“சரி பா. இப்ப மணி எத்தனை?”, என்று கேட்டு கொண்டே சோம்பல் முறித்தான்
“மணி நாலு தான் ஆகுது”, என்று சொல்லி கொண்டே அங்கு இருந்து போனாள் வள்ளி பாட்டி.
“அட பாவிகளா எட்டு மணிக்கு வர போற மனுசனை கூப்பிட என்னை இருட்டுக்குள்ள எழுப்பி விட்டுருக்கீங்க. இதுக்கு குடும்பமே கூட்டு என்ன? உங்க பாசத்துக்கு அளவு இல்லையா?”
“ஒரு முன்னேற்பாடு தான் பார்த்தி”, என்று சிரித்து கொண்டே நந்தினியும் சென்று விட்டாள்.
“போகும் போது மித்ராவையும் கூட்டிட்டு போ பார்த்தி”, என்றாள் பார்வதி.
“அவளை கூட்டிட்டு போனா, உன் தம்பியை எப்படி கூட்டிட்டு வருவேன்?”
“அதுக்கு தான் நம்ம ராசு பையனை எழுப்பி விட சொல்லி அவன் ஆத்தாகாரிக்கு அதான் டா நம்ம ராணிக்கு போன் போட்டு இப்ப தான் எழுப்பி விட்டுட்டேன்”
“இது எப்ப நடந்துச்சு?”
“அவனை எழுப்பிட்டு தான் உன்னை எழுப்ப வந்தோம்”
“செத்தான் டா ராசு”, என்று நினைத்து கொண்டே அங்கு அமர்ந்தான். “இந்த மாமாவுக்காக குடும்பமே ஏங்கி போய் இருந்துருக்கு போல” என்று நினைத்து கொண்டான் பார்த்தி. அவனுக்குமே அவரை பார்க்கும் ஆவல் வந்தது.
இவன் குளித்து கிளம்பி, ராசுவும் வண்டியை எடுத்து வந்து காத்திருந்தான். அப்போது தான் எழுந்து குளிக்கவே போனாள் மித்ரா.
“இவ இப்ப தான் குளிக்கவே போறா டா பார்த்தி. இதுக்கு தான் நம்மளை விடிய முன்னே எழுப்பி விட்டங்களா?”, என்றான் ராசு.
“ஆமா டா ராசு. இவ வந்ததுல இருந்தே எல்லாம் பிரச்சனை தான்”, என்று மித்ராவை முறைத்தான் பார்த்திபன்.
அவன் அருகே வந்த மித்ரா “போங்க அத்தான் இப்படியா முத்தம் கொடுக்குறேன்னு சொல்லி உதட்டை கடிச்சு வைப்பீங்க? வலிக்குது. இருங்க இப்ப கிளம்பிறேன் உம்மா”, என்று சொல்லி விட்டு குளிக்க போனாள்.
ஆ என்று வாய் பிளந்து பார்த்திபனை பார்த்தான் ராசு.
“அப்படி பாக்காத ராசு. அவ பொய் சொல்லிட்டு போறா. அவ தான் எனக்கு முத்தம் கொடுத்தா”, என்றான் பார்த்திபன்.
“இது வேற நடந்துச்சா பார்த்தி?”, என்று சொல்லி விட்டு தன்னுடைய போனை எடுத்தான்.
“போச்சு. இப்ப முத்த விசயத்தை விளம்பரம் பண்ண போறான்”, என்று பயந்து போய் “நைட் உனக்கு மட்டும் ரெண்டு பீர் வாங்கி தரேன் டா. யார் கிட்டயும் சொல்லாத. பிரண்ட்ஸ்க்கு தெரிஞ்சா ஓட்டுவாங்க”, என்று சொல்லி ராசுவை காக்கா பிடித்தான்.
“அப்ப சரி”, என்று சமாதானமானான் ராசு குட்டி.
அடுத்து மூவரும் கிளம்பி போனார்கள். இவர்கள் போய் அரை மணி நேரம் கழித்து தான் மோகன்தாஸ் பஸ் வந்தது.
“அப்பா”, என்று ஓடி போய் அவர் கையை பிடித்து கொண்டாள் மித்ரா.
