அத்தியாயம் – 13
அங்கு ஒரு அசாதாரண நிசப்தம் குடிகொண்டிருந்தது. ஆனால், இயற்கை என்ற பெயரை உடைய காரிகையின் அணிகலன்களான மரங்கள் தங்கள் போக்கில் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன. அவளின் மகவுகளான விலங்குகள் மற்றும் புள்ளினங்கள் அவளோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.
பொசய்டன், நந்தினி தான், இந்தப் பிரச்சினையின் தீர்வு என்று கூறியவுடன், அனைவர் மனதிலும் பெரும் பாரம் ஏறியது போல் இருந்தது.
அவர் கூறியதை கிரகிக்கவே, சில நொடிகள் தேவைப்பட்டன அவர்களுக்கு.
பொசய்டன், “இந்த பிரபஞ்சத்தோட தலைமை கிரகம்தான் கயா கிரகம். அதுல இருக்குற சிற்றரசர்கள் தலைமையில்தான் மத்த கிரகங்கள் எல்லாம் செயல்படுது உங்க பூமி கிரகம் உட்பட. இந்தச் சிற்றரசர்களும் கயா கிரகத்தின் பேரரசரின் ஆளுமையில்தான் இருப்பார்கள். உன்னுடைய தந்தை சீரஸும் அப்படிப்பட்ட ஒரு பேரரசர்தான். சில காரணங்களால், இப்பொழுது ஒரு பெரிய பிரச்சினையே எழுந்துள்ளது. அதற்கு நீ தான் தீர்வு, நந்தினி” என்றார்.
ஆதித்யன் தான், சற்று தெளிந்து, “இதில் நந்தினி எப்படி தீர்வு ஆவா ? என்னதான் அவள் உங்க கிரகத்துல பிறந்து இருந்தாலும், அவள் இப்போ ஒரு பூமி கிரக வாசியா தானே இருக்குறா ? அப்படி இருக்குறப்ப அவள் எப்படி உங்களுக்கு உதவ முடியும் ?” என்று கேட்டான்.
“நீ கூறியது எல்லாம் சரிதான், ஆதித்யன். ஆனால், இதில் மற்றொரு மறுக்க முடியாத உண்மை என்னவென்றால், நந்தினிக்கு அவளது கயா கிரக ஞாபகங்களை செலினா கொடுத்துக் கொண்டிருக்கின்றார் என்பது” என்றார் பொசய்டன்.
“எனக்கு ஒரு விஷயத்த மட்டும் தெளிவா சொல்லுங்க, பொசய்டன். நீங்க சொன்ன மாதிரியே, இவ்ளோ பிரச்சனை இருக்கும் போது, என்னோட அப்பாவும் அம்மாவும் என்ன பண்றாங்க ? அவங்க ஏன் என்னை வேறு ஒரு கிரகத்திற்கு அனுப்பணும் ? இப்போ கூட நீங்க தானே வந்திருக்கீங்க ?” என்று மனவருத்தத்துடன் கேட்டாள் நந்தினி.
பொசய்டன், கரகரத்த குரலில், “நீ பிறக்கும் முன்பே உன்னை காப்பதற்காக அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து விட்டார்கள் நந்தினி” என்றார்.
என்னென்னமோ யோசித்த நந்தினி, இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை. அவள் மனதில் தன்னை அன்போடு பார்த்தவர்களின் முகங்கள் வந்து சென்றது. ஆரியன் அவள் கையைத் தொடவே, தன்னைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாள் நந்தினி.
பொசய்டன், “இப்பொழுது உங்களிடம் அனைத்து விஷயங்களையும் சொல்வதற்கு எனக்கு நேரமில்லை. நாம் இன்னும் இந்தக் கிரகத்தில் சரிப்படுத்த வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன” என்றார்.
“ஒரே ஒரு விஷயத்த மட்டும் இப்போ சொல்லுங்க, பொசய்டன். நந்தினி எப்படி என் அத்தை துர்கா மாதிரியே இருக்குறா ? எப்படி இருந்தாலும் அவள் உங்களோட கிரகத்தினருக்கு பிறந்தவள் தானே ?” என்று கேட்டான் ஆதித்யன்.
