நளினியுடன் பேசி முடித்த இளம்பரிதி நேரே சென்றது அவனுடைய அத்தை தங்கியிருந்த அறைக்கு தான். ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் அவருடைய அரை வாசலிலேயே நின்றவன் மெல்ல அவர் அறை கதவை தட்டினான். தாமரை தான் கதவை தட்டுகிறார் என நினைத்த மீனாட்சி அங்கு இளம்பருதியை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதனை அவர் கண்களில் தெரிந்த அதிர்ச்சியே காட்டியது.
அவனை வாசலில் கண்டதும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றவர் “சின்னு…” என எப்பொழுதும் அவனை அழைக்க பயன்படுத்தும் வார்த்தையை கூற
“அத்தை…..” என்றவன் மேலும் எதுவும் பேச முடியாமல் அவரை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டான். “என்ன மன்னிச்சிடுங்க அத்தை….. நான் உங்ககிட்ட பேசாம இருந்திருக்க கூடாது…. சாரி” என்றவன் கண்களில் நிற்காது கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
“நீ ஏன்டா மன்னிப்பு கேட்கிற நான் தான் மன்னிப்பு கேட்கணும்….. என்ன மன்னிச்சிடு…… நான்தான் உன்னை விட்டுட்டு போயிருக்க கூடாது…..” என்றவாறு அவரும் சமாதானம் பேச,
“காரணம் சொல்லி இருக்கலாம் இல்ல அத்தை…” என்றவன் அவரை நிமிர்ந்து பார்க்க….
“அப்ப உனக்கு நான் சொன்னா மட்டும் அந்த காரணம் புரிஞ்சிருக்குமா…… என்ன?”என்றவாறு அவர் அவனுடைய கண்ணீரை துடைக்க….
“அப்ப நளினிக்கு மட்டும் சொல்லி இருக்கீங்க” குறைபடித்தான் அவன்.
“அவதான் இப்போ உன்கிட்ட வந்து சொன்னாளா? அவளுக்கு நான் இப்போ தான் சொன்னேன் டா….. கொஞ்ச நாளைக்கு முன்ன” என்று அவர் விளக்க
“போகும் போது முகத்தைக் கூட பார்க்காமல் போனீங்க…….. நீங்க என் மேல கோவமா இருக்குறதுனால தான் நான் கெஞ்சறதையும் கவனிக்காம என் முகத்தையும் பார்க்காம போறீங்கன்னு நினைச்சிட்டேன்”
” உன் முகத்தை பார்த்தா நீ அழுவதை பார்த்து அதுக்கப்புறம் எனக்கு போக மனசு வருமாடா…… சொல்லு?? அன்னைக்கு நீ கெஞ்சி கேட்டது எனக்கு இன்னும் காததுல கேட்டுட்டே இருக்குடா….. உன்னை இங்க விட்டுட்டு போன அப்புறம் ரெண்டு மூனு நாளா எனக்கு தூக்கமே வரல….. என்ன விட்டுட்டு நீ எப்படி இருப்பனு தான் நினைச்சுட்டு இருந்தேன்…… என் சின்னு நான் இல்லாம எப்படி தூங்குறான்னு தான் உங்க அம்மாகிட்ட கேட்டுட்டே இருப்பேன்”
“சாரி அத்தை” என்றவன் மீண்டும் அவரை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான்.
