வரம் வாங்கி வந்தவள் நான்
அத்தியாயம் – 12
சுந்தருக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது.. ஒவ்வொரு சிறிய சொல்லும் செயலும் இவளுக்கு அவ குடும்பத்தை நியாபகப்படுத்தினால் இவளை நாம எப்படி சந்தோசமா வைச்சிக்கிறது.. “ஸாரிடா பேபி நான் அவசரப்பட்டு அடிச்சிட்டேன்.. வலிக்கிதா..??” அவள் கன்னத்தை தடவ,
“ம்ம் அடிச்சா வலிக்காதா..? இதோட செகண்ட் டைம் நீ என்னை அடிக்கிறது.. போ. இனிமேல் அடிச்ச நான் எங்க கிரான்மாவோட போயிருவேன் பார்த்துக்க..!!”
“நோ..டா பேபி அதமட்டும் நீ எப்பவும் செய்யவே கூடாது.. முதல்ல மாமாவுக்கு ஒரு பிராமிஸ் பண்ணு என்னை கேட்காம எதையும் செய்ய மாட்டேன்.. எங்கயும் போக மாட்டேன்னு.. எனக்குன்னு இருக்கிற ஒரே ஒரு வொய்ப் நீதான்.. அதுவும் நேத்து காலையில் தாலி கட்டின வொய்ப்.. நீயும் கோபமா போனா நான் வொய்ப் இல்லாம இமயமலை பக்கம் சாமியாரா போக வேண்டியதுதான்.. இனி உன்னை நான் தொடவே மாட்டேன்.. ஐயோ இல்ல பேபி இல்ல..டங்க் ஸ்லிப் ஆயிருச்சு.. நான் உன்னை அடிக்க மாட்டேன்.. இப்ப வேணா அடிச்சதுக்கு தோப்புகரணம் போடுறேன் எண்ணிக்கோ..”
1….2…..3….. எண்ணிக்கொண்டே தோப்புக்கரணம் போட ஆரம்பிக்க,
“ஹா..ஹா..ஹா.. வயிற்றை பிடித்துக் கொண்டு கிளுக்கி சிரித்தவள்..போய்யா..போ போதும் விடு நீ ஓவராதான் பண்ற..?” அவள் முகத்தில் புன்னகையை காணவும்தான் சுந்தருக்கு சற்று மனம் சமன்பட்டது.. கிணற்றடிக்கு சென்றவன் நீரை இறைத்து கைகால், முகம் கழுவ..
தர்ஷினியோ அவன் அருகில் வந்து மீண்டும் கிணற்றின் உள்ளே எட்டி பார்க்க, அவள் பின்புறம் வந்தவன் அவளை அணைத்து அவள் தோளில் தன் தாடையை பதித்து ஒரு இடத்தில் கைகாட்ட அங்கு ஒரு பறவை கூடுகட்டியிருந்தது..
“ஏய்ய்ய்… குட்டி பேர்ட்ஸா.. சூப்பர் சூப்பர் .. இங்க கூடு கட்டியிருக்கே வாட்டர்ல தவறி விழுந்திறாது..??”
“நோ பேபி அது கிணத்துல இறங்கினா கால்வைச்சு ஏறுறதுக்காக இருக்க இடம் கொஞ்சம் பெருசாவே இருக்கும்.. இன்னும் கொஞ்சநாள்ல அது எல்லாமே பறந்து போயிரும்டா…”
“ஓஓஓ..!!!”
“உனக்கு பறவைனா ரொம்ப பிடிக்குமா..??”
“ம்ம் நானும் தர்ஷனும் அங்க நிறைய பேர்ட்ஸ் வளர்த்தோமா.. பேர்ட்ஸ்க்கு ரெண்டு ஹவுஸ் இருக்கும் அதுல ஒன்னு என்னோட நேம் போட்டிருக்கும்.. இன்னொன்னுல தர்ஷன் நேம்.. ஆனா.. ஆனா.. எனக்கு ஒரு டவுட் சுந்தர் சொல்லியவள் உதட்டை கடித்து ஸாரி உங்க நேம் ஒரு ப்ளோல வந்திருச்சு.. மாம்ஸ்..”
“ஹாஹாஹாஹா பேபிடி நீ.. என்னடி உன்னை இப்படி வளர்த்திருக்காங்க..கியூட்டி..!
“போ மேன் இப்படித்தான் பேச்சை டைவர்ட் பண்ற.. நான் சொல்றத கேளு.. அங்க.. எங்க வீட்ல அந்த குரூப் எல்லாரையும் ஸூட் பண்ணினாங்க தானே..
உதடு அழுகைக்கு தயாராக சுந்தர் தன்னை அடக்கியபடி அவள் மனதில் உள்ளதை சொல்லட்டும் என அமைதியாக இருக்க.. அங்க என்னோட பேர்ட்ஸ் மட்டும் விட்டுட்டு தர்ஷன் ஹவுஸ்ல இருந்த எல்லா பேர்ட்ஸையும் அவங்க கொன்னுட்டாங்க..”
“என்ன பேபி சொல்ற..??”
“ஆமா நான் பார்த்தேன்.. போலீஸ் என்னை அங்க கூட்டிட்டு போனாங்கதானே அப்போ பார்த்தேன்.. என்னோட எல்லா பேர்ட்ஸ்ம் இருந்திச்சு.. தம்பியோடது எல்லாம் செத்து போயிருந்துச்சு.. அப்புறம் நான் இங்க வர்றதால அதெல்லாம் ஆன்ட்டிக்கிட்ட குடுத்துட்டு வந்தேன்..”
சுந்தருக்கு முதல்முறையாக இது நகைக்காக நடந்த கொலையில்லையோ வேற எதாவது ரீசன் இருக்குமோ.. தர்ஷனோட பறவைகளை கூட கொல்றதுன்னா அந்த சின்ன பையன் மேல என்ன கோபமாயிருக்கும்.. சைக்கோ மாதிரி வேலைப்பார்த்திருக்காங்க என்ற சந்தேகம் உருவாக நேற்றே அவன் வேலைப்பார்த்த கம்பெனி மூலம் ஒரு டிடெக்டிவிடம் இந்த கேஸை பார்க்கச் சொல்லியிருந்தவன் இதையும் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை குறித்துக் கொண்டான்..
