கள்வன் – 15
“எல்லோரும் இருக்கும் போது இப்படி தான் கண் சிமிட்டி கூப்பிடுவீர்களா? இனியா கிண்டலாய் சிரிக்கிறாள்.” என்று சிணுங்கிக் கொண்டு அவ்விருட்டில் மெலிதாய் எரியும் விளக்கின் ஒளியில் அவனின் பார்வையை கண்டுகொள்ள முனைந்து கொண்டிருந்தாள் யுக்தா.
“உனக்காகத் தான் பேபி இப்படி அதிகம் புழங்காத கொல்லையில் வந்து முகம் கழுவிக் கொண்டிருக்கிறேன். அதுவும் இந்த கும்மிருட்டில்…” முகத்தில் வழியும் தண்ணீரை துடைத்துக் கொண்டே அவள் அருகில் வந்து கூற,
“எனக்காகவா?” புரியாமல் கேட்டாள் பெண்.
“பின்ன யாருக்காம்?” என்றபடியே அவள் மேலே துண்டை வீசியவன் சிகை கோதிக் கொண்டே, “இன்னைக்கு வரேன்னு சொல்லவே இல்லை?”
“எனக்கே மதியம் தான் தெரியும்… அதன் பிறகு உங்களிடம் சொல்ல நேரம் கிடைக்கவில்லை. சரி நேரில் பார்த்து இன்ப அதிர்ச்சி குடுக்கலாம்னு நினைச்சேன்… இப்போது சொல்லுங்க… ஏன் எனக்காக இங்க வரணும்?”
“இன்ப அதிர்ச்சி இல்லைமா அது… உன் பிரென்ட் இனியா கொடுத்த அதிர்ச்சி… தூங்கி எழுந்து பார்த்தால் அண்ணன் அறையில் என்னத்தையோ உருட்டிட்டு, மாட்டிட்டு இருந்தாங்க… அப்போவே நீயும் வந்திருப்பேன்னு கெஸ் பண்ணேன்… ஆனாலும் அம்மா ஏன் இந்த வேலையெல்லாம் விவஸ்தை இல்லாமல் இனியாகிட்ட குடுக்குறாங்க… நீ வாங்கி செய்ய வேண்டியது தானே…” கடைசியில் லேசான கண்டிப்பு தொத்திக் கொண்டு வந்திருந்தது. அதில் இனியாவிற்கு இவ்வீட்டில் உள்ள எல்லைக்கான கோடும் இருந்தது. யுக்தாவிற்கு அது நன்கு புரிந்திருந்தும் அவளால் எதுவும் கூற இயலவில்லை. சம்பந்தப்பட்டவளே தெளிவின்றி மனம் செலுத்தும் போக்கில் இருக்க இவளால் என்ன விளக்கம் கொடுக்க முடியும் மௌனத்தைத் தவிர…
“என்ன ஒன்னுமே சொல்லாம இருக்க? என்ன இருந்தாலும் இனியா அடுத்த வீட்டுப் பெண், இப்படி இங்க நம்ம வீட்டிற்கு வந்து வேலை செய்யணும்னு என்ன அவசியம்… நம்ம கெஸ்ட்க்கு சிரமம் குடுக்க கூடாது யுக்தா… நீ பார்த்து நடந்துக்கோ…”
“அவள் கெஸ்ட்டா உணர்ந்தா நானும் அவளை அப்படி ட்ரீட் பண்ணுவேன்… பட் ஷீ இஸ் லைக் ய ஃபேமிலி… அத்தையே ஒன்னும் சொல்லல நீங்க ஏன் இப்ப குதிக்கிறீங்க?” தோழியை விட்டுக் கொடுக்க முடியாமல் பேசினாள் யுக்தா.
