“என்ன வர்ணா இது? இப்ப எதுக்கு அவளை பத்தி பேசுற? உனக்கு என்ன ஆச்சு? நீ ஏன் என்னவோ போல இருக்க?”
“அவளை பத்தி பேசலை. அவளை மாதிரி படிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு தான் சொன்னேன்”
“அதான் ஏன்? இத்தனை நாள், என்னை தவிர எவளையாவது நினைச்சா கூட கொன்னுருவேன்னு சொல்லுவ? ஆனா, இன்னைக்கு இப்படி சொல்ல என்ன காரணம் ?”
“இல்லை.. நான் உங்களுக்கு சரி பட்டு வர மாட்டேன். அந்த அர்ச்சனா மாதிரி பொண்ணு தான், உங்களுக்கு சரி வருவா”
“ஏய் என்ன பஞ்சு இது விளையாட்டு? கோபமா இருக்கேன்னு தெரியுது டா. ஆனா புரியலை. இங்க பாரு. நான் உன் மாமா தான? என்ன பிரச்சனை சொல்லு மா”
“பிரச்சனை நீங்க தான். நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கோங்க. அவ்வளவு தான், நான் கீழ படுக்கிறேன்”, என்று எழுந்தாள் பஞ்சு.
“இரு வர்ணா”, என்று மறுபடியும் அவள் கையை பிடித்தான்.
“விடுங்கன்னு சொல்றேன்ல. நீங்க வேற படிச்ச பொண்ணா, உங்க தகுதிக்கு சரியா வர பொண்ணை கல்யாணம் செஞ்சிக்கோங்க. நீங்க பேசாம அந்த அர்ச்சனாவையே கல்யாணம் செஞ்சிருக்கலாம்”, என்று பஞ்சு சொன்ன அடுத்த நிமிடம் “ஏய்”, என்று கத்திய ஆதி, அங்கு இருந்த கண்ணாடி டம்ளரை தூக்கி தரையில் போட்டான். அதிர்ந்து போய் அவனை பார்த்தாள் பஞ்சு.
அவனுடைய முதல் கோபம். முதல் நாள் அவளுடைய செய்கை சிறு பிள்ளை தனமாக இருந்த போது, அவனுக்கு கோபம் வந்தது தான். ஆனால் இந்த அளவுக்கு ரவுத்திரத்தை, இது வரை அவன் அவளிடம் காட்டியதே இல்லை.
பயந்து போய் நின்றவளை ஒரு பார்வை பார்த்த ஆதி ” ச்ச….அர்ச்சனா, அர்ச்சனா… எப்ப பாத்தாலும் அந்த பேரு? எத்தனை தடவை டி சொல்றது? அவளை நான் என் மனசுல நினைச்சது கூட கிடையாதுன்னு. நீ எப்ப பாத்தாலும், அவளை பத்தியே பேசிட்டு இருக்க?”, என்றான்.
….
“அவ தான் கல்யாணம் ஆகி போய் தொலைஞ்சிட்டா தான? அப்புறம் என்ன? அவளை பத்தியே பேசி என் உயிரை வாங்குற? இங்க பாரு எங்க அம்மா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற பொண்ணு தான் என் மனசில், என் பொண்டாட்டியா இருப்பான்னு நான் எப்பவோ முடிவு செஞ்ச விஷயம். எங்க அம்மா உன்னை எனக்கு கட்டி வச்சாங்க. அதுக்கு பிறகு உன்னை விரும்புறேன். கொஞ்சம் இல்லை… பைத்தியக்காரன் மாதிரி விரும்புறேன். ஏண்டி என்னை புரிஞ்சிக்க மாட்டிக்கிற? இன்னைக்கு அவ உன் பக்கத்தில் வந்து நிக்கும் போதே நினைச்சேன். ஆனா, அவ புருஷன் கூட நின்னான். அப்ப, பெருசா பிரச்சனை வராதுன்னு நினைச்சேன். இப்ப தான் தெரியுது, அந்த நாசமா போறவ, அந்த மேனாமினுக்கி ஏதோ சொல்லிருக்கா. என்ன சொன்னா சொல்லு?”, என்று கேட்டான் ஆதி.
அர்ச்சனாவை பற்றி அவனுக்கு சொல்லி கொடுத்த, டயலாக்கை சொல்லும் கணவனை பார்த்து அந்த நேரத்திலும் சிரிப்பு வந்தது பஞ்சுவுக்கு. ஆனாலும் அடக்கி கொண்டாள்.
“அத்தை தப்பு செஞ்சிட்டாங்க மாமா. உங்களை மாதிரி படிச்ச பொண்ணை, உங்களுக்கு பாத்துருக்கணும். இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை. என்னை வெட்டி விட்டுட்டு இன்னொரு பொண்ணை கட்டிக்கோங்க”, என்று சொல்லி கன்னத்தில் ஒரு அடி வாங்கினாள். அதிர்ச்சியாக அவனை பார்த்தாள் பஞ்சு. கன்னம் வலித்தது.
