”எப்படி இவ்ளோ சீக்கிரம்? அது யுனெஸ்கோவோட வோர்ல்டு ஹெரிடேஜ் சைட் இல்ல? எப்படி இவ்ளோ ஈசியா அதுல கை வெக்க ஒத்துக்கிட்டாங்க?”
அருண் அதிர்ச்சி விலகாமலே கேட்டான்.
“நீ சொல்றது சரிதான் அருண், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் மேல அவ்ளோ எளிதா கைவெக்க முடியாது, என்ன நடக்குதுனு உறுதியா தெரியல, ஒன்னு திக்ரசூதனுக்கு அரசியல்ல பெரிய தொடர்புகள் இருக்கனும், இல்ல சின்ன புணரமைப்புதான்னு இவன் அவங்களை நம்ப வெச்சிருக்கனும், எது எப்படினாலும் இவனுக்கு எப்படி இதைப் பண்றதுக்கான அதிகாரம் கிடைச்சதுனு தெரியல!”
என்று செழியன் சிந்தனையோடு பதில் சொன்னார்.
“வெயிட் எ மினிட்! இது ஏன் தற்செயலான ஒரு சின்ன புணரமைப்பாவே இருக்கக் கூடாது? நாம் அவசரப்பட்டு இதுக்குப் பின்னால திக்ரசூதன்தான் இருக்கான்னு கணக்குப் போடுறோம்னு நினைக்குறேன்… செழியன் நீங்க உங்க டிபார்ட்மெண்ட்ல கேட்டுப் பாருங்களேன்? முதல்ல இத உறுதிப் படுத்திக்கிவோம்…”
என்று விக்ரம் சற்றே நிதானம் அடைந்தவனாகச் சொன்னான்.
”ஜி.கே.சி கோயில் ஏ.எஸ்.ஐ கண்ட்ரோல்ல இருக்கு, எங்க டிபார்ட்மெண்ட் இல்ல! பொதுவா எங்களுக்கும் அவங்களுக்கும் ஏழாம் பொருத்தந்தான், ஆனா, எனக்கு அங்க சில நண்பர்கள் இருக்காங்க, கேட்டுப் பார்க்கலாம், பட் இப்ப லேட் நைட்… இப்போ அவங்களைத் தொந்திரவு செஞ்சா நல்லா இருக்காதே…”
என்று அவர் தயங்கினார்.
”விக்ரம், உன்னோட காண்டாக்ட்ஸ் யார்கிட்டயாவது கேளேன்?”
என்று தேவி விக்ரமைக் கேட்டாள்.
“காண்டாக்ட்ஸ்லாம் இருக்காங்கதான், ஆனா, செழியன் சொன்ன மாதிரிதான், இந்த அர்த்தராத்திரில அவங்களத் தொந்திரவு பண்ணா நல்லா இருக்காது! இப்போதைக்கு நாம் கொஞ்சம் ஓய்வெடுப்போம், காலைலதான கோயில்ல புணரமைப்புப் பணிகள ஆரம்பிக்கப் போறாங்க, அப்போ போய்ப் பார்த்துப்போம்…”
விக்ரம் சொன்னதைக் கேட்டு அருணும் தேவியும் அவனை முறைத்தனர்.
“என்னையா அசால்ட்டா சொல்ற?”
[the_ad id=”6605″]
“ஏதோ ஒரு நம்பிக்கைதான்! அவ்ளோ பெரிய கோயில்ல அவ்ளோ எளிதா உடைச்சுத் தள்ளித்து அடில இருக்குற சிம்மாசனத்தை யாராலையும் எடுத்துப் போயிட முடியாதுனு ஒரு உள்ளுணர்வு சொல்லுது…”
என்று விக்ரம் தோளைக் குலுக்கினான்.
“உள்-”
தேவி ஏதோ சொல்லத் தொடங்க, வேதாளப் பட்டன் அவளைத் தடுத்தான்,
“இருங்க! கோயிலையும் சிம்மாசனத்தையும் பாதுகாக்க வேண்டிய வேலை என்னோடது! இவ்ளோ வருஷமா அதுக்கும் எந்த வாய்ப்பும் வரல, இப்பதான் ஒரு உண்மையான ஆபத்து வந்திருக்கு… நான் போய்க் கோயில்லயே இருக்கேன்… நீங்க ஓய்வெடுத்துட்டுப் பொறுமையா காலைல வாங்க… என்ன?”
