தேன் துளி 27
தனது அறையில் ஆளுயரத்திற்கு இருந்த மனைவியின் புகைப்படம் முன்பு கைகட்டி நின்று கொண்ட விஸ்வனாதன்,
“ஷர்மி …. உன் பொண்ணு சொன்னத கேட்டியா…. இதுக்கு மேல ஒரு பெண்ணப் பெத்த தகப்பனுக்கு என்ன சந்தோஷம் இருக்க முடியும் .நீ போன உடனேயே நானும் வந்துருவேன்னு பயந்து தான … அவள அப்படி ஒரு நிலையில விட்டுட்டுப் போன …. எப்படியோ போராடி நம்ம இளவரசிய மீட்டு இப்ப ஒரு ராஜகுமாரன் கையிலயும் பிடிச்சுக் கொடுத்துட்டேன். இனியாவது உன் கூட அழைச்சிக்கலாம் இல்லையா…. பார்ப்போம் இன்னும் எத்தனை நாள் என்னை விட்டு வச்சிருக்கேனு ….” மனைவியிடம் மனதோடு பேசியவர் .. மகளின் மலர்ந்த முகத்தை நினைத்துக் கொண்டே உறங்கிப் போனார்.
அவரது இந்த நிம்மதிக்கு காரணம் இல்லாமல் இல்லை. அனைவர் முன்னும் ஊட்டிக்கு போய் வருகிறேன் என்ற மகளின் புன்னகை முகம் அவருள் பல கேள்விகளை எழுப்ப , விக்ரமிடம் ,
“சரி மாப்பிள்ளை ” என்று விட்டு அறைக்கு வந்து விட்டார். மகளின் புன்னகையால் எதுவும் சொல்ல இயலவில்லை.பின்னோடு வந்த வரு, மெத்தையில் இரு கையூன்றி தரையைப் பார்த்து சிந்தித்துக் கொண்டிருந்த தந்தையின் வருத்தம் போக்கும் பொருட்டு அருகில் அமர்ந்து அவர் கையினை பிடித்துக் கொண்டவள் , அவர் தோளில் சாய்ந்து ,
“ப்பா… அம்மாவுக்கு உங்கள எவ்வளவு பிடிக்கும் …. ”
” சொல்லத் தெரியலயே மா…. ஆனா அவளுக்கு என்னைப் பிடிக்கும்னு சொல்ற அளவை விட , எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும் …. ” எனச் சிரிக்க ,
“ம்….. நீங்க அம்மாவோட பதினேழு வருஷம் வாழ்ந்து இந்தப் பதிலை சொல்றீங்க … ஆனா உங்க மருமகன் இந்த ரெண்டு மாசத்துலயே இந்த பதிலை சொல்லுவாங்க ….” என்று தலை சாய்த்துக் கண் சிமிட்ட , மகளின் இந்தக் கண் சிமிட்டி சிரிக்கும் சிரிப்பை நெடு நாட்களுக்கு பின்பு பார்த்து ரசித்தவரிடத்தில் , இப்ப பாருங்க என்றவள்,
தன் மொபைலிலிருந்து கணவனுக்கு அழைக்க ,
“ரிது இது என்ன உனக்காக இங்க வெய்ட் பண்ணிட்டு இருந்தா நீ வீட்டுக்குள்ள இருந்துட்டே … ஃபோன் பண்ற … வெரி பேட் வெரி பேட்…. நம்ம வீட்ல இப்படி ரூமுக்குள்ள நீ இருக்கும் போது நான் கீழ எல்லாருகிட்டயும் பேசிட்டு இருப்பேன்… இப்ப புரியுது உன் ஃபீலிங்க்ஸ் …… “மெல்லியப் புன்னகையோடு ,
“ஓ.. அப்படிங்களா …. சரி இப்ப ஒரு கொஸ்டினுக்கு பதில் சொல்லுங்க … நல்லா சத்தமா சொல்லணும் ஒகே ….”
“நான் இப்ப இருக்கிற நிலைமைல பள்ளிக்கூட பாடங்கள்ல எது கேட்டாலும் பதில் தெரியாது….. பள்ளியறைப் பாடத்துல எதுவும் சந்தேகம் இருந்தா கேளு ….உடனே சொல்றேன்.. மை டியர் ….”
நாதனுக்கு முதுகு காட்டி தான் பேசிக் கொண்டிருந்தாள்… அதனால் முகச் சிவப்பை பார்க்க வாய்ப்பில்லைதான் … இருந்தாலும் மறைக்க முயன்று ,
“விக்….கீ… ” என்றவள் , ” இப்ப கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க , புஜ்ஜூ கேட்கிறார் ,மாமாவ அத்தைக்கு … எவ்வளவு பிடிக்கும் …. ஸ்பீக்கர்ல போடுறேன்… சொல்லுங்க” என்றவள் ஸ்பீக்கரில் போட ,
“இன்னும் உன் மருமகன் தூங்கலயா…. சரி சொல்றேன் கேட்டுக்கோங்க மருமகனே … உங்கத்தைக்கு என்னை எவ்வளவு பிடிக்கும் தெரியாது….. ஆனா உங்கத்தை பிடித்தத்துக்கு மேலேயே… எனக்கு அவங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் …. ” எனவும் சட்டென்று ஸ்பீக்கரை எடுத்துக் காதில் வைக்க ,
“அவள ரூமுக்கு வரச் சொல்லுங்க எவ்வளவு பிடிக்கும்னு செய்கைல காட்டறேன்…. ”
“ம்… ம்…. வாரேன் வாரேன்….” என்றவள் . அணைத்து வைத்து விட்டு விஸ்வனாதன் அருகில் வந்தாள்.
