அத்தியாயம் 8
“எல்லாம் சரி தான் மா. ஆனா மேடம் நீங்க டாக்டருக்கு படிச்சிருக்கீங்களே. அதை படிச்சுட்டு நீ வீட்ல இருந்து சாப்பிட்டு தூங்க போறியா?”, என்று கேட்டாள் நந்தினி.
“அப்படினு யார் சொன்னா? நம்ம ஊரு டவுன்லேயே ஒரு கிளினிக் போட்டு என் வேலையை செய்வேன்”
“நல்ல யோசனை தான். இந்த வாரமே அதுக்கு முயற்சி செய்யலாம். ஆஸ்பத்திரி வைக்கிறதுக்கு நல்ல இடமா பாருங்க”, என்றாள் பார்வதி.
“இல்லை அத்தை. நான் இதுவரைக்கும் பாத்து சேத்து வச்ச பணம் பேங்க்ல இருக்கு. அப்புறம் என் புருஷன் சம்பாதிச்சு வர போற பணம் ரெண்டையும் சேத்து போட்டு தான் என் வேலையை தொடங்குவேன் “
“அவன் இனி தான் மா வயலுக்கே போக போறான். அப்ப அது வரைக்கும் சும்மா இருப்பியா? அதுக்கு இன்னும் நிறைய பணம் வேணும். அது தான் எங்க கிட்ட இருக்கே. அதை எடுத்துக்கோ. உங்க அப்பா சேத்து வச்சிருக்குறதையும் வாங்கிக்கோ. அப்புறம் என்ன? இந்த மாசமே உன் வேலையை ஆரம்பிக்கலாமே”, என்றார் மகேந்திரன்.
“நான் இப்ப ஆரம்பிக்க மாட்டேன். ஒரு மூணு வருஷம் கழிச்சு தான் ஆரம்பிப்பேன். சும்மா நினைச்ச உடனே ஆரம்பிக்க முடியாது. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். அதுக்குள்ளே என் அத்தான் அதுக்கான பணத்தை சேமிச்சிருவாரு. அப்படி தான அத்தான்?”, என்று சந்தோசமாக அவனை பார்த்து கேட்டாள் மித்ரா.
பிரமிப்பாக அவளை பார்த்தான் பார்த்திபன்.
“அப்ப மூணு வருஷம் வெட்டியாவா இருக்க போற?”, என்று கேட்டாள் நந்தினி.
“இல்லை மா. உங்களுக்கு ஒரு அழகான பேரனையோ, பேத்தியையோ பெத்து கொடுத்து அதை கொள்ளு பாட்டி, அப்புறம் ரெண்டு பாட்டி கிட்டயும் கொடுத்துட்டு என்னோட வேலையை ஆரம்பிப்பேன். அதுக்கு மூணு வருஷம் வேணும் தான?”, என்று கேட்டு பார்த்திபனை வாயை பிளக்க வைத்தாள் மித்ரா.
அதிர்ச்சியாக கண்களை உருட்டி அவளை பார்த்தான். அவனை பார்த்து கண்ணடித்தாள் அவள். எல்லாரும் சிரித்தார்கள்.
“என் ராஜாத்தி”, என்று சொல்லி அவளுக்கு திருஷ்டி கழித்தாள் வள்ளி பாட்டி.
அப்போது தான் களையே இல்லாத பார்த்திபன் முகம், வள்ளி பாட்டி கண்ணில் பட்டது. அதை மனதில் குறித்து கொண்டவள் மற்றவர்களின் பேச்சை கேட்டாள்.
“எல்லா பிளானையும் நீயே சொல்லிட்ட? அடுத்து என்ன மா?”, என்று மித்ராவை பார்த்து கேட்டார் மகேந்திரன்.
“அடுத்து என்னன்னா, நாம எல்லாரும் ரெண்டு நாளில் சென்னைக்கு போறோம்”
“எல்லாரும்னா யாரு எல்லாம்?”, என்று கேட்டார் வள்ளி.
