“சாரி …. என்னை மன்னிச்சிரு …. உனக்கேத் தெரியும் ,அம்மு எனக்குத் தங்கச்சி மட்டுமில்ல … என் குழந்தை … அவ பேச்சுப் போனதிலருந்து என் பேச்சும் போச்சு. உன்கிட்ட மட்டுமில்ல …. யாருகிட்டயும் பேச முடியல…. இப்ப அவ சந்தோஷமா இருக்கானு தெரிஞ்ச நிமிஷம் தான் நான் … என்னைய … உன்னைய… நம்மளையே நினைக்க ஆரம்பிச்சேன். ஏன் இப்ப உன் கூட தான் நான் நானாவே இருக்கேன் .. அது மட்டுமா இப்ப நம்ம கல்யாணம் கூட அவளாலதான்..”இப்பொழுது அவனது கைகள் அனுவின் இடுப்பை வளைத்ததோடு , குனிந்து அவள் நெற்றியோடு நெற்றி உரச ,
“இப்படி ஒரு ஸ்வீட் …ஸ்வீட் … கேண்டி கிடைக்கவே அவ தான காரணம்….. யோசிச்சுப் பார்த்து நீயாவது சந்தோஷமா இருக்கணும்னு தான் … ”
அவன் சட்டையை ஒரு கரத்தால் இறுக்கமாகப் பிடித்து , “அதெப்படி நீங்க இல்லாத உலகம் எனக்கு சந்தோஷமா இருந்திருக்கும் … ” நெருக்கத்தில் நின்றவள் கோபத்தில் மூக்கு சிவக்க அழுகையை அடக்கி கேட்க ……
“சாரி …சாரி…. நீ மட்டுமில்ல இதுநாள் வரை நான் எப்படி இருந்தேன்னா…..” என்றவன் சட்டையைப் பிடித்த அனுவின் கரம் எடுத்து தன் இதயத்தில் வைத்து ,
“அப்படி ஒரு பாரம் ….. வலி ….. இப்போ அது என் பஞ்சு மிட்டாய் போல ” என்றவன் அவள் கன்னம் தடவிக் கொண்டே , “ரொம்ப சாஃப்ட்டா , பாரமில்லாம இருக்கு ….இப்போ ரொம்ப வருஷம் உன் கிட்ட பேசாம விட்ட பேச்செல்லாம் பேசனும் போல இருக்கு ….. என்னைப் புரியுதா உனக்கு…” என யாசிப்பது அவள் விழிகளைப் பார்த்துக் கேட்க ,
ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத ஒன்றை இந்தப் பார்வை சொல்ல …
” உங்களைப் புரியுது…. ஆனா நீங்க தான் என்னைப் புரிஞ்சுக்காம விட்டுட்டீங்க …. அது என்ன என் குழந்தை ….. நம்ம குழந்தை … உங்க தங்கச்சியா இல்லாம ஃபிரண்டா இருந்தப்பவே அவளை நான் எப்படிப் பார்த்துக்கிட்டேன்னு உங்களுக்கு தெரியும் …. அவ அண்ணன்ங்கிறப் போய் தான் உங்களையே எனக்குப் பிடிக்க ஆரம்பிச்சது. அப்படி இருக்கும் போது … எப்படி அத்தான்.. எப்படி அத்தான் என்னைய தனியா விட்டீங்க….. “கண்ணீர் உருண்டோடக் கேட்டவளின் கண்ணீரைப் பெருவிரல் கொண்டுத் துடைத்தவன் ,
” மன்னிச்சிக்கோ ….என் மன்னிப்ப வார்த்தைல சொன்னாப் போதாதுனா சொல்லு … உன் காலப் பிடிச்சு சொல்றேன் …..”
