அங்கு போய் வேலை எல்லாம் முடித்து விட்டு மாலை இருவரும் திரும்பி வந்தார்கள். அப்போது மற்ற எல்லாரும் ஹாலில் அமர்ந்து காபி குடித்து கொண்டிருந்தார்கள்.
“இருங்க உங்க ரெண்டு பேருக்கும் காபி கொண்டு வரேன்”, என்று எழுந்து போனாள் நந்தினி.
“எங்க அக்கா உன் மருமகளை காணும்?”, என்று பார்வதியிடம் கேட்டார் மோகன்.
“அவ தூங்குறா. எழுப்பி பாத்தேன் எந்திக்கலை மோகன்”
“இப்படி தான் அக்கா பண்ணுவா. இவளை வளக்குறதுக்குள்ள நான் ரொம்ப நொந்து போய்ட்டேன்”, என்று சொல்லி கொண்டிருக்கும் போது நந்தினி காபியுடன் வந்தாள்.
“துறு துறுன்னு இருந்தா வீடு கல கலப்பா இருக்கும். அவளை எதுக்கு குறை சொல்ற?”, என்று கேட்டாள் பாட்டி.
“குறை சொல்றேனா? இருங்க வரேன். அவ கொஞ்ச சேட்டையா பண்ணிருக்கா. அவ செஞ்ச கொடுமையை எல்லாம் காட்டுறேன்”, என்று சொல்லி எழுந்து போனவர் ஒரு பெரிய பையுடன் வந்தார்.
“என்னது மோகன் இது?”, என்று கேட்டார் மகேந்திரன்.
“உங்க மருமகளோட வீர செயல்களை பாருங்க”. என்று சொல்லி அதில் இருந்து போட்டோக்களை வெளியே எடுத்தார்.
எல்லாரும் ஆவலாக ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி எடுத்து பார்த்தார்கள். அவரும் அவள் சிறு வயது முதல் செய்த சேட்டைகளை சொல்லி கொண்டிருந்தார். பார்த்திபனுக்கே சிறிது நேரத்தில் ஆவல் வந்து விட்டது.
“இந்த நேரத்தில் நான் இருந்திருந்தா என் மருமகளுக்கு எல்லா சடங்கும் நானே செஞ்சிருப்பேன். நீங்களும் மாமன் சீர் செஞ்சிருப்பீங்க. அப்படி தானங்க”, என்று மகேந்திரனிடம் கேட்டாள் பார்வதி.
“ஆமா பார்வதி. நான் தான் அவளுக்கு தாய் மாமன் சீர் செஞ்சிருப்பேன். ஆனா விதி இப்படி ஆகிருச்சே. இந்தா நீ பாரு மா”, என்று சொன்ன மகேந்திரன் அதை வள்ளி பாட்டி கையில் கொடுத்தார்.
“இவங்க எதை பத்தி பேசிட்டு இருக்காங்க? எந்த நேரத்தில் சீர் செஞ்சிருக்கணும்?”, என்று நினைத்து கொண்டு “கிழவி அந்த போட்டோ ஆல்பத்தை இங்க தா”, என்று கேட்டான் பார்த்திபன்.
“பாத்துட்டு இதயம் வெடிச்சிராம பேராண்டி”, என்று முனங்கி கொண்டே அதை அவன் கையில் கொடுத்தாள் வள்ளி பாட்டி.
அதை பார்த்து அவன் இதயமே, ஒரு நொடி நின்றது போல இருந்தது பார்த்திபனுக்கு.
கையில் இருந்த புகைப்படத்தை பார்த்து இமைக்க மறந்து அமர்ந்திருந்தான் பார்த்திபன். அவன் முகத்தை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் “ஹா ஹா”, என்று கத்தி சிரித்தே விட்டாள் பாட்டி.
அந்த சிரிப்பில் தன்னுணர்வுக்கு வந்தான் பார்த்திபன்.
“எதுக்கு மா இப்படி சிரிக்கிற?”, என்று கேட்டாள் நந்தினி.
