மனோரஞ்சன் கதவை தட்ட, கதவை திறந்த மனிதரை பார்த்து அனைவரும் அதிர்ந்தனர். ஏனெனில் அந்த மனிதருக்கு ஒரு கை இல்லை.
அந்த மனிதரை பார்த்ததும் அவர் யாரென்பதை லக்ஷ்மணன் புரிந்துக் கொண்டார்.உடனே தாவிச் சென்று அவன் சட்டையை பிடித்தார்.
“டேய்! நீயா? உன்னை தான்டா இவ்வளோ வருஷம் தேடிட்டு இருந்தேன். நீ பண்ணின காரியத்தால என் தொழில்ல எனக்கு எவ்வளோ கெட்ட பேர் தெரியுமா? எல்லாரும் என்னை காப்பி அடிச்சவன் தானேனு எத்தனை தடவை கிண்டல் பண்ணியிருக்காங்க தெரியுமா?” அவர் இத்தனை வருஷம் இருந்த தன் ஆதங்கத்தை எல்லாம் வெளிப்படுத்தி, அந்த மனிதரை அடி அடியென அடித்துக் கொண்டிருந்தார்.
சூரியநாராயணன் அவரை தடுத்து,”லக்ஷ்மணா! அவரை விடு. அவர் கையை பாத்தியா? இதுக்குமேலயுமா அவருக்கு ஒரு தண்டனை வேணும்?”
இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமான அந்த மனிதர் முதன் முறை வாயை திறந்தார்,”ஆமா சார், என்னை மன்னிச்சிடுங்க. நான் செஞ்ச தப்புக்கு தான் கடவுள் எனக்கு பெரிய தண்டனை குடுத்துட்டாரோனு தோணுது.கொஞ்சம் வருஷம் முன்னாடி நடந்த ஒரு ஆக்சிடன்ட்ல என்னோட ஒரு கை போய்டுச்சு”
“ஏதாவது பொருளை திருடுனா மட்டும் தான், அது திருட்டு இல்லை, ஒருத்தரோட கற்பனை,திறமை,கலையை திருடுறதும் மிக பெரிய திருட்டு தான்னு நான் புரிஞ்சிக்கிட்டேன்.”
“அன்னைக்கு காம்படிஷன்ல நீங்க ரெண்டு பேரும் அசந்த நேரமா பார்த்து, நான் தான் உங்க ரூமுக்கு வந்து உங்க டிசைன் காப்பி பண்ணினேன். எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.உங்களை பார்த்து பல தடவை மன்னிப்பு கேட்கனும்னு நினைச்சிருக்கேன்.ஆனால் உங்க அட்ரஸ் தெரியாது. இப்போ சமீபமா தான் எங்க சொந்த ஊரு திருச்சியை காலி பண்ணிட்டு இங்க வந்தோம்.” அவர் வாய் விட்டு அழுதார்.
லஷ்மணன் எதுவும் பேசாமல் மௌனமாய் நின்றார்.
சூரியநாராயனன் அவனிடம் “தப்பு செஞ்சவனுக்கு குடுக்கிற பெரிய தண்டனை எது தெரியுமா?அவனை மன்னிச்சு விடுறது தான். நீ செஞ்ச தப்புக்கான தண்டனை உனக்கு கிடைச்சுடுச்சு”
“மனோ, வா வீட்டுக்கு போகலாம்” சொல்லிவிட்டு அவர் நடக்க ஆரம்பிக்க, அங்கிருந்த அனைவரும் நின்ற இடத்திலேயே மூச்சை பிடித்துக் கொண்டு சூரியனாராயனனையும், லக்ஷ்மணனையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தனர்.
“சூரியா” லக்ஷ்மணனின் குரல் கேட்டதும் நடந்துக் கொண்டிருந்தவர் அப்படியே நின்றார்.
அவர் அருகில் வந்த லக்ஷ்மணன் அவரை கட்டிபிடித்து அழ ஆரம்பித்துவிட்டார்.
