சரண் – 30 (1)
பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே
உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்குத் துணை இந்த வானா
வாழ்ந்தேனே உறவின்றி முந்நாள்
வந்தாயே உறவாக இந்நாள்
எந்தன் நெஞ்சில்..ஹோ…ம்..ம்..
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா..ஆ..
இசைக்கும் குயில் நீதானா வா..ஆ
********
திருமண நிகழ்வுகள் முடிய, அதைத் தொடர்ந்து திறப்பு விழா நிகழ்வுகள் பரபரப்பாகத் தொடங்கியது. ஊர்மக்கள் அனைவரும் ஒரு திருவிழாவை வேடிக்கைப் பார்ப்பது போலவே பார்த்திருந்தனர். கணபதி கோமத்தில் புகழும் – அரூபியும் தம்பதி சமேதராக அமர்ந்திருந்தனர்.
முதலில் புகழ் இதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. தன்னைவிட வெற்றியும் மங்கையும் தான் இதில் அதிகம் சிரமத்தை தாங்கியிருந்தனர், அதனால் அவர்களே அமரட்டும் என முரண்டு பிடிக்க, யார் சொல்லியும் கேட்கவில்லை. பிறகு மங்கை கர்ப்பமாக இருப்பதால் பூஜையில் உட்காரக் கூடாது என்ற நாச்சியர் விளக்கவும் தான் அமைதியாகப் போய் மனையில் அமர்ந்தான்.
அமைச்சரின் வருகைக்கு முன்னே, முதற்கட்ட நிகழ்வுகளை முடித்துவிட வேண்டும் என முனைப்பாக இருந்தனர். வனிதா மங்கையை வேலையே செய்யவிடவில்லை. தன் அப்பாவிடம் வந்து “அப்பா இவளை எங்கேயும் விடாதீங்க. மினிஸ்டர் வந்ததும் நான் வந்து இவளை அழைச்சிட்டுப் போறேன். புடவையைத் தூக்கிட்டு இவ நடக்குறதைப் பார்த்தா எனக்குப் பயமா இருக்கு. பிறகு இவ புருஷனுக்கு யார் பதில் சொல்றது..” என்று மங்கையை அவரிடம் விட்டுவிட்டுச் சென்றார்.
சென்று கொண்டிருந்த அத்தையை முறைத்தவள், பின் “பாருங்க தாத்தா இந்த அத்தையை. எனக்கும் அங்க எல்லாம் பார்க்கனும் போல இருக்காதா..” எனச் சினுங்க
“அதெல்லாம் பார்க்கலாம் குட்டி, ஆனா இப்போ வேனாம். வாந்தி பண்ணி டயர்டா இல்லையா உனக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே குட்டிம்மா.. எல்லாரும் இருக்காங்க தானே. உடம்புக்கு முடியாம போச்சுன்னா வெற்றிக்கு என்ன பதில் சொல்ல.. நீ இங்கேயே இரு. வெற்றி வரட்டும்..” என கனிவாக சொல்ல
“ம்ம்ம்… மாமா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கும் தெரியும்.. என்னைக் காணோம்ன்னு தேடி இங்க வருவாங்க பாருங்க..” என்றவளைப் பார்த்த ராமசாமி “நீ சந்தோசமா இருக்கியா குட்டிம்மா.. நீங்க ரெண்டு பேரும் இருக்குறதைப் பார்த்து நான் எதுவும் கேட்டுருக்கக் கூடாது தான். உன்னோட அம்மா அப்பா இருந்திருந்தா நான் இப்படி கேட்டுருக்க மாட்டேன். நான் என்ன சொல்ல வர்ரேன்னு உனக்குப் புரியுதா..? அம்மா மேல இருக்குற கோபத்தை வெற்றி உங்கிட்ட காட்டல தானே..” என எப்படிக் கேட்பது என பரிதவிப்புடன் கேட்டவரைத் தீர்க்கமாகப் பார்த்தவள்
“எல்லாரும் உங்களை மாதிரியே இருக்க மாட்டாங்க தாத்தா. இன்னைக்கு அத்தை இப்படி இருக்க காரணமே நீங்கதான். அத்தையோட குணம் உங்களுக்குத் தெரிஞ்சும் ஏன் மாத்த முயற்சிக்கல, அதுவும் தான் பெத்தக் குழந்தையவே ஒதுக்குற அளவுக்கு அவங்க போன பிறகும் நீங்க ஏன் எதுவும் செய்யல.. ஆச்சியும், சுமிம்மாவும், சுபிம்மாவும் இருந்ததால மாமாவுக்குப் பிரச்சினை இல்லை. ஆனாலும் ஒரு அம்மாவோட அன்பும் அரவனைப்பும் கிடைக்காம அந்தக் குழந்தை எவ்வளவு கஷ்டப்படும்னு உங்களுக்குத் தெரியாதா..? சரி அதைக் கூட விடுங்க, கருப்பா பிறந்தது யார் தப்பு..? அவர் தப்பா..? ஆனா உங்க கண் முன்னாடியே நான் வளர்ந்தேனே பெத்தவங்க பாசம் இல்லாம, அப்போக் கூட உங்களுக்கு அத்தை செஞ்சது தப்புன்னு தோனலையா..?”
