இரு தினங்கள் முன்பு நடந்த இந்த கூத்தை நினைத்துப்பார்த்த லட்சுமிக்கு தெய்வானை மட்டும் இல்லை என்றால் என்ன செய்திருப்போம் நாம்? என வியப்பாய் இருந்தது.
எப்படி எல்லாம் அழகாய் நொடியில் திட்டம் போட்டு காரியத்தை நடத்தியும் காட்டிவிட்டார் என எண்ணி எண்ணி வியப்பில் மாய்ந்து போனார் லட்சுமி.
“என்ன லட்சுமி, சிலையா நிக்குற?” என அவரை உலுக்கிய தெய்வா, “இந்த புடவைக்கு, நான் போட்டுருக்க ரூபி செட் ஜுவல் மேட்சா இருக்கான்னு சொல்லு” என்றார் தன்னை அழகுக்காட்டி.
அவருக்கு லட்சுமி சாதகமான பதிலை சொல்லவே, “எனக்கு எது போட்டாலும் அழகா தான் இருக்கும்” என தன்னைத்தானே பீத்திக்கொண்டு, “மருமக ரெடி ஆகிட்டாளான்னு பார்த்தியா? விருந்தாளிங்க எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க பாரு” என்றிட, “இதோ பார்க்குறேன் அண்ணி” என மாடியறைக்கு நகர்ந்தார் லட்சுமி.
ராஜகோபாலின் வீடே மலர் அலங்காரத்தில் நந்தவனம் போல காட்சியளித்தது. விருந்தினர் வந்தமேனியாகவே இருக்க ராஜகோபாலும் ஜெயதேவும் வாசலில் நின்று வரவேற்றுக்கொண்டிருந்தனர்.
வந்தவர்களுக்கு வெள்ளை சீருடை அணிந்த ஆட்கள் பழச்சாறுகளை வழங்கி உபசரித்துக்கொண்டிருந்தனர்.
“ராஜா, எங்க உன் பையனை இன்னும் காணோம்?” ஜெயதேவ் இன்முகமாய் வரவேற்றுக்கொண்டே சுரேனை விசாரித்தார்.
“நேத்தே வந்துருப்பான் ஜெயா! எங்க எஞ்சினியர் ஒருத்தர் திடீர்ன்னு அடிப்பட்டு ஹாஸ்பிடல் போகவும், அப்படியே விட்டுட்டு வர முடியாம என்னன்னு பார்த்துட்டு சீக்கிரமே கிளம்புறேன்னு சொன்னான்!” என்றவர்,
“பங்ஷன் பிஸில ‘கிளம்பிட்டானா?’ன்னு கூட நான் விசாரிக்கல!” என தன் மறதியை எண்ணி கடிந்தபடி சொன்னார்.
அந்நேரம் அங்கே தன் சொகுசு காரில் இருந்து வந்திறங்கினார் வைத்தீஸ்வரன். ராஜகோபாலின் தொழில் போட்டியாளர். தன் மகன் பிரகாஷை ராஜகோபாலின் மருமகனாக்க விரும்பி அவர் போட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட, வேறு இடத்தில் இத்தனை துரிதமாய் வரன் பார்த்து நிச்சயத்திற்கும் அழைத்திருக்க, சற்று கடுப்புடனே வந்திருந்தார் வைத்தீஸ்வரன்.
அவரை கண்டதும், “வாங்க வாங்க” என இன்முகமாய் கரம் கூப்பினார் ராஜகோபால்.
மருந்துக்கும் சிரிக்காது ‘வணக்கம்’ வைத்த வைதீஸ்வரன், “பையன் ஆசைப்பட்டுட்டானேன்னு தொழில் போட்டியை மறந்துட்டு சொந்தக்காரனாகலாம்ன்னு நினைச்ச என்னை இன்சல்ட் பண்ணிட்டல்ல ராஜகோபால்?” என்றார் சந்தனம் எடுத்து தன் கரங்களில் தேய்த்தபடி.
