அத்தியாயம் 9
ஆனந்தமாக திரும்பினாள் பஞ்சு. “ஹா ஹா, தமிழ்னா தமிழ் தான். அப்ப உன்னோட புருசனுக்கு தமிழ் தெரியுமா? நீ பேசினதை எல்லாம் கேட்டுட்டார் போல? பாத்தீங்களா சார், உங்க பொண்டாட்டியோட லட்சணத்தை. உங்களுக்கு என்ன மொழி பேச தெரியும்னு கூட தெரியலை. இவ எங்க குடும்பத்தை பிரிக்க வந்துட்டா. எங்க ஊர்ல பொம்பளைங்க இப்படி எதாவது தப்பு செஞ்சா, அவங்களை கட்டிருக்குற புருஷன் இடுப்புல கட்டிருக்க பெல்ட் வச்சு அடி பின்னிருவாங்க. நீங்களும் கொஞ்சம் உங்க பொண்டாட்டிக்கு புரிய வைங்க”, என்று சொல்லி விட்டு அர்ச்சனாவை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு நகர்ந்தாள் பஞ்சு.
எதிரே சகுந்தலாவும், பூவும் வந்தார்கள். அவர்கள் அருகே போய் நின்று கொண்டு அர்ச்சனாவை திரும்பி பார்த்தாள்.
அங்கே அர்ச்சனாவும், அவளுடைய கணவனும் எதையோ காரசாரமாக விவாதித்து கொண்டிருந்தார்கள். அவர்களையே கூர்மையாக பார்த்தாள் பஞ்சு. அர்ச்சனா எதுவோ சமாதானமாக பேசுவது போல இருந்தது. அடுத்த நொடி, அவள் கணவன் காரை நோக்கி சென்றான். அவன் பின்னாடியே ஓடினாள் அர்ச்சனா.
“இன்னைக்கு புருஷனுக்கும், பொண்டாட்டிக்கும் பஞ்சாயத்து நடக்கும். அதுக்கு அப்புறமாவது அவ திருந்துனா சரி”, என்று நினைத்து கொண்ட பஞ்சுவுக்கு மறுபடியும் சாத்தான் வந்து மனதில் அமர்ந்தது. “நான் மாமாக்கு சரியானவ தானா?”, என்ற எண்ணம் மறுபடியும் எழுந்தது.
அங்கயே தலையை பிடித்து அமர்ந்து விட்டாள் பஞ்சு. சகுந்தலாவும், பூவும் வந்து “என்ன ஆச்சு பஞ்சு?”, என்று விசாரிக்கும் போதும் “ஒண்ணும் இல்லை”, என்று சமாளித்தாள் பஞ்சு.
ஆனால் அவளுடைய மௌனம் தொடர்ந்தது. இருந்த சந்தோஷத்தில் அதை யாரும் பெரிதாக எண்ணவில்லை.
அவள் அருகில் வந்த ஆதி கூட, அவள் மன நிலையை அறியாமல் சீண்டினான்.
“என்ன பொண்டாட்டி? உன் மாமனை எல்லாரும் புகழ்றாங்க, நீ ஆசையா ஒரு முத்தம் கூட கொடுக்கலை? காலைலே இருந்து தவிக்கிறேன் டி. வீட்ல போய் தருவியா?”
அவனை நிமிர்ந்து பார்த்தாள் பஞ்சு. அங்கு வந்திருந்த அத்தனை பேரையும் விட அழகாக இருந்தான் ஆதி. அவன் முகத்தில் இருந்த சிரிப்பு, அவன் குரலில் இருந்த காதல் அவளை அப்படியே மயக்கியது. “இவன் என்னோட புருஷன்”, என்று நினைத்து மனது பெருமிதம் அடைந்தது.
அவளுடைய ஆசைக்காக, அவன் வைத்திருந்த மீசை, இன்னும் அவனுக்கு கம்பீரத்தை கொடுத்தது. மொத்தமாக ஆணழகனாக, முகம் முழுவதும் காதலை தேக்கி தன்னுடைய தொடுகைக்காக அவன் காத்திருக்கும் போது, பல யுகம் அவனுடன் வாழ்ந்த சந்தோசம் ஒருங்கே வந்தது பஞ்சுவுக்கு.