“சுந்தரு..??” தெய்வானை அழைக்க..
“இதோ வாறேன்த்தா..” மனைவியையும் கையை பிடித்து அழைத்து வந்தவன் “என்னத்தா..??”
“அப்பு சங்கையாண்ணன் பொண்ணு ராசாத்திய ராத்திரியிலயிருந்து காணோமாம்.. ஊரே அங்கனதான் நிக்குதாம்.. நான்போய் ஒரு எட்டு என்னன்னு பார்த்துட்டு வாறேன்.. நீயும் மருமகளும் சாப்பிடுங்கப்பு..”
“என்னத்தா சொல்றிங்க சின்னப்ப்பொண்ணுள்ள..??”
“ஆமாய்யா நல்ல பொண்ணு.. மாப்பிள்ளையெல்லாம் பார்த்திருந்தாங்க.. அடுத்த வாரம் பேசி முடிக்கிறதா இருந்திச்சு என்னாச்சுன்னு தெரியல… உங்க அப்பு போன் பண்ணினாக அங்கனதான் இருக்காகளாம் நான் வாரேன்ப்பு..” பேசியபடியே அவர் சென்று கொண்டிருக்க,
“யாரு மாம்ஸ் உங்க ரிலேசனா..??”
“இல்லடா பேபி இங்க இருக்க எல்லாருமே நமக்கு ரிலேசன் மாதிரிதான்.. அப்படிதான் பழகுவோம்.. நல்லதோ, கெட்டதோ ஒருத்தருக்கு தெரிஞ்சாலும் மறுநிமிசம் எல்லாரும் அங்கன கூடிருவாக..”
“ஸோ நைஸ்ல..”
“ம்ம் வா சாப்பிட.. இனிமே சீக்கிரமே சாப்பிட்டிரனும்..” தர்ஷினிக்காக இட்லியும் சட்னியும் வைத்திருக்க சுந்தருக்கு கேப்பை கூல் கிண்டி வைத்திருந்தார்..
“உனக்கு என்னடா பேபி பிடிக்கும் இட்லியா..? தோசையா..?”
“ம்ம் தோசை..”
அடுப்பை பற்றவைத்தவன் நெய் நிறைய ஊற்றி முறுகல் தோசை சுட்டுக் கொடுக்க அவன் தோசை சுடும் அழகை ஆவென பார்த்திருந்தாள்..
“என்ன பேபி வாய்க்குள்ள ஈ போகபோகுது பாரு.. அவள் வாயை மூடவும் தோசையை தட்டில் வைத்து அவளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தான். சாப்பிட்டபடியே கூலை காட்டியவள் இதென்ன இந்த கலர்ல இருக்கு..??”
“இதா… ம்ம் நீங்க குடிப்பிங்கள்ள ஹெல்த் டிரிங்.. அதுமாதிரின்னு வைச்சுக்கோயேன்.. உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஸ்டென்த்.. இது நம்ம வயல்ல விளைஞ்சது..இரண்டு தோசையோடு போதும் என சொல்லியவளை இவ்வளவுதானா இன்னும் ஒரே ஒரு தோசை… வேண்டாம் என மறுக்கவும் இவன் கூலை எடுத்து குடிக்க, மீண்டும் வற்புறுத்தினான்.. கொஞ்சமே இந்த குடிச்சு பார்க்கிறியா..??”
“நோ..நோ..” மறுத்தவள் பின் என்ன நினைத்தாளோ அவன் கையில் இருந்ததையே குடித்துப்பார்த்தாள்..
அவள் இயல்பு போல செய்த இந்த செயலை பார்த்தவன் மனம் துள்ளினாலும் “என்ன நல்லாயிருக்கா..??”
“ம்ம் பரவால்ல போதும்..” அவன் சாப்பிட்டு முடித்து அந்த இடத்தை சுத்தப்படுத்த தர்ஷினியும் அவனுக்கு உதவினாள்..
“மாம்ஸ் நான் ஒன்னு கேட்கவா..??”
“நான் உனக்கே உனக்குன்னு இருக்க ஒரே ஒரு ஹஸ்பண்ட் நீ என்ன வேணா கேட்கலாம்.. மாமன் மலையை கயிறா திரிக்கவா.. இல்ல வானத்தை வில்லா வளைக்கவா.. என்ன செய்யனும் பேபி என்ன செய்யனும் தன் சட்டை கையை மடித்துவிட்டவன் கைகள் இரண்டையும் முன்னால் கொண்டு வந்து கமான் பேபி கமான்..”
“ஹாஹாஹா என்ன மேன் செமயா பேசுற.. நான் உன்னை ரொம்ப சைலண்ட்ன்னு நினைச்சுட்டேன்..”
“யா..யா… நான் சைலண்ட்தான் அது மத்தவங்ககிட்ட.. நீ சொல்லு பேபி..”
“இல்ல காலையில எனக்கு மில்க்கே கொடுக்க சொல்றிங்களா.. நீங்க எல்லாரும் பிளாக் கலர்ல என்னமோ கசப்பா குடிக்கிறிங்களே அது மட்டும் எனக்கு வேணாம்..”
கறுப்பு கலர்லயா ஆத்தா என்னத்த கொடுத்தாங்க… தெரியலையே.. “இங்க வா… இங்க உனக்கு எது புடிக்கலையோ அத தாராளமா சொல்லு அதோட.. இங்க நிறைய மாடு இருக்கு பார்த்த தானே..??”
“ஆமா..”
“அப்ப நிறைய பால், தயிர் எப்பவும் நம்ம வீட்ல இருந்திட்டே இருக்கும் .. நிறைய பேர் இங்கதான் பால் வாங்குவாங்க.. உனக்கு எப்பல்லாம் பால் வேணுமோ அப்ப நீயே பால காய்ச்சி குடிச்சிக்கலாம்.. அவங்க கொடுக்கிறது பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிரு.. பால் காய்ச்ச தெரியுமா.. கத்து தரவா..?”
