”மன்யாக்னி”
அந்தப் பெயரை உச்சரித்தவுடன் விக்ரமின் முகத்தில் ஒரு வியப்பு படர்ந்தது.
அதைவிட அதிகமாய்ப் பட்டியின் முகம் வியப்பில் விரிந்தது.
”அண்ணா…?”
விக்ரமின் கைகள் அனிச்சையாக அந்தக் கணையாழியை நெருங்கின, அவன் அதை முழுதாய்த் தொடவில்லை இலேசாய் விரல் உரசும் தொலைவிலேயே அவன் கண்முன் கனவு போலக் காட்சிகள் பளிச்சிட்டன…
வராகமிகிரர் விக்ரமை நிமிர்ந்து பார்த்து உதட்டைச் சுழித்தார்…
ரத்னாங்கிப் பதுமை “கிளுக்” என நகைத்தது, “கற்பனையிலேயே குடித்தனம் நடத்தத் தொடங்கிவிடாதீர்கள் மகாராஜா!”
”நம் அரண்மனையில் சுவையான உணவா?” வேதாளப் பட்டன் எள்ளலாகக் கேட்டான்.
மதனமாலை ஆசைக்கும் வெட்கத்திற்கும் இடையில் இருதலைக்கொள்ளி எறும்பாய்த் தவித்தாள், “விக்ரமா-”
அந்த வாள் அவன் கையில் உதயசூரியனைப் போல மஞ்சளாய் ஒளிர்ந்தது…
“மன்யாகினி!”
விக்ரம் கையை உதறிப் பின்னால் இழுத்துக்கொண்டான்.
”அண்ணா?”
பட்டியும் விஷாலியும் ஒரு சேர அழைத்தனர். விக்ரம் நெற்றியைக் கசக்கிக்கொண்டான்.
“என்ன ஆச்சு விக்ரம்?” தேவி அக்கறையுடன் கேட்டாள்.
அருண் பணியாளுக்குச் செய்கை செய்தான்.
சிறிது நேரத்தில் விக்ரமுக்குச் சூடான பால் தரப்பட்டது. விக்ரம் ஒன்றும் பேசாமல் இரண்டு மடக்கு குடித்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“ஐம் ஸ்லோலி கெட்டிங் த ஹாங் ஆஃப் இட்… பட்டி?”
“அண்ணா!” பட்டி பணிவாய் விக்ரமின் அருகில் வந்து நின்றான்.
“அந்த வாள் இப்ப எங்க இருக்கு?”
”தெரியாது அண்ணா… கடைசியா…” பட்டி தயங்கினான்.
“ம்?” விக்ரம் அவனைக் கூர்ந்து நோக்கப் பட்டி தொடர்ந்து பேசினான்.
“கடைசியா… நீங்க… நீங்க அந்த வாளாலதான் நவகண்டம் கொடுத்தீங்கனு பேச்சு…” பட்டி மெள்ளத் தயங்கித் தயங்கிச் சொன்னான்.
“நவ… என்னது?” தேவி குறுக்கிட்டுக் கேட்டாள்.
எல்லோருக்கும் அந்தக் கேள்வி இருந்தது அவர்கள் முகத்தில் தெரிந்தது.
அனைவரும் பட்டியை நோக்கினர். அவன் ’இது கூட தெரியாதா!’ என்று அலுத்துக்கொள்பவனைப் போலத் தோளைக் குலுக்கிவிட்டுச் சொன்னான்.
[the_ad id=”6605″]
“நவகண்டம்! மகாகாளிக்குத் தன் உடல் உறுப்புகளைத் தானே வெட்டி நைவேத்தியமா படைக்குறது… விக்ரமாதித்யரும் தன் தலையை…” பட்டி முடிக்காமல் நிறுத்தினான்.
“ஓ… அப்ப விக்ரமாதித்யர் தற்கொலைப் பண்ணிக்கிட்டாரா?” தேவி சாதாரணமாகக் கேட்டாள்.
பட்டி சட்டெனக் கோவமானான்.
“நவகண்டம் கொடுக்கிறது தற்கொலை இல்லை… அது பராசக்திக்குக் கொடுக்குற படையல்! மகா யக்ஞம்!”