“உண்மை தான். ஆனால், கயா கிரகத்திலிருந்து சீரஸ் தன் குழந்தையை அனுப்பிய பொழுது, எந்தக் கிரகத்திற்கு அனுப்பலாம் என்று யோசனை செய்யும் அவகாசத்தை ப்ரொமேத்தியஸ் அவருக்கு அளிக்கவில்லை. அதனால், சீரஸ் அந்தக் குழந்தை எந்தக் கிரகத்திற்குச் சென்று சேருகிறதோ அந்தக் கிரகத்தில் உள்ள உயிரினத்தின் அமைப்பைக் கொண்டு மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு செய்திருக்கிறார். அப்பொழுதுதானே, அந்தக் குழந்தை வாழ முடியும்”
“இந்தக் கிரகத்தில் அந்தக் கருவை, துர்கா தொட்டு இருக்கலாம். அதனால் நந்தினி துர்காவைப் போல இருக்கலாம். நந்தினியை ஒரு மனித உயிரினம் தொட்டது நம் அதிர்ஷ்டம் தான்” என்றார் பொசய்டன்.
பிறகு நந்தினி, “நீங்கள் இன்னும் எங்களை எப்படி காப்பாற்றினீர்கள் என்று கூறவில்லையே ? அதாவது நாங்க அந்த இடத்துல தான் இருப்போம்னு உங்களுக்கு எப்படி தெரியும் ?” என்று கேட்டாள்.
“ப்ரொமேத்தியஸை ஏமாற்ற நான் தீட்டிய திட்டத்தில் ஒரு பகுதி தான், இந்த சூரியக் குடும்பத்திற்கு வருவது. பல முறை உன்னை தேடி அந்த முயற்சிகளில் தோல்வியுற்றேன், க்ரிசான்டா. ஆனால், நேற்று தான் உன்னுடைய நினைவுகள் கயா கிரகத்துச் சக்திகளைக் கொண்டு செயல்பட்டது..அது எனக்கு உடனடியாக தெரிந்துவிட்டது” என்று அவர் கூறியவுடன் மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“உன்னைக் கொல்ல ப்ரொமேத்தியஸ் அனுப்பி இருந்த விண்வெளி வாகனத்தை அழித்துவிட்டு, நான் இந்தக் கிரகத்திற்கு வந்துவிட்டேன். ஏதோ ஒரு பாலைவனத்தில் கிடந்தேன். அங்கிருந்து இங்கு வருவதற்குச் சிறிது தாமதமாகி விட்டது” என்று கூறியவர்,
“இங்கு வந்து பார்த்தால் உன்னை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர்” என்று கோபமாக முடித்தார் பொசய்டன்.
அதுவரை, ஏதோ யோசனையில் மூழ்கி இருந்த ஆரியன், “ஐயையோ! இப்போதான் நாம பெரிய சிக்கல்ல மாட்டி இருக்கோம். அந்த ரிசரச் சென்டர்ல இருந்த சயின்டிஸ்ட்ஸ்க்கு நந்தினிய பத்தி எல்லா விஷயமும் தெரியுமே. அவள தேடி இந்நேரம் அவங்க நம்ப வீட்டுக்கு போயிருக்க மாட்டாங்களா ?” என்று கேட்டான்.
அப்போது தான் ஆதித்யனுக்கும் நந்தினிக்கும் அந்த நினைவே வந்தது.
ஆனால் பொசய்டனோ, சிறிதும் உணர்ச்சிகளைக் காட்டாமல், “நீங்கள் அந்த விஷயத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என்றார்.
அனைவரும் அவரைப் புரியாமல் பார்க்க, “ஒன்றும் இல்லை, என்னுடைய சக்திகள் மூலம் அங்கு இருந்த அனைத்து மின்சார சாதனங்களையும் தூள் தூளாக்கி விட்டேன். பிறகு அங்கிருந்த அனைவரது நினைவுகளையும் ஊடுருவி, கடந்த ஒரு வாரம் அவர்களது மூளையில் சேமித்து வைத்திருந்த அனைத்து நினைவுகளையும் மாற்றி அமைத்து விட்டேன். இனி நீங்கள் மூவருமே அவர்கள் முன் சென்று நின்றால் கூட, உங்கள் இருவரையும் அடையாளம் தெரியாது” என்று அவர் கூறிய உடன் தான் அனைவருக்கும் மூச்சே வந்தது. உடன் வியப்பாகவும் இருந்தது.
