தேன் துளி 28
நாட்கள் இவ்வளவு அழகாக இருக்குமா என்பது போல் தான் விக்ரமிற்கும் வருவிற்கும் காதல் வாழ்க்கை சென்றது. அரவிந்த் கோவை சென்று விட இன்னும் பத்து நாட்களில் அனுவின் படிப்பும் முடிவடைய இருந்தது.
விக்ரமிற்கு இளமனைவியுடன் கொஞ்சல்களோடு இனிதாக ஆரம்பிக்கும் நாளின் துவக்கம்…. குடும்பத்தாரோடு பேசி மகிழ்ந்து , எப்போதடா வீட்டிற்கு செல்வோம் என்ற நினைவில் தொழிலையும் திறம்படக் கவனித்து , ‘ரிது.. ப்ளீஸ்’ என்ற கெஞ்சல்களோடு அவனும் ,
‘விக்கி ….’ என்ற வருவின் மயக்கும் அழைப்பின் மிஞ்சல்களோடும் அந்நாளின் இரவைக் கழித்துக் கொண்டிருந்தான். காலை ஒன்பது மணியளவில் கிளம்பினால் வீட்டிற்கு வர இரவு பத்து பதினொன்று ஆகிவிடும். வருவும் தன் படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்ததால் படிப்பு ,தன் குரல் மீள பயிற்சி என நேரம் சரியாக இருந்தது.
அன்று இரவு வீடு வந்தவன் , கீழே லதா பின்னாலயே சுற்றிக் கொண்டிருந்தான். விழித்த வருவை கண் ஜாடை செய்து அறைக்கு அனுப்பியவன் , லதா பின்னாலயே அறைக்குள் நுழைய,
மெத்தையை சரி செய்துக்கொண்டே , “என்ன வேலை நடக்கணும்னு என் பின்னாலயே வர்ற… கேட்டதுக்கெல்லாம் ஓகே சொன்னது போல தான் இருக்குது…”
“ம்மா” என சிரித்துக் கொண்டே லதாவைப் படுக்கையில் அமர வைத்த விக்ரம் , அவர் கையை எடுத்து வளையலைச் சுற்றி விளையாடிக் கொண்டே ,
“ம்மா … அடுத்த வாரம் திறப்பு விழாவுக்கு கன்னியாகுமரி போறோம் தானே…. ”
“இப்ப என்ன வேணும் அதச் சொல்லுப்பா…”
“அது மா…. யு.எஸ்ல ஒரு ஜாய்ன்ட் பிராஜக்ட் கமிட் ஆகிற மாதிரி இருக்கு …வேர்ல்ட் லெவல் ஃபேமஸ் கம்பெனி … ”
சட்டென கையை உருவிக் கொண்டவர் , ” நினைச்சேன் … உன் பேருக்கு ஏத்த மாதிரி இந்தியாவில இருக்கும் போதே பாதிநாள் தான் வீடு தங்குற ….மீதி நாள் வெளியூர்ல , இப்ப வெளிநாடு ப்ராஜக்ட்னா…. ச்சுப் போப்பா ….” எனச் சலித்துக் கொண்ட லதா,
” என்னவோ முடிவு பண்ணிட்ட … ஆனா இனி எங்க கிளம்புனாலும் மருமகளோட தான் கிளம்பனும்… இப்ப தான் அவ உடம்ப தேத்தி விட்டுருக்கேன் … இந்த வயசுலயும் என்னால உங்கப்பாவ விட்டு தனியா இருக்க முடியாதுனு தோணும் போது , அவ சின்னபுள்ள டா , நம்ம சின்ன பாப்பாவ பாரு … எப்படா புருஷன் வீட்டுக்குப் போவோம்னு இப்பவே பெட்டிய கட்டிட்டு தயாரா இருக்கா … அமிர்தாவும் அப்படித்தான் ….”
