அத்தியாயம் – 7
பூம்பாவையின் சேவைகள்
பொன்னேட்டிலே ஏறுமே
பூலோகமே போற்றியே
பூபாலமாய் பாடுமே
ஓர் நாள் அவள்
வாராவிடில் என் பார்வை
தூங்கிடாது
நான் வாழவே
வான்நீங்கியே முன்
தோன்றும் தேவமாது
ஆடை மேல் ஆடும் பூவை
நான் காண…
வழி விடு வழி விடு வழி
விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு
விலகிடு விலகிடு
விலகிடு
எனை தேடி வருகிறாள்
பூமியெனும் பூமகளின் புன்னகையாய் சலசலத்துக் கொட்டும் சிறு அருவிகள். இயற்கை இசைத்துக் கொண்ட இனிய ஸ்வரமாய் அமைந்த கொட்லாங்காடு மலைகள்… இயற்கையின் வனங்களைத் தனக்குள் தேக்கி வைத்துப் பசுமை குன்றாமல் வாழும் அக்கிராமம், விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதாய். ஆதவன் உதித்ததற்கான அடையாளங்கள் எதுவுமின்றி வானம் இருட்டடித்ததைப் போலிருக்க, அந்தக் குடிலின் கதவைப் படாரென்று திறந்து கொண்டு அவசரமாக உள்ளே வந்தாள் அரூபி…
பச்சிலைச் சேர்த்த எண்ணெய்க் கட்டுடன் இரவெல்லாம் மூலிகையின் வாசத்தில் இருந்தவனுக்கு, இரவில் பெய்த பனி மழையில் நடுக்கம் பிறக்க, ஜூரம் வந்து,பார்த்துக் கொள்ள ஆளில்லாமல் போக, காய்ச்சல் அதிகமாகி, அப்படியே மயங்கியிருந்தான் புகழ்வாணன்.
உள்ளே வந்தவள் ஒரு நிமிடம் அவனைப் பார்த்து பயந்து, உடனே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தபேரா கூறியது நினைவில் வர, அடுத்தடுத்து முதலுதவிகளைக் கொடுத்து புகழை ஓரளவுக்கு சரியாக்கினாள்.
பிறகு வெண்ணீரில் ஒரு பச்சிலைப் பொடியைக் கலக்கி அவனுக்குப் புகட்டியவள், அடுத்து அவள் கொண்டு வந்த கேழ்வரகு கூழை மெல்ல மெல்ல ஊட்டினாள்…
அவன் வாய் திறந்து வாங்கும் வேகத்தைப் பார்த்தவளுக்கு தன்னையும் அறியாமல் கண் கலங்கியது… ‘எப்போது, எங்கு சாப்பிட்டானோ.? இங்கு வந்தே முழுதாக இரண்டு நாட்கள் ஆகிவிட்டன… இவன் வீட்டில் தேடுவார்களா இல்லையா…?’ எண்ணங்கள் அவனைச் சுற்றியே ஓட, கூழைக் கொடுத்து முடித்து வாயைத் துடைத்தவள், பாத்திரத்தை ஓரமாக வைத்து விட்டு வந்து அவன் அருகில் அமர்ந்தாள்…
அரூபி அந்தக் குடிலுக்கு உள்ளே வந்ததில் இருந்து இருவருக்குள்ளும் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை… அவன் பேசும் நிலையிலும் இல்லை… உடல் மிகவும் சோர்வாக இருந்தது… அதோடு தனிமை மிகவும் கொடுமையாக இருக்க, அரூபி வந்ததே போதும் போல இருந்தது…
இரவு அவன் உறங்கும் வரை தபேரா அங்கே தான் இருந்தார்… அவன் ஜூரத்தில் அனத்தியபடியே பார்க்கும் போது அவர் இல்லை… எங்கே போனாரோ தெரியாது… அவளுக்கு ஒரு வேளைத் தெரியலாம் யோசித்தப்படியே அவளைப் பார்த்தான்…