“சூரியா! என்னை மன்னிச்சுடு டா. இவ்வளோ வருஷம் நானும் கஷ்டப்பட்டு, எல்லாரையும் கஷ்டபடுத்திட்டு இருந்திருக்கேனே! உன்னை நம்பாம போய்ட்டேனே!”
“விடுறா! எனக்கு தெரியும், என்னைக்காவது ஒரு நாள் நீ என்னை புரிஞ்சுக்குவேனு தெரியும்.எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்லை”
“இல்லை டா.நான் பண்ணினது ரொம்ப பெரிய தப்பு. இதுக்கு எனக்கு மன்னிப்பே கிடையாது டா”
“எனக்கு நீ உறவுங்கறது வேற, முதல நீ எனக்கு நண்பன். எதுக்கு மன்னிப்பு அது இதுனு பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு? விடுறா! சொல்லபோனா இத்தனை வருஷத்துல, எப்பவாச்சு இந்த பிரச்சனையை பத்தி உன் கிட்ட பேசி, சரி பண்ணியிருக்கணும், அதை பண்ணாததுக்கு நான் தான் உன் கிட்ட மன்னிப்பு கேட்கணும்”
“இல்லடா. என்ன இருந்தாலும்….”
அவர்கள் இருவரும் மாற்றி மாற்றி மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்க, இந்த பக்கம் நிலா தாமரையிடம் முனுமுனுத்தாள்.
“ஏய்! தாமு, என்னடி இது? எங்க அப்பாவும், உங்க அப்பாவும் ‘தளபதி’ செகண்ட் ஷோ ஓட்டிட்டு இருக்காங்க? இப்போ பாரு, அவங்க பேசுறதுக்கு நான் அப்படியே இங்க டப்பிங் குடுக்கிறேன்”
“உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கேன்.உனக்காக என் உயிரையும் குடுப்பேனு.எடுத்துக்கோ!எடுத்துக்கோ!”
“ஏன்?”
“ஏன்னா நீ என் நண்பன்!”
“பாத்தியா?பாத்தியா? பாத்தியா என் சூர்யாவை! பாத்தியா என் தளபதியை!”
தாமரை அடுத்து என்ன ஆகுமோ என்ற பீதியில் இருந்தாலும், நிலா சொன்னதை கேட்டு அடக்க முடியாமல் சிரிக்கவும் சூரியனாராயனனும், லஷ்மணனும் பேசுவதை நிறுத்திவிட்டு திரும்பி அவர்களை பார்த்தனர்.
லக்ஷ்மணன் அடுத்து மன்னிப்பு கேட்கும் படலத்தை மனோரஞ்சனிடமும்,ரிதுநந்தனிடமும் ஆரம்பித்தார். ஒருவழியாய் அவரை சமாதானப்படுத்தி விட்டு அனைவரும் காரில் ஏறச் சென்றனர்.
தாமரையும், ரிதுநந்தனும் எக்ஸாம் ரிசல்ட்க்கு காத்திருக்கும் மாணவர்களை போல பதற்றத்தில் இருந்தனர். என்ன தான் லஷ்மணன் மனசு மாறியிருந்தாலும், ரிதுநந்தனை தன் மாப்பிள்ளையாக ஏற்று கொள்வாரா? என்ற பயம் இருந்தது.
காரில் ஏற போன லக்ஷ்மணன் திரும்பி ரிதுநந்தனை பார்த்து, “மாப்பிளே! காரில் இடம் இல்லை, அதனால நீ தாமரையை பைக்ல கூட்டிட்டு வந்துடு பா” என்று கூறிவிட்டு சிரித்துக் கொண்டே காரில் ஏறினார்.
“யாஹூ!” என்று கத்தி மனோரஞ்சனும், நிலாவும் கை தட்ட, தாமரையோ மௌனமாக கண்ணீர் வடித்தாள்.
“ஏய்! தாமு என்னடி ஆச்சு உனக்கு? எதுக்கு அழுவுற? இந்த மொக்கை பீஸை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு நினைச்சு அழுவுறியா?”
