சரண் – 21
காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே
காட்டில் தொலைந்த மழை துளி போல்
கண்ணே நீயும் தொலைந்ததென்ன
நீரினை தேடும் வேரினை போல பெண்ணை உன்னை கண்டெடுப்பேன்
கண்கள் ரெண்டும் மூடும் போது நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பார்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே
சிறுபொழுது பிரிந்ததற்கே பெரும் பொழுது கதறி விட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ
“என்ன புள்ள அம்மாயி இப்பல்லாம் நீ மேச்சலுக்கு போறது இல்ல போல, ஆடுகளை எல்லாம் உன் தாத்தன் அந்த மாரப்பனுக்க் கொடுத்துடுச்சு, என்ன வெவரம்..?” அன்றைய காலை வேலையில் வேர் கிழங்குகள் தோண்டுவதற்காக பெண்கள் சிலர் ஆற்றோரமாய் வந்திருக்க, அதில் சிறுவயதில் இருந்து ஒன்றாக வளர்ந்த தோழி ஒருத்திதான் இந்தக் கேள்வியை அரூபியைப் பார்த்துக் கேட்டது.
அவளும் நிலத்தை களைக் கொத்து கொண்டு தோண்டியவாறே “அட ஏன் சோழி நீ வேற, அப்படில்லாம் இல்ல புள்ள, உனக்குத்தான் தெரியுமே தாத்தனுக்கு உடம்பு முடியல, அவுகள பார்த்துக்க நானும் இங்கன இருக்கனும். அதனால தான் ஆடுகளை அவங்கிட்ட கொடுத்துச்சு. அவன் ஆத்தா வேற வந்து அழுதுச்சி தாத்தங்கிட்ட, சரி பொழப்புக்கு பொழப்பாச்சுன்னு கொடுத்துச்சு. ஆடுகள விக்கலாம் இல்ல. கொஞ்ச நாளைக்கு அவுக பார்க்கட்டும்..” என
“ஏய் புள்ள வெவரம் தெரியாத கெடா மாடு மாரி திரியாத, அந்த மாரப்பன் தான் உன்னைக் கட்டிக்கப் போறாதாவும், அதான் ஆடுகள உங்க தாத்தன் கொடுத்துருக்கன்னும் எல்லாரிட்டயும் சொல்லிட்டு இருக்கு. என் மாமியாட்ட வந்து அந்தாளோட ஆத்தா பேசிட்டு இருந்துச்சு. சரி உனக்குத் தெரியுமா.? தெரியாதான்னு எனக்குத் தெரியல, அதான் வெசாரிக்கலாமேன்னு கேட்டேன்..” என அந்த சோழி என்பவள் இழுத்துப் பேச,
“என்னடி சொல்றவ, எனக்கு பிடிக்காட்டி என் தாத்தன் துரும்பக் கூட அசைக்காது. அப்படி இருக்கப்ப எனக்குத் தெரியாம எப்படி இதல்லாம் நடக்கும். அந்தாளுக்கும், அவன் ஆத்தாளுக்கும் கிறுக்குப் பிடிச்சிருக்கு. அவுக சொல்றதை நீயும் நம்பிட்டு இருக்க..” என பதில் கொடுத்தாலும் இது சரியில்லையே என எண்ணம் ஓட, உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
“எனக்கு என்ன அம்மாயி தெரியும், அவுக வந்து என் அப்பன்கிட்ட பேசினத உன்ட்ட சொன்னேன் அவ்வளவுதான். எதுக்கும் சூதானமா இரு. அவன் அவ்வளவு நல்லவன் கெடையாது. கஞ்சாக் குடிகாரன். நினைச்ச நேரம் கஞ்சாவைக் கசக்கிட்டு திரிவான்..” என, அதுதான் அவளுக்கும் தெரியுமே. அவனைப் பார்த்தாளே குடலே வெளி வந்துவிடும் அளவுக்கு உமட்டுமே.
