வரம் வாங்கி வந்தவள் நான்
அத்தியாயம் – 8
சுந்தருக்கு அப்படியொரு அதிர்ச்சி.. காலையில் இருந்து அவனும் எவ்வளவு அதிர்ச்சியைத்தான் தாங்குவான்.. இந்த பொண்ணு மனநோய் ஹாஸ்பிட்டல்லயா..!!
“சுந்தரு இப்ப பிரச்சனை இல்லப்பு.. நீ அவள கல்யாணம் பண்ணியிருக்கிறதால நானும் எல்லா உண்மையும் சொல்லனும்ல..”
சுந்தருக்கு முதலில் இதை ஜீரணிக்கவே முடியவில்லை.. அப்பத்தா கீழ விழுந்ததுல எதாவது மண்டையில அடிப்பட்டிருக்குமோ.. அதான் பேத்தியப் பத்தி இப்படி சொல்லுதா..
“அப்பத்தா நீங்க நல்லா குணமாகி வீட்டுக்கு வாங்க அப்புறமா உங்க பேத்திய பத்தி பேசிக்கலாம்..”
“இல்லப்பு இப்பவே சொல்லிருறேன்..” கதவை தட்டிவிட்டு ராமையா உள்ளே வர,
“ஆத்தா உடம்புக்கு இப்போ தேவலையா..?”
“வா ராமையா.. இந்த கட்டைக்கு என்னாக போகுது.. என்ர பேத்திக்கு ஒரு நல்ல வழிய காட்டிட்டனா நான் செத்தாலும் என் கட்டை சொர்க்கம்தான்ப்பு.. அவளுக்காகத்தான் இந்த உசிர கையில புடிச்சிட்டு கிடக்கேன்..”
“ஏத்தா என் மவன்தான உங்க பேத்திய கட்டியிருக்கான்.. நாங்க நல்லா பார்த்துக்க மாட்டோமா..??”
“ப்பச் என்னப்பு நீயும் இப்படி பேசுற..??”
“எனக்கும் உங்க வேதனை புரியுதுத்தா.. கலையரசி எனக்கும் தங்கச்சிதான்.. அவ மவள நாங்க நல்லா பார்த்துக்குவோம்.. ஏதோ விதி இந்த மாதிரி இந்த பொண்ணுக்கிட்டயும் விளையாடியிருக்க வேணாம்.. இனி எல்லாம் நல்லதே நடக்கும்.. கடவுள் இவங்க ரெண்டு பேருக்கும்னுதான் முடிச்சு போட்டிருக்காரு போல.. அதான் என்னன்னமோ நடந்து கல்யாணம் முடிஞ்சிருக்கு..”
அப்போதுதான் சுந்தருக்கு தான் இதுவரை தர்ஷினியை பற்றி யாரிடமும் கேட்கவே இல்லையென நியாபகத்திற்கு வந்தது..
[the_ad id=”6605″]
“ஏன் சுந்தரு உனக்கு என் மவ கலையரசிய நியாபகம் இருக்கா..?”
“கொஞ்சம் கொஞ்சம் நியாபகம் இருக்கு.. ஆனா முழுசா தெரியலப்பத்தா..”
சுந்தரின் கையை பிடித்தவர் “என் ஒரு மவ கலையரசிய செல்லமா வளர்த்து இங்கன தஞ்சாவூர்லதான்ப்பு கட்டிக் கொடுத்தேன்.. மாப்பிள்ளை… தங்கம் என்பொண்ண அப்புடித்தான் பாத்துக்கிட்டாரு.. அவரு குடும்பத்தில ஒரே மவனா.. அவுக ஆத்தா அப்பு ரெண்டுபேரும் ரொம்ப நல்லவிக..
