சரண் – 22
நீ தூரப் பச்சை ..
என் நெடுநாள் இச்சை ..
ஒரு மாறு வேடம் பூண்டு வந்த
மல்லிப்பூவே முல்லை தீவே ..
சிலிர்க்கும் இழைகளிலே ..
துளிர்க்கும் முதல் இலையே ..
இனிக்கும் கரும்பிநிலே ..
கிடைக்கும் முதல் சுவையே ..
விழுந்தேன் இரவினிலே ..
எழுந்தேன் கனவினிலே ..
கனவில் நீ வந்தாய் ..
மறந்தேன் வெளிவரவே ..
ஒரு ஜோடி தென்றல் போகுது முன்னாலே ..
அதை கால்கள் என்று பொய்கள் சொன்னாயே ..
வெற்றியின் குடும்பம் கொட்லாங்காடு வந்து முழுதாக ஒரு மாதம் முடிந்திருக்க, ஆரம்பித்த வேலைகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. வெற்றி சொன்னது போலவே திரும்ப வருவான் என அம்மக்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
எல்லோரும் இப்படி வருவது தான் வந்து தங்கள் காரியம் முடியவும் சம்பிரதாயத்திற்கு பேசி விட்டு போவது தான். அதனால் பெரிதாக யாரும் எதிர்பார்த்திருக்க வில்லை. ஆனால் வெற்றி சொன்னது போலவே திரும்பி வந்தது, வந்த மறுநாளே வேலையை ஆரம்பித்தது என அனைத்துமே அவன் மேல் மரியாதையை வர வைத்தது.
முரண்டு பிடித்த சிலரும் கூட வேளையில் இணைந்து கொள்ள ஆரம்பித்தனர். முதலில் அவன் தொடங்கியது அவர்களின் குடிலை சரி செய்வது தான். காங்கிரீட்டுடன் கூடிய வீடுகளைக் கழிப்பறை வசதியுடன் கட்டி, சோலார் முறையில் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது. குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும் படிப்பிற்காவும் பள்ளி அமைக்க அடித்தளம் அமைக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்க, அங்கு அடிக்கடி பாம்பு கடித்து பலர் இறந்து போவதை பார்த்த மங்கை பள்ளி வேலையை நிறுத்தி விட்டு மருத்துவமனைக் கட்டிடத்தை கட்ட வைத்தாள்.
பெண்களின் மாதாந்திர பிரச்சனைகளுக்கு நாப்கின் மூலம் தீர்வு சொன்னாள். அங்கிருக்கும் பெண்கள் பேசி கொண்டே இருந்தாலும் கைகள் தன் பாட்டுக்கு ஏதேனும் ஒரு வேலையை செய்து கொண்டே இருந்தது. அவர்கள் வீட்டுக்குத் தேவையான மூங்கில் கூடைகள், மூங்கில் பாய், மூங்கில் திரைசீலைகள் என பல வகையான கைவினைப் பொருட்களை செய்தனர். அதன் வேலைப்பாடுகளை பார்த்து மங்கை மயங்கியே போனாள். அப்பெண்களின் கைவண்ணம் அப்படி.
இதையே அவர்களின் தொழிலாக்கினால் என்ன? என்ற மங்கையின் கேள்வி வெற்றியை உசுப்பி விட அவனும் அதற்கான வேலைகளில் இறங்கினான். கோவையில் இருக்கும் தன் கம்பெனியின் மூலமே உற்பத்தி பொருட்களை வாங்கி கொள்ளும்படி ஏற்பாடு செய்தான். ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே அவர்களின் வேலை சூடு பிடித்தது. குழந்தைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதற்கான விதிமுறைகளை கற்று கொடுத்தாள்.
