மழைத்துளி 19
நிகழ்வில் …..
அனு முதலில் கதவைத் தட்ட உள்ளிருந்து பதிலில்லை எனவும் , கதவில் கை வைக்க அது திறந்துக் கொண்டது . படுக்கை காலியாக இருந்தாலும் அண்ணனும் இருப்பானோ என்ற சந்தேகத்தில் வேகமாக கதவைத் தட்டி , “அண்ணா” என்றழைத்தாள்.
அவளின் அழைப்பிலயே அமிர்தா உணர்வுக்கு வர , வேகமாக கண்களை துப்பட்டாவால் துடைத்துக் கொண்டே அறைக்குள் வந்தவள் , வாசலில் அனுவைக் கண்டு , சைகையால் ஆதி பக்கத்து அறையில் உறங்குவதாக சொன்னவள் , அவளை நெருங்கி ,
” நீ இன்னும் தூங்கல…”
“அதே தான் நானும் கேட்கிறேன்… நீ இங்க , அண்ணன் அங்க … என்ன நடக்குதுடி … நீ சந்தோஷமா தான இருக்க … “எனக் கேட்க , இப்போது புன்னகையோடு வந்தக் கண்ணீருடன் அவள் கையைப் பற்றியவள்,
“ரொம்ப… ரொம்ப .. சந்தோஷமா இருக்கேன்டி… ”
கையை உருவிக் கொண்டு இடுப்பில் கை வைத்தவள் , அவளை முறைத்துக் கொண்டே ,
“அப்புறம் எதுக்கு இந்த ரூம் … எதுக்கு இப்படி அழுகை… உன் அழுகைச் சத்தம் கேட்டுத்தான் நான் இங்க வந்ததே …. ”
“அது…. நாங்க விரதம் இருக்கிறோம்….” என்றதும் திடுக்கிட்ட அனு ,
” என்ன … விரதமா…” என்றவளிடம் காரணங்களைச் சொல்ல ,
” ரஃபினு அண்ணன் கிளாஸ்மேட்.. அவர் ரம்சான் நோன்பு இருக்கும்போது, அண்ணனும் அவங்கள ஃபாலோ பண்ணுவாங்க .. அதே போல அண்ணன் மாலைப் போடறது இல்லனாலும் இப்படி கூட இருக்கிறவங்களுக்காக ஃபாலோ பண்ணுவாங்கனு தெரியும்.. அம்மாக்கிட்ட கல்யாணம் திடீர்னு முடிவானதும் இதுதான் காரணம்னு சொன்னாங்க …. ஆனா அம்மாவும் நானும் கன்வின்ஸ் பண்ணோம்டி.. அவங்க அதை ஸ்டிரிக்ட்டா ஃபாலோண்ணுவாங்கனு நினைக்கல …..”
“ஷ் ” என அனுவைப் பேசாதே என்பது போல் சொன்னவள் , இப்போதைய விரதத்திற்கு தானே காரணம் என்பதையும் தெரிவிக்கவும் ,
“அது தானே பார்த்தேன்…. உன்னைய…. இதோ வாரேன் .. ” என்றவள் வெளியே சென்று விட்டு கையில் ஒரு பையுடன் வந்தாள்.
‘என்ன’ என யோசித்தவளிடம் அனு, “உனக்கு ஒன்னு கொண்டு வந்தேன். அதுக்கு முன்னாடி .. ஏன் இப்படி கண்ணெல்லாம் வீங்குற அளவுக்கு அழுதுருக்க … ”
“அதுவா…. உங்கண்ணனுக்கு என்னை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்காம் … என்னைய லவ் பண்றாராம்.… ”
தன் கையிலிருந்த பையைக் கட்டிலில் வைத்தவள் ,
“ஹேய் இது சந்தோஷப்படுற விஷயம் டி … இதுக்கா அழுவ….”