“தெரியும் தெரியும்..”
நாட்டு சர்க்கரை இருக்கும் டப்பாவை காட்டியவன்” பால நல்லா காய்ச்சி அதுல இத போட்டு குடி உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது…” பாலை எடுத்து தானே அவளுக்கு சுண்ட காய்ச்சி நாட்டு சர்க்கரை போட்டு குடிக்கும் சூட்டில் ஆற்றிக் கொடுக்க அதை குடித்து பார்த்தவளுக்கு அதன் சுவை மிகவும் பிடித்திருந்தது..
“காலையில எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்த்தா நீ பால மட்டும் காய்ச்சி குடிச்சிக்கோடா.. நேரம் கிடைச்சா நான் காய்ச்சி தாறேன்.. சரியா..”
ம்…ம் சிறுகுழந்தை போல மண்டையை ஆட்டியவளின் தலையில் கைவைத்து சிரித்தவன் தர்ஷினியின் கன்னத்தை பார்க்க இன்னும் தன் கைவிரல்கள் அதில் வரிவடிவமாக தெரிய மனது சுட்டது.. அவளுக்கு எப்படி வலிச்சிருக்கும் கன்னத்தை தடவிப்பார்த்தவன்..
“ரொம்ப ஸாரிடா லட்டு..” ஒன்றும் சொல்லாமல் அறைக்குள் நுழைந்தவள் மீண்டும் வெளியில் வரும்போது கன்னத்தில் ஏதோ மேக்கப் போட்டு அந்த விரல்தடத்தை சற்று மறைத்திருந்தாள்..
“இப்ப தெரியுதா.. இல்லையென தலையை ஆட்ட.. ம்ம் வா எனக்கு உங்க கார்டன சுத்திக்காட்டு..?”
“இல்லடா பேபி இப்ப வேலைப்பார்க்க கொஞ்ச ஆளுங்கள வரச் சொன்னேன்..?” அதற்குள் வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டு வெளியில் வர அப்பத்தா இறங்கியிருந்தார்..
டிரைவர் டிக்கியில் இருந்து ஏகப்பட்ட பெட்டிகளை இறக்கி வைக்க தர்ஷினியும் சுந்தரும் வாசலுக்கு சென்றார்கள்..அப்பத்தா டிரைவரிடம் “இதெல்லாம் உள்ள கொண்டு போய் வைங்க.. சுந்தரை பார்க்கவும் அப்பு உன்னை என் சின்ன மவன் போன் பண்ணச் சொன்னான்..” பெரிய பெரிய டிபன் கேரியர்களை இறக்கி கொண்டிருக்க..
“என்னப்பத்தா இதெல்லாம்..??”
“நம்ம ராமசாமிதான கம்மாய குத்தகைக்கு எடுத்திருக்கான் அதான் கொஞ்சம் கெளுத்தி மீனு வாங்கி குழம்பு வைச்சு அதோட விராலு மீன வறுத்துக் கொண்டாந்திருக்கேன்ப்பு..”
“அப்பத்தா நீங்க ஏன் இந்த வேலையெல்லாம் பார்த்துக்கிட்டு ஆத்தா சமைப்பாங்கள்ல.?”
“அடப்போப்பு நானே இத்தனை நாளுக்கப்பறம் இப்பத்தான் சந்தோசமா இருக்கேன்.. யாரு செஞ்சா என்ன அப்பத்தா கைப்பக்குவத்தையும் கொஞ்சம் சாப்பிட்டுத்தான் பாரேன்..”
“அதுக்கில்ல அப்பத்தா இவ காரம் கம்மியாத்தானே சாப்பிடுறா அதான் அப்புவ நெஞ்செலும்பும் ஆட்டுக்கறியும் எடுத்துட்டு வரச் சொன்னேன்..”
“வரட்டும்ப்பு உன் பொண்டாட்டிக்கு உறைப்பு இல்லாம சமைக்கனும் அதானே அப்பத்தா எல்லாம் பார்த்துக்குறேன்.. நீ கவலைப்படாத..”
அதற்குள் வேலைக்கு ஆட்கள் வந்திருக்க அவர்களை கூட்டிக் கொண்டு கொல்லைப்புறம் சென்றவன் அவர்களோடு பேசி என்னன்ன வேலையை செய்ய வேண்டும் என வேலையை பிரித்துக் கொடுத்தான்.. அதற்குள் தர்ஷினியின் சின்ன மாமாவும் போன் செய்ய அவரோடு போனில் மூழ்கிவிட்டான்..
“ஆத்தா தங்கம் சாப்பிட்டியாத்தா..?”
“ம்ம் சாப்பிட்டேன் கிரான்மா.. எனக்கு தூக்கமா வருது கொஞ்சநேரம் தூங்கவா..??”
“போத்தா இதென்ன கேள்வி போய் படு..” அவர் கொண்டு வந்த பெட்டிகளை பிரித்து நகைகள் உடைகள் என தனிதனியாக பிரிக்க தர்ஷினிக்கு உள்ளே அறையில் படுத்திருந்தாள்..
தர்ஷினியை பொறுத்தவரை அவள் குடும்பத்தை இழந்ததில் இருந்து அவளுள்ளே ஒரு நெருப்பு எறிந்து கொண்டே இருந்தது.. அது அதிகமாகும் போதுதான் இவள் தற்கொலைக்கு முயல்வதே.. தனக்கு யாருமில்லை அனாதையாகிப் போனோம் என்றிருந்தவளுக்கு இந்த திடிர் திருமணம், அதிலும் சுந்தரின் அணுகுமுறை அவளை சற்று மாற்றி அந்த நெருப்பை அணைக்க ஆரம்பித்திருந்தது.. அதிலும் சுந்தரின் அண்மை, அவன் தொடுவது கட்டிப்பிடிப்பது எதிலுமே வித்தியாசம் தெரியவில்லை.. தங்கள் குடும்பத்தினருடன் இருப்பது போவே ஒரு பாதுகாப்பை கொடுத்திருக்க சுகமாகவே கண்ணயர்ந்தாள்..
