மழைத்துளி 21
சென்னை விமான நிலையத்திலிருந்து வாடகைக் காரை எடுத்த ஆதி அவர்களது வீடு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான். கிளம்பும்போது நேராக டெல்லிச் சென்று அங்கு தங்கி அரசாங்க வேலைகளை முடித்துக் கொண்டு இரண்டு நாள்களில் சென்னை வருவதாக சொல்லியிருந்தான்.
ஆனால் இந்தியா வர முடிவெடுத்தவனுக்கு மனைவியைக் காணப் பேராவல் பொங்கவே தன்னுடன் வந்தவர்களை தில்லி அனுப்பி விட்டு சென்னைக்கு வந்து விட்டான். வழக்கம் போல் யாரிடமும் தெரிவிக்காமல் தான். அதுவும் அன்று புது வருட வாழ்த்துச் சொல்லிய போது முகம் காட்டி பேசியதோடு சரி. அதன் பிறகு அவள் குரல் வழிப் பேச்சு தான். இப்போது சத்தம் கொஞ்சம் அதிகமே , இன்னும் பயிற்சியும் முயற்சியும் எடுத்தாளென்றால் சாதாரணமாக பேசத் துவங்கி விடுவாள்.
அதனாலயே அவளைக் கட்டாயப்படுத்தவில்லை.முகம் காட்டிப் பேசச் சொன்னால் முடியாது என்று விட்டாள். அவனைக் காணும் ஏக்கம் குரலிலேயே வெளிப்பட அவனால் இன்னும் இரு நாட்கள் பொறுத்திருக்க இயலவில்லை. எனவே இந்த நேரடிப் பயணம் அதோடு திருமணமாகி தாம்பத்ய வாழ்வை துவங்க நினைக்கும் இளைஞனின் நிலையைச் சொல்லவா வேண்டும்.
அவர்களது வீட்டை நெருங்கி காரை அனுப்பி விட்டவன் மனைவிக்கு அழைத்து விட்டான். கையிலயே வைத்திருந்தவள் உடனேயே எடுத்து விட்டாள்.
“இந்தியா வந்துட்டீங்களா…..” எனக் கேட்டக் குரலில் அவ்வளவு துள்ளல். அதோடு எப்போதும் பேசும் குரலை விட அதிக சத்தம் மட்டுமல்ல , சாதாரண நபர் பேசுவது போலவே … ”
” வந்துட்டேன்…. எப்ப உன்னைப் பார்ப்போம்னு இருக்கு ….. யு நோ… கல்யாணமாகி இப்படி பிரம்மச்சாரியா இருக்கிறது ரொம்பக் கொடுமை … ”
” உங்களை யார் அப்படி இருக்கச் சொன்னா … ” என சிரிக்க ,
“ஹேய் … இவ்வளவுப் பேசுவியா நீ…. இரு நேர்ல வாரேன்…. ரொம்ப அழகா இருக்கு உன் சிரிப்பு … ”
” வாங்க … வாங்க … ” என வைத்து விட்டாள்.அதற்குள் அவர்கள் செக்யூரிட்டி அருகில் வந்தவர் இவனது பைகளை எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றார். மணி இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால் ஹாலில் செல்வாவும் இன்பாவும் மட்டும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஆதி நுழையவும் பார்த்த இருவரும் மகிழ்ச்சியாக அவனை வரவேற்க ,
” அண்ணா … சித்தப்பா…. மினிஸ்டர் கிட்ட பேசிட்டேன், சைன் வாங்கிட்டு வாரேன்னு சொன்ன அவர் டியர் சன் விக்ரமாதித்யன பார்த்தீங்களா…. “என இன்பராஜ் கிண்டல் செய்ய ,
ஆண்களுக்கு அதும் இளம் ஆடவர் கொள்ளும் வெட்கம் அழகோ அழகுதான் என்று சொல்வது போல் தான் இருந்தது விக்ரமின் முகம் , சிரித்துக் கொண்டே இன்பா அருகில் அமர்ந்து,