கட்டி முடித்த வீடுகளை திறந்து வைப்பதற்கு தன் குடும்பத்தை வர வைக்கலாம் என்று மங்கை நினைக்க, வெற்றி மறுத்து விட்டான் “ஸ்கூல் ஓபெனிங் இருக்கு வனி, அது பெரிய லெவல்ல பண்றோம். அதுக்கு இன்னும் டூ வீக்ஸ் தானே இருக்கு, அப்போ வரட்டும். சும்மா அலைய வைக்க வேணாம்.” என்று விட்டான்.. மங்கைக்கும் அதுவே சரியெனப் பட விட்டு விட்டாள்.
ஆனால் அரூபிக்குத் தான் மனம் சங்கடபட்டு போனது. எப்படியும் புகழ் இதற்கு வருவான் என ஒரு எதிர்பார்ப்போடு இருந்தாள். வெற்றி வேண்டாம் என்று சொல்லவும், முகம் ஒரு மாதிரியாகி விட்டது. அவள் முகபாவனையை வைத்தே இருவரும் அரூபியின் மனநிலையை புரிந்து கொண்டனர். இப்போது தான் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறாள். இந்நேரம் புகழ் வந்தால் மீண்டும் மலையேறி விடுவாளோ என்ற பயத்தில் தான் வெற்றி வேண்டாம் என்றான். அது மங்கைக்கும் புரிந்தது. அதனால் எதையும் வெளிக்காட்டாமல் கடந்து விட்டனர்.
அடுத்தக் கட்ட வேலைகள் வேகமாய் நடக்க, மருத்துவமனையின் அனைத்து ஏற்பாடுகளும் மங்கையின் பேரில் புகழ் தான் செய்து கொண்டிருந்தான். ஆரம்பகால முதலுதவி, பிரசவ அறை, மருந்தகம், ஆய்வகம் என அனைத்தும் உள்ளடக்கிய ஒரு சிறிய மருத்துவமனை. அதற்கான ஆட்களின் தேர்வுகளை வனிதா தான் செய்தார். மூன்று வருட ஒப்பந்தத்தின் பேரிலேயே ஆட்களைத் தேர்வு செய்தார்.
அவர்கள் தங்குவதற்கு மருத்துவமனையின் மேலேயே அறைகள் கட்டி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவர்கள் மட்டும் மங்கையின் தேர்வாக இருந்தது. அவளின் சீனியர் ஒருவர் மற்றும் அவளோடு படித்த பெண்கள் இருவர் என மொத்தம் மூன்று மருத்துவர்கள் அமர்த்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.
வேலைகள் நடந்த வேகத்தைப் பார்த்து அங்குள்ள மக்கள் வெற்றியையும் அவன் குடும்பத்தையும் கடவுளின் மறு உருவமாகவே நினைக்க ஆரம்பித்து விட்டனர். பத்ரனும், தபேராவும் தங்கள் பங்கை எல்லா இடத்திலும் கொடுத்தனர். வெற்றியின் வலது கை போலவே இருந்தார்கள் இருவரும். அவர்களது யோசனைகளை வைத்து தான் மரங்களை வெட்டாமலே கட்டிடங்களை கட்ட ஆரம்பித்தான். அது சற்று சிரமமாகத்தான் இருந்தது.
ஆனால் பல நூறாண்டுகளாக வளர்ந்து, பசுமையான நினைவுகளைக் கொடுக்கும் அந்த மரங்களை நொடியில் வெட்டி வீழ்த்தி விட அவன் மனம் இடம் கொடுக்க வில்லை. வெளியே அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகள் ஒருபக்கம் அவனை வேலை செய்ய விடாமல் தடுக்க, அதற்கும் பல லட்சங்களை கொட்ட வேண்டியதிருந்தது. கிட்டத்தட்ட அந்த கிராமத்தையே தத்தெடுத்து இருந்தது வெற்றியின் குடும்பம் என்று தான் சொல்ல வேண்டும்.
