Skip to content
Post Views: 1,816
கதிரவனுக்கு பூமியின் மீது காதல் வந்து அதனை அருகில் வந்து தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டதோ இல்லை சந்திரன் மீது பூமி கொண்ட காதலில் கோபம் கொண்டு அதனை சாம்பலாக்க முடிவு செய்தோ தெரியவில்லை. அந்த சூரிய கதிர்வீச்சை தாங்க முடியாத மனிதர்கள் செங்கல் கட்டிடங்களுக்குள் தங்களை மறைத்துக் கொண்டும், குடைகளுக்குள் தங்களை ஒழித்துக் கொண்டும் செல்லும் அந்த உச்சிப் பகல் வேளையில் அறுந்து போன செருப்பை ஊக்கு குத்தி காலில் போட்டுக்கொண்டு தனது முந்தியை வெயிலுக்கு மறைவாக தலையில் முக்காடு போட்டு வியர்க்க விறுவிறுக்க அந்த தெருவில் வேகமா நடந்து சென்றாள் இந்திரா.
“ஏய் இந்திரா எங்க இந்த உச்சி வெயில் போற. கொஞ்சம் வெயில் தாந்த பிறகு போக வேண்டியது தானே” என அவளின் எதிரே வந்த இந்திராவின் பக்கத்து வீட்டுக்காரி சுதா கேட்டாள்.
“அதுவா சுதாக்கா இப்போ போனா தான் எங்க அக்கா ஊருக்கு போற பஸ்ச பிடிக்க முடியும். அதான் இப்போ வேகமாக போறேன். ஆமா நீங்க எங்க போயிட்டு வரீங்க கா”என்றாள் மூச்சி வாங்க இந்திரா.
“அதை ஏன் கேக்குற அடுத்த வாரம் நம்ம ஊரு கோயில் கொடை வருது இல்ல அதுக்கு தான் வீட்டில் இருக்கிற பொடிசுகளுக்கு டிரஸ் எடுக்க நானும் உங்க அண்ணனும் பைக்ல போனோம். எடுத்துட்டு வரும்போது உங்க அண்ணன் கம்பெனி மேனேஜர் ஃபோன் பண்ணாங்கன்னு சொல்லி என்ன பஸ் ஏத்தி விட்டுட்டு உங்க அண்ணன் கம்பெனிக்கு போயிட்டாங்க அதான் நான் இப்ப வாரேன்” என்றவளின் கையில் இருந்த துணி பைகளை பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டாள் இந்திரா.
Advertisement
“ஆமா இந்திரா பசங்களுக்கு டிரஸ் எடுத்தாச்சா இல்ல இனி தான் எடுக்கணுமா” என்றாள் அவள் துணி பையை பார்ப்பதை பார்த்து சுதா.
“அத ஏன் சுதாக்கா கேக்குறீங்க என் கஷ்டம் உங்களுக்கு தெரியாதா. பசங்களுக்கு சாப்பாடு செலவுக்கே நான் படாத பாடுபடுறேன் இதுல எங்கிருந்து அவங்களுக்கு டிரஸ் எடுக்க. அதுதான் எங்க அக்கா கிட்ட செலவுக்கு கொஞ்சம் காசு கேக்க போறேன்” என்றவளின் கஷ்டத்தை பார்த்து வருத்தப்பட்ட சுதா, “சரிம்மா வேகமாக போ பஸ் கெளம்பிற போகுது. பஸ்ல போகுறதுக்கு காசு ஏதாவது வச்சிருக்கியா இல்ல வேணுமா” என்றவளுக்கு
“அதெல்லாம் வச்சிருக்கேன் அக்கா” என்றாள் வேகமாக
Advertisement
“சரி சரிம்மா காசு கேட்டுட்டு உடனே கிளம்பி வந்துடாத. பொறுமையா இருந்து வா. பசங்கள நான் பாத்துக்குறேன் சரியா” என்றாள் கனிவுடன்
Advertisement
“சரிக்கா நான் போறேன்” என்று வேகமாக நடக்கத் தொடங்கியவளை பார்த்து, “எப்படி இருந்த புள்ள அது வாழ்க்கைய இப்படி ஆக்கிட்டியே கடவுள்” என்று தனக்குள்ளே புலம்பி கொண்டு சென்றாள்.