போன் பேசி முடித்தவன் சற்று பொறுத்து உள்ளே வர அப்பத்தா மட்டும் ஹாலில் இருக்கவும் “தர்ஷினி எங்கப்பத்தா..??”
“உள்ள தூங்குறாய்யா..??”
“அவளோட சர்டிப்பிகெட்ஸ் எல்லாம் வேணுமே..??”
“இந்தாப்பு இதில இருக்கு உனக்கு என்ன வேணுமோ பார்த்து எடுத்துக்கோய்யா..” ஒரு பையை அவன் கையில் கொடுக்க தேவையானதை எடுத்துக் கொண்டவன்..
“அவ தூங்கட்டும்.. கொஞ்சம் பார்த்துக்கோங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் வர ராத்திரி ஆகும்.. இவள தனியா விட்றாதிங்கப்பத்தா..”
“சரிப்பு சரிப்பு..” தன் பேத்தியை பார்த்துக் கொள்ள தன்னிடமே கேட்கும் பேரனை நினைத்து பெருமைதான் அவருக்கு.. மறுபடி வெளியில் சென்றவன் உள் அறை வேலையை சற்று பொறுத்து பார்க்கச் சொல்லி உள்ளே உடை மாற்றச் செல்ல தர்ஷினி நல்ல தூக்கத்தில் இருந்தாள்..
தூக்கத்தில் முடிக்கற்றைகள் அவள் கன்னத்திற்கு வந்திருக்க அதை விலக்கி விட்டவன் கை தன்னை அறியாமல் அவள் கன்னத்தை தொட அது என்னவோ குளோப்ஜாமூனை தொடுவது போல அவ்வளவு சாப்டாக இருந்தது.. மெதுவாக அதை அழுத்தி பார்த்தவன் ப்பா.. அப்படியே கடிச்ச சாப்பிட்டறலாம் போலவே..
அது இப்ப முடியாது.. மென்மையாக அவள் கன்னத்தில் தன் இதழை வைத்தவன் அவள் அண்மையில் ஐயோ… மயக்குறாடா.. எனக்கே எனக்கா.. இந்த லட்டு.. இல்ல இந்த குளோப்ஜாமூன் எனக்கே எனக்கா..
அவன் மனசாட்சியோ ‘டேய் சோனமுத்தாஆஆஆ என்னடா எப்ப பார்த்தாலும் பொண்டாட்டி முந்தானைய பிடிச்சிட்டு திரியிற.. உனக்கு இருக்கிற வேலை என்ன..? தலைக்கு மேல ஆயிரம் வேலை இருக்கு இதெல்லாம் ஓவர்டா.. ஒரு பொண்ணப் பார்த்து இப்படி மயங்குறியே நீயெல்லாம் ஆம்பளையாயாயா… வெட்கம்…’ வேதனை போடா டேய் வரவர எனக்கு உன்கிட்ட மனசாட்சியா வேலைப்பார்க்கவே பிடிக்கலை.. நான் போறேன்..’
‘ஐ..ஐ… ரொம்ப நல்லது நீ வேலை விட்டு போ நான் மனசாட்சி இல்லாதவனாவே இருக்கேன்..’
‘ஏன்.. அது ஏன்னு கேட்கிறேன்.. நீ எதாவது தப்பு பண்ணினா எல்லாரும் உனக்கு மனசாட்சி இருக்கான்னு என்னை திட்டவா.. போடா.. உன்னைப்பத்தி எனக்கு தெரியும் இப்ப உனக்கு இருக்கிற வேலையப்பாரு.. இவ உன் பொண்டாட்டிதான் எந்த காக்காயும் தூக்கிட்டு போகாது..’
‘ச்சே ச்சே எல்லாருக்கும் எதிரி வெளியில இருப்பாங்க.. எனக்கு மட்டும் எனக்குள்ளேயே இருக்கு..’இதற்கு மேல் தாமதமாக்க முடியாது நினைத்தவன் வேகமாக உடையை மாற்றி தன் வண்டியை கிளம்பியிருந்தான்..
நேராக வண்டியை சொசைட்டிக்கு விட்டவன் அந்த மேனேஜரிடம பேசி, அடுத்து திருமணத்தை பதிவு செய்வதற்கு என்னன்ன தேவை என அறிய ரிஜிஸ்டர் ஆபிஸிற்கு சென்று வேலையை முடித்து வயலுக்கு தேவையான உரங்களை வாங்கி, அடுத்து தனக்கு வீடு கட்ட இருக்கும் இன்ஜினியருக்கு போன் செய்து அவரை ஒரிடத்திற்கு வரச் சொல்லியிருந்தான்..
அந்த நாள் சட்டென மறைய வீட்டிற்கு வரும்போதே மணி ஒன்பதரை இருக்கும்.. தூரத்தில் வரும்போதே பார்த்துவிட்டான் தர்ஷினி வெளியில் அமர்ந்திருப்பதை.. என்னாச்சு இவ ஏன் வாசல்ல உட்கார்ந்திருக்கா.. வண்டியை வேகமாக விட.. இவனை பார்க்கவும் அவள் எழுந்து வர முகம் மலர்ச்சியாய் இருந்தது..
ப்பா ஒன்னும் பிரச்சனை இல்லைப்போல.. “என்ன பேபி வாசல்ல உட்கார்ந்திருக்க..?”
“உனக்காகத்தான் மாம்ஸ்.. உன்ன காணோம்ன்னுதான் வெயிட் பண்ணினேன்..”
அவள் காத்திருப்பு இவனுள் ஜில்லென இறங்கியது..காலையில் ரோஸ் கலரில் சேலை அணிந்திருந்தவள் இப்போது நல்ல பர்பிள் கலர் சேலை அவள் நிறத்திற்கு இன்னும் எடுப்பாய் இருந்தது.. தலையை அழகாக பின்னலிட்டு தலைநிறைய மல்லிகை பூ வைத்திருந்தாள்.. அவனுக்கு ஒரு போன் வர அதை எடுத்து பேசியவன்.. “பேபி உனக்கு ஒரு சர்பிரைஸ்…??”
“சர்பிரைஸா.. என்ன மாம்ஸ்..”