“இப்போ வந்து எந்த அர்த்தத்தில் இந்தக் கேள்வி எல்லாம் கேட்குறீங்க தாத்தா, நான் அந்த வீட்டுல வாழப் போனதுனாலயா..? மாமா என்னைக் கொடுமை படுத்தி, என் கூட வாழமாட்டேன்னு சொல்லி உங்ககிட்ட அனுப்பியிருந்தாலும் தப்பில்லை தானே, ஏன்னா நீங்க செஞ்சது அப்படி. அவருக்கு என்ன நியாயம் செஞ்சிங்க சொல்லுங்க. அன்னைக்கு அந்த வீட்டுக்கு வர்ரதுக்கு எவ்வளவு யோசிச்சார் பார்த்தீங்களா. அப்போ எந்தளவுக்கு, நிராகரிப்பும், வேதனையும் வலியும் அனுபவிச்சிருப்பார். அவரே மனசு மாறி என்னை அத்தை வீட்டுக்கு கூப்பிட்டு வந்தா தான் வருவேன். இல்லை வரமாட்டேன். கோயம்புத்தூர் வந்தாலும் நம்ம வீட்டுக்கு போயிடுவேன்..” எனக் காட்டமாகப் பேசியவள்,
“உங்களுக்குத் தெரியுமா.? நானும் வெற்றி மாமாவை நெறைய டைம் ஹர்ட் செய்துருக்கேன். அவர் எங்கிட்ட பேச வந்தா பேசாம, உங்களை மாதிரியே நானும் மதிக்காம இருந்துருக்கேன். அன்னைக்கு நடந்த இன்சிடன்ட்ல என்மேல தான் தப்பு. மாமா மேல இல்ல. அத்தை தான் தப்பா புரிஞ்சிக்கட்டாங்க. நானோ புகழ் மாமாவோ சொல்ல வந்ததை அத்தைக் கேட்கவே இல்ல. வெற்றி மாமா அப்பவே ஊருக்குப் போறேன்னு நின்னாங்க. புகழ் மாமா விடவே இல்லை. நீங்க வந்ததும் போங்கன்னு சொன்னார்.”
“ஆனா நீங்களும் பெரிய மாமாவும் வந்தும் அவருக்கிட்ட ஒன்னுமே கேட்கல. பெரிய மாமா அப்பவே ஊருக்குக் கூப்பிட்டு போயிட்டார். அதுதான் மாமா நம்ம வீட்டுக்கு வந்துட்டு போன கடைசி நாள். அன்னைக்கு நான் எப்படி அழுதேன் தெரியுமா..? புகழ் மாமா ஆச்சிக்கு போன் செஞ்சி எல்லாமே சொல்லிட்டார். ஆச்சியும் இனி மாமாவை இங்க அனுப்ப மாட்டேன் சொன்னாங்க.”
“உங்களுக்கு அத்தைப் பத்தி தெரியும் தான.. நீங்களாச்சும் விசாரிச்சிருக்கலாம் தான. ஏன் அப்படி செஞ்சீங்க. வெற்றி மாமாவும் எங்களை மாதிரி உங்களுக்கும் ஒரு பேரன் தான. ஏன் அத்தைக்கிட்ட பேசிப் புரிய வைக்கல. நீங்க எல்லாரும் மாமாவை ஒதுக்க, ஒதுக்க தான் எனக்கு அவர் மேல ஆர்வம் வர ஆரம்பிச்சது. அந்த ஆர்வம் எப்போ காதலா மாறிச்சுன்னு தெரியல. ஆனா மேரேஜ்ன்னு ஒன்னு நடந்தா அது அவர்கூட தான்னு நான் முடிவு பண்ணி ரொம்ப வருஷமே ஆச்சு. உங்ககிட்ட மறைக்கனும்னு நினைக்கல. புகழ் மாமாவோட மேரேஜுக்கு நீங்க ஒரு வார்த்தை உனக்கு சம்மதமான்னு கேட்கல. நீங்களும் அத்தையுமே பேசி முடிவு செஞ்சீங்க. அந்தக் கோபம் தான் உங்கக்கிட்ட சொல்ல விடாம தடுத்துச்சு.”