பட்டி ஆக்ரோஷமாய்ச் சொன்னான்.
அருணும் விஷாலியும் பட்டி சொல்வதை முழுதாய் உள்வாங்கிக்கொள்ள இயலாமல் தவித்தனர்.
”அது எங்க நடந்தது?”
விக்ரம் நிதானமாய்க் கேட்டான்.
“எனக்குத் தெரியாது அண்ணா… நீங்க கடைசியா காடாறு மாசம் போனப்பிறகுத் திரும்பி வரல… அப்பதான் இது நடந்திருக்கனும்… நான்தான் உங்களைக் கொன்னுட்டேனு கூட சிலர் கதை சொல்வாங்க!”
பட்டி விரக்தியாய்ச் சொன்னான்.
”எதுவுமே தெரியாதுனா விக்ரமாதித்யர் தற்கொ- சாரி, நவ…கண்…டம் கொடுத்தது மட்டும் எப்படித் தெரியும்?” தேவி விசாரணை நடத்தும் தொனியில் கேட்டாள்.
பட்டி சற்றுத் தடுமாறினான்.
”அது… ம்ம்ம்… விக்ரமாதித்யரோட முண்டம் கிடைச்சுது எங்களுக்கு!” “முண்டம்” என்று சொல்கையில் பட்டியின் பார்வை விக்ரம் மீது சென்று ஒரு குற்ற உணர்ச்சியுடன் தாழ்ந்தது.
“அந்த பாடி விக்ரமாதித்யரோடதுதான்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?” தேவி விடாமல் கேட்டாள்.
பட்டி பதிலளிக்குமுன் விக்ரம் இடைமறித்தான்,
”இரு தேவி…”
அருணும் குறுக்கே புகுந்தான்,
“விட்டா எஃப்.ஐ.ஆர் போட்டுப் பட்டிமேல வாரண்ட் வாங்கிடுவ போல?”
தேவி சிரித்தாள். விஷாலியும் அப்போதுதான் சற்று ஆசுவாசமானாள்.
“ஆமா தேவ்ஸ்… பட்டி சும்மாவே பயப்படுவான், நீ அவன ரொம்ப குடையுற!”
”ஆஹாஆ… செட்டு சேர்ந்துட்டீங்களா! சரிம்ம்ம்மா, நான் வாயத் திறக்கல… நீங்களே வாளைக் கண்டு பிடிங்க!”
“ஓ, நீ கேள்வி கேட்டே வாளைக் கண்டு பிடிச்சிடலாம்னு பார்த்தியா? இதென்ன கிராண்ட் மாஸ்டர் ஷோவா? யாரு மனசுல யாரு, வாளை எங்க வெச்சாரு…?” அருண் மிகுந்த உற்சாகத்துடன் “களம்” இறங்கினான்.
பட்டிக்குச் சட்டென இவர்கள் இப்படிக் கிண்டலாய்ப் பேசிக்கொள்வது வியப்பையும் எரிச்சலையும் அளித்தது. அவன் பரிதாபமாய் விக்ரமைப் பார்த்தான்.
“சரி… நாம முக்கியமான பிரச்சனைகளைக் கவனிப்போமா?”
விக்ரம் அவர்கள் கிண்டலை அப்போதைக்குக் கட்டுப்படுத்தினான்.
மீண்டும் அனைவரின் பார்வையும் பட்டியின் மீது விழுந்தன.
”இப்ப என் கேள்வியைக் கேட்கலாமா வேண்டாமா?” தேவி மீண்டும் தீவிரமாகிக் கேட்டாள்.
“கேளும், கேட்டுத் தொலையும்…”
அருண் புலிகேசி வடிவேலு பாணியில் சொல்ல மீண்டும் அவர்கள் “கொல்” என்று சிரித்தனர்.
விக்ரம் அவர்களோடு சேர்ந்துகொள்ளவில்லை.
“சரி சொல்லு பட்டி, எப்படி அது விக்ரமாதித்யர் உடல்தான்னு கண்டுபிடிச்சீங்க?”
