சண்முகம் பயந்தே போனான், கார்த்திக்கு ஏதோ என மனம் பதறியது. ஆனால், மைதிலிக்கு… “எல்லாம் கூடி வர நேரத்தில் இப்படி இந்த பெண் செய்கிறாளே…” எனதான் தோன்றியது. அன்னையாக பலத்தையும் யோசித்து கோவம் வந்தது..
வீட்டு மனிதர்கள் வெங்கட் கீர்த்தனாவின் தந்தை என இவர்கள் மட்டும் தவிர்க்க முடியாமல் உண்டனர் சதாவுடன். மற்றவர்களுக்கு எல்லாம் கன்யாவின் நிலை குறித்து பயம்…
சண்முகமும், கார்த்தியும் சத்தமில்லாமல் அவர்கள் காரெடுத்து தேட சென்றனர். அந்த ஊரில் இவர்கள் வீட்டை தவிர, மற்றவர்களெல்லாம் மெயின் ரோட்டில் இருப்பதால்… அந்த பக்கமாக காரை திருப்பினான் சண்முகம்.
கார்த்தி “இல்ல சம்மு… அவ யாரையும் பார்க்க கூடாதுன்னு எங்கையாவது போயிருப்பா… நீ ஹைவே பக்கமாக போ” என்றான்.
கன்யா சென்று எப்படியும் ஒரு மணிநேரமாவது இருக்கும்.. எண்ணம் வர, அதற்குமேல் அண்ணனால் யோசிக்க கூட முடியவில்லை..
வண்டி சம்முவின் கைகளில் மிதமான வேகத்தில், தேடியபடியே சென்றது. கார்த்தி சொன்னது சரியாக… ஒரு மூன்று கிலோ மீட்டரில்… அவர்களின் இன்னோவா… ஓரமாக நின்றிருந்தது. பரபரவென இருவரும் இறங்கி சென்று பார்க்க…
உள்ளே கன்யா நனைந்து போயி, மூச்சு பேச்சில்லாமல் அப்படி தலை தொங்கி சாய்ந்து அமர்ந்திருந்தாள்… அடியெல்லாம் ஏதுமில்லை. வண்டி சரியாகதான் நின்றது, எங்கும் மோதவெல்லாம் இல்லை.
கார்த்திக்கு தன் தங்கையை அந்த கோலத்தில் பார்க்கவும், கண்ணில் தாரை தாரையாக நீர் வழிய… என்ன செய்வதென்னே புரியவில்லை…
கண்ணாடியின் அருகில் நின்று “கன்யா கன்யா” என, கிட்ட தட்ட கதறுகிறான்.. சத்தம் வேறு வரவில்லை.. வேறு ஒன்றும் தெரியவில்லை அவனிற்கு.
கார், புல் லாக்கில் இருக்க, சண்முகம் ஏதேதோ செய்து பார்க்க… திறக்க வரவில்லை. ஒரு கல்லை எடுத்து கண்ணாடியை தட்டி உடைக்க… கன்யாவின் மேலே கொட்டியபடி.. அது உடைய, அந்த விண்டோவின் பெரிதான ஓட்டை வழியாக லாக் எடுத்து கதவை திறந்தான் சண்முகம்.
அவளின் மடி மீது கண்ணாடி சிதறியபடி… கதவை திறந்ததும் அப்படியே சாய்ந்தாள்… உடனே பற்றிக் கொண்டான் கார்த்தி.
அவளை, அப்படியே அமர வைத்து கண்ணாடியை தட்டினான்… அதில் அவனின் கையில் ஒன்றிரண்டு குத்தியது.
மேலும் அவளின் கையிலிருந்த பொடி துண்டுகள் எல்லாம்.. அவளின் கைகளில் ஒட்டிக் கொள்ள… சண்முகம் அதற்குள் “வாங்க, கார்த்தி… வீட்டுக் போலாம் வாங்க” என அவர்கள் வந்த காரில் அமர்ந்தபடி கூப்பிட…
கார்த்தி “ஹாஸ்பிட்டல் போலாம்… இங்க பக்கத்தில் எங்க” என ஏதோ சொல்ல வர ஷண்முகம் பேசவில்லை… வண்டி பாதி தூரம் சென்றிருந்தது. அவர்களின் தோட்டத்து வீடு நோக்கி.
