விக்ரம் கடகடவெனச் சிரித்தான்.
ரத்னாங்கியின் கதைக்கு அவன் அப்படிச் சிரித்தது மற்ற பதுமைகளைப் பொறாமை கொள்ள வைத்தது.
“மன்னா, இன்று முழுக்க நீங்கள் என் கதைகளைத்தான் கேட்பேன் என்று வாக்களித்திருந்தீர்கள்” கோமளவல்லிப் பதுமை தன் முகத்தில் சிரமப்பட்டுக் கோவம் வரவழைத்துக்கொண்டு சொன்னது.
சிம்மாசனப் படிகளில் வரிசையாக நிற்கும் அந்த நான்கடிப் பதுமைகளின் சிணுங்கலை விக்ரம் மிக இரசித்தான்.
“இல்லை அரசே, என் கதைகளைத்தான் கேட்க வேண்டும்” என்று முறையிட்டது மனோகரிப் பதுமை.
விக்ரம் அவைகளை மேலும் சீண்டிப் பார்க்க எண்ணித் தனது பார்வையை ரத்னாங்கியின் பக்கமே செலுத்தினான்.
“அந்தக் கார்கோடகன் கதையை மீண்டும் ஒரு முறை சொல் ரத்னாங்கி…”
“மன்னா, தர்மத்தின் காவலனான நீங்கள் இவ்வாறு ஒருதலைப் பட்சமாய் இருப்பது அழகல்ல!” கோமளவல்லி இப்போது உண்மையிலேயே கோவப்பட்டது.
“மன்னா…”
“இல்லை, மன்னா…”
ரத்னாங்கியைப் பேசவிடாமல் பிற பதுமைகள் விக்ரமை மாறி மாறி அழைத்தன.
“மன்னா… மன்னா…”
“அண்ணா… அண்ணா…”
”டேய் அண்ணா, எழுந்திருடா…” விஷாலியின் கண்களில் இலேசாய்க் கண்ணீர் திரண்டிருந்தது.
”கார்கோடகன் கதை?” விக்ரம் அவளைப் பார்த்துக் கேட்க விஷாலியின் முகத்தில் நிம்மதியும் குழப்பமும் கலந்து தெரிந்தன.
“கார்கோடகன் இல்ல நண்பா, இவ உன் கார் முழுக்க கோடா போட்டுட்டா… ஜெர்மனிக்காரன் இன்ஜினியரிங்கனால நாம இப்ப உசுரோட இருக்கோம்!” அருணின் குரலில் கோவம் கொந்தளித்தது.
[the_ad id=”6605″]
”ஆமா டா, நீங்க முன்னபின்ன தெரியாதவனல்லாம் காருக்குள்ளே ஏத்திப்பீங்க, அவன் உங்க மேல மயக்க மருந்து அடிப்பான், நீ பயந்து போய் அலறுவ, கடைசில பழி என் மேலயா?” விஷாலிக்குக் கோவம் வந்துவிட்டால் இவர்கள் இருவரையும் மதிக்காமல் “டா” போட்டுதான் பேசுவாள்.
”பட்டி… பட்டி எங்க?” விக்ரம் சட்டென நன்றாக நிமிர்ந்து அமர்ந்து கொண்டான். முன்னிருக்கைக்கு முன்னால் இருந்த காற்றுப்பைகள் திறந்து அவன் முன் விரிந்திருந்தன.
“எங்கயும் போல இங்கயேதான் இருக்கான்… போலிஸ் வந்ததும் புடிச்சுக்கொடுக்க வசதியா!” விஷாலி எரிச்சலுடன் சொன்னாள். விக்ரம் பின்னால் திரும்பிப் பார்த்தான்.
பட்டி கவலை தோய்ந்த முகத்துடன் இவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“அண்ணா?” மெல்ல அழைத்தான்.
“விஷாலி வண்டிய கிளப்பு, நம்ம ரெஸ்டாரண்டுக்குப் போ…”
“மறுபடி இவளையே வண்டி ஓட்டச் சொல்ற?” அருண் எதிர்த்தான். இடித்ததில் அவன் நாக்கைக் கடித்துக்கொண்டிருந்தான், அந்த எரிச்சல் வேறு அவன் கோவத்தைக் கிளறிவிட்டது.
“நீ வேணா பஸ்ல வா!” விஷாலி மீண்டும் கார் ஓட்ட அனுமதி கிடைத்ததில் உற்சாகமானாள்.
