அமிர்தாவிற்கு என்ன ஃபங்ஷன்… என்ன என்னால … ஒன்றும் புரியவில்லை , அவளிடம் என்ன என்றுக் கேட்பது நாகரீகமாகாது என்பதால் கேட்டுக்கொள்ளவில்லை.
அவர்கள் செல்லவும் தான், வீட்டு வேலையாளை விட்டு, காரிலிருந்து விக்ரமின் பொருட்களை அவனறைக்கு எடுத்துச் செல்ல சொல்ல , அதைப் பார்த்தவள் மனதினுள் ,
” திரும்பவும் வெளியூர் போறாங்களா … இவ்வளவு லக்கேஜ் எடுத்துட்டு வந்துருக்காங்க… ” . அதற்குள் விக்ரம் , அமிர்தாவிடம் ,
“ஒரு டீ மட்டும் இப்பக் கொடு ,குளிச்சிட்டு வந்து சாப்பிட்டுக்கிறேன்…” என்றதும் , சமையலறை சென்று டீ தயாரித்து எடுத்து வரும் போது ,
கீழே இருந்த விக்ரமின் பெற்றோர் அறைக்குள் சென்றவனைப் பார்த்தவள் , அங்கு எடுத்துச் சென்றாள். ஆண்கள் அனைவரும் வெளியே வரவேற்பறையிலயே இருக்க , பரணியும் வித்யாவும் சங்கரியுடன் பேசிக் கொண்டிருக்க , லதா மட்டும் தான் அறையில் இருந்தார்.
அமிர்தா உள் செல்ல முயல … விக்ரமின் வார்த்தைகளில் அப்படியே நின்று விட்டாள்.
“ம்மா … என் மேல கோபமோ வருத்தமோ இல்லையே ….”
“ச் சூ… என்ன கேள்வி இது… இப்பதான்ப்பா நான் சந்தோஷமாவே இருக்கேன்… இப்ப போய் இப்படி கேட்டுட்டு இருக்க … “
“அது இல்ல மா… நீங்க எத்தனை தடவை சொல்லியிருப்பீங்க … அப்பலாம் கேட்காம … இப்ப நான் இப்படி செய்றது … எனக்கு கொஞ்சம் கில்ட்டியா இருக்கு….”
” என்ன ராஜா இப்படி பேசுற… அம்மாவ நீ இவ்வளவுதான் புரிஞ்சுக்கிட்டியா … எம்பிள்ளை அவன் மனைவிக்கூட சந்தோஷமா இருக்கிறான்னு நினைச்சு நான் பெருமை பட்டுட்டு இருக்கேன்…. நீ என்னன்னா…..”
“ம்மா யு நோ … அவளும் உங்களப் போல தான் , உங்களப் போலவே அன்பு , அக்கறை , திறமை எல்லாமே …. அதோட She is so daring with impeccable manners மா… (குற்றமற்ற , மாசு மருவற்ற …ரொம்ப துணிச்சலான) ஆனா அது எல்லாமே என்கிட்ட மட்டும் தான் வெளிப்படுது…. ஐயோ அவ என்கிட்ட வாயாடுறதப் பார்த்தீங்கனா ….” என்றவன் வாய் விட்டுச் சிரித்து ,
” என்ன என் பையன இப்படி கலாய்க்கிறனு சொல்வீங்க … ” அப்படியே அமைதியாகி,
“அவளும் உங்களைப் போலவே என்னைய ரொம்ப விரும்புறா.. நானும் தான்….ஆனா அவ வெளிப்படுத்துற அளவு எனக்கு அவளரொம்ப பிடிக்கும்கிறத எப்படி வெளிக்காட்டுறதுனு தெரியல மா … உங்கள எவ்வளவுப் பிடிக்குமோ அதே அளவு அவளையும் பிடிச்சிருக்குமா …….” வெளியேக் கேட்டுக் கொண்டிருந்த வருவுக்கு , தன் அன்னையிடம் தன் மீதான அன்பை அவன் சொல்ல சொல்ல உணர்ச்சிவசத்தில் அழுகை வரும் போல் இருக்க , அதில் ஒரு துளி டீயிலும் விழுந்துவிட்டது.சட்டென்று திரும்பி நடக்க , எதிரில் செல்வா வந்துக் கொண்டிருந்தார்.
