மழைத்துளி 20
சென்னை வீட்டிற்கு வந்த அமிர்தாவிற்கு அத்தனை வரவேற்பு , பரணி மருமகளைக் கண்டவர் கட்டிப்பிடித்துக் கொண்டார். அவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் தான் வரு தன் பேசும் சக்தியை இழந்தது தெரியும் . தெரிந்த உடன் தன் அம்மாவை மட்டுமல்லாது அண்ணனையும் ஒரு பிடி பிடித்து விட்டார். அவரால் அந்தச் செய்தியை தாங்கவே முடியவில்லை , தன் அண்ணன் மகள் தன்னைப்போல அனைவரிடமும் கலகலப்பாக பேசுவாள் , என அனைவரிடமும் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் அவருக்கு அது பேரிடியே .
இது அறுவடைக்காலம் என்பதால் விக்ரமின் தாத்தாவும் பாட்டியும் அவர்கள் பூர்வீக கிராமத்திற்குச் சென்று விட்டார்கள். மகன்களும் பேரனும் தொழிலை உலகளவில் கொண்டு சென்றாலும் விவசாயம் அவர் உயிர்,எனவே வீட்டில் விக்ரமின் அப்பா, அம்மா, சித்தப்பா சித்தி மட்டுமே இருந்தனர்.
விக்ரமின் அறைக்கு அழைத்துச் சென்ற பரணி அவளுக்குத் தேவையானதை எடுத்துக் கொடுத்து விட்டு வந்தார். திருமணம் முடிந்த அன்றும் இந்த அறைக்குத் தான் அழைத்து வந்தார்கள் , ஆனால் பட்டுப்புடவையை மாற்றிவிட்டு கிளம்பவே நேரம் சரியாக இருக்க, இன்று அறையை நிதானமாக நோட்டமிட ஆரம்பித்தாள்.
எத்தனை கட்டிடங்களை வடிவமைக்கிறான் , அவனறை மட்டும் சாதாரணமாகவா இருக்கும் , கலைநயத்தோடு அலங்கரிக்கப்பட்டிருந்த அறையின் சுவர்களில் ஆங்காங்கே அவன் சிரித்துக் கொண்டிருக்க , லதாவோடும் , சங்கீதா , வித்யா என குடும்பத்தோடும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நிறையவே சுவற்றை அலங்கரித்தன.
அவர்கள் கிளம்பியது மாலை நேரம் என்பதால் , அவன் அங்கு இரவு பத்து பதினொரு மணி போல் தான் இறங்குவான் என்பதால் குளித்து உடை மாற்றி டைனிங் ஹால் வந்தவள் முன்பு ஏகப்பட்ட பதார்த்தங்கள்.
“அத்தை…” என செல்லம் கொஞ்சியவளிடம் லதா ,
“அமிர்தா மா… நீ எப்படி இருந்த, இப்ப பாரு குச்சி போல கை, உடம்பு எல்லாம் , நான் பாப்பா கிட்ட கேட்டுட்டேன் , உனக்கு என்ன சாப்பாடு கொடுக்கணும்னு… நீ சாப்பிட்டுட்டு போய் நல்லா தூங்கு. உன்னோட இன்டர்ன்ஷிப்ப இங்க கன்டினியூ பண்ண உங்க காலேஜ்ல பர்மிஷன் கேட்டாச்சு , நாளையிலருந்து உங்க மாமாங்க கூடப் போ …. ஈவ்னிங் ஸ்பீச் தெரபிஸ்ட் கிட்ட போக எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு மா. “அனைத்திற்கும் தலையாட்டி உணவருந்தி விட்டுச் சென்றவள் அவனது ஃபோனுக்காகவே உறங்காமல் அமர்ந்திருந்தாள்.
அறைக்குள் உறங்கச் செல்ல , லதாவின் மொபைல் அழைக்கவும் ,
“ராஜா … இறங்கிட்டியா சந்தோஷம்…. மருமககிட்ட சொல்லிட்டியா….”
“இல்ல மா இனி தான் பேசணும் … ”
” என்ன இனிதான் பேசணும் , கைல போன வச்சுட்டே ரொம்ப நேரம் தவிச்சுட்டு இருக்கிறா… அவளுக்கு முதல்ல பேசு… நீயும் உங்கப்பா மாதிரி இருக்காதப்பா….அம்மாவுக்கு உன்னைப் பத்தி தெரியும் … உன்னைய எனக்குத் தெரியும் … இனி எதுனாலும் முதல் உரிமை அவளுக்குத்தான் தரணும் … அம்மா அம்மானு என்னைய சொல்லிட்டே இருக்க கூடாது. ”
“ம்மா…. புரியுது எப்பவும் எங்கப் போனாலும் வந்தாலும் உங்க கிட்ட தான் முதல்ல தகவல் தருவேன் … அந்தப் பழக்கம் தான்…. இப்ப முதல்ல உங்கள கூப்பிட காரணம் அது மட்டுமில்ல….” என சிரித்தவனிடம் ,
“அந்தப் பழக்கத்த மாத்து … எனக்கு என் பொண்ணு மனசு எவ்வளவு முக்கியமோ , அதே அளவு என் மருமக மனசும் முக்கியம் …ஏன்னா பொண்ணுங்க மனசு பொண்ணுங்களுக்குத் தான் தெரியும்…” மனைவி மகனின் உரையாடல்களை கேட்டுக் கொண்டே அமர்ந்திருந்தார் செல்வா.
