உனது காதலில் விழுந்தேன்
அத்தியாயம் 1:
‘’டேய் மச்சி, இன்று எனக்கு கல்யாணம் டா மறந்துட்டியா?’’ என தனது உயிர் தோழனிடம் கேட்டுக் கொண்டிருந்தான் பிரபு.
ஆமா, அப்படியே மறந்துட்டாலும், அதான் கல்யாணம் பேசுன நாளா இத பத்தி மட்டும் தான பேசுது இந்த பக்கி என்று நினைத்து கொண்டது வேறு யாரும் இல்லை பிரபுவின் உயிர்த்தோழன் வெங்கட் தான். (உயிர்த்தோழன் என்றதும் இருவரும் தளபதி பட சூர்யா தேவா அளவிற்கு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நிச்சயம் சங்கம் ( அதாங்க நான் ) பொறுப்பல்ல).
இன்னும் மூன்று மணி நேரத்தில் கல்யாணம் டா. இன்னும் நீ கிளம்பவில்லையா?
டேய், உனக்கு தான கல்யாணம். நான் ஏன் டா கிளம்பனும்?
என்னடா, இப்படி சொல்லிட்ட, ஆயிரம் இருந்தாலும் நீ தான என்னோட ஒரே ஒரு நண்பன். (என்னடா, ஒரே ஒரு நண்பன் சொல்லிட்டானே, அப்போ இரண்டு பேரும் ஒரே பள்ளியில் படித்து, ஒரே கல்லூரியில் படித்து, தற்போது வேலை வரை ஒரே இடத்தில பார்க்கும் நண்பர்கள் போல என்று நீங்கள் நினைத்தால் அதற்கும் சங்கம் பொறுப்பேற்காது.)
இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதமாக தான் நண்பர்களாக உள்ளார்கள்.
ஆறு மாதத்தில் எப்படி இப்படி உயிர்த் தோழன் அளவிற்கு ஆத்ம நண்பர்கள் ஆனார்கள் என்று கேட்டால், தற்போது அவர்கள் வேலை பார்க்கும் கல்லூரியில் இருக்கும் இரண்டு 90′ஸ் கிட்ஸ் இவர்கள் மட்டுமே. (பின்குறிப்பு: திருமணம் ஆகாமல் இருக்கும் 90′ஸ் முரட்டு சிங்கிள்ஸ்.)
முரட்டு சிங்கிள் பிரபுவை, ஒரு பெண்ணின் முந்தானைக்குள் எப்படியாவது மாட்ட வைக்க வேண்டும் என்று அவனின் பெற்றோர்கள் கடந்த ஐந்து வருடங்களாக அவனுக்கு பெண் பார்த்து வந்தனர். ஒரு இடமும் இதுவரை சரியாக தகையவில்லை. ஏதோ பிரபுவின் அம்மாவின் கோரிக்கையை அவர்கள் குலதெய்வம் திரௌபதி அம்மன் போனால் போகட்டும் என்று தற்போது தான் ஏற்று கொண்டு அவனுக்கு கல்யாண யோகத்தை கொடுத்துள்ளது, அதுவும் கண்டிஷன்ஸ் அப்ளையுடன். அதாவது இந்த வைகாசிக்குள் அவன் திருமணம் நடக்கவில்லை என்றால் அதன் பிறகு கல்யாண யோகம் அடுத்த பத்து வருடத்திற்கு அவனுக்கு இல்லை என்று அவர்கள் குடும்ப ஜோதிடர் கூறிவிட்டார். அதன் பிறகு அவனின் பெற்றோர்கள், சொந்த பந்தங்கள் தீயாய் வேலை பார்த்து, அவனுக்கு ஒரு பெண்ணை கல்யாணத்திற்கு பேசி முடித்துவிட்டனர்.
இதோ இன்று அவனின் திருமணம். அதற்குத்தான் வெங்கட் ஏன் இன்னும் கிளம்பவில்லை? என்று அவனை நச்சரித்துக்கொண்டு இருக்கிறான் பிரபு.
டேய்,அது எல்லாம் கல்யாணத்துக்கு வரதா இருந்தா தான கிளம்பனும். வீட்டில எனக்கு இந்த லுங்கி பனியனே அதிகம் போடா என்றான் வெங்கட்..