மருமகள் தங்கள் அறைப் பக்கம் இருந்து திரும்பி வரவும் , ” உள்ள வாம்மா….” என,
“இல்ல மாமா அவங்க பேசிட்டு வரட்டும்… ” என்றவள் அழுகையை அடக்க முடியாது அப்படியே நடந்து விட்டாள்.
செல்வா மருமகள் முகம் பார்த்தவர் , அறைக்குள் செல்லப் பார்க்க , விக்ரம் ,
“அவளுக்காக நிறைய செய்யத் தோணுதுமா … அதுல ஒண்ணுதான் இது…. ம்மா அதுவும் அவ வார்த்தைக்கு வார்த்தை எங்கம்மா போலவே நீங்க செய்றீங்கனு சொல்லும் போது அவ அம்மாவ ரொம்ப மிஸ் பண்றானு தெரியுது…. நானும் பக்கத்துல இல்லேனா …ம்மா உங்களுக்கு வருத்தம் இல்லயே ….” லதா பேச ஆரம்பிக்கும் போது தான் செல்வா உள்ளே செல்ல முயன்றார். அவரும் மனைவியின் பேச்சில் அப்படியே நின்று விட்டார்.
“ராஜா …. நீயும் உங்கப்பா போலவே இருக்கியே… அதை நினைச்சு நான் பெருமைப்பட்டுட்டு இருக்கேன் …அது மட்டுமில்ல எப்ப ஒரு பொண்ணு தாய்க்கு இணையா தன் கணவன சொல்ல ஆரம்பிச்சிட்டாளோ … அப்பவே நீ நல்ல கணவன்ங்கிற தகுதிய அடஞ்சிட்ட… ஐ ம் சோ ப்ரவுட் ஆஃப் யு மை டியர் சன் ……” என்றவர் மகனின் நெற்றியில் முத்தமிட ,கேட்ட செல்வாவோ,
” இவ என்ன ஒரு நாளைக்கு ஒன்னு சொல்றா… ” என யோசிக்கும் போதே… “
“உங்கப்பா கைய பிடிச்சிட்டு எப்ப நான் இங்க மருமகளா வந்தேனோ … அப்ப இருந்து என்னைய ஒரு தேவதை மாதிரி தான் என்னை உணர வச்சிருக்காரு…. கூட்டுக் குடும்பத்துல , அதுவும் உங்க பாட்டி குணம் உனக்கேத் தெரியும் …. அவங்களையும் சமாளிச்சு .. என்னையும் வருத்தப்படாம பார்த்துக்கனும்னு ரொம்ப கவனமா இருப்பார்…. நிறை விஷயங்கள் இப்ப நினைச்சா சிரிப்பா தான் வரும்…. உனக்கு மட்டுமில்ல அவருக்குமே என் மேல இருக்கிற அன்ப எப்படி வெளிப்படுத்துறதுனு தெரியாது…” தரையில் அமர்ந்து லதா மடியில் தலை வைத்திருந்த விக்ரம் தலைகோதிக் கொண்டே சொன்ன லதா ,
“ஆனா நீ பிறக்கும் போது வலில நான் துடிச்சப்போ.. அவர் முகத்தைப் பார்க்கணுமே …. அதுவும் நான் பிரசவ அறைக்குள்ள போய்ட்டு வர்றதுக்குள்ள அவர் ரொம்பவே துடிச்சுப் போய்ட்டாராம்… எங்கம்மா , சித்திலாம் பார்த்துட்டு சொன்னத விட , என் சித்திப்பொண்ணு கவி, அக்கா நான் அத்தான் அழுததப் பார்த்தேன்னு சொன்னப்பதான்.. உங்கப்பா என்னை எந்தளவுக்கு விரும்புறார்னே தெரியும்… நாங்க ஒரு நாளும் ஐ லவ் யூனு சொல்லிக்கிட்டதே இல்ல…. பட் அவர் செய்ற ஒவ்வொரு செயலும் என் கிட்ட ஐ லவ் யூ சொல்றது போல தான் இருக்கும்… அதுதான் உங்கப்பா என்னைய சந்தோஷமா வச்சிருக்கிறது போல நீயும் மருமகள எக்காரணம் கொண்டும் கண் கலங்க விடக் கூடாது சரியா..”