“என்ன டி நினைச்சிட்டு இருக்க மனசுல? என்ன வார்த்தை சொல்ற, வெட்டி விடுறது”, என்று கோபமாக கேட்டவன் “ப்ளீஸ் பஞ்சு எனக்கு ரொம்ப டயடா இருக்கு. எதுனாலும் பொறுமையா யோசிச்சு பேசு. நீ பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு மா. திடிர்னு அர்ச்சனா பத்தி பேசுற? படிப்பு பத்தி பேசுற? என்ன டி ஆச்சு? அவ என்ன சொன்னா?”, என்று தன்மையாய் கேட்டான்
“ஒன்னும் ஆகலை, எனக்கு நீங்க வேண்டாம். நான் ஊருக்கு போகணும். என்னை அனுப்பிருங்க. அப்புறம் அத்தை வேற பொண்ணு பாப்பாங்க. அவளை கல்யாணம் செஞ்சிக்கோங்க”, என்று சொல்லி மறுபடியும் ஒரு அடியை வாங்கினாள் பஞ்சு.
அவளை அடித்தது அவனுக்கு வலித்தது. கையை உதறி கொண்டே “இன்னைக்கு என்கிட்ட அடி வாங்கி தான் டி நீ சாக போற?”, என்று கத்தினான் ஆதி.
“கொன்னுருங்க மாமா, அடிச்சே கொன்னுருங்க. அதுக்கு அப்புறம் நீங்க வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க”
“சரி நான் வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும். அம்மணி என்ன செய்ய போறீங்க?”
“நான் ஊருக்கு போறேன்”
“அங்க போய் என்ன செய்ய போற?”
“நான் அப்பா அம்மா கூட இருப்பேன்”
“ஏன் ஊருக்கு போற? இங்கயே இருந்து எனக்கு கல்யாணம் செஞ்சு வச்சு, அதை பார்த்து ரசி சரியா?”
அவனை முறைத்தவள் “எனக்கு உங்களை பிடிக்கலை”, என்று சொன்னாள்.
“வாட்? என்ன சொன்ன? உனக்கு என்னை பிடிக்கலையா? அப்படியா? உனக்கு எல்லாம் சொன்னா புரியாது”, என்ற படி அவளை நெருங்கினான் ஆதி.
அழுது கொண்டே அவனை பார்த்தாள் பஞ்சு. அவளை தன்னை நோக்கி இழுத்தவன் அவள் உதடுகளில், அழுத்தமான முத்தத்தை பதித்தான். அவனிடம் இருந்து விடு பட போராடினாள் பஞ்சு.
அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. மனது அவன் முத்தத்துக்கு மயங்கியது. உடல் அவன் தொடுகைக்கு வளைந்து கொடுக்க தயாராய் இருந்தது.
“இவன் தொட்டாலே நான் கரைஞ்சு போயிருவேன். இதை தெரிஞ்சு வச்சிட்டு வம்பு பண்றானே! இல்லை தோற்க கூடாது”, என்று நினைத்து கொண்டு அவனை முழு பலம் கொண்டு விலக்கினாள் பஞ்சு.
அவள் தள்ளி விட்டதில் கட்டிலிலே விழுந்தான் ஆதி. மறுபடியும் எழுந்து அவளை இழுக்க பார்த்தான். “இப்ப என்னை தொட்டீங்கன்னா, நான் செத்துருவேன் மாமா”, என்று சொன்னாள் பஞ்சு.
அவளை தொட போன அவன் கை, அப்படியே பின்னால் நகர்ந்தது. அதிர்ச்சியாக அவளை பார்த்தான் ஆதி.
அவள் முகத்தில் இருந்த குழப்பத்தை பார்த்தவன், “இந்த லூசுக்கு எப்படி புரிய வைக்க?”, என்று நினைத்து வந்த கோபத்தை அடக்கி கொண்டு “சரி தொடலை, இங்க உக்காரு”, என்று சொன்னான்.
அமைதியாக அவன் அருகே அமர்ந்தாள் பஞ்சு.
“என்ன பிரச்சனை? எதனால நீ இப்படி சொன்ன? சொல்லு பஞ்சு”
அவன் பஞ்சு என்று சொன்னதில் அவனை அதிர்ச்சியாக பார்த்தாள். அவனுடைய வர்ணா என்ற அழைப்பு எங்கே போனது என்று கேள்வி கேட்டது மனது.
“முண்டகண்ணை வச்சு முழிக்கிறா பாரு? நான் கூப்பிடுற மாதிரி கூப்பிடாம எல்லாரும் கூப்பிடுற பேரை சொல்லி கூப்பிட்டாலே இந்தா முழி முழிக்கிறா? நான் இவளை விட்டு வேற கல்யாணம் பண்ணுனா, செத்தே போயிருவா”, என்று நினைத்து கொண்டு அவள் பதிலுக்காக காத்திருந்தான்.
