அத்தியாயம் 5
சிரித்து கொண்டே அவன் பின்னே அமர்ந்த மித்ரா, “இன்னைக்கு பெருசா பூகம்பம் கிளம்பும்”, என்று நினைத்து கொண்டாள்.
வீட்டுக்கு போன பார்த்தி “அம்மா அம்மா”, என்று கத்தினான். அவன் சத்தத்தில் எல்லாருமே வெளியே வந்து விட்டார்கள்.
“எதுக்கு பார்த்தி இப்படி சத்தம் போடுற?”, என்று கேட்டாள் பார்வதி.
“ஆமா பேங்க் போனியே, என்ன ஆச்சு பார்த்தி?”, என்று கேட்டார் மகேந்திரன்.
“என்ன ஆகுறது? இங்க வந்துருக்காளே ஒருத்தி. இவ தான் எதையோ பேசி அவரை லோன் கொடுக்க விடாம செஞ்சி காரியத்தை கெடுத்துட்டா. அவர் லோன் கிடையாதுன்னு சொல்லிட்டார்”, என்றான் பார்த்திபன்.
மித்ரா அமைதியாக நின்றாள். எல்லாருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
“என்ன பார்த்தி சொல்ற?”, என்று கேட்டாள் நந்தினி.
“ஆமா அத்தை. உங்க பொண்ணுன்னு தலைல தூக்கி வச்சிட்டு கொண்டாடுறீங்களே? இவ
தான் அந்த மேனேஜர் கிட்ட என்னவோ பேசினா. உடனே அவர் காரணமே சொல்லாமல் லோன் கிடையாதுன்னு
சொல்லிட்டார். இவளை அங்கேயே நாலு வைப்பு வைக்கணும்னு தோணுச்சு. மானம் போக கூடாதுன்னு அடக்கிட்டு வந்தேன்”
“அவ கெடுத்துட்டாளா? அவ பேசுற வரைக்கும் நீ என்ன டா செஞ்சிட்டு இருந்த?”, என்று கேட்டார் மகேந்திரன்.
“இவ இங்கிலீஸ்ல பேசுனாப்பா”
“இதுக்கு தான் உன்னை தலைப்பாடா அடிச்சிகிட்டேன். கேட்டியா டா நீ? ஒழுங்கா பள்ளி கூடம் போய் படிச்சிருந்தா இப்படி ஆகிருக்குமா?”, என்று கேட்டார் மகேந்திரன் .
“இவர் வேற, எப்ப பாத்தாலும் என்னையே மாட்டி விடுவார்”, என்று நினைத்து கொண்டு “எப்பா மறுபடியும் அதையே பேசாதீங்க. முதல்ல இவ ஏன் இப்படி செஞ்சான்னு கேளுங்க”, என்றான்.
“என் குடும்பத்தை கெடுக்கன்னே வந்துருக்கா. இவ அம்மா அன்னைக்கு என் பொண்ணோட வாழ்க்கையை கெடுத்தா. இன்னைக்கு இவ வந்து என் பேரன் வாழ்க்கைல விளையாட வந்துருக்கா“, என்று திட்டினாள் வள்ளி பாட்டி.
“சும்மா என்ன நடந்ததுன்னு தெரியாம அவளையே திட்டாத மா. மித்ரா அப்படி எல்லாம் செஞ்சிருக்க மாட்டா. மித்ரா நீ சொல்லு மா. என்ன நடந்தது? பார்த்திக்கு லோன் கிடைக்காததுக்கு நீ
தான் காரணமா?”, என்று கேட்டாள் நந்தினி.
“ஆமா நான் தான் லோன் கொடுக்க கூடாதுன்னு சொன்னேன்”, என்று சொன்னாள் மித்ரா.
“எப்படி திமிரா அவளே சொல்றா பாருங்க அத்தை”, என்று சொன்னான் பார்த்திபன்.
