விக்ரம் ஒரு கணம் தயங்கிவிட்டு விஷாலியின் அறையை நோக்கி ஓடினான்.
விஷாலியின் அறைக்கதவு திறந்திருக்க உள்ளே அவள் படுக்கையில் அரைமயக்கத்தில் இருந்தாள், அருகில் பட்டி கையில் ஒரு கத்தியுடன் நின்றுகொண்டிருந்தான்.
விக்ரம் குழப்பம் அதிகரிக்கத் துப்பாக்கியை உயர்த்திப் பிடித்தபடி அறைக்குள் நுழைந்தான்.
விஷாலியின் படுக்கையை நெருங்கும் முன்பே பால்கனிக் கதவருகே அவனைக் கவனித்தான். முகத்தை முகமூடியால் மறைத்துக்கொண்டு விக்ரமையே உற்றுப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்.
விக்ரம் சட்டெனத் தனது துப்பாக்கியை அவனை நோக்கிக் குறிவைத்தான்.
அவன் சற்றும் அசையாமல் ஏளனமாகப் புன்னகைக்க விக்ரம் கோவமடைந்து சுட ஆயத்தமானான்.
அந்த முகமூடி மனிதன் மெல்லப் பின்னால் நகர்ந்து சடாலென பால்கனிக்கு வெளியே குதித்தான்.
விக்ரம் ஓடிச் சென்று எட்டிப் பார்த்தபோது அவன் அங்கிருந்ததற்கான அடையாளமே இல்லை!
விக்ரம் குழப்பம் அதிகரித்தவனாய் மீண்டும் விஷாலியின் அருகே ஓடி வந்தான்.
“பயப்பட ஒன்னுமில்ல, அவன் வீசின கட்டாரி இலேசா கீறிவிட்டிருக்கு அவ்வளவுதான்” பட்டி விளக்கினான்.
”விக்-கி… அண்-ணா… விக்-” விஷாலி மெல்லிதாய் முணகினாள்.
விக்ரம் ஆறுதலாய் அவள் தலையைத் தடவிக்கொடுத்தான்.
“நான் வைத்தியம் பண்ணிருக்கேன் உயிருக்கு ஆபத்தில்ல, கொஞ்சம் நேரம் மயக்கமா இருப்பா…” பட்டி விக்ரமைக் கலவையான ஒரு பார்வை பார்த்தான்.
விக்ரம் அவனை நிமிர்ந்து முறைத்துப் பார்த்தான்.
“நீ எப்படி இங்க வந்த?”
பட்டி அவன் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை.
“நீங்க உடனே தயாராகனும், அண்ணா… இல்லேனா…”
“இல்லேனா?”
[the_ad id=”6605″]
“இப்படி நொடிக்கு நொடி ஆபத்தைச் சந்திக்கனும்!” பட்டி அழுத்தமாகச் சொன்னான்.
விக்ரம் பதில் பேசாமல் விஷாலியின் படுக்கைக்கு அருகே இருந்த தொலைப்பேசியை எடுத்து எண்களை ஒத்தினான்.
“ஹலோ, விக்ரம் பேசுறேன்… உடனே அருணுக்குப் போன் பண்ணி இங்க வரச் சொல்லுங்க, அப்படியே நம்ம டாக்டரையும் விஷாலி ரூமுக்கு வரச் சொல்லுங்க, க்விக்…”
விக்ரம் தொலைப்பேசியை வைத்துவிட்டு நிமிர்ந்து பட்டியைப் பார்த்தான்.
’பட்டியை நம்பாதே!’
வராகமிகிரரின் குரல் அவன் மண்டைக்குள் ஒலித்தது.
விக்ரம் பட்டியை எடைபோட முயன்றான்.
தான்தான் பட்டி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் அவனுக்குச் சுமார் முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். வடவிந்தியனா தென்னிந்தியனா என்று முடிவுகட்ட முடியாத முகம். சாதாரண சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தான். அவன் உடையைப் பார்த்தவுடன் ’இவன இங்க தங்கச் சொன்னோம், இவனுக்கு ஒரு மாற்று உடை கொடுக்கச் சொல்லனும்னு தோனவே இல்லையே நமக்கு!’ என்று தோன்றியது விக்ரமிற்கு.