“ம்மா… இன்ட்ரஸ்டிங்” என்றவன் , கட்டிலில் படுத்து அம்மா மடியில் தலை வைத்துக் கொள்ள …,
“நீயே பார்த்திருப்ப நம்ம வீட்ல முதல்ல ஆண் பிள்ளைகள் சாப்பிட்டு அதற்கப்புறம் தான் பொண்ணுங்க சாப்பிடணும்னு ஒரு ரூல்ஸ் … ஆனா எனக்கு உங்கப்பாக்கூட சாப்பிடணும்னு ஆசை … இதை நான் சொன்னது கிடையாது … ஆனா அவரே என்னையப் புரிஞ்சுக்கிட்டு , சாப்பாட ரூமுக்கு எடுத்துட்டு வந்து சாப்பிடுவோம் … “
கேட்டுக் கொண்டே உள்ளே வந்த செல்வா , “என்னைய வச்சு செய்றா போல உங்கம்மா … ஆதி உனக்குத் தெரியுமா உங்கம்மா ஃபோன்ல ரிங்டோனா, காலர் ட்யூனா ஒரு பாட்டு வச்சிருப்பா… தெரியுமா உனக்கு …”
” ம் ஆமாம் பா ‘முத்தம்மா முத்து முத்துனு…’ ஒரு இளையராஜா சாங் வரும்… ” லதா உடனே ,
“ராஜா நேரமாகுது போய் குளிச்சுட்டு சாப்பிடு … நேரமாகுது….”தாயின் முகத்தில் வெட்கத்தின் சாயல் கண்டவன்,
“வாவ்…. அம்மா முகத்தைப் பார்த்தாலே ஒரு காதல் கதை .. இருக்கும் போல இருக்கே… சொல்லுங்கப்பா நீங்க….” விக்ரம் காலருகே வந்து அமர்ந்த செல்வா மகன் காலை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டே ,
“அது ஒன்னும் இளையராஜாவ பிடிக்கும்னோ …நடிகர் விக்ரம பிடிக்கும்னோ இல்ல … உங்கம்மாவ பொண்ணுப் பார்க்கப் போனப்ப டிவீல அந்த பாட்ட , உன் சித்தி அது தான் என்னைய உங்கம்மா கிட்ட போட்டுத் தந்த சின்னக்குட்டி கவி பார்த்துட்டு இருந்தா… அப்ப வி.சி.ஆர்(டெக் என்பார்கள்) தானே , அது முடிய முடிய, அந்த பாட்ட திரும்ப போடு.. திரும்ப போடுனு ஒரு மூணு தடவை பார்த்தேன்.இத்தனைக்கும் உங்கம்மா ரூமுக்குள்ள தான் இருந்துருப்பா….அப்பயிருந்து அந்தப் பாட்டு உங்கம்மாவுக்கு ஃபேவரிட் சாங் ஆகிருச்சு….அந்தப் பாட்டே அவ சொல்ற ஐ லவ் யூ தான் ஆதி … அவளுக்கு என்னைய எவ்வளவு பிடிச்சிருக்குனு இதிலயே நான் உணரலயா …இப்படி ஒருத்தருக்காக ஒருத்தர் யோசிச்சு வாழற வாழ்க்கை நிச்சியம் நல்லா இருக்கும்…. நீயும் அப்படித்தான்னு என் மருமக முகமே சொல்லுது… அப்படித்தானே … “எழுந்தமர்ந்த விக்ரம் , இருவர் கையையும் பிடித்துக் கொண்டு ,
“ப்பா.. ம்மா… நான் உங்களப் போல ஒரு வாழ்க்கை வாழணும்னு உங்க மருமககிட்ட சொல்வேன்….அது நிஜமாகும்மா நிச்சியம் ரொம்ப சந்தோஷமா இருப்போம்மா…” அங்கு வந்த வித்யா ,
“அம்மா… அப்பா…. நான்….” என்றவள், பெற்றோர் நடுவில் அமர்ந்திருந்த அண்ணன் அருகில் வந்து அமர்ந்துக் கொள்ள ,
” என்ன ரெண்டு பேரும் , மருமகனையும் , மருமகளையும் தனியா விட்டு இங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்க … கிளம்புங்க கிளம்புங்க … ” என செல்வா சொல்ல , அதன் பிறகும் பெற்றோருடன் கலந்து கேலி பேசி சிரித்தப் பின்னர் தான் கிளம்பினர்.
