நாம் அனைவரும் இந்தக் கேள்வியை ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு வகையில் சிந்தித்து இருப்போம்.
அந்தக் கேள்வி, “நாம் ஏன் வாழ்கிறோம் ?இந்த வாழ்க்கையில் என்ன பயன் இருக்கின்றது ?” என்பது தான். ஆனால், இதை நாம் உணர்வுப்பூர்வமாகத் தான் யோசித்து இருப்போம்.
இதை ஏன் அறிவியல் மூலமாக யோசிக்கக் கூடாது ? இந்தக் கேள்வியை ஓர் இறை நம்பிக்கை உடையவரிடம் கேட்டால், “நாம் அனைவரும் கடந்த பிறவிகளில் செய்த பாவ புண்ணிய கணக்கைத் தீர்ப்பதற்காகத் தான் இந்தப் பிறவியில் வாழ்கின்றோம்” என்பார்.
இதையே ஒரு வேதாந்தியிடம் கேட்டால், “வாழ்க்கை என்பது ஒரு புத்தகம் போல் தான். அதில் எதை எழுத வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். வாழ்க்கை ஒரு வாய்ப்பு; ஒரு பற்றுக்கோல்; ஆதியும் அந்தமும் சேர்ந்து அந்தாதியாக இருக்கும் ஒரு புத்தகம்” என்று கூறி தெளிவாக இருக்கும் நம்மை குழப்பி விடுவார்.
ஒரு Optimist- டிடம்(எந்த செயல் நடந்தாலும் அதில் உள்ள நன்மையை மட்டுமேபார்ப்பவர்) கேட்டால், “வாழ்க்கை அதன் போக்கில் நம்மை இழுக்கும் ஓர் அற்புத சுழல். அது நமக்காக வைத்திருக்கும் ரகசியங்கள் தான் நம்முடைய மகிழ்ச்சி” என்பார். இப்படி பற்பல பதில்களை நாம் சந்தித்திருப்போம்.
ஆனால், நாம்தேடிய வினாவிற்கான விடை ?
“நாம் ஏன் வாழ்கின்றோம் ?”
உலக மருத்துவ வரலாற்றில், முதல் முறையாக உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் வெற்றியடைந்த, டாக்டர். கிறிஸ்டியன் பார்னார்டு (Christian Barnard), “The business of living is the celebration of being alive” என்றார்.
ஆனால், இதை ஓர் அறிவியல் ஆய்வாளரிடம் கேட்டிருந்தால், அவர் என்ன கூறியிருப்பார் ?
******
சென்ற முறை, பொசய்டனின் நினைவுகளுள் சென்று, “கயா கிரகம் எப்படி உருவாகியது ? அதற்கும்செலினாவுக்கும் உள்ள சம்பந்தம் யாது ?” போன்றவற்றை அறிந்து கொண்ட பிறகு, அனைவரும் சிறிது நேரம் தங்களுக்குள் பேசிக் கொள்ளாமல் அமைதியாக தத்தமது எண்ணங்களில் மூழ்கி இருந்தனர்.
சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த ஆரியன், “சரி இன்னைக்கு கதை அவ்வளவு தானா ? நாம எல்லாரும் சாப்பிடலாமா ?” என்று பழக்க தோஷத்தில் கேட்டான்.
நந்தினி, “எப்போ பார்த்தாலும் சாப்பிடுறதிலேயே இருக்காதடா, எரும” என்று கூறினாள்.
அவனோ பாவமாக, பொசய்டனைப்பார்க்க, அவர், “இனிமேல் உங்களுக்கு உணவு என்ற ஒன்றே தேவை இல்லை. நீங்கள் உண்பதற்குக் காரணமே உடம்புக்குச் சக்தி வேண்டும் என்பதற்காகத் தான். அந்த வேலையை உங்கள் உடலில் பரவியிருக்கும் சக்தி அலைகள் பார்த்துக்கொள்ளும். பிறகு எதற்கு உணவு ?”என்று கேட்டார்.