அதிர்ச்சியில் அமைதியாகி விட்டாள் நந்தினி. மகேந்திரன் முறைத்து கொண்டு இருந்தார். வள்ளி பாட்டி விட்டால் அவளை அடித்தே விடுபவள் போல நின்றாள்.
“பாத்தியா நந்தினி அவளே சொல்லிட்டா. இதுக்கு தான் அன்னைக்கே சொன்னேன். இவ வீட்டுக்கு வேண்டாம்ணு. ஏய் என்ன டி நினைச்சிட்டு இருக்க? எம் பிள்ளை கடை ஆரம்பிக்கனும்னு அவ்வளவு ஆசையா இருந்தான். அவன் கனவுல மண்ணை அள்ளி போட தான் வந்தியா? உன் அப்பனும், ஆத்தாளும் இதுக்கு தான், என் குடும்பத்தை சீரழிக்க தான் அனுப்பி வச்சாங்களா?”, என்று அவள் அருகில் போய் கத்தினாள் பார்வதி.
“அத்தை நான் சொல்றதை கேளுங்க”, என்றாள் மித்ரா.
“என்னடி கேக்கணும்? முதலில் என் தம்பியை உன் ஆத்தாகாரி எங்க கிட்ட இருந்து பிரிச்சா. இப்ப உன்னை அனுப்பி வச்சிருக்கா. நீ என்ன பண்ண காத்திருக்க?”
“அத்தை என்னை என்ன வேணும்னாலும் சொல்லுங்க. அம்மாவை ஒன்னும் சொல்லாதீங்க. சொல்லிட்டேன்”
“அவளை சொன்ன உடனே கோபம் வருதோ? அப்ப எதுக்கு டி உன்னை அனுப்புனா உங்க ஆத்தா? இருக்குற சொத்தை எல்லாம் அள்ளிட்டு வான்னு சொல்லி அனுப்புளோ?”
“அம்மா பத்தி தப்பா பேசாதீங்க அத்தை. அப்புறம் நான் மனுசியா இருக்க மாட்டேன்”
“அப்படி தான் டி பேசுவேன். அவ ஒரு கேடு கெட்டவ. கல்யாணத்தை அடுத்த நாள் வச்சிட்டு, முந்துன நாள் உங்க அப்பனை மயக்கி திருட்டு தாலி கட்டி கிட்டவ தான உங்க அம்மா?”
“போதும் வாயை மூடுங்க”, என்று கர்ச்சித்தாள் மித்ரா. அவளுடைய குரலில் அப்படியே வாயை மூடி கொண்டாள் பார்வதி.
“என்ன சொன்னீங்க? உங்க சொத்தை அள்ள இங்க அனுப்புனாங்களா? எனக்கு எங்க அப்பா லட்ச கணக்குல சொத்து சேத்து வச்சிருக்காரு தெரியுமா? நாக்குல நரம்பு இல்லாம பேசாதீங்க. அப்புறம் அம்மாவை பத்தி தப்பா சொல்லாதீங்க அத்தை. அந்த தப்பை நீங்க செய்ய கூடாது. அவங்க இறந்து போய்ட்டாங்க. செத்தவங்க தெய்வத்துக்கு சமம். அதுவும் இப்ப இல்லை. எனக்கு நல்லது கெட்டது சொல்லி கொடுக்கும் முன்னாடியே இறந்து போய்ட்டாங்க. ஆமா எனக்கு பத்து வயசு இருக்கும் போதே உடம்புக்கு முடியாம இறந்துட்டாங்க”, என்று அழுது கொண்டே சொன்னாள் மித்ரா.
எல்லாருக்குமே அதிர்ச்சி தான். “என்ன மித்ரா சொல்ற? உன்னோட அம்மாக்கு என்ன ஆச்சு?”, என்று கேட்டாள் நந்தினி.
