தேன் துளி 29
ஐந்து மாத வயிற்றை மட்டும் வீடியோவில் கணவனிடம் காண்பித்து விட்டு , வீடியோவை ஆஃப் செய்த வரு , மொபைலைக் காதில் வைத்துப் பேசிக் கொண்டிருந்தாள்.
“ரிது ப்ளீஸ் முகம் காட்டு … உன் வாய்ஸ் கேட்க ஆசைதான். ஆனா முகம் பார்த்துட்டேப் பேசினா ரொம்ப திருப்தி டா ….”
“ம்ஹூம் …. நீங்க இங்க வர்ற வரை .… நம்ம ஜுனியர்ஸ்தான் வீடியோல பேசுவாங்க… ”
“நம்ம ஜூனியர்ஸ் ….”
நாக்கைக் கடித்துக் கொண்ட வரு, “ம்… ஜுனியர் விக்கியாவும் இருக்கலாம் , ஜுனியர் அமிர்தாவாவும் இருக்கலாம் …. ”
“ம் ம்..ம் நாளைக்கு ஸ்கேன் பண்ண போறீங்க தானே … ரிபோர்ட் எனக்கு அனுப்புங்க … ஒகேடா ரொம்ப நேரமாகுது தூங்கு….” என ஃபோனை வைத்து விட்டான்.
மறுநாள் ஒரு அனார்க்கலி சுடிதார் அணிந்து சங்கரி அருகில் ஃபைல்களை எடுத்துக் கொண்டு வந்த அமிர்தாவையே உற்றுப் பார்த்தவர் ,
“பிள்ளை அசைவுத் தெரியுதாமா ” என்றவாறே அவள் வயிற்றில் கை வைக்க , அவர் உணர்ந்த விஷயம் அவரைத் திகைப்புடன் கூடிய சந்தோஷத்தில் ஆழ்த்தியது. வரு முகத்தை அவர் பார்க்க … அவர் கையைப் பிடித்துக் கொண்ட வரு…
“ஆச்சி … உங்க பேரன் வந்ததும் அவங்க தெரிஞ்சுக்கிட்டதுக்கப்புறம் வீட்ல சொல்லலாம்னு இருக்கேன் … நீங்க தெரிஞ்சுக்கிட்டத யாருக்கும் சொல்ல வேண்டாமே ப்ளீஸ் … ”
“ஆத்தி … இவ்வளவு பெரிய விஷயத்தை அஞ்சு மாசமா தெரியாம வச்சுருக்கியே….ஒவ்வொரு மாசமும் செக் அப்புக்கு போகும் போதும் அந்த டாக்டரம்மா ஒன்னும் சொல்லலியே … நீ சொல்ல விடாம வச்சுருக்கியா…. லதா… பரணி இங்க வாங்க ….” எனவும் அவர்கள் இருவரும் அங்கு வர , விவரம் உரைத்தவர் ,
“இது தான் பெத்த தாய்க்கும் ,மாமியாருக்கும் உள்ள வித்தியாசம் …பெத்தவளா இருந்தா என்னைப் போல எப்பவோ கண்டுபிடிச்சிருப்பா …. நீங்க ரெண்டு பேரும் அவக் கூட தான ஆஸ்பத்திரி போறீங்க , டாக்டரம்மாகிட்ட தோண்டி துருவி மருமக உடல் நிலைய விசாரிக்க வேண்டாமா… நீங்க ரெண்டு பேரும் படிச்சவளுகதானே , அவ சிட்டுல (மருத்துவக் கோப்பு) என்ன எழுதியிருக்குனு கூட பார்க்க மாட்டீ களோ…..”
“ஆச்சி …. அவங்களுக்கு ஒன்னும் தெரியாது ..”
“என்னத் தெரியாது …. புருஷனும் பக்கத்துல இல்ல … கூடவே இருந்துப் பார்த்திருந்தா என்னைய மாதிரி எப்பவோ கண்டுபிடிச்சிருக்கலாம் …. இனி நீ தனியா படுக்க வேண்டாம் … கீழ இருக்கிற அறையில இரு … ”
லதாவுக்கும் பரணிக்கும் விஷயம் அறிந்து மகிழ்வதா , சங்கரி சொன்னதைக் கேட்டு வருந்துவதா என்று விழித்துக் கொண்டிருக்க ,
தலை குனிந்துக் கொண்ட வரு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்து… விக்ரமிற்கு தான் நேரில் சொல்லிக் கொள்ள விரும்புவதாக சொல்லிவிட்டாள். சங்கரி மட்டும் முறைத்துக் கொண்டு நிற்கவும் ,
“சாரி … ஆச்சி… ப்ளீஸ்… ப்ளீஸ்…. ஒரு சர்பிரைஸ்க்குத் தான் … ” என்றவள் வயிற்றில் உருளும் உணர்வை அனுபவித்தவள் , சங்கரி கையையும் எடுத்து உணர வைத்தாள்.