“எப்படி பாப்பா இருக்க? ஆமா பேக் எல்லாம் எங்க? அப்படியே போயிருக்கலாம்ல?”, என்றார் மோகன்.
“அவ உங்க கிட்ட பொய் சொன்னா மாமா. வீட்டில உங்களை எல்லாரும் வரவேற்க ஆவலா காத்துட்டு இருக்காங்க”, என்று உண்மையை உளறினான் பார்த்திபன்.
“நிஜமாவா மித்து? இந்த தம்பி சொல்றது எல்லாம் உண்மையா?”, என்று கேட்டவரின் கண்களில் சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது.
“ஆமா அப்பா. சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா இவர் உளறிட்டார்”
“சந்தோசமா இருக்கு மித்ரா. இத்தனை வருசம் ஒருத்தரையும் பாக்காம இப்ப எல்லாரையும் பாக்க போறேனா?”
“ஆமா பா அழாதீங்க. வாங்க வீட்டுக்கு போகலாம்”
“சரி மா. ஆமா தம்பி யாரு?”
“பெட்டி தூக்க வந்தவர் பா”, என்று சிரித்தாள் மித்ரா.
அவள் தலையில் ஒரு கொட்டு வைத்த பார்த்திபன் மோகனிடம் திரும்பி “நான் உங்க பாசமுள்ள, நேசமுள்ள அக்காவோட ஒரே பையன்”, என்றான்.
“நிஜமாவா பா? நீ என்னோட மருமகனா?”, என்று கேட்டு கொண்டே அவனை அணைத்துக் கொண்டார் மோகன்.
“ஆமா மாமா. இது என்னோட பிரண்ட். நீங்க அவன் வண்டில ஏறுங்க. கிளம்பலாம்”
இரண்டு வண்டியும் வீட்டை நோக்கி பயணித்தது.
அங்கே மோகனை வரவேற்க மொத்த குடும்பமே வாசலை பார்த்து கொண்டு நின்றது.
இவர்கள் போனதும் கண்ணீரும், பாசமும் அங்கே கரை புரண்டு ஓடியது.
“வா மாப்பிள்ளை”, என்று அணைத்துக் கொண்டார் மகேந்திரன். “எப்படி இருக்கீங்க மச்சான்? அக்கா எப்படி இருக்க? அத்தை என்னை மன்னிச்சு ஆசிர்வாதம் பண்ணுங்க”, என்று வள்ளி காலிலே விழுந்தார் மோகன்.
“நல்லா இருப்பா. மகேந்திரா தம்பியை உள்ளே கூட்டிட்டு போ பா. பார்வதி கண்ணை துடைச்சிட்டு உன் தம்பியை குளிக்க சொல்லி சாப்பாடு கொடுமா”, என்று அனைவருக்கும் வேலையை கொடுத்தார் வள்ளி பாட்டி.
எல்லாரையும் நலம் விசாரித்த மோகன், கண்களில் காதலை தேக்கி பார்த்து கொண்டிருந்த நந்தினியிடம் ஒன்றுமே பேச வில்லை.
அவள் முகத்தில் படிந்த ஏமாற்றத்தை பார்த்த மித்ராவுக்கு கஷ்டமாக இருந்தது.
அடுத்து குளித்து சாப்பிட்டுவிட்டு நலம் விசாரித்து, இத்தனை வருட விசயங்களை பேசி களைத்து போய் படுக்க சென்றார்கள். நந்தினி அமைதியாகி விட்டாள். அவள் மனம் உணர்ந்து, யாரும் அவளை தொல்லை செய்யாமல் இருந்தார்கள்.
மாலை நான்கு மணி போல், கிச்சனில் வேலையாக இருந்த பார்வதி அருகில் போய் நின்றாள் மித்ரா .
“என்ன மித்ரா பசிக்குதா? ஏதும் வேணுமா?”, என்று கேட்டாள் பார்வதி.
“அதெல்லாம் இல்லை அத்தை”, என்று சோகமாக சொன்னாள் மித்ரா.
“என்ன டா சோகமா இருக்க?”
