மழைத்துளி 18
காரில் அமர்ந்திருந்த கனியிடமும் ராணியிடமும் விவரம் சொல்ல ,
கனிப்பாட்டி சும்மா விடுவாரா அவருக்குத் தெரிந்த அத்தனைக் கெட்ட வார்த்தைகளையும் போட்டு திட்டிக்கொண்டே இருந்தார்.
“நாசமா போறவனுக … குடிச்சிட்டு வண்டியோட்டி அவனுக சாகறதும் இல்லாம … சும்மாவாரவனையும்ல கொல்றானுக , ராணி பேரன் கல்யாணத்த வச்சிட்டு இப்படி நினைச்சுப் பார்க்கவே முடியல ….பேரன் பேத்தி மூணு பேரையும் தேங்காய் சூடம் காட்டி இந்த முக்கு சந்தில உடைச்சிடு…” இப்படி அவர் திட்டிக்கொண்டே வர
திலீபனின் ஃபோனில் விக்ரமின் அழைப்பைக் கண்டதும் அவள் எடுக்கப் போக அதற்குள் வந்தமர்ந்த திலீபன், அவனுக்கு மெஸேஜ் அனுப்பி விட்டு காரை எடுத்தான்.
காரை நிறுத்தி அம்மாவும் பாட்டியும் உள் சென்றதைக் கவனித்த திலீபன் ,விக்ரமை அழைத்துப் பேச ஆரம்பிக்க , அங்கு வந்த வருவைக் கவனிக்காமல் ,
“டேய் மாப்ள நாம எவ்வளவு பெரிய தப்பு பண்ணிருக்கோம். அரவிந்த் குடிக்காம நல்ல பையனா இருந்ததால நாம தப்பிச்சோம். இல்லைனா அன்னைக்கு நாம இருந்த நிலை… “தற்போது நடந்தவற்றை சொன்னவன் ,
“பாட்டி திட்டுறது அவனுகள இல்ல நம்மளனு நினைச்சுக்கணும்….” எனப் பேசிவிட்டுத் திரும்ப வரு நிற்கவும் ,
“என்ன பாப்பா அத்தை வீட்டுக்கு போகணுமா…”ஆம் .. இல்லை எனத் தலையசைத்தவள் , ஆம் என்றவாறு அவனோடு செல்லும் போது
“அண்ணா ,அண்ணிய சேலை வச்சுப் பார்க்கும் போது எடுத்த ஃபோட்டோஸ் காட்டுங்க… ” என்றதும் தன் மொபைலை தந்தவனது மொபைலில் வாட் சப்பில் விக்ரமின் எண்ணிற்கு ,
“இனி அதிகம் ட்ரிங்க்ஸ் எடுக்காதே… அது நமக்கு நல்லதில்ல …” என ஆங்கிலத்தில் எழுதி அனுப்பினாள்.
“டேய் நானே இன்னும் வருத்தப்பட்டுட்டு இருக்கேன். திரும்ப திரும்ப சொல்ற… இனி கவனமா இருப்போம்” என பதில் அனுப்ப , பார்த்துப் புன்னகைத்தவள் அவனுடனான உரையாடல்களை அழித்து விட்டுக் கொடுத்தாள்.
அங்கு வருவின் வரவிற்காக காத்திருந்த பரணியோடு சங்கீதாவும் வித்யாவும் தோட்டத்திலயே காத்துக் கொண்டிருந்தனர் .பரணி காரைக் கண்டதும் வெளியே வந்தவர் ,
“மருமகனே மைனி ஃபோன் பண்ணாங்க … ஒன்னும் பிரச்சினையில்லயே…” என வார்த்தைகளால் அவனிடம் கேட்டார் என்றால் சங்கீதா விழிகளால் அவனிடம் கேட்க , அந்த விழிகளில் தெரிந்த பயம் , அவனை அப்படியேப் போக விடாது , அவனிடம் பேசிக் கொண்டிருந்தவரிடம் ,
“அத்தை…. ஒரு நிமிஷம் சங்கீதாட்ட தனியாப் பேசிட்டுப் போறேனே … ” எனவும் வீட்டைத் திரும்பிப் பார்த்த பரணி ,
“மாமா அத்தை கவனத்துல படாம பேசிட்டு வாங்க .. ” என்றவர் வீட்டினுள் செல்ல , அதற்குள் வருவும் வித்யாவும் உள்ளே சென்றிருந்தனர்.
கார் கதவை திறந்து விடவும் அதில் ஏறி அமர்ந்த சங்கீதா , தீலிபன் வந்து அமரவும் , தலை கவிழ்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.