“இப்பொழுது நீ தான் அனைத்தையும் முடிவு செய்ய வேண்டும், நந்தினி. உன்னுடைய பெற்றோரை உறவென்றும் மதிக்காமல், அவர்களைக் கொன்று, செலினாவையும் மாயமாக செய்து, கயா கிரகத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறான் ப்ரொமேத்தியஸ். உன்னுடைய தந்தைக்கு உதவியாக இருந்த ஏழு சிற்றரசர்களைச் சிறையில் அடைத்துள்ளான். சென்ற முறை ப்ரொமேத்தியஸ், தனது முயற்சியில் தோல்வி அடைந்து இருந்தாலும், இந்த முறை நம்மால் அவனது வெற்றியை தடுக்க வாய்ப்பு குறைவுதான். அவன் தான் இந்த அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் அறிவாளி என்று கூறினால், அது மிகை ஆகாது. அப்படியென்றால் அவனது திட்டங்கள் எப்படி இருக்கும் என்று நீயே பார்த்துக்கொள்”
“இப்போதைக்கு நீ உன் குடும்பத்தை பிரிய நேரிடலாம், நந்தினி. ஆனால், உன்னுடைய உண்மையான வீடு கயா கிரகத்தில் தான் உள்ளது. அங்கு இருக்கும் மக்களின் எதிர்காலமே நீ தான். உண்மை கசந்தாலும் இந்தக் கிரகத்தில் நீ ஓர் அகதி தான். உன்னை நம்பி அங்கு ஒரு பெரிய ராஜ்ஜியமே இருக்கிறது. பாசத்துக்காக உன் கடமையைச் செய்ய தவறாதே, நந்தினி” என்றார் பொசய்டன்.
அதுவரை பொறுமையாக இருந்த ஆதித்யன், “ இதற்கு எங்களால் ஒத்துக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தால் அவளது உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம்” என்றான்.
“ நான் உன்னிடம் அனுமதி கேட்கவில்லை, ஆதித்யா. அதுமட்டுமில்லாமல் நீ எனது இளவரசியின் தோழன் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் தான், நீ இன்னும் உயிரோடு இருக்கின்றாய். நான் எனது இளவரசியின் உத்தரவுக்கு மட்டும் தான் கட்டுப்படுவேன்” என்றார் பொசய்டன்.
அதுவரை அமைதியாக இருந்த நந்தினி, ”நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன், பொசய்டன். என் உயிரைக் கொடுத்தாவது, அந்த ப்ரொமேத்தியஸை அழித்து, கயா கிரக மக்களுக்கு அவர்களது உரிமையைத் திருப்பி அளிப்பேன்” என்று குரல் தழுதழுக்கக் கூறினாள்.
என்னதான் இருந்தாலும், அவளுக்கும் தன் குடும்பத்தை நினைத்து கவலையாக இருந்தது.
“ இதை நீ செய்ய வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை, நந்தினி. இப்பொழுது தான் நம் மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து உள்ளது” என்றான் ஆதித்யன். அவள் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாளோ என்ற பயம் அவனை அப்படிப் பேச வைத்தது.
“ முட்டாள் ! இந்த கன்வர்ஜன்ஸின் பொழுது மட்டும் நாம் தோற்றுவிட்டால், கயா கிரகத்தைத் தவிர மற்ற அனைத்து கிரகங்களில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்துவிடும். இதுதான் ப்ரொமேத்தியஸின் திட்டம்” என்று இதுவரை தான் கூறாத உண்மையைக் கூறினார் பொசய்டன்.
மூவர் முகத்திலும் ஒரு இனம் புரியாத பயம் தெரிந்தது.” நாம் வீணடிக்கும் ஒவ்வொரு நொடியும் பெரிய பிரச்சனை தான்” என்றார் பொசய்டன்.
“ சரி அப்படி என்றால் நந்தினியை எங்களால் தனியாக அனுப்ப முடியாது. நாங்களும் உடன் வருவோம்” என்றான் ஆதித்யன்.
