கள்வன் – 10
“யுக்தா வீட்டில் எப்படி இந்த திருமணத்திற்கு ஒத்துக்கிட்டாங்கனு தெரியலைங்க…” இரவு நேர உணவு முடித்து கூடத்தில் சாவுகாசமாக பேசிக் கொண்டிருந்தனர் கீதாவும், ரமேஷும்.
“ஏன்? அந்தப் பையனுக்கு என்ன? பையனும் பார்க்க நன்றாகத் தானே இருக்கிறான். நம்ம இனியாவுக்கு கூட அந்த பையனை கன்சிடர் பண்ணினோமே… நல்ல வேலை பாப்பாவிற்கும், அந்த பையனுக்கும் பொருத்தம் பார்த்து மேற்படி ஏதும் பேசாமல் இருந்தோம். இப்போது பார் யுக்தாவும், அந்தப் பையனும் விரும்புறாங்களாம். மகள் மனமறிந்து யுக்தா வீட்டில் ஒத்துக் கொண்டார்கள். இதில் என்ன குறை கண்டுவிட்டாய்?” என்று ரமேஷ் கேள்வி எழுப்ப, தன்னுடைய சிந்தனை போக்கும் கணவரின் போக்கும் ஒரே கோட்டில் பயணிக்கவில்லை என்றதில் சின்ன சுணக்கம் கீதாவிற்கு.
“பையனை குறைகூற ஒன்றுமில்லை. ஆனாலும் குடும்பம் எப்படி என்று பார்க்க வேண்டாமா? அந்த பையனுக்கு அண்ணன் ஒருவன் இருக்கிறானாம். ஏதோ விபத்தில் சிக்கி எழுந்து நடமாட முடியாமல் படுக்கையிலேயே முடங்கிட்டானாம். அந்த பையனையும் இவன் தான் பார்த்துக் கொள்கிறான் போலிருக்கு…” என்க ரமேஷ் இப்போது மனைவியை நன்றாக முறைத்தார்.
“இதெல்லாம் என்ன கீதா… ஏன் இப்படி பேசுகிறாய்? உடன்பிறந்தவனுக்கு முடியவில்லை என்றால் இந்த பையன் பார்க்காமல் வேறு யார் பார்ப்பார்களாம்? உன்னிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. இனியனுக்கு அன்று அவ்வளவு பாடம் எடுத்தாய் ஆனால் இப்போதோ இப்படி கூறுகிறாய்? அந்த பையனுக்கு என்ன வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் அதற்காக அவனை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் உன்னை நீயே தாழ்த்திக் கொள்ளாதே…” என்று சற்று கடினக் குரலில் கண்டிக்க,
“நான் ஒன்றும் தவறாக சொல்லவில்லை… யதார்த்தத்தை தான் சொல்கிறேன். நாளை இவர்களுக்கென்று குடும்பம் அமைந்தவுடன் அவங்க குடும்பத்தைப் பார்ப்பார்களா இல்லை அந்தப் பையனை கடைசி வரை வைத்து கரையேத்துவார்களா? யுக்தாவும் அல்லவா தன் விருப்புகளை ஒதுக்கி வைத்திவிட்டு தம்பியுடன் சேர்ந்து பணிவிடை செய்ய வேண்டும்.” என்று தன் மனதில் உள்ளவற்றை வார்தைகளாக்கினார் கீதா.
“நீ தேவையில்லாமல் பேசாதே கீதா. அங்கு வாழப் போகிற பெண்ணே நடைமுறை சிக்கல்கள் தெரிந்து தான் தன் வாழ்க்கையை தேர்ந்தெடுத்து இருக்கிறாள். இதை விமர்சனம் செய்வதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை.”
“என்னவோ போங்க… எனக்கு மனசு கேக்கவே இல்லை.” என்றதோடு முற்றுப்புள்ளி வைத்த கீதாவிற்கு தெரியவில்லை தன் மகளின் மனதே ஆவல் என்ற பெயரில் அந்தப் பையனின் பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறதென்று. அதோடு அவர் இப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பினும் இவர்களின் உரையாடலை தன் அறை வாயிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த அவர் மகள் காற்புள்ளியிட்டு இவ்விஷயத்தை ஒட்டிய நினைவுகளில் மூழ்கினாள்.