“சரி வேற என்னப்பா காரணம் இப்படி சிரிக்கிற … சொல்லு எனக்கும் சிரிப்பு வருதா பார்க்கிறேன்.” என்றவாறே கணவர் அருகில் அமர்ந்த லதாவிடம் ,
“அது மா… அவளுக்கு முதல்ல பேசினா … உடனே வச்சிட்டு உங்களுக்குப் பேசணும் … இப்ப அப்படி இல்லயே உங்களுக்கு நல்ல படியா வந்துட்டேன்னு தகவல் சொல்லிட்டேனா … அடுத்து உங்க மருமககிட்ட ரொம்ப நேரம் பேசலாம்….. அம்மாவுக்கு பேசணுமே அப்படிங்கிற எண்ணம் இல்லாம …. எப்பூடி…. என் ஐடியா ….” என்றுச் சிரிக்க , கேட்ட லதாவிற்கும் சிரிப்பு வந்து விட ,
“நீ இப்பதான் ப்பா என் பையன்… ” என்று சிரித்தவர் , சட்டென்று மென்மையான குரலில் , “ராஜா அம்மாவுக்காக அவள ஏத்துக்கலயே… நீ பேசுறதுலருந்து எனக்கும் புரியுது …. இருந்தாலும்…..” என இழுக்க ,
“ம்மா…. எந்த அம்மாவும் தன் பிள்ளைக்கு கஷ்டம் தருவாங்களா….. அதுவும் என் அம்மா உலகத்திலயே சிறந்த அம்மா பட்டம் தரத் தகுதியானவங்க ….ம்மா அவள இங்க கூட்டிட்டு வர முடியலயேனு ரொம்ப ஃபீல் பண்றேன்னா …. என் மனசு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன் ….. லவ் யூ மா…. ”
மகனின் பேச்சில் உணர்ச்சிவசப்பட்டவர் , ” டூடூ மை சன்… அப்படியே என் மருமககிட்ட சொல்லு… ஓகே குட் னைட்.” என வைத்து விட்டுப் படுக்க , மனைவி புறம் திரும்பிய செல்வா ,
“ஏன் லதா …. நானும் பார்க்கிறேன் … அன்னைக்கும் இப்படித்தான் உங்கப்பா மாதிரி இருக்காதனு சொல்ற , இப்பவும் அப்படித்தான் சொல்ற … அப்படி என்ன உன் எதிர்பார்ப்புகள நான் பூர்த்தி பண்ணாம வச்சிருக்கேன் .. எனக்குத் தெரிஞ்சு … உனக்கு ஒரு குறையும் வைக்கலனு நினைச்சுட்டு இருக்கிறேன்…”
“நீங்க எப்ப குறை வச்சீங்கனு நான் சொன்னேன் ”
“அப்ப நீ ஆதிக்கிட்ட பேசினதுக்கு என்ன அர்த்தம் … ”
” என்ன அர்த்தம் உங்கள மாதிரி இருக்க வேண்டாம்னு அர்த்தம் …” என சிரிக்க ,
புரியாமல் விழித்தவரிடம் ,
“கல்யாணம் ஆனப் புதுசுல நீங்க தனியா எங்கேயாவது வெளியக் கூப்பிட்டுப் போவீங்களானு ஆசைப்படுவேன்…. நீங்க கும்பலா ஃபேமிலி டூர் கூட்டிட்டுப் போவீங்க , எனக்கு மட்டும் பூ வாங்கித் தருவீங்களானு பார்ப்பேன் , சாமிக்கு , அம்மாக்கு , பரணிக்குனு பெரிய பூ பண்டல்தான் வரும் …. எனக்குப் பிடிச்ச ஸ்வீட் கட்டாயம் வாங்கிட்டு வருவீங்க … கூடவே வீட்ல எல்லாருக்கும் அவங்கவங்களுக்குப் பிடிச்ச ஸ்வீட்ஸ் …. அப்புறம் நம்ம கல்யாணம் ஆன டைம்ல லேன்ட் லைன் ஃபோன் தான் , நீங்க வெளியூர் போய் எப்ப ஃபோன் பண்ணுவீங்கனு வெய்ட் பண்ணுவேன் , நீங்க நான் எடுத்தாக்கூட அம்மாக்கிட்ட முதல்ல விஷயத்தை சொல்லிட்டுத்தான் என்கிட்ட சொல்வீங்க…. ம்… இப்படியே சொல்லிட்டுப் போகலாம்…. அது மாதிரி எல்லாம் என் மகளும் ,மருமகளும் ஏங்கக் கூடாதுனு சொல்ல வாறேன்….”