“ஆம், வேதாளப் பட்டன் சொல்வதுதான் சரி! இந்தச் சாதாரண மானுடர்களால் கோயிலை ஒன்றும் செய்துவிட முடியாது! நானும் அவனுடன் செல்கிறேன்… நீங்கள் காலையில் அங்கு வாருங்கள்… உங்கள் அனைவருக்கும் ஓய்வு தேவை இப்போது…”
வராகமிகிரரும் பட்டனை ஆதரித்துச் சொல்ல, அனைவரும் சரி என்று ஒப்புக்கொண்டனர்.
வராகமிகிரர் வேதாளப் பட்டனின் கையைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்து மறைந்தார்.
செழியன், சத்தீசு, தேவராசு ஆகியோரு விடைபெற்றுக்கொண்டு பக்கத்து அறைக்குச் சென்றனர்.
இரண்டு அறைகளைப் போல இருந்த அந்தப் பெரிய ‘சுவீட்’டில் இருந்த ஒரு படுக்கையறையை நோக்கி விஷாலி சென்றுவிட்டாள். அவள் இவர்களிடம் எதுவும் பேசாமலேயே சென்றுவிட்டாள்.
விக்ரமும் அருணும் அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
“பாய்ஸ், நீங்க இங்க ஹால்லயே படுத்து சுகமா தூங்குங்க, நான் போனாப்போகுதுனு இன்னொரு பெட்ரூம்ல படுத்துக்குறேன்… ரெண்டு பேரும் விஷாலி மேல ஒரு கண்ணு வெச்சுக்கோங்க… அவ ஏதோ டிஃபரெண்டாவே பிஹேவ் பண்றா… சரியா? குட் நைட்!”
என்று தேவி இன்னொரு படுக்கையறைக்குச் சென்றாள்.
விக்ரமும் அருணும் அவளுக்கு இரவு வணக்கம் சொல்லிவிட்டு அந்தக் கூடத்தில் இருந்த நீளமான இருக்கைகளிலேயே படுத்துக்கொள்ளத் தயாரானார்கள்.
“இரு விக்ரம், ஹவுஸ் கீப்பிங்க்கு கால் பண்ணி இன்னொரு பெட் கேக்குறேன்…”
என்று அருண் அருகிலிருந்த உள்தொலைப்பேசியை எடுக்கப் போனான்.
“வேணாம் அருண், ரொம்ப லேட் ஆகுது, அவங்களைத் தொந்திரவு பண்ண வேண்டாம், நாம் தூங்கப் போறதே ரெண்டு மூனு மணி நேரந்தான… இந்த கவுச்சே (couch) ரெண்டு பேர் படுக்குற அளவுக்குப் பெரிசா இருக்கு, இதுவே போதும்…”
என்றபடியே விக்ரம் தன் உடைகளைத் தளர்த்திக்கொண்டு அதில் படுத்தான்.
அருணும் தோள்களைக் குலுக்கிவிட்டு அருகில் இருந்த மற்றொரு நீள் இருக்கையில் படுத்துக்கொண்டான்.
விஷாலியின் படுக்கையறையைப் பார்க்கும் வாக்கில் படுத்துக்கொண்டான் அருண்.
இருவரும் சற்று நேரம் கைப்பேசியில் தங்களுக்கு வந்திருந்த செய்திகள் மின்னஞ்சல்கள் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
முக்கியமான சில வணிகத் தொடர்பான் செய்திகளை மட்டும் படித்துப் பதிலளித்துவிட்டு விக்ரம் விரைவிலேயே உறங்கிப் போனான்.
அருண் விஷாலியின் அறைக்கதவைப் பார்த்தபடியே உறக்கம் வராமல் விழித்துக்கொண்டிருந்தான்.
அவன் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் ஓடின. எங்கு ஓடினாலும் அவனது எண்ணங்கள் மீண்டும் விஷாலியின் மீதே வந்து நின்றன.
