வரம் வாங்கி வந்தவள் நான்
தங்களை பின்னால் இருந்து அழைத்த சத்தம் கேட்டு திரும்பிய சுந்தர் ஒரு நிமிடம் அந்த பெண்ணையும் அருகில் இருந்தவரையும் பார்த்து ஆச்சர்யப்பட, ராமையா அந்த வயதானவரை பார்த்து… “ஆத்தா..” என அருகில் சென்றார்.. தெய்வானையும் பிள்ளைகளும் ,
“அப்பத்தா..” “அயித்த” என அருகில் சென்று அவரின் நலம் விசாரிக்க ஆரம்பிக்க,
சுந்தரும் அவரின் நலம் விசாரித்து காலை தொட்டுக் கும்பிட்டான்.. அவன் தலையை தொட்டு ஆசிர்வாதம் செய்தவருக்கு கண்கள் கலங்கியது..
“நீயும் இப்பத்தான் வாறியாப்பு..?? நல்லாயிருக்கியா ராசா.. உன்ர அப்பத்தா இருந்திருந்தா பேரன இப்புடி கோட்டு சூட்டோட பார்க்கிறதுக்கு பகுமானம் தாங்கியிருக்காது.. ம்கூம்… என்ன பண்ண..??”
“நல்லாயிருக்கேன் அப்பத்தா..” பதிலை அப்பத்தாவிற்கு சொல்லிக்கொண்டு அருகில் இருந்த அந்த வெள்ளைபிகரை லுக் விட முன்பு போல அவ்வளவும் பளிச்சென தெரியாமல் இப்போது மேலே கோர்ட் போல ஏதோ போட்டிருந்தாள்..நல்லவேளை அந்த டாட்டூ தெரியல..!! இருந்தாலும் கால் அப்படியே உருக்கி வைத்த வெண்ணெய் போலிருக்க சுந்தருக்கு கண் அங்கிருந்து வராமல் சண்டித்தனம் செய்தது..
அவன் மனமோ ‘டேய் நீ அடங்கமாட்டியா… நாம மட்டும்தான் இப்படியா… இல்ல..!! பார்வையை லேசாக திருப்பியவனிண் கண்களில் மச்சான்கள் மூவரும் அந்த பெண்ணையே ஆஆஆவென வாய்பிளந்தபடி பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது..
அவர்களை திரும்பி பார்த்தவன், ‘நாமளும் இப்படித்தான் கேவலமா ஜொள்ளுவிட்டமா.. மேல கோர்ட் இருக்கும் போதே இப்படின்னா நாம பார்த்த போஸ்ல பார்த்திருந்தா எல்லாரும் பிளாட்டு போலயே..’
மூத்த மச்சானை அழைத்து மற்றவர்களை வேனுக்கு அழைத்து செல்ல சொல்லி பொறுப்பாக ஒரு பொறுப்பை ஒப்படைத்தவன் மனமோ.. ‘டேய் நீ மட்டும் பக்கத்தில உட்கார்ந்து சைட் அடிச்சிட்டு இருக்கலாம்.. இப்ப உன்ர தங்கச்சி புருசனுகன்னு சொன்னவுடன மனசு குத்துதோ..?? என்ன இருந்தாலும் நான் பேச்சிலர்..!! அவங்க அப்படியா..’ தனக்குதானே சமாதானம் செய்துகொண்டான்..
.. “அயித்த யாரு இந்த பொண்ணு..??”
[the_ad id=”6605″]
இவர் அழகம்மை.. இவர்கள் ஊரைச் சேர்ந்தவர்தான்.. நல்ல வசதியான குடும்பம் இவர்கள் அனைவரும் சுற்றிவளைத்து ஏதோ ஒரு வகையில் தூரத்து உறவுக்காரர்கள்தான்.. அதோடு இவர் சுந்தர் அப்பத்தாவின் நெருங்கிய சினேகிதி.. அவர்கள் கஷ்டப்படும்போது அவ்வபோது உதவி செய்தவர்.. சுந்தரை இப்படி பார்க்க உண்மையிலே இவருக்கு ரொம்பவும் மகிழ்ச்சி..
“இவ தர்ஷினி என்ர பேத்தி.. எம்மக கலையரசியோட பொண்ணுத்தா..”
