அமாவசை இரவு அந்தப் பாசறையைக் கவ்வியிருந்த இருளை மேலும் இருட்டாகச் செய்துகொண்டிருந்தது.
அங்கு நிலவிய பயங்கர அமைதியைக் கண்டு அஞ்சியவை போல விண்மீன்களும் தலைகாட்டாமல் கருப்பு வானில் ஒளிந்துகொண்டிருந்தன.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் எரிந்துகொண்டிருந்த சிறிய அகல் விளக்குகள் அந்த அடர்ந்த இருளைத் துரத்த முயன்று பரிதாபமாய்த் தோற்றுக்கொண்டிருந்தன.
தனது இருண்ட கூடாரத்திற்குள் அமர்ந்து அந்த அடர்ந்த இருளை வெறித்துக்கொண்டிருந்தான் அவன்.
அருகில் நின்றவர்கள் அவனையே பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தனர்.
“நான் கேள்விப்பட்டது உண்மையா மகனே?”
அந்தக் குரலைக் கேட்டவுடன் அங்கிருந்த அனைவருமே பரபரப்பானார்கள்.
சுற்றி நின்றுகொண்டிருந்த தளபதிகள் சடாரென விலகி அவருக்கு வழிவிட்டனர்.
இருளை வெறித்தபடி இருந்தவன் சட்டென எழுந்து நின்றான்.
“தாங்களே இங்கு வர வேண்டிய தேவை என்ன அரசே? அழைத்திருந்தால் நான் ஓடோடி வந்திருப்பேனே?”
அவன் கேட்டபடி எழுந்திருக்கும்போதே அவனது கூடாரத்திற்குள் சில விளக்குகள் ஏற்றப்பட்டன.
அத்தனை நேரம் இருளையே பார்த்துக்கொண்டிருந்த அவனது கண்கள் அந்தச் சிறிய ஒளிக்குப் பழக சில வினாடிகள் எடுத்தன.
”நான் அரசனாக இங்கு வரவில்லை மகனே, ஒரு தந்தையாக வந்திருக்கிறேன்!”
அவரது குரலில் சோர்வும் ஆயாசமும் தெரிந்தன.
அந்த விளக்குகளின் ஒளி மெள்ள அவரை வெளிச்சம் போட்டுக் காட்டின. அந்த மங்கிய ஒளியில் அவரது விழுப்புண்களும் சோர்வும் மேலும் அதிகமாகத் தெரிந்தன அவனுக்கு!
சுற்றி இருந்த தளபதிகளைப் பார்த்துத் தலையசைத்தான். அவர்கள் ஏதும் பேசாமல் அவனையும் அவரையும் தங்கள் படை வழக்கப்படி வலதுகையால் நெஞ்சில் குத்திக்கொண்டு வணங்கிவிட்டுக் கூடாரத்திற்கு வெளியில் சென்று பேச்சுக்குரல் கேட்காத தொலைவில் நின்றுகொண்டனர்.
காது கேளாத, வாய்ப்பேச முடியாத இரண்டு அந்தரங்க ஊழியர்கள் மட்டும் கூடாரத்தின் ஒரு மூலையில் ஒரு காலை மண்டியிட்டபடி இவர்களையே பார்த்துக்கொண்டு காத்திருந்தனர்.
வந்தவர் அருகில் இருந்த ஒரு இருக்கையில் மெல்ல அமர்ந்துகொண்டார்.
அவனையும் அருகில் அமரச் செய்கை செய்தபடி பணியாளர்களுக்கும் சைகை செய்ய, அவர்கள் ஓடிவராத குறையாய் வந்து மதுப்புகைக் குடுவையை அருகில் வைத்துவிட்டு அதிலிருந்து நீண்ட உறிஞ்சு குழாயை அவர் கையில் பணிவுடன் கொடுத்துவிட்டுப் பின்வாங்கினர். அவர் குழாயை வாயில் வைத்து நெஞ்சு நிறைய உறிஞ்சிக்கொண்டு அவனிடம் நீட்டினார்.
அவன் அதை வாங்காமல் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“நான் கேட்டதற்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்லை, மகனே!”