“எனக்கு தெரியாது. ஏதோ வயித்துல கட்டியாம். ஒரு மாசமா ஹாஸ்பிட்டலுக்கு அலைஞ்சாங்க. அப்புறம் இறந்துட்டாங்க. அதுக்கு அப்புறம் நானும், அப்பாவும் மட்டும் தான்”
….
“போன மாசம் என்னோட பிரண்ட் கல்யாணம் மதுரைல நடந்தது. அவளுக்கு அவ்வளவு சொந்த காரங்க இருந்தாங்க. அதை பாத்து எனக்கு மட்டும் ஏன் பா இவ்வளவு சொந்தம் இல்லைன்னு கேட்டேன். அப்ப தான் அப்பா உங்க எல்லாரையும் பத்தி சொன்னாங்க. உடனே உங்களை தேடி வந்தேன். நீங்க சொல்ற மாதிரி உங்க சொத்தை கேட்டு எல்லாம் வரலை”
…
“பாசத்துல தான் எனக்கு உரிமையான வீடுன்னு சொன்னேன். அப்புறம் எங்க அப்பா யாருக்கும் எந்த துரோகமும் செய்யலை. நந்தினி அம்மா மேல எங்க அப்பாவும் உயிரா தான் இருந்தாங்க. மூணு வருசமா காலேஜ்ல ரெண்டு பேரும் லவ் பண்ணிருக்காங்க. அப்புறம் கல்யாணம் வரைக்கும் வந்தவங்க, எதுக்கு எங்க அப்பா எங்க அம்மாவை கல்யாணம் செஞ்சாருன்னு ஒரு வார்த்தை நீங்க எல்லாரும் கேட்டுருந்தீங்கன்னா நம்ம குடும்பம் இத்தனை வருசம் பிரிஞ்சி இருந்துருக்காது”
….
“கல்யாணத்துக்கு முந்துன நாள் செஞ்சு வச்சிருந்த தாலி காணும்னு சொல்லி நீங்க தான அத்தை எங்க அப்பாவை புது தாலி வாங்க அனுப்புனீங்க? அன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா?”
…
“நந்தினி அம்மாவை ஒருதலையா விரும்புன, திலகர்ன்னு ஒருத்தன் அன்னைக்கு இவங்களுக்கு கல்யாணம்னு தெரிஞ்சிக்கிட்டு, எங்க அப்பாவை ஆள் வச்சு அடிச்சு போட்டுருக்கான். அப்ப எங்க அம்மா தான் அப்பாவை காப்பாத்தி தன்னோட வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ருக்காங்க. அன்னைக்கு யாருக்கு கெட்ட நேரமோ, தெரியலை. எங்க அம்மாவோட வீட்டில வேற யாரும் இல்லையாம்”
….
“நைட் முழுக்க அப்பா கண்ணே திறக்கலையாம். அடுத்த நாள் அம்மாவோட அம்மா அப்பா எல்லாரும் வந்து, நைட் புல்லா ஒருத்தன் கூட இருந்துருக்கன்னு சொல்லி அம்மாவை போய் அடிச்சு கேவலமா பேசிருக்காங்க. யாருமே அவங்களை நம்பலையாம். அப்புறம் அம்மா சாக போய்ட்டாங்களாம். தன்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை கெட்டு போக கூடாதுன்னு தான் அப்பா அவங்க மனசுல உள்ள காதலை புதைச்சிட்டு அம்மாவை கல்யாணம் செஞ்சாங்க. ஆனா நந்தினி அம்மா வேற கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு தான் நினைச்சாங்க. ஆனா அவங்க பண்ணவே இல்லைன்னு அப்புறமா தான் யார் மூலமாவோ தெரிஞ்சிருக்கு”
….