“எல்லாரும்ன்னா எல்லாரும் தான் பாட்டி. நீயும் தான்”
“எதுக்கு?”
“தேனிலவுக்கு தான்”
“அதுக்கு நான் எதுக்கு? எனக்கு தான் ஜோடியே இல்லையே”
“பெரிய கவலை தான் கிழவி உனக்கு. நாங்க எல்லாரும் கொண்டாடுறோம். நீ அங்க இருக்க அழகான இடத்தை பார்த்து ரசிச்சிட்டு தாத்தாவை நினைச்சிக்கோ. இது தான் உனக்கு தேனிலவு”
“நாங்க எல்லாம் எதுக்கு மா?”, என்று கேட்டாள் பார்வதி.
“அத்தை நான் சொன்னது சொன்னது தான். நீயும், மாமாவும் வாறீங்க. சென்னைல ஒரு நாலு நாள் தங்கி அங்க இருக்குற சில வேலை முடிச்சிட்டு, அங்க உள்ள இடம் எல்லாம் சுத்தி பாத்துட்டு, நாலு நாள் ஊட்டி கொடைக்கானல் போறோம். அப்புறம் திரும்பி வந்து கடை வேலையும், வயல் வேலையும் ஆரம்பிக்கிறோம். இந்த மித்ரா ஒரு தடவை முடிவு எடுத்ததை மாத்தணும்னு யாராவது நினைச்சா, சாமி கண்ணை குத்திரும். எப்படி அத்தான் என்னோட பன்ச் டயலாக்?”, என்று கேட்டாள் மித்ரா.
“சகிக்கல”, என்று பார்த்திபன் சொன்னதும் எல்லாரும் சிரித்தார்கள். அவள் அவனை முறைத்தாள்.
பின் அனைவரும் சந்தோசமாக பேசி கொண்டிருந்தார்கள்.
அன்று இரவு ஒன்பது மணி போல் தண்ணீர் குடிக்க வந்த வள்ளி பாட்டிக்கு பார்த்திபன் அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சம் கண்ணில் பட்டது. முதல் முறை எதுவோ பொறி தட்டியது பாட்டிக்கு.
மித்ராவை எங்கே என்று தேடினாள். அவள் பார்வதி மகேந்திரனிடம் வம்பளந்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது.
பார்த்திபனை காணாததால் அவனை தேடி மொட்டை மாடிக்கு சென்றாள்.
அங்கே காற்று வாங்கி கொண்டு வானத்து நிலவைப் பார்த்து நின்று கொண்டிருந்தான் பார்த்திபன்.
புருவ சுளிப்புடன் அவன் அருகில் சென்ற வள்ளி “என்ன பார்த்தி இன்னும் இங்க நின்னுட்டு இருக்க? கீழ போகலையா?”, என்று கேட்டாள்.
“கீழ போய் என்ன பாட்டி செய்ய?”, என்று கேட்டான் பார்த்திபன்.
அடுத்த நொடி அவளுக்கு விஷயம் புரிந்தது. “அவ அங்க கதை அளந்துட்டு இருக்கா. இவன் இங்க வானத்தை பாத்துட்டு இருக்கான். காலைல நந்தினியை கவனிச்ச நாம, மித்ரா முகத்தை கவனிக்காம விட்டுட்டோமே”, என்று நினைத்து கொண்டு “சரி ரொம்ப நேரம் இருக்காத. சளி பிடிக்கும்”, என்று சொல்லி விட்டு மித்ராவை தேடி கீழே வந்தாள்.
இப்போது அவள் அவளுடைய அறைக்குள் தான் இருந்தாள். மெதுவாக உள்ளே சென்றாள் வள்ளி பாட்டி.
“என்ன பாட்டி தூங்கலையா?”, என்று சிரித்து கொண்டே கேட்டாள் மித்ரா.
“நான் தூங்குறது இருக்கட்டும். உன் புருஷன் புதுசா கல்யாணம் ஆனவன் மாதிரி இல்லாம மாடில நடை பழகிட்டு இருக்கானே என்ன காரணம்?”, என்று கோபமான குரலில் கேட்டாள் வள்ளி பாட்டி.