அதுவரை அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் அந்த பெண்ணை பார்த்துக் கொண்டிருந்த தெய்வானை இப்போது வாஞ்சையாகவும் வருத்தமாகவும் பார்த்து அவள் கன்னத்தை திருஷ்டி கழித்தவர்.. “நல்ல மகராசியா இருத்தா.. எதுக்கும் கவலைப்படாத.. கடவுள் இருக்கான்.. அயித்த இனி பேத்தி இங்கனதானா.. அங்கன எல்லாப்பிரச்சனையும் முடிஞ்சிருச்சா..??”
ம்ம்.. பாதி முடிஞ்சிருச்சு.. தேவைன்னா போயிக்கலாம்.. அதான் தெய்வானை இங்கனயே நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து கட்டி வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்..”
“நல்லா செய்ங்கயித்த.. பொண்ணு மகாலெட்சுமியாட்டம் இருக்கு.. மாப்பிள்ளை நான் நீன்னு போட்டி போட்டு நிக்காது..!!”
“சரி வாங்க நீங்களும் ஊருக்குத்தானே போறிங்க.. நம்ம காருல பாதிபேர் போகலாம்..”
ராமையா, “வேணாம்தா வேனு பிடிச்சுதான் வந்திருக்கோம்.. நாங்க பின்னால வர்றோம் நீங்க கிளம்புங்க…” பெண்கள் அனைவரும் தர்ஷினியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க சுந்தரியோ தன் நடுஅக்காவின் காதிற்குள்..
“ஏக்கா எந்தூருல மகாலெட்சுமி தொடைவரைக்கும் டிரஸ் போட்டிருக்கு.. அதுவும் இப்படி கருப்பு கலர்ல..!! ஆத்தாவுக்கு இந்த அப்பத்தாவ பிடிக்கும்தான் அதுக்காக ஓவரா பொய் சொல்லுது.. ஆனா.. இந்த பொண்ண பாரேன்.. பால்லதான் குளிக்குமோ… பால் மாதிரி வெள்ள வெளேர்னு இருக்கு..”
“ஆமா போலடி.. அந்த ஊர்ல எதுல குளிப்பாகன்னு அண்ணே கிட்டயும் கேக்கனும்.. அண்ணனையே பாரேன் செத்த வெளுத்தாப்ல இல்ல.. அங்கயிருந்து சோப்பு கொண்டு வந்திருந்தா நாலு சோப்பு அண்ணேகிட்ட கேட்டு வாங்கிட்டு போகனும்.. நானும் செவத்த கலராயிருவேன்ல.. உன்ர மச்சானுக்கு செவத்தபிள்ளைன்னா ரொம்ப பிடிக்கும்..”
அவள் தோள்பட்டையில் ஒரு இடி இடித்தவள்.. “ஆமா உன்ர புருசன் அப்படியே தீக்கலர்.. அங்கன பாரு கரிச்சட்டியாட்டம் ஒரு கலர்.. இவருக்கு நீயே ஓவர்.. இதுல செவத்த பொண்ணு வேணுமாக்கும்..”
“ந்தா என்ர புருசன ஏதாச்சும் சொன்னியாக்கும் மரியாதை கெட்டுரும் பார்த்துக்க.. அவருக்கென்னடி ராசா…!!”
“க்கும்.. அப்ப நீ தூக்கு கூஜா…” தன் தோள்ப்பட்டையில் இடித்துக் கொள்ள,
அப்பத்தாவும் பேத்தியும் தூரமாய் சென்ற பின்னரும் இவர்கள் இருவரும் அவர்களை பார்த்தபடி பேசிக் கொண்டு மற்றவர்களோடு வராததை கண்ட தெய்வானை சின்ன மகளின் மண்டையில் நறுக்கென ஒரு கொட்டுவைத்து தரதரவென இழுத்துக் கொண்டு சென்றார்..
அனைவரும் வேனில் அமர சுந்தருக்கு மனம் நிறைந்திருந்தது.. தன் குடும்பத்தினரை பார்த்து.. மச்சான்கள் மூவரும் பார்க்க நல்லவர்களாகவே தெரிய இதுவரை மனதிற்குள் உருத்திக் கொண்டிருந்த ஒரு உருத்தல் மறைந்தது.. தாயின் அருகில் அமர்ந்தவன் அவர் கையை பிடித்து வருடியபடி,
[the_ad id=”6605″]
“ ஏன்த்தா ரொம்ப மெலிஞ்சு போயிட்டிங்க.. நீங்களும் அப்புவும்..??”
