட்டா” என்றார் கலக்கமாய்.
“ஐயோ! என்னமா நீங்க?” அதீத பதட்டமாய் அவள் கரத்தை ஆராய வர, “எல்லாம் உன்னால தான்!!” என்றார் தெய்வா வேகமாய்.
“என்னாலயா? ஏன்?”
[the_ad id=”6605″]
“அது…. அ…து….!! பின்ன, நீ கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு பிடிவாதமா சொன்னா? அதுல மனசொடிஞ்சு போய் தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணிட்டா” வாயில் வந்ததை உளறிக்கொட்டிவிட்டார் தெய்வா.
“என்ன ஆன்ட்டி உளருறீங்க? கைல பால் தானே கொட்டினதா சொன்னீங்க? இப்ப தற்கொலை அது இதுன்னு பேசுறீங்க?” என தன்யா எரிச்சலாய் கேட்க, ‘ஐயோ, சமாளி தெய்வா!’ என தனக்கு தானே தைரியம் சொல்லிக்கொண்டு அடுத்து அள்ளி விட்டார் தெய்வா.
“தற்கொலைன்னா, தூக்குல தொங்குறது, கத்தில குத்திக்குறது, மாத்திரை முழங்குறது, அப்புறம்…. அப்புறம்…. ஹான்! ரயில் முன்னாடி குதிக்கிறது.. இவ்ளோதானா? ஏன் கைல பால் கொட்டினா சாக முடியுதா?” என தெய்வா தன் பேச்சை நியாயப்படுத்தப்பார்க்க, தன்யாவின் முகமே அதீத கடுப்பை கண்ணாடி போல காட்டியது.
சற்றும் சளைக்காத தெய்வா, “கைல பால் கொட்டின இடம் அப்படியே கொப்பளிச்சுக்கும்! சரியா கவனிச்சு மருந்து போடலன்னா செப்டிக் ஆகும், செப்டிக் ஆச்சுன்னா சீல் வைக்கும், சீல் வச்சா, அந்த இடமே அழுகி போய்டும்! அழுகிப்போன இடத்தை, ஆப்பரேசன் பண்ணணும்… உங்கம்மாக்கு ‘சுகர்’ வேற இருக்கு! ஆப்பரேசன் பண்ணா, புன்னு ஆறாம, புரையோடி… கடைசில கையை வெட்டி எடுக்கணும்ன்னு டாக்டர் சொல்லுவான்! ஒரு கை போனதுக்கு அப்புறம் உங்கம்மா ஒத்த கையை வச்சுக்கிட்டு எத்தனை நாள் உயிரோட இருப்பா!? நீயும் கல்யாணத்துக்கு ஒத்துக்கலங்குற விரக்திலயே நாக்கு இழுத்து மூச்சு திணறி செத்தே போவா!!!” சொல்லிமுடிக்கையில் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது அவருக்கு.
கேட்டுக்கொண்டிருந்த லட்சுமிக்கு உண்மையிலேயே இப்படியெல்லாம் நடக்குமோ?! என்ற அதிர்விலேயே கண்ணை இருட்டிக்கொண்டு வர, தன்யா பயங்கர எரிச்சலில், “ரொம்ப ரப்பிஷ்ஷா இருக்கு ஆன்ட்டி நீங்க உளறுறது! முதல்ல நகருங்க, நான் ‘பர்ஸ்ட் எய்ட்’ பண்ணிவிடுறேன்! காயத்தை காட்டாம துணி வச்சு மறைச்சா எப்படி தெரியும் எனக்கு?” கோபமாய் கத்திக்கொண்டே, முந்தானையை நகர்த்திவிட்டு லட்சுமியின் கரத்தை பார்க்க முயல, ‘கெட்டுச்சு போ’ என பதறிய தெய்வா,
“நீ கல்யாணத்துக்கு சம்மதிக்காம அவ காயத்துக்கு மருந்து போட்டுக்க மாட்டா!” என சொல்ல, ‘இது எப்ப?’ என மிரண்டு போய் தெய்வாவை பார்த்தார் லட்சுமி.