புகழ் நடக்க ஆரம்பிக்கவும், மகளை அங்கேயே விட்டுவிட்டு வனிதா கோவை கிளம்பினார். தந்தையும் கணவனும் தனியாக இருப்பார்களே என்ற கவலை அவருக்கு. மணிக்கு இப்போது செமஸ்டர் விடுமுறை என்பதால் அவளிடம் புகழை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். புகழுக்கு வேலை ஏகத்துக்கும் இருந்தது. வெற்றி அனுப்பிய டாகுமெண்ட்டுகளை சரி பார்ப்பது, அதை ஆடிட்டரிடம் டிஸ்கஸ் செய்வது, டிரஸ்டிடம் அடுத்து செய்ய வேண்டியதை சொல்வது என அவனுக்கும் நேரம் சரியாக இருந்தது.
அப்படி ஒரு நாள் மாலை வெற்றி கொடுத்த வேலையை முடித்துவிட்டு ஹாலுக்கு வர, மொழி வீடியோ காலில் இருந்தாள். “ஏன்டி வீடியோ கால் தான் பேசுவியா, நார்மல் கால் பேசினா உனக்கு காது கேட்காதா..? என அவள் தலையில் தட்டிவிட்டு பக்கத்தில் உட்கார்ந்தான்.
“எருமை.. எருமை எதுக்குத் தலையில் தட்டுற, ஏற்கனவே எல்லாரும் என்னைக் குள்ளச்சி குள்ளச்சி சொல்றாங்க. நீயும் தலையில் தட்டி வளர விடாம செய்ய போறியா..” என கத்திக் கொண்டிருந்தவளை அவன் கண்டு கொள்ளவே இல்லை. அவன் கண்களோ டேபின் திரையில் தெரிந்த அவனின் காட்டு ராணியிடம் நிலைகொண்டு இருந்தது.
பெண்ணுக்கும் அதே நிலைதான் போல, விரிந்த விழிகள் மேலும் விரிய அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். சில நொடிகளில் அந்த விழிகளில் இருந்து நீர் தாரைத் தாரையாக கொட்ட ஆரம்பிக்க, அவள் அழுவதை கண்டவன் “மச்..” என சலிப்புக் காட்ட, அந்த சலிப்பும் அவளுக்கு வலிக்க, தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் அரூபி.
“ஏய் எதுக்குடி இப்போ அழுது ஊரைக் கூட்டுற, நான் தான் உன்னை ஒரு கன்றாவியும் பண்ணலையே, நீ சொன்ன மாதிரி உன்னைத் தொல்லை செய்யல, என்னைக் கட்டிக்கோன்னு கேட்கல, முக்கியமா உன்னைத் தேடி வரவே இல்ல. அப்புறம் எதுக்கு இப்படி அழுது சீன் போடுற, முதல்ல அழறதை நிறுத்தித் தொலை..” எனக் கத்த, புகழின் இந்தக் கோபத்தில் பக்கத்தில் இருந்த மணியே அரண்டு போயிருந்தாள் என்றால், அபியின் நிலை. பேசியதைக் கேட்டு விக்கித்து அமர்திருந்தாள். கண்களில் வழிந்த கண்ணீர் கூட சட்டென்று நின்றிருந்தது.