*-*
[the_ad id=”6605″]யுக்தா இதயன் பற்றி வாய் திறக்கப் போவதில்லை. இல்லாத ஒன்றை அவளே கற்பனை செய்துக்கொண்டு பேசுகிறாள், ஒரு ஆர்வத்தில் தானே நாமும் அவரைப் பற்றிய தகவல் தெரிந்து கொள்ள முனைகிறோம் என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு இதயனுக்கு சொந்தமாக நினைக்காதே என்ற யுக்தாவின் அறிவுரையை மூளையிலிருந்து துடைத்து எறிந்தாள் இனியா. அதன்பின் நடந்த நிச்சய நிகழ்ச்சியில் வளைய வந்து யுக்தாவுடனே திரிந்தாள் பெண்ணவள். சிவகாமியிடம் சென்று நேராகவே இதயனைப் பற்றி கேட்டு விடுவோமா என்று எழுந்த சிந்தனையையும் கூட தன் பெற்றோரின் இருப்பை முன்னிறுத்தி தவிர்த்து விட்டாள். யுக்தாவின் மூலம் அவனை பார்க்கும் சந்தர்ப்பங்கள் நிறைய அமையும் என்ற நம்பிக்கையும் அவளை சற்று நிதானித்தன.
அப்படியிருக்கும் வேளையில் தான் கடைசி பந்தியில் மணப்பெண் வீட்டார் உணவு உண்ண கூடியிருக்க, யுக்தாவின் ஒரு புறத்தில் இனியாவும் மறுபுறத்தில் யுக்தாவின் தாயும் அமர்ந்தனர். கீதாவும், ரமேஷும் நிச்சயம் முடிந்தவுடனேயே கிளம்பிவிட்டிருந்தனர்.
“மாப்பிள்ளை நல்லவிதமா நடந்து கொள்கிறார்டி… சம்பந்தி அம்மாவும் வம்புக்கு நிற்கும் ரகம் இல்லை.” யுக்தா அம்மா பேச்சை ஆரம்பிக்க, தன் வருங்கால கணவனையும், மாமியாரையும் அன்னை புகழ்ந்ததில் உச்சி குளிர்ந்து போனாள் யுக்தா.
“ஆனால் நீ கொஞ்சம் சூதானமா இருந்து மாப்பிளையை கெட்டியாக உன் கையில் வைத்துக்கொள்ளடி… அப்போது தான் நாளை உன் கொழுந்தனின் பொறுப்பு உன் தலையில் விடியாமல் இருக்கும்.” மகளுக்கு புத்திமதி சொல்வதாய் எண்ணி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் வேலையை மெல்லத் துவங்கினார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த இரு பெண்களின் விழிகளும் ஒரு நொடி அதிர்ச்சி தாங்கி மீண்டது.
“அம்மா என்ன பேசுற நீ? சும்மா உளறாதே…” கடிந்தாள் யுக்தா.
“உன் நல்லதிற்கு தான்டி சொல்கிறேன். கடைசி வரை மாப்பிள்ளை அண்ணனுக்கு சேவகம் செய்து, குணமாக வாய்ப்பில்லை என்று தெரிந்தும் பணத்தை ஏன் தண்ணியாய் செலவு செய்ய வேண்டும்? அந்தப் பணத்தை உங்கள் குலம் வளர பயன்படுத்தினால் ஆஹா ஓஹோன்னு இருப்பிங்க…”
“அம்ம்மா… திருமணத்திற்கு முன்பே அக்குடும்பத்தை பிரிக்க யோசனை சொல்கிறாய். இதுபோல் பேசுவதை நிறுத்துமா…” கொதிக்க கொதிக்க சூடாய் வெளிவந்தன யுக்தாவின் வார்த்தைகள்.