“என்னால தான் அன்னைக்கு மாமாவுக்கு அவ்வளவு கஷ்டமும், வருத்தமும். அதை என்னால தான் சரி செய்ய முடியும்ன்னு தோனுச்சு. எப்படி சரி செய்றதுன்னு யோசிச்சப்ப தான் மேரேஜ் செய்யலாம்ன்னு தோனுச்சு. அவர் கூட கல்யாணம்ன்னு யோசனை வந்த பிறகு நான் தெளிவாகிட்டேன். அவரை விரும்ப ஆரம்பிச்சிட்டேன். ஆனா கல்யாணம் முடியிற வரைக்கும் கூட அவர் என்னை விரும்பினார்ன்னு எனக்குத் தெரியாது.”
“தெரிஞ்ச பிறகு என்னால நிம்மதியாவே இருக்க முடியல. ஒருவேளை நான் அவரை விரும்பாம, நீங்க சொன்ன மாதிரி புகழ் மாமாவைக் கட்டியிருந்தா, என் புருஷனோட நிலமை என்ன தாத்தா.. சொல்லுங்க.? அவர் நிலைமை என்ன..? கடைசி வரைக்கும் எந்தப் பொண்ணையும் திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டார். நானும் அவரும் ஒரே வீட்டுல இருந்திருந்தா இன்னும் நிலமை மோசமாகிருக்கும். இதையெல்லாம் நினைச்சு நான் எத்தனை நாள் கவலைப்பட்டுருக்கேன் தெரியுமா..? ஆனா நீங்க இன்னும் உங்க பொண்ணுக்கு தான் சப்போர்ட் செய்றீங்க..” என அவரை லெஃப்ட் ரைட் கொடுத்தாள்
மங்கையின் பேச்சில் பெரியவருக்கு முகம் விழுந்துவிட்டது. இங்கு வந்ததில் இருந்தே வெற்றி மங்கையை எப்படி பார்த்துக் கொள்கிறான் என்று அவரும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்.. அதோடு ஆச்சியிடம் உரிமையாகப் பேசுபவன் தன்னிடம் ஒதுக்கம் காட்டிப் பேசுவதையும் உணர்ந்தார். அதற்கு காரணமும் அவர் தான் என்பதை புரிந்து கொண்டார். விழா முடிந்ததும் இருவரிடமும் பேசி கோவைக்கு அழைக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால் மங்கைப் பேசுவதைப் பார்த்தால், அழைத்தாலும் வரமாட்டானோ எனத் தோன்றியது.
அன்று நடந்தது என்ன என்று மருமகனின் மூலம் அறிந்தது தான். அதோடு சம்மந்தியம்மாவும் அழைத்து அவரிடம் பேசினாரே.. அன்றைய நிலையில் வனிதாவின் பிடிவாதம் அதிகமாகி அது கோபமாக உருமாறி வெற்றியின் பக்கம் திரும்பி விடக்கூடாது என்றுதான் மருமகனும் அவரும் அந்த முடிவை எடுத்தார்கள். ஆனால் அது தப்போ.. நாச்சியார் இருந்ததால் அவனை அனுப்பி வைக்க முடிந்தது. அதுவே வேறு யாரும் இல்லாத சூழல் என்றால் யோசித்து செய்திருப்போமோ..? என இப்போது யோசித்தார். ஆனால் இப்போது யோசித்து என்ன செய்ய..?
மங்கைக்கு புகழைப் பார்க்கலாம் என வனிதா அடம் பிடிக்கும் போது அவர் முதலில் மறுக்கத்தான் செய்தார். பிறகு வழக்கம்போல வனிதா பிடிவாதம் பிடிக்க, வேறுவழியில்லாமல் ஒத்துக் கொண்டார். ஆனால் மங்கையும் வெற்றியும் ஒருவரை ஒருவர் விரும்பியிருப்பார்கள் என்று அவர் யோசிக்கவே இல்லை. எப்படியோ அனைத்தும் சரியாகிவிட்டதே என்று நினைத்தால் இந்தப் பெண் என்ன சொல்கிறாள் என யோசனையானார்.
