பகுதி – 19
வீட்டிற்கு வந்ததும் சாதனா உடை மாற்றி முகம் கழுவிட்டு வந்தவள் படுத்ததும் உறங்கி விட்டாள். ரிஷி தான் உறக்கம் வராமல் வெகு நேரம் விழித்து இருந்தான்.
ரிஷி வெகு நேரம் வரை விட்டதையே வெறித்தவன், திரும்பி சாதனா என்ன செய்கிறாள் எனப் பார்க்க… அவள் எப்போவோ உறங்கி போய் இருந்தாள்.
காதலிக்காம இருந்து தொலைத்து இருக்கலாமோ… இவளை மாதிரி நாமும் நிம்மதியாக இருந்திருக்கலாம் என நினைத்தவன், இருந்த மன உளைச்சலில் அநேரத்திற்கு நீச்சல் குளத்திற்குச் சென்று ஒரு மணி நேரம் நன்றாக நீந்தி விட்டு வந்தான். பின்பு தான் அவனால் உறங்க முடிந்தது.
ரிஷி மறுநாள் காலை தாமதமாகத்தான் எழுந்தான். அவன் விழித்த போது சாதனா ஏற்கனவே எழுந்து உட்கார்ந்து படித்துக் கொண்டு இருந்தாள். அவளுக்குப் பரிட்சையைப் பற்றிப் பயம் வந்திருந்தது. நேரத்தை எல்லாம் வீணாக்குவது போல் தோன்றியது.
மனதிற்குள் அதே நினைவுடன் படுத்ததால்… காலை சீக்கிரமே முழிப்பு வந்துவிட்டது. எழுந்ததும் காப்பியை குடித்து விட்டு படிக்க உட்கார்ந்து விட்டாள். ரிஷியும் அவளைத் தொந்தரவு செய்யாமல் அவன் வேலையைப் பார்க்க… மதியம் இருவரும் உமாவின் மகள் சுகந்தியின் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றனர்.
உமாவும் அங்கே இருந்ததால்…. எல்லோரோடும் அரட்டை அடித்துப் பேசியபடி சாப்பிட்டு முடித்தனர். ரிஷி அதிகம் பேசவில்லை…. யாரவது எதாவது கேட்டால் மட்டும் பதில் சொன்னான்.
மாலை ஐந்து மணிக்கு விமானம் என்பதால்… அங்கிருந்தே நேராக விமான நிலையம் சென்றனர். ரிஷி அமைதியாக இருப்பது சாதனாவுக்கே ஒருமாதிரி இருந்தது. விமானத்தில் ஏறி அமர்ந்ததும் அவனிடம் கேட்டே விட்டாள்.
“ஏன் ரிஷி ஒருமாதிரி இருக்கீங்க? என் மேல எதாவது கோபமா?”
“எனக்கு என்ன கோபம்? நான் நல்லாத்தான் இருக்கேன்.”
“பொய் சொல்றீங்க… நேத்து நைட் பார்டியில இருந்து திரும்பி வந்ததுல இருந்து இப்படித்தான் இருக்கீங்க.”
“எப்படி இருக்கேன்.”
“ரொம்ப உர்ருன்னு… கோபம் இருந்தா திட்டிடுங்க ரிஷி. ஆனா இப்படி மட்டும் இருக்காதீங்க.”
அவள் சொன்ன விதத்தில் ரிஷிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “என்கிட்டே திட்டு வாங்க உனக்கு அவ்வளவு படிக்குமா…”
“உரிமை இருக்கிறவங்களைத் தான கோவிச்சிப்போம்.”
[the_ad id=”6605″]
“ஓ… உனக்கு அப்படி வேற நினைப்பிருக்கா…. நான் பிடிக்காதவங்களைத் தான் திட்டுவேன்.” ரிஷி அலட்சியமாகத் தோளை குலுக்கி விட்டு சொல்ல…. சாதனாவிற்கு க் கண்களில் கண்ணீர் நிரம்பி விட்டது. அவள் ரிஷிக்குக் காட்டாமல் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டாள்.