விக்ரமின் கை விஷாலியின் தலையை மெள்ள வருடிக்கொண்டிருந்தது.
அவள் உறங்குபவளைப் போலத்தான் இருந்தாள். சீராக மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாள்.
விக்ரம் பட்டியின் இயல்பை ஆராய முயன்றான்.
பயந்தவன் போலவும், அப்பாவி போலவும் தோன்றினான்.
“சரி, நீ உனக்கான அறைல போய் இரு பட்டி, அப்புறமா நாம விவரமா பேசலாம்!”
விக்ரம் அவனைக் குழப்பத்தோடே பார்த்துச் சொன்னான்.
பட்டி சிறுது நேரம் அசையாமல் நின்றவன் தன் பையிலிருந்து அந்தக் கணையாழியை எடுத்து அங்கிருந்த மேசைமேல் வைத்துவிட்டு விக்ரமை ஒருமுறை அழுத்தமாய்ப் பார்த்துவிட்டுச் சென்றான்.
விக்ரம் அந்த மோதிரத்தையே உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“என்ன டா இதெல்லாம்?”
அருணின் குரல் கேட்டுத் தூக்கத்திலிருந்து விழித்தவனைப் போலத் திகைத்துத் திரும்பிப் பார்த்தான்.
’எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்திருந்தோம்? இடையில் தூங்கிவிட்டோமா?’ என்று தோன்றியது.
அருணோடு வந்திருந்த அவர்கள் குடும்ப மருத்துவர் விஷாலியைச் சோதித்துக்கொண்டிருந்தார்.
விக்ரம் அவரைப் பார்த்து மெல்லத் தலையசைத்து வந்தனம் கூறிவிட்டு அருணைத் தன்னைப் பின் தொடரும்படிச் செய்கை செய்துவிட்டு அறைக்கு வெளியே வந்தான்.
“என்ன ஆச்சு?”
அருண் கேட்க, விக்ரம் மெல்லிய குரலில் பேசினான்.
”பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணனும் அருண்!”
“நம்ம திலீபன்கிட்டச் சொல்லி உடனே செஞ்சிடுறேன்” அருண் தனது கைப்பேசியை உயிர்ப்பிக்க விக்ரம் அவனைக் கைகாட்டித் தடுத்தான்.
”இரு, முதல்ல என்ன நடந்துச்சுனு கேளு! காலைல ரெஸ்டாரண்ட்ல என் மேல கத்தி வீசினா மாதிரி இப்ப ஒருத்தன் விஷாலி பெட்ரூம்குள்ளயே வந்துட்டான்… நான் சத்தம் கேட்டுப் போனப்ப அங்க பட்டியும் இருந்தான், விஷாலிக்கு நானே வைத்தியம் பண்ணிட்டேன்னு சொன்னான்… கத்தி வீசினவனச் சுடப் போனேன், ஆனா, அவன் பால்கனி வழியா குதிச்சான், போய்ப் பார்த்தா ஆளையே காணும்! எல்லாமே ஒரே மர்மமா இருக்கு அருண்!”
விக்ரமின் குழப்பம் அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது!
[the_ad id=”6605″]“உனக்கு முன்னாடி பட்டி எப்படி அங்க வந்தான்?”
அருண் ஆழ்ந்த சிந்தனையோடு கேட்டான்.
“அதான் எனக்கும் தெரியல! என் ரூம்குள்ளயும் ஒருத்தரு வந்தாரு… என்னை ரொம்ப தெரிஞ்சவர் போல உரிமையாப் பேசினாரு, பட்டிய நம்பாதனு வேற சொன்னாரு!”
“இது வேறயா? யாரு அவரு? இப்ப எங்க?”