அவன் தோளில் அடித்தவள் , “என்னப் பேசுறீங்க… ”
“நிஜமா கேண்டி … இந்த டிரஸ்ல கால் தெரியவே இல்ல … கால் காட்டு பிடிக்கணும்…”எனக் கீழேக் குனிந்தவனை ,
“ஆளப் பாரு …பேச்செல்லாம் சேர்த்து வச்சுப் பேசுறத…” என முதுகில் கையில் வைத்திருந்த உடைகள் கொண்டு அடிக்க ,
காதலோடு அடிகளை வாங்கிக் கொண்டவன் , அடித்தக் கையைப் பிடித்துக் கொண்டே …
“ஆளப் பார்த்துட்டுத் தானே இருக்கேன் ……லவ் யூ … லவ் யூ கேண்டி …. உன்னை .. உன் பேச்சை …ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணினேன்…” என்றவன், அவள் நெற்றியில் முத்தமிட்டு , இங்கயே மாத்து … இப்ப மட்டும் தான்… கோவிலுக்கு போய்ட்டு வந்ததும் இப்படி எல்லாம் வெளியப் போகமாட்டேன்.” என்றுக் கண் சிமிட்டி விட்டுச் சென்றான்.
நெற்றியில் அவன் இதழ் பதித்த இடத்தை தொட்டுப் பார்த்தவளுக்கு உடலெல்லாம் சிலிர்த்து விட்டது. சிலிர்ப்புக்கு காரணமில்லாமல் இல்லையே….
கொச்சி வந்திறங்கிய ஆதி முதல் வேளையாக அமிர்தாவுக்கு வீடியோ காலில் பேசி விட்டுத்தான் அவன் வந்த வேலையைப் பார்க்கச் சென்றான். அன்றைய நாளின் ஆரம்பமே அமிர்தாவுக்கு ஆனந்தத்தைக் கொடுக்க , தன் பிறந்த வீட்டினர் , புகுந்த வீட்டினர் என அனைவரோடுமே முகம் பார்த்து பேசி அவர்கள் அத்தனை பேரிடமும் தன் மகிழ்ச்சியையும் கடத்த , இரு வீட்டினர் அடைந்த மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவே இல்லை.
சில வருடங்களாக தொலைந்து போன , இந்தப் புன்னகையும் , உணவு உண்ண மட்டுமே திறக்கப்பட்ட அவள் அதரங்களும் அவர்களுக்கு இன்று அதிசயமாகிப் போயிற்று.
[the_ad id=”6605″]
அனைவரிடமும் பேசிய மகிழ்ச்சியில் , மடிகணினியை எடுத்து தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். சிறிது நேரம் குழந்தையோடு வந்த ராகவியோடு பேசிக் கொண்டும் அன்றையப் பொழுதைக் கழித்தவள், இரவாகவும் கணவனின் வரவை ஆவலோடு எதிர் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
இரவில் திருவனந்தபுரம் வந்திறங்கிய தகவலைத் தெரிவிக்காமலயே கன்னியாகுமரிக்கு கிளம்ப, ஆதியின் அன்னையிடமிருந்து அழைப்பு வந்தது , எடுத்தவன் , ” சொல்லுங்கம்மா , தாத்தாவுக்கு உடம்பு பரவால்லயா…”
“தாத்தா நல்லாருக்காங்க , நீ இப்ப எங்க இருக்க , பகல்ல பேசுனப்போ மலர்ச்சிய இருந்த என் மருமக முகம் , இப்போ பேசுறேன், அவர் கிளம்பிட்டாரா தெரியலனு சொல்றா … முதல்ல அவளுக்கு ஃபோன் பண்ணு முகமே சுருங்கிப் போச்சு … ”
கேட்டவனுக்கு இதழோரத்தில் புன்னகைத் தோன்ற, “அது நான் பேசிக்கிறேன் …ம்மா அடுத்த வாரம் நான் துபாய் போற வேலையிருக்கு ….”