அதன் பிறகு மருத்துவமனைச் சென்று வருவின் உடல் நலத்தில் திருப்த்தியடைந்த சங்கரி, வீட்டின் கீழே இருந்த அறைகளில் ஒன்றில் அவளுக்கு அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து இரவில் பேத்தியோடு தங்கிக் கொண்டார்.
மொத்தத்தில் வருவிற்கு இரு மடங்கு கவனிப்பு தான். இரவில் வீட்டுத் தோட்டத்தில் நடைபயிற்சி முடித்து அங்கிருந்து தான் கணவனுடன் பேச ஆரம்பித்தாள். லதா மகளைச் சென்றுப் பார்த்து வருவதும் மருமகளை கவனிப்பதும் என சென்னைக்கும் கோவைக்கும் பறந்துக் கொண்டிருந்தார்.
வித்யாவும் அரவிந்தும் மகிழ்ந்தாலும் , “என்னம்மா அஞ்சு மாசமா இப்படி சொல்லாம இருந்துருக்கியே..” என ஒரு அண்ணனாக வருத்தப்பட , வித்யாவோ ,
“போடி … இப்படி எல்லாத்தையும் மறைச்சு வச்சுட்டே இருந்தா எப்படி … அண்ணன்கிட்ட அத சொல்லாத , இத சொல்லாதனுட்டு இருக்க… பாரு ஒரு நாள் உனக்கு தந்த ப்ராமிஸ எல்லாம் குப்பைல தூக்கிப் போட்டுட்டு நீ சொல்லாத சொன்னதெல்லாம் சொல்லிருவேன்….”
“எங்கண்ணன் பொண்டாட்டி சொல்லிருவா … ஆனா என் ஃபிரண்ட் … எப்பவும் எனக்கு ஃபிரண்ட் … எனக்குத் தந்த பிராமிஸ காப்பாத்துவா…”
“போடி” எனச் சலித்த வித்யாவிடம்,
” வித்யா … என் காதல் உண்மையானது … உருவம் எனக்கு மாறலாம் டி … என் உணர்வுகள் மாறுமா…. நாலு வருஷத்துக்கு முன்ன பார்த்த , பேசின …. அவர் காப்…” என்றவள் பாதியிலயே நிறுத்தி ,
“அந்தப் பொண்ணு நான் தான்னு அவங்களா தெரிஞ்சுக்கிறது தானடி என் காதலுக்கு பெருமை தரும். என் உள்ளுணர்வு சொல்லுது நிச்சியம் என் விக்கி என்னையக் கண்டு பிடிச்சிடுவாங்க… வீட்ல எல்லாரும் என்னைய விளையாட்டு பிள்ளையா இருக்கிறதா சொல்றாங்க…. இது விளையாட்டு இல்ல என் வாழ்க்கைனு உனக்குமா புரியல….” ஆவலோடும் உறுதியான நம்பிக்கையோடும் பேசுபவளிடம் வேறு என்ன சொல்ல முடியும்.
“சரி… உன் வயித்துக்குள்ள எங்கம்மா எப்படி இருக்காங்க , உள்ளே இருந்து மருமககிட்ட சண்டைப் போடுறாங்களா….”
“வரு….. என்ன சொல்ற என்ன பேபி னு இப்ப தெரிய வேண்டாம்னு வேற ஹாஸ்பிட்டல்ல ஸ்கேன் பண்ணினோம் ….”
“ஹே… யாரும் எதுவும் சொல்லல…. எங்கண்ணாவோட எதிர்பார்ப்பும் என் எதிர்பார்ப்பும் அது தான் …. எங்கம்மா தான்டி உன் வயித்துல … இதுல எனக்கு சந்தேகமேயில்ல …..” அதற்கு மேல் வித்யாவும் வற்புறுத்தவில்லை.
விக்ரம் எவ்வளவோ கேட்டும் முகம் காட்ட மறுத்துவிட ,
“இரு நான் அம்மாவ ,வீடியோ ஃபோட்டோ எடுத்து அனுப்பச் சொல்றேன் …..”
அருகில் இருந்த சங்கரியிடம் , “ஆச்சி என்னை வீடியோ … ஃபோட்டோ லாம் அத்தைய எடுத்து அனுப்பச் சொல்லப் போறாங்களாம்….”
அவளிடமிருந்து ஃபோனை வாங்கியவர் , ” இங்கப் பாரு உனக்கு உன் பொண்டாட்டிய பார்க்கணும்னு தோணிச்சுனா பறந்து வா…. புள்ளத்தாச்சிய படம் பிடிக்க கூடாது… நான் விடமாட்டேன்….”
“பாட்டி அதெல்லாம் அந்தக் காலம் … கீதுவ நாம அப்படித்தானே பார்த்தோம்….”
” என் வீட்டு வாரிசு … என் மனதிருப்திக்கு விடு…அது எந்தக் காலமா இருந்தாலும் நான் விடமாட்டேன் …” என்றவர் ஃபோனை அவளிடம் தர ,
“பாட்டியக் கூட்டு சேர்த்துக்கிட்டியா…. நான் வந்தா திரும்ப இங்க வரத் தோணாது டா … பேசாம வந்துரட்டா…ஐ மிஸ் யூமை டியர்…..”
