வருவிற்கு பத்து நாட்கள் முன்பு வித்யாவிற்கு பிரசவத் தேதி தந்திருக்க வித்யாவிற்கு முதலில் சீமந்தம் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தனர்.
வித்யா வளைகாப்பிற்கு விக்ரமால் வர இயலாது என்பதால் பத்து நாட்கள் கழித்து வருவிற்கு செய்ய முடிவெடுத்து விக்ரம் வீட்டினர் அனைவரும் திருநெல்வேலிக்கு கிளம்பினர்.
லதாவிடம் பேசியவன் , ” ம்மா இந்த டைம் இவ்வளவு அலைச்சல் எதுக்கு மா…. எப்படியும் விதுவ பார்க்க கூடாது சொல்லிட்டீங்க … அப்ப அவ சென்னைலயே இருக்கட்டுமே … நான் வந்தப்புறம் சீமந்தம் பண்ணி கோவைக்கே கூட்டிட்டுப் போகலாம்.”
“ராஜா இங்க முடிவெல்லாம் உங்க பாட்டி கைலனு தெரியும்ல … இப்ப சின்னவளுக்கு சீமந்தம் ஊர்லனு கனிப்பெரியம்மா சொன்னதும் ,உங்க பாட்டியும் அவங்க ஒரே பேரனுக்கு வாரிசு வரப்போகுது ….அதை ஊர்ல சொந்த பந்தத்துக்கு சொல்லி அவங்க வாழ்த்தும் ஆசிர்வாதமும் வேணும்னு சொன்ன பிறகு நாம என்ன சொல்ல முடியும். அதனால ஊர்லயே அமிர்தாவுக்கும் விமாரிசையா செய்ய இப்பவே வேலைய ஆரம்பிச்சாச்சு ….”
ஒரு சொகுசு காரின் பெயரைச் சொல்லி அவளை அதில் அழைத்துப் போகச் சொன்னவன் , தங்கையையும் அதிலேயே அழைத்து வரச் சொன்னான்.
அங்கு வந்தாலும் வருவும் வித்யாவும் குழந்தை பெற்றுக் கொள்ளும் வரை நேரில் பார்த்துக் கொள்ளக் கூடாது என்ற கட்டளைகள் பெரியவர்களால் பிறப்பிக்கப்பட வரு வித்யாவை சந்திக்கவில்லை.
வளைகாப்பிற்கு முதல் நாள் விஸ்வனாதனும் அரவிந்தும் மகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டுச் சென்றனர்.
“ம்மா பாட்டிக்குணம் தெரியும் தானேமா… நாளைக்கு உன்னால கலந்துக்க முடியாது மா….”
“அப்பா பெரியவங்க எது சொன்னாலும் செய்தாலும் காரணமிருக்கும்னு நீங்க தானேப்பா சொல்வீங்க … ” எனப் புன்னகையோடு அவர்களை சமாதானம் செய்யவும் ,
“எம் பொண்ணு நம்ம வீட்டு இளவரசி இல்ல … எங்க மாமா குடும்பத்துல மகாராணினு புரூவ் பண்றா …. பராவாயில்லயே நீ வருத்தததுல இருப்பனு நினைச்சேன் …”
” எல்லாம் சங்கரி ஆச்சி ட்ரைனிங் தான் பா …. அவங்க படிக்கல … ஆனா ஒரு பெரிய குடும்பத்த மேனேஜ் பண்றதுல அவங்களுக்கு பட்டமேத் தரலாம்… அம்மா இருந்திருந்தா என்னைய எப்படி கவனிச்சிருப்பாங்களோ … அது போல தான் அவங்க என்னைய கவனிச்சிக்கிறதும் … இந்த வயசுலயும் எவ்வளவு ஆக்டிவ் … அவங்க இது இது காரணம்னு எடுத்துச் சொல்லப் போய் தான்… நான் எல்லாத்தையும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கிட்டேன் …”
மகளின் பேச்சில் மகிழ்ந்தவர் மறுநாள் மருமகளுக்கு தன் தாய் வீட்டில் சிறப்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மகிழ்வோடு பங்கேற்றார். விக்கிரமராஜாவோடு சங்கரி பரணி இன்பராஜ் ஆகியோர் வருவோடு கிராமத்திலயே இருந்துக் கொள்ள , செல்வாவும் லதாவும் வித்யாவை அழைத்துக் கொண்டு சென்னைக்கு கிளம்பினர்.
