புது வீட்டில் பால் காய்ச்சி அன்றே கிளம்ப முற்பட்டவர்களை தடுத்து இன்னும் இரண்டு நாட்கள் இருக்க வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டான் உதய். அது ரெண்டு படுக்கையறை கொண்ட வீடு என்பதால் பக்கத்து ஃபாளட்டை இரண்டு நாட்களுக்கு வாடகை பேசி அனைவரையும் தங்க வைத்தான் உதய்.
வெண்பா மணம் முடித்து சென்றபின் ஒற்றைப்பிள்ளையாய் தனிமையில் இருந்தவனுக்கு இத்தனை உறவுகள் சூழ இருப்பதே மகிழ்ச்சியை தந்தது.
சென்னையில் தங்கியிருந்த இரண்டு நாட்களும் அனைவரும் குடும்பத்தோடு சென்னையின் முக்கிய சுற்றுலா இடங்களை எல்லாம் சுற்றி பார்ப்பதில் கழித்துவிட்டு இன்று மாலை தான் ஊர் திரும்புவதாக இருந்தனர்.
செந்தில்நாதனும் கடையை பிறர் பொறுப்பில் விட்டுவிட்டு இதற்குமேல் இருக்க முடியாது என்பதால் அவர்களுடனே செந்தில்நாதன் – சரண்யாவும் கிளம்பும் முடிவில் இருந்தனர்.
“அத்தை..நீங்க வைக்கும் குழம்போட வாசமே ஆளை அசர வைக்குதே..அண்ணி சமையலை எல்லாம் உங்க கைப்பக்குவம் தூக்கி சாப்டுறுச்சு போங்க..நீங்க தான் பெஸ்ட்..”
சரண்யா சொல்லும் சிறுசிறு வேலைகளை செய்துக் கொடுத்து கொண்டே தன் மாமியாரின் சமையலை சிலாகிக்க மற்றொரு புறம் வேறு வேலையில் இருந்த லாவண்யாவும் வெண்பாவும் உதட்டை பிதுக்கி ஜாடை பேசிக் கொண்டனர்.
மருமகள் பாராட்டில் சிரித்த சரண்யா,
“உதயா..எங்கயோ கருகுற வாசம் வரல..”-
என்று கண்சிமிட்ட, “ஆமா அத்தை..ஹெவி ஸ்மெல்..பக்கத்தில் தான் நினைக்கிறேன்..”
என்று குறும்பாய் சிரித்தாள் உதயா..
இடுப்பில் கைவைத்து இருவரையும் முறைத்த வெண்பா,
“எங்க சமையலை விமர்சிக்கிறது இருக்கட்டும்..நாம போனதும் நாளையில் இருந்து உங்க மருமக தான் எல்லாம் எடுத்து செய்யணும்..என்ன பண்ண போறான்னு கேளுங்க..”
என்க, ‘அய்யோ..ஆமால..’ என்று விழித்தாள் உதயா. பெண்கள் விடுதியில் இருந்த வரை அந்த கவலை இல்லை.ஆனால் இனி..?
“பாய்ண்ட்டை புடிச்சீங்க க்கா..என்னை என்ன ஓட்டு ஓட்டுவ..இனி என்னோட டேர்ன் நாத்தனாரே..பார்க்கறேன்..என்ன செய்யிற நீன்னு..”
என்று லாவண்யா வார உள்ளே இருந்த தடுமாற்றத்தை மறைத்து கெத்தாக,
“அதெல்லாம் எனக்கு ஜுஜுப்பி மேட்டர் அண்ணி.. ‘அடடே நம்ம உதயா பொண்ணா..இவ்வளவு பொறுப்பான்னு நீங்க எல்லாம் மூக்கு மேல விரல் வைப்பீங்க..’ என்று வேகமாய் கூறியவள் சட்டென்று குரலை தாழ்த்தி,
“அத்தை..உங்க மகனுக்கு சமைக்க தெரியுமா..?” என்று கேட்டு அவர் பதில் சொல்லும் முன்,
“தெரியலைனாலும் நோ ப்ராப்ளம்..நான் இருக்கேன்..” என்க
‘தானே எல்லாம் பார்த்துக் கொள்வேன்..’ என்று பெருமையாக சொல்கிறாள் போல என்றெண்ணி அவர்கள் வியக்க, ‘அதெப்படி நீங்க என்னை பத்தி அப்படி நினைக்கலாம்..’ என்பதுப்போல் வந்தது அவள் அடுத்த வாக்கியம்..!!