“வண்டிய எடுக்க முடியாது, நான் போலிசுக்குச் சொல்லிருக்கேன், அவங்க வரனும்!” அருண் அவளை முறைத்துக்கொண்டே சொன்னான்.
”அதெல்லாம் நான் பேசிக்குறேன், இப்ப வண்டி ஓடும்ல?”
“பெரிசாலாம் ஒன்னுமே ஆகலண்ணா… இலேசா-”
விஷாலி முடிக்கும் முன் அருண் இடைவெட்டினான், “இவள மறுபடி ஓட்ட விட்டா நேரா காய்லாங்கடைதான்!”
விஷாலி அருணை முறைத்துவிட்டு வண்டியைக் கிளப்பினாள்.
“சரி, நீ உன் விஷயத்தச் சொல்லு…” விக்ரம் அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டான்.
“நா- நான் சொன்னேனே, அண்ணா…” அவன் தயங்கித் தயங்கிப் பேசினான்.
“விக்ரம்தான் பாட்டி கதைல வர விக்ரமாதித்ய மகாராஜானு சொன்ன?” அருண் எரிச்சல் கலந்த குரலில் கேட்டான்,
“அது நம்புறா மாதிரியா இருக்கு?”
“நீங்க… நீங்க நம்பித்தான் ஆகனும் அண்ணா…” பட்டி என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட அந்த இளைஞன் விக்ரமையே பார்த்துப் பேசினான்,
“நீங்க விக்ரமாதித்யர், நான் உங்க தம்பி பட்டி, உங்க மகாமந்திரியும் நாந்தான்…” அவனது பார்வை சில நொடி அருண் மீது சென்று திரும்பியது,
“யார் நம்பலேனாலும், நீங்க நம்பனும்… இந்தக் கணையாழியத் தொட்ட உடனே உங்களுக்கு அது தெரிஞ்சிருக்கும்…”
விக்ரம் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை அவனது முகம் காட்டியது.
“என்னை எப்படிக் கண்டுபிடிச்ச? எப்படி நாந்தான் விக்ரமாதித்யன்னு சொல்ற?”
“உங்க ஜாதகத்தை வெச்சுதான் உங்களை அடையாளம் கண்டுபிடிச்-”
“ஜாதகமா?” அவன் முடிக்கும் முன் விக்ரம் ஆவலாய்க் கேட்டான்.
“ஆமா… உங்க ஜாதகம், அது… அத ஒருத்தர் வெச்சிருக்கிறதத் தற்செயலாப் பார்த்தேன்… ஆனா அது தற்செயல் இல்ல, மகாகாளியின் லீலை!” பட்டியின் முகத்தில் ஒரு பரவசம் படர்ந்தது.
“என் ஜாதகம்? யார் கைல? எப்படி?” விக்ரம் சடசடவெனக் கேள்விகளை அடுக்க, விஷாலியும் அருணும் ரியர்வியூ கண்ணாடி மூலம் கண்களால் பேசிக்கொண்டிருந்தனர், விக்ரம் அதைக் கவனித்தான்.
[the_ad id=”6605″]
“அருண்?” விக்ரமின் குரலில் கண்டிப்பும் மிரட்டலும் இருந்தன.
“எனக்கு ஒன்னும் தெரியாது டா… எல்லாம் உன் அன்புத் தங்கை வேலதான்!” அருண் இரு கைகளையும் உயர்த்தினான்.
“விஷி?” விக்ரம் இப்போது அவளை நோக்க, அவள் அசடுவழியச் சிரித்தாள்.
“அது… அது வந்து -ண்ணா… நீ ஒரு எலிஜிபில் பாச்சிலர், சீக்கிரம் எனக்கு ஒரு நல்ல அண்ணி வர வேண்டாமா? அதான்…”
விக்ரம் முறைக்க,
“அருண்தான் எல்லா பார்மாலிட்டியும் பார்த்துக்கிட்டான்! உன் ஜாதகத்தைக் கண்டுபிடிச்சு எடுத்து மேரேஜ் பீரோல கொடுத்தது அவன்தான்!” சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
“அடிப்பாவி!” அருண் அவளைக் கிள்ள முயல, அவள் தப்பிக்க முயன்று அதே நேரம் வண்டி ஒட்டுவதிலும் கவனம் செலுத்த முயன்றாள்.