“கண்டுபிடி..” பின்னாலேயே பெரிய கூண்டு அதில் நிறைய பறவைகள் என ஒரு வண்டியில் வந்திருக்க அதை பார்க்கவும் தர்ஷினிக்கு சந்தோசம் தாங்கவில்லை..
“ஐய்… லவ் பேர்ட்ஸா.. சூப்பர் மாம்ஸ்… சூப்பர்…செம லவ்லி..”
“போடா லட்டு உனக்கு எங்க வைக்க சொல்லனுமோ அங்க வைக்க சொல்லு..? இவங்க சொல்ற இடத்துல வைச்சிருங்க..” வண்டியை உள்ளே நிறுத்தியவன் வெளிவாரத்தில் தந்தை அமர்ந்திருக்கவும் அவரிடம் செல்ல,
“என்னப்பு பண்ணின 8 மணியிலயிருந்து புள்ள வாசல்லதான் உட்கார்ந்திருக்கு..”
“கொஞ்சம வேலை இழுத்திருச்சுப்பு.. ஆத்தா அப்பத்தா எல்லாம் எங்க..??”
“அவுகல்லாம் இடியே விழுந்தாலும் ஆறுமணியிலயிருந்து பத்து மணி வரைக்கும் நாடகம் பார்க்காம இருக்க மாட்டாங்க போல.. உங்க ஆத்தா மட்டும்தான் அப்படின்னு நினைச்சேன் அப்பத்தாவும் அப்படித்தான் போல.. நீ போய் கைகால் முகத்தை கழுவிட்டு வா..”
மற்ற இருவரும் ஹாலில் டிவி நாடகத்தில் மூழ்கியிருக்க சுந்தர் குளித்து வெளியில் வர சுந்தரியும் தர்ஷினியும் அருகருகே நின்று அந்த பறவைகளை பார்வையிட்டு கொண்டிருந்தனர்.. சுந்தரிக்கு அந்த பறவைகளின் பெயரை தர்ஷினி சொல்லிக் கொண்டிருக்க சுந்தரிக்கும் முகமெல்லாம் சிரிப்பு..
இலகுவான இரவு உடைக்கு மாறி தந்தையிடம் வந்தவன் “அப்பு ராசாத்தி இன்னும் வீட்டுக்கு வரலையாமே..??”
“ப்பச் என்னத்தப்பு சொல்ல.. சங்கையாவும் அவன் பொண்டாட்டியும் அழுத அழுகை கொஞ்ச நஞ்சமில்ல.. நானும் அங்கனயே கிடந்திட்டு பொழுதோடத்தான் வந்தேன்.. போலிஸ்ல சொல்லியிருக்காகப்பு..”
“யாரையும் விரும்பி இருக்குமோ…??”
“ஆமாய்யா அவுக மாமாமவன் மேலதான் உசிரே வைச்சிருந்திருக்கு.. இவனும் சொந்தம் விட்டுபோக வேணாமேன்னு அங்கனயே பேசி முடிக்க முடிவெடுத்து அடுத்த வாரம் பரிசம் போடலாம்ன்னு அவுகள வரச் சொல்லியிருக்கான்..”
“ம்ம் அன்னேரத்தில அந்த பொண்ணு ஏப்பு ஒத்தையில போச்சாம்..?”
“மாட்டை காணோமாம்.. கன்னு போட வேண்டிய பக்குவம் போல அதான் பொழுதுக்கும் எல்லாரும் தேடியிருக்காக.. கடைசியில நம்ம ஐயனார் கோவில்கிட்ட இருக்குன்னு சொல்லவும் இந்த பொண்ணு போயிருக்கு.. அவ்வளவுதான் ராத்திரி முச்சூடும் வரலை.. என்னாச்சோ ஏதாச்சோ ஒன்னும் புரியல பாவம் .. ஒரு புள்ளை பெத்து ஈ எறும்பு கடிக்காம வளர்த்து இப்ப காணாம போச்சுன்னா அந்த ஆத்தா அப்புவுக்கு எப்படியிருக்கும் சொல்லு.. அவுக துடிக்கிற துடிப்பு பார்க்க முடியலைப்பு.. ம்ம் பார்ப்போம் போலிசு என்ன பண்றாகன்னு..”
அங்கு அதே தோப்பு வீட்டில் பாலாவும் வேலுவும் தண்ணீர் அடித்துக் கொண்டுதான் இருந்தார்கள்..
“டேய் நம்மள யாரும் சந்தேகப்படலையே..?”
“ப்பச் இல்ல.. ஆனா போலிஸ்ல கம்பிளைண்ட் கொடுத்திருக்காங்க.. அதான் கொஞ்சம் பயமா இருக்கு..”
“இருந்தாலும் இப்பவுள்ள பொண்ணுங்க எல்லாம் இவ்வளவு வீக்கா இருக்கவேணாம்.. ஒரு அறைதான் அறைஞ்சேன் அதுக்கே இப்படி சாகும்னு கனவா கண்டோம்..பாடி யார் கைக்கும் கிடைக்காதுதானடா..”
“கிடைக்க சான்ஸ் இல்ல.. ஏற்கனவே நாம இதுமாதிரி ஒரு பொண்ணு கெடுத்து கிணத்துக்குள்ள கல்லைகட்டி போட்டோம்.. ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்க அந்த பாழடஞ்ச கிணத்துக்கள்ளதான போட்டோம்.. ஒரு ஈ காக்காக்கூட அங்கிட்டு போகாது.. வருசம் ரெண்டாச்சு வெளிய வந்திச்சா. நாமளே அந்த பொண்ணு யாரோடயோ ஓடிப்போனதா பரப்பி விட்டோம்.. எல்லாரும் நம்பினாங்க.. ஆனா இதுல அதுமாதிரி செய்ய முடியாது போல.. முதல்ல போய் கம்பிளைண்ட் கொடுத்ததே அந்த பொண்ண கட்டிக்க போறவன்தானாம்.. கொஞ்சநாளைக்கு நாம வாலச்சுருட்டிக்கிட்டுதான் இருக்கனும்..”
பாலாவோ..” அப்ப தர்ஷினி நமக்கு கிடைக்கமாட்டாளா..??”