தனக்காக மீசை வைத்து கொண்டு, அன்று ஒரு நாள் தன்னருகே வந்து “அழகா இருக்கேனா? உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கேனா? இது வைக்கலைன்னு தலைல அம்மி கல்லை போட்டுருவேன்னு சொல்ற என்ன டி? இப்ப வச்சிருக்கேன். அதுக்கு என்ன பரிசு தர போற?”, என்று அவன் சீண்டியது நினைவு வந்தது.
அதற்கு தான் வெட்கி தலை குனிந்ததும் “ஆசையா மீசை வச்சிருக்கேன் டி. முத்தம் கொடுடி”, என்று மேலும் ஆதி வம்பிழுத்ததும் “முத்தம் தான வேணும்? தரேன் மாமா”, என்று சொல்லி உதட்டை வைத்து அவன் மீசை முடியை இழுத்து விளையாடியதும், அதுக்கு பின் நடந்ததும் நினைவில் வந்து இம்சையை கொடுத்தது.
தன்னவனை ஆசையாக ரசித்தாள் பஞ்சு.
“இந்த பார்வை நல்லா இருக்கு டி. அப்படியே என்னை விழுங்குற மாதிரி பாக்குற. இங்க வச்சு ஒண்ணுமே செய்ய முடியாது குட்டிமா. இன்னைக்கு உன்னை தூங்கவே விட மாட்டேன் டி வர்ணா. தயாரா இரு. இந்த சேலைல அப்படியே, எப்படி இருக்க தெரியுமா? இப்பவே போகலாமா டி பட்டு வீட்டுக்கு”, என்று கொஞ்சிக்கொண்டே இருந்தான் ஆதி.
ஆனால் அவள் அவன் கூறியது எதையும் கவனிக்காமல், அவனை ரசித்து கொண்டே “நான் மாமாக்கு தகுதியே இல்லை”, என்ற ஒரு வரியை மட்டும் நினைத்து கொண்டிருந்தாள் பஞ்சு.
பின் அங்கு இருந்தவர்களுக்கு “இது என்னோட மனைவி. இது என்னோட அம்மா”, என்று அவன் அறிமுக படுத்தும் போதும் கைகளை மட்டுமே கூப்ப முடிந்தது பஞ்சுவால்.
“உங்க மனைவி ரொம்ப அழகா இருக்காங்க, மெய்ட் பார் ஈச் அதர்”, என்று அவர்கள் அனைவரும் ஆதியிடம் அவளை புகழ்ந்து பேசியது கூட புரியாமல் நின்றாள் பஞ்சு.
அவர்கள் பேசிய ஆங்கிலம் ஒன்றும் புரியாமல், தனக்குள்ளே குறுகி நின்றாள். “நீ ஆதிக்கு தகுதியே இல்லை”, என்று சொன்ன அர்ச்சனா வார்த்தைகள் மனதில் வந்து போனது.
தாழ்வு மனப்பான்மை, இப்போதைக்கு நிறைய பேருக்கு இருக்கும் பெரிய வியாதி. அது தன்னையே கூட அளித்து கொள்ள தயங்காது.
“மாமாக்கு நான் வேண்டாம். எனக்கு எதுவும் தெரியாது. அவருடைய பேருக்கும், புகழுக்கும் நான் நிகர் கிடையாது”, இது மட்டுமே அவள் மனதுக்குள் ஓடி கொண்டிருந்தது.
விழா முடிந்து விருந்து ஆரம்பித்தது. பூவுக்கும் சில விசயம் தெரியாமல் இருந்தாலும் அவள் சீனி உடனே இருந்ததால் சமாளித்து விட்டாள். ஆனால் ஆதி அங்கே இங்கே அலைந்து கொண்டிருந்ததால் சகுந்தலா முந்தானையை பிடித்து கொண்டே திரிந்தாள் பஞ்சு.