“ம்மா… அம்மா… அம்மா … நானும் அது தான் சொல்ல வாறேன்…. பஃங்ஷன் முடிஞ்சதும் ஒரு வாரத்துல கிளம்புறேன் இல்ல கிளம்புறோம்….. ஒரு ஆறு மாசம் என்னோட பங்களிப்பு அங்க கட்டாயம் இருக்கணும் அதுக்கப்புறம் வேற யார்கிட்டயாவது பொறுப்ப ஒப்படைச்சுட்டு நான் இங்க வந்துரலாம் …. அத சொல்ல தான் வந்தேன்….. அது மா … இப்பல்லாம் அவளுக்கு என்னை விட்டு இருக்க முடியலங்கிறத விட … அவள விட்டுட்டு என்னால இருக்க முடியாதுனு தோணுது…. அதான் அவளையும் அழைச்சிட்டுப் போற பிளான் போட்டேன்…. நீங்க… நீங்க… எதுவும் நினைக்க மாட்டீங்க தான் …. இருந்தாலும்….” என தயங்க, அவன் காதை திருகுவது போல் பாவனை செய்த லதா,
” இருந்தாலும்….. ஆமாம்பா ஒரு பர்சன்ட் பொஸஸிவ்னஸ் வர தான் செய்து… ஆனா தொன்னுத்தொன்பது சதவீதம் சந்தோஷம் தான் இருக்கு … ” எனச் சிரிக்க ,கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்த செல்வா ,
” ஆதி என்னையக் காப்பாத்திட்ட , இல்ல உங்கம்மா ஏன் நீங்க சொல்லல சொல்லலனு என்கிட்ட சண்டைக்கு வந்துருப்பா….” இப்படியாக அனைவரிடமும் தெரியப்படுத்தி ஊருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் கவனிக்க ஆரம்பித்தான்.
அதோ இதோ என குமரிக்கு கிளம்பும் நேரமும் வந்தது.வித்யா கணவனை முன்பே சென்னை வரச் சொன்னவள் அவனோடு காரில் தான் பயணம் செய்வேன் என்று விட்டாள். மற்றவர்கள் திருவனந்தபுரம் விமானம் மூலம் வந்து குமரி வந்தார்களென்றால் , அரவிந்தும் வித்யாவும் காரில் பயணித்தார்கள்.
சில பல முக்கியஸ்தர்களான அரசியல் பிரமுகர்கள் , நடிகர்கள் , விளையாட்டு வீரர்கள், குடும்ப உறுப்பினர்கள் என களைகட்டிய திறப்பு விழா இனிதே முடிந்து , அங்கு பணிபுரிந்த அனைவருக்கும் தனியாக ஒரு விருந்தையும் அளித்து விட்டு அனைவரும் தங்கள் இருப்பிடம் செல்லத் தயாராகினர்.
அனைவரும் விமானத்தில் செல்லத் தயாராக , இப்போதும் வித்யா மட்டும் அரவிந்துடன் காரில் தான் செல்வேன் என்று விட்டாள். முதலில் மனைவி தன்னுடன் தனிமையில் இருக்க ஆசைப்படுகிறாள் என்று நினைத்திருந்த அரவிந்துக்கு இப்போது உள்ளுணர்வு ஏதோ சொன்னது.
காரில் கிளம்புவதால் முதலில் அவர்களை வழியனுப்பினர் குடும்பத்தினர். குமரியில் இருந்து கிளம்பி தேசிய நெடுஞ்சாலையைப் பிடித்த அரவிந்த் சிறிது தூரம் சென்றதும் ஒரு மரங்கள் நிறைந்த இடத்தில் காரை நிறுத்தினான்.’ஏன்’ என விழித்த வித்யாவைப் பார்த்து நன்கு திரும்பி அமர்ந்துக் கொண்டவன் ,
” கேண்டி … நீயும் டாக்டர் , நானும் டாக்டர் … டாக்டரா என்னால யூகிக்க முடிஞ்ச ஒரு விஷயம் ….. ஆனா நிஜமானு நீதான் சொல்லணும்…..”
புன்னகையும் கண்ணீரும் போட்டிப் போட கணவனுக்கு விழிகளாலயே பதிலளித்தவள், அரவிந்தை நெருங்கி நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.