“ம்… ஆனந்தக் கண்ணீர் …” என்றவளை முறைத்த அனு ,
“நான் டாக்டருக்கு படிச்சு முடிக்கப் போறேன் … உடம்புல என்னப் பிரச்சினை இருக்குனு மட்டும் கண்டுபிடிக்க சொல்லித் தரல மனசுலயும் தான் …. நீ மட்டும் தான் மற்றவங்க மனசப் படிக்கிறதுல பெரிய ஆளுனு நினைச்சுட்டு இருக்கியா … ” என்றவள் கட்டிலிலிருந்த பையை எடுத்து உள்ளிருந்தவற்றை அவள் கையில் வைத்தவள் ,
“இப்ப சொல்லுடி ஏன் அழுத ….” என அவள் முகத்தையேப் பார்த்தாள். அனு தன் கையில் திணித்ததை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு , தரையிலயே அமர்ந்து விட்டாள் அமிர்தா. அவளருகிலேயே அமர்ந்த அனு ,
“எங்க கல்யாணம் நடக்கவே நீ தான் காரணம்னு தெரிஞ்சுப் போச்சு … “சட்டென்று அனுவைப் பார்த்தவள். கையிலிருந்ததைக் காண்பித்து , “அண்… அண்ணா” எனவும் ,
‘இல்லை’ என்பதாக தலையசைத்த அனு , “உன் அண்ணன் பொண்டாட்டியா இதை எடுத்துட்டு வரல… உன் ஃபிரண்டா உன்கிட்ட கேட்டுத் தெளிவுப்படுத்தாம நான் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்…. மனசுல எதையும் வச்சுக்காமப் பேசுற நீக்கூட என்கிட்டயோ உங்கண்ணன் கிட்டயோ ஒன்னுமே கேட்காம எங்களப் புரிஞ்சிகிட்டு சேர்த்து வச்சிருக்க … அப்புறம் நான் எப்படி டி ….. உனக்கு நாங்க விரும்பினது முதல்லயேத் தெரியுமா….உன் குணத்துக்கு தெரிஞ்சிருந்தா நீ அப்பவே என் கிட்ட கேட்டிருப்பியே…சரி எங்கள விடு … நீ ஏன் இந்த தேரத்துல அழற … உண்மையைச் சொல்லு….”
அனுக் கொண்டு வந்திருந்த உடைகளை கையில் எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்ட அமிர்தா ,
” உங்கண்ணா காதல் சொல்லிட்டு , எனக்கும் அவங்களப் போல காதல் உணர்வுகள் இருக்கா ….அப்படி இருந்தா சொல்லுனு சொல்றாங்கடி … ” என மெல்லியக் குரலில் சொன்னவளுக்கு அழுகை வர அனுவின் மடியில் தலை வைத்துக் கொண்டாள் .
” வித்யா …..” அவள் தலைக்கோதிய அனுவித்யா ,
“சொல்லு வரு…” , எனவும் மடியிலிருந்து எழுந்தவள் கண்ணீரோடு கூடியப் புன்னகையுடன் ,
“நீ கடவுள நேர்ல பார்த்திருக்கியானு எனக்குத் தெரியாது …. ஆனா… ஆனா நான் பார்த்துருக்கேன்….. உங்கண்ணன் ரூபத்துல … கடவுள மட்டுமில்ல … எங்கம்மாவக் கூட … .”
விழிகள் மின்ன…அன்பு ,காதல், பாசம்….. என அத்தனையும் தேக்கி பேசியவளையேப் பார்த்தவள் ,
“வரு கடவுளோட ஒப்பிடற அளவுக்கா….”
“ம்…. ஒரு நாள் ஒரு வேளை சாப்பாட தேவைப்படுறவங்களுக்கு கொடுத்து , அதை ஃபோட்டாவா.. வீடியோவா போட்டு .. நான் செய்தேன்னு ஸ்டேட்டஸ் போட்டு ஊரு உலகத்துக்கே தெரியப்படுத்தறவங்க மத்தியில , வாழ்க்கைல மறக்கவே முடியாத ஒரு உதவிய செய்துட்டு அதை ஒரு விஷயமாவே, ஏன் அது ஞாபகமே இல்லாம இருக்கிறவங்கள கடவுளோட தான ஒப்பிடமுடியும்….உங்கண்ணன் அப்படித்தான்.. அப்புறம் அம்மா…. அது ஏன் சொல்றேன்னா… அதுவும் என் பெர்ஸனல் …. ” எனப் புன்னகைத்தவள் ,
“உன்கிட்ட உனக்கு எப்ப எப்படிக் காதல் வந்ததுனு நான் கேட்கல …ஏன்னா அது உன் பர்ஸனல் … அது போல தான் எனக்கும் … ப்ளீஸ் புரிஞ்சுக்கோ … இத்தனை வருஷமா அவர மட்டுமே நினைச்சு … அவரால மட்டுமே உயிரோட நடமாடிட்டு இருக்கிற என் கிட்ட .. உனக்கு என் மேல காதல் வந்தா சொல்லுனா எப்படி டீ … ” என அழும் தோழியை என்ன சொல்லித் தேற்ற என்றறியாமல் ,
“வரு … அண்ணனுக்கு நீ விரும்புறது தெரியவே தெரியாதா …..”
