” ண்ணா … வலிக்குது” என சிறு குழந்தையாக அழ ஆரம்பித்தாள் .
தங்கையின் அழுகையைக் கண்டவன் , “என்னம்மா என்னாச்சு” என பதற்றமாகக் கேட்க ,
“ராஜா பாப்பாவக் கூட்டிட்டு நான் ஆஸ்பத்திரி போறேன். கால்ல அட்டை பூச்சி கடிச்சிட்டு இருக்கு , பயந்து எடுக்க விட மாட்டிக்கிறா….” என விக்ரமின் தந்தை செல்வாக் கூறவும் ,
“அது ஒன்னும் இல்லமா… அண்ணன் எடுத்து விடுறேன் , எனக் காலருகே அமர , திலீபனின் தந்தை தீப்பெட்டி தந்து ,
“மருமகனே நெருப்புல சுட்டா கீழ விழும் பிடி…” என்றவர் வித்யாவிடம் ,
“ஏம்மா.. அந்த மாட்டுக் கொட்டககிட்ட நிறைய பூச்சி கிடக்கும் அந்த பக்கம் போனியா ..” என விசாரிக்க ,
இப்போது வித்யாவின் கலங்கிய விழிகளைப் பார்த்த அரவிந்துக்கு மனம் மேலும் குற்றவுணர்ச்சியில் கலங்கியது .ஒன்றும் சொல்லாது அரவிந்தை வித்யாவும் பார்க்க , விக்ரம் சங்கீதாவிடம் கண் ஜாடைக் காட்ட அவள் தங்கையின் முகத்தை தன் மீது சாய்த்து சமாதானப்படுத்த அதற்குள் விக்ரம் எடுத்து விட்டிருந்தான்.
இப்போது வரு விக்ரமைத்தான் பார்த்திருந்தாள். தன்னிடம் விளையாட்டாகப் பேசிச் சீண்டியவன் ,தங்கையை சமாதானம் செய்யும் பாங்கு அவளை வெகுவாக கவர்ந்தது. நெருப்பு அவளது சருமத்தில் பட்டதால் கூடுதலாக எரிய ,
“அப்பா நான் பாப்பாவ டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய்ட்டு விட்டுட்டு வாரேன் … “என்றவன் தங்கையை பட்டென்று கைகளில் ஏந்தி காரில் சென்று அமர வைத்தான். அதற்குள் சிலம்பாட்டத்திற்கான அழைப்பு வர , அனைவரும் ஒருவரை ஒருவர் பார்க்கவும் ,அரவிந்த் அருகில் வந்தவன்,
” தாத்தா நான் அவங்கள வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகட்டா … அப்படியே மெடிசன் வாங்கி நானே உங்க பேத்திக்குப் போட்டு விடுறேன்…. உங்களுக்கேத் தெரியும் இதுக்கு பெரிய ட்ரீட்மென்ட் இல்லனு .. நான் பார்த்துக்கிறேன். நீங்க எல்லாரும் புரோக்ராம் முடிச்சிட்டு வாங்க … ” என அவர் முகம் பார்க்க ,
திலீபனின் தந்தையும் , “மாமா அரவிந்த் டாக்டர் தானே அவன் பார்த்துக்குவான்… நாம வீட்ல ஃபோன் பண்ணி சொல்லிருவோம். கோயில் வரவு செலவு கணக்கு வேற நீங்க பார்க்கணும்….” என்றதும் , திலீபனும் அதையே ஆமோதிக்க , விக்ரமிற்கு அழும் தங்கையை விட்டுச் செல்ல என்னவோ போல் இருந்ததால் தங்கையின் முகம் பார்க்க ,
இப்போது வித்யா ,” ண்ணா .. லைட்டா எரியுது .. அவ்வளவுதான் நீங்க போங்கண்ணா…. நான் … நான் அவங்க கூடப் போறேன்…. ” என அரவிந்தைப் பார்க்க… கலக்கத்தில் இருந்த அரவிந்தின் விழிகள் இப்போது மகிழ்ச்சியில் ஒளிர … அனைவரிடமும் விடை பெற்று பெண்களை அழைத்துக் கொண்டு அரவிந்த் கிளம்பினான்.
