தேன் துளி 31
நான்கு வருடங்களுக்கு முன்பு …
கோவிலில் இருந்து வருவும் அவள் சகோதர சகோதரிகளும் கிளம்ப இருக்க , லதா மற்றும் அவரது உறவுப்பெண்கள் சிலருடன் விக்ரமும் கையில் ஒரு குழந்தையை வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டு அங்கு வந்துக் கொண்டிருந்தான்.
லதாவின் அக்கா மகள் சுபாவின் குழந்தையைத் தான் கையில் வைத்திருந்தான். வித்யா அன்று வராததால் ஏமாற்றமடைந்திருந்த அரவிந்தும் தங்கைகளை அழைத்துச் செல்ல அங்கு வந்தவன் ,விக்ரம் குடும்பத்தாரைக் கண்டதும் வித்யா அவர்களோடு வந்திருப்பாளோ எனக் காண அவர்கள் அருகே சென்று ,விக்ரமிடம் நலம் விசாரித்தான்.
அண்ணன் பேச ஆரம்பித்ததும் சற்றுத் தள்ளி வந்துக் கொண்டிருந்த வரு , சாரு , அம்மு ஆகியோரும் அருகில் வந்து நின்றுக் கொண்டனர். இப்போது குழந்தை சுபாவிடம் இருக்க வரு அருகில் சென்று விளையாட்டுக் காட்ட ஆரம்பித்து விட்டாள்.
அரவிந்திடம் பேசிக் கொண்டிருந்த விக்ரம் திரும்பி பார்க்க , அழகான கரும் பச்சை நிற தாவணியில் , எப்போதும் விரிந்தோ, அல்லது குதிரைவால் கொண்டையோ போட்டு வளைய வரும் வரு ஜடை பின்னி மல்லிகைப் பூ வைத்திருந்தாள்.
“அட … சகல லவ்வ சொல்லிட்டான் போல .. அப்படியே ஆள மாத்திட்டான்….” என சிரித்துக் கொண்டான். அவன் தன்னைப் பார்த்து தான் சிரிக்கிறான் என உணர்ந்துக் கொண்ட வரு ஆதியிடம் தனிமையில் பேச சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்தாள்.
வீட்டுக்கு வந்தவள் அவனிடம் காதல் சொல்லும் போது தான் தருவதற்காக இந்தப் பத்து நாட்களாக உட்கார்ந்து செதுக்கிய விக்ரமின் தாத்தா வீட்டு மினியேச்சரை அழகாக பச்சை நிறத்தில் மின்னும் கிஃப்ட் கவர் போட்டு வைத்துக் கொண்டாள்.
சென்ற மாதத்தில் தான் பதினெட்டில் அடியெடித்து வைத்திருக்கும் இளம் பெண், புதிதாக காதல் உணர்வுகள் பெற்ற இளமங்கை வேறு … மொபைலில் அவனைப் பார்த்துக் கொண்டே ,
“விக்ஸ்டப்பா நீ பாட்டுக்கு கிளம்பி போய்ட்ட ,… நான் பாரு உன்னையவே நினைச்சிட்டு லூசு மாதிரி சுத்தறேன் … அண்ணா பார்த்துட்டு .. என்ன பாப்பா பொம்மையா வாங்கி குவிக்கிற சொல்றாங்க … பாட்டி என் தைல டப்பா காணோம் காணோம்னு தேடுறாங்க ….. நீ வந்துப் பாரு அந்த பொம்மைங்க யாருனு … தைலம் டப்பா எங்கனு … என்னப் பண்ண விக்ஸ்டப்பா பார்த்தாலே நீ தான் ஞாபகம் வார.. ” எனச் சிரித்துக் கொண்டவள் , விக்ரமிடம் காதல் சொல்லும் நேரத்துக்காக காத்திருந்தாள்.