முந்தானையால் முகத்தை துடைத்து விட்டு அவனைப் பாவமாய் பார்க்க, அவனோ கண்டுகொள்ளவே இல்லை. அபிக்கு அருகில் இருந்த மங்கையிடம் பேச ஆரம்பித்து விட்டான்… மங்கையிடம் பேசி விட்டு தன்னிடம் பேசுவான் என ஆர்வமும் ஏக்கமுமாக பெண் காத்திருக்க, அவனோ பேசி முடித்து விட்டு அவளைத் திரும்பியும் பார்க்காமல் தங்கையிடம் டேபைக் கொடுத்துவிட்டுப் போய் விட்டான்… புகழின் செய்கை மங்கைக்கும் மொழிக்கும் பயங்கர கோபத்தை உண்டு செய்தது…
யாரிடமும் சொல்லாமல் அவன் நகரவுமே பொங்கிய அழுகையுடன் அபி அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்… “பாவம் அண்ணி… எதுக்கு இந்த எருமை இப்படி பன்றான்…? பாருங்க அழுதுட்டே போறாங்க…” என வருத்தமாக மொழி சொல்ல,
“ம்ம்… ஏற்கனவே எதுலயும் கவனம் இல்லாமதான் இருக்கா, மாமாவுக்காக ரொம்ப ஏங்கிப் போயிட்டா, அவங்களை பார்க்கனும்னு சொன்னது இல்லையே தவிற, அவ மனசுக்குள்ள அவ்வளவு ஏக்கம் இருக்கு, ரெண்டு வார்த்தையாச்சும் நல்ல விதமா பேசியிருக்கலாம்… ம்ப்ச்… பாவம். சரி மணி நான் போய் அவளை பார்க்குறேன்… நீ பிறகு கூப்பிடு…” என வைத்துவிட்டு அபியைத் தேடி போனாள்…
இங்கு புகழுக்கும் அதே நிலைதான். பல நாட்களுக்குப் பிறகு தன்னவளைப் பார்க்கிறான்… அவளின் விரிந்த விழிகளில் விழுந்து மூழ்கிப் போக, மனம் துடிக்க, மனமோ தடுத்தது அவளிடம் சாதராணமாகப் பேசப் போக மறுபடியும் “வேண்டாம்” பாட்டை ஆரம்பித்து விடுவாளோ என்ற பயம். அதோடு மனதில் காதல் இருந்தும் தன்னை வேண்டாமென்று விட்டாளே என்றக் கோபமும் சேர்ந்து தான் அப்படிக் கத்தியது…
மங்கையிடம் அவன் பேசும் போது, அவள் முகத்தில் தெரிந்த ஆர்வமும் ஏக்கமும் அவனின் உணர்வலைகளைத் தட்டியெழுப்பியது. இன்னும் கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தால், எங்கேத் தன்னையும் மீறி அவளிடம் பேசி விடுவோமா என பயந்து போய்தான் எழுந்து வந்துவிட்டான்…
ஆனால், இப்போது தோன்றியது தன்னவளிடம் நல்ல முறையில் பேசியிருக்கலாமோ என்று… எண்ணங்களின் பயணங்களைத் தடுக்க முடியாமல் நிலைத் தூணில் சாய்ந்திருந்தவனின் தோளில் “தட்தட்” என்று இரண்டு அடிகள் போட்டாள் மொழி…
“ஏன் இப்படி பன்ற, பாவம் அவங்க அழுதுட்டே போனாங்க, உனக்கு என்ன அவ்வளவு திமிர். அவங்க சிச்சுவேஷன் சரிதான. அவங்கலாள முடியாதுன்னு சொன்னதுல என்னத் தப்பு. உன்னால ஒரு பொண்ணைக் கரெக்ட் பண்ணக் கூடத் தெரியல நீயெல்லாம்.. ரொமான்டிக்கா பேசத் தெரியலன்னா சொல்லு நான் சொல்லித் தரேன். இனி இப்படி அவங்களை அழ வச்ச, நானே உங்க மேரேஜ் ஸ்டாப் பண்ற மாதிரி ஆகிடும் பார்த்துக்க,” என கத்தி விட்டு முறைக்க,