இதோ வித்யாவை அழைத்து வந்து ஒரு வாரத்தில் லதாவின் உறவில் அக்கா மகளான சுபாவையும் அவளது கணவன் அருளையும் வித்யாவிற்கு துணைக்கு வைத்து விட்டு லதாவும் செல்வாவும் மறுபடியும் ஊருக்கு கிளம்பினர். விக்ரம் நாளை காலை சென்னை வந்து இங்குள்ள அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு ஊருக்கு கிளம்புவதாக இருந்தான்.
சென்னை வந்து சேர்ந்தவன் இருந்த நான்கைந்து பெட்டிகளோடு வீடு வந்து ,தங்கையைக் கண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ,
“அண்ணா…ஜெட் லாக் ( jet lag) இருந்தாக்கூட உன் கண்ணு அண்ணியப் பார்க்க துடிக்கிறத அப்பட்டமாகாட்டுது….சோ நீ சீக்கிரமா கிளம்பு , எதுவும் முக்கியம்னா அருளத்தான் பார்த்துக்குவாங்க… ”
தங்கையிடம் சிரித்துக் கொண்டே அறைக்கு வந்தவன் , ஃபோனில் மனைவியை அழைக்க ,
“விக்…கி… ” என்றவள் சந்தோஷத்தில் அழவும்,
” வந்துட்டேன் வந்துட்டேன் மை டியர்… ஒரு ஹால்ஃப்டே ஆபிஸ் போய்ட்டு கிளம்பிடுவேன்…. ”
” ரெஸ்ட் எடுக்கலயா… ”
“அங்க வந்து எடுத்துக்கிறேன்…. உன்னையப் பார்த்தாத்தான் எனக்கு ரெஸ்ட் எடுக்கக் கூடத் தோணும்….”
கணவனோடு பேசி முடித்து வெளியே வந்த வரு அவனது வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு புன்னகையோடு சோஃபாவில் அமர்ந்து இருக்க , ஊர் வந்து சேர்ந்த லதாவோடு சீமந்த சீர்களை சரிப் பார்த்துக் கொண்டிருந்த சங்கரி ,
” எல்லாம் சரி பேத்தி முகூர்த்தப் புடவை எங்க , நம்ம வழக்கப்படி புள்ளத்தாச்சிய அத கட்டிதான் மனையில உக்கார வைக்கணும்னு தெரியும்ல , சின்னப்புள்ள அவளுக்குத் தெரியாது … உனக்குத் தெரியும் தானே…. அன்னைக்குத் தான் அவசரத்துல எடுத்துட்டு வரல …நீ வரும் போது எடுத்துட்டு வருவனு சொன்னா…. இப்பவும் நீ எடுத்து வச்ச மாதிரி தெரியல….”
லதா விழித்துக் கொண்டு இருக்க , வரு குறுக்கிட்டு விக்ரமிடம் எடுத்து வரச் சொல்கிறேன் , என்றவள் அறைக்குள் சென்று கணவனுக்கு அழைப்பு விடுத்து விவரம் சொல்ல , அவளது கபோர்டை திறந்தவன் அடுக்கப்பட்டிருந்த புடவைகளில் முகூர்த்தப் புடவையைத் தேடினான்.
அதற்குள் சுபா வந்துக் கதவை வேகமாகத் தட்ட , என்னவென்று எட்டிப் பார்த்தவன் திறந்த கபோர்டை மூட மறந்தான்.இவன் உலப்பிக் கொண்டு இருந்ததால் அங்கிருந்தப் பொருட்கள் எல்லாம் கீழே பாதி விழத் துவங்கி இருந்தது.
பதற்றமாக நின்றிருந்தவளிடம், “என்னக்கா …” என ,
“ஆதி .. அனுவுக்கு இடுப்பு வலி எடுக்குதுனு சொல்றா… உங்கத்தான வேற ஆஃபிஸ்க்கு அனுப்பிட்ட , நாம ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போகலாம் வா…” எனப் படியிறங்கிக் கொண்டே சொல்ல , தங்கையிடம் வந்தவன் , அவளை தூக்கிக் கொண்டே காருக்குச் செல்ல ,
“… ண்ணா … அவர மட்டும் இங்க கிளம்பி வரச் சொல்லு , நீ கிளம்புண்ணா … ”
அவனால் எப்படி விட்டுச் செல்ல முடியும் , மருத்துவமனை வந்து அட்மிட் செய்தவன் ,அரவிந்துக்கு அழைத்து விட்டான்.