“நந்தினி அம்மா மேல உள்ள காதலை எங்க அம்மா கிட்ட அப்பா சொல்லிருக்காங்க. ஆனா அம்மா இல்லை என்னை விட்டுட்டு போங்க. உங்க காதல் நிறை வேறணும்னு சொல்லி போக சொல்லிருக்காங்க. அப்படி எல்லாம் என்னை நம்பி வந்தவளை என்னால விட்டுட்டு போக முடியாதுமா. அதை நந்தினியே விரும்ப மாட்டான்னு அப்பா சொல்லி அதுக்கப்புறம் தான் கடமைக்காக வாழ்ந்துருக்காங்க”
….
“அத்தை நிஜமாவே நான் உங்க சொந்தத்துக்காக தான் வந்தேன். சொத்துக்காக வரலை”, என்று சொல்லி அழுது கொண்டே இருந்தாள் மித்ரா.
“நான் சொன்னேன்ல மா. தாஸ் மேல எந்த தப்பும் இருக்காதுன்னு . நீங்க தான் நம்பலை. பாருங்க மதினி, உங்க தம்பி மேல எந்த தப்புமே இல்லை. ஒரு பொண்ணோட வாழ்க்கையை காப்பாத்திருக்காரு. அதுக்காக நாம பெருமை படணும் தெரியுமா? எல்லாம் என்னால தான். என்னை விரும்புனதுனால தான அந்த திலகர் இப்படி பண்ணிருக்கான். ஆனா தாஸ் நல்லா இருப்பான்னு நினைச்சேன். இப்படி பொண்டாட்டியை பறி கொடுப்பான்னு தெரியாதே”, என்று அழுதாள் நந்தினி.
மெதுவாக பார்வதி அருகில் சென்ற மித்ரா, “அத்தை அப்பாவுக்கு நீங்கன்னா உயிர். எங்க அக்கா எங்க அக்கான்னு எப்படி அன்னைக்கு பாசமா பேசினார் தெரியுமா? உங்களோட கனவை எல்லாம் அவர் சிதைச்சது உண்மை தான். ஆனா விதின்னு நினைச்சு அவரை மன்னிச்சிருங்களேன்”, என்று கெஞ்சினாள்.
அவள் கையை பற்றி கொண்ட பார்வதி மித்ராவை கட்டி பிடித்து கதறி தீர்த்து விட்டார்.
அங்கு இருந்த அனைவரின் கண்களும் கலங்கி தான் இருந்தது.
“உடனே மோகனுக்கு போன் பண்ணி இங்க வர சொல்லு மா. அவனை நான் பாக்கணும்”, என்று சொன்னாள் பார்வதி.
“ஆமா மித்ரா. அந்த பையனை இத்தனை வருசம் பிரிஞ்சி இருந்துட்டோம். இப்பவே இங்க வர சொல்லு”, என்று சொன்னாள் வள்ளி பட்டி.
“கூப்பிடு மா”, என்று சொன்னார் மகேந்திரன்.
“வர சொல்லணும்”. என்று எழுந்த ஆவலை மறைத்து கொண்டு அமைதியாய் இருந்தாள் நந்தினி.
“குடும்பம் ஒண்ணு சேந்துருச்சு. கடைசில என் லோன் மேட்டரை மறந்துட்டாங்களே. இப்ப நினைவு படுத்தினா, எங்க அப்பா எனக்கு மறுபடியும் பாடம் எடுக்க ஆரம்பிச்சிடுவார்”, என்று அமைதியாய் இருந்தான் பார்த்திபன்.
தன் போனை எடுத்து தன் அப்பாவை அழைத்து விட்டு எல்லாரும் கேட்கும் படி ஸ்பீக்கரில் போட்டாள் மித்ரா.