“வனி..” என்ற வெற்றியின் குரலில் இருவரும் திரும்பி பார்க்க, அவன் யோசனையாக மனைவியைப் பார்த்திருந்தான். பெரியவர் அவனைப் பார்த்தபடியே இருக்க, மங்கைதான் “என்ன மாமா மினிஸ்டர் வந்துட்டாரா..? ஃபங்க்ஷன் ஸ்டார்ட் ஆகிடுச்சா..” அவர்கள் இருவரும் பேசியதை வெற்றிக் கேட்டுருப்பானோ எனப் பதட்டமாக கேட்க,
“அதெல்லாம் இல்ல.. இன்னும் டைம் இருக்கு… அங்க உன்னைக் கணோமேன்னு தேடினேன். மணி தான் நீ இங்க இவர் கூட இருக்கன்னு சொன்னா..? ஆமா ஜூஸ் குடிச்சியா..? இல்லைக் கொண்டு வரச் சொல்லட்டா.. ரொம்ப நேரம் பேசுனியா என்ன..? களைச்ச மாதிரி இருக்க..” என அவளின் முகத்தில் இருந்த வியர்வையைத் துடைக்க,
“இல்லையே.. அப்படி இல்லையே.. நான் சும்மா தாத்தாக்கிட்ட ஊர்ல எல்லாம் எப்படி.? என்னன்னு கேட்டுட்டு இருந்தேன். அவர் செக்கப்க்கு எல்லாம் போனாரான்னு விசாரிச்சிட்டு இருந்தேன். நாம அங்க போலாமா.? அத்தை கூப்பிட போறாங்க.” என அவசரப்படுத்த..
“அவங்க தான் சொன்னாங்க. என் மருமக தனியா இருக்கா.. போய் கூட இரு.. மினிஸ்டர் வந்ததும் கூப்பிடுறேன்னு.. அதனால இங்கையே இருப்போம். டோன்ட் வொரி..” என்றவன் பெரியவரிடம் திரும்பி, “ஏன் நிக்கிறீங்க.. உட்காருங்க..” என, அவரோ “இல்ல நீங்க இருங்க.. மணி அப்பவே வரச்சொன்னா.. நான் போறேன்..” என்றுவிட்டு நகர்ந்து விட்டார்.
அவர் நகர்வதற்காகவே காத்திருந்ததைப் போல, நகர்ந்ததும் மனைவியை இழுத்து அணைத்தவன் “விட்டா மாமனுக்கு கட்சியே ஆரம்பிப்ப போல. பாவம்டி மனுஷன் முகமே விழுந்துடுச்சு. உனக்கு இவ்வளவு கோபம் வருமா என்ன..? பாவம் உன் கையில சிக்கின நானும் என் குட்டிப்பொண்ணும்..” என மனைவியின் இடையைத் தழுவி, வயிற்றில் கைவைத்துப் பேச
“ம்ம்.. ஏன் எனக்காக என் மாமா ஆஸ்பிடலே கட்டிக் கொடுக்கும் போது, என் மாமாவுக்காக ஆஃப்ட்ரால் ஒரு கட்சி. அதை ஆரம்பிக்க மாட்டேனா.. நம்ம ஃபேமிலி மொத்தமும் ஓட்டு போட்டாலே நீங்க சி.எம் ஆகிடுவீங்க தெரியுமா..?” என்றதும்
“அடிப்பாவி ஆஃப்ட்ரால் ஒரு கட்சியா..? பாவம்டி இந்த அரசியல்வாதிங்க எல்லாம். நீ சொன்னதைக் கேட்டு தலையில துண்டப் போட்டுட்டுத் தான் போகனும்.. இந்த மினிஸ்டர் வரும்போது மட்டும் இப்படி ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்துடாத.. அந்தாளு அப்படியே ஓடிடப் போறாரு..” எனச் சிரிக்க
“ம்ம்.. கிண்டலு நடக்கட்டும்.. நடக்கட்டும்.. சரி என்னை விடுங்க. உட்காருவோம். கால் வலிக்குது..” என்றதும், அவளை உட்காரவைத்து அருகில் அமர்ந்தவன், கழுத்தில் முகம் பதித்து… “ஆமா மாமாவை உனக்கு அவ்வளவு பிடிக்குமா..? உங்க தாத்தாவை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிட்ட..” என முணுமுணுக்க,