“நிறுத்துங்க!” விக்ரம் தீவிரமானான்.
வண்டியில் அமைதி குடிகொண்டது. உணவகத்தை நெருங்கும்வரை யாரும் எதுவும் பேசவில்லை.
நால்வரும் அமைதியாகத் தங்கள் தட்டில் இருந்த உணவைச் சிறிது சிறிதாக எடுத்துக் கொறித்தனர்.
பட்டிக்கு அந்த உணவு பழக்கமில்லை என்பது அதை அவன் முள்கரண்டியில் எடுக்கத் திணறுவதிலிருந்து தெரிந்தது.
“ஆக, ஜாதகத்தை வெச்சுத் தற்செயலா நாந்தான் விக்ரமாதித்தன்னு தீர்மானம் பண்ணிட்ட?” விக்ரம் மௌனத்தைக் கலைத்தான்.
“அ- ஆமா அண்ணா… எனக்குத் தெரிஞ்சா மாதிரி தெரியக்கூடாதவங்களுக்கும் தெரிஞ்சுதுனா பெரிய ஆபத்து… அதுக்குள்ள-”
“நான் விக்ரமாதித்யன் இல்ல, வெறும் விக்ரம்!” விக்ரம் இடைவெட்டினான்.
“நீ- நீங்க விக்ரமாதித்ய மகாராஜாவேதான்… இந்த மோதிரம்தான் அதுக்கு ஆதாரம்! நாம இப்படி பொது இடத்துல உக்காந்து விரிவா பேச முடியாது, தனியா எங்கயாவது…”
“அந்த மோதிரம் எங்க?” பட்டி மோதிரத்தை மீண்டும் குறிப்பிட்டதும் விக்ரமுக்கு அதை மறுபடி தொட்டுப் பார்க்கும் ஆவல் வந்தது.
“இதோ… நீங்க- நீங்க மயங்கி விழுந்தப்ப… நான் எடுத்து வெச்சுக்கிட்டேன்…” தயங்கித் தயங்கிச் சொல்லியபடி பட்டி அந்த மோதிரத்தை எடுத்து நீட்டினான்.
விக்ரம் அதை வாங்க கைநீட்ட,
“நோ விக்ரம், மறுபடி அதத் தொடாத!”
விஷாலி சட்டெனப் பாய்ந்து அந்த மோதிரத்தைப் பட்டியின் கையிலிருந்து பறித்தாள்.
அதைத் தொட்ட நொடி அவள் மண்டைக்குள் ஆயிரமாயிரம் பிம்பங்கள் அடுத்தடுத்துப் பளிச்சிட்டன.
“ஆஆஆ…”
மின்சாரம் தாக்கியவள் போல மோதிரத்தைக் கைநழுவவிட்டுத் தன் தலையை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டாள்.
“ஹே…”
“விஷி என்ன ஆச்சு…” அருணும் விக்ரமும் பரபரப்பானார்கள்.
விக்ரம் தண்ணீரை எடுத்து இலேசாக அவள் முகத்தில் தெளித்தான், விஷாலி மெள்ள ஆசுவாசமானாள்.
“அந்- அந்த மோதிரத்தத் தொட்டதும்…” அவளது மூச்சு மெள்ள சீரானது, தவிக்காமல் பேசத் தொடங்கினாள்.
“என்னனு தெரில விக்கி, அந்த மோதிரத்தத் தொட்டதும் என் மண்டைக்குள்ள பளிச் பளிச்னு… கனவு மாதிரி, ஆனா வேகமா…” அவளால் அதை விவரிக்க இயலவில்லை, ஆனால் விக்ரம் புரிந்துகொண்டான்.
“ம்ம்… எனக்கும் அப்படிதான் ஆச்சு!” விக்ரம் மெல்லச் சொன்னான்.
மூவரும் கீழே கிடந்த அந்த மோதிரத்தைப் பார்த்தனர். பட்டி இவர்களையே பரிதாபமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அருண் அந்த மோதிரத்தை எடுக்க மெதுவாய்த் தன் கைகளை நீட்டினான். அவனுக்குள் பெரும் தயக்கம் இருப்பது அவன் முகத்தில் தெரிந்தது.
ஆனால் அதைத் தானும் தொட்டுப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது.
“அருண்…” விக்ரம் அவனைத் தடுப்பவனைப் போல அழைக்க அருண் அதைக் கண்டுகொள்ளாமல் மோதிரத்தைத் தொட்டான்.