“அடிங்க என்ன திமிரா… கொள்ளி வாய் பிசாசுடி அவ, அவ அழுகையைப் பார்த்து நீ நம்பிடாதே, மோசமானவ, நான் இப்போ அவக்கிட்ட நல்ல மாதிரி நீ சொன்ன மாதிரி ரொமான்டிக்கா பேசினேன்னு வை உடனே, ‘நீங்க வேண்டாம் நான் உங்க குடும்பத்துக்கு சரி வரமாட்டேன், நீங்க வேற பொண்ணைப் பாருங்கன்னு…’ ஆரம்பிப்பா… எனக்கு பைத்தியம் பிடிச்சிடும், அது தான் பேசல, எப்ப பேசனும், எப்படி பேசனும், எப்படி கரெக்ட் பண்ணனும்னு எனக்குத் தெரியும்.. உன் மூளையை இதுல செலவு செய்யாம படிக்கறதுல காட்டு போடி…” என சின்னவளின் தலையில் தட்ட,
“தலையில் தட்டாத எருமை…” எனத் தலையைத் தடவியவாறே நகர்ந்தாள்… ‘அழுதாள்’ என்று சொன்னதும் மனம் ஒரு நிலையில் இல்லை… அவளைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என உடலின் அனைத்து செல்களும் பேயாட்டம் போட்டது… அதை அடக்க பெரும்பாடு பட்டு போனான் புகவாணன்…
வீட்டிற்கு வந்த அபி, பத்ரனுக்கு ரொட்டியை வைத்துவிட்டு, அவர் சாப்பிடும் வரை அமைதியாக இருந்தாள். முடித்ததும், “ஏன் தாத்தா உனக்கு டவுனு சாரை பிடிக்கல…” என்றாள் குரலில் வலியோடு. அந்தக் குரலில் தெரிந்த வலியில் அவளைத் திரும்பி பார்த்தவர், “என்ன அம்மாயி.? என்ன சொல்ற, தெளிவா சொல்லு…” என அதட்ட, “எதுக்கு இப்ப கத்துற, நாம மட்டும் தானே இருக்கோம் ஊருக்கே கேட்கனுமா…” என பதிலுக்கு கத்தியவள்,
“உனக்கு ஏன் டவுனு சாரை பிடிக்கல..” என்றாள் சிறு பிள்ளைக் கோபத்தோடு.
அவளின் கோபத்தில் சிரிப்பு தான் வந்தது அவருக்கு… சிரித்தப்படியே, “நான் எப்போடா பிடிக்கலைன்னு சொன்னேன்…” என்றார் சாதுவாக
அதிர்ச்சி… பேரதிர்ச்சி பெண்ணுக்கு… என்ன சொல்றார் இவர்? இத்தனை நாள் இவருக்குப் பிடிகாதுன்னு நினைச்சு தானே நான் என் மனசை கட்டுப்படுத்தி வச்சிருந்தேன்… இப்போ இவர் என்ன புதுசா சொல்றார் அதிர்ச்சியும் குழப்பமுமாக அவரைப் பார்த்து “என்ன சொல்றீங்க தெளிவா சொல்லுங்க” எனப் பதட்டமாகக் கேட்க,
“அம்மாயி எனக்கு டவுனுல இருந்து வர மக்களை சுத்தமா பிடிக்காது. அதுக்கு காரணம் இருக்கு. அதை உங்கிட்ட சொல்ல என்னால முடியாது ஆனா, இப்போ உனக்கு நிறைய குழப்பங்கள் இருக்கு. அது தெளியனும்னா என்னோட பயத்தை உன் கிட்ட சொல்லியே ஆகனும்…” என்றவர் சிறிது நேரம் அமைதியாகி விட்டு,
“அப்போ உன் அம்மா வயித்துல நீ எட்டு மாசம். நாலு நெருங்கிட்டு இருக்கு. வெளியே போவாதன்னு எத்தனை வாட்டி சொல்லியும் கேட்காம உங்கப்பனுக்கு சோத்தை எடுத்துக்கிட்டு போனா… உயிரோட போனவளை திரும்பி நாங்க பொணமா தான் பார்த்தோம்…” என்றவர் சிறிது இடைவெளி விட்டு,