“மன்னிச்சிடுங்க சாரு, நான் நேத்து உங்களுக்கு தினையில் தான் கூழாக்கி எடுத்துட்டு வரதா சொன்னேன்… எதுக்கும் தபேராக்கிட்ட ஒருபேச்சு கேட்டுக்குவோம்னனு தான் கேட்டேன். அவருதான் இப்பத் தினையில குடுக்க வேணாம்… கேப்பையில் செஞ்சு, மோர் சேர்த்துக் கொடுன்னு சொல்லுச்சு… எங்கூட்ல கேப்பை இல்லையா, அதான் பக்கத்து வூட்ல வாங்கி திரிச்சு… கூழாக்கி எடுத்துட்டு வர தாமதாமாகிடுச்சு…” என அது தான் முக்கியம் போல பேச,
‘என்ன பீசுடா இவ… என் உயிரை ஒரு தடவைக்கு ரெண்டு தடவைக் காப்பாத்திக் கொடுத்துருக்கா, அதையெல்லாம் யோசிக்காம, சாப்பாட்டை மாத்திக் கொண்டு வந்ததைப் பத்தி பெருசா பேசிட்டு இருக்கா’ என மனதில் யோசித்தாலும் பேசவில்லை… ‘எங்கே அந்த தபேலா மண்டையன்’ என கண்களில் கேள்வியைத் தேக்கி அவளின் முகம் பார்த்தது பார்த்தபடியே இருந்தான்…
அது புரிந்ததோ, இல்லை அவளாக சொன்னாளோ “பக்கத்து கிராமத்துல ஒரு ஆளுக்கு பாம்புக் கடிச்சிடுச்சின்னு, நேத்து ராத்திரியே அந்தாளுங்க வந்து தபேராவை அழைச்சிட்டு போயிட்டாங்க…. நீ நல்லத் தூக்கமாம். அது தான் உன்னை எழுப்பிச் சொல்லி, உனக்கு சிரமம் கொடுக்க வேணாம்னு, போற வழியில என்னை எழுப்பி சொல்லிட்டுப் போச்சு, இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும் பயப்படாத…” என்றவள்…
[the_ad id=”6605″]
“ஏன் சாரு, நீ கடைசியா எப்ப சாப்பிட்ட, கோழிக் குஞ்சு இரைக்கு வாய் தொறக்குற மாதிரி, ஆ ஆன்னு உன் வாயும் தொறக்குது… எனக்கு மனசே கஷ்டம் ஆகிடுச்சு…” எனவும்…
அவள் அக்கறையில் கனிந்தவன் “மூனு நாள் இருக்கும்னு நினைக்கிறேன்…” என்றான் ஒரு பெரு மூச்சோடு…
“என்ன சொல்ற.. மூனு நாளா… என்ன சாரு இப்படியிருக்க? மூனு நாளு சாப்பிடலயா..? நமக்கு என்னக் கோவம்னாலும், அதைச் சோத்துல காட்டக் கூடாதுன்னு எங்கத் தாத்தன் சொல்லும்… எத்தனையோ பேரு இதுவும் கூட இல்லாம கஷ்ட்டப் படுறாங்க, நாம வச்சிக்கிட்டே வயித்தைக் காயப் போடுறோம்… என்னத்த சொல்ல இந்த டவுனுகாரங்கள..” என படபடப்பாக பேசியவள், பின் ” சாப்புடாம இருக்காத சாரு.. தப்பு.. இனி இப்படி செய்யாத” என்றாள் சட்டமாக. இதே வார்த்தையை அவளைப் பார்த்து அவனும் ஒரு நாள் சொல்வான் என்பதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை…
“ப்ச் அதை விடு… ஏன் வெளியே இருட்டா இருக்கு. விடிஞ்ச மாதிரியேத் தெரியல… வெளிச்சத்தையேக் காணோம்.” எனப் பேச்சை மாற்ற,
“ரவையெல்லாம் இங்க மழை, பனியும் சேர்ந்துட்டு, அது தான் இப்படி இருட்டடிச்சுக் கெடக்கு வானம் பாரு…” எனக் கதவை லேசாக திறந்துக் காட்டியவள்… ஓலையில் இருந்து விழுந்த மழைத் துளிகளைக் கையில் பிடித்து கீழே கொட்டினாள்…
“ஆமா இந்த மழை பெய்யும் போது, ஆடு மேய்க்க போக முடியாதே, அப்போ என்ன செய்வீங்க, மழைக் காலங்கள்ல தான் பாம்பு பூச்சிகள் எல்லாம் நெறைய வெளியே வரும்னு கேள்விப்பட்டுருக்கேன். உனக்கு பயம் இல்லையா…”? அப்போது அவனுக்கு அதைக் கேட்டே ஆக வேண்டும் என்பது போல் புருவச்சுளிப்புடன் கேட்டவனிடம்,