அவர் உணர்ச்சியற்ற குரலில் கேட்டார்.
”நீங்கள் என்ன கேள்விப்பட்டீர்கள் என்று எனக்கு எப்படித் தெரியும் அரசே?”
அவனும் உணர்ச்சியற்றே பதில் சொன்னான்.
அவர் அவனை ஏறெடுத்து உற்றுப் பார்த்த பார்வையில் ‘உனக்குத் தெரியாதா?’ என்ற கேள்வி இருந்தது. அந்த அரைகுறை வெளிச்சத்திலும் அவனால் அவரது உடலசைவுகளையும் முகத்தோற்றங்களையும் தெளிவாய்க் கவனிக்க முடிந்தது.
அவர் தனக்கு எவ்வளவு நல்ல தந்தையாய் ஆசானாய் இருந்துள்ளார் என்று எண்ணிப் பார்த்து நெகிழ்ந்தான்.
“உண்மைதான்!”
மனத்தில் ஊறிய நெகிழ்வை முகத்தில் காட்டாமல் கடுமையுடன் சொன்னான்.
“வேண்டாம் மகனே! அதைக் கைவிட்டுவிடு, அது நெருப்போடு விளையாடுவதைப் போல… இல்லை, அதைவிட ஆபத்தானது! சொல்வதைக் கேள்…”
அவரது குரலில் கரிசனமும் கவலையும் தெரிந்தன. மதுப்புகைக் குழாயை வாயில் வைத்து மீண்டும் நெஞ்சை நிறைத்துக்கொண்டார்.
“ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன அரசே, இன்று அமாவாசை, உகந்த நாள்!”
அவன் தோளைக் குலுக்கினான்.
“யாரைக் கேட்டு ஏற்பாடு செய்தாய்? யார் உனக்கு அனுமதி வழங்கியது?”
அவர் சற்றே சினத்துடன் கேட்டார்.
”யார் வழங்க வேண்டும்?” அவனும் முகத்தில் சினத்தைக் காட்டி அவரை முறைத்தான்,
“நான் இளவரசன்! எனக்கும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்குண்டு!”
“அதை நான் மறுக்கவில்லை, மகனே! சொல்லப்போனால் இனி நீயே அரசனாய் இரு என்று சொல்லத்தான் நான் வந்தேன்… இனி தலைநகருக்குத் திரும்பிவர எனக்குப் பிடிக்கவில்லை!”
அவர் அயற்சியோடும் மிகுந்த வருத்தத்தோடும் சொன்னார்.
“தோற்றவன் என்ற பெயரோடு தலைநகர் திரும்ப எனக்கு மட்டும் பிடிக்குமா தந்தையே? உயிரைக் காத்துக்கொள்ள புறமுதுகிட்டு ஓடி வந்த படையைத் தலைநகருக்கு மீண்டும் நடத்திச் செல்ல எனக்கும் பிடிக்கவில்லை!”
அவன் அப்படிக் கேட்டது அவரை வெகுவாகப் பாதித்ததை அவரது முகம் அப்பட்டமாய்க் காட்டியது.
கையிலிருந்த குழாயை வீசிவிட்டு எழுந்தவர் ஏதும் பேசாமல் கூடாரத்தைவிட்டுச் சரசரவென வெளியேறினார்.
அவர் சென்றதையே பார்த்துக்கொண்டிருந்தவன் அங்கு ஏற்றப்பட்ட விளக்குகளைக் கையால் தட்டி அணைத்துவிட்டு மீண்டும் இருளில் ஆழ்ந்தான்.
******
”இளவரசே… இளவரசே… அரசரின் நிலை மோசமாக இருக்கிறது, உடனே வாருங்கள்…”
எத்தனை நேரம் அப்படிக் கடந்ததோ, சிலை போல அமர்ந்திருந்த அவன் பரபரப்புடன் ஓடி வந்த அந்த வீரனின் குரலால் கலைக்கப்பட்டான்.
