தேன்துளி 30
தூத்துக்குடி சறைமுகத்திலிருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு சென்ற மிகப் பெரிய சரக்கு லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்திருந்ததே அதற்கு காரணம்.
வேறு பாதையில் செல்வதென்றால் அது மேலும் பல மணி நேரம் எடுக்கும் என்பதால் வரிசையாக நின்ற வாகனங்களுக்கு பின்னால் நின்று விட்டான். திருப்பவும் இயலவில்லை , அது தேசிய நெடுஞ்சாலை என்பதால் இவர்களது வாகனத்திற்கு பின்னும் வாகனங்கள் .
திலீபனுக்கு ஃபோன் செய்து வீட்டினரிடம் விவரம் தெரிவிக்கச் சொன்னவன் காரில் சாய்ந்து உறங்கி விட்டான்.
காலை ஏழு மணி இருக்கும் , அருகில் அமர்ந்து ஃபோனில் பேசிக் கொண்டிருந்த அரவிந்திடம் ” வ…வ… வலிக்குது அத்தான் ” எனவும் , மருத்துவனாகக் கூட மனைவியின் உடல்நிலைப் பார்க்க இயலாது நர்ஸை அழைத்து விட்டான்.
வித்யா வாயிலிருந்து “அ..த்தான் ” என்ற வார்த்தை மட்டுமே வந்தது.… உதட்டைப் பற்களால் கடித்து அவன் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டவள் கண்களைப் பார்த்த அரவிந்தால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
மனித மூளையில் எந்த நரம்பு எங்கு செல்கிறது .. அதை எப்படி சரிப்படுத்த என அறிந்தவனது மூளை வலியில் துடித்த தன்னுயிரானவளைக் காண முடியவில்லை , ஸ்டரக்சரில் ஏற்றாமல் அவளை தூக்கிக் கொண்டு பிரசவ அறையில் படுக்க வைத்து விட்டான்.
அவனும் ஒரு மருத்துவன் என்பதை அறிந்திருந்த அங்குள்ளவர்கள் அவனுக்கும் மருத்துவ பாதுகாப்பு உடைகள் அணிவிக்க முயல , ‘வேண்டாம் ‘என்பது போல் தலையசைத்து வெளியேறி விட்டான்.
வலியில் துடித்து , கதறிக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் பதற்றமின்றி வைத்தியம் செய்தவனுக்கு ,தன்னவளின் கதறல் அவனது மூளை நரம்புகளை மரத்துப் போகச் செய்ய , வெளியில் வந்து ஒரு சேரில் அமர்ந்து முட்டியில் கையூன்றி தலையைப் பிடித்துக் கொண்டான்.
இங்கு ஆதியும் போக்குவரத்து சரியானதும் ஊருக்கு வண்டியைச் செலுத்த, அங்கு அவர்கள் வீட்டின் முன் பெரிய பந்தலிட்டு இவனது வரவுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
ஆதி வந்திறங்கவும் ஆண்கள் எல்லாம் அவனைச் சூழ்ந்துக் கொள்ள , சங்கீதா வேகமாக வந்து ,
” ண்ணா … முகூர்த்த புடவையை குடு…. பாட்டி அங்க உனக்கு அர்ச்சனைப் பண்ணிட்டு இருக்காங்க ….இப்படித்தான் வந்து நிப்பியா … உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன்….” என்றவள் புடவை பையை எடுத்துக் கொண்டு சென்றாள்.
மனைவியைக் காண ஆவலாக இருந்தவனை உறவுக் கூட்டங்கள் விடவில்லை. ஒருவர் மாற்றி ஒருவர் பிடித்துக் கொள்ள , சங்கரி வந்தவர் , அவனை திருஷ்டி கழித்து சீக்கிரம் குளித்து தயாராகச் சொல்லி அனுப்பி வைத்தார்.
திலீபனுடன் உள்ளே வந்தவனை பட்டு வேட்டி சட்டை தந்து தயாராகச் சொல்ல , கீழே இருந்த அறையில் பெண்கள் கூட்டத்தைக் கண்டு அங்குப் போக இருந்தவனைப் பார்த்த லதா ,
” என்ன ராஜா ….இப்படி லேட் பண்ற நீ வந்தா தான் ஃபங்ஷன ஆரம்பிக்க முடியும் … போ போய் ரெடியாகு…” என அவனை அனுப்பி வைத்தார்.