“இல்லை, உன் மருமகனோட முகரையை பாரேன். அவனோட பொண்டாட்டி சடங்கான போட்டோவ பாத்துட்டு எப்படி வெட்க பட்டு முழிச்சிக்கிட்டு இருக்கான் பாரு”, என்று சொல்லி மேலும் சிரித்தாள்.
பாட்டியின் பதிலிலும், சிரிப்பிலும் எரிச்சல் ஆன பார்த்திபன் “நான் வெக்கப்பட்டதை நீ பாத்த?”, என்று கேட்டு முறைத்தான்.
“எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது பார்த்தி”
“சிரிக்காத பாட்டி. எனக்கு கொலை வெறியா வருது”
அவர்கள் பேசுவது புரியாமல் எல்லாரும், அதை கண்டு கொள்ளாமல் தங்களுக்குள் பேச ஆரம்பித்தார்கள்.
“ஹா ஹா”, என்று அவனை பார்த்து பார்த்து சிரித்தாள் பாட்டி.
“நீ இப்படி சிரிக்கிறேன்னா, உனக்கு முன்னாடியே விஷயம் தெரியும். அப்படி தான கிழவி?”, என்று கனலுடன் கேட்டான் பார்த்திபன்.
“ஹ்ம்ம் ஆமா. ஹா ஹா ஐயோ அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது”
“எனக்கு வயிறு எரியுது. எதுக்கு கிழவி நீ என்கிட்ட சொல்லலை?”
“எடுபட்ட பயலே அன்னைக்கு அதுக்கு தான் அவ செவுடு பிஞ்சு போற மாதிரி ஒரு அரை விட்டேன். நீ பெரிய இவன் மாதிரி என்னை அந்த கத்து கத்துன? சரி கழுதை நாசமா போகட்டும்னு விட்டுட்டேன்”
“பாட்டியா கிழவி நீ? பேரனுக்கு நல்லது செய்யணும்னு நினைச்சு என்கிட்ட சொல்லிருக்கலாம்ல?”
“அன்னைக்கு எங்க விசயத்துல தலை இடாத கிழவினு சொல்லிட்டு இப்ப மாத்தி மாத்தி பேசுனா நானா பொறுப்பு?”
“எதுக்கு இப்படி செஞ்சாளாம்?”
“அவ கிட்டயே கேளு. ஆனா ஒரு வாரமா நல்ல ஏமாந்துட்ட போல?”
“பல்லையா காட்டுற? உன்னை வந்து வச்சிக்கிறேன். முதலில் அவளுக்கு இருக்கு”, என்று சொல்லி கொண்டே அந்த ஆல்பத்தை கையோடு எடுத்து கொண்டு அவள் அறைக்கு சென்றான்.
“இவன் என்ன அதை தூக்கிட்டு போறான்?”, என்று கேட்டாள் பார்வதி.
“அவன் பொண்டாட்டி கூட சேந்து உக்காந்து பாக்கணும்னு நினைக்கிறானோ என்னவோ? நாம நம்ம வேலையை பாப்போம் பார்வதி”, என்று சிரித்தாள் பாட்டி.
நடந்து போனவன் “உன்னை கொள்ளாம விடமாட்டேன் கிழவி”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான்.
அழகு மயில் போல உறங்கி கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு எரிச்சல் அதிகமானது.
“அப்ப இவ பிளான் பண்ணி தான் ஏமாத்திருக்கா. நானும் லூசு மாதிரி நம்பிருக்கேன் பாரு”, என்று பல்லை கடித்தான்.
“உன் பொண்டாட்டி டாக்டராம்ல டா பார்த்தி. பரவால்ல பத்தாப்பு கூட தாண்டாதவனுக்கு நல்ல படிச்ச பொண்ணா கிடைச்சிட்டு. ஆனா பன்னிரெண்டாம் வகுப்பு படிச்ச பொண்ணு கூட நம்மளை சீண்ட மாட்டுக்கு டா”, என்ற ராசுவின் வார்த்தைகள் பார்த்திபன் மனதில் வந்து போனது.
“ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு படிச்ச பொண்ணே நல்ல படிச்ச பையன் மாப்பிள்ளையா வரணும்னு எதிர் பாக்கும் போது, ஒரு டாக்டரா இருந்துட்டு எப்படி இவ என்னை கட்டிக்கிட்டா?”, யோசித்து மூளையை கசக்கினான்.
“உங்களை சேத்து வைக்க தான் நான் இந்த ஊருக்கே வந்தேன்”, என்று கல்யாணம் அன்று நந்தினி, மோகனை பார்த்து மித்ரா சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தது.
“அப்ப இவ அவங்க ரெண்டு பேரை சேத்து வைக்க தான் என்னை கல்யாணம் செஞ்சிருக்கா. குடும்பத்துக்காக தான் என்னை கல்யாணம் செஞ்சிருக்கா. என்னை விரும்பி கல்யாணம் செய்யலை. அதான் இப்படி ஒரு பொய் சொல்லிருக்கா. என் மனசு முழுக்க அவ இருக்குற மாதிரி அவ மனசில் நான் இல்லை. என் வாழ்க்கையே நாசமாக்கிட்டா. என்னோட காதலில் விளையாடிருக்கா. இவளை…”, என்று நினைத்து கொண்டு அவள் அருகில் இருந்த தலையணையை எடுத்து அவள் மீதே எறிந்தான்.
தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் மித்ரா.
“என்ன அத்தான்? எதுக்கு எழுப்புனீங்க? எனக்கு தூக்கமா வருது. அப்புறமா எழுப்புங்க”, என்று சொல்லி கொண்டே மறுபடியும் படுக்க போனவளின் அருகே அமர்ந்தவன் அவளை பிடித்து உக்கார வைத்தான்.
“என்ன அத்தான்?”, என்று கேட்ட மித்ரா அப்போது தான் அவன் முகத்தை பார்த்தாள். அங்கே கொலை வெறி தாண்டவமாடியது.
“இவன் எதுக்கு இப்படி கோபமா இருக்கான்?”, என்று நினைத்து தூக்கத்தை கை விட்டு அவனை ஊன்றி பார்த்தாள்.
அப்போது தான் அவள் கையில் இருந்த ஆல்பம் அவளுக்கு தெரிந்தது.
அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் மித்ரா.
என்ன சொல்ல என்று தெரியாமல் “பார்த்தி… அது வந்து….”, என்று இழுத்தாள்.
“என்ன டி இழுக்குற? நீ தான் எப்பவும் தெளிவா பேசுவியே. இன்னைக்கு என்ன தடுமாறுற? என்ன சொல்ல போற?”
“அது வந்து..”
“என்ன வந்து, போயி? இன்னும் என்ன பொய் சொல்ல வச்சிருக்க? கல்யாணம் பொய். தாலியே பொய்னு தான கதை சொல்ல போற?”
“கோப படாதீங்க பார்த்திபன். ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க”
“என்ன கேக்கணும்? நீ சொல்றது எல்லாத்துக்கும் கேனை மாதிரி தலையை ஆட்டிட்டு இருந்தேன்ல? இன்னும் என்ன கேக்கணும் சொல்லு”
“நீங்க கோப படுற அளவுக்கு பெரிய விஷயம் இல்லை பார்த்தி”
“பெரிய விஷயம் இல்லையா? அப்ப இதை விட பெரிய விஷயம் என்ன இருக்கு?”
“இப்ப நீங்க கோபமா இருக்கீங்க? நான் அப்புறம் உங்களுக்கு தெளிவா சொல்றேன்”, என்று எழ பார்த்தவளை கையை பிடித்து இழுத்தவன், அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
திகைத்து போய் அவனை பார்த்தாள் மித்ரா.
“பேசிட்டு இருக்கேன். எங்க எந்திச்சு போற? இவன் கிட்ட எல்லாம் என்ன பதில் சொல்லணும்னு போறியா? என்னை பாத்தா உனக்கு எப்படி தெரியுது?”
