சட்டென்று ஆதியின் கையிலிருந்த கைப்பேசியை உரிமையாக வாங்கிய அமிர்தா , அவள் முகத்திற்கு நேராக வைத்து ,
“ஓ… அப்படியா அண்ணி , சாப்டீங்களா அண்ணி , அண்ணா எங்க அண்ணி ” என வார்த்தைக்கு வார்த்தை அண்ணிப் போட்டு சைகையாலும் , வாயசைப்பாலும் கேட்க … ” கேட்டுக் கொண்டிருந்த அனுவிற்கு ஆச்சரியத்தோடு கண்ணீரும் புன்னகையும் ஒன்றாகத் தோன்ற ,ஒற்றைக் கையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ,
“ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்கிட்ட இப்படிப் பேசுற… இனி உன் பேரையே சொல்ல மாட்டேன் … அண்ணி தான் … நீயும் இப்படியேக் கூப்பிடு ….” என்று நெகிழ்ச்சியாக சொல்லி ,
” ண்ணா …. நிஜமா சொல்றேன்ணா… அவள நல்லாப் பார்த்துக்க உங்களால மட்டும் தான் முடியும்னு எனக்குத் தெரியும் …. ஆனா இவ்வளவு சீக்கிரம் …. நோ சான்ஸ் …ண்ணா எங்க கிட்ட எல்லாம் எழுதி காட்டியும் , சைகைலயும் மட்டும் பேசுறவள… எப்படிண்ணா…. என்ன மேஜிக் போட்டீங்க … சத்தம் அதிகம் இல்லனாலும் பேச முடியுது…. அப்ப அப்ப …உங்ககிட்ட இருந்தா மட்டும் தான் பேசுவாளா … ”
அனுவிற்குப் பின்னால் நின்ற தக்ஷனும் ,
” எப்போ மா … ஏன் மா … உனக்குப் பேச்சு வரும் ட்ரைப் பண்ணுனு சொன்னப்பலாம் … இப்படிக் கொஞ்சம் கூட வாயசைக்கலயே … எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா … கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் ப்ளீஸ் முயற்சி பண்ணுமா ….. ” இவர்கள் பேசுவதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்த ஆதியிடம் ,
“ஆ… ம்ஹூம் மச்சான் … தேங்….” என்று சொல்ல வந்த தக்ஷனிடம் ,
“மாப்ள ….போதும் காலையிலருந்து தேங்க்ஸ்ங்கிற வார்த்தையக் கேட்டு ரொ…ம்ப நொந்துப் போய்ட்டேன்…. உங்க தங்கச்சிட்ட பேசிட்டு வைங்க , மிஸஸ் தக்ஷன் நீங்களும் உங்க அண்ணிட்ட சண்டைப் போடுறதா இருந்தா நேராவே சண்டைப் போடுங்க ” என்று விட்டு அமிர்தா முகம் காட்ட ,
அமிர்தாவும் நெகிழ்ந்திருந்தவள், இப்போது கண்ணீரோடு தன் விரல்களில் முத்தம் பதித்து அதை தோழிக்கு அனுப்ப ,
“போடி …. எனக்கு ஒன்னும் வேண்டாம் … எங்கண்ணனுக்கே கொடு ….இவ்வளவு நாள் சும்மா பேசக் கூட வாயத் திறக்காதவ , எங்கண்ணாக் கூட இருக்கிறப்போ ரெண்டே நாள்ல கிண்டல் பண்ற அளவுக்கு வாயத் திறந்துப் பேசுற … , நான் வைக்கிறேன்…” என்ற அனு கைப்பேசியை அணைத்து வைத்து விட்டு கைகளில் முகம் பதித்து அழுக , பின்னிருந்து அவளை இடையோடு அணைத்துப் பிடித்து ஒரு கையால் அவள் முகத்திலிருந்து கையை எடுத்து விட்டு கன்னம் துடைத்த தக்ஷனின் கையை எடுத்து விட்டு அறையை விட்டு வெளியேற முயன்ற அனுவைப் போக விடாது , அவள் வலது கையைப் பிடித்து நிறுத்தினான்.