விக்ரம் திலீபனிடம் , “மாப்ள பாப்பா அழறாளே … இப்ப எப்படி டா பார்ட்டி….” எனத் தயங்க ,
[the_ad id=”6605″]
“பாசமலரே சின்ன அட்டப் பூச்சிக்கு இந்த சீன் போடாதடா … அதெல்லாம் ஒன்னும் செய்யாது …. அது சின்ன புள்ள பயந்துருச்சு…. பார்ட்டி , நீ நாளைக்கே கிளம்புற … அப்புறம் பார்ட்டிக்கே டைம் கிடைக்காதுடா …” எனக் கிண்டல் செய்து விக்ரமை அழைத்துச் சென்றான்.
அரவிந்த் காரோட்ட , வருவும் சங்கீதாவும் வித்யாவிற்கு இரு புறமாக அமர்ந்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினார்கள். வீடு கோவிலிருந்து பக்கம் என்பதால் முதலில் அவர்களை வாசலில் இறக்கி விட , விக்ரம் ஃபோனில் தகவல் சொல்லியிருந்ததால் வெளியேக் காத்துக் கொண்டிருந்த லதாவும் , பரணியும் வித்யாவை சமாதானம் செய்து உள்ளே அழைத்துச் செல்ல , மருந்துடன் வருவதாக அரவிந்த் சென்று விட்டான்.
மருந்துகளோடு வந்தவனை பரணி , ” முதன் முதலா அத்தை வீட்டுக்கு வந்துருக்க சாப்பிட்டுட்டுத்தான் போகணும்” என்றவாறு சமையலறைக்குச் செல்ல , லதாவும் அவர் பின்னோடு சென்றார்.
வித்யாவின் காலருகே மண்டியிட்டு அமர்ந்த அரவிந்த் , வருவையும் சங்கீதாவையும் எதையோ எடுத்து வரச் சொல்லி அவர்களை அவ்விடத்திலிருந்து அனுப்பியவன் , வித்யாவின் காலை எடுத்து தன் தொடை மீது வைத்து மருந்திட்டான்.அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
“ஐ ம்.. சாரி…. என்னால தான இப்படி ஆகிருச்சு … ” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல , படக்கென்று காலை மடக்கி வைத்துக் கொள்ள , நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவனிடம் ,
“ப்ளீஸ் சாரிலாம் சொல்லாதீங்க … ”
முறுவலுடன் , “சரி கால் காட்டு மருந்துப் போடணும்….” என , முகம் சிவந்தவள் , ” மாட்டேன்” என்பது போல் தலையாட்டி ,
“எ… எனக்கு என்னவோ போல இருக்கு ….”
” எப்பவோ ஒரு நாள் பிடிக்க தான போறேன்… அதை இப்பவே பிடிச்சுட்டுப் போறேன்…”
“ஐயோ ” என்றவள் வெட்கத்தில் இரு கைகளால் முகத்தை மூடிக் கொள்ள ,
அவளது பாட்டி வந்தவர், “பொம்பள புள்ள இன்னும் என்ன என்ன வலியெல்லாம் தாங்க வேண்டியிருக்கு , இந்த சின்ன வலிக்கு முகத்தை மூடிட்டு அழலாமா… காலக் காட்டு பாப்பா” என்றவர் அரவிந்தைப் பார்த்து ,
“பேரா உங்கப்பன் எப்ப வாரான்.. அப்பா போலவே நீயும் டாக்டராகிட்டனு கேள்விப்பட்டேன் … ரொம்ப சந்தோஷம் யா…” என அவனிடம் பேச்சுக் கொடுக்க ,
வெட்கத்தில் முகம் மறைத்திருந்தவள் பாட்டியின் பேச்சில் கைகளை விலக்க , பார்த்த அரவிந்துக்கு சிரிப்பு வந்து விட்டது. அதற்குள் அனைவரும் வர , பார்வையை அவள் முகத்திலிருந்து விலக்கி ,
“அதான பாட்டி .. காலைக் காட்டினா தான மருந்துப் போட முடியும்.” என்றவன் பாட்டியின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டே ,
ஒரு மருத்துவனாக வித்யாவின் காலுக்கு மருந்திட்டு , வலி நிவாரணிகள் தந்தவன் , பரணியின் வற்புறுத்தலால் இரவு உணவு உண்டு விட்டுத் தான் கிளம்பினான். கூடவே பரணியும் திருமண வேலை தொடர்பாக அண்ணன் வீட்டாருடன் பேச வேண்டும் என்றுக் கிளம்பி விட்டார்.