அடுத்த நொடி ஒரிஜினல் மித்ரா வெளியே வந்தாள். “என்ன ஆ ஊன்னு எல்லாரும் அடிச்சிட்டு இருக்கீங்க? எதுக்கு டா என்னை அடிச்ச? எங்க அப்பா கூட என்னை அடிச்சது இல்லை தெரியுமா?”, என்று சண்டைக்கு போனாள் மித்ரா.
“டா வா. உடம்பெல்லாம் உனக்கு திமிர் டி. மரியாதை கொடுக்க கூட தெரியலை. அப்புறம் என்ன சொன்ன? உங்க அப்பாவே உன்னை அடிச்சது இல்லையா? இனி உன்னை அடிக்க அவரை விட எனக்கு தான் அதிகம் உரிமை இருக்கு தெரிஞ்சிக்கோ”
“நீ அடிக்கிற வரைக்கும் என் கை பூ பறிக்குமோ?”
“பாரு டா என் மாமன் மகளுக்கு வந்துருக்க ரோஷத்தை. பூ பறிக்காம என்ன டி செய்யும்? திருப்பி அடிப்பியோ?”
“ஆமா அடிப்பேன்”, என்று சொன்ன அடுத்த நொடி இன்னொரு கன்னத்திலும் அறைந்தான்.
கண்ணில் வழிந்த நீரோடு பாவமாக அவனை பார்த்தாள் மித்ரா. அவள் தோற்றத்தை பார்த்து தன் கோபத்தை கொஞ்சம் குறைத்தான் பார்த்திபன்.
“வலிக்குது அத்தான்”, என்று அழுது கொண்டே சொன்னாள் மித்ரா.
வலிக்கும் இடத்தை தடவி கொடுத்து ஆறுதல் சொல்ல துடிக்கும் மனதை அடக்கியவன் “சரி இனி அடிக்கலை. ஏன் இனி தொட கூட மாட்டேன். இப்பவே மாமா கிட்ட போய் எல்லாத்தையும் சொல்றேன். அடுத்து பெரியவங்க என்ன முடிவு எடுக்காங்கன்னு பாப்போம்”, என்றான்.
அவன் கையை பிடித்து தடுத்தாள். “என்னை தொடாத”, என்று சீறினான்.
“சரி தொடலை. ஆனா அவங்களுக்கு எல்லாம் தெரிய வேண்டாம். வருத்த படுவாங்க”
“அவங்க வருத்த படுவாங்கன்னு என் வாழ்க்கையை அழிச்சிட்டல்ல? சொல்லு எதுக்கு என்னை கல்யாணம் செஞ்ச? என்னை விரும்பி செஞ்சேன்னு தயவு செஞ்சு பொய் சொல்லிறாத மித்ரா. மாமாவுக்கும், அத்தைக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு தான் இப்படி செஞ்சியா?”
“இப்ப விரும்புறேன்னு சொன்னா கூட பொய் தான் சொல்றேன்னு சொல்லுவான்”, என்று நினைத்த மித்ராவுக்கு “எதில் தான் விளையாடுறதுனு இல்லையா?”, என்று பாட்டி சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தது. தன் தவறும் உரைத்தது. எப்படி இவனை சமாதான படுத்த என்று நினைத்து அமைதியாக இருந்தாள்.
அவள் அமைதி அவனுக்கு எரிச்சலை தான் தந்தது.
“சொல்லு மித்ரா. நீ அன்னைக்கு சொன்னீல்ல? உங்களை சேத்து வைக்க தான் எங்க ஊருக்கே வந்தேன்னு. அப்ப அதுக்கு தான வந்துருக்க? அதை மட்டும் செய்ய வேண்டியது தான டி? என் மனசுல எதுக்கு ஆசையை வளர்த்த? கல்யாணம் பண்ண மாட்டேன், பண்ண மாட்டேன்னு சொல்லி எதுக்கு தூண்டி விட்ட? எங்க அம்மா தான் அறிவு இல்லாம மாமா கிட்ட உன்னை பொண்ணு கேட்டான்னா நீ எதுக்கு சம்மதம் சொன்ன? அத்தைக்கும், மாமாக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு என்கிட்ட சொல்லிருந்தா, நான் செத்து போய் கூட சேத்து வச்சிருப்பேனே மித்ரா? எதுக்கு இப்படி செஞ்ச?”