அவளாகத் திரும்புவாள் திரும்புவாள் என்று பொருத்து பார்த்த ரிஷி அவள் திரும்பவில்லை என்றதும், அவனே அவள் முகத்தைப் பற்றித் தன் பக்கம் திருப்பினான்.
“இப்ப எதுக்கு அழுகை?”
“எனக்குத் தெரியும், உங்களுக்கு என்னைப் பிடிக்காதுன்னு. அதனால் அதை நீங்க அடிக்கடி சொல்லி காட்ட வேண்டாம்.”
“விளையாட்டுக்கு சொன்னதுக்கு எல்லாம் சீரியஸ்ஸா எடுத்துக்கிட்டா நான் என்ன பண்றது?”
“அப்ப உங்களுக்கு என்னைப் பிடிக்குமா…”
“உன்னைப் போய் யாருக்காவது படிக்காம இருக்குமா…”
“யாருக்கோ இல்லை உங்களுக்குப் பிடிக்குமா…” சாதனா அவனை விடுவதாக இல்லை….
“பிடிக்கும், போதுமா… சும்மா தொனத்தொனன்னு அரிக்காம வாடி….” என்றான்.
ரிஷி இவ்வளவு சொன்னதே சாதனாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதன்பிறகு அவள் அமைதியாக வர… உண்மையிலேயே இவளை நமக்குப் பிடிக்குமா… இல்லைன்னா அவள் அழுகையைத் தாங்க முடியாம அப்படிச் சொல்லிட்டோமா… என ரிஷி மனதிற்குள் ஆராய்ந்து கொண்டு வந்தான்.
இருவரும் வீட்டிற்கு வந்த போது, ஜோதி அவர்களை ஆவலாக வரவேற்றார். அவரோடு பேசிக்கொண்டே இரவு உணவையும் முடித்து விட்டே அறைக்குத் திரும்பினர். மறுநாளிலிருந்து சாதனா புத்தகமும் கையுமாகவே இருந்தாள்.
அவர்கள் அறைக்குப் பக்கத்து அறையில் உட்கார்ந்து படிப்பவள், இரவு படுக்க மட்டுமே தங்கள் அறைக்கு வருவாள். ரிஷியும் அவன் வேலையில் தீவிரமாக இருந்தான். இரவில் ஒரே அறையில் படுத்தாலும், வேறு எந்த முன்னேற்றமும் இல்லை… இருவரும் அதிகம் பேசிக்கொள்ளக் கூட இல்லை.
இப்படியே இரண்டு வாரங்கள் செல்ல… வியாபார விஷயமாக ரிஷி லண்டன் கிளம்பினான். அவன் திரும்பி வர ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என்பதால்… சாதனாவிற்கு முகம் வாடிவிட்டது.
அவள் சோகமே வடிவாகச் சுற்ற…. ரிஷி அவளிடம் காரணம் கேட்டான்.
“இல்லை நீங்க போயிட்டு திரும்பி வர ரொம்ப நாள் ஆகும் போல… அதுவரை நான் எப்படித் தனியா இருப்பேன்?”
“நீ ஏன் தனியா இருக்கணும். அதுதான் அம்மா அப்பா எல்லாம் இருக்கங்களே…”
“அவங்க இருப்பாங்க தான். இருந்தாலும், நீங்க இல்லைன்னா எனக்குக் கஷ்ட்டமா இருக்கும்.”
“என்ன கஷ்ட்டம்? நான் இல்லாம தான இருபத்தி நாலு வருஷம் இருந்த… இப்ப ஒரு மாசம் இருக்க முடியாதா…”
ரிஷி கேட்டதில் சாதனாவின் மூட் சுத்தமாகப் போய்விட்டது. “சரி டாட்டா.., போயிட்டு வாங்க.” என்றவள், அவன் கிளம்புவதற்கு முன்பே வீட்டை விட்டு கிளம்பி இருந்தாள்.