“எனக்கு ஒன்னுமில்ல … ஏன் இப்படி அழற…. ஆனாலும் நான் சாரி கேட்டுக்கிறேன் …” என்ற திலீபனிடம் தலை நிமிர்த்தி ,
“ஒன்னுமில்ல தான் … ஆனா .. ஆச்சி பேசவும் எப்படி பயந்துட்டோம் தெரியுமா … நீங்க வேற ரொம்ப நேரம் போனே எடுக்கல…. ஏன் அத்தான் … அன்னைக்கும் இப்படித்தான் … அண்ணா வீட்டுக்கு எப்படி வந்தாங்கனுக் கூடத் தெரியாம முழிக்கிறாங்க … நீங்க ஸ்விட்ச் ஆப் …. நீங்களும் அவனுகளப் போலதானே…”
அவள் வலது கையைப் பிடித்துக் கொண்டு , “அதான் சாரி சொல்றேன்…. அன்னைக்கு அரவிந்த் மட்டும் தான் ட்ரிங்ஸ் எடுத்துக்கல… மற்றபடி நான், விக்ரம் , பிரதாப், ராஜேஷ் , சுந்தர் எல்லாருமே நார்மல் கண்டிஷன்ல இல்ல, அரவிந்த் மட்டும் கார் ஓட்டலனா நாங்க தான் ட்ரைவ் பண்ணியிருப்போம்.”
அவனிடமிருந்து கையை உருவி அவன் தோளில் இரு கைகளால் அடித்தவள் , அப்படியே அவள் நெற்றியிலும் வேகமாக அடித்துக் கொண்டே ,
“எனக்கும் அதை நினைச்சு தான் இப்ப அழுகை வந்துச்சு … உங்களுக்கு எல்லாம் விளையாட்டாப் போச்சுல … எப்ப நீங்க தான் எனக்குனு வீட்ல சொன்னாங்களோ அப்ப இருந்து உங்களையே நினைச்சிட்டு இருக்கிற என் மனசு என்ன பாடுபடும்னு நினைச்சீங்களா , நெஞ்செல்லாம் வலிக்குது அத்தான்….இந்த வலி வேணும் தான் ….” அடித்துக் கொண்டே அழுதவள் கையை வேகமாகப் பிடித்துக் கொண்டவன் .அவளை ஒருவாறு சமாதானப்படுத்தி , அவள் முகம் பற்றி இதழ் நெருங்க , பரணி மூடியிருந்த கார் கதவைத் தட்ட , இருவரும் வேகமாக பிரிய ,
“ஐயோ …கரடி… ” என்ற திலீபனின் தோளில் அடித்து விட்டு கதவைத் திறந்து வெளியேறினாள்.
அழுது சிவந்திருந்த மகளின் முகத்தைப் பார்த்து உள்ளே அனுப்பியவர் ,
“மருமவனே… புது மாப்பிள்ளை இனி வெளிய அதிகம் போகாதீங்க… அதுவும் இப்படி இருட்டுல… என்ன ஒரு இருபது நாள் அப்புறம் கல்யாணம் ஆகிடுச்சுனா கவலையில்லை.” எனவும் தலையசைத்து கிளம்பியவன் ,விக்ரமிற்கு அழைத்து ,
“மச்சான் … ரொம்ப கில்ட்டியா … ” என ஆரம்பிக்கவும் ,
“டேய் மாப்ள எத்தனை தடவ சொல்றது… நான் மறக்க நினைக்கிறத திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தாதனு ….”
” எத்தனை தடவ டா சொல்றாங்க … எப்படியோ என் பிங்கி கிட்ட ஷேர் பண்ணிட்டேன். இனி நீ KABனு மிரட்ட முடியாதே…. ”
“யாருடா பிங்கி… இரு போட்டுத் தாரேன் ..” என்ற விக்ரமிடம்,
” என் மங்கி தான் பிங்கி … சங்கீத பிரியாவ சுருக்கி செல்லமா பிங்கி… எப்பூடி … ”
“ரொம்ப அழகு … அடப்பாவி … கீது ஃபோன் பண்றாடா ….”
“நான் …. எஸ்கேப்….” என்றவன் ஃபோனை அணைத்துக் கிளம்பிவிட்டான்.
சங்கீதா அவர்கள் அறை பால்கனியில் நின்று விக்ரமிற்கு அழைத்துக் கொண்டிருந்தாள்.
அவன் எடுத்தது தான் தாமதம் , “என்ன அண்ணா நினைச்சிட்டு இருக்கிற நீ …. அன்னைக்கு என் கிட்ட இருந்து தப்பிச்சிட்டதா நினைச்சுட்டியா…. ” என சத்தமாக பேசவும் வித்யாவும் வருவும் அவளுக்கு பின்னால் பால்கனி வாசலில் வந்து நின்றனர்.
“ஷ் … ப்ளீஸ் ப்ளீஸ் சத்தமா பேசாத மா யாருக்காவது கேட்டுறப்போகுது…”
“ஓ…நான் வீட்டுக்குள்ள வர்றதுக்குள்ள தகவல் வந்துருச்சோ …. கேட்டா கேட்டுட்டுப் போகுது… அரவிந்தாக்ஷன் அப்படிங்கிற டீ டோட்லர் மட்டும் அன்னைக்கு என்ன ஆகியிருக்கும்னு நினைச்சுப் பார்க்கவே முடியலண்ணா…” எனக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் ,
“உனக்குத் தெரியுமா … எனக்கு ஒரு வயசுலயோ என்னமோ தான் நான் உன் கூடப் பொறக்காதவன்னே தெரிஞ்சது. அந்தளவுக்கு உன் மேல பாசம் …. உனக்கு ஒன்னுனாலும் என்னால தாங்க முடியுமா … ப்ளீஸ்ணா … வித்யாவும் நானும் வேறு இல்லனு நினைச்சா இனி கவனமா இரு …. நாங்க இத்தனைப் பேர் உனக்கு இங்க இருக்கிறோம்ங்கிறதை ஞாபகத்துல்ல வச்சுக்கோ ….” என்றவள் பதிலைக் கூட எதிர்பாராமல் ஃபோனை வைத்து விட்டாள்.