“என்ன பார்த்திபன் இப்படி எல்லாம் பேசுறீங்க?”
“எப்படி பேசுறேன் ம்ம்? எப்படி பேசுறேன்? நீ ஒரு டாக்டர். அப்ப உனக்கு சமமான டாக்டர் பதவில இருக்குறவனை கட்டி இருக்க வேண்டியது தான? என் வாழ்க்கைல எதுக்கு டி குறுக்க வந்த? எனக்கு பொருத்தமான பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணி சந்தோசமா இருந்துருப்பேன்ல?”
…..
“கல்யாணம் அன்னைக்கு எவ்வளவு கனவு இருந்தது தெரியுமா டி? அவ்வளவு ஆசையா தாலி கட்டினேன். அடுத்த நிமிஷம் போட்டியே ஒரு குண்டு. அப்படியே ஆசை எல்லாம் கருகிட்டு. அதை தப்பான ஆசைன்னு சொல்ல போறியா? சொல்லிக்கோ. எல்லாருக்கும் கனவு இருக்கும். எனக்கும் இருந்தது. முதல் முறையா நான் தெரிஞ்சிக்கிற பொண்ணு என் பொண்டாட்டியா இருக்கணும். அவ கிட்ட இருந்து எல்லா சந்தோஷத்தையும் அனுபவிக்கனும்ன்னு. வெக்கத்தை விட்டு சொல்லனும்னா, அன்னைக்கு உன்னை தூங்கவே விட கூடாதுன்னு நினைச்சேன் டி. ஆனா எல்லாம் போச்சு. ஆனா அந்த ஆசை மட்டும் எனக்கு இல்லை. உன் உடம்புக்காக மட்டும் நான் ஆசை படலை. அப்படி இருந்திருந்தா அன்னைக்கே மாமா கிட்ட கேட்டிருப்பேன்”
…..
“நான் உன்னை விரும்புனேன் டி. என்னோட மொத்த காதலையும் உன் மேல தான் வச்சிருக்கேன். இன்னைக்கு இந்த உண்மை எனக்கு தெரியாம இருந்திருந்தா, நான் சாகுற வரைக்கும் அதே அன்பை உன் மேல வச்சிருப்பேன். ஆனா இன்னைக்கு சொல்றேன் கேட்டுக்கோ. உன்னை வெறுக்குறேன். எனக்கு உன்னை பிடிக்கலை”
“அத்தான்”, என்று அதிர்ச்சியாக அழைத்தாள் மித்ரா.
“பேசாத மித்ரா. நீ இந்த பொய் சொன்னதுக்கு காரணம், இப்ப தான் எனக்கு புரிஞ்சது. அவங்க கலயாணத்துக்காக தான என்னை கல்யாணம் பண்ணிகிட்ட. அதுக்கப்புறம் என் கூட வாழ்ந்தா எப்படி நீ இன்னொருத்தன் கூட அதாவது உன்னை மாதிரி படிச்சவன் கூட வாழ முடியும்? அதுக்காக தான என்னை இப்படி ஒரு பொய் சொல்லி விலக்கி வச்ச? அது இனிமேலும் தொடரட்டும்”
“அப்படி எல்லாம் இல்லை அத்தான்”
“அப்படி தான். உனக்கு பிடிச்ச மாதிரியான மாப்பிள்ளை யாருன்னு சொல்லு. நானே அவனை உன்கூட சேத்து வைக்கிறேன். தயவு செஞ்சு சொல்லாம கொள்ளாம ஓடி மட்டும் போயிராத”
“போடா லூசு. இவனை விட்டு நான் ஓடி போக போறேனாம். அது இந்த ஜென்மத்தில் நடக்காது”, என்று நினைத்தவள் “சரி”, என்று மட்டும் சொல்லி அவனை மேலும் வெறுப்பேத்தினாள்.
காதல் தொடரும்….