“மாப்ள…. எப்படி இருக்கீங்க வந்துட்டீங்களா , நாங்க இப்பதான் ஊருக்கு வந்தோம்… ”
“நல்லாயிருக்கேன் மச்சான் ..” என்றவன் விவரம் சொல்லி யாரிடமும் சொல்லாமல் உடனே கிளம்பி வாங்க எனவும் ,அரவிந்துக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது , ஒரு முக்கிய கேஸ் பார்க்க வேண்டும் என்றவன், தூத்துக்குடி வந்து சென்னை விமானத்தில் ஏறிக் கொண்டான்.
வித்யாவிற்கு வலி விட்டு விட்டு வர , அவள் கடவுளிடம் கேட்டுக் கொண்டது , அரவிந்த் வந்தப் பிறகு தான் குழந்தைப் பிறக்க வேண்டும் என்பதைத் தான்.
காலைப் பதினொரு மணிக்கெல்லாம் மருத்துவமனை வந்தவனை , விக்ரம் கைக்கொடுத்து அழைத்துச் செல்ல , விழி மூடியிருந்த வித்யா கணவனின் வருகையை அவனது காலடி ஓசையிலயே உணர்ந்து ,
‘வந்துட்டீங்களா’ என்ற பார்வையை கணவனுக்கு அளித்தவள் . அருகில் நின்ற அண்ணனிடம் ,
” ண்ணா… நீங்க கிளம்புங்க … இப்ப வலி இல்ல…. எப்படியும் லேட்டாகும்…. வரு ரொம்ப தேடுவா….” அருகிலிருந்த சுபாவும் ,
“ஆதி நீ கிளம்பு , அதுதான் கொழுந்தன் வந்துட்டாங்கலே … இனி நாங்க பார்த்துக்கிறோம்.… ”
‘இல்லை இருக்கிறேன்’ என்றவனை , அரவிந்தும் எடுத்துச் சொல்லி கிளம்ப வைத்தான். அவர்களுக்கு தனிமை தந்து சுபாவும் வெளியே செல்ல ,
படுத்திருந்த வித்யாவின் தலையில் ஒரு கையும் , வயிற்றில் ஒரு கையும் வைத்தவன் … அவள் நெற்றியில் முத்தமிட்டு ,
” பயந்துட்டேன்….” என கண்ணில் உயிரைத் தேக்கி நின்றவனைப் பார்த்தவள் ,
“நியுராலிஜிஸ்ட்க்கு பயமா…” என கேலி செய்தாலும் ,
“எவ்வளவு வலி வந்தாலும் உங்களப் பார்க்காம டெலிவரி ரூம் போயிருக்க மாட்டேன் .. நீங்க வர தான் அவங்களும் வெய்டிங்… ” என வயிற்றைக் கண்களால் காட்ட, அன்னையின் கூற்றை மெய்பிப்பது போல் குழந்தையும் உள்ளே அசைவுக் கொடுத்தது.
மாலை நான்கு மணி போல் வீடு வந்த விக்ரம் அறைக்கு வந்து தேவையானதை எடுத்து வைக்க ஆரம்பித்தவன் , சற்று முன் லதாவும் அழைத்து புடவை எடுத்துக் கொள்ளச் சொல்ல , மறுபடியும் அலமாரி அருகேச் சென்றான்.
அவர்கள் அறை மிகப் பெரிதாக இருக்கும் , அவனுக்கான அலமாரியை மட்டுமே இது நாள் வரை திறந்துப் பார்த்திருக்கிறான். அமிர்தாவோடு வாழ ஆரம்பித்த நாளிலிருந்து அவனுக்குத் தேவையான அனைத்தும் அவன் முன்பு எடுத்து வைத்து விடுவாள். அதனால் அவனுக்கு அலமாரிகளை திறந்துப் பார்க்க சந்தர்ப்பமே அமையவில்லை.
இன்று திறக்கவும் அவனுக்கு மலைப்பாக இருந்தது. உடைகளை விடுத்து , அனைத்தும் அவள் கைவண்ணத்தில் உருவான பொருட்கள் , அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போது பெரிய பெரிய அட்டைப் பெட்டிகள் இரண்டு மூன்றை ஒரு மினி டெம்போவில் கொண்டு வந்திருந்தாள்.