வாய் விட்டுச் சிரித்தவள், “நாங்க இங்க புதுசா இல்லையே சாரு… எங்க முன்னோர்கள், சொல்லப் போன பல நூறு வருஷமாவே இங்க தான் எங்க மூத்தக் குடிகள் இருந்ததா, எல்லாரும் சொல்றாங்க… எங்களுக்கு இதெல்லாம பழகிடுச்சு சாரு… ராத்திரில தான் மழை வரும்… பகலான பல்லைக் காட்டுவான் அந்தக் கனலன்…” எனவும், அவளது பேச்சில் சிரித்து விட்டான் புகழ்…
“உன்னோட பேசும் போது மனசுக்கு இதமாக இருக்கு… மகியும் இப்படித்தான் பேசுவா..” என்று ஏதோ யோசித்தவன்,
“தனிமை எவ்வளவு கொடுமைன்னு நேத்து தான் புரிஞ்சது. நைட்டெல்லாம் யாருமே இல்லாம, இப்படியே செத்துடுவேனோன்னு பயந்துட்டேன்… இங்க யாருக்கும் என்னைத் தெரியாது… என் வீட்டுக்கு எப்படி சொல்லுவீங்கன்னு எல்லாம் யோசிச்சுப் பயந்தேன் என்றதும்…
“என்ன சாரு கூரு இல்லாம பேசுற, சாவு கீவுன்னு? அப்படியெல்லாம் பேசாத, தப்பு எம் பேர்ல தான் தபேரா என்னுக்கிட்ட சொல்லிட்டுத் தான் போச்சு… நான் தான் வரல, அதுக்காக நீ இப்படி பேசுவியா, நீ சொன்ன மாதிரி எதுனாலும் ஆயிருந்தா, எனக்கு எவ்வளவு துக்கமா இருந்திருக்கும் தெரியுமா? அந்தத் துக்கத்துலயே நானும் செத்தாலும் செத்துருப்பேன்…” என்று பதட்டத்துடன் பேசியவளின் முகத்தைப் பார்த்தான்…
உண்மையிலேயே அவள் முகத்தில் பதட்டம் சூழ்ந்திருந்தது. அதில் ஏனோ அவன் மனம் லேசாக, ஆனாலும் அவள் பேச்சு தப்பு. இவள் இனி அப்படி பேசக்கூடாது, அதை முதலிலேயே முறிக்க வேண்டும் என்று முடிவு கட்டியவன், “ஏய் என்னப் பேசுற, நான் யாரு, எனக்காக நீயேன் சாகனும், அறிவிருக்கா உனக்கு, இப்படித் தான் யாருனேத் தெரியாதவங்களுக்காக நீ சாவேன்னு சொல்லுவியா… என்ன பொண்ணு நீ..” எனக் கோபமாகப் பேச,
இத்தனைக்கும் படுத்துதான் இருந்தான்… கை கால்கள், உடல் எதுவும் அசையவில்லை. முகத்தில் மட்டுமே அத்தனைக் கோபம். அதிலும் அவன் கண்கள் காட்டிய சிவப்பில் அப்படியே ஓரடி பின் நகன்றாள்…
[the_ad id=”6605″]
அதன் பிறகு அப்படியே அமைதியாகிவிட்டாள். இருவரிடமும் எந்தப் பேச்சும் இல்லை… மழையும் விட்டபாடில்லை… தபேராவும் வந்தபாடில்லை… வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பவள், சிறு குழந்தைப் போல, முகத்தை உம்மென்று வைத்து அமர்திருந்தாள்…
பொருத்துப் பொருத்துப் பார்த்த புகழும், “நீ இப்படித்தான் உர்ருன்னு இருப்பன்னா கிளம்பு, இப்படி உன்னோட முகத்தைப் பார்க்கறதுக்கு, இந்த விட்டத்தையேப் பார்த்துட்டு இருந்துக்குறேன்…” என்றான் கடுப்பாய்…
“என்ன நீ இப்படியெல்லாம் மிரட்டுற, நானே பயந்து போய் இருக்கேன்…” என்றாள் பயமாய்… உண்மையில் அவளுக்கு பயம் தான் வந்து விட்டது. புகழின் புதிய பரிமாணத்தில்.