முகம் மாறாது காத்த ராஜகோபால், “உங்களை இன்சல்ட் பண்ண நினைக்கல! இது வேற கதை! நான் அப்பறமா உங்ககிட்ட பேசுறேன்! நீங்க வந்ததே சந்தோஷம்! உள்ளே போங்க” என்றார்.
சற்று முறைப்புடனே வைத்தீஸ்வரன் உள்ளே செல்ல, “யார் ராஜா இது?” என்றார் ஜெயதேவ்.
“ம்ச்! ஒரு சின்ன விஷயம்டா” என்றவர், “ஆமா, மாப்பிள்ளை எங்க? ஊரே வந்து நிக்குது, வர வேண்டியவரை காணோமே இன்னும்?” என்றார் ராஜகோபால்.
ஜெயதேவ், “ஹும்! என்னவோ ‘மாஸா’ என்ட்ரி குடுக்க போறேன்னு அவங்க அம்மாக்கிட்ட சொல்லிருக்கான்! என்ன கூத்து பண்ணப்போறான்னு தெரியல” என வெளிப்படையாகவே சலித்துக்கொண்டார்.
தன்யாவின் அறையில் வெண்க்கற்கள் பதித்த தங்க நிற லெகன்காவில், மிதமான அலங்காரத்திலே பளிச்சென ‘அப்ஸரஸ்’ போல அமர்ந்திருந்தாள் தன்யா.
[the_ad id=”6605″]
காதோர முடிக்கற்றையை ‘சுருள்’ செய்துவிட்டுக்கொண்டிருந்த மதுதேவா, தன்யாவின் முன்னே வந்து நின்று சில நொடிகள் அவளை தலை முதல் கால் வரை ஆராய்ந்து, பின் திருப்தியாய் புன்னகைத்தாள்.
“சூப்பர் அண்ணி! ஏஞ்சல் மாறி இருக்கீங்க! எங்க அண்ணா பார்த்ததும் மயங்கி விழப்போறான் பாருங்க” என சிரிக்க, ஒப்புக்குக்கூட தன்யாவின் புன்னகைக்கு பஞ்சமாய் போனது.
அவளை நெருங்கி அமர்ந்த மது, “அண்ணி? எங்க அண்ணா மேல எந்த கோவம் இருந்தாலும் வெளில கொட்டிடுங்க! அவன் எவ்வளோ அடிச்சாலும் தாங்குவான். ஆனா, இப்படி முகத்தை ‘உம்முன்னு’ வச்சுக்காதீங்க அண்ணி! உங்ககிட்ட ரெண்டு நாளா இதைதான் சொல்லிக்கிட்டு இருக்கேன்! ப்ளீஸ்” என்றாள் தன்யாவின் தாடைப்பிடித்து கெஞ்சலாய்.
‘கல்யாணம் செய்துக்குறேன்’ என அன்று தன்யா சொன்னதும், அந்த விஷயம் ஆதிக்கு பரிமாறப்பட, உடனே தன்யாவுக்கு அழைத்தவன், ‘அவள் தன் கோவம் மறந்து திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாய் எண்ணி பேச’, ‘மாப்பிள்ளையே அவன்தான்’ என அந்த கணம் அறிந்தவள் மனதில் இருந்த அழுத்தம் நீங்க, சற்று ஆசுவாசமாக உணர்ந்தாள்.
‘எங்கேனும் சொல்லாமல் ஓடிவிடலாம்’ என்று அவள் எடுத்திருந்த முடிவு, ‘ஆதி தான் மாப்பிள்ளை’ என்று அறிந்ததும் மறைந்து போனது. ஆயினும், அவன் மீதுள்ள கோவத்தில் எதிலும் ஈடுப்பாடு காட்டாது மௌனியாகிப்போனாள் தன்யா.