“சித்தப்பா…. உங்களை எல்லாம் பார்த்துட்டு நாளைக்குப் போகலாம்னு வந்தேன் …” எனவும் ,
“அண்ணா என்னவோ பயந்த , ஆதி இப்படி வேலை வேலைனே இருந்துருவானோனு… இப்ப பார் நம்மள பார்த்துட்டுப் போக வந்தானாம்…..” எனச் சத்தமாக சிரிக்க , செல்வாவும் புன்னகைத்தவர் ,
“ஆதி நான் வேணும்னா நாளைக்கு டெல்லிப் போறேன். இன்பா இங்கப் பார்க்கட்டும் …நீ மருமகக் கூட ஒரு நாலு நாள் இருந்துட்டு பொங்கலுக்கு திரும்ப வா ….” என்றவர் , தம்பியை மகனிடம் பேசுமாறு சைகை செய்து விட்டுக் கிளம்பினார். அவருக்குத் தெரியும் இன்பாவும் ஆதியும் நண்பர்கள் போல் பேசிக் கொள்வார்கள் என்பதால் அவர்களுக்கு தனிமையில் பேச சந்தர்ப்பம் தந்து , விட்டுச் செல்ல முயல ,
“இல்லப்பா காலைல ஒன்பது மணி பிளைட் நான் கிளம்பிடுவேன்…” என , அவன் முகத்தைப் பார்த்து விட்டு இன்பாவைப் பார்த்தவர் ,
‘பேசி முடிவெடுங்க’ என்று விட்டு அறைக்குச் சென்றார்.
உடனேயே எழுந்தவன் , “எங்க சித்தப்பா அம்மா சித்தியெல்லாம் அதுக்குள்ளப் படுத்துட்டாங்களா “என்றவாறே மாடியேறப் போக ,
“மை சன்….அவங்க எல்லாம் பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னயே ஊருக்கு போயாச்சு , மகன் ,மகள் ரெண்டு பேருக்கும் தலைப்பொங்கல் அங்க தான் ….”
சட்டென்று திரும்பியவன் , “அப்போ … ” என ,
“நீ இப்படி சர்பிரைஸ் தாறேன் தாறேன்னு சொல்லாம கொள்ளாம வந்தா எப்படி…. நீ வந்ததும் கிளம்பலாம்னு இருந்தோம் , ஆனா கனி அத்தை ரொம்ப முடியாம இருக்கவும் சீக்கிரம் கிளம்பிட்டாங்க.. காலைல தான் கிளம்பினாங்க… அநேகமா இப்ப ரீச் ஆகிருப்பாங்க … மருமக சொல்லலயா….”
ஏமாற்றத்தோடு வந்து அவரருகில் அமர்ந்தவன் ,
“உங்க மாமியார் திடீர் திடீர்னு ஒரு பிளான் போடுறாங்களே சித்தப்பா…. நீங்க ஒன்னும் சொல்ல மாட்டிங்களா…. தாத்தா அதுக்கு மேல ….”
அவன் தோள் தட்டியவர் பலமாக சிரித்து , “என் மாமியார் பிளானாலதான் உனக்கு கல்யாணமே ஆச்சு … இல்ல இன்னும் ரெண்டு பிராஜக்ட் முடிச்சதும் தான் கல்யாணம்னு சொல்லியிருப்ப ….”
“அது தான் சொல்றேன்…. இப்ப பாருங்க அவள பார்க்கக் கூட முடியாம ….ம்ச்… போங்க சித்தப்பா…” என மெதுவாக எழுந்து அறைக்குச் செல்ல முயன்றவனை ,
“அது தான் அண்ணன் சொல்றாரே …நீ வேணும்னா நாளைக்கே ஊருக்கு கிளம்பு…. ”
“யோசிக்கிறேன் …” என்றவன் அவனறைக்குள் புக ,அறையே மாறியிருந்தது , ஆனாலும் அவனக்குப் பிடித்த விதமாக … இருவரும் சமீபத்தில் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றைப் ஆளுயரத்திற்கு பெரிதாக்கி இருந்தாள்.
ஏனோ அறையெங்கும் அவள் வாசம் வீசுவது போல் உணர , புகைப்படத்தின் மீது சாய்ந்து நின்றுக் கொண்டான்.