“என்னடா நீ சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு……. இப்ப நீ எவ்ளோ பெரிய ஆளா ஆயிட்ட காலேஜ் முடிக்க போற”
“அது சரி நான் உன்மேல ஏன் கோபப்பட போறேன் நீ என்ன தப்புபண்ணின”
” அதெல்லாம் நான் மறந்துட்டேன்” என்றவன்…… எனக்கு “பால்கோவா செஞ்சு தருவீங்களா? அப்புறம் சுசியம். உங்க ஸ்வீட் சாப்பிடனும் போல இருக்கு”
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் பின்னிருந்து ஒரு குரல்…… அவர்கள் குடும்பமே அவர்களுடைய பாசத்தை காண வந்துவிட்டது
“ஆமாண்டா உனக்கு ஸ்வீட் செஞ்சி ஸ்வீட் செஞ்சிதான் அவளுக்கு சுகர் வந்திருக்கு” எனக் கூற
“அத்தை உங்களுக்கு சுகரா”
“ஆமாப்பா கொஞ்சநாளா சுகர்”
“அத்தை சுகர் ஒன்னும் சாதாரண நோய் கிடையாது…… ரொம்ப கவனமா இருக்கணும்……..” என்று அவன் மற்ற எவரையும் கண்டு கொள்ளாமல் அவரிடம் மட்டுமே தன் பேச்சை தொடர……
“சரி சின்னு நீ சொல்லிட்ட இல்ல கண்டிப்பா கவனமா இருப்பேன்…….. இப்பதான் என் சின்னு என்கிட்ட மருபடி பேசறான்…… இனி தான் நான் ரொம்ப நாள் வாழனும்” என்று மீனாட்சியும் தன் சின்னுவிடம் மட்டுமே கவனத்தை செழுத்த…..
‘ நம்மள பாத்தா இவங்களுக்கு எப்படி தெரியுது? என நினைத்த நளினி….
“அத்தை நீங்க சொன்னப்ப நான் நம்பல ஆனா இப்போ நம்புறேன்…. இவங்க ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்தால்…… அதுக்கு அப்புறம் நாம யாருமே அவங்க கண்ணுக்கு தெரிய மாட்டோம்ன்னு அன்னிக்கு நீங்க கரெக்டா சொல்லி இருக்கீங்க….. பார்த்தீங்களா…. நம்ம வந்து நின்னு எவ்ளோ நேரம் ஆச்சு எதையாவது நம்ம கிட்ட பேசுறீங்களா?” என்று தாமரையிடம் குறைபடித்தாள் நளினி.
“போடி பொறாமை பிடிச்சவளே நானே என் சின்னு கிட்ட இப்ப தான் ரொம்ப நாள் கழிச்சு பேசுறேன் அது உனக்கு பொறுக்கலையா?….”
“பேசுங்க… பேசுங்க….. நல்லா பேசுங்க பேசறது மட்டும் இல்ல கொஞ்சுங்க தூக்கிட்டு போய் தாலாட்டு பாடுங்க இப்ப யார் வேணாம்னு சொன்னா” என்றவள் பழிப்பு காட்டிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றாள்.
“ஆமாண்டி நான் இன்னைக்கு அத்தை மடியில் படுத்து தான் தூங்க போறேன்…. என்ன பண்ணுவ” என்று அவளை சீண்டவேண்டுமென்றே கத்தி கூறியவன்….
தன் அத்தையுடன் பழங்கதைகள் பேசிவிட்டு……. வெகு நேரம் கழித்தே தன் அறைக்கு சென்றான்.
அன்றைய இரவு தூக்கத்தின் நேரம் மீனாட்சிக்கும் இளம்பருதிக்கும் குறைந்திருந்தாலும் அவர்களுடைய மனம் நிறைந்திருந்ததால்… அந்த சிறிது நேர தூக்கம் கூட மிகுந்த புத்துணர்ச்சியை கொடுத்தது.
மறுநாள் காலையில் ……..
“என்ன மீனாட்சி நீ…….. இப்ப கிளம்புறேன் நேரத்துல போய் இதெல்லாம் தேவையா?……. சாயந்தரம் நீங்க ஊருக்கு கிளம்பனும் இந்த நேரத்துல போய் இவனுக்கு இது எல்லாம் செய்யணுமா?” என்று தாமரை அவரை கடிந்து கொள்ள அது எதையும் காதில் வாங்காது…. இளம்பருதி ஆசையாய் கேட்ட பால்கோவாவையும் சுசியத்தையும் செய்வதில் மட்டுமே தன் முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தார் மீனாட்சி.
“நீ போய்ட்டு வந்து கூட இதெல்லாம் அவனுக்கு செஞ்சு கொடுக்கலாம்” என்று தாமரை கூற ….