நாளை தாய்மாமன் வீட்டார் செய்யும் சடங்கு என்பதால் நாளை அவர்கள் வீட்டிற்குச் செல்லும் போது விக்ரமிடம் காதல் சொல்ல முடிவெடுத்துக் கொண்டாள். அரவிந்தும் தன் காதலிக்குத் தர நிறையப் பரிசுப் பொருள்களை வாங்கி வைத்துக் கொண்டான். மொத்தத்தில் அண்ணன் தங்கை இருவரும் மறுநாள் மாலை எப்போது வரும் என எதிர் பார்த்துக் காத்திருந்தனர்.
பொழுதும் அழகாக விடிய மாலையில் எடுத்துச் செல்ல வேண்டியதை எல்லாம் ராணியுடன் அமர்ந்து சரிபார்த்துக் கொண்டிருந்தாள் வரு…. உறவுகள் எல்லாம் குவியத் துவங்க , பெண்களோடு அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்த கனிக்கு , ஏதோ குடிக்க எடுத்து வந்த வருவைக் கண்ட பிரதாப்பின் அம்மா மாலதி , மகன் விரும்புகிறான் என்பதைக் காட்டாது கனியிடம் ,
” பெரியம்மா… வந்த புதுசுல கையில்லாத சட்டையும் முட்டிவரை ட்ரவுசரும் போட்டுட்டு இருந்த நம்ம விசு அண்ணன் பொண்ணா இது … பாவாடை தாவணியில மகாலெட்சுமி மாதிரி இருக்காளே … ”
“எம் பேத்தி மகாலட்சுமி தான் டி… எங்க அவ அம்மைய கணக்கா அவுக வழியிலேயே போயிருவாளோனு நினைச்சேன் … இல்ல நம்ம குடும்ப வாரிசுதான்னு நிரூபிச்சுட்டா..” எனப் பெருமையாக வருவைப் புகழ்ந்து கொண்டிருந்தார்.
“அதான் பெரியம்மா … என் மவனும் டிகிரி படிச்சு இப்ப அவுக அப்பா தொழில எடுத்து நடத்திட்டு இருக்கான்… தினமும் தூத்துக்குடில நம்ம சரக்கு மட்டும் கோடி ரூவாயில ஏத்துமதி ( ஏற்றுமதி) ஆகுதாம்…. சிவாண்ணனுக்கு நல்லாத் தெரியுமே … பேசாம அவள என் வீட்டுக்கு மருமகள அனுப்புங்க , ஆளு நல்லா செவ செவனு அவுக அம்மா மாதிரியே அழகா வேற இருக்கா … ”
“ஏட்டி காசு பணம் நம்மக்கிட்ட இல்லாததா… இப்பதான் பள்ளிகூடம் முடிச்சிருக்கா… ஆயிஅப்பன் (அம்மா அப்பா) … இப்ப என் பேரனும் வைத்தியருங்க ….அவளும் அது தான் படிக்கப் போறேன்னு சொல்லிட்டு இருக்கா … இப்ப போய் எப்படி கல்யாணம் பேச …. இப்படி பேசுறோம்னு தெரிஞ்சாலே உங்கண்ணங்காரன் திரும்ப பெட்டிய கட்டிட்டு கிளம்பிருவான்.”
“ஐய… என்ன பெரியம்மா நீங்க … கல்யாணம் பண்ணா படிக்க முடியாதா என்ன … என் மருமகள நாங்க படிக்க வைக்கிறோம்…. அப்படி இல்லனா இப்ப பூ வச்சு உறுதி பண்ணிருவோம் ரெண்டு மூணு வருசத்துல கல்யாணம் வச்சுக்கலாம் …..யோசிச்சுக்குங்க ….அப்புறம் அண்ணன் அவுக பொண்டாட்டி வீட்டு ஆளுகளுக்கு மகள கொடுத்துராம… ”
இப்படிச் சொன்னதும் யோசனை செய்த கனி பாட்டி … “நீ சொல்றதும் சரிதான் … மூத்தவன் மவன் கல்யாணம் முடியட்டும் பேசிப் பாக்குறேன்….”