அவன் அறிந்திருந்த அந்த கலகலப்பான, குறும்பான் விஷாலி எங்கே போனாள் என்று அவன் மனம் கேட்டுக்கொண்டே இருந்தது. விஷாலி இப்படியே இருந்துவிடுவாளா? இல்லை இந்தப் பிரச்சனை எல்லாம் முடிந்தபின் மாறிவிடுவாளா என்று அவன் மனம் கவலைப்பட்டது.
கடந்த சில நாள்களாக சரியான் ஓய்வின்றி அலைந்துகொண்டே இருப்பதன் சோர்வு ஒருபுறம் அவனை அழுத்தினாலும், அவன் மனத்தில் ஓடிய எண்னங்களும் கவலைகளும் அவனைத் தூங்கவிடாமல் தடுத்தன.
விட்டத்தில் இருந்த அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த சரவிளக்கையே உற்றுப் பார்த்தபடி படுத்திருந்தான் அருண்.
[the_ad id=”6605″]
எவ்வளவு நேரம் அப்படிக் கழிந்தது என்று அவனால் சொல்ல இயலவில்லை.
சட்டென ஏதோ ஓசை கேட்கத் துள்ளி எழுந்து உட்கார்ந்தான்.
விஷாலியின் அறைக்கதவு திறந்திருந்தது. அவள் அறைக்குள் எரிந்துகொண்டிருந்த விடிவிளக்கின் மெல்லிய வெளிச்சம் கதவு வழியாகக் கசிந்தது.
அருணின் பார்வை அனிச்சையாய் அருகில் இருந்த விக்ரம் மீது சென்றது, விக்ரம் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.
அருண் ஓசைப் படாமல் அருகில் வைத்திருந்த தன் வாளைக் கையில் எடுத்துக்கொண்டு விஷாலியின் அறையை நோக்கிப் பூனையடி எடுத்து வைத்தான்.
மெள்ளத் திறந்திருந்த கதவை நெருங்கியவன், கவனுத்துடன் உள்ளே எட்டிப் பார்த்தான்.
விஷாலி கட்டில் அமர்ந்துகொண்டிருந்தாள். முழங்காலை மார்புக்கு முன்பாக மடக்கி உட்கார்ந்து, தலையை முட்டிகளுக்கிடையே புதைத்துகொண்டு கைகளைக் காலைச் சுற்றிக் கட்டிக்கொண்டு அவள் அமர்ந்திருந்ததைப் பார்க்க அருணுக்குப் பரிதாபமாக இருந்தது.
அவள் விழித்திருக்கிறாளா, இல்லை இப்படி அமர்ந்துகொண்டே உறங்கிவிட்டாளா என்று அருணின் மனத்தில் கேள்வி எழுந்தது.
மூடியிருந்த கதவைத் திறந்து யார் என்ற கேள்வி தோன்ற அருண் உடனே எச்சரிக்கை அடைந்தான். மெள்ள கதவை இன்னும் கொஞ்சம் அகலமாகத் திறந்தவன் அறையின் மூலைகளில் யாரேனும் இருக்கிறார்களா, மாடப் பகுதியில் யாராவது இருக்கிறார்களா என்று பார்வையைக் கவனமாக ஓட்டினான்.
மாடப்பகுதியில் ஏதோ அசைவு தெரிய, அருணின் உடலும் அறிவும் எச்சரிகையின் கூர்முனைக்குச் சென்றன. முதுகுத் தண்டில் ஒரு சில்லிப்புடன், உடலில் இலேசாகப் பூத்த புளகத்துடன் அருண் கதவை மெள்ள இன்னும் கொஞ்சம் அகலமாகத் திறந்து ஓசைபடாமல் அறைக்குள் நுழைந்தான்.
சுவரோடு ஒட்டியபடியே நகர்ந்தவனின் பார்வை மாடப் பகுதியிலேயே நிலைபெற்றிருந்தது. மீண்டும் அங்கு ஓர் அசைவு.
அருணின் இரத்தம் ‘ஜிவ்’ என்று மூளைக்குள் பாய்ந்தது, வாளை நீட்டியபடி மாடப் பகுதிக்குப் பாய்ந்தான்.