“இன்னும் கொஞ்ச நாள் தானே … முடிச்சிட்டு வாங்க , நானும் உங்க பிள்ளைங்களும் வெய்ட்டிங் … நீங்க அப்படி வந்தா நான் உங்களுக்கு தர வேண்டியது எல்லாம் டபுள் டபுளா தருவேன்…”
மேலும் இரண்டு மாதங்கள் செல்ல , விஸ்வனாதன் மருமகள் தனியாக கஷ்டப்படுவதைப் பார்த்தவர் , செல்வாவிடம் பேசி ஏழாம் மாதமே வளைபூட்டி வீட்டிற்கு அழைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
சங்கரியோ “அதெப்படி முடியும் … அண்ணன் பொண்டாட்டிங்க ரெண்டு பேரும் முழுகாம இருக்கிறப்ப ஒருத்தர ஒருத்தர் முகம் பார்த்துக்க கூடாது … அது நல்லது இல்ல… ஒன்பதாம் மாசம் சீமந்தம் பண்ணி அவரவர் தாய் வீட்டுக்கு அனுப்பிக்கலாம் ….”
செல்வா அவரிடம் , “ஏம்மா அப்ப லதாவும் புஷ்பாவும் இப்படி ஒரே நேரம் உண்டானப்ப லதாவ ஏழாம் மாசமே அனுப்பிட்டியே மா…” அவரது அப்போதைய ஆதங்கத்தை இப்போ வெளிப்படுத்த ,
” லதாவுக்கு தாய் இருந்தா … எம்பேத்திக்கு யாருமில்லாம அங்க எப்படி அனுப்ப , நிறை மாசமுன்னா பிரசவமாயிடும் நாம பார்த்துக்கலாம் அதான் … “தாயின் விளக்கத்தில் செல்வாவிற்கு அவ்வளவு பெருமிதம்.
அதன் பிறகு ஒன்பதாம் மாதமே வளைகாப்பு செய்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டனர். விக்ரமும் அந்நேரம் இந்தியா வந்து விடுவான் என்பதால் குடும்பத்தினர் பேசி ஒரு முடிவெடுத்துக் கொண்டனர்.
ஆனாலும் வித்யாவை கோவையில் தனியே விட மனமின்றி ஏழாம் மாதமே ராணியும் சங்கீதாவும் தாங்கள் பார்த்துக் கொள்வதாகக் கூறி அவர்கள் கிராமத்திற்கு அழைத்து வந்துவிட்டனர்.
“ம்மா… ஆஸ்பத்திரி வசதி பார்க்கணுமே” என்ற விஸ்வனாதனிடம் , அவர் அம்மா கனி,
“என்னடா ஆஸ்பத்திரி வசதி … அப்படி நினைப்பு இருக்கிறவன் , தான் பொறந்த இடத்துல ஆஸ்பத்திரிய கட்டியிருக்கணும் , நீ உன் பொண்டாட்டி நினைவுல அவ பொறந்த இடத்துல கட்டியிருக்க … திருநெல்வேலியில இல்லாத ஆஸ்பத்திரியா … அப்படியே நல்ல ஆஸ்பத்திரி வேணுமின்னா எங்கண்ணன்கிட்ட சொல்லி அவுக பேத்திக்கு புதுசாவே கட்டிக் கொடுக்கப் போறாரு … தினமும் கோடி கோடியா சம்பாத்தியம் இருக்கிற அவங்களுக்கு அது ஒன்னும் பெரிசில்ல… ”
“ம்மா என்னப் பேச்சு இது…” என்ற விஸ்வனாதனிடம் ,
“இது ஒன்னும் இப்ப பேசல … எங்கண்ணனும் , அண்ணன் மக்கமாரும் இந்த கல்யாண பேச்சு வரவுமே சொன்னது தான்… இங்கயிருந்து திருநெல்வேலிக்கு நுழைய முன்னாடி கட்டிட்டு இருக்கிறது யாருக்குனு நினைச்ச அவர் பேத்திக்குத்தான்…. அத விடு , சீமந்தம் இங்க வச்சாலும் பிரசவத்துக்கு உன் மருமகள மெட்ராஸ் கூட்டிட்டு போயிருவாக ….. ஆனா என் பேத்திக்கு இங்க தான் நாங்க பாப்போம்…”அதன் பிறகு விஸ்வனாதன் எங்கு பேச ..வித்யாவை ராணியும் சங்கீதாவும் கவனித்துக் கொள்ள ,வருவை சென்னையில் கவனித்துக் கொண்டனர்.
எட்டாம் மாதம் முடிந்து வருவுக்கும் வித்யாவுக்கும் ஒன்பதாம் மாதம் துவங்க , விக்ரமின் வெளிநாட்டு வேலைகளும் முடிவுக்கு வந்து மனைவியைக் காணும் ஆவலோடு தாய் நாடு திரும்ப ஆயத்தமானான்.