“இதென்ன கேள்வி? விக்ரமாதித்யர் சாதாரண ஆளா? மகாகாளியின் அருள் பெற்ற மாவீரர்… மூவுலகையும் ஒரே குடை கீழ் ஆட்சி செய்யப் பிறந்த பேரரசர்… அவர் உடல்ல முப்பத்தி ரெண்டு ராஜலட்சணங்கள் இருக்கும்… பார்த்தவுடனே சொல்லிடலாம்!”
பட்டி சற்றே எரிச்சலோடு சொன்னான்.
“முப்பத்திரண்டு லட்சணமா?” விஷாலி வியப்பாய்க் கேட்டாள்.
“ஆமா… உதாரணமா வலது கையில் சக்கர ரேகையும் இடது கையில் சங்கு ரேகையும் இருக்கும்… இது மகாவிஷ்ணு அம்சம், மகாராஜாக்களுக்கு மட்டுமே இருக்கும்…”
சொல்லிக்கொண்டே பட்டி விக்ரமின் வலது கையைப் பிடித்துச் சட்டெனத் திருப்பி உள்ளங்கையை அனைவரும் பார்க்கும்படி காட்டினான்.
[the_ad id=”6605″]
“இதோ… சக்கர ரேகை…”
விக்ரமின் உள்ளங்கை ரேகைகளின் நடுவில் இலேசான ஒரு வட்டம் போன்ற கோடு இருந்தது.
”வாவ்!” விஷாலி விக்ரமை நெருங்கி வந்து அமர்ந்துகொண்டு அவன் கையைப் பிடுங்கிப் பார்த்தாள்.
அருண் தனது வலது உள்ளங்கையை உற்றுப் பார்த்தான்.
”இதான் சக்கரமா!” தேவி இருந்த இடத்திலிருந்தே சற்று எட்டிப் பார்த்துவிட்டு அமர்ந்துகொண்டாள்.
விஷாலி விக்ரமின் இடது கையை எடுத்துப் பார்த்தாள்,
“சங்கு எங்க?”
“ம்க்கும்… விட்டா நாமம் துளசிமாலைலாம் போட்டு நிக்க வெச்சுடுவியே!”
அருண் கிண்டலாய்ச் சொல்ல, அவள் அவனுக்கு ஏதோ பதில் சொல்ல எத்தனித்தாள், அதற்குள் விக்ரம் தன் கையை அவளிடமிருந்து பிடுங்கிக்கொண்டு நகர்ந்து அமர மீண்டும் அனைவரும் மௌனமானார்கள்.
”இப்ப அந்த வாள் எங்கதான் இருக்கு?”
விக்ரம் சற்றே எரிச்சலோடு கேட்டான். பட்டி தோளை இலேசாய் குலுக்கினான். “தெரியாது!”
“என்ன பண்ணலாம்?” அருண் கேட்க, விக்ரம் தனக்குள்ளேயே பேசிக்கொள்பவனைப் போலக் கீழே பார்த்துத் தலையை மெல்ல ஆட்டினான்.
”நம்ம ராஜகோபால் சாரைக் கேட்டுப் பார்ப்போம்…”
விக்ரம் சொல்ல அருணும் ஒத்துக்கொண்டு தலையை ஆட்டினான்.
“அவரு…?” தேவி வினவ,
“ரிட்டய்ர்டு ஆர்க்கியாலஜிஸ்ட்! ஒன்னு அவருக்கே இது பத்தித் தெரிஞ்சிருக்கும், இல்லனா கண்டிப்பா இதத் தெரிஞ்சவங்க யாரையாச்சு அவருக்குத் தெரிஞ்சிருக்கும்…”
“ஆமா, அவர்தான் இதுக்குச் சரியான ஆள்!” அருண் வழிமொழிந்தான்.
“சரி, ஆனா அவர்கிட்ட போய் நீதான் விக்ரமாதித்யரோட மறுபிறவினு சொல்லப் போறியா?” விஷாலி தயக்கத்துடன் கேட்டாள்.