அறைக்கு வந்தவன் தயாராகி கீழே இறங்க , திலீபன் , பிரதாப் மற்றும் அவன் வயது உறவுகள் அவனைக் கைப் பிடித்து காருக்கு அழைத்துச் சென்றனர்.
“எங்கடா போறோம் … ” என்ற விக்ரமிடம் ,
” என்ன மாப்ள இப்படிக் கேட்கிற … நீ வரவும் உன்னைய சீக்கிரம் அழைச்சிட்டு வர ஆர்டர் போட்டுருக்காங்க , எங்க கல்யாணம் நடந்த இடத்துல தான் பந்தல் போட்டுருக்கு … அரவிந்த் வேற பக்கத்துல இல்லனு பாட்டி செம கடுப்புல இருக்காங்க … ” என்றவாறே காரைச் செலுத்தியவன் , ஆற்றங்கரை கோவில் மைதானத்தில் போடப்பட்டிருந்த பந்தல் முன்பு நிறுத்தினான்.
“சங்கரி ஆச்சி ஊர்ல ஒருத்தர் பாக்கி விடல , அத்தனைப் பேரையும் அழைச்சாச்சு , அதான் மண்டபம் எல்லாம் பத்தாதுனு இங்க பந்தல் போட்டாச்சு … ” என்ற திலீபனிடம் மகனைத் தந்த சங்கீதா , விக்ரம் கையைப் பிடித்து ,
“வாண்ணா….” என அழைத்துச் செல்ல , மேடையைப் பார்க்க , அங்கு குழுமியிருந்த பெண்கள் கூட்டத்தில் வருவைக் காண முடியவில்லை .மேடை ஏற முனையும் போது பின்னால் வந்துக் கொண்டிருந்த பிரதரப்பிடம் ,
“அத்தான் உங்க பிள்ளைய பிடிங்க ” என்ற பெண்ணைப் பார்த்த விக்ரம் யோசனைக்குப் போக , அவளோ
“ஆதி அத்தான் … எல்லாரும் உங்களக் காணோம்னு திட்டிட்டு இருக்கும் போது , அவங்க சரியான நேரத்துல வந்துருவாங்கனு வரு சொன்னா … அதே போல கரெக்ட்டா வந்துட்டீங்க ….”
சங்கீதா , “அம்மு வழி விடு… பாட்டி நேரமாகுது சொன்னாங்க … ” அதற்குள் மேடை அருகே சென்று வருவின் அருகே நிறுத்தப்பட்ட விக்ரம் , புன்னகையும் கண்ணீரும் போட்டிப் போட தன்னையே விழி எடுக்காது திருமணப் புடவையில் மணப்பெண் அலங்காரத்தில் பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டு திகைத்துப் போய் நின்றான்.
அவனுக்கு உண்டானது ஆனந்தமா…. அதிர்ச்சியா… இரண்டின் கலவையா …அசையாது பார்த்துக் கொண்டிருந்தவனை ,
“ஆதி அத்தான் … இன்னும் எவ்வளவு நேரம் தான் பார்ப்பீங்க … மாலையப் போடுங்க” எனப் பெண்கள் கேலி செய்ய , சங்கரி பரணியிடம் ,
“சும்மாவே கண்ணுப்படும் … இவன் இப்படி பொண்டாட்டிய வச்சக் கண்ணுவாங்காமப் பார்த்தா எப்படி … லதா அவன ரெண்டு தட்டு தட்டு …” எனவும் ,
அவனை அசைத்த லதா, “அவளுக்கு இந்த மாலையப் போட்டு குங்குமம் சந்தனம் வை… ” எனவும் , மாலையிட்டவன் குங்குமத்தையும் அவள் நெற்றியில் வைத்து , சந்தனத்தையும் எடுத்து அந்தப் பட்டுக் கன்னத்தில் பூசிவிட , மெது மெதுவென இருந்த சந்தனங் கன்னங்களுக்கு மத்தியில் அந்தக் கண்கள் அவனுக்கு ஏதோ உணர்த்த , உணர்ந்தவனின் கண்கள் பளிச்சிட்டு , ஏதோ சொல்ல வாயெடுக்க ,
ராணி , “மருமகனே அம்முவுக்கு சந்தன வாசம் ஒத்துக்காது போதும் … கையெடுங்க … ” என்றவர் உடனேயே ஒரு பூந்துவாலையில் கன்னத்தை ஒற்றி எடுத்தார்.