இது எதுவும் அறியாத வரு மாலைவிழாவுக்கு பச்சை ரவிக்கையும் , பச்சைப் பாவாடையும் அணிந்து , தங்க நிற தாவணியில் , பச்சைக் கல் பதித்த நகைகள் எனத் தயாரானாள்.
சிவானாதன் , விஸ்வனாதன் என பரணியுடன் பிறந்த சங்கீதாவின் இரு தாய் மாமன்களோடும் , அந்த முறையில் உள்ள அத்தனை பேருடனும் திலீபனைத் தவிர அனைவரும் மேளதாளங்களோடு சீர் தட்டுகள் சுமந்துச் சென்றனர்.
முன் வரிசையில் பெண்கள் நிற்க அவர்களோடு வருவும் கையில் பூ தட்டைச் சுமத்தபடி அமுதாவிடமும் ,சாருவிடமும் சிரித்துப் பேசிக் கொண்டு வந்தாள். வீட்டருகே வரவும் புகைப்படக்காரர்கள் அவர்களை நிற்க வைத்து விதவிதமாக போட்டோ வீடியோ என எடுத்துக் கொண்டிருக்க , அவர்களை வரவேற்க விக்ரம் வீட்டில் அனைவரும் குடும்பமாக வந்து நின்றனர்.
அனைவரும் ஒருவருக்கொருவர் கைகுவித்தும் , கைக் குலுக்கியும் அழைத்துச் செல்ல , அரவிந்தையும் , பிரதாப்பையும் இன்னும் இரு இளைஞர்களையும் விக்ரம் அழைத்துச் சென்றான். சங்கீதா அருகில் அழகுப் பதுமையாக வித்யாவும் நின்றுக் கொண்டு , அக்காவிற்கு அனைவரும் வைக்கும் திருநீற்றை சரி செய்வது போல் நின்று அரவிந்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நாளை அனைவரும் ஊருக்குச் சென்று விடுவோமே என்ற கவலை அவள் கண்களில் தெரிவதைக் கண்ட அரவிந்த் அவளிடம் தனியாகப் பேசும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான்.
கனியிடம் பிரதாப்பிற்கு பெண் கேட்டு அவன் அம்மா பேசியிருந்தது தெரிந்த பிரதாப், முதல் நாள் தன் விருப்பத்தை கூறியிருந்ததால் அவளிடமும் சம்மதம் கேட்க தனிமை கிடைக்காதா எனப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மொத்தத்தில் ஒரு திருமணத்தில் பல திருமணங்கள் நிச்சயக்கப்படுவதும் …. புதிதாக காதல் முளைப்பதும் …. முளைத்த காதல்கள் நீருற்றி செழிப்பாக வளருவதும் அவ்விடத்தில் தான் இருக்கும்…..
இளம் ஆண்கள் கூட்டம் இளம்பெண்களைச் சுற்றி வருவதும் , நம்மைத் தான் பார்க்கிறார்கள் என்றுத் தெரிந்தாலும் பார்க்காததுப் போல் பார்ப்பதும் , அவர்களுக்குப் போக்கு காட்டுவதும் …. நிஜம்தானே….. ஆணோ பெண்ணோ அனைவரும் அனுபவித்திருப்போம்.
அப்படித்தான் அன்றைய நாளும் சென்றுக் கொண்டிருந்தது. பெரியவர்கள் தங்கள் வேலைகளைப் பார்க்க , இளையவர்கள் காதல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தார்கள்.
அதுவும் வருவை சொல்லவே வேண்டாம் .. விக்ரம் எங்கெங்கு நிற்கிறானோ அங்கெல்லாம் அழகாக வலம் வந்துக் கொண்டிருந்தாள். விக்ரமை தனியாக சந்திக்க ஆவல் கொண்டு வலம் வர , விக்ரமுடன் பேசிக் கொண்டு இருந்த பிரதாப்பிற்கு அவள் தன்னைத்தான் பார்க்கிறாளோ என்றொரு எண்ணம்.