“ஏய்… நான் யதார்த்தத்தை சொல்றேன்டி. உன் மாமியாருக்கு சேவகம் செய்தால் கூட எனக்கு ஒன்றுமில்லைடி. ஆனால் மாப்பிள்ளையின் அண்ணனுக்காக என்று பார்த்து உன் விருப்பங்களை சமரசம் செய்யும் சூழ்நிலை வரும். மாப்பிள்ளை அவர் அண்ணனின் தேவைகளையே முன்னிறுத்தினால் உனக்கு அங்கே என்ன மதிப்பு? உன் விருப்புகளுக்குத் தான் என்ன மதிப்பு? கடைசி வரைக்கும் நீயும் அவரோடு சேர்ந்து சேவகம் செய்ய வேண்டுமா என்ன? எனக்கு இதில் துளியும் உடன்பாடு இல்லை.”
[the_ad id=”6605″]“என்ன ஆன்ட்டி இப்படி சொல்கிறீர்கள்? யுக்தாவிற்காக ஒரே கருவறையை பகிர்ந்துகொண்ட அவரின் இரத்த சொந்தத்தை விடவேண்டுமா? துன்பத்தில் ஒருவரை கழட்டி விடுவதைவிட மனிதாபிமானமற்ற செயல் எதுவுமே இல்லை. அதிலும் விபரம் தெரியாத நாள் முதலே ஒன்றாக வளர்ந்த அண்ணன் தம்பிகள். இது எந்த விதத்தில் நியாயம்? எல்லா உறவுகளும் ஒவ்வொரு வழியில் உயர்வானவையே. ஒன்றை தாழ்த்தி இன்னொன்றை பெரிதுபடுத்த முடியாது ஆன்ட்டி. உங்களுக்கு அவர் அண்ணன் முக்கிய உறவாக தெரியாமல் போகலாம். அதற்காக அவரும் அவருக்கு நெருங்கியவறை விடமுடியுமா… நீங்களே யுக்தா வாழ்க்கையில் பிரச்சனையை கிளப்பிவிட்டு விடாதீர்கள் ஆன்ட்டி.” யுக்தாவை முந்திக் கொண்டு பேசினாள் இனியா. இதயனைப் பேசினால் பொறுத்துக் கொண்டுவிடுமா அவள் இதயம்?
யுக்தா இனியாவின் பேச்சை ஆமோதிக்கும் விதமாய் தன் அன்னையை பார்த்து வைத்தாள், “நீ சும்மா இருமா. அவர் அண்ணனுக்கு அவர் செய்யப் போகிறார். எனக்கு ஒரு அண்ணனோ, தம்பியோ இல்லை தங்கையோ இருந்து நான் அவங்களை விட்டால் நீ சும்மா இருப்பாயா? அது போலத் தான் இதுவும். அவரின் மனைவியாய் எந்த வகையில் உதவ முடியுமோ அத்தனை விதத்திலும், விஷயத்திலும் அவருக்கு துணையாய் நான் இருப்பேன். நீயே ஏதாவது பேசி மனஸ்தாபத்தை வளர்த்து விடாதே.” என்று எச்சரிக்கும் விதமாய் ஒலித்த யுக்தாவின் குரலை நினைவு கூர்ந்தாள் இனியா. தன் அன்னையின் சிந்தையும் யுக்தாவின் அம்மா போலவே இருப்பதை கண்டு நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது இனியாவால்.
*-*
“என்னோடு வா வீடு வரைக்கும்… என் வீட்டைப் பார் என்னை பிடிக்கும்னு பாட ஆசை தான், பட் ஸீ என் வீட்டுக்கு வருவதற்கு முன்னரே உனக்கு என்னை பிடித்து விட்டது பேபி…” என்று இன்பன் யுக்தா காதில் கிசுகிசுக்க அவனின் நெருக்கத்தில் சொக்கிபோய் அமர்ந்திருந்தாள் யுக்தா. இந்த இன்பன் முற்றிலும் அவளுக்குப் புதியவன். அவளின் அன்பு மற்றும் ஆதரவு பெற்றுத் தந்த பரிசு.
அவளின் கைகள் எதிரே திறந்திருந்த மடிக்கணினியின் விசைப்பலகையில் படிந்திருக்க, இன்பன் குனிந்து அவளுக்கு சந்தேகம் தீர்ப்பது போன்ற பாவனையில் லவ்ஸ் விட்டுக் கொண்டிருந்தான். அந்த பெரிய குளிரூட்டப்பட்ட அலுவலக அறையில் சிறிது சிறிதாய் தடுத்திருந்த ஒரு கியூபிக்களில் தான் யுக்தா தன் வேலையை பார்த்துக்கொண்டிருக்க அதை தடுக்கவென வந்திருந்தான் அவன்.