அதுவே அவளுக்கு கேவலமாகவும் தோன்றியது. சிறிது நேரத்தில் பல எண்ணங்கள் மனதில் தோன்றி அவளுக்கு எல்லாமே எரிச்சலை தந்தது.
ஒரு வழியாக அனைவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். சீனியும், பூவும் அவர்கள் காரில் வந்தார்கள்.
ஆதி, பஞ்சு, சகுந்தலா ஆதி காரில் ஏறினார்கள். பின் சீட்டில் ஏறி இருந்த சகுந்தலா தலை சாய்த்து படுத்து விட்டாள்.
ஆதி வண்டியை எடுத்தான். அவன் அருகில் மௌனமாக அமர்ந்திருந்தாள் பஞ்சு.
“அவன் அருகில் அமர்ந்து வருவது கூட தனக்கு தகுதி இல்லை”, என்று நினைத்தாள் பஞ்சு.
அவள் மௌனத்தை உணர்ந்த ஆதி “என்ன ஆச்சு வர்ணா?”, என்று கேட்டான்.
“ஒன்னும் இல்லை மாமா. சும்மா தான்”, என்று தலை கவிழ்ந்து பதில் சொன்னாள் பஞ்சு.
பின்னாடி சகுந்தலாவை திரும்பி பார்த்து விட்டு, அவள் கையை தன் கையால் பிடித்து இழுத்து தன் கால் மேல் வைத்து கொண்டான்.
அவன் தொடுகை அவளுக்கு சிறிது ஆறுதலை தந்தது. அவன் கைகளுடன் தன் கைகளை பின்னி கொண்ட பஞ்சு, அவன் தோளிலே சாய்ந்து கொண்டாள்.
இரவு அவ்வளவாக ட்ராபிக் இல்லாததால், ஒற்றை கையாலே காரை ஓட்டினான் ஆதி.
காரை நிறுத்தியதும், முதலில் இறங்கி கதவை திறந்து விட்டு, சகுந்தலாவை எழுப்பினாள் பஞ்சு.
“வீடு வந்துட்டா? நல்ல சாப்டுட்டேன் பஞ்சு அங்க. அதான் தூங்கிட்டேன் போல?”, என்று எழுந்தாள் சகுந்தலா.
சகுந்தலா அவளுடைய அறைக்குள் போன பிறகு, அவனை ஒரு
பார்வை பார்த்து விட்டு தங்கள் அறைக்குள் சென்றாள் பஞ்சவர்ணம்.
“என்ன, ஒரு மாதிரி லுக்கு விட்டுட்டு போறா?”, என்று நினைத்து கொண்டு அங்கயே அமர்ந்தான், சீனி வருவான் என்பதால்.
சீனி வந்த பிறகு, சிறிது நேரம் பேசி கொண்டிருந்தார்கள், அன்றைய பங்க்சன் பற்றி.
அவனும் படுக்க போன பின்னர், கதவை அடைத்து விட்டு அவனுடைய அறைக்குள் வந்தான் ஆதி.
குளியல் அறையில் சத்தம் கேட்டது. “மேடம் குளிக்கிறாங்க போல?”, என்று நினைத்து கொண்டு குளித்து முடித்து, அவள் வருவதற்காக காத்திருந்தான் ஆதி.
குளித்து முடித்து வந்த பஞ்சு முகத்தில், சோகம் அப்பி இருந்தது. அதை கவனிக்காமல், வெளியே வந்தவளை ஆதியின் கைகள் சிறை பிடித்தது.
அவன் கைகளுக்குள்ளே நெளிந்தவள் “விடுங்க மாமா”, என்றாள்.
“விடுறதா? என்னடி நழுவுற? இரு இரு இப்ப குளிச்சிட்டு வரேன். கச கசன்னு இருக்கு. குளிச்சிட்டு வரதுக்குள்ள தூங்கிறாத டி. குளிச்சிட்டு பிரெஸ்ஸா வரேன் மாமா. சரியா டி செல்லம்?”, என்று சொல்லி விட்டு அவள் தோளில் இருந்த துண்டை எடுத்து கொண்டு குளிக்க சென்றான் ஆதி.