கார்த்தி பின் சீட்டில் அமர்ந்து அவளின் மேல் உள்ள கண்ணாடி துண்டுகளை அகற்றி கொண்டே… “கன்யாம்மா…” என ஈன சுரத்தில் அழைத்தபடி இருந்தான் அண்ணன்.
பேய் வேகத்தில் வந்து விட்டான் வீட்டிற்கு ஷண்முகம்.
ஷண்முகம் இறங்கி “கார்த்தி தூக்குங்க….” என்றவன் அங்கு அட்டானஸ் போட்டிருந்த இடம் நோக்கி ஓடினான் எல்லோரையும் அழைக்க..
கார்த்திக்கு தெம்பே வரவில்லை… அங்கிருந்து வாரி எடுத்தவனுக்கு… இங்கிருந்து தூக்க வரவில்லை… அப்போது அவளை அழுத்தி தூக்கியதில், அவளின் கைகளெல்லாம் ரத்தம்…
எனவே கார்த்தி பயந்துவிட்டான் “நீ தூக்கு” என்றான் உடைந்த குரலில். சண்முகம் அதற்கு அங்கில்லை.
அதற்குள் எல்லோரும் வந்துவிட்டனர்… கார் நின்றடத்திற்கு… சதாவும் வந்தான். கார்த்தி அப்படியே பிரம்மை பிடித்தது போல் நிற்க… சதா, அமைதியாக அருகில் வந்து, தனது முழுக்கை சட்டையை இழுத்து விட்டுக் கொண்டு.. ஈசியாக தன்னிரு கைகளில் தூக்கினான், தன் மனையாளை.
கார்த்திக்கு இவர்களை பார்த்ததும்தான் தெம்பு வர… “ம்மா… பாரும்மா” என தன் அன்னையை துணைக்கழைத்து சதாவுடன் நடந்தான்.
வந்த எல்லோருக்கும் பயம், ஏதோ செய்துகொண்டாளோ என, எனவே எல்லோரும் “என்னாச்சு என்னாச்சு “ எங்க.. கார்த்திக்கு வாயே வரவில்லை பேச.. அவனின் உடல், பொருள், ஆவி அனைத்தும் இப்போது அவன் தங்கையுடன் சென்றது.
சதா அங்கிருந்த ஒரே ஒரு கயித்து கட்டிலில் அவளை கிடத்தி அமைதியாக அவளின் நாடி பிடிக்க, அவளின் உடையெல்லாம் ஈரம்… உடலுடன் ஒட்டி அவளின் மூச்சை இறுக்கியது போல…
பார்த்தவன் “கீர்த்தி சிசர் எடுத்து அந்த ட்ரெஸ்ச ரிலிப் பண்ணு, காற்று வேண்டும் எல்லோரும் வெளியே போங்க“ என்றவன் தன்போல் நாடிபார்த்து… தேவையானவற்றை செய்தான்.
எல்லோரும் வேடிக்கை பார்க்க சதா “காத்தே இல்ல… பேன் வேற, இருந்தா எடுத்து வா சம்மு” என்றான். இப்படியே அனைவரையும் வேலை வாங்கி கன்யாவிற்கு மருத்துவம் பார்த்தான்.
பின் வெளியே வர.. கீர்த்தியும், மைதிலியும் உடையை மாற்றினர் கன்யாவிற்கு… அதற்குள் சண்முகம் அவன் சொன்ன மெடிசன் திங்க்ஸ் எல்லாம் வாங்கி வந்திருந்தான். பின் ஷண்முகம் தங்கள் சொந்தங்களிடம் சொல்லி கார்த்தியின் வண்டியை எடுக்க செய்தான்.
கன்யாவின் உடை மாற்றிய பிறகு, மீண்டும் உள்ளே சென்ற சதா… அவளின் கைககளை கிளீன் செய்து, மருந்திட்டு… மீண்டும் ஒரு முறை நாடி பார்த்து வந்தான்.
அடுத்த அரைமணி நேரத்தில் கன்யா விழித்துவிட்டாள். சதா தன் கடமை முடிந்தது என வெளியே அமர்ந்து கொண்டான். தன் அன்னையிடம் “சாப்பிட ஏதாவது சாப்டா குடும்மா… இந்த சாப்பாடு வேண்டாம்” என்றான். இப்போது நடக்கும் விருந்து வேண்டாம் எனும் விதமாக.