“வேற வழியில்ல, முழுசா சொல்றதுதான் நல்லது! அருண் நீ அவர்கிட்ட பேசி அப்பாயின்மெண்ட் வாங்கு… போன்ல எல்லாத்தையும் சொல்ல வேண்டாம், அவுட்லைன் மட்டும் கொடு…”
அருண் தலையசைத்துவிட்டு எழுந்து சென்றான்.
“அவரு அப்பாவோட ப்ரெண்டு டா… நமக்கு கார்டியன் மாதிரி… அவரையும் குழப்பிவிட்டுடாதீங்க!” விஷாலி இலேசாய்த் தலையில் அடித்துக்கொண்டாள்.
* * *
மறுநாள் மாலை அனைவரும் தொல்லியல் அறிஞர் முனைவர் ராஜகோபாலின் வீட்டில் இருந்தனர்.
அறிமுகங்கள் நலம் விசாரிப்புகள் முடிந்து மெல்ல விக்ரம் பேச்சைத் தொடங்கினான்.
ராஜகோபால் ஐயாவின் மனைவி இடையிடையே அவர்களுக்கு விதம்விதமாக திண்பண்டங்கள் கொண்டு வந்து கொடுத்த வண்ணம் இருந்தார்.
ராஜகோபால் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு நிதானமாய் பேசினார்.
“விக்ரமாதித்யன்ற அரசன் உண்மையா கதையான்றதே முடிவாகாத விஷயம். வரலாற்றில் பல அரசர்கள் தான்தான் விக்ரமாதித்யன்னு பட்டம் சூட்டிக்கிட்டிருக்காங்க. இரண்டாம் சந்திரகுப்தர் ஒரு நல்ல உதாரணம். விக்ரமாதித்யனை வரலாற்று நபரா ஏற்றுக்கொள்ளும் பல ஆய்வாளர்களும் இரண்டாம் சந்திரகுப்தரைதான் விக்ரமாதித்யன்னு சொல்வாங்க…”
“ஓ…” அனைவரும் கதை கேட்கும் சிறுவர்கள் போல ஆர்வமாய்க் கேட்டனர்.
பட்டி மட்டும் ஆர்வம் காட்டாமல் வீட்டை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.
“ஆமா… ஆனா, நீங்க சொல்ற விஷயம்லாம் மாயமந்திர சமாச்சாரமா இருக்கே!” ராஜாகோபால் கடகடவெனச் சிரித்தார்.
விக்ரம் இலேசாய் வெட்கட்பட்டான். விஷாலியும் தேவியும் சிரிப்பை அடக்கிக்கொள்ள முயன்றனர். அருண் தீவிரமாய் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“விக்ரமாதித்யர் நிஜம். இதோ உங்க முன்னாலதான் இருக்கார்!”
பட்டி அழுத்தமாய்ச் சொன்னான். விக்ரம் அவனை “சும்மா இரு” என்று கண்ணைக் காட்டினான்.
“என்னவோ… ஆனா எனக்கும் நீங்க சொல்ற விக்ரமாதித்யன் இரண்டாம் சந்திரகுப்தர் இல்லனுதான் தோனுது, அதுனாலதான் இதுக்கு ஏத்த ஒருத்தர உங்களுக்கு அறிமுகப்படுத்தி விடலாம்னு இருக்கேன்…” ராஜகோபால் பீடிகையாய் சொல்லி நிறுத்த அனைவரும் ஆர்வமானார்கள்.
“யாரு?”
“அவரும் ஆர்க்கியாலஜிஸ்ட்தான், ஆனா அவர் ஆராய்ச்சிலாம் கொஞ்சம் வித்தியாசமானது… ’மித்திக்கல் ஆர்க்கியாலஜி’னு அவரா ஒன்னை உருவாக்கிக்கிட்டு ஆராய்ச்சி பண்றார்…”
[the_ad id=”6605″]
“மித்திக்கல்?” தேவி இடைவெட்ட ராஜகோபால் தலையசைத்து ஆமோதித்தார்.