“டேய் இப்ப கொஞ்சம் விட்டுப்புடி… நேரம் பார்த்து தூக்குவோம்.. இப்ப நாமா போய் வம்புல மாட்டிக்க கூடாது…”
கையில் இருந்த மதுவை ஒரே மூச்சில் குடித்து காலி செய்தவர்கள் எண்ணம் எல்லாம் தர்ஷினியின் அழகை எப்போது அனுபவிப்போம் என்பது மட்டும்தான்..
அடுத்தடுத்த நாட்களில் சுந்தர் தன் வீட்டின் அந்த அறை ஜன்னலை எடுத்துவிட்டு அந்த அறையிலிருந்து வரும்படி ஒரு அட்டாச்சுடு பாத்ரூமை கட்டியிருந்தான்..ஏசியும் பிட்பண்ணியிருக்க பார்த்திருந்த அழகம்மைக்கு மனம் நிறைந்தது.. கிணற்றை இரும்பு வலையால் மூடி அதில் மோட்டார் செட் செய்திருந்தான்..
தர்ஷினியும் மெல்ல தனக்கு பால்காய்ச்ச வெற்றிகரமாக கற்றிருந்தாள்..கோழிகளுக்கு இரைபோடுவது, ஆட்டுக்குட்டிகளோடு விளையாடுவது, அந்த லவ் பேர்ட்ஸ்களை கொஞ்சுவது.. அதைவிட அவளுக்கு பிடித்த இடம் அவர்களது பெரிய தோட்டம் அதிலிருக்கும் பூச்செடிகள், மா, சப்போட்டா, பலா என மரங்களும் நிறைய இருந்தது.. சுந்தரும் இப்போதுதான் நூறு வாழைக்கன்றுகளை வைத்துவிட்டிருக்க அது வளர ஆரம்பித்திருந்தது அதை ஒவ்வொன்றையும பார்த்து ரசிப்பது சுந்தர் சொன்னபடி அவைகளுக்கு தண்ணீர் விடுவது என நேரத்தை போக்கிக் கொண்டிருந்தாள்..
சுந்தரும் ராமையாவும் அப்பத்தாவை இங்கேயே இருக்கச் சொல்லி கேட்டிருக்க அவரும் சந்தோசமாகவே அவரால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டார்.. பார்வதியை பொறுத்தவரை தர்ஷினியின் தொல்லையும் அதோடு சேர்த்து மாமியாரின் தொல்லை விட்டதென சந்தோசமாக இருக்க மற்ற எதுவும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை..
நேரம் கிடைக்கும்போதெல்லாம் சுந்தர் தன் மனைவியுடனே பொழுதை கழிக்க.. நேரம்தான் கிடைக்கவில்லை.. வயல் வேலை, பேங்க் வேலை, இந்த வீட்டுவேலை என நேரம் சடுதியில் முடிந்தது..
ஒரு வாரம் கழிந்திருக்கும் அன்று காலை.”.பட்டுக்குட்டி கிளம்பிட்டியாடா..?” பட்டுவேட்டி சட்டையில் சுந்தர் தயாராகி வர தர்ஷினியை பார்த்தவன் அப்படியே ஆவென நின்றான்..
அவன் வாயை அழுத்தி மூடியவள் “வாய்க்குள்ள கொசு போயிருச்சு மாம்ஸ்..??”
அவளை தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன் மேலிருந்து பார்வை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறக்க.. அப்படியே அப்சரஸ்தான்.. அவன் வாங்கி கொடுத்திருந்த அந்த தங்கநிற பட்டுச்சேலையில் தங்கமாய் ஜொலிஜொலித்தாள்.. தலைநிறைய மல்லிகை பூ கழுத்தில் வைர நெக்லஸ் அதற்கேற்றாப்போல தோடு வளையல்கள் என ஜொலிக்க பார்க்க பார்க்க தெவிட்டவில்லை..
“ப்பா என்னடி இவ்வளவு அழகா இருக்க..?”
“ம்ம் இத்தனை நாளும் இந்த முகம்தானே இருந்திச்சு இப்ப என்ன புதுசா வந்திருக்கு மேன்..?”
“இந்த நெத்தி இவ்வளவு பளபளப்பா இத்தனை நாளும் இல்லையே.. பச்சக்கென அதில் முத்தமிட்டவன் மூக்குல இன்னைக்குத்தான இந்த வளையம் மாதிரி மூக்குத்தி போட்டிருக்க..அதில் ஒரு முத்தமிட்டவன்.. இத்தனை நாள் குளோப்ஜாமூனா இருந்த உன் கன்னம் இன்னைக்கு பால்கோவா மாதிரி இருக்கு..” இரு கன்னத்திலும் முத்தமிட அவன் ஒவ்வொரு முத்தத்தையும ரசித்தவள் கண்களை மூடியிருந்தாள்..
‘டேய் சோனமுத்தாஆஆஆ என்னடா இப்படி ஜொள்ளுவிடுற.. நீயெல்லாம் திருந்தவே மாட்டடா.. சின்ன கேப் கிடைச்சாக்கூட ரொமான்ஸ் படம் ஓட்டுற.. இத்தனை வருசம் எப்படிடா ரொம்ப நல்லவன் மாதிரி நடிச்சு என்னையவே நம்ப வைச்ச.. ஒரு பொண்ணக்கூட ஏறெடுத்து பார்க்காம இருந்தவனாடா நீ… நம்ப முடியவில்லையே.. என்ன கொடுமைடா இது…’ அது தலையில் கைவைத்துக்கொள்ள அவன் அதை ஒரு கணக்கில் கூட சேர்க்காமல் தன் முத்த கணக்கை துவங்கியிருந்தான்..