“போய்ட்டு வா ,முதல்லயே சொன்ன தான… இப்ப லீவுல தான மருமக இருக்கா.. வேணும்னா அவளையும் கூட்டிட்டு போறீயா … ”
“ம்மாஆஆ…..” எனக் கத்த ,
” என்ன ராஜா இப்படிக் கத்துற, எனக்கு நல்லா கேட்குது மெதுவாவேப் பேசு….”
“இப்ப அவளக் கூட்டிட்டுப் போய் என்ன செய்ய …. நான் பிஸ்னஸ் விஷயமாப் போறேன்” என முன்னதை சலிப்போடு முனுமுனுப்பாகவும் பின்னதை சத்தமாகவும் சொல்ல ,
“முதல்ல என்னப்பா சொன்ன சரியா கேட்கல… பிஸ்னஸ் விஷயமானாலும் அவளுக்கும் எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்ச மாதிரி இருக்கும் ..”
“ம்மா….” ,
” பாடமே ஆரம்பிக்கலயாம்…. இதுல அங்க கூட்டிட்டுப் போனா எக்ஸ்பீரியன்ஸாம் ….” எனக் கடுப்பாகியவனிடம்,
“என்னடா ம்மா ம்மானுட்டு , புதுப் பொண்டாட்டிய வீட்ல விட்டுட்டு பிஸ்னஸ் பிஸ்னஸ்னு சுத்தறானாம்…. முதல்ல அவளச் சுத்து , உங்கப்பா மாதிரியே நீயும் இருக்காத அது தான் சொல்வேன்….”
புன்னகையுடன் “ம்மா அப்பா கேட்கப் போறார் ….”
“அதெல்லாம் கேட்டுட்டுத்தான் இருக்கார்…. பத்து நாள் தான் உன் கூட இருப்பா அதுக்கப்புறம் இன்டர்ன்ஷிப் முடிஞ்சப் பிறகுதான் உன் கூட இருப்பா… அதுவரை அவள சந்தோஷமா வச்சிக்கப்பாரு…” எனப் ஃபோனை வைத்து விட்டார்.
தன் நிலையை நினைத்து சிரித்துக் கொண்ட ஆதி , அமிர்தாவுக்கு ஃபோன் செய்து தான் வந்துக் கொண்டிருப்பதை தெரிவித்து ,
” நீ தூங்கு … நான் வந்ததும் ஃபோன் பண்றேன்..”
[the_ad id=”6605″]
சைகையால் அங்கிருந்த மடிகணினியைக் காண்பித்து , தனக்கு வேலை இருப்பதைச் சொல்லவும் , அவனும் வைத்து விட்டான்.
” என்ன படிச்சிட்டுருக்கா … அம்மா இன்டர்ன்ஷிப்ங்கிறாங்க… அவகிட்டயே கேட்டுக்க வேண்டியதுதான்.” ஆதி வீடு வந்து சேரும் போது இரவாகி விட்டது.
அவன் வண்டிச் சத்தம் கேட்டதுமே வாசல் கதவைத் திறந்துக் கொண்டு நின்றவளைக் கண்டவன்,
“எங்கம்மா தான் நான் என்ன சொன்னாலும் கேட்காம , நான் எந்நேரம் வந்தாலும் வெய்ட் பண்ணுவாங்க .. இப்ப நீயா … ”
உள்ளே வந்துக் கதவைத் தாழிட்டுக் கொண்டேப் பேசியவன் அவளைப் பார்க்க ஹால் சோஃபாவில் இருந்த காகிதங்களைச் சேகரித்துப் பையினுள் வைத்துக் கொண்டே ,
“சாப்டீங்களா” என சைகையால் கேட்க ,
“ம்… ஃப்ளைட்ல ஒரு பர்கர் சாப்பிட்டேன் .. ” எனவும் , பையைக் கீழே வைத்தவள், வாஷ்பேசினைக் காட்டி கை கழுவச் சொல்லிவிட்டு , சமையலறைக்குள் நுழைந்தாள்.