மது, “என்ன அண்ணி? எங்க மேலயும் கோவமா உங்களுக்கு? அதான் பேச மாட்டேங்குறீங்களா?” என அடுத்து கேட்க, அதற்கு மேல் மௌனம் சாதிக்க மனமில்லை அவளுக்கு. வார்த்தைகள் இன்றி உதடு விரித்து தன்யா குறுநகை உதிர்க்க, ‘அதுவே போதும்’ என்பதை போல உவகைக்கொண்ட மது, “வாவ்… தேங்க்ஸ் அண்ணி! இப்போதான் ரொம்……ப அழகா இருக்கீங்க” என்றாள் உள்ளார்ந்து புன்னகைத்து.
அறைக்குள் நுழைந்த லட்சுமி, “தன்யா ரெடியாகிட்டியா?” என கேட்டுக்கொண்டே வர, குறுநகை சிந்த, அலங்காரங்களோடு அமர்ந்திருந்த மகளின் அழகுக்கண்டு பூரித்துப்போனார்.
“என் கண்ணே பட்டுடும் போல இருக்கு!” லட்சுமி சொல்ல, சட்டென ‘ஐலைனர்’யை கையில் எடுத்த மது, தன்யாவின் உதட்டோரம் சிறு புள்ளி வைத்து, “இப்போ படாது” என்றாள் புருவம் உயர்த்தி, சிரிப்புடன்.
அவளை ஊன்றி கவனித்த லட்சுமி, மது வைத்திருந்த ஐலைனர் வாங்கி, அவள் கன்னத்தில் சின்னதாய் திருஷ்டி பொட்டிட்டு, “நீ என்ன அழகா இருக்க தெரியுமா? உனக்கும் திருஷ்டி படாம இருக்கட்டும்!” என அவள் முகம் வழித்து நெட்டி எடுத்து சொல்ல, மதுவுக்கு தன்னால் வந்து ஒட்டிக்கொண்டது வெட்கம்.
தன்யா, “சுரேன் வந்தானா இல்லையாமா?”
லட்சுமி, “மாப்பிள்ளையே இன்னும் வரலன்னு நாங்க வாசலை பார்த்துட்டு இருக்கோம், இதுல சுரேன் வரானா இல்லையான்னு எங்க கேட்கிறது? நீதான் ஒரு ‘போன்’ போடேன்!” என்றார்.
கடந்த சில நாட்களாய் சுரேனிடம் பேசுவதையே முற்றிலுமாய் தவிர்த்து வந்தாள் தன்யா. சரியாக சொல்வதென்றால், ‘எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு’ என என்று சொன்னாலோ, அந்நாள் முதலே அவனுடன் பேசுவதை குறைத்துக்கொண்டாள். எங்கே பேசினால் தன் ‘பழங்கதை’ முழுவதையும் சொல்ல வேண்டுமோ!? என்ற தயக்கமே அவளை தள்ளி நிற்க வைத்துவிட்டது.
சுரேனின் பேச்சு வந்ததுமே, மதுவின் புலன்கள் பரபரப்பாயின. அதேசமயம், நேற்று நிழல்ப்படத்தில் கண்ட ஒருவனை காண நம் மனம் ஏன் இத்தனை ஆர்வம் கொள்கிறது? என யோசிக்காமலும் இல்லை.
தன்யாவிடம், “சரி, மாப்பிள்ளை வந்ததும் குரல் குடுக்குறேன், அம்சமா சிரிச்ச முகமா கீழ வந்து சேரு! என்ன?” என்ற லட்சுமி, “உனக்கு இங்க வேலை முடிஞ்சுதுன்னா, கீழ வந்து இருடா, வந்தவங்க கிட்ட பேசிட்டு இருப்ப!” என்றார் மதுவிடம்.
தன்யாவும் தனிமை விரும்பி மதுவை போக சொல்ல, லட்சுமியுடனே கீழே வந்துவிட்டாள் மதுதேவா.