அவன் கோபமாக பேசுவான் என்றே அவள் நினைக்கவில்லை. அதிலும் அவனின் கத்தல்.. அம்மாடியோவ் அரண்டு பேய்தான் இருந்தாள்.
“என்ன பயம் உனக்கு, அதுவும் என் கிட்ட, அத்துவான காட்டுக்குள்ள போய் ஆடு மேய்ச்சுட்டு வர , அங்கெல்லாம் வராத பயம், விஷப்பாம்பை அடிக்கும் போது வராத பயம், கை காலை அசைக்க முடியாம படுத்துருக்குற என் கிட்ட வருதா…? என மேலும் கடுப்பாய் பேச,
“அது அதெல்லாம் பயமில்லை… நீ தான் பயம். உன் கிட்டத் தான் பயம்… இப்படியெல்லாம் யாருமே என்னை மிரட்டினதே இல்லைத் தெரியுமா? எல்லாரும் பாசமா தான் நடந்துப்பாங்க, நீ ரொம்ப திட்டுற, மிரட்டுற, நான் பாவம் தானே… எனக்கு அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை… இன்னும் கொஞ்ச நாள்ல என் தாத்…” என முடிக்கும் முன்னே…
“ஏய்…” என்று அலறியே விட்டான்… “ஏய் லூசு லூசு…லூசு தாண்டி நீ.. என்னப் பேச்சு இது… நீ பாவம் தான் நான் இல்லைன்னு எப்போ சொன்னேன், நானும் சொல்ல மாட்டேன்… மத்தவங்களும் சொல்ல மாட்டாங்க. அதுக்காக உயிரோடு இருக்குறவரையும் சேர்த்து நீயேக் கொன்னுடுவ போல, இப்படித் தான் எல்லாருக்கிட்டையும் பேசிட்டு இருக்கியா கிறுக்கி…” என்றான் கடுப்பு போய் கோபம் ஏறிய குரலில்…
“இல்ல… இல்ல… அது வாய் தவறி வந்துடுச்சு, வேணும்னே சொல்லல, மன்னிச்சுடு.. நீ இப்படி கோவமா பேசாத, அப்புறம் நான் போயிடுவேன்… நானே உனக்கு எப்போச் சரியாகும், நீ எப்போ வீட்டுக்கு சொல்வேன்னு கவலையில் இருக்கேன், நீ தேவையில்லாம கத்துற…” இப்போது அவளும் பயத்தை விட்டு, சற்று நார்மலுக்கு வந்து விட்டாள்…
“என்னைப் பத்தி உனக்கு ஒரு கவலையும் வேண்டாம்…நீ கவலையேப் படாத, அதுக்கு நெறைய ஆள் இருக்காங்க… நீ உன் வேலையைப் பாரு…” என அவளைக் கோபம் போல் காட்டி, சீண்ட ஆரம்பித்தான்… பொழுது போக வேண்டுமே..