அவன் கூறியதைக் கேட்ட நந்தினி, “ஆதி, உங்களுக்கு ஏதாவது பைத்தியம் பிடிச்சிருக்கா ? ஏற்கனவே என் அப்பாவும் அம்மாவும் எவ்வளவு கவலைப் படுவாங்கன்னு நான் ஃபீல் பண்றேன். நீங்க என்னனா இப்ப மொத்த குடும்பத்தையும் குழியில் தள்ளி விடுகிறேன் என்று சொல்லுறீங்க” என்றாள்.
“நீ என்ன கூறினாலும், என்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள முடியாது, நந்து” என்று ஆதித்யனும், “ அவன் கூறியது தான் சரி, நந்துமா. இதென்ன பக்கத்து வீடா உன்னை நாங்க தனியா அனுப்பிட்டு கவலைப்படாம இருக்கிறதுக்கு. அதனால் நானும் உன்னுடன் வருவேன்” என்று ஆரியனும் கூறினர்.
நந்தினிக்கு தான் தலைமுடியை பிய்த்துக் கொள்ளலாம் போன்று இருந்தது. “ நீங்க என் மேல வச்சி இருக்க பாசத்துல இப்படி சொல்றீங்கன்னு எனக்கு புரியுது. ஆனால், இது சரி வராது. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அது என்னுடனே முடியட்டும்” என்றாள் நந்தினி.
அவர்களது உரையாடலில் கலந்து கொள்ளும் விதமாக, பொசய்டன், “ இல்லை, நந்தினி. இவர்கள் நம்முடன் வந்து தான் ஆக வேண்டும்” என்றார்.
“ நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை, பொசய்டன். அவர்கள் எதற்கு நம்முடன் வரவேண்டும் ? “ என்று கேட்டாள் நந்தினி.
பொசய்டன் இப்பொழுது தன் பார்வையை, ஆரியனிடமும் ஆதித்யனிடமும் பதித்து, “ இவர்கள் இன்னும் சிறிது நாட்களில் இறந்து விடுவார்கள் அதனால் தான் “ என்றார். அதைக் கேட்ட மற்ற மூவரின் முகமும் பேய் அறைந்தது போல் ஆனது.
*****
ஆதித்யன் மெதுவாக அந்த காட்டுப் பகுதியில், முன்னே நடக்க, மற்ற மூவரும் அவனைப் பின் தொடர்ந்து வந்தனர். ஆதித்யன் அந்த ஆராய்ச்சியகத்தில் பணியாற்றும் சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒரு வழியைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தான். வழக்கம் போல அவனைப் பரிசோதித்துவிட்டு, கணினி குரல் “Welcome to research lab” என்று வரவேற்றது. உள்ளே சென்று அங்கிருந்த சூழ்நிலையை ஆராய்ந்தான். அந்த மையம் தலைமை ஆராய்ச்சியகத்துக்கு சற்று தூரத்தில் இருந்ததால், பொசய்டனின் சக்திகளால் பெரிய இழப்புகள் நேரவில்லை. அதைப் பார்த்தவன் அடுத்துத் தான் செல்லவேண்டிய இடத்தை நோக்கி சென்றான்.
இங்கு நந்தினியின் மனதிலோ, அன்றைய நினைவுகள் மறுபடியும் ஒருமுறை வந்து சென்றன….
பொசய்டன் கூறியதைக் கேட்ட ஆரியன், “ யோ என்னயா விளையாடுறீங்க ? ஒரு கைக்குழந்தை எவ்வளவு அடித்தாலும் தாங்கும்னா, அதை அடிச்சுகிட்டே இருப்பீங்களா ? கனவுல கூட ஒரு நியாயம் வேணாமா ? “ என்று புலம்ப,
பொசய்டன், “ நேற்று எனக்கு ஒரு முறை தான் சக்தி அலைகள் வந்தது. ஆனால், இன்று காலையில் எனக்கு மூன்று நபர்களிடம் இருந்து கயா கிரகத்து சக்தி அலைகள் வந்தன” என்றார்.
மற்ற மூவரும், “ இது எப்படி சாத்தியம் ? “ என்று குழம்ப, “ நீங்கள் இருவரும் எப்படி இன்று காலை தப்பித்து, நந்தினியிடம் வந்து சேர்ந்தீர்கள் ? “ என்று கேட்டார்.