[the_ad id=”6605″]
கூடத்தில் சுற்றிலும் விருந்தினர்கள் சூழ, மையத்தில் ஐயர் அமர்ந்து ‘லக்கின பத்திரிக்கை’ எழுதிக்கொண்டிருக்க, முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் இருவீட்டின் பெரியவர்களும் அமர்ந்திருந்தாலும், “மாப்பிள்ளை இன்னும் வரலையே?’ என்ற பதட்டம் அவர்களிடம் இருக்கவே செய்தது.
“எங்கடி உன் புள்ள?” மெல்லிய குரலில் அருகே அமர்ந்திருந்த தெய்வாவிடம் கேட்டார் ஜெயதேவ்.
“என் புள்ள எப்போ வருவான், எப்படி வருவான்னு யாருக்கும் தெரியாது! ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவான்” என ஸ்டைலாய் தெய்வா சொல்ல, அவரைப்பார்த்து தன் பற்களை ஜெயதேவ், ‘நறநற’வென சீற்றமாய் கடிக்கும்போதே, ‘மாஸாய்’ என்ட்ரி குடுப்பதாய் சொல்லியிருந்த ஆதி, ‘மாசு’ கிளம்ப ராஜகோபாலின் வீட்டை அடைந்திருந்தான்.
“மாப்பிள்ளை வந்தாச்சு…!!!!”
எல்லோர் பார்வையும் போர்டிகோவை சென்றடைய, தான் வந்த வண்டியில் இருந்து குதித்து இறங்கினான் ஆதித்தியதேவ்.
அவன் அணிந்திருந்த சில்வர் நிற ஷெர்வானி அவன் நிறத்திற்கும் உயரத்திற்கும் எடுப்பாய், நல்ல தோரணையை கொடுக்க, முகத்திலோ ‘டன்’ கணக்கில் வியர்வை ஆறாய் வழிந்துக்கொண்டிருந்தது.
கோகுல் அணிந்திருந்த இளம்பச்சை நிற சட்டை அவன் மேனியில் ஒட்டிக்கொண்டு அப்படியே ஈரத்தால் படிந்தே போயிருந்தது.
மருமகனுக்கு ‘ஆரத்தி’ எடுத்து வரவேற்க, லட்சுமி வேகமாய் செல்ல, ராஜகோபாலும் ஆர்வமாய் வெளியேறினார்.
ஜெயதேவுக்கு ஆதியை கண்டதும் பற்றிக்கொண்டு வந்தது. நிச்சயதார்த்ததிற்கு எப்படி வந்து நிற்கிறான் பார்!’ என அவர் மனதுக்குள் அவனை கடித்து குதறி வைக்க, தெய்வா அவரை இழுத்துக்கொண்டு தன் மகனை வரவேற்க சென்றார்.
ஆரத்தி எடுத்து முடித்ததும், “என்ன ஆதி? மாப்பிள்ளை ஆனதும் பந்தா காட்டவே லேட்டா வரியா?” என்றார் ராஜகோபால் வெகு உரிமையாய்.
“இல்ல அங்கிள், ஒரு ‘மாஸ்’ என்ட்ரி குடுக்கலாம்ன்னு பல பல படங்கள் பார்த்து நோட்ஸ் எடுத்து, அதுக்கு ஏற்ப்பாடு செஞ்சு கிளம்பி வரதுக்குள்ள கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்றான் சமாளிப்பாய்.
“இருந்தாலும் கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாம்!” என அவர் செல்லமாய் குறைப்பட, “வாட் டு டூ அங்கிள்? வண்டி கொஞ்சம் மக்கர் பண்ணிடுச்சு!” என்றவன், “இந்த கோகுலுக்கு வேற அதை ‘ட்ரைவ்’ பண்ணவே தெரியல அங்கிள்! இவனை நம்பி டிரைவர் வேற வேண்டாம்ன்னு சொல்லிருந்தேன்” என சொல்ல,
“எந்த வண்டில வந்தீங்க மாப்ள?” என்றார் லட்சுமி ஆவலே உருவாய்.