“உன் பிரென்ட் வருவதில் எனக்கு எந்த வித மறுப்பும் இல்லை. ஆனால் ஏன் நாம் தொந்தரவு கொடுக்க வேண்டும்… வந்து நல்லா என்ஜாய் பண்ணிட்டு போகட்டும். ஐம் ஷ்யூர் அவங்களுக்கு உன்னை மாதிரி வீட்டில் சுடுதண்ணீர் கூட வச்சு இருக்க மாட்டாங்க தானே… அப்புறம் ஏன் இங்க வந்து இதெல்லாம் செய்யணும்…”
“எனக்கு சுடுதண்ணீர் வைக்கத் தெரியும். மற்றதெல்லாம் யூ டியூபில் இருக்கு, சோமேடோ, ஸ்விக்கியில் இருக்கு…” முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு வாயடித்தாள்.
“அப்ப்பா… என்னா அறிவு … வெந்நீர் எவ்வளவு கடினமான ரெசிபி… நீ கிரேட் பேபி…” குறும்பு மின்ன அவள் காலை வாரினான் இன்பன். பேச்சு சுவாரசியத்தில் இனியா ஏன் இதெல்லாம் செய்ய வேண்டும் என்ற அவனது கேள்வி காற்றுக்கு இறையாகிப் போனது.
“அய்யே… பெரிய ஜோக் சொல்லிட்டீங்க வீட்டுக்கு போய் சிரிச்சிக்குறேன்… முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லுங்க… இங்க கொல்லைக்கு அடிக்கடி வர மாட்டீங்களா?”
“நிச்சயம் தான் ஆகி இருக்கு பேபி… அதுக்குள்ள எப்படி எல்லோரையும் வச்சுக்கிட்டு உன்னை ரூமுக்கு கூப்பிடுறதாம்?? வெளியில் போய் பேசினால் காட்சிப் பொருளாகிடுவோம். சரியான மக்குடி நீ…”
“அட ஆமாம்ல…” அசடு வழிந்து கொண்டே அவள் தலையில் கொட்டிக் கொள்ள, கள்ளப் பார்வையுடன் விழிகளால் அவளைத் தீண்டினான் இன்பன். அந்த வீச்சை தாங்க முடியாது பேச்சை மாற்ற எண்ணி தீவிரமாய், “இனியாவின் யோசனையின்படி நாங்கள் சில காரியங்களை செய்திருக்கிறோம்… நீங்கள் அதிலெல்லாம் எந்த குறையும் கூறக் கூடாது. நாங்கள் எது செய்தாலும் இந்த வீட்டின் நலனுக்குத் தான் என்று நீங்கள் நம்ப வேண்டும்… ம்ம்… அப்புறம் நாங்கள் இங்கு வருவது என் வீட்டிற்கு தெரியாது நீங்கள் எதுவும் உளறி விடாதீர்கள்… திருமணத்திற்கு முன் எங்கள் வீட்டில் இப்படியெல்லாம் விடமாட்டார்கள்…” என்று கட்டளைகளை அடுக்கினாள்.
“எனிதிங் மோர்?” என்று அவன் விளையாட்டாய் சிரம் தாழ்த்தி வேண்ட,
“இப்போதைக்கு இவ்வளவு தான்…” என்று பந்தா காட்டிவிட்டு அவள் அங்கிருந்து நகர, அவனும் முறுவலுடன் பின் தொடர்ந்தான்.
…
“ஹேய் என்ன அதற்குள் ஒரு மினி டைனிங் செட் பண்ணிட்டீங்களா?” என்ற விளிப்புடன் யுக்தாவை கடந்து முன்னே வந்தான் இன்பன்.
அவன் செல்லும் முன் இதயன் அமர்ந்திருந்த ஒரு நாற்காலி மட்டுமே அங்கிருந்தது. ஆனால் இப்பொழுதோ அவன் அறையில் இருந்த மேசையுடன் சேர்த்து மேலும் நான்கு நாற்காலிகள் அதை ஒட்டியே போடப்பட்டிருந்தன. சிவகாமியும், இனியாவும் சமையலறையில் இருந்து உணவுகள் அடங்கிய கிண்ணங்களை தாங்கி வந்து மேசையில் அடுக்கினர்.