கன்யாவின் தாய் மைதிலி தயிர் சாதம் எடுத்து வந்தார்… விழித்த கன்யாவிற்கு யார் முகத்தையும் பார்க்க முடியவில்லை. எது நடந்துவிட கூடாது என நினைத்தாலோ அதே நடந்து விட்டது.
“என் கணவன் அவன், அவனை பார்த்தால் நான் தடுமாறுவேன்” என சொல்லாமல் சொன்னது போல் ஆனது இப்போது… அதுவே அவளிற்கு தர்மசங்கடத்தை தர… தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.
மைதிலி புலம்பியபடியே “என்ன பாடு படுத்தற எங்கள… எல்லாம் கூடி வர நேரத்தில், இப்படிதான் காரியத்த கெடுப்பியா… என்ன பெண்ணோ போ, என்ன சொல்ல போறாங்களோ” என புலம்பியபடி தன் முந்தானையில் தன் கண்களை துடைத்தவாறு… கன்யாவிற்கு உணவை ஊட்டினார்.
அங்கு வெளியே, சண்முகம் அதற்குள் நடந்தை சொல்லி முடித்திருந்தான். எல்லோருக்கும் அப்பாடா என்றானது. கன்யா ஏதும் செய்துகொள்ள நினைக்கவில்லை என்ற எண்ணம் வந்தது.
கன்யா காரெடுக்கும் போது… ஒரே எண்ணமாக… இங்கிருக்க கூடாது எனதான் எண்ணி சென்றாள், அதனால் காரின் கண்ணாடியையோ, ACயையோ ஆன் செய்யவில்லை.
எனவே, அவளின் மன இறுக்கம், காற்று இல்லாதது எல்லாம் சேர்ந்து… மயங்கி நனைந்து இருந்தாள்… இப்போது சண்முகம் சொன்னதை கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான் சதா… ஏதும் பேசவில்லை. ஆனால், எல்லோரும் வேறு அவளை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த இடம் அவனுக்கு சங்கடத்தை தர, சதா இப்போது அவளை உள்ளே சென்று பார்த்தான்… கன்யா, தனியாக இருந்தாள், உறங்கவில்லை. யாரும் உடன் இல்லை. திரும்பி படுத்து, எங்கோ பார்த்தபடியிருந்தாள்.
சதா அவள் உறங்குகிறாள் என நினைத்து… அவளின் நிலை அறிய, கையை பிடிக்க.. திடுக்கிட்டாள் கன்யா… திரும்பிப்பார்க்க சதா… சின்னதாக முரண்டினாள், கையை விடுவிக்க நினைத்தாள். ஆனால் கையை விடாமல் தன் சோதனையை முடித்துதான் விட்டான் சதா.
அவளை எப்போதும்போல் பொருட்படுத்தவேயில்லை…
சதா “இப்போ ஓகே வா… பீல் பெட்டர்… நவ்” என சிறிதான குரலில் கேட்டபடியே அவளின் கைகளில் கண்ணாடி குத்திய இடங்களில் லேசாக ஒய்ன்மென்ட் போட்டிருந்தான், அதனை அவன் பார்க்க…
கன்யாவிற்கு ஏனோ அவன் அருகில் இருக்க இருக்க… ஏதோ போல் இருந்தது… ஆனாலும் தன்போல் “ம்..” என்றாள். கூடவே கோவம் வந்தது ‘என்ன ஒரு அக்கறை… வந்துட்டான் பெருசா… எப்படிடா இப்படி ஒரு முகம்.. உனக்கு… இங்க படுத்திருக்கறது உன் பொண்டாட்டிடா, ஏதாவது முகத்தில் தெரியுதா பாரு’ என கத்த வேண்டும் போல் இருந்தது… அவளுக்கு.
ஆனாலும், இப்போது கைபிடித்து நிற்கும் தன்னவனை அவளின் அனுமதியில்லாமலே தலை நிமிர்த்தி, அவளின் விழிகள் பருக தொடங்கின.
அவளின் விழியிர்ப்பில் சதா “ம்..” என புருவம் உயர்த்த.. படபடப்பாய் திரும்பிக் கொண்டாள். அவன் தன்போல் தன் வேலைகள் முடித்தான்.