தக்ஷனின் முகம் பார்க்காது முகம் திருப்பி நின்றவளிடம் ,
[the_ad id=”6605″]
“சாரி” என்க , பட்டென்று திரும்பி அவன் முகம் பார்த்த அனு , எதுவுமே பேசாமல் கையை உருவிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.
மனைவியின் விழிகள் கேட்ட கேள்விகளுக்கு தக்ஷனால் பதில் சொல்ல முடியாமல் அவனும் எழுந்து அவள் பின்னோடு சென்றான்.
அப்போதுதான் வீட்டினுள் நுழைந்துக் கொண்டிருந்த நாதன் , மகனும் மருமகளும் மாடிப்படிகளில் இறங்குவதைப் பார்த்துப் பார்த்தவர் ,
“தக்ஷ் மருமகள நாளைக்கு கோவிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு வாப்பா…. ”
“ம் சரிப்பா ….” என்றக் கணவனைப் பார்த்த அனு , சமையலறைக்குள் சென்று விட்டாள். அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த செல்லம்மா ,
“சாப்பிட எதுவும் வேணுங்களா அம்மினி … ”
“மாமா வந்துட்டாங்க ஆன்டி , நான் ஒரு டீ போட்டு எடுத்துட்டுப் போகட்டுமா ”
“என்ன அம்மினி …உங்க வீட்ல நீங்க சமைக்க என்னைய கேக்கலாமுங்களா … டீத்தூள் , சர்க்கரை … ” என எடுத்து வைத்துக் கொண்டிருந்தவர் சமையலறை வாயிலில் வந்து நின்ற தக்ஷனைக் கண்டதும் ,
“அம்மினி நீங்க டீ போடுங்க , நான் பின்னால காயப்போட்ட துணி எடுத்துட்டு வாறேன் .. ” என்றவாறு பின் வாசல் வழியாக வெளியே சென்று விட்டார். தக்ஷன் வந்ததை கவனிக்காத அனு டீ தயாரித்துக் கொண்டிருக்க ,அனு அருகில் வந்து சமையல் மேடையில் சாய்ந்து நின்று அவளையேப் பார்க்க ,
அவனைக் கவனித்த அனுவுக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தது.அவள் கரத்தை எடுத்து மென்மையாக நீவியவன்,
” எப்போ நமக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணாங்களோ அப்போ இருந்து நீ என்கிட்ட பேசல … இதோ கல்யாணம் ஆகி அஞ்சு நாள் கூட ஆகிருச்சு …. நீ பேசுறது என்ன .. என்னைப் பார்க்க கூட மாட்டிக்கிற… ” என ஆதங்கமாகக் கேட்டவனிடம் ,
“மாமாவுக்கு டீ கொடுக்கணும்” என்றவள் அவனிடமிருந்து விலகி , அவனருகே ஒரு டீ கப்பையும் வைத்து விட்டுத்தான் நகர்ந்தாள். தக்ஷனை அவள் மெளனம் வெகுவாக பாதிக்க , ஹாலுக்கு வந்தவன் ,
“அப்பா நாங்க நாளைக்கு மருதமலை போய்ட்டு வாறோம்…”
“ம்…. ரொம்ப நல்லது, முடிஞ்சா நம்ம ஊட்டி கெஸ்ட் ஹவுஸ்ல நாலு நாள் தங்கிட்டு வாங்களேன் … மருமகளுக்கும் , அம்முவுக்கும் இது கடைசி வருஷம் , ரெண்டு பேருமே அவங்க படிப்ப முடிச்ச பிறகு தான் வெளிநாட்டுக்கு போக முடியும் … ”
“பரவாயில்ல மாமா , உங்கக் கூடவே இருக்கிறோம். படிப்பெல்லாம் முடிஞ்சதும் மற்றதுப் பேசிக்கலாம். ஊருக்கு போற வரை , நானும் உங்களோடவே வந்து பிராக்டிஸ் பண்ணிக்கட்டுமா…”
மருமகளின் பேச்சில் புன்னகைத் தோன்ற,