“சும்மா இருங்க அண்ணி…. அவன் என்கிட்ட இந்த மாதிரி ஆசையாய் கேட்டு எவ்வளவு நாளாச்சு தெரியுமா? ஒரு நாளாவது வந்து என்கிட்ட இது வேணும் அத்தைனு கேட்க மாட்டானான்னு எங்கிட்டு இருந்தேன். உங்களுக்கு தெரியுமில்ல அண்ணி….. அவனுக்காக தான் நான் இதையெல்லாம் செய்யவே கத்துக்கிட்டேன்.” என்றவர் தொடர்ந்து தன் வேலைகளை கவனிக்கலானார்.
“நீ திருந்த மாட்ட…… சொன்னாலும் கேட்க மாட்ட …சரி செஞ்சு குடுத்துட்டு போ” என்றவர் சமையலறையில் அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொண்டே அவர்களுடைய பயணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்.
இளம்பருதியும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தான்…. “அத்தை இப்போ அங்க குளிர்காலம் நான் உங்களுக்கு ஸ்வெட்டர் எடுத்து வச்சிருக்கேன்… ரொம்ப வெளியே சுத்தாதீங்க….. பகல்ல நல்லா வெயில் வந்ததுக்கப்புறம் வெளிய போயிட்டு இருட்டுரதுக்குள்ள ரூம்க்கு வந்திருநங்க…… அவங்க கண்டதையும் சாப்பிடுவாங்க… எதுனாலும் என்ன ஏதுன்னு விவரமா கேட்டுட்டு சாப்பிடுங்க…… அவங்க இங்கிலீஷ் நிறைய பேச மாட்டாங்க சொல்லப்போனா இங்கிலீஷ் தெரிஞ்சவங்க ரொம்ப கம்மிதான்…. தாய்மொழிப் பற்று அவங்களுக்கு ரொம்ப ஜாஸ்தி….. அதனால நீங்க எதுக்கும் மோபைல்ல ஒரு டிரான்ஸ்லேட்டர் ஆப் வெச்சுக்கோங்க அது உங்களுக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்…..”
என்று தன் அறிவுரைகளை அடுக்கிக் கொண்டே போனான்.
அதைக்கேட்ட நளினிக்கு தான் ஐயோ என்றிருந்தது…
மனதிற்குள்ளே ‘இவங்க அலப்பறை தாங்க முடியலையே’ என்று நினைத்தவள்
“அம்மா நீ அந்த ஊருக்கு போய் தான் அந்த ஊரில் வாழ்ந்த மக்களைப் பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னு அவசியமே இல்லை. பாரு……. அத்தான்னுக்கு எவ்ளோ நிறைய டீடெயில்ஸ் தெரியுது…… நீ அத்தான் கிட்ட கேட்டு அவங்க என்ன சாப்பிடுவாங்கன்றதுல இருந்து எத்தனை மணிக்கு தூங்குவாங்கன்ற வரை அத்தனையும் அவரே சொல்லுவார். எதுக்கு நீங்க அங்க எல்லாம் போய் டைம் வேஸ்ட் பண்ணனும்” என்று நக்கலாய் உரைத்தாள்.
“அப்படி சொல்லுடா என் தங்கம் நானும் காலைல இருந்து பார்த்துகிட்டு இருக்கேன்…… இவங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க பாசமழை ஓவரா பொழியுது வீட்டுக்குள்ள வெள்ளம் வந்துரும் போல” என்று ஆதித்தன் தன் பங்கிற்கு நக்கலடிக்க
“எல்லாருக்கும் எங்களைப் பார்த்து பொறாமை நிறைய கண்ணு பட்டு இருக்கு” என்ற இளம்பரிதி “அம்மா எனக்கும் அத்தைக்கும் நல்ல சுத்தி போடுமா கண்ட கண்ட கொல்லி கண்ணெல்லாம் எங்க மேல பட்டிருக்கு” என்று நளினியை பார்த்துக்கொண்டே கூற…..