சற்று தள்ளியும் நின்று கொண்டான் “நைட் ஊருக்கு போலாம்… இப்போ ரெஸ்ட் எடுங்க…” என்றான்.
கன்யாவிற்கு இன்னும் சங்கடமாக போனது… ஐயோ நான்தான் அலைகிறேனோ என மனம் இன்னும் தனக்குள் ஒடுங்கிக் கொண்டது.
சதா “உங்க நம்பர் ப்ளீஸ்” என்றான். இப்போது கன்யா நிமிர்ந்தாள். தன் போன் எங்கே என தேடினாள். அது சார்ஜ்ஜில் இருக்க.. எழுந்தாள். அவளின் பார்வை உணர்ந்து தானே எடுத்தான்… தன் போனிலிருந்து ஓர் ரிங் விட்டு கட் செய்தான்.
“சேவ் செய்துக்கோங்க” என்றான். இவள் ஒன்றும் சொல்லவில்லை, அமைதியாக நின்றாள். அந்த அறையின் கதவு வரை சென்றவன் திரும்பி, ஒருமுறை அவளை பார்த்துவிட்டு, வெளியே சென்றுவிட்டான் சதா.
கன்யா அப்படியே அமர்ந்தாள் அவன் புருவம் தூக்கி கேட்கும் போதும்… தன் கைபிடித்து பார்க்கும் போதும் தான், உணர்ந்ததை அவன் உணரவில்லை என ஒரு மனம் அவளிடம், காய…
இன்னொரு மனம் ‘என்னா அமைதியா இருக்கான்… ப்பா, நமக்கெல்லாம் சுட்டு போட்டாலும் வராதுப்பா… இப்போதும் நான் வேணாம் போல” என எண்ணம் செல்ல தலைய உலுக்கிக் கொண்டாள். அந்த தூக்கி… நிறுத்தி.. கேட்டு… ஹனுமான்… மாலை.. எல்லாம் மறந்து போனது போல.. கன்யாவிற்கு.
அங்கு ஹாலில்.. இப்போது அனைவரும் கிளம்ப தொடங்கினர்… முன்போல் யாரையும் விட்டு செல்லும் எண்ணம் இல்லை போலும்.. எல்லோரும் இரவு கிளம்புவது என முடிவு செய்து வேலை நடந்து கொண்டிருந்தது.
கன்யா… தூக்கம் வராமல்… வெளியேவும் வர பிடிக்காமல்… அந்த சின்ன அறையிலேயே அடைந்து கிடந்தாள். அவள் அருகில் கார்த்தி சென்றான் “என்னடா… எப்படி இருக்க”” என்றான் திடமான குரலில்.
கன்யா “சாரிண்ணா… நான் எதுவும் தப்பா நினைச்சி போகல..” என்றாள். தன் கைகளை பார்த்த வண்ணம்.
கார்த்தி “ச்சு… அதெல்லாம் இல்லடா… எனக்கு தெரியாதா… விடு பார்த்துக்கலாம்… நீ என்ன சொன்னனாலும் சரிதான், அதுக்காக இப்படி சொல்லாமல் எங்கும் போக கூடாது ப்ளீஸ்…” என்றான் சங்கடமாக.
கன்யா பாவமாக அவனை பார்த்தாள். கார்த்தி “விடுடா… ஊருக்கு போய் பேசிக்கலாம்” என்றவன் “தூங்கு” என்றான்.
கன்யா “இல்ல ண்ணா, வெளிய.. போறேன்… இங்க தனியா இருக்க என்னவோ போல இருக்கு” என்றாள்.
இருவரும் வெளியே வந்தனர்.. இப்போதும் கல்யாணி “ஏன் கன்யா தூங்கல” என்றார்
“இல்லத்த” என்றவள் அவர் அருகில் அமர்ந்து கொண்டாள். பின் கார்த்தி வேலை பார்க்க சென்றான். அமர்ந்திருத்த இருவரை தவிர மற்றவர்கள் அனைவரும் ஏதோ வேலையை, தொட்டு தொட்டு செய்து கொண்டிருந்தனர்.
நேரம் சென்றது அனைவரும் இரவு உணவு முடிந்து கிளம்பினர் சென்னை நோக்கி.
இரவு பயண களைப்பினால், அனைவரும் காலையில் சுருண்டு கொள்ள… மதியமே மெல்லமாக விடிந்தது அங்கு.