அவள் பின் நின்று சங்கீதாவின் பேச்சைக் கேட்ட இருவரும் ஒவ்வொரு நினைவில் நின்றனர். வருவிற்கு ஓரளவு காரணம் தெரியுமாதலால்,
“விக்கி நீ லக்கி… இப்படி ஒரு குடும்பம் கிடைக்க … நிஜம் விக்கி … அவங்க யாரும் உன்னை திட்டல… நீ சொன்னது போல வருத்தம் தான் படுறாங்க…நானும் அதுல சேரணும் … ” என மெல்லியப் புன்னகையோடு சங்கீதா அருகில் வந்து , அவள் கன்னத்தில் முத்தம் பதித்து,
“தேங்க்ஸ் அண்ணி ” எனவும் ,
“எங்கண்ணா என்கிட்ட திட்டு வாங்குனதுக்கா….” என கேலி செய்த சங்கீதாவிடம் ,
“ம்ஹும்…. எங்கண்ணாவ டீ டோட்லர் சொன்னதுக்கு… ” என்றவள் , நின்றால் இன்னும் கேள்விகள் வரும் என்பதால் உள்ளே சென்றுப் படுத்துக் கொண்டாள்.
வித்யாவையோ கேட்கவே வேண்டாம் ,விக்ரமிடம் அதிகமாக சங்கீதா இப்படிப் பேசுவது சகஜம் என்றாலும் , அவள் அரவிந்தின் குணத்தை ஒரே வார்த்தையில் சொல்லியதும் , அவனை நினைத்து முகம் தானாக சிவப்பேறிக் கொண்டது.
உள்ளே சென்று அவளும் படுத்துக் கொள்ள , சங்கீதாவின் ஃபோனில் மறுபடி அழைக்க ,
“முடியாது போ …. நான் இப்ப ரெடி பண்ணினாலும் கல்யாணத்துக்கு அப்புறம் தான் தருவேன். அதுதான் என்னோட பனிஷ்மென்ட் … ” என அண்ணனிடம் செல்ல சண்டையிட்டு வைத்தவள், வருவிடம் ,
“வரு நாளைக்கு நீங்க கோவிலுக்குப் போகும் போது ஆத்தோரம் ஒரு மண்டபம் இருக்கில்லயா அது மேல இருக்கிற கோபுரத்த ஃபோட்டோ எடுத்துட்டு வாங்க சரியா … ”
“எதுக்கு அண்ணி … ” என்ற வருவிடம் ,
“அண்ணாக்கு ‘ஸ்கேல்மாடல் (Scale Model ) வேணுமாம்.அவங்க ப்ராஜக்ட்ல இந்த டிசைனும் சேர்த்துக்கறதுக்காக… கோவில்ல பார்த்துருக்காங்க போல… அந்த மண்டபம் நானூறு வருஷ பழமையானது… எப்பவுமே வேல்யூ அதிகம்….”
‘அப்படியா ‘ என்றுக் கேட்டுக் கொண்டவள் தான் , உடனேயே மொபைலில் கூகுள் ஆண்டவரை சரணடைந்து விட்டாள். மறுநாள் காலையிலயே அண்ணனோடு கோவிலுக்குச் சென்றவள் ஃபோட்டோ எடுத்து சங்கீதாவிற்கு அனுப்பி வைத்து விட்டு ,அரவிந்தை அழைத்துக் கொண்டு திருநெல்வேலி வந்து , தனக்குத் தேவையானப் பொருட்களை வாங்கிக் கொண்டாள்.
அவர்கள் போகிற வழியில் அந்த சரக்கு லாரி முன்புறம் சேதமடைந்து ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு அதில் இருந்த மூட்டைகள் வேறு லாரிக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே சென்றாள்.
அவள் வாங்கியப் பொருட்களைப் பார்த்தவனுக்கு முதலில் சிரிப்பு தான் வந்தது. ஆனால் தங்கையின் ஆர்வமும் , திறமையும் அறிந்தவனாதலால் அவன் கண்டுக்கொள்ளவில்லை.அதிலும் கோவில் செல்பவள் கையோடு படம் வரையத் தேவையானது அனைத்தையும் எடுத்துச் சென்று வரைந்து விட்டு வருகிறேன் , என்று நேரம் எடுத்துக் கொள்வதால் வித்யாவுக்கும் அரவிந்துக்குமான தனிமை அதிகமாகியது.