அதே வேளையில் சென்னையில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வித்யா உடலாலும் அரவிந்த் உள்ளத்தாலும் வலியை அனுபவித்துக் கொண்டு இருந்தனர்.
அவனுக்குத் தந்த இரண்டு டீகளும் ஆறிப் போய் இருக்க ,அருகில் வந்த சுபா … ” என்ன கொழுந்தனாரே … எங்க வீட்டுக்காரர் பெரிய டாக்டர் … அவர் அப்படி இப்படினு அனு சொல்லிட்டு இருந்தா … நீங்களே இப்படி உட்கார்ந்தா எப்படி….”
“இல்லண்ணி … அவ அழுகிறத பார்க்க முடியல ….” என அவன் சொல்லிக் கொண்டு இருக்கவுமே , கூட்டம் அதிகமில்லாத அந்தக் காலை வேளையில் அரவிந்த் வித்யாவின் புதல்வி தன் வரவை அழுகையின் மூலம் அவனுக்கு உரைக்க ,
அந்தச் சத்தமே ஒரு பரவசத்தை நிம்மதியை அரவிந்துக்கு கொடுக்க , வாசலருகே போய் நின்றவனிடம் ஒரு செவிலியர் வந்து ,
“சார் … பெண் குழந்தை சார்.. ரெண்டு பேரும் நல்லாருக்காங்க… ” என்று விட்டு உள்ளே சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் மகளைக் கையில் வாங்கியவனுக்கு வார்த்தைகளே வரவில்லை. அருகில் நின்ற சுபா குழந்தையைப் பார்த்தவர் ,
” அப்படியே வர்ஷினி மாதிரி இருக்கா … வாங்க.. வாங்க அனுவப் பார்த்துட்டு வரலாம்…” என்றவாறே இருவரும் உள்ளே போக , சோர்வில் கண்களைத் திறந்துப் பார்த்த வித்யாவிடம் சுபா ,
” அனு…. தேவதை மாதிரி பொண்ணு பெத்திருக்க… அப்படியே வர்ஷினி மாதிரி இருக்கா … நான் போய் எல்லாருக்கும் சொல்லிட்டு வாறேன் .. ” என்று வெளியேற ,
மகளைக் கையில் வைத்துக் கொண்டே வித்யாவின் நெற்றியில் முத்தமிட்டவனிடம் , “ஃபோன் தாங்க” என்றவள், அண்ணனிற்கு அழைத்தாள்.
அவள் அழைத்த நேரம் தான் விக்ரம் வரு கன்னங்களிலிருந்து கையெடுத்தது . கனிப் பாட்டி ராணியிடம் , “ராணி அவள பெத்தவ இடத்துல செய்றதெல்லாம் நீ செய்” என்று சொல்லிக் கொண்டிருக்க , வருவும் தாயின் நினைவில் ,
“ம்மா” என உச்சரித்த அடுத்த நொடி , ஃபோனைக் காதில் வைத்திருந்த விக்ரம் ,
“இதோ தாறேன் மா” என்றவன் வருவிடம் தர,
“வரு உங்கம்மா வந்துட்டாங்க டி….எங்கண்ணன்கிட்ட கூட சொல்லல உன்கிட்டதான் சொல்றேன் …” எனும் போதே
“ங்கா… ங்கா” என்ற அழுகைச் சத்தத்தை பூரணமாக உணர்ந்த வரு… பேச வார்த்தைகளின்றி திக்க , அதற்குள் சுபாவின் புண்ணியத்தில் வீட்டினருக்கும் செய்திப் பரவி விட , லதா மகனிடம் ,
“என்ன ராஜா சொல்லாம விட்டுட்ட … தனியா இருப்பாளே … இங்க அமிர்தாவ விட்டுட்டு… நாம சென்னைக்கு கிளம்புவோம் … ” என்றார்.
ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் யோசனையோடு மனைவியைப் பார்த்துக் கொண்டே அடுத்த வேலைகளை கவனிக்க ,
எங்கே இருந்தாலும் தன்னையேப் பின் தொடரும் ஆதியின் யோசனைப் பார்வை அறியாதவளா , “என்ன” என்பதாக புருவம் சுருக்கி கேட்க ,
மெல்லியப் புன்னகையோடு , “ஒன்றுமில்லை” என்பதாக தலையசைத்தவன் கையினை வாயில் வைத்தெடுத்து இரு முறை பறக்கும் முத்தம் தந்து அவள் வயிற்றை காட்டி அது குழந்தைக்கு என்றவன் , உதடுகளை மட்டும் குவித்து அது உனக்கு என்பதாக இதயம் போல் விரல்கள் வைத்துக் காண்பிக்க ,சந்தனம் போடும் போதெல்லாம் அதனை துடைத்து துடைத்து சிவந்திருந்த அவள் வதனம் இப்போது சிவப்பு ரோஜாவாகவே மாறியது.
அதைப் பார்த்த திலீபன், “மாப்ள …இவ்வளவு கூட்டத்திலயும் என்னமா ரொமான்ஸ் விட்ற … உன்னைப் போய் சாமியார்னு நினைச்சேனடா…”
“போடா…. ஆறு மாசம் கழிச்சு வந்துருக்கேன் .. அவ பக்கத்துலக் கூட போகவிடாம பண்றாங்க… ” என்றவன் சென்னைக்குச் செல்லும் ஏற்பாடுகளை கவனித்தான்.
அதன் பிறகு பெண்கள் வரிசையாக வந்து வளையல் பூட்ட, அவள் கைகள் வளையல்களால் நிரம்பியதும் , பேத்தியை அழைத்துக் கொண்டு கனி பாட்டியும் விஸ்வனாதனும் அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட , ஆதிக்கு மனைவியுடன் தனிமை கிட்டவில்லை.
லதா தூத்துக்குடியில் இருந்து உடனே செல்ல விமானம் இல்லை என்றால் மதுரை சென்று சென்னை விமானத்தில் பயணிப்போம் என்றதால் விக்ரமும் தந்தையுடன் செல்லும் போது தன்னையேப் பார்த்துக் கொண்டிருந்த மனைவிக்கு கண்களாலயே விடை கொடுத்தவன். ஃபோன் செய்கிறேன் என்பது போல் சைகை செய்யவும் , புடவை முந்தானையில் கட்டி எடுத்துச் செல்லும் தேங்காய் பூ பழத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கிளம்பினாள். பரணியும் இன்பாவும் வந்திருந்தவர்களை கவனிக்க நின்று விட்டனர்.
விஸ்வனாதனின் முகத்தை வைத்தே அவர் பேத்தியைக் காண ஆவலாக இருக்கிறார் என்பதை அறிந்த வரு ,
“அப்பா நீங்க சென்னைக்குப் போய்ட்டு வாங்க …. இங்க நிறைய பேர் இருக்காங்க என்னைப் பார்த்துக்குவாங்க… ” எனவும் அவர் இருமனதாகவே கிளம்பத் தயாரானார்.
விக்ரமனும் குடும்பத்தாரோடு தன்னைக் காண திரும்ப சென்னை வருகிறான் என்பதையறிந்த வித்யா சோர்விலும் ,
” ண்ணா…. நீங்க உங்க மருமகள பொறுமையா வந்துப் பாருங்ங்க … அவளைச் சும்மா உங்களுக்காக காக்க வச்சுட்டே இருக்காதீங்க…. இங்க தைரியமா இருக்கேன்னா அதுக்கு காரணம் உன் மச்சான் … எத்தனைப் பேர் என் பக்கத்துல இருந்தாலும் அவங்க போல வராதுண்ணா… என்னோட இதே எண்ணம்தான் வருவுக்கும் இருக்கும் … நீங்க தான் அவ தைரியம் …. அவ உயிர் எல்லாமே … ப்ளீஸ்ணா அவக் கூட இருங்க… முடிஞ்சா உங்க கூடவே இங்க அழைச்சிட்டு வாங்க …. “