“காலைல ரெஸ்டாரண்ட் வாசல்ல நின்னுட்டு இருந்தாரு, அப்புறம் என் ரூம்குள்ள! என்னவோ பேர் சொன்னாரு, எப்படி வந்தாரு எப்படிப் போனாருனே தெரியல! காணாமப் போய்ட்டாரு!”
“முதல்ல நம்ம வீட்டோட செக்யூரிட்டிய அதிகப்படுத்தனும்! இரு நான் தீலிபனைக் கூப்பிடுறேன்…”
அருண் மீண்டும் தனது கைப்பேசியை உசுப்பி உயிர்ப்பித்தான்.
”போலிஸ்கிட்டயே போனா என்ன? இது ரொம்ப சீரியஸான விஷயம் மாதிரி தெரியுது, ஒரே நாள்ல ரெண்டு தடவ கொலை முயற்சி!” விக்ரமின் குரலில் எச்சரிக்கையும் எரிச்சலும் கலந்து தொனித்தன.
“போலிசா?” அருண் சற்றுத் தயங்கினான், “சொல்றதப் பத்திப் பிரச்சன இல்ல, ஆனா, விஷயம் வெளில போகும், தேவையில்லாம பப்ளிசிட்டி ஆகும்… அதுமட்டுமில்ல…”
“என்ன?”
“நமக்கு நடக்குறதச் சொன்னவுடனே யாரும் நம்ப மாட்டாங்க… இது…” அருண் தயங்கினான்,
“புரியுது! சரி, பிரைவேட் செக்யூரிட்டியே இருக்கட்டும் ஆனா நம்ம ஏ.சி. கிட்ட ஒரு வார்த்த சொல்லி வெச்சுடு, அதான் நமக்கும் நல்லது!”
“தேவிகிட்டயா?” அந்தப் பெயரைச் சொன்னதும் அத்தனை குழப்பத்திற்கிடையிலும் விக்ரமின் முகத்தில் ஒரு மெல்லிய மகிழ்ச்சி மின்னல் வெட்டியதை அருண் கவனிக்கத் தவறவில்லை.
அறையில் இருந்த மருத்துவர் விக்ரமை அழைக்கும் சத்தம் கேட்க, இருவரும் பேசிக்கொண்டே மீண்டும் அறைக்குள் வந்தனர்.
அருண் தனது புன்னகையைக் கட்டுப்படுத்த முடியாமல் இளித்தபடியே வந்தான், விக்ரம் முறைத்தான்.
“என்ன?”
“ஒன்னுமில்லயே!”
“போய் வேலயக் கவனி…”
“விஷிய ஒரு தடவ பார்த்துட்டுப் போறேன்…”
விஷாலி படுக்கையில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள்.
“தேவி வரளா? ஐய்யா!”
விஷாலியின் குரலில் குதூகலம் இருந்தது, ஆனால் சோர்வும் இருந்தது.
“எப்படி இருக்கா டாக்டர்?”
விக்ரம் அவளது கேள்விக்கு விடை சொல்லாமல் மருத்துவரைப் பார்த்துக் கேட்டான்.
“பயப்பட ஒன்னுமில்ல, அடிப்பட்ட அதிர்ச்சிலதான் மயங்கிருக்கா… எதுக்கும் நான் டெஸ்டுக்கு பிளட் சாம்பிள் எடுத்துருக்கேன், ஏதாவது இன்பெக்ஷன் இருக்கானு பார்த்துடலாம்!”
அவர் பேசியபடியே தனது சாமக்கிரியைகளை எடுத்துவைத்துக்கொண்டார்.
“நன்றி டாக்டர்!”
விக்ரம் விஷாலியை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டே சொன்னான்.
“இருக்கட்டும்! இவ கொஞ்சம் நல்லா ஓய்வெடுக்கட்டும்!”
மருத்துவர் அங்கிருந்து சென்றார்.
“தேவி வராளா?”
விஷாலி மீண்டும் ஆர்வம் பொங்க அருணைக் கேட்டாள்.
“ஆமா! உங்க அண்ணன் பிடிவாதமா அவதான் வரனும்னு சொல்லிருக்கான், ஊர்ல வேற போலிசே இல்லையாம்!”