“நிஜமா கேண்டி … நம்ம காதலுக்கு பரிசு கிடைக்கப் போகுதா… ”
“ஆம்” என்பதாக அவன் நெஞ்சிலயே தலையசைக்க , மனைவியை இடக்கையால் இறுக்கமாகப் பிடித்து , “தேங்க்ஸ் … தேங்க்ஸ்… கேண்டி … ” என அவள் தலையில் முத்தமிட்டவன்,
“பாப்பாவ விக்ரம் நல்லாப் பார்த்துக்கிறாருனு தெரிஞ்ச அடுத்த நிமிஷத்துலருந்து என் உலகம் உன்னைய மட்டுமே சுத்தி வந்துச்சு கேண்டி… என் மூச்சு முழுசும் நீதான் … நீ நான் நம்ம குழந்தைங்க இப்படி தான் எண்ணம் வர ஆம்பிச்சது … இந்த எண்ணத்தால என்னைய சுயநலவாதினு யாரும் சொன்னாலும் பரவாயில்ல … இந்த நொடி என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே இல்ல …… உன்னைய ஃபோட்டோலப் பார்த்து மனசுக்குள்ள நீ வந்தப்போ ஒரு பரவசம் … அதே ஃபீல் இன்னைக்கு நீ நம்ம குழந்தைய சுமக்கிறங்கிறப்போ கிடைக்குது… ”
ஒரு மனைவிக்கு , காதலிக்கு கணவனிடமிருந்து கிடைக்கப்பெறும் இவ் வார்த்தைகள் பொக்கிஷம் தானே … வித்யாவும் விதிவிலக்கல்லவே….. அவனை மேலும் இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.
நெஞ்சில் ஒரு ஓரத்தில் தங்கைக்கு பின் தான் தானோ என்று இருந்த சிறு ஏக்கம் கூட காணமல் போனது.சிறிது நேரம் அமைதியாக கழிய , கிளம்பலாம் என்று முடிவெடுத்தவன் ,
“வீட்லயே எல்லாருகிட்டயும் சொல்லிருக்கலாமே … ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்களே ….இப்போ ஃபோன் பண்ணட்டா …” என ஃபோனை எடுத்த அரவிந்திடமிருந்து ஃபோனைப் பிடுங்கியவள் ,
“அத் …. தான்.. என்னப் பண்றீங்க … எனக்கு இப்படி சந்தேகம் வந்ததுமே உங்க கிட்ட தான் முதல்ல சொல்லணும்னு உங்கக் கூட கார்ல வாரேன்னு சொன்னேன். இப்ப நாம சொன்னா , நம்ம வீட்ட பத்தி உங்களுக்குத் தெரியாதா … அப்படியே ரிடர்ன் ஆகச் சொல்லி , என்னைய இப்ப அலையக்கூடாது, அப்படி இப்படினு அவங்களோடவே கூட்டிட்டு போயிருவாங்க…. உங்க கூட இருக்க முடியாது…. உங்க கிட்ட கூட அது தான் சொல்லாம ஊர் போய் சொல்லலாம்னு இருந்தேன். அவங்க எல்லாருமே உங்க ஒருத்தருக்கு எனக்கு சமம்… நீங்க என்னன்னா…..” எனச் சிணுங்க ,
ஒரு கணவனுக்கு வேறு என்ன வேண்டும் , பதில் சொல்ல முடியாமல் அவளையேப் பார்த்தவன் , நிறைந்த மனதோடு கோவையை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.
அனைவரும் சென்னை வந்து ஒரு வாரம் சென்றிருந்த நிலையில் வித்யா தான் தாய்மை அடைந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அனைவருக்கும் பகிர குடும்பமே மகிழ்ச்சியில் தத்தளித்தது.
பரணி பேரனோடு இருக்கும் ஆசையில் சங்கீதாவோடு தங்கிவிட்டார். லதாவிற்கு மகளைப் பார்க்கும் ஆர்வம் பெருகவே , தானும் கோவைச் சென்று வித்யாவோடு இருக்க விரும்பி விக்ரமிடம் ,
“ராஜா .. பாப்பாவுக்கு இந்நேரம் நான் கூட இருந்தா நல்லாருக்கும் … பரணியும் இங்க இல்ல … இருந்திருந்தா உன்னையும் மருமகளையும் அழைச்சிட்டுப் போகலாம் … அத்தைக்கு டைம்க்கு மருந்து தரணும்…..”