“டைனிங் டேபிளில் சாப்பிடலாமே அம்மா ஏன் இங்கே எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வருகிறீர்கள்?” என்று கேட்டபடியே அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தான் அவன்.
“ஒரு மாற்றத்துக்கு இங்கே சாப்பிடலாம்னு இனியா சொன்னா… ஒரு நாள் சாப்பிட்டா என்னனு நானும் இங்கேயே எல்லாத்தையும் எடுத்துட்டு வரேன்…”
“ம்ம்ம்… என்னவோ எல்லாம் புதுசு புதுசா வந்து இறங்கியிருக்கே என்ன விஷயம்?” அங்கு மாட்டப்பட்டிருக்கும் பொருட்களையும், ஷோகேஸையும் காட்டி யோசனையுடன் கேள்வி எழுப்பினான் இன்பன்.
“எல்லாம் இந்த பொண்ணுங்க தான்டா வாங்கிட்டு வந்து அழகுபடுத்திருக்காங்க… இப்போ தான் வீட்டுக்கே ஒரு கலை வந்த மாதிரி இருக்கு… நானும் இவ்வளவு நாள் குப்பை மாதிரி வச்சி இருந்திருக்கேன்னு இப்போ இதைப் பார்த்து தான் தெரியுது…” என்றவர் குரலில் பெருமையின் சாயலும், மகிழ்ச்சியின் சாயமும்…
அன்னையின் நெகிழ்வு இன்பனையும் தொற்றிக்கொள்ள, புரிதலுடன் யுக்தாவை பார்த்து கண்சிமிட்டினான் இன்பன். அது மகிழ்ச்சியைத் தருவதற்கு மாறாய் குற்றவுணர்ச்சியே அவளுக்கு மேலோங்கியது… அனைத்தும் இனியாவின் கைவண்ணம் ஆனால் புகழ் எல்லாம் யுக்தாவிற்கு. இனியாவின் ஐடியா தான் எல்லாம் என்று போட்டுடைக்க கணநேரம் பிடிக்காது ஆனால் மறுநொடியே அவள் ஏன் இதெல்லாம் செய்கிறாள் என்ற கேள்வி எழும்… பதிலறியா அந்த கேள்விக்கு இனியாவாகட்டும், அவளாகட்டும் என்ன பதில் கூறுவர்?… அப்படியே இனியா கூறும் காரணமாகிய அவளின் மனம் செலுத்தும் போக்கை கூறினாலும் அது அவளை கீழிறக்கி தான் காட்டும்… ஏனெனில் இப்போது இனியாவை யுக்தாவின் தோழியாய் தானே அனைவரும் இந்த வீட்டில் பார்க்கிறார்கள்…
“ஏய் யுக்தா என்ன கனவு கண்டுட்டு இருக்க? இங்க வா எல்லோரும் ஒன்றாக சாப்பிடலாம்…” என்று இனியா கூப்பிடவும், துவாலையை அங்கிருந்த சேரில் போட்டுவிட்டு இனியா அருகில் அமர்ந்து கொண்டாள் யுக்தா.
சிவகாமி ஒருவித உற்சாகத்துடன் உணவை பரிமாற,
“ஆன்ட்டி நாங்களே போட்டுக்குறோம்… நீங்க உங்க பையனுக்கு குடுங்க…” என்று இதயனை கண் காட்டினாள் இனியா.
“கூச்சப்படாம எல்லாத்தையும் போட்டு சாப்பிடுங்கம்மா…” என்றவர் இனியாவின் வார்த்தைக்கு கட்டுண்டவர் போல இதயனுக்கு ஊட்டினார். அவன் ஒரு பார்வையாளனாய் மட்டுமே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டே சந்திப்புகளில் இந்த வீட்டினற்கு உரிமைப்பட்டவள் போல இனியா அதிகாரத்தை செலுத்துவதும் அதை தன் அன்னையும், தம்பியும் எதுவும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டு அவள் பேச்சுக்கு மறுப்பேதும் கூறாமல் செயல்படுத்தி மதிப்பு கொடுப்பதும் ஏனோ விசித்திரமாய் பட்டது. கோபமும் மூண்டது.