“இல்லை ரெண்டு நாள்ல அப்பா ஊருக்கு போகணும்னு சொன்னாங்க, அதான்”
“ஆமா அதுக்கென்ன? அங்க அவன் கடை கவனிக்கணுமே”
“எனக்கு இந்த வீட்டை, உங்களை எல்லாம் விட்டுட்டு போக மனசே இல்லை”
“எங்களுக்கும் கஸ்டம் தான் மித்ரா. நாங்க அங்க வந்து உன்னை பாக்குறோம் சரியா?”
“போ அத்தை உனக்கு மூளையே இல்லை”
“அடி கழுதை, யாருக்கு மூளை இல்லை”
“பின்ன இப்படி அழகான ஒரு மருமக கண்ணு முன்னாடி இருந்தா, உன் தம்பி கிட்ட அப்படி இப்படின்னு பேசி, கண்ணை கசக்கி, உன் பையனுக்கு என்னை கட்டி வச்சிருக்கலாம்ல? அப்ப நானும் பார்த்திபன் அத்தானை கட்டிக்கிட்டு இங்கயே உங்களை பிரியாம இருப்பேன்ல?”
“மித்ரா”, என்று அதிர்ச்சியோடு அழைத்த பார்வதி அடுத்த நொடி மித்ராவை அணைத்து கொண்டாள்.
“இதுவும் நல்லா தான் இருக்கு. ஆனா இந்த பய படிக்காதவனா போய்ட்டானே. என்ன செய்ய?”
“அத்தானுக்கு பதிலா நான் படிச்சிருக்கேனே அத்தை”
“மித்ரா நீ என்ன சொல்ற? உனக்கு பார்த்திபனை உண்மையிலே பிடிச்சிருக்கா? கல்யாணம் பண்ணனும்னு ஆசை படுறியா?”
“நான் அத்தானை தவிர யாரையுமே கல்யாணம் செய்ய மாட்டேன் அத்தை”
“மித்ரா”
“ஆமா அத்தை. இந்த ஜென்மத்தில் எனக்கு அவர் தான் வேணும். இல்லைன்னா நானும் நந்தினி அம்மா மாதிரி…”, என்று சொல்ல வந்தவளின் வாயை பொத்திய பார்வதி “அப்படி சொல்லாத தங்கம். வீட்டுக்கு ஒரு நந்தினி போதும். அவளோட வலியும், ஏக்கமும் ரொம்ப பெருசு. அவளை நினைச்சு நான் அழாத நாளே இல்லை”, என்றாள்.
….
“உனக்கும் அந்த நிலைமை வர வேண்டாம் டா. நீயே சொல்லிட்டல்ல, அப்புறம் என்ன? நீ மருமகளா வரதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும். நான் தம்பி கால்ல விழுந்தாவது சம்மதிக்க வைக்கிறேன்”
“அத்தை நான் இதை சொன்னேன்னு யார் கிட்டயும் சொல்ல கூடாது சரியா ? எனக்கு கூச்சமா இருக்கும்”
“சொல்லலை மித்ரா. இன்னைக்கே இந்த கல்யாணத்தை பேசி முடிக்கிறேன்”
“நீ ரொம்ப வேஸ்ட் அத்தை. இன்னைக்குன்னு சொல்லிட்டு அடுப்படி பக்கம் போற?”
“நீ வேகமா தான் இருக்க குட்டி. இரு இப்பவே உங்க அப்பன் கிட்ட பேசுறேன்”
“ஹ்ம் இது அத்தை. போங்க போங்க சீக்கிரம். அப்புறம் அந்த நீலி கண்ணீரை முந்தானையில் துடைக்கிறதை மறந்துற கூடாது சரியா?”
“சரி வெற்றியோட திரும்பி வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றாள் பார்வதி.
“நினைச்ச படியே எல்லாம் நடக்குது”, என்று தனக்குள் புன்னகைத்தாள் மித்ரா.
நேராக பார்வதி போய் நின்றது, மோகன் அருகில் தான்.
“என்னக்கா? ஏதாவது சொல்லணுமா?”, என்றார் மோகன்.
