மழைத்துளி 15
விக்ரம் வீட்டிற்கு வந்தவர்கள் சங்கீதாவை பட்டுடுத்தி அலங்கரித்து திலீபன் வீட்டிலிருந்து கொண்டு வந்த பூக்களை தலையில் சூட்டி இனிப்பு காரம் என உணவுகளில் சிறிது எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டு மகிழ்ந்தனர்.
எப்போதும் கலகலவென பேசிக் கொண்டு வளைய வரும் வரு அமைதியாக இருக்கவும் , பரணி அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தவர் ,
“என்னம்மா உடம்பு எதுவும் சரியில்லயா … “.
“சித்தி நானும் பார்த்துட்டுத்தான் இருக்கேன் அவ காலையிலருந்தே சரியில்ல ” என வித்யாவும் தன் பங்குக்கு சொல்லவும்
“இல்லயே அத்தை நான் நல்லாருக்கேனே … ”
“பின்ன ஏன் அமைதியா இருக்க…. பாட்டி எதுவும் சொன்னாங்களா… அம்மாகிட்ட எத்தனையோ தடவை சொல்லிட்டேன் உன்னை எதுவும் சொல்லக் கூடாதுனு .அதுக்காகவே உன்னைய இங்க கூட்டிட்டு கூட்டிட்டு வாறேன்.” எனப் புலம்பவும், தன் அமைதி அனைவரையும் கேள்வி கேட்க வைக்கிறது எனத் தெரிந்ததும் ,
“இல்ல அத்தை பாட்டி என்னை எதுவும் சொல்லல….நைட் சரியா தூங்கல …. அதுதான்…” என்பதாக சொல்லிவிட்டு கேள்விகளிலிருந்து தப்பிக்க அனைவரிடமும் இரவில் சரியான தூக்கம் இல்லாததால் சிறிது நேரம் அறையில் படுக்கப் போவதாகக் கூறி விட்டு மாடியேற ஆரம்பித்தாள்.
விக்ரம் அறையைத் தாண்டித் தான் செல்ல வேண்டும் என்பதால் அவன் அறையைக் கடக்க இருந்த நேரம் ,
“ஹேய் லட்சுமி … கொஞ்சம் நில்லு ….”
விக்ரம் அவளைத் தான் அப்படி அழைக்கிறான் என்பதை அறிந்தவளதலால் நின்று அவனைப் பார்க்க , அருகில் வந்து கைகளை கட்டிக் கொண்டுக் கேட்க ,
“நைட் நடந்ததையே நினைச்சுட்டு இருக்கியா….”
[the_ad id=”6605″]
அவனது கேள்வியில் திடுக்கிட்டவள், “அப்ப ஞாபகமிருக்கா” என்று நினைத்தவளுக்கு , அவன் மேலே பேசியது மறுபடியும் விழிகளில் நீர் சூழ வைத்தது.
“இதெல்லாம் சின்ன விஷயம் …நீ கார்ல வரப்போ அழுததப் பார்த்தேன். அவன நேத்தே நல்லா கவனிச்சுட்டேன் …. பொடிப் பயலுக … அவன என்கிட்ட காட்டு உதைப்பேன்னு சொல்லிட்டு இப்படி அழுதா எப்படி … வாய்ப்பேச்செல்லாம் என்கிட்ட மட்டும்தானா …. பொண்ணுங்க போல்டா இருக்க வேண்டாம்.
வீட்ல ஏன் சொல்லத சொன்னேன்னா , அவனுக நம்ம ஊர் பசங்க , அப்புறம் எப்படி இப்படி செய்யலாம்னு அங்கேயும் இங்கேயும் பிரச்சினை வரும் …. உனக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்சது ஊர் பூரா பேச்சானா உனக்குத்தான் சங்கடம் … சும்மா துடைச்சுப் போட்டுட்டு அடுத்த வேலையப் பாரு….. அப்புறம் பிர.… ” என சொல்ல வந்தவன் ..
நண்பனின் விருப்பத்தை அவன் தான் சொல்ல வேண்டும் தான் சொல்வது நாகரீகமாகாது என்பதால் அப்படியே நிறுத்திவிட்டான்.