” அனுமா … எனக்கு இருந்த சந்தோஷத்துல ஆஷா அறக்கட்டளை பங்கு மட்டுமில்ல அதோட நிர்வாகம் முழுதும் உங்களுக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணின அன்னைக்கே என் திருப்திக்காக உங்க ரெண்டு பேர் பெயர்ல மாத்திட்டேன் , அது உன்னோடது , நீ எப்ப வந்தாலும் சரிதான். ஆனா இப்பதானம்மா கல்யாணம் ஆகிருக்கு…நீ படிப்ப முடிச்சு வந்ததும் பார்த்துக்கோ மா…”
“ஏன்…ப்பா..” என்ற தக்ஷனின் தோளில் தட்டியவர் ,
[the_ad id=”6605″]
“நான் ரொம்ப நாளைக்கு அப்புறம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் … இதை அப்படியே தக்க வச்சுக்கிறதும் உங்க கையில தான் இருக்கு , என் மகன் வாரிசையும் , மகள் வாரிசையும் பார்த்துட்டாப் போதும் நிம்மதியா என் கடைசி காலத்தை தள்ளிருவேன்.”
எழுந்தவர், நின்றிருந்த அனுவின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து ,
“கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும் கிளம்பியாச்சு தாமரை மூணாவது மறு வீடு பொங்கலப்போ அனுப்புங்கனு சொல்லிட்டா … அதற்கப்புறம் மூணு மாசம் அனு மட்டும் காலேஜ் போக அங்க தானப்பா இருக்கணும் , ரெண்டு பேரும் சேர்ந்து இருப்பதற்கான நேரங்கள் ரொம்பக் கொஞ்சம் தான் … இதுக்கு மேல நீங்க தான் முடிவு பண்ணனும் ,
அனு வாயைத் திறப்பதற்குள் , “ஷ்யர் பா … நாங்க நாளைக்கு சாயந்திரமே ஊட்டிக் கிளம்புறோம் ” என அனுவைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
அதே வேளையில் ஆதியும் அமிர்தாவைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். மாடித் தோட்டம் அமைந்த உயர் தர உணவகத்தில் கடலைப் பார்த்தவாறு அமைதியாக அமர்ந்து இருந்தனர்.
கடற்கரையில் தங்கையிடமிருந்து கைப்பேசி அழைப்பு வரும் வரையுமே அமிர்தாவிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தவன் , அதன் பிறகு ஏதோ யோசனையிலயே இருந்தான்.அமிர்தாவும் அவளாக எதுவும் பேசவில்லை.
முதலில் கொண்டு வந்து வைக்கப்பட்ட சூப்பை அருந்திக் கொண்டே ,
“ஏன் நீ யாருகிட்டயும் பேச முயற்சிக்கல , யாரும் கேலிப் பண்ணுவாங்கனா…. ”
“இல்லை” என்று தலையசைத்த மனைவியிடம் ,
” உன்னையக் கல்யணம் பண்ணிக்க எனக்கு சம்மதம்னு சொன்ன நேரத்துல உன் முகமும் கண்களும் காட்டின சந்தோஷம் எனக்கு ஆச்சரியமா இருந்தது. நேத்து சென்னைல இருந்து கிளம்புன நேரத்துலருந்து சத்தம் கம்மியா வந்தாலும் பேசுறனு தெரியப் போய் தான் … உன் உதட்டையேப் பார்க்குறேன் ….” மெல்லியப் புன்னகையோடு ,
“இன்னொன்னு தெரியுமா உன் லிப்ஸ் தான் என்னைய விரதத்தை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாமானு யோசிக்க வச்சது ” எனவும் ,
“ஷ் ” என்று விரல் வைத்து கைக் குவிக்கப் போனவளிடம் , ஸ்பூனை வைத்து விட்டு அவனே கைக் குவித்து கன்னத்தில் போட்டுக்கொள்ளவும் , எதிரில் அமர்ந்திருந்தவன் தோளில் செல்லமாக அடித்து ,அமிர்தா அழகு பற்கள் தெரிய சிரிக்க ஆரம்பித்தாள்.