“எனக்கு தெரிஞ்ச மொத்த வித்தையையும் அவருக்கு கத்துக் கொடுத்து..ஒரு மாசத்தில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் செஃப் அளவு இல்லேனாலும் ஒரு சுமாரான செஃப் மாதிரி டரைன் பண்ணி ஒரு சிறந்த குடும்பஸ்தனாய் மாற்றி காட்டுறேன்..”
என்று மடக்கிய கையை உயர்த்தி சபதம் எடுத்தவளை கண்டு கொல்லென்று சிரித்தனர்.
“வாய்..வாய்..இந்த வாய் தான் இத்தனை நாள் எங்க வாடகைக்கு போச்சுனு தெரியல..” என்ற வெண்பா,
“ஹால்ல சத்தம் கேட்குதே..உங்க அண்ணன் வந்துட்டார்னு நினைக்கிறேன்..அவங்க தான்னா காஃபி சாப்பிடுறாங்களான்னு கேளு..”
என்றாள்.
“அதெப்படி மதி அண்ணாவா தான் இருக்கும்னு சொல்றீங்க..அப்பா,மாமா,உதய்,ஜெகன் யாரா வேணாலும் இருக்கலாம்..இவங்களுக்கு எல்லாம் காஃபி கிடையாதா..”
என்று இடக்காய் கேட்ட உதயாவை வெண்பா முறைக்கவும், “ரைட்டு..” என்று சிட்டாய் பறந்துவிட்டாள்.
“விளையாட்டு பொண்ணா இருக்கா..”
போகும் அவளை ஆதூரமாய் பார்த்து சரண்யா சொல்ல,
“ம்மா…அவ பேச்சு தான் குறும்பா இருக்கும்..ஆனால் செயலில் எல்லாம் ரொம்ப பொறுப்பாய் இருப்பா..அவ பேசுறது எதையும் நீ மனசுல போட்டு குழப்பிக்காத..”
என்றாள் தான் பெறாத மகளுக்கு வக்காலத்தாய்..
“ஒருவாரமாய் என்னோடவே தானே இருக்காள்..எனக்கு புரியாதா..”
என்றார் சிரிப்போடு..
வெளியில் மதிவாணனை கண்டு, ‘பார்ரா..இந்த அண்ணி கரெக்டா சொல்லிட்டாங்க..’ என்று வியந்த போதே,
“இங்க இறக்கி வைப்பா..” என்று வாசல் நோக்கி குரல் கொடுக்க யாரென்று பார்த்தாள்.
இரண்டு பேர் நான்கு அட்டபெட்டிகளை ஒவ்வொன்றாய் இறக்கி வைத்துவிட்டு மதியிடம் பணம் வாஙகி கொண்டு செல்ல அதற்குள் ரெண்டு மூணு குரல் கேட்கவும் கிட்சனில் இருந்த எட்டி பார்த்தாள் வெண்பா.
வீட்டிற்கு தேவையான மின் சாதனங்கள் சிலவற்றை வாங்கி வந்திருந்தான்.
“அண்ணா..ஏன்ண்ணா இதெல்லாம்..நேத்தே சொன்னேன்ல..பாருங்க அண்ணி..”
மதியிடன் கேட்டு வெண்பாவிடம் முறையிட,
“எனக்கு தெரியாதும்மா..நீயாச்சு உங்க அண்ணன் ஆச்சு..”
என்று கலன்று கொண்டாள் அவள்.அத்தோடு கணவன் மனம் அறிந்தவள் ஆதலால் அவனையே ஆதரித்தாள்.
“என்னை என்ன பண்ண சொல்ற..உன் வீட்டுகாரன் தான் ‘சீர்ன்னு எதுவும் கொடுக்க கூடாதுன்னு..’ ஒத்த காலில் நின்னுட்டான்..இப்ப நீ இதையும் செய்ய கூடாதுன்னு சொல்லுவியா..”
என்று மதிவாணன் ஆதங்கமாய் சொல்லவும்,
“அதுக்குன்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வெளிய போறப்ப எல்லாம் எதாவது வாங்கி வாந்தால் நான் என்ன பண்ணுவேன்..இந்த பாசமலர்களை வைச்சுக்கிட்டு…”
என்று அவள் தலையை கையால் தாங்கி நின்றாள் அடுத்து உதய்யை சமாளிக்கணுமே என்று இருந்தது.