டேய் மச்சி, என்னடா இப்படி சொல்லிட்ட, என் கல்யாணத்துக்கு தான் வரமாட்டன் சொல்லிட்ட. ஆனா குளிச்சி முடிச்சி, கொஞ்சம் மேக்கப் போட்டு, வாட்ஸ்சப் கால் பண்ணி எனக்கு வாழ்த்து சொல்லுவனு, எவ்ளோ எதிர் பார்த்தன் தெரியுமா? என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூறினான் பிரபு.
டேய், வேணாம் கடுப்ப கெளப்பாத, விட்ட விடிகாலையில் கால் பண்ணி ஏன் டா சோதிக்கிற. மணிய பாருடா, 5 தான் ஆகுது. நைட் எல்லாம் என்ன தூங்க விடாம, பேசி பேசி டார்ச்சர் பண்ணி இப்போ ஒரு மணி நேரத்துக்கு முன்ன தானடா போன வச்ச. இப்போ, அதுக்குள்ள எழுப்பி விடற. நான் என்ன டா பாவம் பண்ண உனக்கு? ஏன் டா, இப்படி படுத்தற, பேச உனக்கு யாருமே கிடைக்கவில்லையாடா? என்றான் வெங்கட்.
இல்லையே மச்சி, இல்லனா நான் எதுக்கு உனக்கு போன் பண்ணி பேச போறன்.
ஏன் டா, நிஜமாவே நீ இன்னும் பொண்ணு கூட பேசலியா? என்று ஆயிரத்தி ஒன்றாவது தடவையாக தனது சந்தேகத்தை கேட்டான் வெங்கட், பிரபுவிடம்,
இல்லடா, பேச கூடாதுனு எங்க வீட்டில கண்டிப்பா சொல்லிட்டாங்க.
[the_ad id=”6605″]
‘’ஏன்டா, இப்படிலாம் பன்றாங்க உன் அப்பாம்மா?’’
அது தான் ஏற்கனவே உனக்கு காரணம் தெரியுமேடா, இதுவரை நான் தனியா போய் பேசின எல்லா பொண்ணுங்களும், என்ன வேண்டாம்னு சொல்லிட்டாங்கடா. அதான் அம்மா, இந்த முறை உஷாரா என்ன பொண்ணுகிட்ட பேசவே விடல.
ஏன்டா, அப்படி என்னத்த தாண்டா பேசுவ, அவங்களாம் உன்ன வேண்டாம்னு சொல்ற அளவுக்கு என்றான் வெங்கட் .
டேய் நீயும் என்ன சந்தேகப்படற பாத்தியா, இந்த பிரபு ஒரு சொக்கத்தங்கம் டா.
ஆமா, ஆமா, இவரு சொக்கத்தங்கம், நாங்கல்லாம் பித்தளை பாத்திரம், போவியா மொதல்ல கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லுடா.
டேய், முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட என்ன பேச முடியும்? அதான் பொதுவா நம்ம சப்ஜெக்ட் பத்தி பேசுவேன் என்றான் பிரபு.
நம்ம சப்ஜெக்ட்னா, பிசிக்ஸ் பத்தியா பேசுவ, என்றான் வெங்கட் .
ஆமா, அது தான நம்ம எடுக்கற சப்ஜெக்ட். அப்போ, அத பத்திதான பேச முடியும்.
எருமை, எருமை, ஏன்டா நம்ம பசங்களே பத்து நிமிஷத்துல தூங்கிடுவாங்க கிளாஸ்ல. இதுல நீ வேற, அத பத்தி அந்த பொண்ணுங்க கிட்ட பேசுவியா, நல்ல வேளை இந்த முறை உங்க அம்மா உஷாராயிட்டாங்க, இல்லனா இந்த முறையும் உன் கல்யாணம் நடந்து இருக்குமோ என்னவோ? சரி, சரி அது எல்லாம் போகட்டும், நீ போய் ரெடியாகு, அப்படியே என்னையும் கொஞ்சம் தூங்க விடுடா ப்ளீஸ் என்றான் வெங்கட்.
வெங்கட் கூறியபடியே தானும் தனது திருமணத்திற்கு தயராக சென்றான் பிரபு.