இத்தனை நாட்களில் தர்ஷினி சுந்தரின் அண்மைக்கு பழகியிருந்தாள்..அவனது பேச்சு, நடத்தை , தனக்காக ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து செய்யும் பாங்கு தந்தையையே ஹீரோவா ஏற்றிருந்த அவள் மனம் இப்போது சுந்தரை அந்த இடத்தில் பொருத்தி பார்க்க ஆரம்பித்திருந்தது.. அவன்தான் தனக்கு எல்லாமே என்பதும் அவள் நெஞ்சில் அழுத்தமாய் பதிய,
சுந்தருக்கும் இந்த அன்புக்காக ஏங்கும் குழந்தையை மிகவும் பிடித்திருந்தது.. தான் என்ன சொன்னாலும் அதை நம்பிக் கொண்டு தன் சிறு அன்பு வார்த்தைக்கும் மனம் விட்டு சிரிக்கும் தர்ஷினி அவன் மனதிற்குள் முழுமையாகவே வந்திருந்தாள்.. அவள் ஒரு வளர்ந்த குழந்தையாகவே அவன் கண்ணுக்கு தெரிந்தாள்..
தன் தங்கைகளிடம் இருக்கும் மெச்சூரிட்டியில் கால்பங்கு கூட அவளிடம் இல்லை.. இவள் குணத்தை வைத்தே அவளின் குடும்பத்தினரை நினைத்துப்பார்த்தவன் இந்த மாதிரி வெகுளி குணத்தாலதான் அவங்க குடும்பத்துக்கும் இந்த மாதிரி ஒரு நிலைமை வந்திருக்குமோ..இன்னும் தீவிரமாகி அந்த டிடெக்டிவ் ஏஜென்ஸியை அடிக்கடி தொடர்பு கொண்டு சீக்கிரமே அவர்களை கண்டுபிடிக்கச் சொல்லியிருந்தான்..
கன்னத்தில் முத்தமிட்டவன் அங்கேயே சற்று நேரத்தை கடத்தி அவள் உதட்டிற்கு நேராக தன் முகத்தை கொண்டு போக “வாங்க போவோம்.. மாமா வந்து வெயிட் பண்ணுவாங்க..”அவன் வாயில் கைவைத்து அடைத்திருந்தாள்..
“ம்ம் இதெல்லாம் போங்கு பேபி முக்கியமான இடத்துக்கு வர்ற போது வாய அடைக்கிற..?”
ராமையா…”சுந்தரு..வாய்யா நேரமாகுது..?”
“இதோ வர்றோம்ப்பு.. அவளை இறுக்கி அணைத்தவன் முகத்தை சுழித்து ம்ம் வா…இன்னைக்கு அதுக்கு டைம் வரலை போல..!!”
அவன் கையை நறுக்கென பிடித்தவள் “என்ன மேன் ரொம்ப சலிச்சிக்கிற.. 1..2…3..4… கிஸ் கொடுத்திட்டு.. போய்யா போ…”
“இதெல்லாம் ஏற்கனவே கொடுத்த இடம்தானே புதுசா ஒரு இடத்தில கொடுத்து பார்ப்போம்னு நினைச்சேன்..”
“ஹாஹாஹா இந்த வாய் இல்லைனா உன்னை ஒரு டாக்கூட மதிக்காது மாம்ஸ்..”
“என்னடி அப்பத்தா மாதிரி நீ பழமொழி எடுத்து விடுற..??”அவள் கையை பிடித்துக் கொண்டு வர சாமி அறையில் இருவரும் விழுந்து கும்பிட்டவர்கள் பெரியவர்களிடம் திருநீறு பூசிக் கொள்ள தர்ஷினியின் சின்ன மாமா போன் செய்திருந்தார்..
“இதோ கிளம்பிட்டோம் சித்தப்பா..” தந்தையோடு காரில் கிளம்ப இன்று அப்பத்தா அவர்களின் வீட்டிற்கு விருந்துக்கு வரச் சொல்லியிருந்தார்.. திருமணத்தை பதிவு செய்யவும் அனைவரும் அங்கு போவதாக முடிவெடுத்திருக்க தெய்வானையும் சுந்தரியும குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வைக்கச் சென்றிருந்தனர்..
ராமையாதான் திருமணத்தை பதிந்தவுடன் குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அங்கு அனைவரோடும் வருவதாக சொல்லியிருந்தார்..
அனைவரும் ரிஜிஸ்டர் ஆபிஸிற்கு செல்ல அங்கு தர்ஷினியின் சின்ன மாமா சங்கரன் தன் குடும்பத்தோடு நின்றிருந்தார்.. தர்ஷினி அவரை பார்க்கவும் மான் குட்டியாய் அவரை சரணடைய அவர் குடும்பமே அவளை சூழ்ந்து கொண்டது தங்கை மகளின் முகத்தில் இருந்த சிரிப்பே அவள் வாழ்க்கையை எடுத்துக்காட்ட சுந்தரை பார்க்காமலே சங்கரனுக்கு மிகவும் பிடித்தது..
சற்று தள்ளி நின்று அவர்களையே வேடிக்கை பார்த்தவன் அவர்களின் ஆர்பாட்டம் குறையவும் அவர் காலை தொட்டு கும்பிட அவனை இறுக்கி அணைத்திருந்தார்..
“வா யெங் மேன் எப்படி இருக்க..ராமையாவை பார்க்கவும் வாங்கண்ணே..”அனைவரின் நலன் விசாரித்து இருவருக்கு தங்கள் குடும்பத்தை அறிமுகப்படுத்தினார்.. அவருக்கு இரண்டு பெண்கள் மூத்தவள் 12ம் வகுப்பிலும் இளையவள் 9ம் வகுப்பிலும் இருந்தார்கள்.. அவர் மனைவியோ ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக இருக்க அளவான குடும்பம் அன்பான குடும்பமாக இருந்தது..
சங்கரனின் பெண்கள் இருவரும் தர்ஷினியின் கையை விடவே இல்லை.. அனைவரும் ரெஜிஸ்டர் ஆபிஸிர்குள் சென்று திருமணத்தை பதிவு செய்து மாலை மாற்றிக் கொள்ள சங்கரனே சுந்தருக்கு கையெழுத்திட ஒரு வக்கீலையும், அவர்கள் ஊர் பிரசிடென்டையும் அழைத்து வந்திருந்தார்..
இருவரோடும் இன்னும் ஏதேதோ பேசி அவர்களுக்கு விடை கொடுக்க.. தர்ஷினியின் கையை பிடித்து “சொல்லுடா தர்ஷூ.. எப்படியிருக்க..?”