அங்கே யாரும் இல்லை! திரைச்சீலையோ அல்லது அங்கிருந்த செடிகளோ அசைந்ததைத்தான் தான் தவறாகச் சக வீரன் என்று எண்ணிவிட்டோம் என்று அருண் எண்ணிக்கொண்டான். ஆனாலும், அவனது ஐயம் தீரவில்லை. எதுக்கும் மாடப் பகுதியை நன்றாகச் சோதித்துவிடுவோம் என்று எண்ணியபடி அதன் கதவைத் திறக்கப்போனான்,
“ஹா ஹா ஹா..” என்ற மெல்லிய சிரிப்பொலி அவனைத் தடுத்து நிறுத்தியது.
“என்ன அருண்? மனசுக்குள்ள பெரிய ஜேம்ஸ் பாண்டுனு நெனப்பா?”
கேட்டுவிட்டு விஷாலி மீண்டும் பெரிதாக நகைத்தாள் (ஓசை குறைவாக!)
அருண் என்ன சொல்வதென்று தெரியாமல் திண்டாடினான்.
அவனை வியப்பும் குழப்பும் ஒரு சேர பிடித்துக்கொண்டன. கூடவே விஷாலியின் பழைய சிரிப்பையும் கிண்டலையும் கேட்ட மகிழ்ச்சியும்.
“அது… அது… இங்க யாரோ இருந்தா மாதிரி இருந்துச்சு… அதான்…”
அருன் அசடு வழிந்தான்.
“ஆனாலும் உனக்கு தில்லு ஜாஸ்திடாண்டா, அண்ணா வெளில தூங்கிட்டு இருக்கும்போதே நீ என் ரூம்குள்ள என்ன சைட் அடிக்க வந்துருக்கல?”
விஷாலி குரலில் குறும்பு தெறிக்கக் கேட்டாள்.
“வாட்? உன்ன சைட் அடிக்க வந்தேனா? ஹலோ, மனசுக்குள்ள பெரிய கிளியோபாட்ரானு நெனப்பா உனக்கு?”
அருண் இப்போது இயல்பாகியிருந்தான். தூக்கிப் பிடித்திருந்த வாளை இறக்கிப் பின்னால் மறைத்துக்கொண்டான்.
“ஹே… ஹே… அதென்னப்பா, அழகினாலே கிளியோபாட்ராதானா? ஏன் உலகத்துல வேற அழகியே இல்லையா? அந்தம்மா கருப்பா இருப்பாங்களாம், நீ நினைக்குறா மாதிரி ஹாலிவுட் ஹீரோயின் மாதிரிலாம் இருக்கமாட்டங்க, அத முதல்ல தெரிஞ்சுக்கோ!”
விஷாலி கால்களை நீட்டிக்கொண்டு, ஒரு தலையணையைக் கட்டிக்கொண்ட படியே சொன்னாள்.
அவளை மீண்டும் பழைய நிலையில் பார்க்கப் பார்க்க அருணின் உள்ளத்தில் மகிழ்ச்சி ஊற்றெடுத்தது. அவனும் உற்சாகத்தோடு அவளின் கிண்டல் பேச்சில் கலந்துகொள்ளத் தயாரானான்.
[the_ad id=”6605″]
“நானும் டிஸ்கவரி சேனல்லாம் பார்த்திருக்கேன்… ஹே… எனக்கு இப்பதான் ஞாபகம் வருது, உன்னைக் கூட அடிக்கடி அதுல காட்டுவாங்க…”
அருண் மெள்ளக் கட்டிலை நெருங்கி அதன் விளிம்பில் அமர்ந்துகொண்டான். கையிலிருந்த வாளை அருகில் சாய்த்து வைத்தான்.
“ஆமாமா, காட்டுவாங்க… ஆனா, உன்னைப் பார்க்க டிஸ்கவரி சேனல்லாம் தேவையே இல்ல, பழனி, திருப்பதினு நிறைய கோவில்ல நீ இருப்ப… உனக்காகவே நான் கோயில் போகும்போது நிறைய வாழைப்பழம் வாங்கிட்டுப் போவேன்… என் செல்ல்ல்ல்ல்ல்லம்ம்ம்…”
பேசியபடியே விஷாலி அருணை நெருங்கி இயல்பாய் அவன் கன்னங்களைப் பிடித்து வாஞ்சையுடன் கிள்ளினாள்.