அதற்குள் அவன் மொபைல் அடிக்க பேசுவதற்காக முதல் தளத்தில் இருந்த பால்கனி சென்று விட்டான்.
வருவுக்கு அவனை நினைத்துச் செல்லக் கோபம் உண்டாகியது. அவனாக அவளது கண்ணீருக்கு காரணம் கண்டுபிடித்து அவளை அழைத்து ஆறுதல் அளித்தது தான் அந்த கண்ணீருக்கு காரணம். மெல்லிய முறுவல் தோன்ற அங்கிருந்து அகன்றவள், கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
“விக்ஸ்டப்பா … அவன என் கண்லப் பட்டா என்னாவான்னுப் பாரு…. நான் கராத்தேல நான் ப்ரவுன் பெல்ட் தெரியுமா … இனி ப்ளாக் பெல்ட் தான் …. இங்க லீவுக்கு வரலனா அந்த கோச்சிங் தான் எனக்கு…அம்மா போல இல்ல விக்கி … அம்மாவே தான் நீ எனக்கு … நான் அழுதா எங்கம்மாக் கூட இப்படித்தான் சமாதானப் படுத்து வாங்க …..”தாயின் நினைவு வந்தாலும் விக்ரமின் நினைவே முழுவதுமிருக்க கண்கள் தானாக மூடிக் கொண்டது.
பேச்சுக் குரல்கள் அருகில் கேட்கவும் தான் விழித்தாள். அறைக்கு வெளியே இருந்த ஹாலில் தான் வித்யாவும் , சங்கீதாவும் விக்ரமுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
” இன்னும் ரெண்டு நாள்ல முகூர்த்த புடவை எடுக்க ப்ளான் பண்ணிட்டு இருக்காங்க … நீ இன்னைக்கே கிளம்புற …. நீ இல்லாம எப்படி ண்ணா …” என்ற சங்கீதாவிற்கு ,
“ப்ளீஸ்மா என்னைப் புரிஞ்சுக்கோ … என்னோட கனவு மா … இப்ப விட்டா அப்புறம் வாய்ப்பேக் கிடைக்காது. இதை நான் நல்லாப் பண்ணினா அடுத்து நான் தனியா பண்ற வாய்ப்பு கிடைக்கும் … கல்யாணத்துக்கு முதல் நாளே ஓடி வந்துருவேன் சரியா….. விதுமா அதுக்கிடையில கல்யாணம் சம்பந்தமா என்ன விசேஷம் நடந்தாலும் லைவ் டெலிகாஸ்ட் பண்றது உன் பொறுப்பு ஓகே… ”
அண்ணன் தங்கைகளின் பேச்சில் இருந்து விக்ரம் இன்றே கிளம்புகிறான் என்றதும் வரு, உடனே அறையை விட்டு வெளியேறி விக்ரமைப் பார்க்க ,
அங்கிருந்த பெரிய சோஃபாவில் இரு பக்கமும் தங்கைகள் இருக்க , நடுவில் அமர்ந்திருந்தவன் வித்யாவை தோளில் சாய்த்தும் சங்கீதாவின் வலக்கையைப் பிடித்துக் கொண்டும் பேசிக் கொண்டிருந்தான். தானும் அதில் ஐக்கியமாக மாட்டோமா என்ற ஏக்கம் வருவை தாக்க சத்தம் இல்லாமல் கீழே சென்று விட்டாள்.
அங்கு சாருவும் அமுதாவும் இவள் வரவுக்காக தயாராக இருக்க பரணி,
“மருமக்களே வாங்க என் மதினிமார் எல்லாம் மகள அனுப்பு கோயிலுக்குப் போகணும்னு ஃபோன் பண்ணியாச்சு வாங்க , வாங்க … ” எனத் தன் அண்ணன் மக்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு அம்மா வீட்டுக்குச் சென்று விட்டார்.