மருமகனின் நேரடி பதிலைக் கேட்ட விஸ்வனாதனின் அருகில் சென்று ,
“இப்பத் தெரியுதாப்பா … உங்களப் போலவே அவங்களும் என்னை ரொம்ப நல்லாப் பார்த்துக்கிறாங்க… கன்னியாகுமரி பிராஜக்ட் முடிச்சிட்டுத்தான் சென்னை வரணும்னு இருந்தவங்க.. எனக்காக …எனக்காக.. மட்டுமே சீக்கிரமாவே வந்துட்டாங்க … எனக்காக அவங்க அவ்வளவு செய்யும்போது , அவங்க ஆசைப்படுற இந்த டிரிப்ப எப்படிப்பா வேண்டாம் சொல்வேன்.… அவங்களுக்கு தெரிஞ்சா வேண்டாம் சொல்லிடுவாங்க….”
மகளின் நெற்றியில் இதழ் பதித்தவர் , அவள் தலைமேல் ஆசிர்வதிப்பது போல் செய்து ,
“சந்தோஷமா இருமா…மருமகன காக்க வைக்காத …. ஊட்டிக்கு கிளம்ப தயார் ஆகுமா… உங்கம்மா எப்பவும் உன் கூட தான் இருக்கான்றத நிரூபிச்சிட்டா…. ”
தந்தையிடம் புன்னகையுடன் விடைபெற்று வெளியேறப் போனவள் , … “அது இப்ப நிரூபிக்கலப்ப எப்பவோ என் விக்கி மூலமா நிரூபிச்சிட்டாங்க ….” எண்ணமிடும் போதே ….
“அப்பா இப்ப ஒரு டாக்டரா உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன் … பதில் சொல்லுவியாமா…. ”
“என்னப்பா … ”
“உன்னோட குரல்… இந்த குரல் இப்படி ஒரு மாச பயிற்சிக்குள்ள திரும்ப வர வாய்ப்பே இல்ல…. பல வருஷ பயிற்சியும் முயற்சியும் இல்லாம இது சாத்தியம் இல்ல மா…. ஊர்லயே கேட்டேன் …நீ சரியா பதில் சொல்லல .. ஆனா இப்ப டாக்டரா இல்லாம ஒரு தகப்பனா எனக்கு ஒரு விஷயம் புரியுது…..” என அவளைப் பார்க்க , தந்தையின் பார்வையை சந்திக்க முடியாமல் தலை கவிழ்ந்து நின்றவளிடம் ,
“நீ பேச முயற்சி பண்ணியிருக்க … பேசவும் முடிஞ்சிருக்கு… ஆனா எங்கக்கிட்ட பேசவே இல்லையே மா … என் யூகம் சரினா… நீ மாப்பிள்ளையா பார்த்தா தான் பேசணும்னு முடிவெடுத்தப் போலத் தோணுது… ” எனவும் கண்ணீர் பெருக அவரைக் கட்டிக் கொண்டு அழுதவளிடம் ,
“அவர விரும்பியிருக்க …. எங்க மாமா வீட்டுக்குப் போறப்ப … அவர் பேரன அப்பவே உனக்குப் பிடிச்சிருந்து இருக்கு அப்படித்தானே….” என அவள் தலையை தடவிக் கொண்டே கேட்கவும் …
“ஆம்” என்பதாக தலையசைத்தவளிடம் ,
“மாப்பிள்ளைக்குத் தெரியுமா மா…”
“இல்லை” என்பதாக தலையசைத்தவளிடம் ,
“எப்படியோ என் பசங்க அவங்கவங்க விரும்பினவங்களயே கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு சந்தோஷம் தான் ….”
சட்டென்று நிமிர்ந்தவள் , “அப்பாாா…” என ஆச்சரியமாகப் பார்க்க , மெல்லியப் புன்னகையோடு ,
“காதலிச்சு கல்யாணம் பண்ண எனக்கு காதல் வந்தவங்கள புரிஞ்சுக்க முடியாதா என்ன…. போன வருஷம்னு நினைக்கிறேன்…. ஹாஸ்பிடல்ல அவன் காலேஜ் மேட் அந்த ரூபாலி பொண்ணுகிட்ட , என்ன செய்வியோ தெரியாது … இந்த நோட்ஸ் அவகையில இருக்கணும்னு சத்தமா பேசிட்டு இருந்தான்….