விரக்திப் புன்னகையுடன் , “அவருக்கு என்னையவே யாருனு தெரியாது …இதுல நான் விரும்பினது எங்க தெரிய … ”
“வரு….. என்னடி சொல்ற…. அம்மா திடீர்னு உங்க கல்யாணம் முடிவானதும் அண்ணன்கிட்ட அரவிந்த் தங்கச்சினு சொன்னாங்களே…. ”
“ம்…. என்னையத் தெரியும் …. ஆனா என்னையத் தெரியாது… ” என சிரித்த வருவின் கையில் தட்டி ,
” என்ன தான் சொல்றியோ எனக்கு ஒன்னும் புரியலடி… ”
“உன்னை பொண்ணுப் பார்க்க நாங்க வந்தப்போ , நீ என்னடி சொன்ன … நாம கிட்டத்தட்ட ஒரு மாசம் பார்த்திருப்போம் , ஏன் தினமும் நாம தனியா இருக்கிற நேரம் , நான் பாட்டி வீடு போய் குளிச்சு சாப்பிட்டு வர நேரம் தான். அப்படி இருக்கிறப்ப உனக்கே என்னைத் தெரியல … எண்ணிப் பார்த்தா ஏழு நாள் தான் இருக்கும் அவங்களுக்கு எப்படி என்னைய அடையாளம் தெரியும் …. அப்ப யாரோ ஒரு சொந்தக்காரப் பொண்ணுதான் நான்… ”
“ஓ…. சாரி டி… நாலரை வருஷம் ஆச்சு உன்னைய நேர்ல பார்த்து , எவ்வளவு மாறிட்ட , அது மட்டுமில்லடி… இந்த தழும்பு …சாரி டி … நீ வேற ரொம்ப ஒல்லியா இருந்தியா , அதுதான் சட்டுனு உன்னையத் தெரியல … எப்படி பப்ளியா இருப்ப … அது மட்டுமா சேலை , லாங் ஹேர் …ஒரு வேளை நீ பேசியிருந்தாக்கூட எனக்குத் தெரிஞ்சிருக்கும். இந்தக் கன்னக்குழி மட்டும் இல்ல … நீ தான்னு இன்னும் நம்பிருக்க மாட்டேன்.” என வருத்தத்தோடு பேசியவளிடம் , மெல்லியப் புன்னகையோடு ,
“இது சின்னத் தழும்பு தான் இதுக்கே என்னையத் தெரியலங்கிற…..ஊருக்கு வந்ததிலருந்து உன் கூடப் பேசி பழகி , அதிகமா உன் கூட தான் இருந்தேன் , உனக்கே என்னை அடையாளம் தெரியலங்கிறப்போ , அவங்களுக்கு எப்படி டி தெரியும் ….”
“உங்கண்ணனுக்காகவா…. எனக்காகவா தெரியல … உங்கண்ணனுக்கு பதிலா நீ என்னை உயிர்ப் போட வச்சிருந்த …ஆனா ஒரு தடவையாவது வருவா எனக்கு மெசேஜ் பண்ணிருக்கலாமே….”
வருவிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே பதிலாக கிடைத்தது.