வீட்டில் இருந்து கிளம்பிய பிறகு தான் எங்குச் செல்வது என்று தெரியவில்லை…. சத்யாவை பார்த்து ரொம்ப நாட்கள் ஆனதால் அவனது வீட்டிற்குச் சென்றாள்.
“வா சாதனா…. புதுக் கல்யாணப் பொண்ணு எங்க வீட்டுக்கு வருவேன்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை….” சத்யாவின் அம்மா உற்சாகமாக வரவேற்க…. அவர் சொன்னதைக் கேட்டு உள்ளே இருந்து சத்யா வந்தான்.
“ஹே… வரப்போறதா சொல்லவே இல்லை வா… வா…” சத்யா அவளை உள்ளே அழைத்துக்கொண்டு செல்ல…. சாதனா அவனோடு சென்றாள்.
[the_ad id=”6605″]
அவர்களோடு சிறிது நேரம் உட்கார்ந்து பேசிய சத்யாவின் அம்மா பிறகு உள்ளே அறைக்குச் சென்று விட…. இவர்கள் இருவரும் மட்டும் படிப்பை பற்றிப் பேசிக்கொண்டு இருந்தனர்.
சாதனா மதியம் அங்கேயே சாப்பிட்டாள். பிறகு இருவரும் மீண்டும் படிப்பை பற்றிப் பேசினார். சத்யாவிற்குச் சாதனாவின் ஒவ்வொரு அசைவுகளும் அத்துபடி. பள்ளியில் இருந்து கல்லூரி வரை சேர்ந்தே இருக்கிறார்கள் அல்லவா….
“என்ன ஒரே ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க….”
“ரிஷி இன்னைக்குச் சென்னை போய் அங்க இருந்து நாளைக்கு லண்டன் போறாங்க. அவங்க கிளம்பும் போது சண்டை போட்டுட்டு வந்திட்டேன். அவங்களைத் திரும்பப் பார்க்க ஒரு மாசம் ஆகும். அதை நினைச்சா தான் கஷ்ட்டமா இருக்கு.”
“இப்ப நினைச்சு கஷ்ட்டப்பட்டு என்ன ஆகப்போகுது? அப்பவே ஒழுங்கா பேசிட்டு வந்திருக்கலாம் இல்லை…”
“ப்ச்… நீ என் கூட வரியா… ஏர்போர்ட் போய் அவங்களைப் பார்த்திட்டு வரலாம்.” சாதனா ஆவலாகக் கேட்க… சத்யா அவளை முறைத்தான்.
“நோ வே…. நான் படிக்கணும்.”
“வந்து படிடா…. இங்க இருந்து ஏர்போர்ட் கிட்ட தான சீக்கிரம் வந்திடலாம்.”
சாதனா கெஞ்சவே ஆரம்பிக்க…. சரி என்று அவளோடு சத்யா கிளம்பினான். இருவரும் ஏர்போர்ட் சென்ற போது மூன்று மணி ஆகி விட்டது.
“உள்ளப் போகலாமா…”
“அவங்களுக்கு நாலு மணிக்கு தான் ப்ளைட். இனிமே தான் வருவாங்க வெயிட் பண்ணு.”
சாதனாவும் சத்யாவும் ஏர்போர்ட்டில் காத்திருக்க…. விமானத்திற்கு அரை மணி நேரம் இருக்கும் போது தான் ரிஷி வந்தான். அவன் உதவியாளன் உதய்யோடு பேசியபடி வந்தான்.
கூலர்ஸ் எல்லாம் போட்டு ஸ்டைலாக நடந்து வந்தவனைச் சாதனா ரசிக்க…. “ஹே போ…. அவர் போய்ட போறாரு….” சத்யா சொல்ல….
“நாம இங்கயே இருந்து பார்ப்போம்.” என்றாள் சாதனா.
சத்யா தலையிலேயே அடித்துக்கொள்ள…. ரிஷி உள்ளே செல்லும் வரை சாதனா அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள், அவன் உள்ளே சென்றதும் தான் சத்யாவின் பக்கம் திரும்பினாள்.