“நாங்க நல்லாதாப்பு இருக்கோம்.. நீ எங்ககிட்ட இல்லாததுதான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. அதுவும் இவளுக கல்யாணத்துக்கு அண்ணனா சபையில நின்னு ஒரு முறைக்கூட செய்யலைன்னு அவளுகளுக்கு எல்லாம் ரொம்ப வருத்தம்..எங்களுக்கும் கஷ்டம்தான் என்ன வெளியில சொல்ல முடியல..”
“ஏத்தா பெரியப்பா வீட்டிலயிருந்து ஒரு கல்யாணத்துக்கூடவா யாரும் வரலை.. அண்ணனுக யாரையாச்சும் முறை செய்ய சொல்லியிருக்கலாமே..??”
“ப்பச் விடுப்பா அவங்களப்பத்திதான் தெரியுமே.. கல்யாணத்துக்குத்தான் வரலை அப்படியே இருந்திருந்தாக்கூட பரவாயில்ல.. உன்னைத்தான் கஞ்சப்பய.. கருமி.. இப்படி தங்கச்சி கல்யாணத்துக்கூட வராம இருக்கானா.. என்ன காரணம்.. அங்க வேற பொண்ணப்பார்த்து கட்டிட்டான் போல.. கட்டுனாக்கூட காசு செலவாகும்னு வைச்சிக்கிட்டு இருப்பான் அதான் இப்படி அப்படின்னு ஏதேதோ சொல்லி பரப்பி விட்டுட்டாங்க..
சொந்தக்காரங்கள பத்தி கேட்கவா வேணும்.. ம்ம்ம் அவங்களும் ஒன்ன பத்தா திரிச்சு பேச ஆரம்பிச்சு.. எனக்கும் அப்புவுக்கும் தங்கச்சிக கல்யாணம் நல்லபடியா நடந்ததவிட உன்னோட பேர இப்படி அசிங்கப் படுத்துருராங்களேன்னு ரொம்ப வருத்தமா போச்சு..”
கண்ணை மூடி தன்னை சமன் செய்தவன்.. “விடுங்கத்தா.. அவங்க என்ன புதுசாவா பண்றாங்க.. அதோட ஊர் நல்லா இருந்தாலும் பேசும்.. கெட்டுப்போனாலும் பேசும்.. ஆனா எனக்கும் தங்கச்சிக கல்யாணத்துக்கு வராதது ரொம்ப கஷ்டமாத்தான் இருந்திச்சு வந்துட்டு போனா கண்டிப்பா 50000 ரூபாய்க்கு மேல ஆகும் அது இருந்தா ஒரு ஒன்னு, ரெண்டுபவுன் நகை அடுத்த தங்கச்சிக்கு வாங்கலாமேன்னுதான் நானே ரொம்ப கட்டுப்பாடா இருந்தேன்..
அதோட ஒரு தங்கச்சி கல்யாணத்துக்கு வந்திட்டு இன்னொரு தங்கச்சி கல்யாணத்துக்கு வரலைனா மச்சான்கள் என்ன தப்பா எடுத்துக்குவாங்களோன்னு கொஞ்சம் கவலையாவேற இருந்திச்சு..”
“ உன்னப்பத்தி எங்களுக்கு தெரியாதாப்பு..” சுந்தர் தாயின் மடியில் படுத்துக் கொள்ள அவர் மெதுவாக தலையை வருடிவிட ஆரம்பித்தார்.. முதல் தங்கை வந்து அவன் காலை தன் மடியில் வைத்து அழுத்திவிட சுந்தரி எழுந்து வந்து அண்ணன் காலடியில் கீழே அமர்ந்து கைவிரல்களை சொடுக்கெடுக்க ஆரம்பித்தாள்..
“விடுங்கத்தா..” காலை எடுக்கப்போக தடுத்து மற்ற இரு தங்கைகளும் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.. இது அவர்களுக்குள் வாடிக்கையாக நடப்பதுதான்.. பணம், வசதி இருக்கிறதோ இல்லையே இருப்பதை வைத்து அவர்கள் சந்தோசமாகவே வாழ கற்றுக் கொண்டிருந்தார்கள்.. இவர்கள் அனைவரும் கடைசியில் இருந்த நீள சீட்டில் அமர்ந்திருக்க மற்றவர்கள் தூக்கத்திற்கு சென்றிருந்தார்கள்..