அருண் கிண்டலாகச் சொல்ல, விக்ரம் அவனை முறைத்தான்.
***
[the_ad id=”6605″]”திலீபன் இது-”
“தேவி ஐ.பி.எஸ். அசிஸ்டண்ட் கமிஷனர், க்ரைம் இன்வஸ்டிகேஷன்ஸ்…” திலீபன் அருணை இடைவெட்டினார்,
“என்ன அருண், இது கூட தெரியாமையா நான் ஏஜென்சி நடத்திக்கிட்டிருக்கேன்? வணக்கம் மேடம்!”
“வணக்கம் சார்!” என்றவள் அருணை கேள்வியோடு நோக்க,
“சார் மேஜர் திலீபன், எக்ஸ் ஆர்மி, இப்ப பிரவேட் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்துறார், எங்க கம்பெனிக்கெல்லாம் இவர்தான் காண்ட்ராக்டர்!” அருண் அறிமுகம் செய்துவைத்தான்.
தேவி தலையை ஆட்டிக் கேட்டுக்கொண்டாள்.
”அந்தக் கத்திகளை நான் பார்க்கலாமா?” அவள் நேராக விக்ரமைப் பார்த்துக் கேட்க, விக்ரம் பட்டியைப் பார்த்தான்.
பட்டி தன் பையிலிருந்து இரண்டு சிறிய ஒரே மாதிரியான கட்டாரிகளை எடுத்து தேவியின் அருகில் மேசை மீது வைத்தான்.
தேவி அவற்றை உற்றுப் பார்த்தாள். விக்ரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“இத நான் எடுத்துட்டுப் போறேன், லேப்ல குடுத்துப் பார்ப்போம்” அவள் சட்டென நிமிர்ந்து விக்ரமைப் பார்க்க, விக்ரமிடம் இலேசான தடுமாற்றம் இருந்தது.
“ச- சரி!” என்று பார்வையைத் திருப்பிக்கொண்டான்.
தேவி மெல்லியதாய்ப் புன்னகைத்துக்கொண்டாள்.
“இவர்தான் பட்டியா?” என்று பட்டியை நோக்கிக் கேட்டாள், அருண் விக்ரம் இருவருமே தலையசைத்து ஆம் என்றார்கள். பட்டி இவளை வெறுமையாய்ப் பார்த்தான்.
“எனக்கு இவர் கைரேகயும் வேணும், இவர் இந்தக் கத்திங்களத் தொட்டிருக்காரே!” என்றாள்.
“தாராளமா எடுத்துக்கோ!” அருண் சொல்ல, பட்டி தோளைக் குலுக்கினான்.
யாருமே அவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த பானங்களைக் குடிக்கவில்லை.
திலீபன் எழுந்துகொண்டார்,
“சரி விக்ரம் அப்ப நான் கிளம்புறேன், அரேஞ்மண்ட்ஸ் பத்தி அருண்கிட்ட சொல்லிட்டேன், உங்களுக்கும் மெயில் பண்ணிடுறேன்…”
“ஒரு நிமிஷம் சார்…” தேவியும் எழுந்துகொண்டாள்,
“நானும் ஒரு கான்ஸ்டபிளை இங்க டிப்ளாய் பண்றேன், உங்க ஆளுங்க அவர்கிட்ட ரிப்போர்ட் பண்ணட்டும், எனக்கு இங்க எது நடந்தாலும் உடனே தெரியனும்… திஸ் சீம்ஸ் டீப்!”
திலீபனின் பார்வையில் ஒரு நொடி சில உணர்ச்சிகள் கொந்தளித்தன, பின் சகஜமாய் “தாராளமா!” என்று தேவிக்குக் கைகொடுத்தார்.
“நல்லது!” தேவியும் விரைப்பாய் அவர் கையைக் குலுக்கினாள்.
திலீபன் விக்ரமை நோக்கித் தலையசைத்துவிட்டுக் கிளம்பிச் சென்றார்.