அவளைக் காணும் ஆவலோடு வந்தவனுக்கு மனம் வெறுமையாக உணர்ந்தது.
‘தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இளமையிலே …’
அதே நேரம் ஊரில் நேராக கனிப் பாட்டியைப் பார்க்க வந்தவர்கள் இருந்துப் பேசிவிட்டுச் செல்ல முயல , வித்யாவைக் காட்டிய கனி பாட்டி ,
“சொர்ணா … இவ இப்ப உன் மவ இல்ல , இந்த வீட்டு மருமவ அவள விட்டுட்டு நீங்க அங்க போங்க , அப்படியே உங்க வீட்டு மருமவள அழைச்சிட்டுப் போங்க , என் ஒரே பேத்திக்கு இந்த ஊரே மெச்ச (மெச்சுதல்) பொங்கப்படி (பொங்கல் சீர்) எடுத்துட்டு வாறேன்.” என்றவர் வருவை அருகமர்த்தி உச்சி முகர்ந்து , கண்ணீரோடு….
” என் ராசாத்தி என்னால தான் உன் பேச்சுப் போச்சுனு உங்கப்பன் எங்கிட்ட சண்டப் போட்டு இத்தனை வருஷமா எட்டிக் கூட பாக்கல….. தாயி கோழி மிதிச்சு குஞ்சுக்கு என்னாகிரும் …. நீ நல்லாருக்கணும் என் வீட்டு ராஜகுமாரி போற இடமும் ராணியாட்டம் இருக்கனும்னு தான நான் சொன்னேன் … என் நேரம் என் வாய் என்ன என்னவோ சொல்லி என்னவோ ஆகிப் போச்சு …. எங்கண்ணன் குலமே உன்னால தான் தழைக்கணும்னு விதி இருக்கும் போது மாத்த முடியுமா….. இப்ப சொல்றேன் நான் கும்பிடுற நம்ம ஊரு முத்தாலம்மன் உன்ன சீக்கிரமே பேச வச்சிருவா….அதப் பார்த்துட்டுத்தான் இந்தக் உடம்பு கட்டைலப் போகும் …..” என மூச்சிரைக்க ஆரம்பிக்க , அனைவரும் அவரைச் சுற்றி சமாதானம் செய்ய ,
அழுத வரு , “பாட்டி நடந்த எதுக்கும் நீங்க காரணமில்ல…. சீக்கிரமே பேசுவேன்…. நீங்க அழாதீங்க … ” இப்படி எல்லோரும் சமாதானமாகி கிளம்ப இருக்க , லதாவும் வருவும் அவர்கள் வீட்டிற்கு கிளம்பினர். ராணியோடு பரணியும் வித்யாவும் தங்கிக் கொண்டனர்.
நான்கு மாதங்களுக்கு முன்பாட்டியைப் பார்க்க நான்கு வருடங்களுக்குப் பின் வந்த வரு இது போல் ஒரு இரவில் வந்தாலும் , அவர் உடல் நிலை மிகவும் பலகீனமாக இருந்தால் கட்டாயப்படுத்தி அன்றிரவே திருநெல்வேலியில் விஸ்வனாதனின் நண்பரின் மருத்துவமனையில் சேர்த்து விட , திருநெல்வேலியில் இவர்களுக்கு இருந்த ஒரு வீட்டில் தங்கிக் கொண்டார்கள். அதன் பிறகு அமெரிக்காவில் மகளின் பிரசவத்திற்குச் சென்று இருந்த பரணியும் வந்து விட அவள் அங்கிருந்தே கோவைக்கு கிளம்பிவிட்டாள்.
அதன் பிறகு இன்று தான் அந்தக் கிராமத்திற்கு வருகிறாள். மனதிற்கு இதம் தரும் நிகழ்வுகளும் அங்கு தான் நடந்தது. வாழ்வில் நிகழ்ந்திருக்கவே கூடாது என்ற நிகழ்வுகளும் அங்கு தான் நடந்தது.
விக்ரமின் தாத்தா பாட்டி இவர்கள் வருகைக்காக காத்திருந்தவர்கள் வரு காரை விட்டு இறங்கியதும் ஆரத்தி எடுத்து தான் உள்ளே அழைத்துப் போனார்கள்.