“ம்ம்.. எனக்குத்தான் அந்த கேடுகெட்டவனப் பத்தி தெரியுமே சோழி, நான் தாத்தங்கிட்ட வெசாரிக்கேன் விடு. உம் பையன் எப்படி இருக்கான். செரிமானம் ஆகலன்னு சொல்லிட்டு இருந்த” என பேச்சை மாற்ற,
“இப்ப பரவாயில்லை அம்மாயி, நீ கொடுத்த மருந்து தான் ரவைக்கு கொடுத்தேன். வயித்துல போறது சட்டுன்னு நின்னுடுச்சு, வாந்திதான் நிக்கல. மறுக்கா ஆறு மணி நேரம் கழிச்சி கொடுத்தேன். அதுவும் நின்னுடுச்சு. பரவாயில்ல புள்ள, அந்த வைத்தியரு உனக்கு ஒரு தொழில பழக்கி விட்டுருக்கார். அவர் இல்லாங்காட்டியும் நீ மருந்துக் கொடுத்துடுற, நல்லது புள்ள…”
“ஆமா அன்னைக்கு ஒருத்தர் வந்து நம்மலுக்கு ஏதோ செய்றேன்னு சவடால் விட்டுட்டு போனாகளே, அவுக வருவாகளா, இல்ல எல்லாரையும் போல வாய் சவடால் தானா..” எனத் தோழியை வம்பிழுக்க,
“என்ன சோழி இப்படி சொல்லிட்ட, அவுக இங்க வர்ரதுக்கு எல்லா ஏற்பாடும் செய்துட்டதா வைத்தியரு சொன்னாரு, ஒன்னு ரெண்டு நாள்ல வருவாக போல, கூட அவுக பொஞ்சாதியும் வர்ராகலாம், அந்தம்மா டாக்டருக்கு படிச்சிருக்காகன்னு வேற சொன்னாக. ரொம்ப வசதியனவுக போல..” என ரோசமாய் பேச
“என்ன புள்ள அவுகளப் பத்தி பேசினா உனக்கு மூஞ்சி முகரையெல்லாம் மழை பேஞ்ச இருட்டுல மின்னலடிச்ச மாதிரி சொலிக்குது. என்ன வெவகாரம்..” என புருவம் உயர்த்த,
அதில் மாட்டிக் கொண்ட பாவனையைக் கொடுத்தவள், சட்டென்று முகபாவனையை மாற்றி “அட நீ வேற போ புள்ள, இங்குட்டு கெடக்குற பிரச்சனையே என்னைப் போட்டுத் துலாவி எடுக்குது. இதுல புதுசா ஒன்னைக் கூட்டி விடுவ போல, நான் அவுக, அதான் டவுனு சாரு, அவுகளோட ரெண்டு மூனு தரம் பேசியிருக்கேன்ல, நல்ல மாதிரியா தெரிஞ்சிச்சு, இங்க வர்ர வெளி ஆம்பளைங்கல நானும் பார்த்துருக்கேன்ல. பொட்டச்சி எப்படி இருக்கா, அவ முந்தான எங்க ஒதுங்குது, எது முன்னாடி தெரியுதுனு தான அலைவானுங்க. ஆனா அந்த மனுஷன் கண்ணு மூஞ்சைத் தவிர வேற எங்கேயும் பார்க்காது, அவ்ளோ கண்ணியம் பார்க்குற பார்வையில, அதனாலயே அவுக மேல ஒரு மரியாதை எனக்கு. அதோட அவுக அண்ணனும் வந்து நம்ம மக்ககிட்ட பேசிட்டுத்தானே போனாக. அது தான் உனக்கேத் தெரியுமே. பெரிய பணக்காரக மாதிரி திமிராவே நடந்துக்கலயே. நல்ல மாதிரிதான்..” என விடாமல் பரிந்து பேச,
“நம்பிட்டேன் புள்ள நீ சொன்னதை. ஆனா ஊருக்குள்ள வேற பேச்சும் ஓடுது. உனக்குத் தெரியுமா..? நீ அவுக அவுகன்னு சொல்றியே அந்த அவுக உன்னைத் தூக்கிட்டுப் போக வருவாகளாம். பேசிக்கிட்டாக, அப்படி நடந்தா ரொம்ப சந்தோசம் புள்ள. நீ நல்லா இருக்கனும் அம்மாயி. ஆனா இந்த எலவு எடுத்த கலாச்சரம், பாரம்பர்யம்ன்னு நம்ம மக்க அத நடத்த விடாம பண்ணிடுவாகளோன்னு பயமா இருக்கு புள்ள..” என்றவள் “இன்னும் கூட என்னுக்கிட்ட மறைப்பியா புள்ள, நான் உனக்கு நல்ல சினேகிதி இல்லையா..” என வருத்தமாகக் கேட்க,
“சோழி என்ன நீ.. எனக்கு அதுல நம்பிக்கை இல்ல புள்ள. அவுக வருவாகதான். கண்டிப்பா வருவாக. ஆனா இங்க இருந்து என்னை அனுப்ப மாட்டாங்க புள்ள நம்ம மக்க. என் தாத்தனுக்கு அதுல துளியும் விருப்பம் இல்ல. அவருக்கு விருப்பம் இல்லாத ஒன்னை நான் செய்யமாட்டேன் சோழி.”