“எனக்கு என்ன..? ஒரு கவலையும் இல்ல, நீ சொன்ன அந்த நெறைய பேரு, அடிபட்டு மயங்கி கிடந்த அன்னைக்கு வந்து பார்த்திருக்க வேண்டியது தானே… நானும் பாவம் பார்த்து விட்டா ரொம்ப பேசுற நீ, என் மனசு நான் கவலைப்படுறேன் உனக்கு என்ன…? எனக்கு கோபம் வந்து நீ பார்க்கலயே, பார்த்தா தாங்கமாட்ட, நீ போற வரைக்கும் இது மாதிரி என்னுக்கிட்ட பேசிடாதே சரியா…” என அவள் நிஜமாகவே கோபம் காட்ட,
“என்ன பீசுடா இவ” என மீண்டும் அதே எண்ணம் ஓட, அமைதியாகி விட்டான்… பதிலுக்கு பதில் அவன் பேசுவான் என்று எதிர்பார்க்க, அவன் பேசாது அமைதியாக, மீண்டும் பயம், தப்பாக எதுவும் பேசிவிட்டோமோ எனக் கேள்வியாய்ப் படுத்திருந்தவனையே பார்த்தாள்…
‘நிச்சயம் நல்ல வசதியான வீட்டுப் பையன் தான். பார்க்கும் போதே தெரிந்தது… சட்டென்று கோபம் வரும் போல, திமிர் பிடித்தவன்… ஆனா பாவமாவும் இருக்கான். எப்படி பசி தாங்கினானோ தெரியல, பசியில அவுக்கு அவுக்கு ன்னு வாய தொறந்தான்.. பாவம் தான். ஆனா கோபம் எப்புடி வருது.. ஆத்தி இவன் கூட எந்த புண்ணியம் பண்ணவ குடும்பம் நடத்த போறாளோ தெரியல.. பாவம் அந்தபுள்ள, நான் கூட வாய் பேசவே மாட்டான் அமைதின்னுல நினைச்சிட்டேன்… இவனுக்கு அடிப்பட்டது அவங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகுமோ தெரியலயே… ரொம்பக் கவலைப்படுவாங்க…’ இப்படி அவனுக்காகவும், அவளுக்காகவும் என எண்ணங்களை அரூபி ஓட்டிக் கொண்டிருக்க,
[the_ad id=”6605″]
அவள் முகம் போன போக்கிலேத் தன்னைப் பற்றி தான் ஏதோ யோசிக்கிறாள் என்பது வரை உணர்ந்தவன், அவளை சீண்டும் எண்ணம் தோன்ற, “என்ன…? என்ன யோசிக்குற…? அதுவும் என்னைப் பார்த்து…? நான் அழகு தான். உத்து உத்துபார்த்து கண்ணு வச்சிடாத..” என புருவம் உயர்த்த அதில் ஆவென்றவள்,
‘ஆத்தீ..’ சுர்ரென்று கோபமும் ஏற, “க்கும்… நான் எதுக்கு உன்னைப் பார்த்து யோசிக்குறேன்… அதுவும் அழகாம் அழகு பெரிய அழகு.. பாம்புக் கடிச்ச மனுசன் இருக்காரா போயிட்டாரான்னு யோசிச்சேன்…” என சொல்லிவிட்டு வெடுக்கென திரும்பி விட, புகழின் முகத்தில் புன்னகை விரிந்தது…
மீண்டும் இருவரிடமும் அமைதி…
‘நாம இவனைப் பத்தி யோசிச்சதை எப்படிக் கண்டு பிடிச்சான்… நம்ம மூஞ்சி அப்படியேக் காட்டிக் கொடுக்குதோ… ச்சே, தபேரா எப்ப வர, நான் எப்ப போக, இந்த மழை விட்டாக் கூட வெளியே போய் உட்காரலாம்.. இவன் பேசியே கொன்னுடுவான் போல,” என யோசித்தப்படியே, கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.
ஆனால் புகழின் முகத்தில் சிரிப்பு மறைந்து வேறு யோசனை பிறந்தது. வீட்டில் என்ன பிரச்சனை நடந்திருக்கும் வெற்றி மங்கையை ஏற்றிருப்பானா…? தான் கல்யாணத்தை வேண்டாம் என்று விட்டு வந்ததை சரியாக புரிந்திருப்பானா…? மங்கைப் புரிய வைக்க வேண்டுமே… அவளுக்காத்தான் செய்தேன் என்றுத் தெரிந்தால் வீட்டில் இப்போது யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் தான் …அம்மா…? அவரும் தான்..