அந்த வீரன் சொன்னதை உள்வாங்கிக் கொள்ள அவனுக்குச் சில நொடிகள் ஆனது. அச்செய்தி உரைத்ததும் தடால் என எழுந்து அரசரின் கூடாரத்தை நோக்கி ஓடினான். வீரர்கள் வழிகாட்டத் தீப்பந்தங்களைப் பிடித்தபடி நின்றனர்.
அவன் அரசரின் கூடாரத்தை அடைந்த போது அரசர் அசைவின்றிக் கிடந்தார்.
பாசறை மருத்துவர்கள் ஒருவரையொருவர் பார்த்து ‘இல்லை’ என்று தலையாட்டிக்கொண்டும் உதட்டைப் பிதுக்கிக்கொண்டும் அருகில் அமர்ந்திருந்தனர்.
அவன் வந்ததைப் பார்த்ததும் அனைவரும் ஓசையின்றிக் கூடாரத்தைவிட்டு வெளியேறினர்.
அவன் ஏதும் செய்யத் தோன்றாமல் தன் தந்தையின் உடலை வெறித்துப் பார்த்தபடி கூடாரத்தின் வாயிலிலேயே சிலைபோல நின்றிருந்தான்.
சேனாதிபதி மெள்ள உள்ளே வந்து அரசரின் உடலுக்கருகில் இருந்த அவரது உடைவாளை எடுத்து வந்து அவன் முன் மண்டியிட்டபடி நீட்டினார்.
அவர் சில நொடிகள் அவரையே உற்றுப் பார்த்திருந்துவிட்டு அவ்வாளைக் கையில் வாங்கினான்.
“கட்டளையிடுங்கள் அரசே!”
சேனாதிபதியின் குரல் உணர்ச்சிக் கொந்தளிப்பாய் வந்தது.
“யாஸ்னா!”
சொல்லிவிட்டுச் சற்றும் தாமதிக்காமல் அவன் திரும்பி நடந்தான்.
தீர்மானமான முடிவுடன் விரைந்து நடந்த அவனை அனைவரும் ஓட்டமும் நடையுமாய்ப் பின் தொடர்ந்தனர்.
அந்தப் பாசறையிலிருந்து சுமார் அரைக்காத தொலைவு நடந்து வந்திருப்பர். சற்றுத் தொலைவிலேயே அந்த வெளிச்சத்திரளை அவர்கள் அனைவரும் கவனித்தனர்.
முதலில் காட்டுத்தீ என்று எண்ணி அஞ்சி நின்றனர். ஆனால் அவன் சற்றும் தயங்காமல் தொடர்ந்து நடந்தான். அதைப் பார்த்து சேனாதிபதியும் தளபதிகளும் மற்ற வீரர்களும் தயக்கத்துடன் அவனைத் தொடர்ந்தனர்.
அருகில் செல்லச் செல்ல அது காட்டுத்தீ அல்ல, திடல் போன்ற பெரிய குழியில் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டிப்போட்டுக் கட்டுப்பாடுடன் வளர்க்கப்படும் ‘யாஸ்னா’ தீ என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டனர். அதுவரை இளவரசனின் திட்டத்தை அரசல் புரசலாகக் கேள்விப்பட்டிருந்தவர்களுக்கு அந்தத் தீயின் காட்சி அது உண்மைதான் என்று உறுதிபடுத்தியது. தீயின் வெப்பத்தை சற்றுத் தொலைவிலேயே உணர்ந்தபோது அவர்களது உடல்கள் சிலிர்த்தன.
அவன் சற்றும் வேகம் குறையாமல் விறுவிறுவென நடந்து அந்தத் தீக்கு அருகில் சென்றான்.
அங்கு இருந்து அந்தத் தீயை வளர்த்துக்கொண்டிருந்த யாஸ்ன ஹோதாக்கள் அவனுக்கு வந்தனம் கூறி வரவேற்றனர்.
அவன் கேட்கும் முன்பே எல்லாம் தயார் என்று அவர்கள் பணிவோடு சொன்னார்கள்.
அவன் தனது தோற்கவசத்தைக் கழட்டி வீசினான். தன் உடலில் இருந்த அரசச்சின்னங்களைக் கழட்டி எறிந்தான். தன் தந்தையின் உடைவாளை மட்டும் உறையிலிருந்து உருவிக் கையில் பிடித்தபடி நின்றான்.