“நாம ஸ்கூல் படிக்கும் போது எப்படி ரிஷிக்கு தெரியாம அவரைப் பார்ப்பியோ… இப்பவும் அதே மாதிரியா…. கடவுளே ! உனக்கு அவர் கூடக் கல்யாணம் ஆச்சு தான…..”
“ஆமாம் டா….”
“நீயும் அவரும் ஒரே வீட்ல தான இருக்கீங்க. அப்புறம் எதுக்கு இப்படி?”
“சும்மா ! அவங்க பார்க்காத போது பார்க்க இன்னும் திர்ல்லிங்கா இருக்கும்.”
“பொய் சொல்லாத…. நீ வந்தது தெரிஞ்சா ரிஷி திட்டுவாரு அதுக்குத் தான….”
“அதுக்கும் தான்.”
இருவரும் பேசிக்கொண்டே நடக்க…. அப்போது “ஹலோ மேம்…நீங்க எங்க இங்க? சாரை பார்க்க வந்தீங்களா…” உதய் கேட்க…. அவனை எதிர்ப்பார்க்காத சாதனா முதலில் திகைத்து விழித்தாள். பிறகு ஆமாம் என்றாள்.
ரிஷி உதய்யிடம் எதோ சொல்ல நினைத்து வெளியே வந்தவன், தூரத்தில் சாதனா உதய்யோடு நின்று பேசுவதைப் பார்த்தான்.
“இவ எங்க இங்க?” என அவன் நினைக்கும் போதே… அவன் செல்ல வேண்டிய விமானத்திற்கு அழைப்பு வந்துவிட்டது. அதனால் உள்ளே சென்றவன், செக்கிங் முடிந்து விமானத்தில் சென்று அமர்ந்த மறுநொடி உதய்யை அழைத்தான்.
“சார் மேடம் பத்திரமா போயிட்டாங்க சார்.” என்று உதய் அவனாகவே சொல்ல….
“ம்ம்…”
“உங்களைத் தான் பார்க்க வந்தாங்க போல… தெரிஞ்சிருந்தா நாம இன்னும் முன்னாடியே வந்திருக்கலாம்.” என்றான் உதய். அவனிடம் பேசிவிட்டு வைத்த ரிஷிக்குக் குழப்பமாக இருந்தது.
தன்னைப் பார்க்க வந்துவிட்டு பிறகு ஏன் பார்க்காமல் போனாள் என நினைத்தவன், சாதனாவையே அழைத்துக் கேட்போம் எனச் செல்லை எடுக்க… அதற்குள் விமானம் கிளம்ப ஆரம்பித்துவிட்டது.
[the_ad id=”6605″]
சென்னையில் இறங்கி காரில் செல்லும் போது… சாதனாவை அழைத்தான். அவள் எடுக்கவே இல்லை. சென்னையில் அவர்கள் வீட்டிற்குச் சென்ற பிறகு ஜோதியை அழைத்தான்.
“என்ன ரிஷி சென்னை போயிட்டியா…. காலையில சீக்கிரம் ப்ளைட்டுடா மறந்து தூங்கிடாத…”
“அது இருக்கட்டும், சாதனா வந்துட்டாளா….”
“வந்துட்டாளே… இங்க கீழ இருக்கிற ரூம்ல தான் இருக்கா…. அவகிட்ட கொடுக்கவா…….”
“சரி கொடுங்க….” ரிஷியிடம் பேசியபடியே அறைக்குள் வந்த ஜோதியை பார்த்த சாதனா யார்? என்றாள் மெதுவாக…. அவர் ரிஷி என்றதும், நான் தூங்கிட்டேன்னு சொல்லுங்க என்றாள் ஜாடை காட்டி…. அவளுக்குத் தெரியும், இந்நேரம் தான் விமான நிலையம் வந்ததை உதய் ரிஷியிடம் சொல்லி இருப்பான் என்று….