“என்ன மித்ரா? அங்க போய் சேந்துட்டேன்னு போன் பண்ணதோட சரி அப்புறம் பண்ணவே இல்லை. எல்லாரும் எப்படி இருக்காங்க? என் மேல கோபமா இருக்காங்களா? சரி விடு மா. என் மேல உள்ள கோபத்தை உன்மேல காட்ட போறாங்க. இத்தனை வருசம் அனாதையா இருந்துட்டோம். இனியும் அப்படியே இருந்துருவோம். நீ வா டா மித்து. நீ இல்லாம எனக்கு ரொம்ப தனியா இருக்குற மாதிரி இருக்கு. நேத்து உனக்கு பிடிச்ச வெங்காய சட்னி தான் செஞ்சேன் தெரியுமா? இதை சொல்லி கொடுத்ததே நந்தினி தான். அவ எப்படி இருக்கா? இப்ப எல்லாம் அவளுக்கு என் நினைவே வந்துருக்காதுல்ல? இல்லை இல்லை கண்டிப்பா என்னை அவ மறந்துருக்க மாட்டா. அக்கா எப்படி இருக்கா? அத்தை எப்படி இருக்காங்க. என் மச்சான் எப்படி இருக்காரு? அக்காக்கு எத்தனை பிள்ளைங்க? என்ன மித்ரா நான் கேட்டுட்டே இருக்கேன்? நீ பதிலே பேசாம இருக்க?”, என்றார் மோகன்தாஸ்.
“நீ எங்கப்பா என்னை பேச விட்ட? வாயை திறந்து மூடவே இல்லை. சரி, நீ இன்னைக்கு நைட்டே கிளம்பி இங்க வா. என்னை இங்க ரொம்ப கொடுமை படுத்துறாங்க . உன் பேரை சொல்லி திட்டிட்டே இருக்காங்க. நாம நாளைக்கே திரும்பி ஊருக்கு போய்ரலாம். நீ வா பா”, என்றாள் மித்ரா.
“இதுக்கு தான் பாப்பா நான் சொன்னேன். நைட் கிளம்பி காலைல வந்துறேன் டா குட்டி”
“இங்க உலகமே வியக்குற மாதிரி நடிச்சிக்கிட்டு இருக்கா. இவ பாப்பாவாம் குட்டியாம்”, என்று நினைத்து கொண்டான் பார்த்திபன்.
“சரி பா வைக்கிறேன்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள் மித்ரா.
“எதுக்கு மித்ரா நாங்க இன்னும் அவன் மேல கோபமா இருக்கோம்னு சொன்ன?”, என்று கேட்டாள் வள்ளி பாட்டி.
“அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நினைச்சேன் பாட்டி அதான்”, என்று சிரித்தாள் மித்ரா.
“சரி நான் போய் அதிரசம் சுட ஏற்பாடு பண்றேன். மோகனுக்கு அது ரொம்ப பிடிக்கும்”, என்று சொல்லி விட்டு உள்ளே போனாள் பார்வதி.
“உங்க அத்தைக்கு இருபது வயசு குறைஞ்ச மாதிரி இருக்கு மா. நீ வந்த பிறகு, இன்னைக்கு தான் இந்த குடும்பத்துக்கு நிஜமான சந்தோசம் வந்த மாதிரி இருக்கு”, என்று சொல்லி அவள் தலையை தடவி கொடுத்து விட்டு சென்றார் மகேந்திரன்.
அடுத்து வள்ளி பாட்டியும் நந்தினியும் தங்கள் அறைக்குள் சென்று விட்டார்கள்.
அந்த ஹாலில் பார்த்திபனும், மித்ராவும் மட்டும் தான் இருந்தார்கள்.
“நீங்க எதுவுமே சொல்லலை, எதுக்கு பார்த்திபன்?”, என்று கேட்டாள் மித்ரா.
“என்ன சொல்லணும்?”
“இல்லை எல்லாரும் குடும்பத்தை சேத்து வச்சிட்டேன்னு பாராட்டுறாங்க. நீங்க பாராட்டலையா?”
“பாராட்டனுமா? தூர போய்ரு டி. உன்னை கொன்னுருவேன். கொலை வெறில இருக்கேன். அந்த மேனேஜர் கிட்ட என்ன டி பேசுன?”
“அதுவா உங்களுக்கு லோன் கொடுக்க வேண்டாம்ணு சொன்னேன்”
“நினைச்சேன். எதுக்கு அப்படி செஞ்ச?”