………..
வந்ததிலிருந்து ஒன்றும் பேசாமல் இன்னும் தன் கூட்டைவிட்டு வெளிவராமல் தன் மடியில் படுத்திருக்கும் தன் பேத்தியை பார்த்த அழகம்மைக்கு கண்ணீர் வந்தாலும் இனிதான் பேத்தி சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கிறது என்பதை நினைத்து அதை இந்த உலகம் தெரியாத பெண் எப்படி சமாளிக்கப் போறாளோ என்ற கவலையும் வேதனையும் கூடவே வந்தது..
[the_ad id=”6605″]
அங்கு அழகம்மையின் வீட்டில் அவர் மருமகள் பார்வதி தன் கணவரிடம்.. “ஏங்க உங்க தங்கச்சி மக வருதுன்னு ரொம்ப பண்ணாதிங்க.. ஓவரா ஆட்டம் போட்டிங்க அப்புறம் என்னோட இன்னொரு முகத்தை பார்க்கிறமாதிரி ஆயிரும் பார்த்துக்கோங்க..??”
அவர் கணவர் கோதண்டமோ.. “ஆமா இவளோட இந்த முகத்தையே பார்க்க முடியலையாம் இதில இன்னொரு முகமா…!!”
“என்ன என்னமோ முனுமுனுக்கிற மாதிரி இருக்கு..??”
“ஒன்னுமில்லம்மா பாவம் செல்லமா வளர்ந்த பொண்ணு.. கொஞ்சம் அனுசரனையா நடந்துக்கோ..”
அவரை பார்த்து தன் நெற்றிக்கண்ணைத் திறக்க வாயை கப்பென மூடிக் கொண்டார்..
‘ம்ம் போன வருசம் வரைக்கும் இவதான் என் வீட்டு மருமக தங்கம், வைரம், தர்ஸூன்னு கொஞ்சு கொஞ்சுன்னு கொஞ்சினவ.. இப்ப அந்த பொண்ண கண்ணாலயே பொசுக்கிருவா போலயே..’
“ஏன் உங்க ஆத்தாவுக்கு மெட்ராஸ்ல இருக்கிற இன்னொரு மவன கண்ணுக்கு தெரியாதா..? அங்க கொண்டு போய் அவள விடவேண்டியதுதானே அந்த தரித்திரம் பிடிச்சவள..”
“ப்ளிஸ் பார்வதி ஆத்தா இருக்கும் போது இப்படியெல்லாம் பேசிராத.. எனக்கே மனசு ரொம்ப வலிக்கிது அவங்க வயசானவங்க..”
“அவங்களா வயசானவங்க.. அதான் பேத்திய கூட்டிட்டு வரேன்னு ஒத்தையில டிரைவரோட போயிருக்காங்களோ..??
‘இவதான் நம்மள போக கூடாதுன்னு ஆர்டர் போட்டு வராத காய்ச்சல் வந்த மாதிரி ஆக்ட் குடுக்கச் சொன்னா.. இப்ப ஆத்தாவும் போகாட்டா தர்ஷினிய யார் கூட்டிட்டு வருவா’ இதையும் மனதிற்குள்தான் நினைத்தார்.. அவர் தன் பெயருக்கு ஏற்றபடி தண்டமாகத்தான் இருந்தார்..
அழகம்மை தன் பேத்தியோடு வந்து கொண்டிருந்தவர் இன்னேரத்திற்கு வீட்டிற்கு போனால் மருமகள் கண்டிப்பாக சாப்பிட ஒன்றும் வைத்திருக்க மாட்டாள் என்பதை உணர்ந்து பேத்தியை வற்புறுத்தி சாப்பிட வைத்து அழைத்து வந்தார்.. அவருக்கு தன் மருமகளை நினைத்தாலே அப்படி ஒரு கோபம் வந்தது..
மனிதன் பணத்திற்காக எப்படியும் மாறலாம் என்பதற்கு இவரே ஒரு எடுத்துக் காட்டு.. ஆறுமாதத்திற்கு முன்புவரை தர்ஷினிதான் இந்த வீட்டு மருமகள் என மூச்சுக்கு மூன்னூறுதரம் சொன்னவர்.. தர்ஷினியின் நிலை தலைகீழாக மாறவும் அவசர அவசரமாக தன் மகனுக்கு பக்கத்தூரிலிருந்து 200 பவுன் நகையோடு பெண் வரவும் சட்டென திருமணத்தை முடித்திருந்தார்.. அதற்கு பேரனும் மகனும் ஒத்திருப்பதுதான் அழகம்மைக்கு பெரிய வருத்தமே ..