“அம்மா நீங்க தாராளமா கிளம்புங்க , பாட்டித் தாத்தாவ உங்க மருமகப் பார்த்துக்குவா… நாங்க ஊருக்கு கிளம்புறதுக்கு முன்னால அங்க போய் விதுவப் பார்த்துட்டு கிளம்புறோம்…” என்றதும் லதாவும் செல்வாவும் மகளைக் காண கிளம்பி விட்டனர்.
இங்கு வரு சங்கரியை கவனித்துக் கொண்டாளோ இல்லையே , அவர் பேத்தியை நன்கு கவனித்துக் கொண்டார். லதா சென்ற ஒரு வாரத்திலேயே வருவுக்கும் , விக்ரமுக்கும் வெளிநாடு செல்ல வேண்டிய ஏற்பாடுகள் முடிவடைந்து இன்னும் பத்து நாட்களில் கிளம்ப டிக்கட் எடுத்திருந்தனர்.
பரணியும் வந்துவிடவே, விக்ரமும் வருவும் கோவை சென்று வித்யாவைப் பார்த்து வரலாம் என்று முடிவெடுத்தனர். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு கோவைக்கு விமானம் என்பதால், பைகளை தயார் செய்து , அதிகாலை எழுவதற்காக அலாரம் வைத்து விட்டு, படுக்கையில் சாய்ந்து லேப்டாப்பில் வேலை செய்துக்கொண்டிருந்தவனது தோளில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்.
“என்னடா அம்மா வீட்டுக்குப் போற சந்தோஷத்துல தூக்கம் வரலயா. எனக்கு இன்னும் கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சிட்டு வாரேன் …நீ படுத்து தூங்கு….”
“ம்ஹூம்…. தூக்கம் வரல …. விக்கி நாம எப்ப திரும்ப இந்தியா வருவோம்… வித்யா டெலிவரிக்கு வந்துரலாம் தானே… ”
“ஷ்யர்… ஆறு மாசம் தான் …. உனக்கு இடையில இந்தியா வரணும்னு தோணிச்சுனா … நீ மட்டும் வந்துட்டுப் போற மாதிரி ஏற்பாடு பண்ணிக்கலாம் ஒகே ” அவனது பதிலில் திருப்திக் கொண்ட வரு… அவன் நெஞ்சில் படுத்துறங்கி விட்டாள்.
விடியலில் அலாரம் சத்தத்தில் கண்கள் திறக்க முயன்றாலும் முடியாமல் சிரமப்பட்டு விழித்தவள் , மொபைலைக் கைகளால் துழாவ , அது அகப்படவில்லை , எழ முயற்சிக்க முடியவில்லை. அப்படியே படுத்துக் கொண்டாள்.
கதவு தட்டப்படும் சத்தத்தில் விழித்த விக்ரம் மணிப் பார்க்க , ஆறு எனவும், கையில் படுத்திருந்தவளை மெல்ல மெத்தையில் விட்டு வேகமாக கதவைத் திறக்க , பரணி நின்றுக் கொண்டிருந்தார்.
“ஆதி நேரமாகுதே இன்னும் கிளம்பல … ”
“சித்தி என்னனு தெரியல அவ படுத்திருக்கா , நான் இதோ ரெடியாகுறேன் ….” என்றவாறே வருவை எழுப்ப , எழுந்தவள் மறுபடியும் படுத்துக் கொள்ளவும் , பயந்தவன் பரணியிடம் சொல்ல , உள்ளே வந்தவர் அவளது நிலையறிந்து ,
“ஆதி நீ குளிச்சிட்டு கிளம்பு நான் மருமகள பார்த்துக்கிறேன்…” என்றவர் , வருவைக் கைப் பிடித்து கீழே சங்கரி அமர்ந்திருந்த இடத்திற்கு அழைத்து வந்தார். அவனது தாத்தா நடைப்பயிற்சி சென்றிருக்க , சங்கரியிடம் வருவின் நிலையைச் சொன்ன பரணி அவரிடம் ஆலோசனைக் கேட்க , மகிழ்ந்த சங்கரி பேத்தியிடம் சில பல விவரங்கள் கேட்க , அவளது பதிலில் திருப்தியடைந்தவர்கள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.