ரிதுநந்தன் நிலாவின் தலையில் தட்ட, தாமரையோ.”இல்லைடி இது ஆனந்த கண்ணீர்” என்றாள்.
“ஷப்பா! புல்லரிக்குது. நீங்க உங்க காதல் ரசத்தை பிழிஞ்சு சக்கையாக்கி மெதுவா வாங்க. நாங்க கிளம்புறோம்”
அனைவரும் மனநிறைவுடன், சிரித்த முகத்துடன் வருவதை பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என்பதை வீட்டிலிருப்பவர்கள் புரிந்துக் கொண்டனர்.
லக்ஷ்மணன் வீட்டிற்க்கு வந்ததும் தாத்தா, பாட்டியை சமாதானம் படுத்தி அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.அனைவரும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே பழைய நிகழ்ச்சிகளை எல்லாம் பேசிக் களித்தனர்.காரைக்குடியிலிருந்து தன் தங்கை குந்தவையை கூட்டி வருவதற்கான ஏற்பாடுகளை செய்தார் சூரியநாராயணன்.
நிலா மதிவதனியிடம் நடந்தது அனைத்தையும் ஒரு வரி கூட விடாமல் சொன்னாள்.அதிலும் தந்தையர் இருவரும் மாறி மாறி மன்னிப்பு கேட்டதை அவள் நடித்து காட்டவும், அந்த இடமே சிரிப்பலையில் நனைந்தது.
“அது சரிண்ணா. நம்ம மாமாவை ஏமாத்தின அந்த ஆளை எப்படி கண்டுப்புடிச்சீங்க?” நிலா கேட்க
“அதுவா? அது ஒரு பெரிய கதை. அதை அப்புறமா சொல்றேன்” என்றான் மனோரஞ்சன்.
மறுநாளே குந்தவையும் அங்கு வந்து சேர, பிரிந்தவர்கள் சேர, பெரியவர்கள் பாசமழை பொழிய, சிறியவர்கள் ஓன்று கூடி மகிழ, அந்த இடமே அல்லோகலப்பட்டது.
‘எல்லாரும் ஹாப்பியா இருக்காங்க! அண்ணாவும், அண்ணியும் சேர்ந்து, நித்யா பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு கிடைச்சா, எவ்வளவு நல்லா இருக்கும்?’ நிலா மனதிற்குள் வருத்தப்பட்டு பெருமூச்சு விட்டாள்.
ஒருவாரம் இப்படியே கலகலவென்று ஓட, மதிவதனியும் தன் சோகத்தையெல்லாம் சற்று மறந்தும், சற்று மறைத்தும் நடமாடிக்கொண்டிருந்தாள். ஆனால் தவறி கூட மனோரஞ்சனின் பக்கம் அவள் செல்லவில்லை. அவள் பிறந்தநாள் அன்று அவர்கள் சண்டை போட்டதை அவள் மறக்கவேயில்லை.
அதற்கு நேர்மாறாக மனோரஞ்சன் அவளை ஏதாவது விளையாட்டாக சீண்டிக் கொண்டே இருந்தான். உள்ளூர கோபமாக வந்தாலும், எங்கே அதை வெளிக்காட்டினால், அவனிடம் பேச வேண்டியது வருமே என்று பயந்து கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தாள்.
இடைச்செருகலாக, நித்யா வேறு அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தாள். குடும்பம் ஒன்றுபட்டதால், அதை கொண்டாட நித்யாவின் குடும்பமும் அங்கே இருக்க, மதிவதியின் பாடு தான் திண்டாட்டமாயிருந்தது.
இந்நிலையில் ஒரு நாள் அதிகாலையிலேயே ஏதோ சத்தம் கேட்கவும், என்னவென்று கீழிறங்கிச் சென்று பார்த்தாள் மதிவதனி. குடும்பம் மொத்தமும் ஒன்று திரண்டிருந்தது.
“மனோ! எல்லா பையும் எடுத்து வச்சாச்சா?”