“ஆமா… நாம வரலாறுனு சொல்றதுல பாதி செவிவழிச் செய்தின்னு சொல்லப்படுற “லெட்ஜண்ட்ஸ்”தான்… உண்மையா? பொய்யா? நடந்துதா? நடக்கலையா? இப்படி எதுவுமே உறுதியா தெரியாத பல விஷயங்கள்… ஆனா ஆயிரமாயிரம் வருஷமா தலைமுறைத் தலைமுறையா சொல்லப்படுற விஷயங்கள்… கதைகள், கற்பனைகள், கொஞ்சம் உண்மையான வரலாறுகள்…”
ராஜகோபால் பேசிக்கொண்டிருக்கையிலேயே அவரது மனைவி அடுத்த சுற்று சிற்றுண்டியுடன் வந்தார்.
“பணியாரம்…” புன்னகையோடு அனைவருக்கும் பரிமாறினார்.
பணியாரத்தை வாயில் அதக்கிக்கொண்டாலும் அனைவரின் கவனமும் ராஜகோபால் ஐயாவின் பேச்சிலிருந்து விலகவில்லை, அவரும் தொடர்ந்தார்,
“இப்படிப் பலதும் கலந்துதான் நம்ம வரலாறு இருக்கு. பொதுவா தொல்லியல் துறையைப் பொறுத்தவரை நாங்க கல்வெட்டு, செப்புப் பட்டையம், ஓலைச்சுவடி, அகழ்வாய்வுனு உறுதியான தகவல்களுக்குத்தான் மதிப்பும் முன்னுரிமையும் கொடுப்போம்… ஆனா, இந்தச் செவிவழிச் செய்திகள் சொல்ற கதைல வர மாயமந்திரங்கள் அப்பப்ப எங்களையும் ஈர்க்கும்… டாம்ப் ரெய்டர்ஸ், பிரமிடுக்குள்ள புதையல் தேடுறது மாதிரி எங்களுக்கும் ஒரு பறக்குற பாய், சக்திவாய்ந்த வாள், உருமாற்றும் மோதிரம் இப்படிக் கிடைக்காதானு ஒரு ஆசை, பகல்கனவு உள்ளுக்குள்ள இருக்கத்தான் செய்யும்…
”வெளில சொன்னா கிண்டல் பண்ணுவாங்க, டிப்பார்ட்மெண்ட்ல பேரு கெட்டுப் போகும்னு யாரும் சொல்லிக்கமாட்டோம்… ஆனா, இவன் அப்படி இல்ல, எதப் பத்தியும் யாரைப் பத்தியும் கவலைப்படாத ஆள்… தைரியமா நான் இந்த மாயமந்திர சமாச்சாரங்களைத் தேடுறேன்னு வெளிப்படையா ஒத்துக்குறவன்… அவன் எழுதுற பாதி ஆய்வுக் கட்டுரைகளை டிப்பார்ட்மெண்டல ஏத்துக்க மாட்டாங்க, கிண்டல் செய்வாங்க, ஆனா அவன் அதுக்குலாம் அசரமாட்டான்… ஆனா ஆள் கிறுக்குலாம் இல்ல, ரொம்ப புத்திசாலி, ஆர்க்கியாலஜில உண்மையிலேயே எக்ஸ்பர்ட்…”
ராஜகோபால் வாஞ்சையுடன் சொல்லிக்கொண்டு போனார்,
“அவன இங்க வரச் சொல்லிருக்கேன், இந்நேரம் வந்திருக்கனும்-”
“டி-டிங்”
அவர் முடிக்குமுன் அவர் வீட்டு அழைப்பு மணி அடித்தது.
அந்த நபர் பலத்த புன்னகையோடு ”வணக்கம்!” என்று கைகளைக் கூப்பியபடியே உள்ளே நுழைந்தார்.
ராஜகோபால் உற்சாகமானார்,
“திங்க் ஆஃப் த டெவில்… விக்ரம், இவன்தான் டாக்டர் செழியன், நான் சொன்ன மித்திக்கல் ஆர்க்கியாலஜிஸ்ட்!”
விக்ரமுக்குச் செழியனைப் பார்த்ததும் பலநாள் பார்த்துப் பேசிப் பழகியதைப் போல ஒரு உணர்வு மேலோங்கியது.
தொடரும்…