என்ர மருமவன் இப்ப நீ வேலை பார்த்தியேப்பு அந்த நாட்டுலதான் இருந்தாக.. அப்பவே நல்ல சம்பாத்தியம் ..அங்கனயே இருந்து நல்லா வந்து பொண்டாட்டி, ஆத்தா அப்புன்னு எல்லாரையும் வரவைச்சு அங்கிட்டே செட்டிலாகிட்டாக..
மருமவனும் அவரு சினேகிதனும் சேர்ந்து சின்னதா ஒரு நகைக்கடை தொடங்கி நல்லா அமோகமா இருந்தாகப்பு.. ரொம்ப நாளு என் மவளுக்கு பிள்ளையில்லாம கோவில் கோவிலா போய் பத்து வருசம் கழிச்சு நம்ம கருப்பருக்கு ரெட்டை கிடா வெட்டுறேன்னு வேண்டுனதுக்கப்பறம் என் பேத்தி பிறந்தா.. அப்புறம் அஞ்சு வருசம் கழிச்சு என் பேரன் சின்ன கருப்பன் பிறந்தான்.. ஆத்தி அப்புடி சொன்னா அவனுக்கு அம்புட்டு கோபம் வரும் தர்ஷன் சொல்லனும்னு அப்படி அடம்பிடிப்பான்..
மக, மவன் ரெண்டையும் தரையில கூட நடக்கவிடாம அவுக அப்பாரு தங்கமா தாங்கினாரு.. அதுக ரெண்டும் எதையும் வாயால கேக்க வேணாம்.. மனசால நினைச்சாலே போதும் அத நிறைவேத்திட்டுத்தான் மறுவேலைப்பார்ப்பாரு.. பிள்ளைகன்னா அம்புட்டு உசிரு..
அப்ப நீ.. என் பேத்திய பார்த்திருக்கனுமேப்பு.. அப்படியே சிட்டுக்குருவி மாதிரி சுத்திக்கிட்டு, ஆடி, பாடி, அப்படியே காலு தரையில பாவாம திரிவா..அவுக தம்பியோடவும் அப்புடித்தான்.. ரெண்டும் ஒன்னுமேல ஒன்னு உசிரா அவ்வளவு ஒத்துமையா இருந்திச்சுக.. அவுக அப்பத்தா ஐயா ரெண்டு பேருக்கும் பேரன் பேத்தினா உசிரு..
என் மவதான் பொம்பள பிள்ளைக்கு ரொம்பம் செல்லம் கொடுக்கபிடாதுன்னு அப்பப்ப திட்டி இங்கன உள்ள பழக்கவழக்கம் எல்லாம் கத்துக் கொடுப்பா.. வாராவாரம் என் பேரன் பேத்திக ரெண்டும் என்ரகூட போன்ல பேசுங்கப்பு.. நானும் எப்பவாச்சும் ஆறு மாசம் போய் இருந்திட்டு வருவேன்..
அப்பத்தான்.. ராசா.. யாரு கண்ணு பட்டுச்சோ..இல்ல கடவுளுக்கே கண்ணில்லாம போச்சோ நான் என்ன பண்ணுவேன் ஒரே நாளுல என் பேத்தி…..???” அவர் ஒப்பாரி வைத்து சத்தமாக அழ ஆரம்பிக்க சுந்தருக்கு நெஞ்சுக்குள் பிசைந்தது.. என்ன பிரச்சனையாயிருக்கும்..
“அப்பத்தா அழாதிக..?” அவர் கண்ணை துடைத்துவிட..
“அப்பு ஆறு மாசத்துக்கு முன்னாடி என் பேத்தியோட சினேகித பிள்ளைக எல்லாம் காலேசுல லீவு விடவும் ரெண்டு நாள் ஊரச் சுத்தி பார்க்க போயிருக்குக.. இவ வரலைன்னுதான் சொல்லியிருக்கா.. அவுக அப்பாருதான் சரி போயிட்டு வாத்தான்னு கைநிறைய காசு கொடுத்து அனுப்பியிருக்காரு..