அருகில் இருந்த மூத்த ஹோதா ஒருவர் செய்கை செய்ய எங்கிருந்தோ இரண்டு இளம் ஹோதாக்கள் ஒரு பெரிய பானையில் நீரைச் சுமந்து வந்து மெள்ள அவன் தலையில் ஊற்றினர்.
சுற்றி நின்ற ஹோதாக்கள் அனைவரும் ஒரே குரலில் மந்திர உச்சாடனம் செய்யத் தொடங்கினர். நரியின் ஊளைக்கும் தேரைகளின் முணுமுணுப்புக்கும் போட்டியாய் அவர்களின் மந்திர உச்சாடனம் அந்த நடுக்காட்டில் ஒலித்தது.
நீரை ஊற்றிவிட்டு அந்த இளம் ஹோதாக்கள் விலகிக் கொண்டதும் அந்த மூத்த ஹோதா செய்கை செய்ய, அவன் தன் கையில் இருந்த வாளால் தனது நெஞ்சில் ஆழமாகக் கீறிக்கொண்டான். ஊற்றிலிருந்து பீய்ச்சும் நீரைப் போல அவனது குருதி பாய்ந்தது. வாளைக் கீழே போட்டுவிட்டுத் தன் குருதியைக் கைகளில் தேக்கிப்பிடித்துக்கொண்டவன், தகதகவென எரிந்துகொண்டிருந்த தீக்கு அருகே சென்று உரக்க ஒரு மந்திரத்தைச் சொல்லிவிட்டுத் தன் குருதியை அந்தத் தீயில் விட்டான்.
நெஞ்சிலிருந்து வழியும் குருதியையோ, பரந்த அந்தத் தீயின் வெப்பத்தையோ, காட்டையே உலுக்கிக்கொண்டிருந்த ஹோதாக்களின் மந்திர உச்சாடனத்தையோ எதையுமே அவன் கவனித்ததாகத் தெரியவில்லை! அந்தப் பெரும் தீயைவிட அதிகமாய் அவனது முகம் சிவந்து ஒளிர்வது போலத் தோன்றியது.
“சகப் பேரரசன் ஹுமவர்கனின் மகனான திக்ரசூதன் உன் முன் நிற்கிறேன், எனது பலியை ஏற்று என் வேண்டுதலை நிறைவேற்று!”
என்று மந்திரமொழியிலேயே உரக்கச் சொன்னவன் சொன்ன வேகத்திலேயே அந்தத் தீக்குள் நடந்தான்!
சற்றும் தாமதியாமல் சேனாதிபதியும் அவனைத் தொடர்ந்து தன்னைத் தானே வெட்டிக்கொண்டு, தன் குருதியை அந்தத் தீக்குள் வார்த்தவாரு அதற்குள் நுழைந்தார்.
எந்தப் பேச்சும் எந்தச் சலசலப்பும் இன்றி அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் அவ்வாறே தாம் வந்த அணிவகுப்புகூட மாறாமல் தீக்குள் பிரவேசித்தனர்.
இறுதியாக ஹோதாக்களும் மந்திர உச்சாடனத்தைத் தொடர்ந்தபடியே அத்தீக்குள் பிரவேசித்தனர்.
அங்கிருந்த எல்லோரும் அந்தப் பெரிய யாஸ்னா தீக்குள் சென்று மறைய ஒருவன் மட்டும் சற்றுத் தொலைவில் நின்று நடந்தது அனைத்தையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
கடைசி ஆளும் தீக்குள் சென்றபின் அந்தத் தீயை நெருங்கியவன் கீழே கிடந்த அரசரின் வாளைக் கையில் எடுத்தான்.
ஒரு கணம் கண்ணை மூடித் தியானித்தவன், கண்களைத் திறந்து தீயை உற்றுப் பார்த்தான்.
“ஜெய் மாகாளி!” என்றபடி தன் கையை வாளால் கீறிக்கொண்டு தானும் அந்தத் தீக்குள் புகுந்தான் வேதாளப் பட்டன்!
* * * * *