குளித்து முடித்து, எப்போதும் இருக்கும் ஒரு எதிர்பார்ப்போடு வெளியே வந்தான் ஆதி. அவன் இப்போது எல்லாம், அவள் மேல் பைத்தியமாய் இருந்தான். கட்டிலில் பதுமை போல், சாய்ந்து அமர்ந்திருந்தாள் பஞ்சவர்ணம்.
அவள் அருகே சென்றவன், அவளை இழுத்து தன் மேல் போட்டு கொண்டு “எல்லாரும் உன் மாமாவை பாராட்டுறாங்க. ஆனா, என்னோட லட்டு குட்டி மட்டும் ஒண்ணுமே சொல்லலை. வார்த்தைல தான் சொல்லலைனு பாத்தா, செயலில் கூட காட்ட மாட்டிக்க. இன்னைக்கு நாளை கொன்டாடலாமா?”, என்ற படியே அவன் கைகள் இன்னும், அவளை தன்னுடன் வைத்து இறுக்கியது.
“விடுங்க மாமா”, என்று சொல்லி கொண்டே அவனிடம் இருந்து விடு பட முயற்சி செய்தாள் பஞ்சு.
“விட மாட்டேன் டி”, என்று சொன்னவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து, அவளை வாசம் பிடித்தான்.
“உன்கிட்ட வந்தாலே, அப்படியே என்னன்னவோ ஆகுது டி வர்ணா”, என்ற படியே அவளுடன் இழைந்தான் ஆதி.
“மாமா விடுங்க”
“முடியாது, முடியாது, உம்மா”, என்று சொல்லி கொண்டே அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.
“இப்ப விட போறீங்களா? இல்லையா?”, என்று கத்தினாள் பஞ்சு.
அவள் குரலில் வித்தியாசத்தை உணர்ந்தவன் அவளை தன் புறம் திருப்பி “என்ன மா?”, என்று சொல்லி கொண்டே அவள் முகத்தை பார்த்தான்.
“ஒன்னும் இல்லை விடுங்க”
“என்ன டி ஆச்சு? ஒரு மாதிரி இருக்க?”
“நிஜமாவே ஒன்னும் இல்லை மாமா. விடுங்க”
அவளை விட்டுவிட்டு, கூர்மையாக அவள் முகத்தையே பார்த்தான் ஆதி.
அவன் பார்வையை கண்டு கொள்ளாமல் நகர பார்த்தாள் பஞ்சு.
“இரு”, என்று சொல்லி அவளுடைய கையை பிடித்தான் ஆதி.
“விட சொன்ன, விட்டுட்டேன். காரணம் சொல்லு. எதுக்கு நீ இப்படி இருக்க? முகம் எல்லாம் களை இழந்து இருக்கு. குளிச்சிட்டு வந்த மாதிரி கூட இல்லை. அழுதியா வர்ணா?”
……
“இவ என்ன இப்படி இருக்கா? எப்பவும் என்னை பாத்து சிரிச்சு கிட்டே இருப்பா. இன்னைக்கு இவ சரியே இல்லை. எதுவோ தப்பா இருக்கு”, என்று நினைத்து கொண்டு அவளை பார்த்தான்.
பதில் சொல்லாமலே எழுந்து போக பார்த்தாள் பஞ்சு. அவள் கையை பிடித்து நிறுத்தியவன் “பதில் சொல்லு வர்ணா “, என்று சொன்னான்.
“நீங்க தான சொல்ல சொல்றீங்க? சரி சொல்றேன்”, என்றவள் ஒரு ஆழ்ந்த மூச்சை உள் இழுத்து விட்டு, “நீங்க அர்ச்சனா மாதிரி, ஒரு படிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க”, என்றாள்.
அதிர்ச்சியாக அவளை பார்த்தான் ஆதி.