“இதோ…!” என சற்று தள்ளி ஆதி காட்டிய திக்கில் பார்த்தவர்கள் வாயடைத்துப்போயினர்.
“இதுலையா வந்தீங்க?” திகைத்துப்போய் திறந்த வாய் மூடாமல் கேட்டார் ராஜகோபால்.
“யெஸ் அங்கிள்” என அவன் சொல்ல, அங்கே ‘ஞேஏஏஏஏஏ’ என பலமாய் ஒலித்தது அவன் வந்த அந்த ‘மாஸான’ வண்டியின் சத்தம்.
வெள்ளையும் பிங்க்’கும் சேர்ந்து பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, இரட்டை குதிரை வண்டி தான் அது!!!
பார்த்தது பார்த்தபடி அவர்கள் நிற்க, “சீக்கிரமே கிளம்பிட்டோம் அங்கிள், பட் இந்த ‘ஹார்ஸஸ்’ தான் அங்கயும் இங்கேயும் ஓடி, அதோட நாங்களும் ஆடி, நடுல ட்ராபிக் போலீஸ் வேற எங்களை தேடி…!” என இழுத்தவன், “எல்லாத்தையும் சமாளிச்சுட்டு வரதுக்குள்ள லேட் ஆகிடுச்சு! நான் கூட பரவால்ல! பாவம் கோகுல் தான் இந்த வண்டியை ஓட்டுறதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டான்” என சொல்ல, அனைவர் பார்வையும், ஒரு வார்த்தை கூட பேச திராணி அற்றவனாய் அயர்ந்துப்போய் நின்றிருந்த கோகுலின் மீது பரிதாபமாய் விழுந்தது.
ஜெயதேவ் ‘சென்சார்’ போடுமளவுக்கு வார்த்தைகளை தேடி தேடி ஆதியை புகழ்ந்துத்தள்ளிக்கொண்டிருந்தார் மனதில்.
[the_ad id=”6605″]
ராஜகோபால், “காஸ்ட்லியான கார்ல ஜம்முன்னு வரதை விட்டுட்டு ஏன் ஆதி இப்படி…?” என தயக்கமாய் இழுக்க, “முத்து’ படத்துல தலைவர் ஒரு கைல குதிரை வண்டியை ஓட்டிக்கிட்டு மறுக்கைல ‘ஹாய்’ காட்டிக்கிட்டே என்ட்ரி குடுப்பாருல? நானும் அப்படி ‘மாஸா’ வரலாம்ன்னு ஆசையா வந்தேன்!” என்றான் ஆதி.
அவனுக்கே தெரியும், ‘மாஸாக’ செய்ய நினைத்து, ஏன்டா இப்படி செய்தோம் என நோகுமளவு அனைவர் முன்னும் ‘தமாஸாய்’ தான் நிற்பது.
இருந்தாலும், ‘கெத்த விடாத… பங்கு… கெத்த விடாத’ என சமாளித்துக்கொண்டிருந்தான். கோகுலுக்கோ பேசக்கூட தெம்பில்லை. அந்த அளவுக்கு படாய்ப்பட்டு வந்து சேர்ந்திருக்கிறான்.
தெய்வா, “பார்த்தீங்களா? என் புள்ள எப்படி கெத்தா வந்து இறங்கிருக்கான்?” என கேட்க, அதற்கு பதில் போல, குதிரை வேறு, ‘பொத்…பொத்’தென அந்நேரம் பார்த்து தன் காலை கடனை கடமை தவறாது நிறைவேற்ற, ‘ஐயோ, மானம் ஹெவியா போகுதே!’ என ரத்தக்கண்ணீர் வடித்தான் ஆதி.
அதற்குமேலும் வாசலிலேயே நின்று, உள்ளே அமர்ந்திருக்கும் விருந்தினர் அனைவரையும் வாயிலுக்கு வர வைக்க வேண்டாம் என முடிவெடுத்த ராஜகோபால், “வாங்க மாப்பிள்ளை” என கைப்பிடித்து ஆதியை அழைத்துச்சென்றார்.