ஆனால் முன்னமே என்றால் கண்டிப்பாக அவரை சமாளித்திருக்கவே முடியாது… தற்கொலை செய்து கொள்வேன் என்று எமோசனல் பிளாக்மெயிலில் இறங்கியிருப்பார்… கடைசி நேரத்தில் செய்தால் தான் சரியா வரும் என்று யாரிடமும் சொல்லாமல் இந்த முடிவை எடுத்திருந்தான்…
ஆச்சிக் கூட பாலனிடம் கூறி அவரே ஏதேனும் செய்கிறேன் என்று சொன்னார் தான்… ஆனால் அம்மா பெரியளவில் பிரச்சனை செய்வார் என்றுத் தெரியும். அதெல்லாம் கூடாது என்றால் அந்த இடத்தில் அவன் இருக்ககூடாது என்று முடிவெடுத்தான். கிளம்பியும் விட்டான்…
இப்போது இவர்கள் வெற்றியும், மங்கையும் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்தால் போதும். அம்மாவை எப்படியென்றாலும் சமாதனம் செய்து கொள்ளலாம் எனத் தோன்றியது, கூடவே ஒரு பெரு மூச்சும்… இவளை, இந்தக் காட்டு ராணியை எப்படி சமாளிப்பது என்று. காதல் என்றால் கழுதையைப் போல் உதைப்பாளோ..! அப்படித்தான் போல.
கதவைச் சாற்றியவள் அவனைத் தான் பார்த்தாள் அவன் முன்னர் சொன்னதைப் போல விட்டத்தைத் தான் வெறித்துக் கொண்டிருந்தான்… முகம் முழுக்க யோசனை…
“சாரு… என்ன கம்முனு ஆகிட்ட. வலி எடுக்குதா,” என
‘இல்லை’ எனும் விதமாக தன்னைப்போல் தலையாடியது.
” அப்போ பசி எடுக்குதா.. ” என,
அதற்கும் ‘இல்லை’ என தலையசைக்க,
” பொறவு நான் திட்டிட்டேன்னு தான் கோவமா இருக்கியா… மன்னிச்சுடு, இனி உன்னைத் திட்ட மாட்டேன்… உங்கூட சண்டையும் போட மாட்டேன். நீயும் இப்படி மிரட்டாத சரியா…” அதுதான் விசயம் என்பது போல் அவளே பேச,
முதலில் என்ன பேசுகிறாள் எனப் புரியாமல் பார்த்தவன்… அவன் பேச்சின் சாரம்சத்தில் பக்கென்று சிரித்து விட்டான்…
மனதுக்குள் மீண்டும், “என்னைப் பீசுடா இவ…” எனத் தோன்றாமல் இல்லை…
“அப்பாடி சிரிச்சிட்டியா, இப்படியே இன்னைக்கு முழுசும் உம்முனு தான் இருப்பியோன்னு பயந்து போயிட்டேன்… என்ன யோசனை எல்லாம் பலமா இருக்கு… வீட்டு நினைப்பு வந்துடுச்சோ… எனக்குமே அதேக் கவல தான்… உன்னை உங்க வீட்டுல இன்னேரம் தேட ஆரம்பிச்சிருப்பாங்கல்ல…”என்றாள் அவன் சிரித்து விட்டான் என்ற நிம்மதியில்.
“ம்ம்… ஆமாம்.. நான் யாருக்கிட்டையும் எங்க போறேன்னு சொல்லிட்டு வரல கண்டிப்பா தேடுவாங்க…”என்றான்.
“என்ன சொல்ற சொல்லிட்டு வரலையா… ஏன்… ஏன்…? என்ன சின்ன புள்ளையா நீ..? அறிவே இல்லையா உனக்கு.? ச்சே… பாவம் எப்படியெல்லாம் கஷ்டப்படுவாங்க, எங்கெல்லாம் தேடுவாங்க… ஏன் அப்படி செஞ்ச…?” கொஞ்சம் முன்னேக் கிடைத்த நிம்மதி ஸ்வாக ஆகியிருந்தது.
“ப்ச்… நீ வேற ஏன்டி டென்சன் பண்ற, சின்னக் குழந்தைங்க காணாம போன மாதிரி எபெக்ட் கொடுக்குற, அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்… நீ கொஞ்ச நேரம் சும்மா இரு, கவலைப் படுறதுக்கே பிறந்தவ மாதிரி, ஒரு சின்னக் காரணம் கிடைச்சா போதும் போல உக்கார்ந்து கவலைப்படுறா…” என இருந்த எரிச்சலில் ஏகத்துக்கும் கத்த “கப்சிப்” என்றாகிவிட்டாள் அவனது காட்டு ராணி.
தொடரும்…