அவளையே இமைக்காதுப் பார்த்தவன் , ” நீ ஏன் பேச முயற்சிப்பண்ணலனு எனக்குத் தெரியாது.. ஆனா இந்த சிரிப்ப வாட விடாமல் நம்ம கடைசி காலம் வரைப் பார்த்துக்கிறது என் பொறுப்பு … ” என்றவனை காதல் பெருகும் விழிகளால் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தக்க்ஷனுக்கும் அனுவிற்கும் திருமணம் முடிந்த அன்று அனைவரும் மனவுளைச்சலில் இருந்ததால் புதுமணத் தம்பதிகள் இணைந்து இருக்கவில்லை. அமிர்தாவுடன் தான் அனு தங்கிக் கொண்டாள். அடுத்தடுத்த நாட்களும் அப்படியே , ஆனால் மூன்றாம் நாள் ஆதி அமிர்தா திருமணம் முடிந்து அவர்கள் கிளம்பிய நேற்றைய இரவே இவர்களும் கோவை வந்து விட்டனர்.
இங்கிருந்த அவர்களது உறவுகள் முதலிரவிற்கான ஏற்பாட்டை செய்து விட்டுத்தான் கிளம்பினர். அலங்கரிக்கப்பட்ட மெத்தையில் அனுவிற்காக காத்திருந்தவன் , உடல் களைப்பிலும் , மன நிம்மதியிலும் அவள் வருவதற்குள்ளாகவே உறங்கி விட்டான்.
அவள் அறைக்குள் வந்ததோ, விடிவதற்குள்ளாகவே எழுந்துப் போனதோ எதுவும் தெரியாது. உறவினர்கள் கிளம்பியதும் கிடைத்த தனிமையில் தான் தங்கையிடம் பேசிக் கொண்டிருக்கும் போது மாலையில் அவளை அணைத்தது.
ஆனால் அணைப்பை விலக்கி விட்டுச் சென்றவளிடம் பேசுவதற்கு நிறைய இருந்தாலும், ‘ சாரி’ என்ற வார்த்தையைத் தவிர வேறொன்றும் சொல்ல முடியவில்லை. அவளிடம் மன்னிப்புக் கேட்க அவனுக்கு நிறைய காரணங்கள் இருந்தன.
ஆனால் இரவில் அறைக்குள் வந்த மனைவியைக் கண்டவனுக்கு மற்றதெல்லாம் பின்னுக்குச் சென்று விட்டது. ஆசையோடு எழுந்தவனைப் பாராது தாண்டிச் சென்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
[the_ad id=”6605″]
முதலில் தயங்கினாலும் ,தக்ஷனும் கட்டிலில் படுத்து அவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்த அனுவை மெல்ல நெருங்கி அணைத்து , அவள் காதில் , ‘ஐ லவ் யூ’ என கிசுகிசுப்பானக் குரலில் கூற , அதுவரை அவன் தீண்டலில் தன்னை மறந்திருந்தவள் பட்டென்றுக் கண்களைத் திறந்து அவன் அணைப்பிலிருந்து விலகி எழுந்தமர்ந்து , அவனைப் பார்த்து கண்கள் கலங்க ,
“காதல்.. காதல் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. அதுனாலதான் நான் இன்னைக்கு உங்க மனைவியா இங்க இப்ப உங்க பக்கத்துல இருக்கேன்….. ஆனா … ஆனா உங்களுக்கு இல்லாம போயிருச்சே ….” வெடித்து அழுத மனைவியின் கண்ணீரில் ,
மோகம் வடிந்துப் போக … அவள் கூறிய கூற்றில் தன்னையே வெறுத்தான் தக்ஷன்.
தூவும் …..