அவள் சேகரித்திருந்த பொருட்கள் அவனுக்கு வழக்கம் போல் சிரிப்பைத் தந்தது. ஆனால் அவள் படிப்பும் அது தானே…. ஒவ்வொன்றாகப் பார்த்தவன் கண்களை ஓரமாக இருந்த அவர்களது தாத்தா வீட்டு மினியேச்சர்….அதாவது அந்த பெரிய வீட்டை அழகாக சிறியதாக செய்து வைத்திருந்தாள். அதன் மொட்டை மாடியில் இரு ஆண் , பெண் பொம்மைகள் இரண்டை நிற்க வைத்திருந்தாள். ஆண் பொம்மையின் சட்டையில் விக்ரம் என எழுதியிருக்கவும் , வாய் விட்டுச் சிரித்தவன் , அவன் கண்ணில் பட்ட டீ ஷர்டை எடுத்து ,
“உனக்கு நைட் உன் ட்ரஸ மறைச்சு வைக்கிறேன்னு , என் டீ ஷர்ட்ட எடுத்துப் போடுவ … அதுல ஏதாவது எடுத்து வச்சுக்காம …இந்த பழைய ஷர்ட்தான் கிடைச்சுதா… ரிது ரிது … ”
அவனுக்கு அதில் இருந்தப் பெயரைக் கண்டு தன் சட்டை என்பதை மட்டும் தான் அறிந்தான். வேறு ஞாபகங்கள் எல்லாம் இல்லை.
அதற்குள் நேரமாகவும் அவளது முகூர்தப் புடவையை எடுக்க , கூடவே அவனது மற்றொரு டீ ஷர்ட்டுன் ஒரு புடவையையும் ஒரு கண்ணாடிபையில் சுற்றி ஒட்டி வைத்திருந்தாள். அதையும் எடுத்துப் பார்க்கத் தோன்றினாலும் நேரமாவதை உணர்ந்து புடவையைப் பைக்குள் வைத்துக் கொண்டே , வித்யாவின் நலனையும் அறிந்துக் கொண்டவன் , இரவு பத்து மணி விமானத்தைப் பிடித்து பனிரெண்டு மணிக்கெல்லாம் தூத்துக்குடி வந்தான்.
வழக்கம் போல் சண்முகம் காரோடு நிற்க ,
“என்ன மாமா நான் டாக்ஸி பிடிச்சிருப்பேன்ல..”
என்றவாறே கார் அருகே செல்ல , அது அமிர்தா பயணிக்கவே வாங்கப்பட்ட கார் நின்றுக் கொண்டிருந்தது.
” என்ன சின்னையா.. இப்படி சொல்றீக .. அங்கிள்.. அவர இந்தக் கார எடுத்துட்டுப் போய்க் கூட்டிட்டு வாங்க … ஓய்வே இல்லாம வராருனு அனுப்பி வச்சது…. நீங்க உறங்குங்க..”
அதற்குள் அமிர்தா ஃபோன் செய்தவள் , ” வந்துட்டீங்களா … ”
“ஏன்டா மணி என்னாகுது….உன்னத் தூங்க சொன்னேன்ல … இங்க இருந்து நம்ம வீட்டுக்கு வர இன்னும் ரெண்டு மணி நேரமாவது ஆகும் .” எனக் கவலைப்பட்ட விக்ரமனிடம் ,
“இல்ல இங்க நம்ம சொந்தக்காரங்க நிறைய பேர் வந்துருக்காங்க … பேசிட்டே இருந்துட்டேன்…. நீங்க சண்முகம் அங்கிள ட்ரைவ் பண்ண சொல்லிட்டு தூங்குங்க ….” என்றவளது குரல்கமற,
“விக்கி … உன்னையப் பார்க்காம தூக்கம் வராது போல….” அதற்குள் சங்கரி பாட்டி அவளை அதட்டி உறங்கச் சொல்வது கேட்கவும் , ஃபோனை வைத்து விட்டாள்.
மனைவியை காணும் ஆவலில் தானே வண்டியை ஓட்டினான். இன்னும் இரண்டு மணி நேரம் தான் என நினைக்க , ஏதோ ஒரு காரணத்தால் பரணி ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்க .. இரண்டு மணி நேரத்தில் செல்ல வேண்டிய ஊருக்கு ஐந்து மணி நேரம் ஆகியது.
விடியலில் தான் ஊர் வந்து சேர்ந்தான். வந்தவனுக்கு மனைவியைக் கண்டதும் உண்டான அதிர்ச்சி..… சாதாரண அதிர்ச்சி அல்ல….. பேரதிர்ச்சி ….. அது அதிர்ச்சியா மகிழ்ச்சியா என்பது அவனுக்கேத் தெரியவில்லை….
தூவும் …