சதா… ஏனோ இன்னும் விழிக்காமல் இருந்தான். அவனிற்கு உறக்கம் என்பதே இல்லாமல் இருக்க… இப்போதுதான் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்…
மதியம் உணவு கூட உண்ணவில்லை… மாலை மணி ஆரு என்றாக, அதற்கு மேல் கல்யாணி பொறுக்காமல் மேலே சென்றார்.
“சதா சதா… “ என அறை கதவை தட்ட… அங்கு கதவு திறந்தே இருந்தது. கல்யாணி அருகில் அமர்ந்து “சதா சதா” என இன்னொமொரு முறை ஆசையாக அழைக்க… வேண்டும் மென்றே மகன் எழும்பவில்லை.
கல்யாணி “சதா கிளம்புப்பா… அங்க கன்யா வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம்… புள்ள எப்படியிருக்கோ” என்றார் கவலையாக.
சதாக்கு ஏதோ போலானது. இங்கு நான் எத்தனை வருடம் சென்று வந்திருக்கேன்… இப்போது என்னை கவனிக்காமல் அங்கே எதற்கு எனதான் தோன்றியது.
அப்படியே பெட்டின் மேல், விரித்த.. விரிப்பு கலையாமல், தன் தலையணையில் சிறு சுருக்கம் இல்லாமல்… படுக்கையை கசக்காது.. பூப்போல் திரும்பியவன் “ஏன் ம்மா.. இவ்வளோ அவசரம்… நாளைக்கு போலாமே” என்றான் கட்டிலின் முழு நீளத்திற்கு படுத்திருந்தவன்…
கல்யானிக்கு கோவம்தான்.. ஆனாலும் மகனின் களைப்பு தெரிந்து.. “இன்னிக்கு ஒரு தடவ போயிட்டு வந்திடலாம்.. சிலதெல்லாம் பேசணும் ப்பா, நீ கிளம்பு… நாம போயிட்டு வரோம்” என்றார் குரலுயர்த்தி.
மனதேயில்லாமல்தான் எழுந்தான் சதா… அவன் வேலைகளை முடித்து கீழே வந்தான். சற்று நேரம் இயல்பாய் பேசிக் கொண்டிருக்க… நேரம் சென்றது.
மைதிலி அழைத்துவிட்டார் கல்யாணிக்கு “அண்ணி வந்திடுவீங்களா…” என்றார்.
“தோ கிளம்பிட்டோம் அண்ணி” என்றவர் தன் கணவரின் முகம் பார்க்க.. வெங்கட் “போலாமா சதா… அவங்க வெயிட் பண்றாங்க..” என்றார்.
சதாக்கு பெருமூச்சு வந்தது… ‘பெயர் இன்னும் தெரியவில்லை…’ என்ன செய்வது அங்கே சென்று… எனத்தான் தோன்றியது அவனுக்கு எப்படி பேசுவது. நேற்றே சொல்லாமல் சொல்லிவிட்டாள் என் மேல்தான் தவறு என…
இத்தனை வருட காத்திருப்பு எதனால்… நான் வந்தவுடன், எங்கோ சென்றது எதனால்.. எல்லோரும் என் முகம் பார்க்க.. அவளோ நிமிர்ந்து பார்க்கவே சங்கடபடுகிறாள்.
நான் போயி என்ன சொல்வது… இப்போது நான் சொல்லுவது எல்லாம் சாக்குதானே… என எண்ணி தன்போல் கைகள் தலைகோத… தான் அணிந்திருந்த டீ-ஷர்ட்டை வழக்கம் போல் தோளில் இழுத்து விட்டுக் கொண்டு “போலாம் “ என்பதாக தலையசைத்தான்.
பார்ப்பதற்கு அவன் சாதரணாமாக இருந்தாலும் உள்ளுக்குள்… நெருடல்தான்… இத்தனை நாட்களின் தவறுகளை… இப்போது ஈடு செய்யவேண்டுமே என்ற நெருடல்தான்.
கன்யாவின் வீட்டில் இவர்களை எதிர்பார்த்தே இருந்ததால்.. வரவேற்பு நிறைவாகவே இருந்தது. மைதிலிக்கும் கல்யாணிக்கும்தான் உள்ளுக்குள் சந்தோசம் நிரம்பி அது அவர்களின் கண்களின் வழியே வாழ்ந்தது.