தன் மக்கள் கிளம்பியதும் , கதவைத் தாழிட்டு வந்த செல்வா , மனைவியை நெருங்கி ,
“சோனா … என் மேல இவ்வளவு ஆசை அன்பு எல்லாம் வச்சிட்டு … சும்மா என்னைய முறைச்சிட்டே திரியறியா…..” என்றவர் மனைவியின் நெற்றியில் பட்டென்று இதழ் பதிக்க, கணவனின் நெடுநாளைக்குப் பிறகான ‘சோனா‘ என்ற அழைப்பிலும் , முத்தத்திலும் நாண முற்று ,
“ஐயோ என்னங்க இது … பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணிட்டோம்…. இப்ப போய் … .” என்று முகம் சிவந்த லதாவிடம் ,
“பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணினா நான் உன்னை விரும்புறேன்னு சொல்லக் கூடாதா , இப்படிக் கட்டிப் பிடிக்க கூடாதா , இப்படி லைட்டா சுருக்கம் ஆரம்பிச்ச கன்னத்துல முத்தம் தரக்கூடாதா… என் பசங்க அவங்க திருமண வாழ்க்கைல சந்தோஷமா இருக்கிறதப் பார்த்ததும் … மனசுல அப்படி ஒரு நிம்மதி … ஏதோ தகப்பனா எல்லா கடமையும் சரியா செஞ்ச ஃபீல் … ஆனா என் மனைவிக்கான என்னோட நேரம் இப்பதான் கிடைக்குதோ …. .” என்றுச் சொன்னதைச் செயலில் காட்டிக் கொண்டே கேட்ட ஐம்பத்து ஐந்து வயது செல்வராஜனின் காதலில் , நாற்பத்து ஒன்பது வயது சொர்ணலதாவின் முகமும் சிவந்து தன் காதலை கணவனுக்கு உணர்த்தத்தான் செய்தது …
வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் … ஆனாலும் அன்பு மாறாதது…..
காதலர்களுக்கு வயதாகலாம்…. அவர்களின்
காதலுக்கு வயதாகுமோ…. அது என்றென்றும் இளமையுடன் ….
குடும்பத்தினருடன் சிரித்துப் பேசி மகிழ்ந்த அனு அந்தப்புன்னகை மாறாமல் அறைக்குள் நுழைந்த நொடி கணவனின் இறுகிய அணைப்பிலும் , அவனது ஆழ்ந்த இதழணைப்பிலும் தன்னை மறந்திருந்தாள். மயக்கத்தில் இருந்த மனைவியின் இதழ் விடுத்து இமைகளில் இதழொற்றி ,
“ஹாப்பி வாலன்டைன்ஸ் டே கேண்டி ….” என கிசுகிசுக்க, போலியாக கணவனின் நெஞ்சில் குத்தி ,
“உங்க தங்கச்சி என்னையப் பார்த்து அப்படிச் சிரிக்கிறா….”
“ஏன்… என் தங்கச்சி சந்தோஷமா இருந்தா ஓகே…. சொல்லு கீழ இந்த உதட்டசுழிச்சதுக்கு … நான் தர நினைச்சத தந்துட்டேன்…. அப்படி பாட்டுப் பாடினதலதான் நீ என்கிட்ட மயங் கினியா …. இல்லனா மயங்கி இருக்க மாட்டியா…. “எனக் கன்னக்குழி விழசிரித்தவன் ,
“இந்தக் கன்னக்குழிப் போதும் தானே …” என அவள் மோதிர விரல் எடுத்து , தன் கன்னத்தில் வைத்தவன் ,
“இப்ப விரல எடுத்துட்டு….” அவள் முகம் அருகே நெருங்க , முகம் சிவந்த அனு , அவன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு ,
” அதெல்லாம் அப்புறம்… எங்க என் வாலன்டைன்ஸ் டே சாக்லேட் , வருஷம் தவறாம ரூபாலி மேம் தர்றது … ” என புருவம் உயர்த்திய வித்யாவிடம் ,
” எப்பவும் கைல தந்த சாக்லேட் … இப்ப வாய்ல தரப்படும் ….அதுவும் வாயால் தரப்படும் …..” என்ற அரவிந்த் மனைவிக்கு சாக்லேட் ஊட்டிய அழகைக் கண்டால் நமக்கு வெட்கம் தான் மிஞ்சும் …. காதலர் தினம் கொண்டாடும் அரவிந்த் வித்யாவை தனிமையில் விட்டு விட்டு , ஆதி அமிர்தாவைக் காணச் செல்வோம்.
தூவும் …..