திருமண செலவில் பெரும் பங்கு ஆழிக்கண்ணன் உதயாவிற்காக சேமித்து வைத்த பணம் தான் வகித்தது.தான் இருக்கும் போது மகளின் திருமண செலவு தன்னுடையதாக தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார் அவர்.
அந்த பணம் அப்படியே அவள் பெயரில் இருக்கட்டும் என்று சொன்னபோது அவர் ஒத்துக் கொள்ளாதது மகன்கள் மூவருக்குமே மிகவும் வருத்தம் தான்.அதற்கு பதிலாய் சீராக மூன்று அண்ணன்களும் அவர்களுக்கு அந்த ப்ளாட்டையே வாங்கி கொடுத்து விட எண்ணி இருக்க உதய்யோ முற்றிலும் மறுத்துவிட்டான். “சீர் என்று சம்பிரதாயத்திற்கு உங்க பொண்ணுக்கு உடையோ நகையோ எடுத்துக் கொடுப்பதோடு சரி…வேறு எதுவும் வேண்டாம்..”
என்று பிடிவாதமாய் மறுத்து விட்டான்.
இதெல்லாம் உதயாவும் அறிந்தது தான் என்பதால் அண்ணனை மறுக்கவும் முடியவில்லை.
தங்கை சொன்னதை கண்டுக்காது மனைவியிடம் திரும்பி,
“வெண்பா..ஒரு காஃபி..”
என்று கேட்க, “இதோ எடுத்துட்டு வரேன்ங்க..”
என்று உள்ளே சென்றாள்.
“எங்க வேற யாரையும் காணும்..”
என்று உதயாவிடம் கேட்டதற்கு அவள் பதில் சொல்லாமல் முறைக்க,
“சரி..விடுடா..உன்ர வீட்டுகாரன் எதவாவது சொன்னால் நான் பேசிக்கிறேன்..”
என்று ஆறுதல் சொல்லவும் கண்கள் பளீச்சிட நிமிர்ந்தவள்,
“பேசணும்..பேசுவீங்க தானே ண்ணா..”
என்று ஆர்வமாய் கேட்க அவள் முகத்தில் தெரிந்த எதிர்பார்ப்பிற்காகவே பேச தோன்றியது.
“என் ஒரே தங்கச்சிமேல ப்ராமிஸா..போதுமா..இப்ப சொல்லு..எங்க எல்லாரும்..”
“அர்ஜூன் நைட்டெல்லாம் பண்ணின அட்டகாசத்தில் தயா அண்ணா தூங்கவே இல்லை போல..இப்ப தான் அந்த ஃபளாட்ல அவனும் தூங்க தானும் தூங்கிட்டாங்க..உதய் ஏதோ வேலை விசயமா போயிருக்கார்..ஜெகன் அவனோட பேட்ச்மேட் யாரையோ பார்க்க போறேன்னான்..இந்த நிலா குட்டி அடம்பண்ணி ஜெகனை அழைச்சிட்டு போக வைச்சிட்டாள்..அப்புறம் மாமாவும் அப்பாவும் இங்க தான் சும்மா நடந்துட்டு வரேன்னு போனாங்க..”
என்று உதயா அடுக்க தன் தந்தையையும் மாமனாரையும் எண்ணி புன்னக்கைத்தான் மதி.
இந்த திருமண பேச்சு தொடங்கி செந்தில்நாதன் – ஆழிக்கண்ணன் இடையில் ஒரு அழகிய நட்பு மலர்ந்தது.முந்தைய கசப்புகளை மன்னிப்போடு பேசி தீர்த்துக் கொண்டதாலோ என்னவோ முதுமையில் அவர்களுக்கு பேசவும் பகிரவும் நிறைய இருந்தது.
அதேசமயம் கதவை திறந்து உள்ளே வந்தான் உதய்.வந்ததும் அவன் கண்ணில் முதலில் பட்டது அந்த பொருட்கள் தான்.அவன் பார்ப்பதை கண்டுவிட்ட உதயா அவளை நிமிர்ந்து பார்க்கும் முன் நழுவி கிட்சனில் தஞ்சம் புகுந்தாள்.