எங்கிருந்தோ முதலில் வந்தாள்; தன் அன்னைக்கு உதவினாள்.
மறுவாரமே இந்த வீட்டின் மருமகளாகப் போகிறவளின் தோழி என்று தெரியவந்தது.
இதோ இன்று அந்த வீட்டின் உரிமைப்பட்டவளாகப் போகிறவளைவிட அதிக உரிமை எடுத்துக் கொள்கிறாள்; அனைவரையும் பேசியே மயக்குகிறாள்; அவன் பேச விரும்பவில்லை என்று முகத்தை திருப்பினாலும் அடாவடி செய்கிறாள்; வலுக்கட்டாயமாக அவளாகவே பிரெண்ட்ஸ் என்று கை குலுக்கிக் கொள்கிறாள்; அடைபட்டு கிடந்தவனை அறையினிலிருந்து வெளி கொணர்ந்துவிட்டாள். அவளின் நோக்கம் தான் என்ன? என்ற கேள்விகள் இதயனை அரிக்க ஆரம்பித்தது.
“ஆன்ட்டி என்ன உங்களோட இன்னொரு பையனை டீல்ல விட்டுடீங்க… பாருங்க உங்க ரெண்டாவது பையன் நீங்க ஊட்டுவீங்கன்னு உங்களையே ஆ-ன்னு வாய் பிளந்து பார்த்துட்டு இருக்காரு…” என்று அமைதியாக உண்டு கொண்டிருந்தவனை கோர்த்து விட்டாள் இனியா.
உண்மையாகவே அவளின் வார்த்தைகளில் தான் அவன் வாய் பிளந்து அமர்ந்திருந்தான். அதுவரை சாப்பாட்டிலும், யுக்தாவிடமும் தான் அவன் பார்வை இருந்தது. இதை கண்டுகொண்ட இதயனுமே ஏன் இவள் இப்படிச் செய்கிறாள் என்று அவளின் செயலை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான். யுக்தாவோ எனக்கு இதெல்லாம் பழக்கமாகி விட்டது என்ற தோரணையில் அமர்ந்திருந்தாள்.
சிவகாமியோ அப்படியா என்பது போல ஒரு பார்வை சிந்திவிட்டு இன்பனுக்கும் ஒரு வாய் ஊட்டிவிட்டார். இதைக் கண்ட இதயனின் முகம் நொடிப்பொழுதில் கனிவை தத்தெடுத்தது. பல பழைய பால்ய நினைவுகள் நினைவுக் கடலில் முட்டி மோதின.
ஏதோ ஒரு இறுக்கம் தொலைந்து இளகிய உணர்வு. மனதை அழுத்திக் கொண்டிருந்த காரணமற்ற உணர்ச்சிகள் இந்த சிறு குடும்ப அமைப்பில் விலகியதாய் ஒரு பிரம்மை… மனம் இளக அது முகத்தினில் வெளிப்பட அதைக் கண்ட தாய்க்கும், தம்பிக்கும் மனநிறைவு.
தாங்கள் எங்கே கோட்டையை விட்டோம் என்று மெல்லப் புரிந்தது. தனிமையில்லாத சூழலில் தன்னம்பிக்கை கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டிய ஒருவனை நோயாளி என்ற காரணம் காட்டி தனிமையில் தள்ளிவிட்டோம் என்ற நிதர்சனம் உரைத்தது.
உறுப்புகளோடு சேர்ந்து உள்ளமும் முடங்கிக் கிடந்திருக்கிறது என்ற உண்மை தீ சுட்டது போல் சுட்டது அவர்களின் உள்ளத்தை.