“ஐயோ கிழவி கண்டு பிடிச்சிருச்சே”, என்று நினைத்து கொண்டு “காத்து வாங்க போறேன்னு சொல்லிட்டு போனார் பாட்டி”, என்று சமாளித்தாள் மித்ரா.
ஆனால் அவள் சமாளிப்பதை உணர்ந்தவள், “உங்களுக்குள்ளே என்ன நடக்கு சொல்லு மித்ரா. நீ என்ன மறைக்கிற? அவன் கூட சேந்து வாழலையா? இத்தனை வயசுக்கு அப்புறம் உன் அம்மாவும், அப்பாவும் சேந்து வாழணும்னு நினைக்கிற நான், உன்னை பத்தி யோசிக்க மாட்டேனா? பார்த்தி முகம் சரியே இல்லை. என்னனு சொல்ல போறியா இல்லையா?”, என்று கேட்டாள்.
“அது வந்து பாட்டி…. சும்மா”
“மழுப்பாம உண்மையை சொல்லு”
“உன் பேரன் கிட்ட ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் பாட்டி”
“என்ன பொய்? வேற யாரையும் விரும்புறேன்னு சொல்லிட்டியா? அதான் முகத்தை தொங்க போட்டுக்கிட்டு அலையுறானா?”
“அவ்வளவு பெரிய பொய் இல்லை பாட்டி. சின்ன பொய் தான்”
‘என்னனு சொல்லி தொலை மித்ரா”
“அது வந்து நான் வயசுக்கு வரலைன்னு சொன்னேன்”, என்று சொன்னவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அடியை வைத்தாள் பாட்டி.
இது வரை யாருமே அடித்திராத மித்ராவுக்கு முதல் முறை வாங்கிய அறையில் கண்ணீர் பெருகியது. அதிர்ச்சியாக பாட்டியை பார்த்து கொண்டிருந்தாள்.
“பாட்டி”, என்று அதிர்ச்சியாக உச்சரித்து அவள் உதடுகள். அடி பட்ட கன்னம் சுரீர் என்று எரிந்தது.
“என்ன பாட்டி? ம்ம். எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி ஒரு பொய் சொல்லிருப்ப? ஆம்பளை மனசு எப்ப எப்படி மாறும்னு தெரியுமா டி? கூறு கெட்ட கழுதை. வேற எவளையோ தேடி போயிட்டான்னா என்ன செய்வ?”, என்று கேட்டார் பாட்டி.
“பாட்டி என்ன வேணா சொல்லு கேட்டுக்குறேன். பார்த்தியை பத்தி தப்பா பேசுன என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது. என் பார்த்தி அப்படி எல்லாம் கிடையாது”, என்று அந்த நிலைமையிலும் அவனுக்கு சப்போர்ட் செய்தாள் மித்ரா.
“என்ன எகுறுற? அவனை சொன்ன உடனே பொத்து கிட்டு வருது. அப்புறம் எதுக்கு டி அவன் கிட்ட இப்படி பொய் சொல்லி வச்சிருக்க? நீ செஞ்ச வேலைக்கு உன் தோலை உரிக்கணும். அம்மா இருந்து வளத்திருந்தா ஒழுங்கா வளந்திருப்ப. நல்லது கெட்டது தெரிஞ்சிருக்கும். எதுல விளையாடுறதுன்னு ஒரு அளவு இல்லை? இன்னைக்கே அவன் கிட்ட உண்மையை சொல்ற. இல்லைன்னா நானே சொல்லிருவேன் பாத்துக்கோ”, என்று சொல்லி விட்டு வீர நடை போட்டு நடந்து போக திரும்பினாள்.
அவள் சொன்னது மனதுக்கு கஷ்டமாக இருக்க அழுகை கூடியது மித்ராவுக்கு.
அப்போது தான் உள்ளே வந்த பார்த்திபனின் கண்ணில் கோபமாக நடந்து வரும் பாட்டியும், கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டிருக்கும் மித்ராவும் பட்டார்கள்.