எதுவும் ஆகவில்லை.
அதை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கையை இறுக்க மூடினான். ஒன்றுமில்லை.
“என்ன… எனக்கு மட்டும் ஒன்னும் ஆகல?” பட்டியைப் பார்த்துக் கேட்டான்.
பட்டியும் ஒன்றும் தெரியாமல் விழிக்க, விக்ரம் ஏதோ சொல்ல வந்தவன் “ஆஆ…” என்று அலறியபடி குனிந்தான்.
அவனது நெற்றியை குறிவைத்து ஏதோ ஒரு சிறிய பொருள் தாக்கியிருந்தது.
அனைவரது கவனமும் அது வந்த திசையை நோக்கித் திரும்பின.
உணவகத்துக்கு வெளியே இவர்களையே முறைத்தபடி ஒருவன் நின்று கொண்டிருப்பதை விக்ரம் கவனித்தான்.
“யார் அவன்?”
“எவன்?” அருணும் விஷாலியும் ஒருசேரத் திருப்பிக் கேட்டனர்.
”அதோ அங்க நம்மளயே பார்த்துட்டு நிக்குறானே?”
விக்ரம் சொல்ல, அவர்கள் மீண்டும் அந்தத் திசையில் பார்த்தனர்.
“யாரச் சொல்ற விக்ரம்?”
அதற்குள் பட்டி கீழே குனிந்து எதையோ எடுத்துப் பைக்குள் வைத்துக்கொண்டான். அருணின் கவனம் அவன் மேல் சென்றது.
“என்னது பட்டி அது?”
”அங்- அது… அது ஒன்னுமில்ல… நாம தனியிடமா எங்கயாச்சு போவோமே?” அவனது குரலில் அதிகமான பதட்டமும் குழப்பமும் இருந்தன.
”சரி” விக்ரம் எழுந்துகொண்டான்.
அனிச்சையாய் அவனது பார்வை மீண்டும் உணவகத்தின் வெளிப்புறம் செல்ல அங்கிருந்தவன் இவனை ஆசிர்வதிப்பது போல கையை உயர்த்திக் காட்டிவிட்டுச் சட்டென மறைந்து போனான்!
விக்ரம் உணவகத்தின் வாயிலையே குழப்பத்துடன் பார்த்துக்கொண்டு நின்றான்.
“என்னண்ணா?” விஷாலி அவனை நெருங்கி அவனது தோளை ஆறுதலாய்ப் பிடித்துக்கொண்டாள்.
“யாரத் தேடுற விக்ரம்?” அருணும் கவலையுடன் கேட்டான்.
[the_ad id=”6605″]
“ஒன்னுமில்ல, வாங்க போகலாம்” விக்ரம் பதிலுக்குக் காத்திராமல் நடக்கத் தொடங்கினான்.
விஷாலியும் பட்டியும் அவனைப் பின் தொடர அருண் உணவுக்குப் பணம் செலுத்திவிட்டுத் தொடர்ந்தான்.
மீண்டும் காரில் யாரும் பேசவே இல்லை. இம்முறை அருண் வண்டியை ஓட்டினான்.
வண்டி மீண்டும் கடற்கரைச் சாலையை நெருங்கியபோது விக்ரம் பேசினான்,
“அருண், நீ எங்கள வீட்ல விட்டுட்டு ஆபிஸ் போ… ஏற்கனவே நெறைய வேல கெட்டுப் போச்சு, நீ போய் எல்லாத்தையும் கவனி…
“விஷாலி, நீ கூட காலேஜ் போலாம்னு நினைக்குறேன்! அருணே உன்னை டிராப் பண்ணிடுவான்!”
இருவரும் அவன் சொன்னதை எதிர்த்துப் பேசத் தொடங்கினார்.
“இவன் கூட உன்ன விட்டுட்டு-”
“காலேஜ்ஜாண்ணா முக்கியம்-”
விக்ரம் கைகாட்டி இருவரையும் நிறுத்த, விஷாலி விடாமல் பேசினாள்,
“நான் இன்னிக்கு உன் கூடத்தான் இருப்பேன்! பீரியட்!”
அருணால் அப்படி அழுத்தமாய் முரண்டு பிடிக்க முடியவில்லை. அவன் அலுவலகங்களைக் கவனிக்க வேண்டும் என்பதை அவனும் உணர்ந்திருந்தான். விஷாலியாவது முரண்டு பிடிக்கிறாளே என்பதில் திருப்திபட்டுக்கொண்டான்.