‘துணை மாப்பிள்ளை, துணை மாப்பிள்ளை’ என கத்திய ஆதி, விடாமல் கோகுலின் கரத்தையும் கெட்டியாய் கோர்த்துக்கொண்டு உள்ளே சென்றான்.
முதல் மாடி பால்கனியில் நின்று ஆதி வந்திறங்கிய லட்சணத்தை கண்ட தன்யா, தன் தலையிலேயே அடித்துக்கொண்டாள்.
ஐயர் நேரமாவதாய் அவசரப்படுத்த, மூத்தோர் வாழ்த்துக்களுடன், ‘லக்கின பத்திரிக்கை’ வாசிக்கப்பட்டது. சம்பிரதாயப்படி இரு வீட்டாரும் நிச்சய தாம்பூல தட்டை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ள, அடுத்ததாய் ஆதியும் தன்யாவும் எதிரெதிரே நிற்க வைத்து, இருவர் கரத்திலும் ‘நிச்சய மோதிரம்’ கொடுக்கப்பட்டது.
மதுதேவா பலமுறை முயன்றும் கிருஷ்ணாவுக்கு இணைய இணைப்பு அங்கே சரிவர கிடைக்கவில்லை.
சுரேனும் அந்நேரம் வரை வந்து சேராமல் இருக்க, இரு வீட்டார் மனதிலும் ஒரு ஓரத்தில் சிறு சுணக்கம் இருக்கத்தான் செய்தது.
ஆதி, தன்யாவின் இடக்கரம் பற்றி மிருதுவாய் வருட, தன் தீப்பார்வையை அவன் மீது செலுத்தினாள் தன்யா.
‘இதெல்லாம் எனக்கு தூசு’ என்பதை போல காதலுடன் மறுப்பார்வை பார்த்தவன், அவளுக்கு மட்டும் கேட்கும்படி, “எல்லாரும் நிச்சயம், கல்யாணம், அப்……பறம் கஜாமுஜான்னு போவாங்க! நம்ம அப்படியே ரிவர்ஸ்ல?” என்று கண்ணடிக்க, “வாயை மூடு” என பல்லைக்கடித்தாள் தன்யா.
“ரொம்ப நேரமா அண்ணி கையை பிடிச்சுட்டே இருக்க ப்ரோ! கைய விட்டா தானே அவங்க உனக்கு மோதிரம் போட முடியும்!” என மதுதேவா சொல்ல, அங்கிருந்தவர்கள் கிண்டலாய் சிரிக்க, அதே சிரிப்புடனே, கையில் இருந்த பூவிதழ்கள் கொண்டு சிறியவர்களை வாழ்த்த நிற்க,
தன்யா ஆதியின் கரத்தில் மோதிரத்தை அணிவிக்கும் நேரம், சரியாய் அங்கு சேர்ந்த சுரேன் யாரும் எதிர்ப்பாராவண்ணம், ஆதியின் மீது தன் வலுவான கால்கள் கொண்டு ஓங்கி மிதித்திருந்தான்.
காதல் மயக்கத்தில் திளைத்து நின்றிருந்த ஆதி, இந்த அடியை எதிர்பாராததால், தடுமாறி சற்று தள்ளிப்போய் கீழே விழ, விழுந்தவனை நாடி “டேய்….” என மேற்கொண்டு அடிக்கப்போன சுரேனை சுதாரித்து மற்றவர் பிடிக்க, “என் வாழ்க்கையை கெடுத்ததும் இல்லாம, இப்ப என் தங்கச்சி வாழ்க்கையையும் கெடுக்க வந்துருக்கியா?” என்ற அவனது அலறலில், ஆதி முதற்கொண்டு அனைவரும் பேச்சிழந்து, பேரதிர்ச்சியில் நின்றனர்.
-கலாட்டா தொடரும்…