அவனும் இன் பண்ணியிருந்த சட்டையை வெளியே இழுத்து விட்டுக் கொண்டே கை கழுவி சமையலறைக்குள் வந்து நின்றுக் கொண்டான். அவள் தோசைச் சுடுவதைப் பார்த்துக் கொண்டே ,
“மாமியாரும் மருமகளும் ஒரே மாதிரி இருக்கீங்க , அம்மா இப்படித்தான் நான் ஒரு மணிக்கு வந்தாலும் சாப்பிட வச்சுட்டுத்தான் தூங்குவாங்க….”
“தெரியும் ” எனப் புன்னகையுடன் சொல்லிக் கொண்டே அவனிடம் தட்டில் வைத்து தர ,
“என்னடா அதிசயம் என்னையப் பத்தி என்னக் கேட்டாலும் தெரியும் தெரியும்ங்கிற … எனக்குத்தான் உன்னையப் பத்தி ஒன்னுமேத் தெரியல … “சமையல் மேடையில் அமர்ந்து தோசையை சாப்பிட்டுக் கொண்டே ,
“சொல்லு , என்னப் படிக்கிற …. அனுவும் ஃபைனல் இயர் தான் , அவ செட் தான நீ…. ஹே அப்போ … அப்போ நீயும் மெடிக்கல் ஸ்டூடன்டா… உங்க வீட்ல எல்லாரும் டாக்டர்ஸ் , அதனால தான அனுவையும் பொண்ணு கேட்டதா அம்மா சொன்னாங்க … ” என மகிழ்ச்சியாகக் கூறிக் கொண்டே அமிர்தாவைப் பார்க்க ,
அவள் தோசை கருகுவதைக் கூட உணராது நின்றுக் கொண்டிருந்தாள் .மேடையை விட்டு குதித்து இறங்கியவன் அடுப்பை அணைக்க , அப்பொழுதுதான் அதை உணர்ந்தவள், கண்ணைத் துடைத்துக் கொண்டே அதைக் கரண்டியால் எடுத்தாள்.
கண்ணீரைப் பார்த்தவன் , அவள் தோள் தொட்டுத் திருப்பி ,
“சாரி …. நான் கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே பிஸியா இருந்தேன். அதனால தான் தங்கச்சிக் கல்யாணத்துக்கு கூட முதல் நாள் தான் வந்தேன். அம்மா சித்தி சொந்தத்துலனு மட்டும் தான் சொன்னாங்க. ஒரு வேளை எனக்கும் தெரிஞ்சவங்க அப்படினு வேற விவரங்கள் சொல்லாம விட்டுருக்கலாம். ”
“இல்லை” எனத் தலையாட்டியவள் ,
“நான் மெடிக்கல் ஸ்டூடன்ட் இல்ல….”
“ஓ… அப்படியா….. சாரி …நீயே சொல்லிரு என்ன படிக்கிறனு … ”
அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே …,
“பி.ஆர்க் … ” எனவும் , இப்போது ஆதியின் கண்கள் அந்த இரவிலும் பிரகாசமாக இருப்பதுப் போல் தோன்றியது அமிர்தாவிற்கு…. அது உண்மையே என்பது போல் ,தட்டைக் கீழே வைத்தவன் , கையைக் கழுவி விட்டு அவளருகில் வந்து , அவளது கரங்களை அவனது கைகளுக்குள் அடக்கி ,
[the_ad id=”6605″]
“எனக்கு … எனக்கு உன்னை அப்படியே கட்டிப்பிடிச்சுக்கணும் போல இருக்கு … பட்….. நான் எதிர்பார்க்கவே இல்ல … எப்படி… எப்படி… இதை தேர்ந்தெடுத்த … ” என்று மேலும் ஏதோ சொல்ல வாயெடுக்க , அமிர்தாவும் அவனது மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்தவள் , தன்னையறியாமல் ,
“காதல் ….. லவ் … காதல் தான் காரணம்” என்றாள்.
தூவும் …..