அப்பொழுது தான் இவ்வளவு நேரம் நடந்த பிரச்சனையால் மறைந்து இருந்த சந்தேகம் மறுபடியும் எழ, “ஆமாம், நானும் ஆரியனும் மோதும்போது ஏன் ஒரு வித அதிர்வு ஏற்படுகிறது ? “ என்று அவரையே கேட்டான் ஆதித்யன்.
“ நேற்று நந்தினியிடம் ஏற்பட்ட மாற்றம், கயா கிரகத்துடன் தொடர்பு உடையது என்று கூறினேன் அல்லவா ? எனது யூகத்தின் படி, அப்பொழுது அவளைச் சுற்றி ஒரு பெரிய சக்தி வளையம் தோன்றி, பின்னர் வளர்ந்து வெடித்து இருக்கும். அங்குச் சுற்றி இருந்திருக்கும் உயிரற்ற பொருட்கள் அனைத்தும் உடைந்து இருக்கும். ஆனால், கயா கிரக வாசிகளின் கீழ்நிலை தான் மனிதர்கள். அதனால், அந்தச் சக்தியால் நீங்கள் பாதிக்கப்படாமல், அந்தச் சக்தியை உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் தன்னகபடுத்திக் கொண்டு இருக்கும். ஆனால், அந்தச் சக்தியை இந்தக் கிரகத்தில் நீங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தால், உங்களால் ஏற்படப் போகும் விபத்து பல அணு குண்டுகளுக்கு இணையாக இருக்கும். ஆதலால், ஒன்று உங்கள் உடம்பில் இருக்கும் சக்திகளை நீங்கள் வெளிக்கொணர வேண்டும். ஆனால், அது முடியாத காரியம். நீங்கள் அதைச் சரியாகப் பயன்படுத்துவதே உங்களுக்கு இருக்கும் ஒரே வழி “ என்றார் பொசய்டன்.
அதைக்கேட்ட ஆரியன், “ ஏய் ஜாலி ! நானும் இனிமே சூப்பர் ஹீரோவா ஆகிடுவேன், எனக்கு சக்திகள் கிடைச்சுடுச்சு, ஹே !!! “ என்று கத்த, அவன் சுற்றியிருந்தவர்கள் பார்த்த பார்வையில் தான் அதில் இருந்த உள்குத்து புரிய, “ அய்யய்யோ ! அடப்பாவிகளா, எங்க வீட்ல ஒரே ஒரு கொத்தமல்லி கொழுந்துடா நான். என்னைய இப்படி வச்சி செய்றீங்களேடா “ என்றான்.
அவன் புலம்பலில் அங்கு இருந்த ஒரு கலவர நிலைமை சற்று மட்டுப்பட்டது. அதில் சிரித்துவிட்ட நந்தினியிடம், “ இப்போ உனக்கு மறுக்கிறதுக்கு, வேறு எந்த காரணமும் இருக்காது, நந்து” என்று ஆதித்யன் கூறவும்,
“ வேலில போற சனியன, பனியன்ல நீயே எடுத்து போட்டுக்கிட்டு வசமா மாட்டிக்கிட்ட, ஆதி. இனிமே உன் தலையெழுத்தை யாராலயும் மாத்த முடியாது “ என்றான் ஆரியன்.
உடனே நந்தினியும் ஆதியும் அவனை ஒருசேர முறைக்க, “என்ன பாஸ் சும்மா பேச்சுக்கு சொன்னதுக்கு” என்று அங்கலாய்க்க ஆரம்பிக்க, பொசய்டன், “ இப்பொழுது நாம் நமது அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாமா ? “ என்று கேட்டவுடன்,
ஆரியன் மனதிற்குள், “ இவரு ஒருத்தரு, நாம ஏதாச்சும் அறிவா பேச ஆரம்பிச்சா பொறுக்காதே. ஒருவேளை அவரோட பதவியை புடிச்சுக்குவோம்னு பயந்துட்டாரோ. எதுக்கும் அவர்ட்ட ஒருமுறை க்ளாரிஃ பை பண்ணிடுவோம் “ என்று நினைத்துக் கொண்டான்.