அவன் கேட்டுவிட்டான் என்பதில் ஒருபக்கம் வருத்தமும், மறுபக்கம் நிம்மதியாகவும் இருந்தது. அதில் ஒரு பெருமூச்சு விட்டவள், “ம்ம்.. அவர் எனக்கு மட்டும் தான் தாத்தாவா உங்களுக்கு இல்லையா..? அத்தையவே மன்னிச்சிட்டீங்க. ஆனா தாத்தா மேல மட்டும் இன்னும் கோபம் இருக்கா.. வயசானவர் இல்லையா..? யாருமே இல்லாம தனியா இருக்குறது எவ்வளவு கஷ்டம்ன்னு உங்களுக்கே தெரியுமில்ல.. நீங்க கஷ்டப்பட்டா எப்படி என்னால தாங்கமுடியாதோ.. அதே போல தான் தாத்தா கஷ்டப்பட்டாலும்..” என்றவளின் விழிகளில் நீர் உருண்டது. “பேசுங்க மாமா.. அவர் மட்டும் ஏன் மன வருத்தத்தோட இருக்கனும்.. என்னைத் தவிர அவருக்கு யாரும் இல்லை நிம்மதியைக் கொடுக்க” என
மனைவியின் கண்ணீரைத் துடைத்து, அந்த விழிகளில் குட்டி குட்டியாக முத்தமிட்டவன், “சும்மாவே என்னை எல்லாரும் பொண்டாட்டி தாசன்னு தான் சொல்றாங்க. அதை நீ கன்ஃபார்ம் பண்ண வச்சிடுவ போலயே..” எனச் சிரித்தவன், “யாருக்காக இல்லன்னாலும் என் வனிக்குட்டிக்காக இதை செய்வேன். கண்டிப்பா செய்றேன்.. காலம் அதுக்கான நேரத்தைக் கொடுக்கும் இல்ல. எனக்கும் அவர் மேல கோபமோ வருத்தமோ இல்ல வனி. பேசப்போன முன்ன மாதிரி முகத்தைத் திருப்பிட்டா என்ன செய்ய.. அதனால தான் அவாய்ட் பண்ணேன். இனி அப்படி இருக்க மாட்டேன் ஓகேவா.. சரி சொல்லு… அன்னைக்கு நீயும் உன் புகழ் மாமாவும் சேர்ந்து தான என்னை மாட்டிவிட்டீங்க.. எனக்கு அப்பவே தெரியும்..” எனச் சிரிக்க,
“அது.. அது சாரி மாமா.. அப்படியெல்லாம் நடக்கும்ன்னு நான் நினைக்கவே இல்லை. நான் வேண்டாம்னுதான் சொன்னேன். இந்த புகழ் மாமா தான் அவனும் உனக்கு மாமா தான. அவன்கிட்டயும் கேளு சொன்னாங்க. அதுதான் கேட்டேன். ஆனா அத்தை அப்ப வருவாங்கன்னு நினைக்கவே இல்ல மாமா.. அத்தை உங்களை பேசினது இப்பவும் என்னால மறக்கவே முடியாது.. ப்ச்..” என
“சரி விடு.. அவங்க அப்படி நடந்ததால தான் இந்த டாக்டர் மேடம் என் மேல லவ்வுல விழுந்தாங்க. நீ யோசிச்சுப் பாரேன் அந்த சம்பவம் நடக்கலன்னா வீட்டுல யாரை சொல்றாங்களோ, அவங்களை மேரேஜ் செஞ்சிட்டு நீ போயிருப்ப. அதோட என் மேல இருந்த கெட்ட எண்ணமும் மாறியிருக்காது தான..” என அணைப்பில் வைத்தே பேச,
“ம்ம்.. நானும் கேட்டுட்டே இருக்கேன். நீங்க சொல்லவே மாட்டேங்குறீங்க.. சொல்லுங்க மாமா உங்களுக்கு எப்போ என்னைப் பிடிக்க ஆரம்பிச்சது.. சொல்லுங்க ப்ளீஸ்..” என அவன் கன்னம் வருட, வருடிய கைகளைப் பிடித்தவன் அவன் மனதில் மனைவி காதலியாக அமர்ந்த நொடிகளைப் பகிர ஆரம்பித்தான்.