இந்திரா அவளுக்கு 46 வயது இருக்கும்.அவளின் கணவர் தாமஸ் இறந்து ஒரு வருடம் ஆகிறது. இருவரும் காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு திவ்யபாரதி,சுபாஷ் என இரண்டு குழந்தைகள் உள்ளது. திவ்யபாரதி எம்.காம் கடைசி வருடம் படித்து வருகிறாள். அவள் தம்பி சுபாஷ் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறான். இவர்கள் தாமஸ் இறப்பதற்கு முன்பாக தூத்துக்குடியில் வசித்து வந்தனர். அவரின் இறப்பிற்கு பின் இந்திராவின் சொந்த ஊரான திருச்செந்தூருக்கு அருகே உள்ள அரசூர் என்ற கிராமத்தில் இந்திராவின் பாட்டி தெய்வானை அவள் பெயரில் எழுதி வைத்து சென்ற வீட்டில் வசித்து வருகிறார்கள். அந்தக் கிராமத்தில் உள்ள பணக்கார குடும்பம் தான் இந்திராவின் குடும்பம். அப்பா ராஜேந்திரன் அரிசி ஆலை வைத்து இருக்கிறார். அம்மா சரோஜா தனது குடும்பத்தை பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்கிறார். இவளுக்கு ஒரு அக்கா வசுந்தரா திருமணம் ஆகி பக்கத்து ஊரில் வசித்து வருகிறாள். அவளின் கணவர் ரவி அந்த ஊரில் உள்ள நூலகத்தில் நூலகராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமாக ஒரு தென்னந்தோப்பு உள்ளது. ரமேஷ் என்ற ஒரு மகன் இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னையில் வேலை செய்து வருகிறான்.
Advertisement
இந்திரா வசுந்தரா இருவருக்கும் ராஜலிங்கம் என்ற ஒரு அண்ணன் உள்ளான். அவன் தந்தையோடு சேர்ந்து அரிசி ஆலையை கவனித்து வருகிறான். அவனின் மனைவி பெயர் கமலா. இவனின் மகன் ராஜ்குமார் படித்துவிட்டு ஊரை சுற்றிக்கொண்டு திரிகிறான். இவர்களுக்கு ஆர்த்தி என்ற ஒரு பெண்ணும் உள்ளது. இவளுக்கும் ரமேஷுக்கும் கல்யாணம் செய்ய பெரியவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்திரா தானே ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதால் அவளிடம் வசுந்தராவை தவிர யாரும் பேச மாட்டார்கள்.
இந்திராவின் கணவர் இறப்பதற்கு முன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததால் அவரின் இறப்பிற்கு வந்த தொகையை பிள்ளைகளின் பேரில் டெபாசிட் செய்துவிட்டு அவளுக்கு தெரிந்த தையல் தொழிலையும், திவ்யபாரதி சிறு பிள்ளைகளுக்கு டியூசன் எடுக்கும் காசை வைத்து அவர்கள் மூவரின் உணவு மற்றும் படிப்பு செலவையும் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். தற்போது வர இருக்கும் கோவில் கொடை விழாவிற்கு தனது பிள்ளைகளுக்கு புத்தாடை எடுப்பதற்காக கடன் கேட்க தனது அக்கா வீட்டிற்கு சென்று கொண்டு இருக்கிறாள். அதுவும் அவளின் பிள்ளைகளுக்கு தெரியாமல் ஏனென்றால் தாயின் கஷ்டத்தை உணர்ந்த பிள்ளைகள் இந்த வருடம் தங்களுக்கு உடை தேவை இல்லை என்று சொல்லிவிட்டனர். ஆனால் இந்திராவிற்கு தான் எல்லோரும் புதுத் துணி அணியும் போது தனது பிள்ளைகள் மட்டும் பழையது போட்டுக் கொண்டு நிற்பது பிடிக்காமல் தனது அக்காவிடம் சென்று கடனுக்கு காசு வாங்கி தனது பிள்ளைகளுக்கு புத்தாடை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற நினைவில் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருக்கிறாள்.
@@@@@@@@@@@@@
“எங்க இந்த மாசம் குத்தகை பணம் வந்துட்டா. இல்லை இந்த மாசமும் லேட்டா தான் தருவேன்னு அந்த குத்தகைக்காரன் சொல்லிட்டேனா என்ன” என்று பட்டு சேலை சரசரக்க அடிக்கும் வெயிலுக்கு கழுத்து நிறைய நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு தனது கனத்த உடலை தூக்கிக்கொண்டு நடக்க முடியாமல் நடந்து வந்தார் வசுந்தரா.
“அதெல்லாம் வந்துருச்சு மா. நீ கணக்குல எவ்வளவு கறரான ஆளுன்னு அவனுக்கு தெரியாம இருக்குமா அதெல்லாம் கரெக்டா கொண்டு வந்து தந்துட்டான்” என்றார் அவளின் கணவர் ரவி. அதிர்ந்து கூட பேச தெரியாத நல்ல மனிதர். ஆனால் அவரின் மனைவியோ வாயை திறந்தால் படபட பட்டாசு தான். அவளின் வாய்க்கு பயந்து மனிதர் பெரும்பாலும் வாயை திறப்பதில்லை.
error: Content is protected !!