தன்னிடம் எதுவும் கேட்காதே என்று சொன்னப் பிறகு என்னக் கேட்டாலும் பதில் வராது என்பதை உணர்ந்த அனு , ஞாபகம் வந்தவளாக அவளைப் பார்த்து ,
“எங்க கல்யாணத்துக்கு முதல் நாள் என்னடி நடந்துச்சு , அந்த ரிதேஷ் கிட்ட என்னடி சொல்லி வச்ச … ”
“ம்…. உண்மையச் சொன்னேன் …” என வரு கிண்டல் செய்யவும் , முறைத்த தோழியிடம் ,
“நீ என்னக் கேட்டாலும் நான் சொல்லப்போறதில்ல …நீ போய் தூங்கு … ஒன்னு மட்டும் சொல்றேன். ” என்றவள் வித்யா முகத்தை கைகளில் ஏந்தி ,
“எங்கண்ணன் சின்ன வயசுலருந்து நான் என்னக் கேட்டாலும் வாங்கித் தருவார் … அவங்களுக்குனு எந்த ஆசையும் இருந்ததா தெரியலடி … யோசிச்சுப் பார்த்தப்போ தான் தெரிஞ்சது… உன்னையப் பார்த்த நாள்லருந்து மட்டும் தான் அவங்க அவங்களா இருந்திருக்காங்க…. அவங்க விரும்புற கிடார் கூட உன்னையப் பார்த்த பிறகுதான் தொட்டதே…. எங்கப்பாவையும் அண்ணனையும் நான் பிரிச்சுப் பார்த்ததே இல்லடி ….அப்படிப்பட்ட அண்ணன் எனக்காக உயிரையும் கொடுக்கத் தயாரா இருந்திருக்கார்னா பாரேன்….”
“வரூ….” என மிரண்டப் பார்வைப் பார்த்தவளை, மெல்லியப் புன்னகையோடு …
“அவர் உயிரே நீதானடி …. தங்கச்சிக்கு இப்படியாகிருச்சே … அவ எதிர்காலம் என்னவாகுமோனு நினைச்சு உயிருக்குயிரா காதலிச்ச உன்னையும் விட்டுத் தர நினைச்சாங்க … ” அனுவின் பூரித்த முகம் பார்த்து அவள் நெற்றியில் முத்தமிட்ட வரு ,
“நினைக்க தான் முடியும் … ஆனா நான் இருக்கும் போது முடியுமா … ” எனப் புன்னகையுடன் கூறியவள்,
“நீ எங்கண்ணன மட்டும் நினை …. நானும் உங்கண்ணனும் சந்தோஷமா இருப்போம். இனி எல்லாமே நல்லதா நடக்கும் … ஒரே ஒரு சத்தியம் பண்ணிக் கொடுடி….” என அனுவிடம் கெஞ்சலுடன் கேட்க ,
” என்ன” என முகம் பார்த்தவளிடம், “நான் யாருங்கிறத அவரா தெரிஞ்சிக்கிற வரை நீயா சொல்லக் கூடாது … ப்ளீஸ்” தன் வலக்கரம் நீட்டிய அமிர்தவர்ஷினியின் கெஞ்சிய விழிகளைப் பார்த்த அனுவித்யா தன் வலக்கரத்தை அதன் மேல் வைத்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். எழுந்த அனு ,
“எங்கண்ணா ரொம்ப அதிர்ஷ்டசாலி டி…. நீ கிடைக்க … ”
” நான் தான்டி அதிர்ஷ்டசாலி… நீ சொன்னதும் ஏன் எதுக்குனு கேள்வி கேட்காம உடனே என்னைய கல்யாணம் பண்ணிக்க ஒகே சொன்ன உங்கண்ணா மனசு யாருக்கு வரும் …. ”
“ம்ஹும் நாம அதிர்ஷ்டசாலிங்க … ” இருவரும் ஒரே நேரத்தில் சொல்லி ,
“சேம் பின்ச் ” என்பதையும் ஒன்றாக சொல்லி, ‘சாக்லேட், சாக்லேட் … ” என ,
“நீயே ஒரு சாக்லேட் தானடி … உனக்கெதுக்கு சாக்லேட் கேண்டி … ” என வரு கண் சிமிட்ட,
வியந்தப் பார்வைப் பார்த்த அனு , முகம் வாட ,
“எங்கள நீ தெரிஞ்சுகிட்ட …புரிஞ்சுகிட்ட அளவுக்கு உன்னையத் தெரியாம போயிருச்சே வரு…. ஐ ம்.. சாரி டி….”
“ஷ் …. பழசுப் பேசக் கூடாது…. இப்ப இந்த மொமன்ட் என்ஜாய் பண்ணுவோம்….”
சிறிது நேரம் புன்னகையோடு பழைய நாட்களை அசை போட்டு மன நிறைவோடு உறங்கச் சென்றனர்.