வண்டி வீட்டினுள் நுழைய இவர்களை இதற்குள் மீண்டும் எதிர்பார்க்காத காவலன் பரபரப்பாய் வந்து கதவை நன்றாகத் திறந்துவிட்டு விரைத்து சல்யூட் அடித்தான்.
அருணை அனுப்பிவிட்டு மூவரும் வீட்டினுள் சென்றனர்.
வரவேற்பறை விசாலமாய் இருந்தது. பட்டி வியப்புடன் பார்த்துக்கொண்டு வந்தான்.
“மகாராஜாவுக்கு ஏற்ற அரண்மனைதான்!” அவனையே அறியாமல் உரக்கச் சொன்னான்.
விஷாலி “ஹிஹி” என்று சிரித்தாள்.
விக்ரம் பணியாளை நோக்கிச் செய்கை காட்ட, அவர்கள் மூவரும் அமர்ந்துகொண்ட சிறிது நேரத்தில் அவர்களுக்குக் குடிக்க பானங்கள் கொண்டு வரப்பட்டன.
விக்ரம் தனக்கான குளிர்ந்த காப்பியை எடுத்துக் கொஞ்சமாய் உறிஞ்சிவிட்டுக் கீழே வைத்தான். விஷாலி தனது வழக்கமான பழச்சாற்றை எடுத்துக்கொண்டாள்.
பட்டிக்கு மட்டுமே நான்கு வகை பானங்கள் பரிமாறப்பட்டிருந்தன. எதை எடுத்துக்கொள்வது என்று சற்றுத் தயங்கிவிட்டுப் பின் தயக்கத்துடனே குளிர்ந்த மோரை எடுத்துக்கொண்டான். நன்றாய் ஒரு மடக்கு குடித்தவன் அவர்கள் இருவரும் அதிகம் குடிக்காததைக் கவனித்துவிட்டுத் தானும் தனது கோப்பையைக் கீழே வைத்தான்.
விக்ரம் மீண்டும் சைகை செய்ய பணியாள் வந்து மீத மூன்று கோப்பைகளையும் எடுத்துச் சென்றான். அத்தோடு அங்கிருந்த அனைவரும் கண்ணில்படாமல் மறைந்தனர்.
மூவர் மட்டுமே அந்தப் பெரிய வரவேற்பறையில் இருக்க விக்ரம் பட்டியைக் கூர்ந்து பார்த்தான்.
“இப்ப சொல்லு…” தனது காப்பியைக் கையில் எடுத்துக்கொண்டான்.
விஷாலியும் ஆர்வமாய் இலேசாய் இவர்களை நோக்கிக் குனிந்து அமர்ந்தாள்.
“நீங்கதான் பேரரசர் விக்ரமாதித்யர். அதுல எந்த சந்தேகமும் இல்லை. நான் பட்டி, இரண்டாயிரம் வருஷம் உங்களுக்காகக் காத்திருந்து, இப்ப ஒரு நூறு வருஷமா உங்களத் தேடி அலைஞ்சு, மகாகாளி அருளால உங்களக் கண்டு பிடிச்சுட்டேன்!” அவனது முகத்தில் ஒரு பெருமிதம் தெரிந்தது. அவனது பேச்சில் முன்பிருந்த தயக்கமும் இல்லை.
“ம்ம்ம்… எப்படி நம்பு-”
விஷாலி முடிக்கும் முன் பட்டி அந்தக் கணையாழியை எடுத்து மேசைமேல் வைத்தான்.
விஷாலி அதைத் தொடக் கையை நீட்டியவள் சட்டெனக் கையைப் பின்னால் எடுத்துக்கொண்டாள். பட்டி அவளைக் கிண்டல் கலந்த புன்னகையுடன் பார்த்தான்.
“சரி, நான்தான் முன் ஜென்மத்துல விக்ரமாதித்யர்னே இருக்கட்டும்… இப்ப என்ன பண்ணனும் அதுக்கு?”
“அண்ணா… இது முன் ஜென்மம் பின் ஜென்மம்லாம் இல்ல… அப்பவும் நீங்கதான் விக்ரமாதித்யர், இப்பவும் நீங்கதான் விக்ரமாதித்யர். இது காளி தேவியின் விளையாட்டு!”