முகமெல்லாம் புன்னகையோடு” யா சூப்பர் அங்கிள்..” அவளை அணைத்து உச்சியில் முத்தமிட அதில் ஒரு தகப்பனின் பாசமே தெரிந்தது..
கண்கள் கலங்கி சுந்தரின் கையை பிடித்து “ரொம்ப நன்றிப்பா தர்ஷூவ இப்படி பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு..”
“எதுக்கு சித்தப்பா நன்றியெல்லாம் தர்ஷினி என் மனைவி அவள நல்லா பார்த்துக்க வேண்டியது என்னோட கடமை..” பேசியபடியே அங்கேயே ஒரு ஹோட்டலில் காலை டிபனை முடித்தவர்கள் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு காரை விட இப்போது சுந்தரையும் தர்ஷினியையும் தனியாக காரில் வரச் சொல்லி ராமையாவிடம் சில விசயங்கள் பேச வேண்டும் என தங்களோடு தங்கள் காரில் ஏற்றிக் கொண்டார்..
தர்ஷினியின் கையை தன் கைகளோடு பிணைத்திருந்தவன் தன் நெஞ்சில் வைத்துக் கொள்ள,
“என்ன மாம்ஸ் ஏன் இப்படி என் கையை பிடிச்சு இழுத்துட்டு வந்திங்க.. நான் அவங்களோட வரலாம்ன்னு நினைச்சேன்..”
அவள் தோளில் கைப்போட்டு நெருங்கி அமர்ந்தவன் “இந்த மாதிரி நீ செய்வன்னு தெரிஞ்சுதான் பேபி நான் இழுத்துட்டு வந்தேன்.. நீ எப்பவும் என்னைவிட்டு தனியா வரனும்னு நினைக்க கூடாது.. என்கூடவேதான் இருக்கனும்..” அவள் உச்சியில் தன் தாடையை பதிக்க அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் என்ன தோன்றியதோ எதுவுமே சொல்லாமல அவனை இன்னும் நெருங்கி அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்..
நேராக அனைவருமே குலதெய்வ கோவிலுக்கு செல்ல அங்கு தெய்வானை எல்லாவற்றையும் தயாராகவே வைத்திருந்தார்.. அனைவரும பூஜை செய்து கருப்பனை கும்பிட்டு அங்கேயே அமர சுந்தரி தர்ஷினியின் மாமா பெண்களோடு இணைந்து கொண்டாள்..தர்ஷினி மெதுவாக அந்த தெப்பக்குளத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்க அடுத்த இருநிமிடங்களில் சுந்தரும் அவளுடன் கைகோர்த்திருந்தான்… கைநிறைய பைகளில் பொறிகளை வைத்திருக்க குளக்கரையில் அமர்ந்தவர்கள் அந்த பொறிகளை மீன்களுக்கு போட ஆரம்பித்தனர்..
“என்னடா லட்டு ரொம்ப அமைதியா இருக்க..?”
“ஐ லவ் யூ மாம்ஸ்..”
ஆச்சர்யத்துடன் “ஹேய்ய்ய் என்ன பேபி சொல்ற..!!”
“உங்கள எங்க பேம்லியில எல்லாரும் பார்த்திருந்தா ரொம்ப ஹாப்பியா இருந்திருப்பாங்க.. உங்கள அவங்க எல்லார்க்கும் ரொம்ப பிடிச்சிருக்கும்..”
“என்னடா லட்டு அவங்க எல்லாரோட நியாபகமும் வந்திருச்சா..”
கண்களில் கண்ணீர் ஊற்ற தலையை மட்டும் ஆட்டவும் அவளை நெருங்கி அமர்ந்தவன் அவள் கைகளை பிடித்து சற்று தட்டிக் கொடுத்த ஆறுதல் வார்த்தைகள் சொல்ல மெல்ல மெல்ல அந்த கூட்டிலிருந்து வெளியில் வர ஆரம்பித்தாள்..
“ஒரு நிமிசம் நான் ரொம்ப ஸ்டன் ஆகிட்டேன் பேபி..”
“வொய் மாம்ஸ்..”
“நீ ஐ லவ் யூ சொல்லவும்தான்.. பரவாயில்லயே மாமா நல்லாதான் பர்பார்மென்ஸ் பண்ணியிருக்கேன் போல அதான் புள்ள மாமாவ பார்த்து மயங்கிட்ட போலன்னு நினைச்சா இது உங்க பேம்லிய மிஸ் பண்ணினதால வந்த ஐ லவ் யூ போலயே”..அவன் முகத்தை பாவம் போல வைக்க,
அவன் முகத்தில் வாட்டத்தை காணவும் “போ மேன் ரொம்ப ஓவரா பண்ணாத.. லவ் யூ ன்னா லவ் யூதான்.. எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு மாம்ஸ்..”
“அப்ப சரி நானும் ஐ லவ் யூயூயூ..”
“என்ன மேன் இப்படி சப்புன்னு சொல்ற இதுல லவ்வே இல்லேயே..”
“ஹாஹாஹா எனக்கும் நீ லவ் சொல்லும் போது இப்படிதான்டா இருந்திச்சு.. இப்ப கொஞ்ச உப்பு காரம் மசாலா எல்லாம் போட்டு ஒரு ஐ லவ் யூ சொல்லுங்க பார்ப்போம்..” தன் போன் ஒலிக்க எடுத்து பார்த்தவன் நாயகி கணவர் பேசவும் அவருடன் சற்று பேசிக் கொண்டிருந்தவன்” முடிஞ்சா நாளைக்கு காலையில வர்றோம் மச்சான்..”
போனை வைத்தவன் .. “வா பேபி அப்பத்தா வேற அப்பத்தில இருந்து ஏழெட்டு போன் பண்ணிட்டாங்க..”
“என்னாச்சு மேன் ஏன் டல்லாயிட்ட..??”
பளிச்சென சிரித்தவன் அவள் கைகளை கோர்த்தபடி நடக்க ஆரம்பித்தான்..