“இதெல்லாம் குறைதானே… இத்தனை நாளா இப்படி மனசுல வருத்தம் வச்சிருந்தியா … ”
“நான் எப்போ வருத்தப்பட்டேன்ங்க…. நீங்க இப்படித்தான்னு தெரியும் … கூட்டுக் குடும்பத்துல தனியா எனக்குனு பார்க்கிறதெல்லாம் சாத்தியம் இல்லனும் தெரியும் ….. எனக்குனு தனியா செய்ய ஆசைப்பட்டாலும் முடியாதுங்கிற நிலைதானே…. ஆனா நீங்க செய்ற ஒவ்வொரு விஷயத்துலயும் என் நியாபகம் இருக்கப் போய் தானே இதெல்லாம் செய்வீங்க…. அப்பக் கூட அத்தைக் கிட்ட பேச்சு வாங்கி அசடு வழிவிங்கப் பாருங்க….” எனப் புன்னகைத்த லதா,
” இப்படி குடும்பத்து மேலபாசம் வச்சிருக்கிற கணவன் எனக்கு கிடைச்ச வரம்ங்க … சரி தூங்குங்க ஸ்கூல்ல பிளஸ் டூ பிள்ளைங்க கோச்சிங் கிளாஸ் நடக்குது…. ஒரு வாரம் என்னனு பார்க்கனும் … அப்புறம் பொங்கல் வேலை இருக்கு” என்ற லதா படுத்து உறங்கி விட்டார்.
செல்வா தான் குழம்பிப் போய் நின்றார் … ” இவ என்னைய பாராட்டுறாளா…. திட்டுறாளா…. இதுக்குப் பேர்தான் வஞ்சப்புகழ்ச்சியா… என்னவோ … தூத்துக்குடியின் மிகப் பெரிய தொழிலதிபரின் ஒற்றை மகள் … இப்போது பெற்றவர்கள் உயிரோடும் இல்லை …. திருமணம் ஆன நாளிலிருந்த ஒரு நாள் ஒரு பொழுதும் முகம் சுழித்தது இல்லை … இன்று… “புன்னகைத்துக் கொண்டவர் அவர் நெற்றியை மிருதுவாக தடவி விட , விழித்தவர் ,
“என்னங்க எதுவும் வேணுமா … ”
” எதுவும் வேணும்னா தான் உன்னையத் தொடனுமா…. நீ தூங்கு….” என்றவர் மனைவி அருகில் படுத்துக் கொண்டார்.
அன்னையிடம் பேசிவிட்டு வைத்தவன் மனைவிக்கு அழைக்க , இவன் அழைப்பிற்காகவே காத்திருந்தவள் வீடியோவை ஆன் செய்ய , அவனுக்கான அறையைத் திறந்துக் கொண்டே,
“ஹாய் டியர் … சாப்டியா … படுத்துட்டியா … ”
“கண்களால் பதில் சொல்லியவள் , நீங்க இப்போதான் வாறீங்களா , அத்தைக் கிட்ட பேசியாச்சா….”
ஃபோனை டேபிள் மேல் வைத்துவிட்டு அம்மாவிடம் பேசியதைச் சொன்னவன் , சட்டை பட்டன்களை கழட்ட ஆரம்பிக்க ,
“ஸ்டாப் … ஸ்டாப்… .என்ன செய்றீங்க….”
“இப்ப தானே வந்தேன் குளிக்கப் போறேன்…. ”
என இயல்பாகச் சொன்னவன் , அப்போதுதான் கவனித்தான் , அவன் முகம் சிவப்பதையும் , விழிகள் அலை பாய்வதையும் ,சடுதியில் அவள் சிவப்பிற்கு காரணம் அறிந்தவன் , அவளிடம் விளையாடிப் பார்க்க விரும்பி சட்டையை முழுவதுமாக கழற்றி ,
“ரிது … ஸ்கூல் … காலேஜ்ல நல்லா படிப்பியா … “இது என்னக் கேள்வி ‘ எனப் புரியாமல் பார்த்தவள் ,
“நான் நல்லா படிக்கிற ஸ்டுன்ட்… ” என ,
“ஓ…அப்ப என்ன பாடம் சொல்லித் தந்தாலும் உடனேக் கத்துக்குவ….”என்றவாறே அவன் பனியனையும் கழட்ட … ”
“ஷ்யர்…” என்றவள் அவனது சட்டையில்லா உடலைக் கண்டவள் நாணம் கொண்டு, முகத்தை வேறு புறம் திருப்ப ,
” என்ன நீ கல்யாண பாடம் சொல்லிக் கொடுக்கலாம்னுப் பார்த்தா முகத்தை திரும்பிக்கிற … பேசிக் தான ஸ்டார்ட் பண்ணினேன்…. இதுக்கே இப்படினா … அப்புறம் எப்படிப் படிப்ப…” எனக் கேட்க , வருவின் குறும்பு திரும்ப , கை முஷ்டியை மடக்கி அவனை அடிப்பது போல் நாக்கை துருத்தி செய்தவள், அவனைப் பார்க்கவே நாணம் கொண்டு ஃபோனைக் கட் செய்து, மெசேஜ் செய்தாள் .