“பாட்டி எதுக்கு மித்ரா அழுவுறா? நீ என்ன சொன்ன?”
“என்ன சொல்லணுமோ அதை தான் சொன்னேன்”
“அப்ப நீ தான் அவளை அழ வச்சிருக்க. அப்படி தான? நீ எப்படி அவளை திட்டலாம்?”
“திட்டலை. ஒரு அரை வச்சேன்”
“என்னது அடிச்சியா? நீ செய்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை கிழவி. எதுக்கு என் பொண்டாட்டியை அடிச்ச?”
“சொல்லலாமா?”, என்று யோசித்தவள் பிறகு “அவளே சொல்லட்டும்”, என்று நினைத்து கொண்டு “சீக்கிரம் பிள்ளையை பெத்து கொடுன்னு கேட்டேன். அதெல்லாம் கொஞ்சம் வருஷம் ஆகும்னு சொன்னா. இல்லைனா பார்த்திக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சிருவேன்னு சொன்னேன். கோபமா எதுத்து பேசுனா. அது தான் கோபம் வந்துட்டு. அடிச்சிட்டேன்”, என்று சொன்னாள்.
“லூசா பாட்டி நீ? அவ கரெக்ட்டா தான எதுத்து பேசிருக்கா. எதுக்கு அடிக்கணும்னு உனக்கு விவஸ்தை இல்லை. வயசாக வயசாக உனக்கு மூளை மழுங்கிட்டு போகுது. பிள்ளை பெத்துக்குறது எங்க சொந்த விவகாரம். அதுல நீ எதுக்கு தலை இடுற? இன்னொரு தடவை இதை பத்தி மித்ரா கிட்ட பேசுன பாத்துக்கோ. போ பாட்டி”, என்று சொல்லி விட்டு அவளை நெருங்கினான்.
“ரெண்டும் அடிச்சிக்கிட்டு நாறுனா கூட ஒருத்தொருக்கொருத்தர் விட்டு கொடுக்காதுங்க”, என்று நிம்மதியாக மனதில் நினைத்து கொண்டு “க்கும்”, என்று தோளில் கழுத்தை நொடித்து விட்டு “இன்னும் தலை இடலை ராசா. உன் பொண்டாட்டியை நான் இனி ஒன்னும் சொல்ல மாட்டேன். நீயே கட்டிட்டு அழு”, என்று சொல்லி விட்டு அந்த நேரத்திலும் கதவை சாற்றி விட்டு சென்றாள் பாட்டி.
மித்ரா அருகில் அமர்ந்த பார்த்திபன் “நீ அழாத செல்லம். அது ஒரு கூறு கெட்ட கிழவி. பாரு கன்னம் எல்லாம் சிவந்துட்டு. இனி அது உன்னை எதுவும் சொல்லாது. சொன்னுச்சுனா என்கிட்ட சொல்லு தூணுல கட்டி வச்சி தோலை உரிக்கிறேன்”, என்று சொல்லி சமாதான படுத்தி கொண்டே அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
“இந்த வயசில் கிழவியை தூணில் கட்டி வச்சு அடிச்சா எப்படி இருக்கும்”, என்று நினைத்து பார்த்த மித்ராவுக்கு சிரிப்பு வந்தது.
அவள் சிரிப்பை பார்த்த பின் தான் இயல்பானன் பார்த்திபன்.
“ரொம்ப வலிக்குதா டா? கிழவி வேகமா அடிச்சிட்டாளா?”
“இல்லை அத்தான். ஆனா அம்மா இருந்து வளக்கலைன்னு சொல்லிட்டு. அதனால எனக்கு நல்லது கெட்டது தெரியாதாம். அதான் கஷ்டமா போச்சு”
“அதான் சொன்னேன்ல மித்ரா. அதுக்கு மூளையே இல்லை. அதான் இப்படி பேசிட்டு போகுது. நீ கவலை படாத என்ன?”