“ஒன்னுமே புரியல…” விக்ரம் குளிர்ந்த காப்பியை ஒரு முழு மடக்கு விழுங்கினான்.
“பரவால்ல, இப்ப பிரச்சனை அது இல்ல… நீங்க செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு… மகாகாளியின் கட்டளைகள்… அவள் இட்ட பணிகள்…”
பட்டியின் குரலில் ஒரு பரபரப்பும் பரவசமும் தெரிந்தது.
[the_ad id=”6605″]
”விக்ரம் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமைலாம் குறி சொல்லப் போறியா இனிமே!” விஷாலி குரலில் கிண்டல் தெறிக்க சிரித்துக்கொண்டே கேட்டாள்.
“விஷி!” விக்ரம் அவளை அன்பாய் முறைக்க,
“இது விளையாட்டில்ல! கொஞ்சம் கவனம் தப்பினா உயிருக்கே ஆபத்தா முடியக் கூடிய விஷயம்!” பட்டியின் குரலில் கண்டிப்பு மிகுந்திருந்தது.
“வாட்?” விஷாலி அதிர்ந்தாள். கையில் இருந்த பழச்சாறுக் கோப்பையை மேசை மேல் வைத்தாள்.
“ஆமா, உணவகத்துல நடந்துச்சே…”
“எவனோ என் மேல கல்லையோ எதையோ போட்டான்… அது ஒரு பெரிய விஷ-”
விக்ரம் பேசிக்கொண்டிருக்கும் போதே பட்டி தன் பையிலிருந்து ஒரு சிறிய கட்டாரியை எடுத்துக் காட்டினான். விஷாலியின் கண்கள் வியப்பிலும் அச்சத்திலும் விரிந்தன.
விக்ரம் நிதானமாகவே இருந்தான்.
“உங்க மேல போட்டது கல் இல்ல, இந்தக் கட்டாரியத்தான்! அந்தக் கல்லோ என்னவோ விழுந்து நீங்க நகர்ந்ததுல இது குறி தவறிடுச்சு!” பட்டி சொல்லிக்கொண்டே அந்தக் கட்டாரியை மேசைமேல் அவர்கள் இருவரின் பார்வையிலும் நன்கு படும்படி வைத்தான்.
கட்டைவிரல் நீளப் பிடியும், அதே நீளத்தில் கூர்மையான கத்தியுமாக அருங்காட்சியகப் பொருளைப் போல பழைய வடிவமைப்பில் இருந்தது அந்தக் கட்டாரி. விக்ரம் அதை எடுக்கப் போகப் பட்டி அவனைத் தடுத்தான்.
“இதுல கொடிய விஷம் இருக்கலாம்… இங்க பாருங்க” அவன் பிடியில் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்ட அங்கு ஒரு நீண்ட குதிரை முகம் பொறிக்கப்பட்டிருந்தது.
“இது சகர்களோட சின்னம், உங்க பரமவிரோதிகள். என்னைப் பின் தொடர்ந்து வந்து நீங்கதான் விக்ரமாதித்யர்னு அவங்களும் தெரிஞ்சுக்கிட்டு இருப்பாங்க!” பட்டியின் முகத்தில் ஒரு வாட்டம் தெரிந்தது.
விக்ரமும் விஷாலியும் அந்தக் கட்டாரியையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“சரி, இப்ப என்னதான் பண்ணனும்?”
விக்ரம் கேட்க, பட்டி பதில் சொல்லாமல் மோதிரத்தை எடுத்து அவன் மேல் எறிந்தான்.
விக்ரம் அனிச்சையாக அதைப் பிடிக்க மீண்டும் அவனது மண்டைக்குள் ஆயிரமாயிரம் பிம்பங்கள் பளிச்சிட்டன. விக்ரம் சமாளித்து மோதிரத்தைக் கீழே போட்டான். மயக்கமடையவில்லை என்றாலும் அவனது தலை வெடித்துவிடும் போல வலித்தது. நெற்றியைக் கசக்கினான்.
“என்ன பட்டி இது?” விஷாலி கோவமாய்க் கத்தினாள். எழுந்து விக்ரமின் அருகில் போய் அமர்ந்துகொண்டு அவனது தலையைப் பிடித்துவிட்டாள்.
[the_ad id=”6605″]
“மன்னிக்கனும் அண்ணா” பட்டி எழுந்து பணிவாய்க் கையைக்கட்டிக்கொண்டு நின்றான், ”இந்த மோதிரம் உங்களோடது, பேரரசர் விக்ரமாதித்யரின் அடையாள மோதிரம், இதை ஏன் உங்களால தொட முடியல?”