“ஆங்…எல்லாம் ஆச்சு பா”
“ரித்து அந்த ட்ராவல் ஏஜென்சிக்கு போன் பண்ணினானா இல்லையா?”
“தெரியல…எங்க அவனை ஆளையே காணோம்!”
ஏதோ பாட்டு பாடி ஆடிக் கொண்டே வந்துக் கொண்டிருந்த நிலாவை நிறுத்தி, மனோரஞ்சன் “ஏய்! நிலா, ரித்துவை பார்த்தியா?”
“அவனா…அவன் எங்கேயாவது தாமரை கூட கடலை போட்டுக்கிட்டு இருப்பான்”
மனோரஞ்சன் அவள் காதை பிடித்து திருகினான்,”ஏண்டி! அப்பா இருக்கும்போது இப்படி தான் பேசுவியா?”
ஆனால் அவள் சொன்னது தான் உண்மை என்பதுபோல, ரிதுநந்தன் தாமரையுடன் பேசி சிரித்துக் கொண்டே வந்தான்.
நிலா தன் பெரிய அண்ணனை ‘நான் சொன்னேன்ல பார்த்தியா?’ என்பது போல முறைத்து பார்த்தாள்.
“டேய்! ரித்து, அந்த டிராவல்சுக்கு போன் பண்ணியா இல்லையா?” சூரியநாராயணன் கேட்க,”அய்யயோ! மறந்தே போய்ட்டேனே, இதோ இப்போ பண்ணிடுறேன் பா” என்று போனை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.
“நல்ல பையன் போ!” என்று சிரித்துக் கொண்டே சூரியநாராயனன் சென்றார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மதிவதனிக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. ‘என்ன நடக்குது இங்க? எல்லாரும் எங்க கிளம்புறாங்க?’
அவள் நிலாவை பிடித்துக் கொண்டு,”ஏய்! நிலா எல்லாரும் எங்க பா கிளம்புறீங்க. என் கிட்ட ஒண்ணுமே சொல்லல!”
“அது….அது….அய்யயோ! ப்ளீஸ் அண்ணி, என் கிட்ட எதுவுமே கேக்காதீங்க! அப்புறம் நான் ஏதாவது உளறி கொட்டிட்டேனா மனோ அண்ணன் என்னை கட்டையை தூக்கிட்டு அடிக்க வந்துடுவான்” என்று அவள் வாயை பொத்திக் கொண்டு அங்கிருந்து ஓடினாள்.
அவள் எல்லோரிடமும் கேட்டு பார்த்தாள், எல்லாரும் ஒரே பதில் தான் சொன்னார்கள்,”நீ போய் ரெடி ஆகுமா, அங்க போனதும் உனக்கே தெரியும்”
இது சரிப்பட்டு வராது! பேசாமல் ரோஷத்தை விட்டு மனோரஞ்சனிடமே கேட்டு விடலாம் என்று முடிவு செய்து,”ம்ம்க்கும்….நம்ம எங்க போறோம்?”
அவனும் அதே பதில் தான் சொன்னான்,”நீ போய் ரெடி ஆகு. அங்க போனதும் உனக்கே தெரியும்”
“என்ன எல்லாரும் ஒரே பதில் சொல்றீங்க? நான் எங்கேயும் வரலை போங்க”
“அப்படியா? சரி ரொம்ப சந்தோஷேம்! வீட்டை நல்லா பார்த்துக்கோ. நாங்க போட்டு வர நாலு நாள் ஆகும் அதுவரை நீ தான் வீட்டை பார்த்துக்கணும்” சொல்லிவிட்டு அவன் எதுவும் கண்டுகொள்ளாமல் நகர, மதிவதனி கோபத்தில் பற்களை கடித்தாள்
‘என்னது நாலு நாளா? நாலு நாள் நான் மட்டும் எப்படி தனியா இருக்கிறது? பேசாம ரொம்ப பிகு பண்ணிக்காம கிளம்பிட வேண்டியது தான்’ என்று நினைத்தவள் தயாராகி தனக்கு தேவையான துணிமணிகளை எடுத்து வந்தாள்.