அவ்வளவு பெரிய மாளிகையில் வந்தவர்களை வாவெனகூட அழைக்க ஆளில்லாமல் அனைவரும் உறக்கத்தில் இருக்க தர்ஷினியின் பொருட்களை தன் அறையிலேயே வைத்து பேத்தியை தன்னோடு படுக்க வைத்துக் கொண்டார்..
“காலையில உனக்கு எந்த ரூம் பிடிக்கிதோ அதுல இருந்துக்கோடா தங்கம்..” அவர் சொன்னதை காதில்கூட வாங்காமல் தர்ஷினி அப்படியே தன் பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டாள்..
அங்கு சுந்தரின் சிறிய வீடோ அங்கிருந்தவர்களால் அல்லோலப் பட்டது.. சுந்தரின் இரண்டாவது மூன்றாவது தங்கைகளின் நாத்தனார்கள் , கொழுந்தன்கள் சிறிய வயதினராய் இருக்க அவர்களோடு சுந்தரியும் சேர்ந்து கொள்ள அங்கே ஒரே சிரிப்பும் பாட்டும்தான்.. வழியில் வேனை நிறுத்தி சுந்தர் அவர்கள் விருப்பப்பட்டது என ஏதேதோ திண்பதற்கு வாங்கி கொடுத்திருந்ததால் பெரியவர்கள் உணவு வேண்டாம் என படுக்கச் சென்றிருந்தார்கள்.. தெய்வானை தன் மகனிற்கு சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்..
[the_ad id=”6605″]
அவன் அருகில் அமர்ந்த முதல் தங்கை வள்ளி அவனுக்கு பரிமாற… “விடுத்தா நான் போட்டுக்குறேன்.. நீயே போய் மச்சான பாரு… தம்பி தூங்கிட்டானா..??” அவர்கள் வீடென்றால் அது மாளிகை இல்லை.. கவர்மெண்ட் கொடுத்த தொகுப்பு வீட்டிலிருந்து ஒரு ஹாலும் ஒரு ரூமும் மட்டும்தான் வெளியிலும் முன்னாலும் பெரிய கீற்று கும்பிடு கொட்டகை போடப்பட்டிருக்கும் வெளியில் கிணறும் பாத்ரூம் வசதியும் இருந்தது.. அடுப்படி மட்டும் தனியாக ஒரு ஓட்டு கொட்டகை போடப்பட்டிருக்கும் அங்குதான் இவர்கள் இருந்தார்கள்..தோட்டம் சற்று பெரிதாக இருக்கும்..
“ ரெண்டு பேரும் தூங்கிட்டாங்கண்ணே..”
சௌந்தரம் “நீயேண்ணே வரும்போது ஒன்னுமே சாப்பிடல..?”
தாய்மையின் பூரிப்பில் மிளிர்ந்திருக்கும் தன் இரண்டாவது தங்கையின் முகத்தை பார்த்தவன்,” கால நீட்டி உட்காருத்தா.. காலை தன் பக்கம் நீட்டி விட்டு காலில் லேசான வீக்கம் தெரியவும் ஒரு கையால் சாப்பிட்டுக் கொண்டு மறுகையால் அந்த வீக்கத்தை நீவிவிட்டபடி மெட்ராஸ்ல இருக்கும் போதும் ,இப்ப அங்கன இருக்கும் போது கிட்டத்தட்ட பத்து வருசமா ஹோட்டல்லதானே சாப்பிடுறேன்.. எனக்கு என்னமோ கஞ்சியும் வெங்காயம் வைச்சு சாப்பிடனும் போல இருந்திச்சு.. அதான்..” தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தங்கைக்கும் இரண்டு வாய் ஊட்டிவிட்டான்..
“ஆசுபத்திரி செக்கப்புக்கு எல்லாம் ஒழுங்காப் போறியா… ஏத்தா இது எட்டுன்னா அடுத்த மாசம் வளைகாப்பு வைக்கனும்ல..?”
“ஆமா தம்பி..”