விக்ரம் தலையைப் பிடித்தபடியே அவனை ஏறிட்டுப் பார்த்தான், விஷாலியும் கேள்வியோடு பார்த்தாள்.
”நீங்கதான் விக்ரமாதித்யர்னு நீங்களே நம்பல! முதல்ல நீங்க உங்கள உணரனும்… அப்பறம்…”
“அப்பறம்?” விஷாலி கேட்க,
”அப்புறம் காளி தேவி இட்ட பணிகளைச் செய்ய ஆயத்தமாகனும்!”
“முதல்ல நான் கொஞ்சம் தூங்கனும், தலையே வெடிச்சிடும் போல இருக்கு!” விக்ரம் அலுப்பாய்ச் சொன்னான்.
“ஆமாம், உங்களை ஒரே நாளில் அதிகம் படுத்துவது சரியில்லைதான்…. மன்னியுங்கள் அண்ணா!” பட்டியின் குரலில் பரிவு தெரிந்தது.
விக்ரம் இலேசாய்த் தள்ளாடி எழுந்து நின்றான். விஷாலி அவனைத் தாங்கிக்கொள்ள முயல அவளைத் தடுத்துவிட்டுப் பட்டியை நோக்கிக் கண்ணைக் காட்டிவிட்டுத் தன் அறையை நோக்கிச் சென்றான்.
விஷாலி பட்டியைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள்.
***
“விக்ரமா…”
அந்தக் குரல் மிக மெலிதாகத்தான் வந்தது. ஆனால் விக்ரமிற்கு அழுத்தமாய்க் கேட்டது. ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தவன் சட்டெனக் கண்விழித்து எழுந்து அமர்ந்தான்.
அவனது படுக்கையறை இலேசான நீலவொளியில் மிதந்தது. திரைச்சீலை விலகியிருக்க, கண்ணாடிக் கதவிற்கு வெளியே பால்கனியில் அவன் நிற்பது தெரிந்தது.
உணவகத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்தவன். அவனேதான்.
விக்ரம் படுக்கைக்கு அருகில் இருந்த சிறிய அலமாரியிலிருந்து தனது கைத்துப்பாக்கியை மெல்ல எடுத்துக்கொண்டு படுக்கையைவிட்டு இறங்கினான்.
“யாரு நீ?” அதட்டலாய்க் கேட்டான்.
“விக்ரமா… அமைதி!”
வெளியில் இருந்தவன் மெல்லப் பேசுவதைப் போலத்தான் இருந்தது ஆனால் அவனது குரல் கண்ணாடிக் கதவைத் தாண்டித் துல்லியமாய் அருகாமையில் கேட்டது.
“யாரு நீ? நீதான என் மேல அந்தக் கட்டாரிய போட்ட?” விக்ரமின் கை அனிச்சையாகத் துப்பாக்கியை இறுக்கிப்பிடித்தது.
வெளியில் இருந்தவன் மெலிதாய் நகைத்தான்.
“விக்ரமா, பட்டியை நம்பாதே… நீ மிகுந்த எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்… மகாகாளி உனக்குத் துணை நிற்பாள்!”
மீண்டும் ஆசிர்வதிப்பதைப் போலக் கைகளை உயர்த்திக் காட்டினான்.
விக்ரம் தன் குழப்பத்தையும் தயக்கத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டு மெள்ள பால்கனியை நோக்கி நடந்தான்.
அங்கிருந்தவன் புன்னகைத்தபடியே அசையாமல் இவனைப் பார்த்துக்கொண்டு நின்றான்.
“நீ யாரு?” விக்ரம் மீண்டும் கேட்க, அவன் மீண்டும் நகைத்தான்.
“நான் வராகமிகிரன்-”
”விக்ரம்ம்ம்ம்ம்….”
விஷாலி அலறும் சத்தம் கேட்டு விக்ரம் திரும்பினான்.
செய்வதறியாது ஒரு கணம் திகைத்தவன் சட்டென முடிவு செய்து தனது படுக்கையறையின் வாசலை நோக்கி ஓடினான். வெளியே செல்லும்முன் நினைவு வந்தவனாய் பால்கனியை நோக்க அது வெறுமையாய் இருந்தது!
தொடரும்…
[the_ad id=”6605″]