அருண் கூச்சத்தில் நெளிவதைப் பார்த்தவுடன்தான் விஷாலிக்குத் தான் செய்தது புரிந்தது. இதுவரை அவள் இத்தனை நெருக்கமாய் அவனைத் தொட்டதில்லை. சட்டெனத் தன் கைகளைப் பின்வாங்கிக்கொண்டு சற்றுப் பின்னால் நகர்ந்து அமர்ந்தாள்.
இருவரும் சற்று நேரம் ஏதும் பேசாமல் மௌனமாக இருந்தனர். ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் மற்றவரைப் பார்க்க முயல்வதும், கண்கள் சந்திக்கும்போது சட்டெனத் தலையைத் தாழ்த்திக்கொள்வதுமாய் இருந்தனர்.
விஷாலிதான் முதலில் அந்த விளையாட்டைக் கைவிட்டாள். அருணையே வைத்தகண் வாங்காமல் பார்த்தபடி அவனை நெருங்கி அமர்ந்தாள்.
மெள்ள தன் கையை நீட்டி அவன் கன்னத்தைத் தடவினாள்.
அருணும் கூச்சப்பட்டு நகராமல், தன் கண்களைத் தாழ்த்தாமல் அவள் கண்களைப் பார்த்தான்.
அந்த நான்கு கண்களும் என்னென்னவோ கேள்வி பதில்களைப் பரிமாறிக்கொண்டன.
விஷாலியின் கை அருணி கன்னத்திலிருந்து மெதுவாக நகர்ந்து அவன் காதை வருடியபடி கழுத்தில் சென்று நின்றது.
அவன் கழுத்தில் இருந்த தன் கையை அவள் மெல்ல அழுத்த, அருண் அவளை நோக்கிக் குனிந்தான்…
அவர்களது உதடுகள் உரசிக்கொண்டன…
பெட்ரோலியக் கிணற்றுக்குள் தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டதைப் போல அவர்களின் உதடுகளும் உடல்களும் பற்றிக் கொண்டன.
சரசரவென அங்கே சில நொடிகள் சரவெடியாய் வெடித்தன… சற்றென்று யாரோ தண்ணீர் ஊற்றியதைப் போல விஷாலி அனைத்தையும் நிறுத்திப் பின் வாங்கினாள்.
அருணும் நிதானத்திற்கு வந்தவனாய் அவளை ஆசையும் ஏக்கமும் கலந்து பார்த்தான். இருந்தாலும் நாம் செய்வது சரியில்லைதான் என்று உணர்ந்தவன் கட்டிலைவிட்டு எழ முற்பட, விஷாலி அவன் கையைப் பிடித்துத் தடுத்தாள்.
அருண் அவளை வாஞ்சையோடு பார்த்தான்,
அவள் உதட்டில் ஆசையும் வெட்கமும் கலந்த ஒரு மெல்லிய செந்நகை தவழ்ந்தது.
ஆனால், அருண் சற்றும் எதிர்பாராத வகையில் விஷாலியின் புன்னகையும் கண்களில் தெரிந்த குறும்பும் கொஞ்சம் கொஞ்சமாய்க் குரூரமாய் மாறின…
“ஹெல்ப்ப்ப்… அண்ணாஆஆஆ… காப்பாத்து… ஹெல்ப்ப்ப்ப்…”
என்று விஷாலி உச்சக் குரலில் அலறத் தொடங்கினாள்.
அருண் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தான். அவன் கைகள் அனிச்சையாய் வாளை மீண்டும் பற்றிக்கொண்டன.
“விஷாலி… ஏன் கத்துற? என்ன ஆச்-”
அருண் கேட்டு முடிக்கும் முன் விக்ரம் கையில் மன்யாக்னியைப் பிடித்தபடி அறைக்குள் நுழைந்தான்.
விஷாலியும் அருணும் உடைகள் கலைந்த நிலையில் கட்டிலில் இருப்பதையும் அவள் அருணைக் கைகாட்டிய படி அலறுவதையும் பார்த்ததும் விக்ரமும் ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றான்.
அவன் குழப்பத்தைத் தீர்த்து வைக்க எண்ணியவைப் போல விஷாலி கத்தினாள்,
“அண்ணாஆஆ… சேவ் மீ… ஹீஸ் ட்ரையிங் டு அப்யூஸ் மீ! அ- அருண் என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டான்!”
என்றபடியே அவள் விசும்பி அழத் தொடங்கினாள்.
தொடரும்…