‘சொன்னால் கேட்க மாட்டாங்களா..அப்புறம் என் வார்த்தைக்கு என்ன தான் மதிப்பு..இவர் மாறி நானும் மாப்பிள்ளை ஹோதா காட்டினா என்ன பண்ணுவாங்க..’
என்று அவன் மனம் எரிச்சல் பட்டது.
ஆனாலும் எதாவது சொன்னால் அவமரியாதையாக போய்விடும் என்று அமைதியாய் அங்கிருந்து செல்ல முயன்றான்.
மதியின் அளந்து பேசும் அமைதியும் ஒட்டி பழகாத தன்மையும் அவன் ‘மாப்பிள்ளை பந்தா’ காட்டுவது போலவே உதய்யின் அப்போதைய வயதிற்கு புரிய அதில் தொடங்கியது.முதல் கோணல் முற்றிலும் கோணலாய் அதன்பின் மதி என்ன செய்தாலும் பிடிக்காமல் போனது.
உறவுகள் அதிகம் இல்லாமல் வளர்ந்து அக்காவை போல் மாமாவும் என்று அந்த புதிய உறவை ஆசையாய் எதிர்பார்த்து இருந்தவனுக்கு தனக்கு இருந்த அக்காவையே தனக்கென்று இல்லாமல் செய்து விட்டார் என்ற எண்ணம் அவனையும் அறியாமல் மனதில் ஆழ பதிந்து இருந்தது.
உதய்யோட மதி நட்பு பாராட்டி இருந்தாலோ இல்லையேல் அவனுக்கு ஒரு ஆசானாய் வழி நடத்த முற்பட்டு இருந்தாலோ இருவருக்கும் ஒரு புரிதல் வந்திருக்கலாம்..
சட்டென்று யாரிடமும் பழகிவிடாத மதியின் குணம் உதய்யிடம் தள்ளி நிறுத்த அவன் பேச நினைத்த காலத்தில் உதய் வெகு தூரம் விலகி இருக்க இதுவே இருவருக்கும் இடையில் பெரிய பள்ளம் விழுக காரணமாய் அமைந்தது.காதணி விழாவில் நடந்த களேபரத்தில் விலகல் வெறுப்பாய் மாறியது.
இன்று உதயாவிடம் உதய் காட்டும் அன்பு கலந்த உரிமையும் மற்ற உறவுகளிடம் (மதியை தவிர..) அவன் காட்டும் பரிவும் பாசமும் அவனை மதிக்கு புரிய வைத்தது.அவன் மீது இருந்த கோபங்கள் தளர,
‘ச்சே..அவன் தான் சின்ன பையன் முறுக்கிட்டு இருக்கான்னா..நீயும் வீம்பு காட்டலாமா மதி..வெண்பா உதயாவின் சந்தோஷத்திற்காகவாவது நாமலே பேசினால் என்ன..’ என்று அவனுக்கு இந்த இரண்டு நாட்களாய் அதிகம் தோன்ற சற்று முன் அதன் விளைவாய் தன்னை கடந்து போக முற்பட்ட உதய்யை,
“இங்க உட்காரேன் உதய்..பேசலாம்..” என்று சொல்ல அவன் மட்டும் அல்ல இவன் பேசியது கேட்டு உள்ளிருந்த பெண்களுமே திகைத்தனர்.
“ஐ..அண்ணி..நான் சொன்னேன்னு தான் உதய்ட்ட பேசுறாங்க..கடவுளே அப்படியே பேசி ரெண்டு பேரும் ராசி ஆகிடணும்..”
என்று உள்ளே குதூகலித்தாள் உதயா.
“என்ன..தானே வந்து பேசுறாரு..” என்று உதய் புருவம் உயர்த்தினாலும் அவன் எதிரே வந்து அமர மறுக்கவில்லை.
அவரே பேச்சை தொடங்கட்டும் என்று உதய் பார்க்க,
“அடுத்து என்ன பண்றதா இருக்க உதய்..” என்று மதி கேட்கவும் முதலில் புரியவில்லை.
“இத்தனை வருஷம் இந்த ஃபீல்ட்ல இருக்க இல்லையா..அடுத்த ஸ்டெப் என்ன..படம் பண்ண போறீயா..”
என்று மதி விசாரித்தது உதய்யிக்கு ஆச்சரியமே..