அப்புறம் தான் தெரிஞ்சது அது செல்வா பொண்ணுக்குனு… தாமரை மூலமா விசாரிச்சதுல படிக்கிற பொண்ணுனு தெரிஞ்சது , சரி படிப்பு முடிஞ்சதும் பொண்ணுகேட்கலாம்னு இருந்தேன். ஆனா அம்மா உடல் நிலையால பொண்ணு பார்க்கணும்னு பேச்சு வந்ததும் நீயும் மருமக பேரதானம்மா சொன்ன …. அதுதான் நான் வேற கேட்டுக்கல … இன்னொன்னு அவ காதலிச்சது எனக்குத் தெரியும்னு அவனுக்குத் தெரியாது… “அவளை மறுபடி கட்டிலில் அமர வைத்தவர் ,
” என் இளவரசிக்கு அவராஜகுமாரன கைப் பிடிச்சா தான் பேச்சு வரும் அப்படிங்கிறது எனக்கு இப்பதான் தெரியுது … எப்படி மா மாப்பிள்ளைக்கிட்ட உன் விருப்பத்தை முன்னாடி சொல்லிருக்கியா…. ”
“இல்லை என்பதாக தலையசைத்தவளிடம் ……”
“சரி நான் ஒன்னும் கேட்கல…. ஆனா மெடிசின் சீட் கிடைச்சும் வேண்டாம் சொன்னது அவருக்காகத் தானா ….. அப்ப அப்ப மும்பய் போய் ஒரு குறிப்பிட்ட கன்ஸ்ட்ரக்ஷ்ன் கம்பனி மட்டும் சைட் விசிட் பண்ணதும் அவருக்காகத் தானா….. ” எனச் சிரிக்க , “அப்பா” என வெட்கத்தில் முகத்தை கைகளில் புதைத்தவளிடம்,
“ஆனா அவருக்கு உன்னைய … உன் காதல தெரியுதா மா …..”
‘ம் ச் ….ம் ச் …” என வாயில் சத்தமிட்டு கண்ணை மூடித் திறந்தவள்…
“அவங்களுக்கு எப்ப தெரியணுமோ அப்ப தெரியப்படுத்துவேன் பா… இப்ப அவரோட இருக்கிற இந்த லவ்லி டேஸ் போதும் பா…” எனப் புன்னகைக்க , மகளின் குணம் அறிந்தவராதலால் மேலேக் கேட்கவில்லை …
“சரிடா எப்பவும் இந்த சந்தோஷத்தோட இருக்கணும் …. ஓடு… மாப்பிள்ளை தேடுவார்.” என அனுப்பி வைத்தார்.
ஊட்டிக்கு கிளம்பும் நேரமும் வரவே , மகிழ்ச்சியாக காரில் பொருட்களை அடுக்க , பார்த்த சங்கீதா ,
” என்ன அண்ணா மூணு நாள் தங்கப் போறதா சொன்ன , லக்கேஜ் ரொம்ப கம்மியா இருக்கு …”
தலையிலடித்துக் கொண்ட திலீபன் , அவளை அருகிழுத்து, “இதுக்குத்தான் படிப்பு படிப்புனு இருக்கக் கூடாது … அவங்க ஹனிமூன் போறாங்க … ஊர்சுத்திப் பார்க்க இல்ல … “முதலில் புரியாமல் பார்த்த சங்கீதா , புரிந்ததும் ….
“அத்தா…ன் …” எனச் சிணுங்க… ,
“மேரே பியாரி பிங்கி…. நீ இப்படி வெட்கப்படுறதப் பார்த்தா நாமளும் ஹனிமூன் போவோமா … அது தான் என் பையன் பிறந்து மூணு மாசத்துக்கு மேல ஆகிருச்சே….” எனக் கண்ணடிக்க ,
“உங்கள… ” என செல்லமாக முதுகில் தட்டி விட்டு அண்ணனை வழியனுப்பினாள்.
காரினுள் ஏறிய வரு , வீட்டினர் கண் மறைந்ததும், விக்ரம் முதுகில் அடித்தவள் ,
” பாருங்க…. அண்ணி எப்படிக் கேக்கிறாங்கனு… எல்லாம் உங்களால .. எல்லா டிரஸ்ஸையும் தூக்கி வெளிய வச்சிட்டு …. இப்ப என்ன பதில் சொல்லனு முழிக்க வேண்டியிருக்கு … ”
வாய் விட்டுச் சிரித்த விக்ரம் , ” திலீபன் பதில் சொல்லியிருப்பான். இந்த டிரஸ்ஸே போட சான்ஸ் கிடைக்கோ என்னமோ…”
“ஷ்…. விக்கி….” என்றவள் முகத்தை மூடிக் கொள்ள ,
மனைவின் வெட்கத்தில் வண்டியை உற்சாகமாக செலுத்தியவன் ,
” எனிவே … இன்னும் மூணு நாளைக்கு யாரும் நம்மள டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க ….அது ஷ்யர் ” என்றான்.