“நீங்க பெரிய இடத்தில இருக்கீங்க மாமா. பெரிய புகழோட இருக்கீங்க. இன்னும் அதிகமா தான் உங்க வளர்ச்சி இருக்கும். ஆனா பொண்டாட்டின்னு உங்க பக்கத்தில் நிக்க எனக்கு என்ன தகுதி இருக்குனு சொல்லுங்க பாப்போம்? இன்னைக்கு பாராட்டின எல்லாரும் உங்களை என்ன புகழ்ந்து பேசுறாங்கனு கூட எனக்கு தெரிய மாட்டிக்கு. நான் எப்படி உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணையா இருக்க முடியும்? சொல்லுங்க. எனக்கு கஷ்டமா இருக்கு மாமா. எனக்கு எதுவுமே தெரியாது”
அவளுடைய தாழ்வு மனப்பான்மை புரிந்தவன் “இவளுக்கு அமைதியா சொன்னா மண்டையில் ஏறாது”, என்று முடிவு எடுத்து விட்டு “ஓ அதனால நான் வேற பொண்ணை கல்யாணம் செய்யணுமா?”, என்று கேட்டான்
“ம்ம்”
“உனக்கு காதல்னு ஒரு வார்த்தை தெரியுமா பஞ்சு?”, என்று கேட்டான் ஆதி.
“வர்ணானு கூப்பிடாம இப்ப எதுக்கு பஞ்சு பஞ்சுன்னு கூப்பிடுறான்?”, என்று நினைத்து கொண்டு எதுக்கு இந்த கேள்வி என்பதாய், அவனை பார்த்தாள் பஞ்சு.
அவள் பார்வையை கண்டவன் “எதுக்கு டி, இப்படி பார்த்து உயிரை வாங்குற?”, என்று நினைத்து கொண்டு, “போன வாரம் நாம எல்லாரும் ஒரு சரணாலயம் பாக்க போயிருந்தோம்ல நினைவு இருக்கா?”, என்று கேட்டான்.
“இப்ப எதுக்கு இதை கேக்குறான்?”, என்று நினைத்து கொண்டு “ம்ம்”, என்று சொன்னாள் பஞ்சு.
“அன்னைக்கு லவ் பேர்ட்ஸ்னு, ஒரு பறவையை உனக்கு காமிச்சு என்ன சொன்னேன்?”
…
“அதில் ஒன்னு இல்லைன்னா இன்னொன்னு உயிர் வாழாதாம். அதை பத்தி சொன்னேன் தான? அதை மாதிரி நம்மளும் இருக்கணும்னு சொன்னேன்ல? ஆனா நீ இப்ப இப்படி சொல்றேன்னா, என்ன அர்த்தம்? உனக்கு என்னோட காதல் புரியலைன்னு அர்த்தம். என்னோட காதலை நான் உனக்கு புரிய வைக்கலைனு அர்த்தம். நீ இல்லைன்னா நான் செத்துருவேன் டி. அதே மாதிரி நீயும் தான். என்னை உன்னால விட்டு கொடுக்க முடியாது.
நான் நிறைய படிச்சிருக்கேன்னு இத்தனை நாள் கர்வத்தில் இருந்தேன் டி. ஆனா, முதல் முறை இவ்வளவு படிச்சதுக்கு கவலை படுறேன்? நான் படிக்காம இருந்திருந்தா நீ என்னை விட்டு போகணும்னும், என்னை இன்னொரு பொண்ணுக்கு விட்டு கொடுக்கணும்னும் பேசியிருக்க மாட்டல்ல. இந்த படிப்பை, இந்த பதவியை நான் வெறுக்குறேன். ஏன் பஞ்சு நான் அதிகமா படிச்சிருக்கேன், நீ படிக்கலை அப்படின்னு என்னை விட்டுட்டு போறியே? நாளைக்கே எனக்கு ஒரு ஆக்சிடென்ட் ஆகி..”, என்று சொல்ல வந்தவனை வாயை பொத்தினாள் பஞ்சு.
அவள் கையை தட்டி விட்டவன் “தொடாதடி. நீ மட்டும் எதுக்கு என்னை தொடுற? அப்படி ஆக்சிடெண்ட்ல நான் படிச்சது எல்லாம் மறந்துட்டேனு வை. அது கூட வேண்டாம் செத்தே போய்ட்டேன்னு வை. அப்ப என்ன பண்ணுவ? அப்ப எனக்கு என்னோட படிப்பு என்ன பயன் தரும்? இன்னைக்கு படிப்பு உனக்கு இல்லைன்னு காரணமா வச்சு, என்னை விட்டு போறேன்னு சொல்ற நீ, நாளைக்கு எனக்கு கை, காலோ இல்லை வேற எதுவோ, ஏன் என்னோட ஆண்மையே என்னை விட்டு போயிடுச்சுனா, அதையே காரணம் கட்டி என்னை விட்டு போயிருவ தான?”, என்று கேட்டான்.
“மாமா”, என்று கத்தியவள் அடுத்த நொடி, அவன் கன்னத்தில் சப்பென்று அடித்திருந்தாள்.
காதல் மலரும்….