கன்யா, வந்தவர்களை வரவேற்றாள் பெரியவர்கள் பின்னாடியே சதா வரவும் “வாங்க” என்றாள் தயங்காமல். சதாவிற்கு கொஞ்சம் புதிதாக இருந்தது.
கூடவே இந்த மரியாதை, ஒரு மாதிரி கூச்சத்தை தர, கொஞ்சம் சதாவிற்கே வெட்கமாக போனது. லேசாக தலையசைத்து ஏற்றவன் அமர்ந்து கொண்டான்.
இரு குடும்ப உறவுகள் மட்டும் இருக்க… முறையான விசாரிப்புகளுக்கு பிறகு… ஒரு சின்ன அமைதி… யார் முதலில் பேசுவது, என்ன கேட்பது என்ற நிலை.
சதா “இப்போ எப்படி இருக்கீங்க” என்றான் கன்யாவிடம், கன்யாவிற்கு ஜில் என இருந்தது. சின்ன அதிர்வும்… தாக நேரத்து தண்ணீராய் அவளுள்ளே அந்த வார்த்தை இறங்கியது..
அவள் அந்த நொடியை ரசிக்க கூட முடியாமல்… ஏதோ நினைவு வந்தது… சதாவின் வார்த்தையில் எல்லோரும் நிமிர.. கன்யாவிற்கு, எல்லோருக்கும் காட்சி பொருள் ஆகிரோமே என இருந்தது.
வேறு வழியும் இருக்கவில்லை “ம்..” என்பதாக தலையாட்ட… சதா வேறு என்ன பேசுவது என தெரியாமல் அமர்ந்திருந்தான்.
இப்போதுதான் புதிதாக வீட்டிற்கு வருகிறான்… சற்று நேற்றே செந்திலிடமும் கார்த்தியிடமும் பழகியிருந்தான். எனவே அவர்களுடன் பேச அமர்ந்து கொண்டான்.
ஆனாலும் உள்ளுக்குள்… சற்று லஜ்ஜையாக இருந்தது இந்த வயதிற்கு இப்படி மாப்பிள்ளை போல்… எல்லோரும் தன்னை வேடிக்கை பார்ப்பது, மேலும் ஒரு பெண்ணின் முன் என்ன பேசுவது என தெரியாமல் தடுமாறுவது என புதிதாக உணர்ந்தான் சதா.
மெதுவாக பேச்சுகள் சென்றது வெங்கட்டே ஆரம்பித்தார் “நாளை, மறுநாள் நாள் நல்லா இருக்கு தங்கச்சி, அன்னிக்கே கன்யாவ கூட்டி போறோம்… காலையிலேயே… “ என்றார்.
சதாவிற்கே இது புதியா தகவல். எனவே முகத்தில் ஏதும் காட்டமால் அமர்ந்திருந்தான். கன்யாவிற்கு ஒன்றும் யோசிக்க கூடாது என எண்ணி நின்றிருந்தாள். ஆனால் அவளின் கண்கள் சதாவைதான் பார்த்திருந்தது.
கன்யா “மாமா… இயர் எண்டிங்… இந்த வீக் முடிஞ்சி பார்த்துக்கலாமே…” என்றாள் சதாவை பார்த்தபடி.
அவளின், இந்த பார்வை சதாவை ஏதோ செய்தது… சீண்டியதா.. கேள்விகேட்டதா… தெரியவில்லை, ஆனால் அவனை ஈர்க்கவில்லை… கோவபடவைத்தது. ‘ஏன், வரமாட்டாளாம்..’ என சட்டென எழுந்தது… ஒரு எண்ணம்.
எனவே சதா.. “ஏன்… என்ன பிரச்சனை இப்போ… அங்கிருந்து போயிக்கலாம்மே..” என்றான். மிக மிக சாதரணமான குரல். ஆனால், கன்யாவிற்கு இந்த வார்த்தை.. தேவையாக இருந்தது போலும்… எந்த உணர்வுமே இல்லாதா இந்த முகத்தில் இந்த எரிச்சலாவது பரவாயில்லை என நினைத்து அமைதியாக நின்றாள்.
மைதிலிதான் “நீங்க சொல்லற படி செய்திடலாம் ண்ணா” என்றார் தன் மகளை எரித்துவிடுவது போல் பார்த்தபடி.