” என் பேத்தி அங்க வந்து இறங்கவுமே இங்க பேச்சு ஆரம்பிச்சுட்டு , பெரியவர் வீட்டு மருமக அழகா இருக்கா , அந்த சொத்து இந்த சொத்துனு அத்தனைக்கும் வாரிசுனு வேறச் சொல்றாளுங்க ….இன்னைக்கு மட்டுமில்ல , தினமும் சூடம் சுத்திப் போடணும் போல …..” என்றவாறே அவளை நெட்டி முறித்தார் சங்கர வள்ளி.
முன்பு தன் நாத்தனாரின் பேத்தி என்று மட்டுமே பார்த்தவருக்கு இன்று வருவைக் காணும் பார்வையே வேறு தான். உள்ளே வந்தவளுக்கு தயாரித்து வைத்திருந்த பாலை கப்பில் ஊற்றி அருகிலேயே அமர்ந்து குடிக்க வைத்து பேரனின் அறைக்கு அழைத்துச் சென்று விட்டார்.
லதாவிற்கு உள்ளுக்குள் சிரிப்பு பொங்கியது , மாமியாராக ஒரு நாளும் அவர் இப்படி அவரையோ பரணியையோ கவனித்ததில்லை , அது போலவே தன் வீட்டு பெண் பிள்ளைகளையும் , ஆனால் பேரனுக்கு எப்போதுமே தனி கவனிப்பு தான் … பேரன் மனைவிக்கு அதைவிட அதிகமாகவே ……
அந்த அறையில் கால் வைத்ததுமே வருவின் உடலில் ஒரு சிலிர்ப்பு , ஒரு வித பரவசம் , அதே அறை தான் அதே கட்டில் தான் , என்ன இன்றைக்கு ஏற்றாற்போல் இன்னும் சில மாற்றங்களுடன் அறை பளபளத்தது.
அந்த மெத்தையில் அமரவும் கணவனைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவல் பெருக , ஒரு வாரமாக முகம் காட்டாதவள் வீடியோ அழைப்பை மேற்கொண்டாள்.
மனைவியின் அழைப்பை ஏற்றவன் அதை ஒரு டேபிளின் மீது வைத்து விட்டு வந்து கைகட்டி நின்றுக் கொண்டான்.
பார்த்த வருவிற்கு கை கால்கள் உதறல் எடுக்க கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்துவிட்டது.
வாய் பேசும் வார்த்தையெல்லாம்
கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையைத்தான்
கண்ணீரும் சொன்னதோ…..
அவனைக் கண்டதும் வாய் திறந்து நிறையப் பேச வேண்டும் என்று நினைத்தவள் தான் …. ஆனால் இந்த நிலை , ஆம்.. சென்னையில் சமீபத்தில் அவள் போட்டுவிட்ட புகைப்படத்தில் நிழலை மறைத்து நிஜத்தில் கைகளை கட்டி , விழிகளில் அவளைக் காண வந்த ஏக்கங்களையும் தாபங்களையும் சுமந்துக் கொண்டு நின்றவனைப் பார்த்து எப்படி பேச்சு வரும்.
அருகில் கிடந்த தலையணையை எடுத்து அவனுக்கு செய்கையாலயே அது நீ தான் என்றவள் , அதனைக் கட்டிப்பிடித்து முத்தம் வைத்து , அழுதவாறே அவனைப் பார்த்துப் படுத்துக் கொண்டாள்.
அவளும் தன்னை எந்தளவுத் தேடுகிறாள் என்பதை அந்தக் கண்ணீரும் செய்கையுமே உணர்த்த ,ஆதியாலும் பேச முடியவில்லை , அவளின் நிழல் படத்திற்கு முத்தமிட்டவன் , கண்களை மூடித் திறந்து செய்கையாலயே உறங்கு என்றான்.
நெடுநேரம் விழியகற்றாது அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள் எப்போது கண்ணயர்ந்தாளோ , கதவு தட்டப்படும் சத்தத்தில் தான் விழித்தாள்.