கண்ணுக்கு தெரியாமல் இருவருக்கும் இடையில் மூண்ட பனிப்போரை முடித்து வைக்க முதல் அடியாய் மதியே எடுத்து வைப்பது அவனுக்கு புரிந்தது.
கேள்வி கேட்டதோடு நின்றிருந்தால் உதய் நிச்சயம் தான் மேற்கொண்டு இருக்கும் திட்டங்களையும் முயற்சிகளையும் பற்றி விவரித்து இருப்பான்.ஆனால் மதி அவன் பதில் சொல்லும் முன்,
“ஆமா..நீ ஏன் சினிமாவை பிடிச்சிக்கிட்டு நிற்கிற உதய்…உனக்கு ச்சூஸ் பண்ண வேற கெரியரே கிடைக்கலையா..நம்ம குடும்பத்திற்கு எல்லாம் இந்த இண்டெஸ்ட்ரீ ஒத்து வருமா சொல்லு..வளர்ந்தாலும் ஆபத்து தான்..வீழ்ந்தாலும் ஆபத்து தான்..எவ்வளவோ கஷடப்பட்டு உயர்ந்தவங்களை கூட ஒரு நிமிஷத்தில் தூக்கி வீசி ஒன்னும் இல்லாமல் ஆக்கிடும்.. நிம்மதியே கிடைக்காத ஒரு வாழ்க்கை..இதில்ல என்ன சாதிக்க முடியும் சொல்லு..”
என்று திரைப்படதுறையை பற்றிய தன் அபிமானத்தை கூற சற்று இளகி இருந்த உதய்யின் முகம் கடினமுற்றது.
சினிமாவின் வாடையே இல்லாத சாதாரண ஒரு குடும்பத்தின் பிரதியாய் மதிவாணனின் மனநிலை இருந்தது.உதய் இடத்தில் தயாவோ ஜெகனோ இருந்திருந்தாலும் இதையே தான் சொல்லி இருப்பான்.உதயாவே குறும்படம் நடிக்க அவனிடம் அத்தனை போராடி இறுதியில்,
‘கண்டிப்பா இந்த ஒரு படம் மட்டும் தான்..’ என்று சத்தியம் செய்த பின்பே ஒத்துக் கொண்டான்.எனவே வாழ்க்கையை புரிந்தவனாய் தன் அணுபவங்களை கொண்டு தன் உடன்பிறப்புகளின் எதிர்காலத்தை குறித்து அறிவுரை கூறும் அதே மனப்பாண்மையில் தான் உதய்யிடம் சொன்னது.
ஆனால் உதய்கோ இத்தனை நாட்கள் இன்றி திடீரென பேசியது உதயாவின் வசதிக்காக யோசிக்கிறார் என்பது போல் தான் தோன்றியது.
‘6 டிஜிட்ல மன்த்லி டேன் ஓவர்..9-4 டைமிங்..பெர்மனெண்ட் ஜாப்னு இருந்தால் தான் தன் தங்கச்சி லைஃப் செட்டில்ட்னு நம்புவாறு போல..’
என்று எண்ணியவன் பார்வை கூர்மையாக உதடுகள் ஏளனமாய் வளைந்தது.
அவன் எண்ண போக்கை உணராது தன் பாட்டில் பேசினான் மதி.
“டெக்ஸ்டைல்ஸே அருமையான பிஸ்னெஸ் தானே..டிரெஸ்ஸூக்கும் க்ளாத்ஸூக்கும் எப்பவும் டிமாண்ட் இருந்துட்டே தான் இருக்கும்..மாமா எல்லாம் சொன்னாங்க…உன் ஐடியா எல்லாம் நல்லா இருந்தது.மத்தவங்களைவிட நம்ம கடையில் நீ புகுத்திருக்க சின்ன சின்ன ஸ்டெடர்ஜீஸ் எல்லாம் இன்னோவேடிவ்வா இருந்தது உதய்..நீ மாமாவோட சேர்ந்து பிஸ்னெஸ் பார்த்தால் இன்னும் எங்கயோ போயிடலாம்…இப்ப கோவைல மட்டும் இருக்கிற ஃப்ரான்சை தமிழ்நாடுல பல இடத்தில் தொடங்கலாம்..”