பரணியின் உடன் பிறந்த இளைய அண்ணன் விஸ்வநாதனின் மகள் தான் அமிர்தவர்ஷினி … சாருவும் , அமுதாவும் அவரது தந்தை வழியில் ஒன்று விட்ட அண்ணன் மகள்கள்.
[the_ad id=”6605″]
வீட்டிற்கு வந்து குளித்து முடித்து ஆடைகளைப் பார்த்தவள் ஏற்கனவே போட்டிருந்த சுடிதாரையே எடுத்துப் போட்டுக் கொண்டாள். அதில் விக்ரம் தேய்த்த சந்தனம் வாசனை இன்னும் வந்தது. ஆனாலும் மாற்ற மனமில்லை. கீழே வந்தவள் அவளது பாட்டி கனிமொழியிடம் சென்று ,
“பாட்டி கோவிலுக்கு இந்த ட்ரஸ் ஓகேவா…. நீங்க சொல்ற ட்ரஸ்லாம் அண்ணனுக்கு கல்யாண ட்ரஸ் வாங்கப் போகும் போது வாங்கிக்கிறேன்…. ”
“அழகா இருக்கு எந்தங்கம் … முடிய தான் இன்னும் வளர்த்திருக்கலாம் …..” என்றவருக்கு வரு பதில் சொல்லும் முன் அங்கு வந்த விஸ்வனாதன்,
“ம்மா உன்னை அவங்கம்மா போனதும் என் கூட வந்து இருக்க சொன்னேன் … வரல … இப்ப என் பொண்ண அது சரியில்ல இது சரியில்லனு சொன்னா எப்படி மா…. வீட்ல வேலை செய்றவங்க தான் அவள பார்த்துக்கிட்டாங்க ….அவங்க என்ன செய்வாங்க நாம சொல்றது தான் செய்வாங்க ….அவ முடிய எனக்கு பராமரிக்க தெரியல , சின்னதா வெட்டி பழக்கிட்டேன்.… இப்ப சொல்றதெல்லாம் நீ அப்ப வந்து இருந்து சொல்லிருக்கலாம்ல….அப்படி என்னதான் பிடிவாதமோ உனக்கு ….”
“ஆமாப்பா என்னையவே குறை சொல்லு , உங்கண்ணனுக்கு எங்க அண்ணன் பொண்ண கட்டின மாதிரி உனக்கு உங்கப்பா அவர் தங்கச்சி மகள கட்ட நினைச்சாரு…. நீ தான்… அந்த சிறு…..”
“அம்மா…..” என்று விஸ்வனாதன் கத்திய கத்தலில் வரு மிரண்டாள் என்றால் வீட்டின் ஒவ்வொரு அறையிலிருந்தும் அனைவரும் வந்து எட்டிப் பார்த்தனர்.
படியில் இறங்கி வந்த அரவிந்தைக் காட்டிய விஸ்வனாதன் ,
” அவனுக்கு கல்யாணம் பண்ற வயசு வந்துருச்சுமா…. இன்னும் என் கல்யாணத்தையே பேசுறியே… அதுவும் உயிரோட இல்லாதவள….” என தலையிலடித்துக் கொண்டவரை அவர் அண்ணன் வந்துப் பிடித்துக் கொண்டு ,
“புஷ்பா பசங்கள அழைச்சிட்டு நீ கோவிலுக்கு போ ….” எனவும் ,ராணி என்கிற புஷ்பராணி ,
வரு அருகில் வந்தவர் “அம்மு வாம்மா நாம கோயிலுக்கு போகலாம் … ” என அவளை அழைத்துக் கொள்ள , திலீபனும் அரவிந்தும் உடன் சென்றனர்.
வரு ஒன்றும் பேசாமலே காரில் வரவும் ,
“அது மா … பாட்டிக்கு கொஞ்சம் வருத்தம் … அதைய தான் இப்படி அப்பாக்கிட்ட சத்தமா பேசி சொல்றாங்க ….”
“ஏன் பெரியம்மா அப்பாவுக்கு அம்மாவ தான பிடிச்சது… அது தப்பா….”