”என்னடி காலேஜ் கட் பண்றதுக்காக கொல முயற்சின்னு நாடகமா?” தேவி இப்போது அதிக சகஜத்துடன் பேசினாள். விஷாலி கொஞ்சலாய் அவளை முறைத்தாள்.
“நிஜமான பாய்சன் தேவ்ஸ்… விக்கி மட்டும் வரலேனா இந்நேரம் நீ என் பாடிய சுத்தி சாக்பீஸ்ல கோடு போட்டுட்டு இருப்ப!”
அவள் அப்படிச் சொன்னதில் அருண் விக்ரம் இருவருமே ஒரு நொடி விரைத்தனர்.
“ஓ, போலிஸ்காரம்மா இப்ப தொப்பியக் கழட்டிட்டாங்க, இப்ப இவங்க நம்ம தோழி தேவி!” அருண் கிண்டலாய்ச் சொல்ல,
“விக்கி உன் செக்ரட்டரி ரொம்ப பேசுறான்… போலிஸ்கிட்ட வராம பிரைவேட் செக்யூரிட்டிக்குப் போனதுக்கே இவன முட்டிக்கு முட்டித் தட்டிருக்கனும்…” தேவியும் கிண்டலாகப் பதில் தந்தாள்.
[the_ad id=”6605″]“ஐயைய… இன்னுமா காலேஜ் பசங்க மாதிரியே பேசிப்பீங்க?” விஷாலி போலி எரிச்சலுடன் கேட்டாள்.
”அதான, காலேஜ் விஷயம்லாம் காலேஜோட முடிஞ்சு போச்சு… என்ன விக்ரம்?” தேவி பொருள்நிறைந்த பார்வையோடு விக்ரமைப் பார்க்க, அவன் சில நொடிகள் மௌனமாய்த் தரையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“கொஞ்சம் சீரியசா பேசுவோமே? எனக்கு இப்ப விளையாடுற மூட் இல்ல!”
“சரி சரி… சிணுங்காத, என்ன பண்ணலாம் சொல்லு?” என்றாள் தேவி. விக்ரம் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள். அவன் உடனே சற்று அசௌகரியமாய் காணப்பட்டான்.
“இங்க என்ன நடக்குது? நான்தான் விக்ரமாதித்யன்னு சொல்லிக்கிட்டு இவன் வந்து நிக்குறான், அதைப் புரிஞ்சுக்குறதுக்குள்ள எங்களக் கொல பண்ண இரெண்டு முயற்சி…” விக்ரம் நெற்றியைக் கசக்கினான்.
தேவி ஆறுதலாய் அவன் தோளில் கைவைத்தாள்.
“ரிலாக்ஸ் விக்ரம், எதையுமே நிதானமா அணுகினா எளிமையாகிடும்…”
“ஆமா, அந்த மோதிரம் எங்க?” ஆவலாய்க் கேட்டாள்.
பட்டி அதை எடுத்து நீட்ட, ஆர்வத்தோடு அதைத் தொடக் கையை நீட்டியவள் பாதியிலேயே நிறுத்திக்கொண்டாள்.
“சரி சொல்லுங்க பட்டி, இப்ப இவன் அடுத்து என்னதான் பண்ணனும்?”
தேவி கேட்கப் பட்டி விக்ரமைப் பார்த்தான். விக்ரம் ’சொல்லு’ என்பதைப் போலத் தலையசைக்கப் பட்டி பேசினான்,
“அண்ணா தான்தான் விக்ரமாதித்யர்னு உணர்ந்துக்கனும். அப்புறம்…”
பட்டி தயங்க நால்வரும் அவனையே ஆவலாய்ப் பார்த்தனர்.
“விக்ரமாதித்யரோட வாளை நாம கண்டு பிடிக்கனும்…”
[the_ad id=”6605″]
பட்டி எதிர்பார்ப்புடன் விக்ரமை நோக்கினான். மற்ற மூவரும் கூட அவனைப் பார்த்தனர்.
விக்ரமின் வாய் அனிச்சையாய் அந்தப் பெயரை உச்சரித்தது: “மன்யாக்னி!”
தொடரும்…