‘என் கண்ணு கொல்லி கண்ணா….’ என மனதிற்குள் அவனை கருவியவள் “அம்மா உனக்கு ஒன்னு தெரியுமா அத்தான் எதோ தப்பு பண்ணினதுனால தான் நீ அவரை விட்டுட்டு போயிட்டன்னு அவர் இவ்ளோ நாள் நெனச்சிட்டு இருந்துருக்காரு……. அப்படி என்ன தப்பு பண்ணாங்கன்னு கேளு மா”
என்றவள் அவனை கோர்த்து விட….
“போடி உன்ன மாதிரியா??……. என் புள்ள தங்கம்…… அவன பத்தி எல்லாரும் எவ்வளவு பெருமையா சொல்றாங்க தெரியுமா?…….. இல்ல….. இந்த காலத்துல இப்படி ஒரு குணமான புள்ளைய பாக்கத்தான் முடியுமா?” என்றவாறே அவனுக்குென செய்த பால்கோவாவையும் அவனுக்கு ஊட்டி விட்டார்.
“அம்மா அது வந்து…..” என்றவள் இழுக்க…. அவளிடம் கண்களாலே சொல்லாதே என இளம்பரிதி கெஞ்சினான்.
“என்னடி இழுக்குற” என்று தாமரை அதட்டவும்…..
“ஒன்னும் இல்லமா எப்ப கிளம்புற” என்க
“என்ன அனுப்புறதுலயே இரு…. ” என்றவர் ” ஆறு மணிக்கு ஃப்ளைட்”
என்றபடி பயணத்திற்கு ஆயத்தமாக தொடங்கினார்.
அவர்கள் நடத்தும் பத்திரிக்கையில் ஒரு பகுதி “பண்பும் பண்பாடும்” அதில் பல ஊர்கள் உடைய சிறப்புகள் அங்கு வாழும் மனிதர்களின் பழக்கவழக்கங்கள், அவர்களுடைய உணவு முறைகள், என அனைத்தையும் பற்றி விரிவாக கூறுவார்கள். இது இன்றளவும் மீனாட்சி உடைய பொறுப்பு.
இப்போது அவர்கள் தேர்ந்தெடுத்த நாடு நீங்கள் யூகித்ததைப் போல் அந்த ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்த நாடுதான்.
அங்கு……..
அந்த ஆராய்ச்சிக் கூடத்தை விட்டு வெளிவந்த நச்சுக்கிருமி எவரும் அறியாமல் அனைத்து மக்களிடமும் மெல்ல மெல்ல பரவிக் கொண்டிருந்தது.
அவர்களுக்கு நோய் இருப்பதே தெரியாமல்…. அவர்களும் அதனை பரப்பிக் கொண்டிருந்தனர்……
முதலில் நோய் வந்த சாட்டர்ஜி, ஜின்வான் மற்றும் அந்த ஆராய்ச்சி மையத்தில் இருந்த அனைவருக்கும் அவர்களுடைய தவறு இப்பொழுது பூதாகரமாக தோன்றியது.
மற்ற நாடுகளின் மீது வன்மம் கொண்டிருந்தாலும்…… தங்கள் நாட்டின் மீது மிகுந்த பற்றுடையவர்கள் அல்லவா?
எனவே தங்களால் இந்த நோய்…… தங்கள் நாட்டில் யாருக்கும் வரக்கூடாது என எண்ணியவர்கள் தங்களையே தீக்கிரையாக்கி மாய்த்துக் கொண்டதோடு அந்த ஆராய்ச்சி மையத்தையும் முற்றிலுமாக தீக்கிரையாக்கி அழித்துவிட்டனர்.
ஆயினும் அதற்கு முன்பே நோய் பரவ ஆரம்பித்திருந்தது. அவர்களும் தங்களுக்கு நோய் இருப்பது தெரிவதற்கு முன்பே வெளியில் சென்று வந்தனர்…… அப்பொழுதே கொஞ்சம் கொஞ்சமாய் அந்த நோய் சாதாரண மக்களுக்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது நோய் பரவிக்கொண்டிருந்த அந்த நகரத்தை நோக்கியே இளம்பருதியின் அத்தையும் மாமாவும் தங்கள் பயணத்தை துவங்கினர்.