“முடிச்சிட்டீங்களா..?? இல்ல தெரியாம தான் கேட்கறேன்..நான் உங்களிடம் அட்வெய்ஸ் வேணும்னு வந்து நின்னேனா…இல்லேல..அப்புறம் எதுக்கு அள்ளி விடுறீங்க..உங்களுக்கு சினி இண்டெஸ்ட்ரீ பிடிக்காதுன்னா அது உங்க மட்டில்…எனக்கு என்ன தேவைன்னு நான் தான் டிசைட் பண்ணுவேன்..எங்க அப்பாவே என்னை இதுவரை எதுவும் சொன்னது இல்ல..நீங்க எப்படி சொல்லலாம்..ஃப்லீம் மேக்கிங் இஸ் அன் ஆர்ட்..உணர்ந்து பார்க்கிறவங்களுக்கு தான் அத்தோட அருமை புரியும்..பணத்தை அளவாய் வைச்சு பார்க்கிற உங்களுக்கு எல்லாம் புரியாது..”
என்று காட்டமாய் பதிலுரைத்தவன், “இந்த திடீர் அக்கறை உதயாவிற்காக என்றால் ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் நான் உங்களை மாதிரி கிடையாது..என் வொய்ஃபை ராணி மாதிரி பார்த்துப்பேன்..”
என்று வார்த்தைகளை அம்பாய் அழுத்தமாய் மதியின் மனதில் இறக்க அதே நேரம்,
“உதய்..அவர் உன் மாமா..என்ன பேசுறோம்னு யோசித்து பேசு..”
என்று கையில் பிடித்திருந்த காஃபி டரேவை இறுக்க பிடித்து முகம் சிவக்க அதட்டினாள் வெண்பா.
மதி ஸ்தம்பித்த நிலையில் அமர்ந்திருக்க உள்ளே சரண்யாவிற்கு கண்களெல்லாம் கலங்கிவிட்டது.எங்க மறுபடியும் முதலில் இருந்தா என்று அவர் மனம் பதைபதைத்தது.
ஆனால் உதயோ அவளுக்கு அசராது, “அதே மாதிரி..நான் உன் தம்பி..ஒரு தடவையாவது அதை மனசுல வைச்சு பேசு..”
என்றவன் எழுந்து மீண்டும் வெளியே சென்று விட்டான்.
மதியை பார்த்தவள் என்ன சமாதானம் சொல்வது என்று புரியாமல் சிலையாய் நிற்க தன்னை சுதாரித்த மதி அவள் கையில் இருந்த காஃபியை எடுத்துக் கொண்டு,
“நான் ஒன்னும் நினைக்கல போதுமா..நீ ஃபீல் பண்ணாத..”
என்று புன்னகைக்க முயன்றான்.அதற்குள் வெளியே சென்றிருந்த ஜெகனும் நிலாவும் வந்துவிட அதன்பின் அதனை குறித்து யாரும் பேசவில்லை.
மாலை அனைவரும் புறப்பட கிளம்பும் வரையிலும் கூட தன்னிடம் முகம் பார்த்து பேசாத தமக்கையை கண்டு அவளை சமாதானம் படுத்தும் எண்ணத்தோடு சுற்றியவன் தன் கூடவே எரிமலையாய் உருமாறி எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலையில் இருந்த உதயாவை கவனிக்கவில்லை.
சென்னையில் இருந்து புறப்பட்டு திருப்பூர் வந்தடையவே நல்லிரவை நெருங்கி இருக்க வழியிலே உணவை முடித்துக் கொண்டதால் அனைவரும் நேராக உறங்க சென்றனர்.
சரண்யாவிற்கு அழைத்து அவர்கள் பத்திரமாக வீடு திரும்பி விட்டார்களா என்று கேட்டுக் கொண்டவள் ‘மாப்பிள்ளை கோபமா இருக்காரா..’ என்று கேட்டதற்கு எதோ கூறி சமாளித்து அழைப்பை வைத்தாள்.
உதய்யின் வார்த்தைகள் ரிங்காரம் இட உறங்காமல் படுத்திருந்தவன் தோளை பற்றி,
“என்னங்க..அவன் பேசுனதை நினைச்சு கோபமா இருக்கீங்களா..”
என்று கேட்க,
“உன் தம்பி என்னுட்ட நல்லா பேசினா தான் அதிசயம்…அவன் இப்படி தான்னு தெரிஞ்சு வாய் கொடுத்தது என் தப்பு தான்..”