“ம்ம் எந்த ஆசுபத்திரியில காட்டுறது.. பக்கத்தூருல எதாவது பெரிய டாக்டர்கிட்ட காட்டுவோமா..?”
“அண்ணே.. என்ன நீ .. எதுக்கு அங்கன தேவையில்லாத செலவெல்லாம்.. நம்மூரு கவர்மெண்ட் ஆசுபத்திரியிலதான அக்காவுக்கு புள்ளை பொறந்திச்சு.. இங்கனயே நல்லாப் பார்க்குறாங்கண்ணே.. அதோட காசுவேற பேங்கல அக்கா பேருல போட்டாக.. ஏக்கா எம்புட்டு போட்டாக..??”
“அதெல்லாம் நியாபகம் இல்லடி.. ஆனா அந்த காசுக்குத்தான் இந்த தோடுஜிமிக்கி வாங்கினேன்.. அது மட்டும்தான் நியாபகம் இருக்கு..”தன் காதில் இருக்கும் அரைபவுன் ஜிமிக்கியை காட்ட.. சௌந்தரமோ இப்போதே அந்த காசிற்கு என்ன வாங்கலாம் என யோசிக்க ஆரம்பித்தாள்..
நடுத்தங்கையின் கையை பிடித்தவன்,” எதுக்கு கவர்மெண்ட் ஆசுபத்திரின்னு சொல்ற..? வேணாம் அண்ணேகிட்ட காசிருக்கு டவுன்ல பெரிய ஆசுபத்திரியில காட்டலாம்த்தா..”
“போண்ணே.. காசிருந்தா அதுக்கு இப்படியெல்லாம் தேவையில்லாம செலவு செய்யனுமா..தனியாருன்னு போயிட்டா நல்லா சுகப்பிரசவமா பிறந்தாலே 50000..60000 ஆகிரும்.. ஒருவேளை வயித்த கிழிச்சு ஆப்ரேசன்னா கேக்கவே வேணாம்.. அம்மாடி எம்புட்டு செலவு.. உனக்கு செலவுக்கா பஞ்சம் எனக்கு பிள்ளை பிறந்தா அதுக்கு முறை செய்யனும்.. அப்புறமா நாயகி உண்டானா அதுக்கு வளைகாப்பு பிள்ளை பேருன்னு இருக்கு.. எங்களுக்கே பாத்துக்கிட்டு இருந்தா உனக்குன்னு பத்து காசு எப்பண்ணே சேர்த்து வைப்ப.. இத்தன வருசம் பாடுப்பட்டு சம்பாரிச்சத எல்லாம் சேர்த்து வைச்சு எங்களத்தானே கட்டி குடுத்திருக்க.. போதும்ணே இனி அப்பப்ப உன் எதிர்காலத்தையும் பாரு..”
“பாருத்தா என் தங்கச்சி இந்த அஞ்சு வருசத்தில நல்லா வளர்ந்திட்டா…!!”
“போண்ணே சும்மா கேலிபண்ணாத..” அருகில் அமர்ந்திருந்த வள்ளி ஏதோ சொல்ல வந்து தயங்கி தயங்கி ,”அண்ணே…” இழுக்க,
“என்ன வள்ளி சொல்லு எதுக்கு தயங்குற..?” அவள் தன் தாயை பார்க்கவும்,
தன் மகன் அருகில் அமர்ந்த தெய்வானை அவனுக்கு பரிமாறியபடி,” தம்பி உனக்கும் வயசு 30 ஆச்சு.. உன்னோட்ட பயலுகளெல்லாம் ரெண்டு பிள்ளைக்கு தகப்பனாயிட்டானுக.. உனக்கும் கல்யாணத்தை முடிக்கலாம்னு பார்க்கிறோம்பா..”
சாப்பிட்டு கைகழுவியவன்,” ம்ம் பார்க்கலாம்த்தா..”
“அதான்ணே என் நாத்தனா அறிவுமதிய உனக்கு முடிச்சு வைக்கலாம்னு உன் மச்சான் ஆசைப்படுறாரு..??”
“ம்ம் அப்பு அன்னைக்கே போன்ல சொன்னாங்க.. நான் மச்சான்கிட்ட கொஞ்சம் பேசிட்டு சொல்றேன்த்தா..”