“உனக்கேத் தெரியும் தான, அப்பனும் ஆத்தாளூம் இல்லாத என்னை எப்படி வளர்த்துச்சுன்னு, அதை மறந்துட்டு அவருக்கு விருப்பம் இல்லாத ஒன்னை நான் செய்யமாட்டேன் புள்ள..”
“ஆனா.. ஆனா என் வாழ்க்கையில அவுக இல்லைன்னா வேற யாரும் இருக்கமாட்டாங்க சோழி. எனக்கு அவுக மட்டும் தான் வேணும் சோழி. அவுகள மட்டும் தான் எனக்குப் பிடிச்சிருக்கு..” முதல் முறையாகத் தோழியிடம் மனதைத் திறந்தாள் பெண்.
“ச்சீ.. லூசு நீ நினைச்சது கண்டிப்பா நடக்கும். அழாத தைரியமா இரு. நம்ம கும்பிடுற அந்த காவல் சாமி உன்னைக் கைவிடாது. உன் தாத்தன் மட்டும் இல்ல இந்த ஊர் மக்க எல்லாரும் சேர்ந்து உன்னை அவுகளோட அனுப்பி வைப்பாக கவலைப்படாத..” என தோழியைத் தேற்றியவள், “சரி அந்த டவுனுகாரக இங்கன வந்து என்ன செய்யப் போறாக, என்னுக்கிட்ட கேட்டா நம்ம வீடுகளுக்கு வெளிச்சம்(கரன்ட்) போட்டுக் கொடுக்கலாம். பொம்பளைங்க ஒதுங்குறதுக்கு அறை (கழிப்பறை) கட்டிக் கொடுக்கலாம். அவசர ஆத்திரத்துக்கு தேவைப்படுற மாதிரி ஒரு ஆஸ்பத்திரி, நம்ம பிள்ளைகளுக்கு விளையாட, படிக்க ஒரு பள்ளிக்கூடம்ன்னு இப்படி செய்யலாம். வர்ரவுக என்ன செய்றாகளோ பார்ப்போம். சரி வா புள்ள போவோம். வந்து நேராமச்சு, என் மாமியா இன்னேரம் நான் எவங்கூடவோ போயிட்ட மாதிரி ஊரைக் கூட்டியிருப்பா..” எனச் சலிக்க,
“ஏண்டீ உன் மாமியாள இழுக்கலன்னா உனக்கு கண்ணு இழுக்காதா.. அந்த பொம்பளையா இருக்கப் போய் உன்னை வச்சு காலம் தள்ளுறா, வேற எவளாச்சும் இருந்தா உன் அலப்பறைக்கு போடி உன் அப்பன் வீட்டுக்குன்னு பத்தி விட்டுருப்பா..” என பதில் பேச,
“பேசுவடீ.. பேசுவ உனக்கும் ஒருத்தி மாமியாளா வருவா , அப்பத் தெரியும் அந்தக் கஷ்டம். சரி நட புள்ள. கேப்பையை(ராகி) காயப் போட்டுட்டு வந்துருக்கேன். காஞ்சிருந்தா திருகு கல்லுல போடனும்.. அததான் காலைக்கு களி கிண்டனும்” எனத் தோழிகள் இருவரும் வாய் சவடால் அடித்தபடியே வர,
அரூபியின் வீட்டு முன்னே சிறு கூட்டமும், ஒரு காரும் இருக்க பெண்கள் இருவரும் ஒரு அர்த்தப்பார்வையை பரிமாறியபடியே நடையை எட்டிப் போட்டனர்.