“நம்ம கிட்ட பணம் இருக்கும் போது எதுக்கு கடன் வாங்கணும்?”
“இது எனக்கு தெரியாது பாரு. எங்க அப்பா என்னை நம்பி தர மாட்டார்”
“மாமா தரலைன்னா என்ன? நான் தரேன் பார்த்தி”
“நீ யாரு டி எனக்கு பணம் கொடுக்க? உன்கிட்ட இருந்து எல்லாம் நான் வாங்க மாட்டேன்”
“இப்ப வாங்க மாட்டீங்க சரி. உங்க பொண்டாட்டியா கொடுத்தா கூட வாங்க மாட்டீங்களா?”
“ஏய் இப்ப என்ன சொன்ன?”
“ஹ்ம் நான் என்னோட புருஷனான உங்களுக்கு என்னோட பணத்தை அதாவது நம்ம பணத்தை தருவேன்னு சொன்னேன்”
“இங்க பாரு மித்ரா. இப்படி எல்லாம் பேசிட்டு இருக்காத சொல்லிட்டேன்”
“ஏன் பார்த்தி, என்னை உங்களுக்கு பிடிக்கலையா?”
“இப்படி ஏத்தி விடாத, அப்புறம் மனசுல நீ தான் என் பொண்டாட்டின்னு நினைச்சிட்டேன்னா, நீயே பிடிக்கலைன்னு சொன்னா கூட தூக்கிட்டு போய்ருவேன்”
“அப்ப இன்னும் என்னை உங்க பொண்டாட்டியா நினைக்கலையா? நான் உங்க கூட குடும்பம் நடத்தி நமக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க, என் கனவுல தெரியுமா? நீங்க சுத்த வேஸ்ட் பார்த்தி”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
“இவ விளையாட்டுக்கு பேசுறாளா? சும்மா வம்பு பண்றாளா? இப்படி பொண்டாட்டி கிடைச்சா நல்லா தான் இருக்கும். ஹ்ம் எங்க”, என்று ஒரு பெரு மூச்சை விட்டுவிட்டு உள்ளே சென்றான்.
நல்ல உறக்கத்தில் இருந்தான் பார்த்தி.
“டேய் எந்திரி டா தடியா”, என்ற பார்வதியின் குரல் காதில் விழுந்தது.
“என்ன மா?”, என்று எழுந்து அமர்ந்த பார்த்தி கண்களை திறந்து பார்த்தான். அவனை சுற்றி மித்ராவை தவிர அனைவரும் இருந்தார்கள்.
ஒரு நொடி பயந்தே போனான்.
“எதுக்கு இப்படி என்னை சுத்தி நின்னுட்டு இருக்கீங்க? அத்தை என்ன ஆச்சு? கிழவி நீயுமா? என்ன பா ஆச்சு?”
“உங்க மாமா வாரான்ல? “, என்றாள் பார்வதி.
“ஹ்ம் ஆமா அதுக்கென்ன?”
“அவரை போய் கூட்டிட்டு வரணும்ல பார்த்தி? அதுக்கு தான் உன்னை எழுப்ப வந்தோம்”, என்று சொன்னாள் நந்தினி.
அவள் கண்களில் அப்படி ஒரு ஒளி. இது வரை இப்படி ஒரு சந்தோசத்தை தன் அத்தையிடம் பார்த்திராத பார்த்திபனுக்கு அடுத்த நிமிடம் தூக்கம் அவனை விட்டு ஓடியது.
“சரி அத்தை கூட்டிட்டு வரேன்”, என்று எழுந்தான்.
“குளிச்சு கிளம்பி மெதுவா போ பார்த்தி. மாப்பிள்ளை ஆறு மணிக்கு தான் கிளம்புனதா மித்ரா சொன்னா. இங்க வர எப்படியும் ஏழு, எட்டு ஆகும்”