தன் காதலை வெளிப்படுத்தியதோடு அம்மாவும் கனி பாட்டியிடம் பேசியதாக சொல்லவும் , தனியாக அவளுடன் பேச ஆவல் கொண்டான்.
விக்ரமும் கவனித்தவன் , ” பிரதாப் உனக்கு என்ன கலர் டா பிடிக்கும் … ” அவன் வருவைப் பார்த்துக் கொண்டே … “பச்சைதான்டா பிடிக்கும் …. “வாய் தானாக சொல்லியது. ஏனெனில் தினமும் அவன் கோவிலுக்கு வரும் போதெல்லம் பச்சை நிற உடைகள் , அணிமணிகளை அணிந்து வரவும் அவன் மெல்லியப் புன்னகையோடு அவ்வாறு கூற.….கேட்ட விக்ரம் அடக்க மாட்டாது சிரித்தான்.
அதுவரை வருவையேப் பார்த்து பதிலளித்துக் கொண்டிருந்த பிரதாப் , அவன் சிரிப்பதைப் பார்த்து … “ஏன்டா … ஏன் ” புன்னகையுடன் எனக் கேட்க ,
“அது டா நானும் லவ்வ சொல்லிட்டேன்….அம்மாவும் ஆச்சிக்கிட்ட பேசிருப்பாங்கப் போல … ஆனாலும் ஊருக்கு கிளம்புறதுக்குள்ள அவளும் ஒரு வார்த்தை சொன்னா நல்லா இருக்கும்னுப் பார்த்தேன்.… ” என வெட்கப்பட்டுக் கொண்டேப் பேச …
அவன் தோளில் தட்டியவன் , “டேய் அந்தப் பொண்ணு உன்னையே சுத்தி வரதுலருந்தே தெரியலயா …. உன்கிட்ட தனியா பேச தான் இப்படி நம்ம பின்னாலயே வர்ற மாதிரி இருக்கு … போய் தனியாப் பேசு… ”
“சகல அப்படித்தான்கிறியா…. ”
” பின்ன…. எனக்குத் தெரிஞ்சு அந்தப் பொண்ணு மனசுல உள்ளத பட்டுனு சொல்ற ஆளுதான் … நீ தான் வெட்கப்பட்டுட்டு நிக்கிற ….” என வருவைத் தெரிந்தவனாக அவனைக் கிண்டல் செய்ய … விக்ரம் கையைப் பிடித்துக் கொண்டவன் …
“சகல சகல … இங்க ஒரே கூட்டமா இருக்கு … எப்படியாவது அந்தப் பொண்ண வித்யா மூலமா நம்ம வீட்டு பின் பக்கம் அனுப்பி வையேன்… நான் பேசிட்டு வந்துடுறேன் … நாளை மறுநாள் கிளம்பிருவானு கேள்விப்பட்டேன்…..” இப்படி அவர்கள் வழக்காடிக் கொண்டிருந்த நேரம் விக்ரமின் தாத்தா முன்புறம் பந்தியில் அமர்ந்திருந்தவர்களிடம் பேசுவதும் , பின்புறம் செல்வதுமாக இருக்க கண்டவன் , பிரதாப்பிடம் ,
“இரு ஏதாவது செய்ய முடியுமா பார்க்கிறேன் என்று விட்டு தாத்தா அருகில் சென்றான்.
வீட்டின் முன்புறம் மிகப் பெரிய பந்தல் போடப்பட்டு பந்தி நடைபெற்றுக் கொண்டிருக்க , வீட்டின் பின்புறம் சமையல் நடந்துக் கொண்டிருந்தது. விக்ரம் வீட்டு ஆண்கள் அனைவரும் அங்கும் இங்கும் சென்றுக் கொண்டிருந்தார்கள்.