ரெண்டுநாள் கழிச்சு அவளுக்கு போன் வந்திருக்கு வீட்டுக்கு உடனே வான்னு வந்தா…??” மீண்டும் அழ ஆரம்பிக்க..
சுந்தருக்கோ பதட்டம் ,”அப்பத்தா யாருக்கு என்னாச்சு..?”
“இவுக வீடு கொஞ்சம் தனியாதான்ப்பு இருக்கும்.. பக்கத்தில ரொம்ப வீடெல்லாம் இருக்காது..களவாணிப் பயலுக நாலஞ்சு பேரு கூட்டமா கொள்ளையடிக்க வந்திருக்காக.. என்னாச்சோ ஏதாச்சோ தெரியலைப்பு.. அந்த பட்டுகிடப்பானுக அவுக வீட்ல இருந்த நகை நட்டு அம்புட்டையும் கொள்ளையடிச்சிட்டு அங்கிருந்த எல்லாரையும் துப்பாக்கியால சுட்டு கொன்னுட்டாக.. அப்பத்தா ஓவென அழ ராமையாவே கண்கலங்கியிருந்தார்..சுந்தர் சத்தியமாக இதை எதிர்பார்க்கவில்லை..
[the_ad id=”6605″]
என் தங்கம் அடிச்சு பிடிச்சு வீட்டுக்கு போயிருக்கு வீடெல்லாம் ரத்தம்.. ஒரே போலிஸ்.. எல்லாரும் செத்து பொணமா கிடந்திருக்காக.. அதை பார்த்த புள்ளைக்கு என்ன செய்றதுன்னு தெரியாம ஒவ்வொருத்தர்கிட்டயும் ஓடி ஓடி போய் அழுது கடைசியில தம்பிக்கிட்ட வந்திருக்கு.. தம்பி தூக்கி மடியில வைச்சு அழும்போது புள்ளைக்கு லேசா உயிர் துடிச்சிருக்கு..
புள்ள அரை உசிருரோட ரொம்ப நேரமா போராடியிருப்பான் போல.. அவுக அறையெல்லாம் அந்த பச்சபிள்ள ரத்தமாத்தான் கிடந்திருக்கு.. அவுக அக்காள பார்க்கவும் அக்கா எப்புடியாச்சும் காப்பாத்துக்கான்னு சொல்லியிருக்கு சொன்ன நிமிசத்திலேயே உசிரு போயிருச்சுப்பு..
அவ்வளவுதான் அங்கனயே என் பேத்தி மயங்கி விழுந்தவதான் ஒத்த வார்த்தை பேசல கொள்ளல, அப்படியே வெறிச்சு போய் உட்கார்ந்திருந்தா.. நானும் என் சின்ன மவனும் போய்தான் அவுக அஞ்சு பேத்தையும் அடக்கம் பண்ணினோம்.. ஐயோ அந்த பச்ச குறுத்து என்ன பண்ணுச்சு அவனுகளுக்கு இரக்கமே இல்லாம போச்சேப்பு.. என் பேரன் எனக்கு நெய்பந்தம் பிடிக்க இருக்காம அவன நாங்க அடக்கம் பண்ணுற மாதிரி ஆயிருச்சே…!!
எத்தனையோ ஆசுபத்திரியில காட்டியும் தர்ஷினிய பேச வைக்க முடியல..டாக்டருகதான் வீட்ல வைச்சிருக்க வேணாம் அந்த ஆசுபத்திரியிலேயே சேருங்கன்னு சொன்னாக.. டாக்டருக என்னன்னமோ வைத்தியம் செஞ்சு பிள்ளைய அப்படியே வெறிச்சு போய் இருந்த நிலையில இருந்து மாத்திப்புட்டாக.. எங்கள எல்லாம் அடையாளம் தெரிஞ்சு அவ எங்கள கட்டிக்கிட்டு அழுதத நினைச்சா இன்னும் கூட என்ர உசிரு கருகும்ப்பு..!!