“அதுக்கு பேர பிள்ளை வேணுமாம் அத்தான். இல்லைன்னா உங்களுக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சிருமாம்”
“அது வச்சா நான் செஞ்சுப்பேனா? மனசு முழுக்க நீ தான் மித்ரா இருக்க. என்னால எப்படி வேற பொண்ணை பத்தி யோசிக்க முடியும் சொல்லு. அப்புறம் நல்லது, கெட்டது உனக்கு தெரியாதுன்னு சொன்ன அதுக்கு தான் ஒன்னும் தெரியலை. நீ இன்னைக்கு எப்படி எல்லாம் யோசிச்சு, எல்லாரோட வாழ்க்கையையும் மாத்திருக்க. எனக்கு உன்னை நினைச்சா பெருமையா இருக்கு டா”, என்று சொன்னான் பார்த்திபன்.
அவன் காதலில் உருகியவள் அதற்கு மேல் காதலை மறைக்க முடியாமல் அவன் கன்னத்தில் தன் இதழ்களை பதித்தாள்.
அவள் முத்தத்தில் தன் சித்தம் தொலைத்தான் பார்த்திபன்.
“மித்ரா வேற எதுவும் செய்யலை. அன்னைக்கு மாதிரி ஒரு முத்தம் கொடுத்துக்கட்டா? அது மட்டும் தான்”, என்று பாவமாக கேட்டான் பார்த்திபன்.
“உண்மை தெரியும் போது, என்னை பால்கோவா மாதிரி சாப்பிட போற. இப்ப முத்தத்துக்கா பெர்மிஷன் கேக்குற?”, என்று நினைத்து கொண்டு “ம்ம்”, என்று முனங்கினாள் மித்ரா.
அடுத்த நொடி அவள் உதடுகள் அவன் வசம் இருந்தது.
சிறிது நேரம் கழித்து விலகியவன் “சாரி மித்ரா”, என்று சொல்லி விட்டு எழுந்து போனான்.
இரண்டு நாள் கழித்து எல்லாரும் சென்னையில் உள்ள மித்ரா வீட்டுக்கு வந்தார்கள்.
காலை குளித்து முடித்து சாப்பிட்டு தூங்க துடங்கினார்கள் அனைவரும்.
சிறிது நேரம் தூங்கி விட்டு தூக்கம் வராததால் எழுந்து வந்தான் பார்த்திபன்.
“கடைக்கு போகலாம்”, என்று நினைத்து அதே நேரம் எழுந்து வந்தார் மோகன்.
“எங்க மாமா கிளம்பிட்டீங்க?”, என்று கேட்டான் பார்த்திபன்.
“கடைக்கு போகலாம்னு பாத்தேன் பார்த்தி”
“ஹ்ம்ம் சரி மாமா. அங்க எதாவது ஹெல்ப் பண்ண வரணுமா?”
“வேண்டாம் பார்த்தி. சரக்கு எல்லாம் கம்மியா தான் இருக்கு. மித்ரா வாங்க வேண்டாம்னு சொன்னதுனால வாங்கலை. அப்புறம் இங்க இருந்து ஊருக்கு ஷிப்ட் பண்றதுக்கு வேற பணம் செலவழியும். அதனால மீதம் இருக்குற பொருளை இங்க இருக்குற அனாதை ஆஸ்ரமத்துக்கு கொடுத்துரலாம்னு மித்ரா சொல்லிட்டா. அதுக்கு மட்டும் ஆளை பிடிச்சி சொல்லிட்டு, அப்புறம் கடை உள்ள இடத்தை வாடகைக்கு விடுறதை பத்தி சங்க தலைவர் கிட்ட பேசிட்டு வரணும். அதுக்கு தான் போறேன். உனக்கு என்ன நேரம் போகலையா?”
“ஆமா மாமா. ஊருல சும்மா சுத்திகிட்டு இருப்பேன். இப்ப சோம்பேறியா இருக்கு”
“சரி வேணும்னா என்கூட வா. சும்மா போய்ட்டு வருவோம்”
“ஹ்ம்ம் போகலாம் மாமா”, என்று சொல்லி அவருடன் கிளம்பினான்.