வெகு நாட்களுக்குப் பிறகுப் பார்த்த உறவு என்பதால் வித்யாவைத் தவிர அனைவரும் அவனை வழியனுப்ப வெளியேக் காரருகே வந்தனர். வித்யா மட்டும் வீட்டு வாசல் நிலைப் படியில் நின்று அரவிந்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கதவைத் திறந்துக் காரில் ஏறப் போனவன் , சட்டைப் பை , பேன்ட் பையில் கை வைத்துவிட்டு , “அத்த நான் ஃபோன சோஃபால வச்சிட்டு வந்துட்டேன்…” என சொல்லிக் கொண்டே வீட்டை நோக்கி விரைந்தான்.
அனைவரும் வெளியே இருந்தேப் பார்த்துக் கொண்டிருக்க, உள்ளே வந்தவனை திரும்பி புரியாதுப் பார்த்துக் கொண்டிருந்த வித்யா அருகில் வந்தவன் , நொடியில் அவள் நெற்றியில் முத்தமிட்டு ,
[the_ad id=”6605″]
“வாரேன் கேண்டி … இந்த மருந்து வலியக் கண்டிப்பாக் குறைக்கும்…” எனக் கண் சிமிட்டி , தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்தே ஃபோனை எடுத்தவன் , அதைக் கையில் சுழற்றிக் கொண்டே படியில் இறங்கிச் சென்று விட்டான்.
அனைவரும் வீட்டினுள் நுழைய, நெற்றியில் கை வைத்து, இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றவளைப் பார்த்தப் பாட்டி ,
” லதா … கொஞ்சம் கோயில் விபூதி எடுத்துட்டு வா…. இராவுல அந்தப் பக்கம் வரக்கூடாதுனு சொல்வாங்க … காத்து கருப்பு அடிச்ச மாதிரி நிற்கா ….” என்றவர் விபூதி வைத்துவிட , அப்போதும் அவர் கேட்ட கேள்விகளுக்கு விழித்து நின்றவளைப் பார்த்தவர் ,
” லதா இன்னைக்கு இவள உன் கூடப் படுக்க வச்சுக்கோ … அப்படியே சுத்திப் போடு … எனக்கு அசதியா இருக்கு நான் படுக்கிறேன். இவுக தாத்தா வந்தா பால் மட்டும் ஒரு கிளாஸ் கொடு போதும்… ” என்று உள்ளே சென்று விட்டார்.
வித்யா முன் வந்த வரு, “என்னடி ரொம்ப வலிக்குதா , அண்ணா கொடுத்த மருந்துக்கு உனக்கு வலி குறைஞ்சிடும் … ” எனும் போதே அவளது தந்தையின் அழைப்பு ஃபோனில் வர ,எடுத்து பேச ஆரம்பித்தாள்.
அவளது அண்ணனின் மருந்து என்பதிலயே முகம் சிவந்த வித்யா , கால் வலியையும் மறந்து மாடியிலிருந்த அவளறைக்கு ஓடிச் சென்று விட்டாள். தந்தையிடம் பேசிவிட்டு புன்னகை முகமாக வரு அறைக்கு வரும் போது வித்யா ஆடை மாற்றி விட்டிருந்தாள்.
வந்தவள் கன்னக்குழி விழ சிரித்துக் கொண்டே, ” வித்யா … அப்பா வந்துட்டே இருக்காராம் டி… அநேகமா நைட் ரெண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துருவாராம். நான் காலையிலயே எழுந்து தாத்தா வீட்டுக்குப் போறேன்… நீ என் டிரஸ்… ” என வரு சொல்லிக் கொண்டேப் போக , வித்யா அவள் பேசியது எதையும் காதில் வாங்காது அவள் முகத்தையே ரசித்துக் கொண்டிருந்தாள்.