ஆனா அப்புறமும் புள்ள தெளிவாகல.. மனசுக்குள்ளயே மருக ஆரம்பிச்சிருச்சு.. நாம மட்டும் அங்கன ஊர சுத்தி பாக்க போகாம இருந்திருந்தா நாமளும் அவுகளோடவே செத்துப் போயிருக்கலாமே.. அதுவே மனசுல விதையா விழுந்து அங்கனயே பலதரம் தூக்கு போட, விசத்தை குடிக்க, கையில வெட்டிக்கன்னு சாகுறதுக்கு என்னன்னமோ செஞ்சு பாக்க ஆரம்பிச்சிட்டா..
ஒவ்வொருதரமும் அத காப்பாத்துறதே அவுகளுக்கு பெரிய வேலையாயிருச்சு.. தனியாவே வைச்சிருந்தாக… நாலுமாசம் அங்கனயே இருந்தோம் இருக்க இருக்க அவளுக்கு சாகனும்னு எண்ணம்தான் அதிகமாச்சே தவிர வாழனும்னு ஒரு துளி எண்ணம் கூட இல்லை… அப்பத்தான் இங்கன இருந்து அங்க வந்த ஒரு டாக்டரு இப்படி தனியா இவுகள வைக்காம வேற இடம் ,வேற சுழ்நிலையில இருந்தா கண்டிப்பா மாத்தம் வரும்னு சொன்னாக..
[the_ad id=”6605″]
நாங்களும் அங்கன போய் ஆறுமாசம் முடியவும் அங்க இருக்க முடியாத சுழ்நிலை.. என் ரெண்டாவது மவனுக்கு இங்கன கவர்மெண்ட் உத்தியோகம். அவனுக்கும் ரெண்டு பொம்பள பிள்ளைக.. அவன் குடும்ப பிரச்சனை, வேலைன்னு உடனே வர்ற மாதிரி இருந்திச்சு.. இங்கன யாருக்கும் தர்ஷினிக்கு இதுமாதிரின்னு தெரியாது..அவுக குடும்பம் இறந்தது மட்டும்தான்ப்பு தெரியும்..”
சுந்தருமே ஆஸ்திரேலியாவில் இருக்கும்போது இந்த செய்தியை நியூசில் பார்த்திருந்தான்.. அப்போது அவனுக்கு வெறும் செய்தியாக மட்டும் தெரிந்தது தர்ஷினியை நினைக்கையில் தாங்கமுடியவில்லை..
“ஏனப்பத்தா தர்ஷினி குடும்பத்தை கொன்னது யாருன்னு இன்னும் தெரியலையா..?”
“இல்லப்பு போலிஸ் இன்னும் விசாரிச்சுட்டுத்தான் இருக்காகளாம்.. எல்லாம் என் சின்ன மவன்தான் பார்த்துக்குறான்.. அவன்கிட்ட கேட்டாத்தாப்பு விவரம் தெரியும்..ஆனா இங்கன வந்ததில இருந்து பிள்ளைக்கு கொஞ்சம் பரவாயில்ல..”
சுந்தர் அப்படியே யோசனையில் இருக்கவும் மெதுவாக அவன் கையை பிடித்தவர் “என்னய்யா உண்மைய முதல்லயே சொல்லலைன்னு கோபமா..??”
“ச்சே ச்சே இல்லப்பத்தா அப்ப ஒராள இந்த பொண்ணு பட்ட கஷ்டத்தை பத்தி நினைச்சுப் பார்த்தேன்.. அந்த டாக்டர் சொன்னது உண்மைதான் புதுசா சூழ்நிலைகள் மாறும்போது அவங்க மனசும் மாற வழியிருக்கு.. ஆனா நீங்க உங்க பேத்தியோட இருந்திருக்கிங்க ஆனா வரும்போது அவங்க மட்டும்தானே வந்தாக..”