அதற்குள் அவர்கள் எல்லோரும் செல்வதற்கு ஒரு வேன் அங்கு நின்றது. நித்யாவின் குடும்பத்தை தவிர மற்ற அனைவரும் அதில் ஏறினர். நல்லவேளை நித்யா வரவில்லை என்று மதிவதனிக்கு உள்ளூர ஒரு சந்தோஷம்.
அவள் வேனில் ஏறியதும், நிலா அவளை மனோரஞ்சன் அருகில் சென்று அமறச் சொன்னாள். மனோரஞ்சன் அந்த இருக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்தான். அவன் நகர்ந்தால் தானே, இவள் சென்று அமர முடியும், அவனோ இவள் ஒருத்தி நிற்பதையே கண்டுகொள்ளாதவன் போல அமர்ந்திருந்தான்.
“அஹெம்…அஹெம்….”
அப்போதும் அவன் திரும்புவதாய் இல்லை.
“அஹெம்…அஹெம்….அஹெம்…”அவள் சத்தமாக இருமினாள். அவன் அசரவேயில்லை.
இது சரிபட்டு வராது என்று முடிவு செய்தவள், முன் இருக்கையில் அமர்ந்திருந்த தன் மாமியார் ராஜேஸ்வரியின் பக்கம் சென்று அமர போனாள்.
ஆனால் அதற்குள் சூரியநாராயனன் அங்கே வந்து,”ஆ….மதி மா…..நான் எங்க போனாலும் என் பொண்டாட்டி பக்கத்துல தான் உட்காரணும்னு ஒரு சபதம் போட்டிருக்கேன் மா. அதனால நீ உன் புருஷன் பக்கத்துலேயே உட்காரு” அவரும் அவர் வேலையை சிறப்பாகச் செய்ய மதிவதனி மறுபடியும் மனோரஞ்சன் பக்கம் வந்து நின்றாள்.நிலா இதெல்லாம் பார்த்து வாயை பொத்தி சிரித்துக் கொண்டிருந்தாள்.
“ஹலோ! உங்களை தான்! நான் ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன்”
“யாரு என்னையவா? அஹெம்….அஹெம்….னு கூப்பிட்டா எனக்கு எப்படி தெரியும்? என் பேர் என்ன அஹெம்மா? மாமா! தள்ளிகோங்க மாமானு சொல்லு. அப்போ தான் தள்ளுவேன்”
“என்னது? மாமாவா? முடியாது! முடியவே முடியாது! அப்படியெல்லாம் கூப்பிட முடியாது”
“அப்போ சரி நின்னுகிட்டே வா. வேற ஒரு இடமும் காலி இல்லை”
அவள் வேறு வழியில்லாமல் பல்லைக் கடித்துக்கொண்டு,”மாமா! கொஞ்சம் தள்ளிகோங்க” என்று கடுகடுத்தாள்.
அவன் நமட்டு சிரிப்புடன் எழுந்து, அவளுக்கு வழி குடுத்தான்.திரும்ப அமரும்போது வேண்டுமென்றே அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தான்.’சரி இவர் ஏதோ முடிவோட தான் இருக்காரு?’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
நூறாவது முறையாக அவனிடம் எங்கு செல்கிறோம் என்று கேட்டு பதில் கிடைக்காமல் கோபம் அடைந்தாள். ஆனால் விரைவிலேயே பாட்டு, விளையாட்டு என்று அந்த இடமே களைகட்டவும். அவள் மனநிலையும் மாறியது.
மனோரஞ்சன் வேறு அவள் அருகில் நெருங்கி அமர்ந்துக் கொண்டு, அவள் பக்கத்தில் வந்து, அடுத்து என்ன பாட்டு பாடுவது என்று கேட்கும் சாக்கில் அவளை பாடாய் படுத்தினான்.
நடுவழியில் சாப்பாட்டுக்கு ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, அவர்கள் பயணம் தொடரவும், வேன் சென்ற திசையை பார்த்த மதிவதனிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது…….
புலரும்