மங்கைக்கு இங்கு அனைத்தும் புதிதாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. இங்குள்ள மக்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்று அவர்களின் உடலைப் பார்த்தாலே தெரிந்தது. ஆண் பெண் என இருவரின் உடல்களும் கடினமான வேலை செய்ததில் முறுக்கேறியிருந்தது. அவர்கள் மத்தியில் மங்கை மிகவும் குட்டிப் பெண்ணாகத் தெரிந்தாள். வெற்றிக்கு அவளின் ஒவ்வொரு செய்கையும் சிரிப்பைத்தான் வர வைத்தது. அங்குள்ளவர்களிடம் அவள் கேட்கும் கேள்விகளும், சந்தேகங்களும், அதற்கு அவ்ர்கள் கொடுக்கும் விளக்கங்களும் என பார்க்க பார்க்க சுவாரஸ்யம் தான்.
அந்த நேரம் பத்ரனுக்கு அவர்களியப் பார்த்ததும் மனதில் தோன்றிய நிம்மதியை வார்த்தைகளால் வடித்துவிட முடியாது. அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே படுக்கையில் இருந்தவர் எழ முயற்சிக்க, அவரின் காயத்தைப் பார்த்து பதறிய மங்கை, பத்ரனைப் படுக்க வைத்து, தன்னிடம் இருந்த முதலுதவிப் பெட்டியில் வைத்திருந்த மருந்துகளைக் கொண்டு சிகிச்சையைத் தொடங்கினாள். அவர் வேண்டாம் வேண்டாமென்றாலும் கேட்கவில்லை. கடைசியில் ஒரு டிடியையும், ஒரு பெயின் கில்லரையும் போட்டுவிட்டுத்தான் ஓய்ந்தாள். மங்கையின் இந்த செயலிலேயே பத்ரன் பாதி மயங்கி விட்டார்.
அடுத்து வெற்றியின் திட்டங்களைக் கேட்டு மொத்தமும் மயங்கிவிட்டார். இதையெல்லாம் பார்த்த அரூபிக்கு ஒன்றையும் நம்பமுடியவில்லை. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாத குழந்தயாகிப் போனாள்.
கூட்டத்தை ஒதுக்கி அவள் உள்ளே வரும்போது பார்த்தக் காட்சி மங்கை பத்ரனுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்ததுதான். மங்கையைப் பார்த்தவள் அப்படியே நின்றுவிட்டாள். என்ன ஒரு அழகு. தேவதையின் வம்சம் போல இருந்தாள். காட்டுக்குள் என்பதால் சுடிதார் தான் அணிந்திருந்தாள். பயணத்தில் களைத்திருந்த முடியை மொத்தமாக தூக்கி ஒரு கொண்டையில் அடக்கியிருந்தாள்.
எதற்கெடுத்தாலும் கடுமை காட்டும் பத்ரனையே சிறு குழந்தைப் போல தலையாட்டி உட்கார வைத்திருந்த அவளின் செயலில் அரூபி மொத்தமாக விழுத்திருந்தாள். இவர்களுக்கு தன்னைப் பற்றி தெரியுமா..? எனக் குழப்பாமன மனநிலையில் வந்தவர்களை கூட வரவேற்காமல் சுவரோரமாய் நின்று விட்டாள்.
அரூபி உள்ளே வந்ததிலிருந்து வெற்றியின் பார்வையும் வைத்தியரின் பார்வையும் அவள்மேல் தான் இருந்தது. அவளின் முகபாவங்களில் இருந்தே அவள் மனதைப் படித்தவர்கள் ஒருவருக்கொருவர் அர்த்தமாகப் புன்னகைத்துக் கொண்டனர்.
சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு வைத்தியர் தான் “ஏம்டி அம்மாயி அட்டனே நிலிசேவு, ஒச்சிண்டேருக்கு காப்பி நீலு வேசி இய்யிம்மா..” (என்ன அம்மாயி அப்படியே நிக்கிற, வந்தவுகளுக்கு காப்பிப் போட்டுக் கொடுமா..) என சத்தம் போட,
அப்போது தான் மங்கை அரூபியைப் பார்த்தாள். பார்த்தவள் பார்த்தபடியே இருந்தாள். ‘ப்பா என்ன அழகு இந்த பொண்ணு, காட்டுக்குள்ள இப்படி ஒரு அழகியா.. வனதேவதை தான். மாமா மொத்தமா விழுந்ததுல தப்பே இல்ல. அந்த முகம் அது கண்டிப்பா நிலாதான். வட்ட முகம் இடது மூக்கில் ஒரு சிவப்புக்கல் பேசரி, காதுகளில் ஊஞ்சலாடும் வளையம். கழுத்தில் கிடக்கும் விதவிதமான பாசிமணிகள். கெண்டைக் காலுக்கு மேலே ஏத்திக்கட்டி, ஒரு பக்கமாய் கட்டியிருந்த புடவை என அவளை அங்குலம் அங்குலமாக ரசிக்க, “கிறுக்கி உன் வாய்க்குள்ள இதோட மூனு ஈ போயிடுச்சு. இன்னும் “ஆ” ன்னு பார்த்துட்டு இருக்க. உன்னை எல்லாரும் ஒரு மார்க்கமா பார்க்குறாங்க பாருடி..” என மனைவியின் காதைக் கடித்தான் வெற்றி.
“மாமா.. இந்தப் பொண்ணு எவ்வளவு அழகு மாமா.. அப்படியே கடிச்சி சாப்பிடனும் போல லட்டு மாதிரி இருக்கு மாமா..” என அவன் கிண்டல் செய்ததையும், கண்டு கொள்ளாமல் பதில் பேச,
“நான் தான் சொல்லல, உன் புகழ் மாமா உன்னை என தலையில் கட்டிட்டு அவன் மட்டும் ஏஞ்சல் மாதிரி ஒரு பொண்ணைக் கட்டிட்டு போகப் போறான்னு..” என அவனும் அவளைப் போலவே பேச,
“ம்ம்ம்.. ம்ம்ம்..” என முதலில் புரியாமல் தலையாட்டியவள், புரிந்த பிறகு “என்ன சொன்னீங்க.. என்ன சொன்னீங்க.. திரும்ப சொல்லுங்க.. உங்களை..” எனப் பல்லைக் கடித்தவள் “தனியா மாட்டும் போது உங்களைக் கவனிச்சிக்குறேன்..” என முறைக்கும் போது காபியோடு இருவர் முன்னும் நின்றாள் அரூபி.
“நீங்க சாப்பிடுற மாதிரி இங்க ஒன்னும் கிடைக்காதே, நான் என்ன சமைக்கட்டும். சோறு, ரசம் வச்சுடுறேன். அசைவம் சாப்பிடுவீங்களா, கோழி அடிக்க சொல்லவா. இல்லை ஆடா..” எனப் பேச்சை ஆரம்பிக்க,
“ஹேய் கேர்ள் நான் நல்லா அசைவம் சாப்பிடுவேன். பறக்குறதுல விமானம் தவிர, மிதக்குறதுல கப்பலைத் தவிர மீதியெல்லாம் சாப்பிடுவேன். இந்த சீனாவுல இருக்குற சப்ப மூக்குக் காரனுங்க வெட்டுக்கிளி ஃப்ரை எல்லாம் பன்றாங்களாம். அத மட்டும் தான் நான் இன்னும் டேஸ்ட் பண்ணல. இங்க கிடைச்சா செஞ்சிக் குடேன். டேஸ்ட் பண்ணிப் பார்க்குறேன்…” எனப் பட்டாசாக பதிலுக்கு ஆரம்பிக்க,
வழக்கம்போல வெற்றி அவளை முறைத்து, வாயை மூட, மற்றவர்கள் “ஆ..” பார்வையைக் கொடுக்க, இப்படியாக அவர்களது ஆட்டம் அங்கே ஆரம்பித்தது.