“காட்டுக்கு போட்டோ எடுக்கன்னு வந்த நாலு டவுனு பசங்க உன் அம்மாவை நாசம் பண்ணிட்டாங்க, வயித்துல புள்ள இருக்குன்னு கூட பார்க்கல, பொழுது சாஞ்சி உங்கப்பன் வீடு வந்த பிறகு தான் உன் அம்மாவை காணோம்னே எங்களுக்குத் தெரிஞ்சது. ஆளுக்கொரு பக்கமா தேடி போனோம். அந்த ஒத்தப் பாறையில உன் அம்மா உன்னை பெத்துப்போட்டுட்டு பொணமா கெடந்தா. அந்தக் காட்சியை கண் கொண்டு பார்க்க முடியல… ரெண்டு உசுருல ஒன்னு தான் உசிரோட இருந்தது அது நீ தான்…
“என்ன செய்யனும் ஏது செய்யனும்னு புரியாம, கடவுளை நிந்தனை செஞ்சிட்டு, அடுத்து காரியத்தை முடிச்சோம். ஆனா, உன் அப்பன் சும்மா இருக்கல, போலீஸ்க்கு போறன்னு போய் பிராது கொடுத்தான். ஆனா என்னாச்சு அவனுங்க பங்குக்கு வந்து இங்கு இருக்குற பொண்ணுங்களை நாசம் பண்ணிட்டு போனானுங்க. இதையெல்லாம் பார்த்து ஊரு மக்க உன் அப்பனை கண்டமேனிக்குப் பேச ஆரம்பிக்க, ஆட்டை மேய்க்க போனவன், மருந்துக் குடிச்சிட்டு செத்துப் போயிட்டான்.”
“ஒரு வழியா எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சி ஊருக்குள்ள எந்த டவுனுகாரனுங்களும் வரக்கூடாது, வந்தா பாவம் புண்ணியம் பார்க்காம அய்யனாருக்கு வெட்டிப் போடனும்னு முடிவு எடுத்தாங்க. இப்ப வரைக்கும் அதுதான் நடந்தது. நீ அந்த பையனை அழைச்சிட்டு வர வரைக்கும்…” என்று நிறுத்த அதிர்ச்சியில் சிலையென நின்றிருந்தனர் பெண்கள் இருவரும்… ஆம், அபியை சமாதனம் செய்யலாம் என வந்த மங்கையும் பெரியவரின் பேச்சைக் கேட்டு சிலியாகியிருந்தாள்…
“நீ சொல்லு கண்ணு நான் என்ன முடிவு எடுத்திருப்பேன். என்னோட முடிவுல எதுவும் தப்பு இருந்துச்சா. எங்க சாதியில பொம்பளைங்களை தெய்வத்தோட அம்சமா பார்ப்போம். ஆனா, சில நாதாரி நாய்ங்க போதையா பார்க்குறாங்க, அதுதான் நாம ஒதுங்கிக்கலாம்ன்னு ஒதுங்கினோம்… அம்மாயி விசயத்துல அதைத் தான் நான் செஞ்சேன்…”
“புகழ் தம்பிக்கிட்ட நான் பேசினது அவர் திரும்ப வரக்கூடாதுன்னு தான். வரமாட்டார்னு தான் நானும் நினைச்சேன். இப்படி குடும்பத்தோட வந்து எங்க ஊரையே காப்பாத்துவார்னு நினைக்கல, உங்க குடும்பமே பேரும் புகழும் வாங்கி, சீரும் சிறப்புமா புள்ள குட்டிகளோட நூறு வருசம் வாழனும் தாயி…” என மங்கையின் தலையில் கைவைத்து ஆசிர்வசித்தார்…
அமைதியாக நின்றிருந்த அபியின் அருகில் சென்ற மங்கை அவளின் தோளில் கை வைக்க, “அக்கா அவரை என்னை மறந்துட சொல்லுங்கக்கா, நான் எங்கேயும் வரமாட்டேன்…” எனத் திரும்பியும் பார்க்காமால் இருவரின் தலையிலும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்…