அதற்குள் பொசய்டன், “ நமக்கு முதலில் தேவையானது ஒரு விமானம் தான். என்னதான் என்னிடம் உள்ள சக்தியை கொண்டு நான் உருவாக்க முடிந்தாலும், இப்போது அதற்கு நேரம் இல்லை. ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒரு விமானம் இருந்தால், அதில் சில மாற்றங்களை ஏற்படுத்தி விட்டு, நாம் அதில் பயணம் செய்யலாம்” என்றார்.
ஆதித்யன், “அதற்கு ஒரு சரியான யோசனை என்னிடம் உள்ளது” என்றவுடன், அனைவரும் அவனைப் பார்க்க நான், “முன்னரே கூறினேனே. எங்கள் அமைப்பு வேற்று கிரகத்தினரால் ஆபத்து ஏற்படும் என்று தெரிந்து, பல ஆயுதங்களையும் விமானங்களையும் உருவாக்கினார்கள். ஆனால், அது நமக்கு இப்போது பயன்படப் போகிறது “ என்றான்.
பொசய்டன், “ அப்படி என்றால், நம்முடைய ஒரு பிரச்சனை தீர்ந்துவிட்டது. மீதம் ஒரே ஒரு பிரச்சனை தான்” என்றார்.
“ அது என்ன, பொசய்டன் ? “ என்று நந்தினி கேட்க, “ உங்கள் குடும்பத்தார் தான். அவர்களிடம் சென்று, இவை அனைத்தையும் கூறி அவர்களை நம்ப வைத்து, ஒத்துக்கொள்ளச் செய்து, என எல்லாம் நடந்து முடிப்பதற்குள் நம் கையில் காலம் இருக்காது” என்றார் பொசய்டன்.
அவர் கூறியதில் இருந்த உண்மை புரிந்தாலும், “அதெப்படி அவர்களிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் சென்றால், அவர்களது மனம் வேதனை படாதா ? ஆனால் என் அம்மாவிடம் இதைப் பற்றிக் கூறினால், அவர் இந்த பயணத்திற்குக் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார்” என்று சோகமாகக் கூறினாள் நந்தினி.
“ எனக்கு உன் நிலைமை புரிகின்றது, க்ரிசான்டா. ஆனால், நம்மிடம் இருப்பது ஒரே வழிதான். அவர்களது நினைவை மாற்றி அமைத்து விடுகிறேன் “ என்றார் பொசய்டன்.
மேலும், “ உன் மனதில் உள்ள சந்தேகத்தை, என்னால் உணர முடிகிறது, க்ரிசான்டா. உன்னிடம் நான் எதுவுமே கூறாமல், உன்னைக் கூட்டிச் செல்வது எனக்கும் பிடிக்கவில்லை தான். என் மீதுள்ள நன்றிக் கடனுக்காகவும், உன் நினைவுகள் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில் தான் என்னை நம்புகிறாய். உன் நம்பிக்கையை நான் ஏமாற்ற மாட்டேன், க்ரிசான்டா “ என்றார் பொசய்டன். அவர் கண்களில் கண்ணீர் வந்து விடுமோ, என்ற அளவிற்கு அவர் குரல் ஒலித்தது.
“ நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதான், பொசய்டன். ஆனால், உங்கள் மீது நம்பிக்கை ஏற்பட ஒரு பெரிய காரணம், என் நினைவில் வந்த ஒரு துகள் தான். என்னை ஒரு கோரமான மிருகம் தாக்க வந்தபோது, ஒரு பாதுகாப்புக் கவசம் தோன்றி, என்னைக் காத்தது. அது மறையும் போது கூறிய வார்த்தைகள், இன்னும் என் காதில் ஒலிக்கின்றன. ‘க்ரிசான்டா’ என்பதுதான் அது. நான் பிறப்பதற்கு முன்னரே என்னைப் பெயரிட்டு அழைத்தவர், தாங்கள் தான் என்று எனக்குப் புரிந்து விட்டது” என்றாள்.