நிஜத்தில் வரு நின்றாலும் நினைவில் அரவிந்த் நிற்கவும் ,
தன் ஆட்காட்டி விரலால் அவளது கன்னக்குழியைத் தொட்டவள், புன்னகையோடு ,
“அழகா இருக்கு …” என , ” நான் குண்டா இருக்கிறதால இப்ப நான் சிரிக்கும் போது மட்டும் தெரியுது. எங்கண்ணாவ பார்த்தியா அவங்களுக்கு ரொம்ப அழகா இருக்கும்…. ”
கீழேயிருந்து லதா அழைக்கவும் , அப்படியே நின்று தன்னையேப் பார்த்துக் கொண்டிருந்த தோழியை உலுக்கிய வரு ,
” என்ன வித்யா … அத்தை ரொம்ப நேரமாக் கூப்பிடுறாங்க பாரு … “அவளது உலுக்கலில், திருதிருவென விழித்தவள் கீழே ஓடி விட்டாள்.
இன்னொருவர் உதவி இல்லாது அவள் அணிந்திருந்த ஆடையை மாற்ற இயலாது என்பதால் சங்கீதாவைத் தேட , அவள் தோட்டத்தில் நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்தாள்.
பாட்டியைத் தேடிச் செல்ல அவர் உறங்கி விட்டது போல் தெரியவும் , வித்யாவையே தேடிச் செல்ல , அங்கு லதா மடியில் தலை வைத்து வித்யா கண்மூடி இருக்க , அவர் மகளின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
பாவம் வருவுக்கு அப்போது தெரியவில்லை , பெண்கள் உள்ளத்தில் மனதை திருட கள்வன் புகுந்தால் கள்ளமும் புகுந்துவிடும் என்று.வித்யாவும் அரவிந்தின் நினைவிலும் அவனது இதழொற்றலிலும் தன்னையே மறந்திருந்தவள் தோழியையும் மறந்தாள்.அவள் ஆடை மாற்ற உதவுவதாக சொன்னதையும் மறந்து தாயின் தலைகோதலில் சுகமான உறக்கத்திற்கு சென்று விட்டாள் .
பார்த்த வருவுக்கு தாயின் ஞாபகம் வர வாசலில் நின்றவள் அப்படியே திரும்பி விட்டாள். தானே தன் சட்டையின் முடிச்சுகளை அவிழ்க்கப் பார்க்க அது ஒன்றுடன் ஒன்று சிக்கிக் கொண்டு அவளாலும் அவிழ்க்க முடியாமல் போய்விட்டது. அது அவளுக்கு இயலாமையைக் கொடுக்க அது கழிவிரக்கமாக மாறி அழுகையாக மாறிவிட்டது.
மெத்தையில் படுத்தவள் , தன் ஃபோனில் இருந்த தாயின் படத்திடம் ” ம்மா நீங்க ஏன்மா என்னை விட்டுட்டுப் போனீங்க … பாருங்க ஒரு டிரஸ் சேன்ஜ் பண்ணக்கூட நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்…. ஒரு லூசு எதையோ ஒட்டி முதுகு வேற பிசுபிசுனு இருக்கு.. இதுல எல்லாரும் இப்படி டிரஸ் பண்ணாத அப்படி டிரஸ் பண்ணாதனு வேற சொல்றாங்க … ”
[the_ad id=”6605″]
அழுதவள் அப்படியே உறங்கிவிட , போன் அடிக்கும் சத்தம் கேட்டு விழித்தாள். அது சங்கீதாவின் போன் , அவள் நல்ல உறக்கத்தில் இருக்க , அதை எடுத்த வரு அதில் விக்ரமின் எண்ணையும் , அவனது ஃபோட்டோவையும் பார்த்து எடுத்துக் காதில் வைத்தாள்.
“கீ … கீ… கீ ….தூ…. மொட்டை மாடிக்கு வந்துட்டேன் …க… கதவு திறமா…” என குழறி குழறி வார்த்தைகள் வர ‘பொத்தென்ற ‘ கீழே விழும் சத்தத்தோடு ஃபோனும் ‘பீப்’ என்ற ஒலியோடு மேலும் கேட்கவில்லை.
சங்கீதாவைப் பார்த்த வரு உறங்குபவளை எழுப்ப மனமின்றி ,அறையை விட்டு வெளியேறியவள் , மொட்டை மாடிக்கு ஏறினாள்.
இன்றிலிருந்து ஒருவனை இதய அறைக்குள் பூட்டி வைக்கப் போகிறாள் என்பதை அறியாமல் மாடிக் கதவினைத் திறந்தாள்.
தூவும் ….