“ஹ்ம் சொல்ல வேண்டாம், கேக்கணும். ஆனா எப்படி கேக்கன்னு தான் தெரியலை”
“என்கிட்ட என்ன தயக்கம்? கேளு”
“மித்ராவை என் பையன் பார்த்திக்கு கட்டி கொடுப்பியா? அவளை என் மக மாதிரி வச்சு பாத்துக்குவேன்”
அதிர்ச்சியில் எழுந்தே விட்டார் மோகன்,
“அக்கா அது வந்து”
“என்ன பா இழுக்குற? இத்தனை வருசம் பிரிஞ்சே இருந்துட்டோம். இனியாவது ஒண்ணுக்குள்ளே ஒண்ணா இருக்கணும்னு நினைக்கிறேன். அவன் படிக்கலைன்னு யோசிக்கிறியா?”
“என்னக்கா படிப்பு? அதெல்லாம் பெரிய விசயமா? பார்த்தி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா மித்ராவை நினைச்சு தான் தயங்குறேன். அவளுக்கும் பிடிக்கணும்ல? பிடிக்காம செஞ்சு வைக்க முடியாதேக்கா”
“அப்பாடி இவன் ஒத்துக்கிட்டான்”, என்று மனதில் நினைத்தவர் “அப்ப மித்ரா பிடிச்சிருக்குன்னு சொன்னா உனக்கு சம்மதமா?”, என்று கேட்டாள்.
“கண்டிப்பாக்கா. பார்த்தி எனக்கு மருமகன்னா அதை விட சந்தோசம் என்ன வேணும்?”
“அப்ப இரு”, என்று சொல்லி விட்டு மித்ராவை அப்போதே மோகன் முன்பு அழைத்து வந்தாள் பார்வதி.
“உனக்கும் பார்த்திக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு மித்ரா. உங்க அப்பா கிட்ட கேட்டேன். அவன் உன் விருப்பம்ன்னு சொல்லிட்டான். இப்ப நீ தான் சொல்லணும். அவன் பத்தாம் கிளாஸ் கூட தாண்டலை. அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? நல்ல யோசிச்சு பதில் சொல்லு மித்ரா”, என்று சொன்னாள் பார்வதி.
தன் அப்பாவை ஒரு பார்வை பார்த்தவள் “எனக்கு பார்த்தி அத்தானை பிடிச்சிருக்கு பா. அவரை கட்டிக்க எனக்கு சம்மதம்”, என்று சொல்லி விட்டு ஓடியே போனாள். பெரியவர்கள் இருவருக்கும் சந்தோசமாக இருந்தது.
“மச்சான் என்ன சொல்லுவாருக்கா? அத்தை ஏதும் நினைக்க போறாங்க”
“அத்தை புரிஞ்சிப்பாங்க. சந்தோசம் தான் படுவாங்க. அப்புறம் மித்ரா வந்த அன்னைக்கே உன் தம்பி கூட நல்லா பேசி பழகிருந்தோம்னா, நம்ம பார்த்தி படிச்சிருந்தா, இந்த பொண்ணையே பொண்ணு கேட்கலாம்னு உன் மச்சான் தான் என்கிட்டே இதை சொல்லவே செஞ்சார். வா இப்பவே அத்தை, அப்புறம் உன் மச்சான் கிட்ட நீயே கேளு”, என்று சொல்லி கூட்டிபோனாள்.
ஓடி வந்த மித்ரா நேராக பார்த்தி அறைக்குள் சென்றாள். அங்கே பனியனுடன் படுத்திருந்தான் பார்த்திபன்.
இவளை பார்த்ததும் “ஏய் இங்க என்ன பண்ற?”, என்று கேட்டு கொண்டே எழுந்து சட்டையை எடுக்க போனவனை ஓடியே போய் இறுக அணைத்து அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் மித்ரா.
“எதோ பயத்தில் வந்திருக்கா”, என்று நினைத்து “என்ன மித்ரா ஆச்சு? இங்க பாரு”, என்று அவளை விலக்க பார்த்தான் பார்த்திபன்.
ஆனால் அவள் இன்னும் அவனுள் புதைத்தாள். அதன் பின் தான் அவனும் உணர்ந்தான் அவள் ஆசையாக கட்டி பிடித்திருப்பதை.
“இவ என்ன என்னை இப்படியே ஏத்தி விடுறா?”, என்று நினைத்து கொண்டு “மித்ரா என்ன பண்ற? விலகு”, என்றான்.
காதல் தொடரும்….