அவள் கூறியதைக் கேட்ட பொசய்டன், ஆனந்தத்தில் திக்கு முக்காடிப் போனார். “செலினா எனக்குப் பேருதவி புரிந்துள்ளார், க்ரிசான்டா” என்றார்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த, ஆரியன் மனதில், “ எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை… கார்த்திகை… “ என்ற பாடல் வலம் வர, சரியாக அதே நேரம், பொசய்டன் அவனைப் பார்த்து முறைக்க, “ இவரு ஒருத்தரு நம்ம மனசுல நினைக்கிறதை எல்லாம் சந்திரமுகி படத்துல வர்ற ரஜினி மாறி கண்டுபிடிச்சு, நம்பல கைப்புள்ள ரேஞ்சுக்கு வேலை செய்ய வைக்கிறார்கள் “ என்று நினைத்தான்.
இதற்கு இடையில் அங்கு நந்தினி ஆதியிடம், “ சாரி ஆதி, என்னால தான் உங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது” என்றாள்.
ஆதித்யன், “ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, நந்து. இப்படி ஒரு சாகசத்தில் பங்கு கொள்ள யாருக்குத் தான் ஆசை இருக்காது” என்று கேட்க, அவன் அறிவு, “ பாஸ் ! இது சாகசம் இல்ல, உயிருக்கு உலை வைக்கிற சம்பவம் ! “ என்று கூற, அதை அவன் மனம் அடித்து ஓட விட்டது. அடுத்து அவர்கள் எண்ணியபடியே ஆராய்ச்சியகத்துக்குச் சென்றனர்.
*****
இப்பொழுது நந்தினியின் நினைவு, மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்தது. அதற்குள் ஆதித்யன், தனது அடையாள அட்டையைப் பயன்படுத்தி, அங்கு இருந்த ஆயுத உற்பத்தி செய்யும் இடத்துக்குச் சென்று, அங்கு இருந்தவற்றை பொசய்டனுக்குக் காண்பித்தான். அங்கு இருந்த விமானங்களை ஒவ்வொன்றாகப் பார்வையிட்டு விட்டு, அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். அதற்கு முன்னர் அமர்ந்து, தன்னுடைய சக்திகளை ஒன்று திரட்டி அந்த வாகனத்தின் மீது செலுத்தினார். கொஞ்சம் கொஞ்சமாக அந்த வாகனம் தனது அமைப்பை மாற்றி கொண்டிருந்தது. இதை எல்லாம் சற்று தள்ளி நின்று மற்ற மூவரும் பார்க்கத் தொடங்கினர். சில நிமிடங்கள் அப்படியே கழிய, அந்த வாகனம் முழுவதும் தயாராகியது. முன்பு இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் அடையாளமே தெரியாமல் மாறியது.
அதனைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தினி, பொசய்டனிடம் சென்று, “ மிகவும் அற்புதமாக இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு சிறிய சந்தேகம் தான். நம்மால் எப்படி Time Dilation (நேர விரிவாக்கம் )-இல் இருந்து தப்பிக்க முடியும் ? “ என்று கேட்டாள்.
அதற்கு அவர் பதில் கூறும் முன், ஆரியன் ஆதித்யனிடம், “ Time Dilation (நேர விரிவாக்கம் ) என்றால் என்னடா , ஆதி ? என்று கேட்டான்.
“ அதை உனக்குப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், அதற்கு முன்னர் நீ ஒரு கேள்விக்குப் பதில் சொல். பூமியில் இரண்டு இரட்டை சகோதரர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள். அதில் ஒருவர் மட்டும் ஒரு விண்வெளி பயணம் மேற்கொள்கிறார். அவர் செல்லும் விமானம் ஒளி வேகத்துடன் ஒப்புமைப் படுத்தக்கூடிய அளவுக்கு இருந்தது. அவர் மறுபடியும் பூமி கிரகத்துக்கு வரும்போது இருவருக்கும் ஒரே வயது இருக்குமா ? அல்லது வயது வேறுபடுமா ? வேறுபாட்டால் யாருக்கு அதிக வயது இருக்கும் ? “ என்று கேட்டான்.
ஆதித்யன் கூறியதை முழுமையாகக் கேட்ட ஆரியன், “நீதான் இரட்டையர்களென்று சொன்னியேடா. பிறகு எப்படி வயது வேறுபாடு இருக்கும் ? ஒரே வயது தான் இருக்கும்” என்றான்.