நோய் வைப்பட்டிருப்பவர்களின் மனநிலையை அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாது. நாம் அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டால் அவர்களுக்கு தன்னுடைய பிணி பற்றிய கவலை சில நேரங்களில் பெருகி எரிச்சல் மூண்டும். அதுவே அவர்களுக்கு சற்று ஓய்வு கொடுப்போம் என்று நினைத்து விலகியிருந்தால் பிணியில் வாடும் போது கூட நம்மை கவனிக்க மாட்டார்களா என்ற சினமும் எழும். இங்கு இதயன் நிலையோ அந்தோ பரிதாபம்.
“பையனுக்கு மட்டும் தானா? மருமகளுக்கு கிடையாதா?” மீண்டும் இனியாவே. யுக்தா அமைதிப் பதுமையாய் அமர்ந்திருக்க சிவகாமி அவளுக்கு ஒரு வாய் ஊட்டிவிட்டு இனியாவிற்கும் கொடுத்தார். களிப்புடன் அதை ஏற்றுக் கொண்ட பெண்ணவள் இதயனை பார்த்து கண் சிமிட்டினாள். மெலிதாய் இதழ்கள் விரிந்ததோ என்னவோ!!! அவளுக்கு அவன் இதழ்கள் மென்னகையாய் விரிந்ததாகவே தோன்றியது. அதை உறுதி செய்து கொள்ள எண்ணி அவனையே உற்று நோக்கினாள் இனியா.
“யுக்தா சொன்னா நீங்க நல்லா சமைப்பீங்கலாமே இனியா?” இன்பனிடமும் இப்போது ஒரு இலகுத்தன்மை வந்திருந்தது. இனியாவின் செயல்களும் அதன் பிரதிபலனும் திருப்திகரமானதாகவே அமைந்து அவனது பழைய இறுக்கத்தை தளர்த்தி இருந்தது.
எதிர்பாரா கேள்வியில் பட்டென்று இதயனிடமிருந்து தன் பார்வையை பிய்த்து எடுத்தவள் அவன் கேள்வியின் பின் ஒளிந்திருக்கும் விஷமம் அறியாது, “ஆமாம் பாஸ்… உங்க ஆளு தான் எனக்கு சமைக்கவே கற்றுத் தந்தாள்.” என்றாள் ஏதோ யோசனையின் ஊடே…
“எது வெந்நீர் வைக்கவா?”
யுக்தா தலையில் அடித்துக்கொண்டு இனியாவின் கையை கிள்ளி, “ஏன்டி என் மானத்தை வாங்குற?”
“நான் கரெக்டா தானே சொன்னேன்… வீட்டில் எல்லோரும் ஊருக்கு சென்றிருக்கும் போது நீ தானே எனக்கு சூடு தண்ணீர் வைக்க சொல்லிக் குடுத்த…” என்று அவள் கிள்ளிய எரிச்சலில் கூறவும் இன்பன் கொல்லென்று வெடித்துச் சிரித்தான் கூடவே தமையனும் சத்தமின்றி முறுவலித்தான்.
சிரிப்பினூடே இளையவன், “மற்ற ரெசிபி எல்லாம் யூ டியூப், சோமேடோ, ஸ்விக்கியில் இருக்குனு சொன்னாளா?”
“ஹீஹீ… கம்பெனி சீக்ரெட் எல்லாம் இப்படி வெளியில் சொல்ல கூடாது பாஸ்…” என்று அசடு வழிந்து சிரித்து சமாளித்தாள் இனியா.
“டேய் சும்மா இருடா… ஏன் பிள்ளையை கலாய்க்கிற… யுக்தாவிற்கு தெரியவில்லை என்றால் என்ன நான் சமைச்சிட்டு போறேன்… அதே மாதிரி இனியாவின் நல்ல மனதிற்கு அவளை புரிந்து கொள்ளும் மாமியார் தான் அமையப் போறாங்க…” என்று சிவகாமி வக்காலத்து வாங்க யுக்தா பட்டென்று இனியா முகம் பார்த்தாள்.
அவளோ அலட்டிக் கொள்ளாமல் இதயனின் விரிந்த இதழ்களிலும், ஒளிர்ந்த வதனத்திலும் லயித்திருந்தாள்.
*^*^*