“என்ன லவ்ஸ்லாம் அதிகமாக இருக்கு?” தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு மெலிதான குரலிலேயே கேட்டாள் யுக்தா.
“செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே…” என்று மீண்டும் அவள் செவிக்கு மட்டுமே கேட்கும் மெல்லிய குரலில் ராகம் இழுக்க,
“கேமரா இருக்கு விளையாடாதீங்க,” சிணுங்கினாள் பெண்ணவள்.
“காதல் வருமா வருமான்னு கேட்டுட்டு காதல் பண்ணா விளையாடறேனு சொல்ற…” அவளைப் போலச் சிணுங்கினான் வளர்ந்த ஆடவன்.
“காதல் பண்ற இடத்தைப் பார்… சும்மா என்னை தொந்தரவு பண்ணாதீங்க. எதற்கு வந்தீங்கன்னு சொல்லுங்க…” என்றதும்,
நிமிர்ந்தவன் முகம் திகைப்பை பூசிக் கொண்டு எதிர் இருந்தவளை நோக்கியது.
“என்ன சார் தலை புதுசா இந்தப் பக்கம் தெரியுது?” இனியா புருவங்களை உயர்த்தி குறும்புடன் கேட்க,
சுதாரித்துக் கொண்டவன், “உங்களை பார்க்கத் தான் வந்தேன் இனியா.”
“நம்பிட்டோம் மிஸ்டர். யுக்தா.” என்றவள் குரலில் மீண்டும் கேலியே இழையோடியது.
யுக்தா செல்லமாய் அவள் கையில் ஒரு அடி போட்டாள்.
“ஐயோ நிஜமாவே உங்களை பார்க்கத் தான் வந்தேன். உங்கள் இடம் காலியாக இருக்கவும் யுக்தாவிடம் பேசிக் கொண்டிருந்தேன்.”
“என்னையா?” கேலியை கைவிட்டு கேள்வியாய் நோக்கினாள் இனியா.
“உங்களுக்கு நன்றி சொல்லத் தான் வந்தேன் இனியா. நேற்று நிச்சயத்தில் என் அண்ணனுக்கு ஆதரவாய் என் மாமியாரிடம் பேசினீர்களே… அது பெரிய விஷயம். அந்த அக்கறையை நான் கண்டுகொள்ளாமல் விட்டால் நல்லாயிருக்காது.” என்று பணிவாய் சொல்ல,
அவனின் இந்த எதிர்பாரா நன்றியில் இரு பெண்களுமே உறைந்தனர். நானும் உங்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தேன் என்பதை சொல்லாமல் சொன்னது அவனின் மொழி.
[the_ad id=”6605″]அவர்களின் திகைப்பை உணர்ந்து அவனே தொடர்ந்தான், “யுக்தாவிடம் சொல்லிக்கொண்டு செல்லலாம் என்று வந்தேன் அப்போது தான் உங்கள் உரையாடலை கேட்க நேர்ந்தது.”
“நன்றியெல்லாம் எதற்கு? யுக்தாவும் தான் உங்களுக்காக பரிந்து பேசினாள்.” என்ற இனியாவின் வார்த்தைகளில் யுக்தாவை எங்கே தப்பாக நினைத்து கோபம் கொண்டு விடுவானோ என்ற பயம் இருந்தது. யுக்தாவின் வதனமும் அதே தவிப்பை பூசியிருந்தது.
“யுக்தா எங்கள் வீட்டுப் பெண். அவளைவிட நீங்கள் பேசியது தான் பெரிய விஷயம். அந்தப் பேச்சு மேற்கொண்டு வளர்ந்து வேறெதுவும் கூறியிருந்தால் கசப்பு ஏற்பட்டிருக்கும்.” என்றவன் கைகள் ஆதரவாய் யுக்தாவின் தோளில் படிந்தது. அதன் பிறகே அவளால் நிம்மதியாய் மூச்சே விடமுடிந்தது. அவன் சொல்வது போல் அவள் அம்மா ஏதும் பேசி அவன் கேட்டிருந்திருந்தால் இன்னும் கசப்பாகியிருக்கும் என்ற வகையில் யுக்தாவிற்கு நிம்மதியே.