“ அது தான் இல்லை, நீ ஒளி வேகத்துக்கு ஒப்புமைப் படுத்துமாறு வேகத்துடன் சென்றால், உன்னைப் பொருத்தவரை காலம் பொறுமையாகச் செல்லும். அதாவது சாதாரணமாகப் பூமியில் இருப்பவர்களை விட உன் வயது குறைந்து இருக்கும். இப்பொழுது நான் கேட்ட கேள்வியில் எடுத்துக்கொண்டால், அதில் விண்வெளி பயணம் செய்தவருடைய வயது பூமியில் இருந்தவருடைய வயதை விடக் குறைவாக இருக்கும். இதைத் தான் ஆங்கிலத்தில் Twin Paradox என்பார்கள். இந்த இடத்தில் காலம் மெதுவாக நகர்வதை Time Dilation என்கிறோம். இதனால் நமக்கு ஏதாவது ஆபத்து வருமா என்று தான் நந்தினி கேட்கின்றாள் ? “ என்று விம் பார் போட்டு விளக்கா குறையாகக் கூறினான்.
“ நமக்கு தெரியாதது இவ்ளோ இருக்கா ?” என்று எண்ணியவன், “எனக்கு இது தெரியும் ஆதி, சும்மா உனக்கு தெரியுதான்னு ஒரு சின்ன டெஸ்ட் வச்சு பார்த்தேன். பரவாயில்லை, ஏதோ நாலு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்க” என்றான்.
ஆதி அவனை முறைக்க, அங்கு பொசய்டன் நந்தினியிடம், “ இப்பொழுது நீ இன்னும் மனித உயிரின வடிவில் தான் இருக்கின்றாய், நந்தினி. நீ முழுதாக கயா கிரக வாசியாக மாறினால், உனக்கே அது புரிந்துவிடும். இப்போதைக்குக் கூற வேண்டும் என்றால் உங்கள் மூவர் உடம்பிலும் கயா கிரகத்தின் சக்தி ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் எதுவும் ஆகாது” என்றார்.
பின்னர் தங்களது இரண்டாவது பிரச்சினையின் தீர்வு நோக்கிச் செல்ல தொடங்கினர். பொசய்டன் அந்த விமானத்தைச் சோதனை செய்வதாகவும், அதற்குள் மீதி மூவரும் வீட்டிற்குச் சென்று சேர்வதாகவும் முடிவு எடுத்தனர்.
அதன்படி அவர்கள் அந்த காட்டை விட்டு வெளியேறி, ஒரு மகிழ்வுந்தில் ஏறி, தங்கள் வீடு வந்து சேர்ந்தனர்.
நந்தினி வீட்டிற்குள் நுழைந்த உடனே, “ ஏன்டாமா இரண்டு மணி நேரம்னு சொல்லிட்டு, எங்கம்மா இவ்வளவு நேரம் இருந்த ? நான் ரொம்ப பயந்து போயிட்டேன்மா. இனிமேல் இது மாதிரி ஒரு போன் கால் கூட பண்ணாம இருக்காத நந்து “ என்று கூறினார் துர்கா.
அதைக் கேட்ட நந்தினி அழத் தொடங்கி விட்டாள். முடிவு எடுப்பது சுலபம் தான், ஆனால் அதைச் செயல் படுத்த வேண்டுமே. தான் எடுத்து இருக்கும் முடிவில் நிலையாக இருப்பது மிகவும் கடினம் என அவளுக்குப் புரிந்தது. அவள் துர்காவைக் கட்டிக்கொள்ள, மகள் மிகவும் சோர்வாக இருப்பதாக நினைத்தார் துர்கா.
தன்னுடைய லட்சியத்தை நினைத்து, மனதைத் தேற்றிக் கொண்டவள், அப்பொழுது தான், சுற்றிலும் உள்ளவர்களைப் பார்த்தாள். இந்த இரண்டு நாட்கள் மட்டும் தன் வாழ்க்கையில் வராமல் இருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து இருக்கும் என்று நினைத்தாள். அப்போது அங்குத் தோன்றிய ஒளி வெள்ளம் அந்த இடம் முழுவதும் பரவியது.