கண்களாலேயே, ‘சொல்லித்தொல’ என தெய்வா ஜாடைக்காட்ட, அதிசயத்திலும் அதிசயமாய் அதை புரிந்துக்கொண்ட லட்சுமியும், “ஆமா… ஆமா..” என ஒத்து ஊதினார்.
ராஜகோபாலை தனியே அழைத்து சென்ற ஜெயதேவ், ‘இது தெய்வாவின் கலகம்’ என மனைவியின் வீரதீர வாய்த்திறமைகளை எடுத்துரைத்து அவரை ஒருவாறு இந்த சூழ்நிலைக்கு தயார்ப்படுத்தியிருக்க, மீண்டும் லட்சுமியிடம் வந்த ராஜகோபால், தெய்வாவுக்கு ஏற்றார் போல பேச தொடங்கினார்.
“நீ தான் கல்யாணம் பண்ணாம ஒண்டிக்கட்டையாவே இருந்து எங்களை டார்ச்சர் பண்றன்னா, என்னை கல்யாணம் பண்ணவளையும் என்கிட்ட இருந்து பிரிச்சு என்னை ஒண்டிக்கட்டையாக்க பார்க்குறியே?” என அலட்ற,
“ப்பா??? நீங்களும் என்னப்பா லாஜிக்கே இல்லாம பேசிட்டு இருக்கீங்க?” என தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்துவிட்டாள் தன்யா.
“ஏம்மா, இப்டி பெரியவங்களை எல்லாம் பாடாப்படுத்துற? உன் சந்தோஷம் தான் முக்கியம்ன்னு எப்பவும் நினைக்கக்கூடாது?” என நாடகத்தில் தனக்கொரு வசனத்தை உருவாக்கிக்கொண்டு ஜெயதேவ் பேச, “என்னடா இது?” என தலை கிறுகிறுத்தது தன்யாவுக்கு.
சில நொடிகள் அங்கே அமைதி நிலவ, ‘விடக்கூடாதே’ என முடிவெடுத்த தெய்வா, லட்சுமியின் முகத்தை சட்டென தன் நெஞ்சோடு மறைத்தபடி, “ஐயோ லட்சுமி, உனக்கு மூச்சு முட்டுதே! நான் என்ன பண்ணுவேன்!!!” என புலம்ப, ஜெயதேவும், “தங்கச்சி… இப்படி அவசரப்பட்டுட்டியே தங்கச்சி” என கத்த,
“லட்சுமி, என்னை விட்டுட்டு போக முடிவு எடுத்துட்டியா? உன் புருஷனை விட, இதோ இவ கல்யாணம் பண்றது உனக்கு முக்கியமா போச்சா?” என தன்யாவை காட்டி ராஜகோபால் கதற, மூவரும் சுற்றி சுற்றி கொடுத்த ‘பர்பாமென்சில்’ உச்சந்தலை சூடாக, ‘பைத்தியமே பிடிக்கும்’ என்ற நிலைக்கு தள்ளப்பட்ட தன்யா, தன் காதை பொத்திக்கொண்டு, “கொஞ்சம் நிறுத்துங்களேன்” என கத்திவிட்டாள்.
தன்யா கத்தவும் தான் அந்த இடமே அமைதியானது. நால்வரும் அவள் முகத்தையே ஆர்வமாய் வெறிக்க, “இப்ப என்ன கல்யாணம் தானே? செஞ்சு தொலைக்குறேன்” என வெறுப்புடன் சொன்னவள், விறுவிறுவென தன் அறைக்குள் புகுந்துக்கொண்டு, ‘படாரென’ கதவை அறைந்து சாற்றினாள்.
தன்யா அங்கிருந்து நகர்ந்ததுமே, “ஏஏஏஏஏ…. சக்சஸ்” என குதூகலமாய் சிறு குழந்தைகள் என சிரித்துக்கொண்டனர் நால்வரும்.