முன்புறம் திலீபனோடு அமர்ந்திருந்த அரவிந்த் ,
“பாப்பா… பாட்டியும் அப்பாவும் அப்படி தான் பேசிக்குவாங்க… அப்புறம் பாரேன் ரெண்டு பேரும் கொஞ்சிட்டு இருப்பாங்க … நீ அதெல்லாம் யோசிக்காத …. ஆமா இப்ப அந்த செடிய என்ன செய்ய போறீங்க….” எனப் பேச்சை திசை திருப்பி விட்டான்.
[the_ad id=”6605″]
இவர்கள் கோவில் வாசலில் இறங்கவுமே விக்ரம் வீட்டிலும் வந்து இறங்கினர். கூடவே சாரு அமுதா என அனைத்து குடும்ப உறுப்பினர்களும் குவிய ஆரம்பிக்க , ஒவ்வொருவரும் தங்கள் இணையைத்தான் தேடினர்.
இருள் சூழத் துவங்க பூஜைகள் முடிந்து முளைப்பாரியை எடுத்துக் கொண்டு தாமிரபரணி ஆற்றங்கரையோரம் சென்றனர். சங்கீதா தீலீபனுக்காக காலையில் கட்டியிருந்த புடவையிலும் அலங்காரத்திலும் வந்து நிற்க , வித்யாவும் அரவிந்தைக் காணும் ஆவலில் வந்திருந்தாள்.
விக்ரமின் உறவுப் பெண்மணி ஒருவர் லதாவிடம் விக்ரமைக் காட்டி ,
” மைனி… மருமகன் ராசாவாட்டம் இருக்காரு …. பெரிய இஞ்சினியர் வெளிநாட்டுக்கெல்லாம் போய் படிச்சிருக்காருனு கேள்வி பட்டேன் , உங்க கொழுந்தன் மவதான் மூத்தவனு கல்யாணம் வச்சாச்சு … அடுத்து மகனுக்குத் தானே …. என் மச்சான் மவ காலேசுல மூணாவது வருஷம் படிக்கிறா … அவள பார்ப்போமா…..”
“பார்க்கலாம் அண்ணி … அவன் சின்னவ படிப்ப முடிச்சு அவ கல்யாணத்துக்கு அப்புறம் தான் முடிப்பேன்னுட்டான். ”
“சரி இப்ப பேசி வச்சுருவோம் … நல்ல குடும்பம் … நமக்கு சமமா சொத்து பத்து நிறையவே இருக்கு … அப்புறம் நேரம் கூடி வந்தா கல்யாணத்த சட்டு புட்டுனு நடத்திரலாம்ல….”
லதாவிற்கு இந்தப் பேச்சை மேலும் வளர்க்க விரும்பவில்லை .எனவே அதை தவிர்க்கும் விதமாக ,
“இப்ப சின்ன வயசுதான அண்ணி … இன்னும் நிறைய சாதிக்கனும்னு நினைக்கிறான்.. பொண்ணும் அவன் படிப்புக் கேத்த மாதிரி அமைஞ்சா இன்னும் சந்தோஷப்படுவான்.”
” என்னவோ மைனி… இந்தக் காலத்துப் புள்ளைக … அதுங்களே அப்புறம் எவளையாவது கூட்டிட்டு வந்துரப் போகுதுங்க…” லதா பிடி கொடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் அவர் இப்படிப் பேச ,
“நீங்க சொல்றது சரிதான் … ஆனா என் பையன் நான் யாரக் கை காட்டுனாலும் சரினு கேட்டுக்குவான். அப்படியே அவனா யாரையும் விரும்பினாலும் எங்கிட்ட சொல்லாம இருக்க மாட்டான் …. நான் அவன அப்படித்தான் வளர்த்திருக்கேன். சரி வாங்க பூஜைக்கு நேரமாகுது….” எனப் பேச்சு இத்தோடு முடிந்தது என்பது போல் நகர்ந்து விட்டார்.
கேட்டுக் கொண்டிருந்த வருவிற்கு ஒரு மனநிலை என்றால் , வித்யாவிற்கு வேறொரு மனநிலை .இரு இள உள்ளங்களும் மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டன.