“அம்மாவும் அன்று ஒரு நாள் மயங்கிய போது நீங்கள் உதவி செய்தீர்கள் என்று கூறினார்கள். அதற்கும் தேங்க்ஸ்…” என்று அவனே பேசினான். பெண்கள் இருவரும் ஒரு புன்னகையுடன் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாகினர்.
“நீங்க வீட்டிற்கு ஒரு நாள் கண்டிப்பாக வர வேண்டும் இனியா. இட்ஸ் மை டோக்கன் ஆப் கிராட்டிடியூட்.”
“ஷ்யூர்.” என்று இனியா முந்திக்கொண்டு பல்லை காட்டினாள். அவள் எப்போது எப்போது என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த விஷயம் எதிர்பாரா நேரத்தில் கிடைக்க கப்பென்று பிடித்துக் கொண்டாள்.
‘க்கும்… அவளே என்ன காரணம் சொல்லி எப்போதுடா உங்கள் வீட்டிற்கு வரலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பாள்.’ என்று யுக்தா நினைத்தது கூட இனியாவின் அவசர பதிலால் நான்சிங்க்கிள் மெல்ல வந்து சேர்ந்தது.
“யுக்தா நீயும் அவங்க கூட வாயேன்.” இன்பனின் பார்வை மற்றும் வார்த்தைகள் இப்போது யுக்தா புறம்.
“ஓ… சார் அதற்கு தான் என்னோடு வா வீடு வரைக்கும்னு பாடுனீங்களா? காரியக்காரர் சார் நீங்க… என்னை கூப்பிடுகிற சாக்கில் உங்க ஆளை வீட்டிற்கு கூப்பிடுகிறீர்கள்… ம்ம்… ” இனியாவின் கேலியில் வெட்கப் புன்னகை சிந்துவதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை அவ்விருவரும்.
“எனக்கொரு சந்தேகம்? செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே… அப்படினா என்ன?” என்று கேள்வியாய் முகத்தை சுருக்கினாள்.
இன்பன் ஒரு அசட்டுப் பார்வை சிந்தி, “எல்லாத்தையும் கேட்டுட்டீங்களா?”
“நானா கேக்கலங்க… என் காதில அதுவாக வந்து விழுந்துச்சு…” என்றவளிடம் ஒரு கிண்டல் இருந்ததோ!
“இது குறுந்தொகையில் வரும் பாடலில் உள்ள சில வார்த்தைகள். சமீபத்தில் ஒரு சினிமாவில் பாடலின் துவக்கமாய் வந்ததே… கேட்டதில்லையா?” என்று அவன் கேட்க இரு பெண்களுமே உதட்டை பிதுக்கினர்.
“செம்மண் நிலத்தில் மழை பெய்யும் போது, நீரும் மண்ணும் இணைந்து பிரிக்க முடியாத சகதியாகிவிடும், அதைப் போல நம்முடைய அன்பான நெஞ்சங்கள் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டன. இது தான் நான் சொன்ன வார்த்தைகளின் பொருள்.”
“செம… லவ்ஸ் விட உங்ககிட்ட தான் சிறப்பு வகுப்பு எடுக்கணும் போலிருக்கே…” என்று இனியா சிலாகிக்க யுக்தா நெகிழ்ந்து நாணத்துடன் இன்பனின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
“சரி… சரி… உங்க லவ்ஸ்ச தொடருங்க… நான் ஏன் குறுக்கே கரடி மாதிரி…” என்றுவிட்டு இனியா ஹெட்போன்ஸை காதில் மாட்டிக்கொண்டு அவள் இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டாள். இதயனை சந்திக்கப் போகிறோம் என்ற உற்சாகம் இப்போதே வந்து ஒட்டிக்கொண்டது அவள் காதில் ஒலிக்கும் பாடலில் பிரதிபலித்தது.
*^*^*