என்ற மதிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்.
அவனே,
“ஆனால் கடைசியா அவன் சொன்னது..உங்களை மாதிரி நான் கிடையாதுன்றான்..அப்படின்னா என்ன அர்த்தம்..உன்னை நான் நல்லா பார்த்துகளைன்னு சொல்றானா..”
என்றவனுக்கு சிந்தனை எங்கெங்கோ சென்றது.பல சமயங்களில் தானே அதனை யோசித்து இருந்ததால் உதய் அதனை கூறும் போது அந்த வார்த்தை மதிவாணனை மிகுந்த வலியை கொடுத்தது.
வெண்பா மறுத்து பேச முனைய,
“அவன் சொல்றதும் சரி தானோ வெண்பா.சண்டை போட்டு பிடிவாதம் பிடிச்சு உன்னை கல்யாணம் பண்ணேன்..ஆனால் அப்புறம் உன்னை நான் சரியாவே கவனிச்சிக்கல வெண்பா..உன் சந்தோஷம் உன் விருப்பம் கொண்டு நான் யோசிக்கவே இல்லைல..எனக்காக நீ தான் எப்பவும் விட்டு கொடுத்து போவ..நீ என்னைவிட்டு போயிருந்தால் நான்..நான் கண்டிப்பா சிதைஞ்சு போயிருப்பேன் வெண்பா..ஆனால் என் மேல எத்தனை தூரம் கோபம் இருந்தபோதும் ஒருநாளும் என்னை நீ தவிக்க விட்டது இல்ல..தேவதை தெரியுமா நீ..உன்னை நான் எப்படி பார்த்துக்கணும்..ஆனால் உனக்கு என்னால மன அழுத்தம் தானே மிஞ்சியது..”
என்று அவன் தன் போக்கில் பேச பற்றி இருந்த தோளில் பட்டென்று ஒன்னு வைத்தாள் வெண்பா.
“ஸ்ஸ்..என்னடி அடிக்கிற..”
“பின்ன அவன் ஏதோ சொன்னான்னு நீங்க தத்து பித்துன்னு உளருனா..கொஞ்சுவாங்களா…
உங்க மேல எத்தனை வருஷம் கோபமா இருந்தாலும் ஒரு நிமிஷம் கூட நீங்க எனக்கு வேணாம்னு நினைச்சது இல்லைங்க.. ஏன்னா எனக்கு காயம் உங்களாலன்னா அதுக்கு மருந்தும் நீங்க மட்டும் தான்..நான் ஆயிரம் காரணம் சொன்னாலும் உண்மையில் இந்த மதியை பிரிந்தால் வெண்பாவும் இல்ல..
எந்த புருஷன் பொண்டாட்டிக்குள்ள தான் மனஸ்தாபம் இல்ல சொல்லுங்க..எழுதி வைச்சா மாதிரி யாருக்கும் நடக்கிறது இல்லையேங்க வாழ்க்கை..
வாழ்ந்து பார்த்தா தானே தெரியும்..அதுல கஷ்டமோ சந்தோஷமோ சேர்ந்தே ஏற்றுகிறது தானே மணவாழ்க்கை..நாமும் கஷட்டபட்டோம் தான்..ஆனால் அந்த கஷட்டத்திலும் நிழல் மாதிரி உங்களுக்கு நானும் எனக்கு நீங்களும் இருந்தோம்..இதைவிட நிறைவான ஒரு வாழ்க்கை இருக்குமா சொல்லுங்க..!
என்னை பொண்ணு பார்த்ததில் தொடங்கி இந்த நிமிஷம் வரை நீ இல்லைனா நான் இல்லை என்கிறதை ஏதோ ஒரு வகைல எனக்கு நீங்க உணர்த்திட்டே தான் இருக்கீங்க..இது போதாத ஒரு பொண்ணை ராணியா உணர வைக்க..”
வெண்பாவின் ஒவ்வொரு வார்த்தையும் மதிவாணனின் மனதில் ஆயிரம் பூக்கள் ஒருங்கே பூத்ததுப்போல் மலர்ந்து இனிய நறுமனமாய் விரிந்து விகசிக்க அந்நிமிடம் உலகிலே மிகவும் சந்தோஷமான மனிதன் யாரென்று கேட்டால் அது மதிவாணன் தான் என்பதை அடித்து சொல்லலாம்.