“ஏன்ணே உனக்கு விருப்பமில்லையா.. பொண்ணு நல்ல குணம்ணே.. என்ன கலருதான் கொஞ்சம் கருப்பு.. அதோட 12 வது மட்டும்தான் படிச்சிருக்கு.. ரொம்ப பொறுமையான குணம்ணே.. எத்தன பேரு வந்தாலும் ஒரு நிமிசத்தில சோறாக்கி குழம்பு வைச்சிரும்.. அப்பு, ஆத்தாவ நல்லா பார்த்துக்கிரும்..” தன் நாத்தனாரின் திறமைகளை அடுக்க,
தங்கையின் கையை பிடித்தவன்.. “நீ இவ்வளவு சொல்ல வேண்டியதில்ல வள்ளி.. நீங்க எல்லாரும் சேர்ந்து எந்த பொண்ண கைகாட்டினாலும் அண்ணே கட்டிக்குவேன்.. உங்களுக்கு தெரியாதா எனக்கு எப்படிப்பட்ட பொண்ண கட்டனும்னு… இதுவேற விசயம்த்தா..”
“அப்படியாண்ணே நான் ஒருநிமிசம் பயந்திட்டேன்.. ஆனா அவுக காலையில வெள்ளன ஊருக்கு போறேன்னு சொன்னாங்களே.. இப்ப போய் எழுப்பவா..??”
“ஹாஹா ஏய் கழுதை விட்டா இப்பவே அண்ணன தாலி கட்டச் சொல்லிருவ போலயே.. இரு சௌந்தரம் வளைகாப்பு முடியட்டும்.. எனக்கும் இங்கன கொஞ்சம் சோலியெல்லாம் இருக்கு.. நாளாகட்டும்..சரியா..”
“சரிண்ணே சரிண்ணே.. இந்த சுந்தரிக் குரங்குதான் நீங்க பிளேட்ல இருந்து இறங்கி வரும்போது கருப்பு கவுனு போட்டு ந்நா… அந்த பொண்ணோட சோடியா வந்தீகள்ல அந்த பொண்ணு மாதிரி செவத்த கலரா நல்ல படிச்ச பொண்ணத்தான் கட்டுவிங்கன்னு பயமுறுத்துச்சு.. எருமைமாடு..” தங்கைகள் இருவரும் வேறு பேச்சிற்கு தாவ,
சுந்தரோ வெள்ளப்பிகரா.. சட்டென அந்த பெண்ணின் நியாபகம் வர, “ஆத்தா எனக்கு தூக்கம் வருது… படுக்கபோகவா..?”
[the_ad id=”6605″]
“வள்ளி போத்தா அண்ணனுக்கு பாயவிரிச்சு போடு படுக்கட்டும்..” பிள்ளைகளின் அரட்டை சத்தம் முன் வாரத்தில் கேட்டபடி இருக்க பின் வாரத்திலேயே படுக்கையை விரித்து கொடுத்தாள்..
பாயில் படுத்த சுந்தருக்கு சற்று முன்னர் தங்கை சொன்னதே நியாபகத்தில் ஓடியது.. ‘அந்த வெள்ள பிகரு பேரு தர்ஷினியா.. நல்லாத்தான் இருக்கு.. அந்த வெள்ள பிகரு… என்னடா பிகரு பிகருன்னு சொல்லிக்கிட்டு.. வேணாம் வேணாம் சும்மா லட்டு மாதிரி இருக்கா லட்டுன்னே வைச்சிக்குவோம்… அந்த லட்டு முகம் வாடியிருந்த காரணம் அம்மாவுக்கு தெரியும் போலயே.. மெதுவா கேட்டுப்பார்க்கனும்.. டேய் சோனமுத்தாஆஆ இல்ல இல்ல டேய் சோம சுந்தராஆஆஆ.. உனக்கிருக்கிற பிரச்சனையில அந்த லட்டுக்கு என்ன பிரச்சனைனு இப்ப தெரிஞ்சே ஆகனுமா..’ அவன் மனசாட்சி அவனை தூங்கவிடாமல் எழுப்பி காறித்துப்ப,
‘ஹிஹிஹி உடனே தெரியனும்னு அவசியம் இல்ல.. ஆனா தெரிஞ்சுக்கனும் போல இருக்கு..’
‘நீ தேறமாட்ட போடா எனக்கு தூக்கம் வருது…’அடுத்த ஐந்து நிமிடத்தில் அவன் மனசாட்சியோடு சேர்ந்து அவனும் உறங்கியிருந்தான்..