அதைக் கேட்ட மற்ற மூவரும் அதிர்ந்தாலும், ஆரியன் மட்டும், “என்னாது சாப்பாடு தேவை இல்லையா ? இனிமே நானும் ஜிம் பாய் கணக்கா ஆகப் போறேன்” என்றான்.
நந்தினி அவனை முறைத்துவிட்டு, “நம்பளோடஅடுத்த வேலை என்ன பொசய்டன் ?”என்று கேட்டாள்.
“நீங்கள் அனைவரும் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு நாம் மற்றொரு நினைவுக்குள் செல்லலாம்” என்றார் பொசய்டன்.
அந்த விண்கலத்தில் சிறு சிறு அறைகளாக மூன்று அறைகள் இருந்தன. நந்தினியும் பொசய்டனும் தனித்தனியாகவும், ஆதியும் ஆரியனும் ஒரே அறையிலும் தங்கிக் கொண்டனர்.
உறங்கப் போவதற்கு முன் நந்தினிக்குப் புத்தகங்கள் படிப்பது பழக்கமாகி இருந்ததால், சிறிது நேரம் கழித்துச் செல்லலாம் என்று இருந்து விட்டாள். ஆனால், புத்தகத்தைத் திறந்தாளே ஒழிய, அவள் எண்ணங்கள் அனைத்தும் அலைபாய்ந்து கொண்டிருந்தன.
அவளால் இன்னும் சில விஷயங்களை ஏற்க முடியவில்லை. பொசய்டன் கூறுவதை முழுமையாக நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை.
இதுவரை, புதிராக இருந்த வாழ்க்கையின் விடை தெரிந்து விட்டது என்று மகிழ்வதா, இல்லை அந்த விடை கூறிய செய்தியை நினைத்து வருந்துவதா என்று புரியவில்லை.
‘Going with the flow’ என்று எங்கோ படித்தது ஞாபகம் வந்தது. ஆனால், தன் மேல் இவ்வளவு பெரிய பொறுப்பும் நம்பிக்கையும் சுமத்தப்பட்டு இருக்க, அவளுக்கோ அந்தக் கிரகத்தைப் பற்றியச் செய்திகள் கூட முழுமையாக தெரியவில்லை.
திடீரென்று யாரோ தன் அருகில் அமர்வதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். அங்கு ஆதி அமர்ந்து இருந்தான். அவனைப் பார்த்ததும், அவன் கூறியதும் சேர்ந்து நினைவு வரத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
ஆதித்யனுக்கும் பல சந்தேகங்கள் மனதில் இருக்க அவனுக்கே உறுதியாக தெரியாத போது, அதை நந்தினியிடம் கூறி அவளைக் குழப்ப விரும்பவில்லை. ஆனால், ஒருவருக்கு ஒருவர் அருகில் அமர்ந்து கொண்டு மற்றவருக்குத் தெரியாமல் இதம் அளித்துக் கொண்டிருந்தனர்.
Ice breaking- கைசெய்யத் தயாரான ஆதி, “இதுவரைக்கும் இந்த ஸ்பேஸ்லாம் படத்துல தான் பாத்துகிட்டு இருந்தேன். இப்போ நேரடி ஒளிபரப்பா பாத்துகிட்டு இருக்கோம்.
இதெல்லாம் திடீர்னு ஒரு நாள் தூக்கத்துல இருந்து எந்திரிக்கும் போது வெறும் கனவு மாதிரி ஆகிடுமோனு கொஞ்சம்பயமாவும் இருக்கு” என்று அவன் கூறி முடிப்பதற்குள், “ஆ”என்று கத்தினான்.
பின்னே கையில் நறுக்கென்று கிள்ளினால், அவன் அலறாமல் என்ன செய்வான் ?
“ஒய் திஸ் கொலவெறி ?”என்பது போல ஆதி நந்தினியைப் பார்க்க, “நீங்க தானே ஆதி, இதெல்லாம் கனவானு குழம்பிட்டு இருந்தீங்க. அதான் நீங்க ரியாலிட்டில தான் இருக்கீங்கன்னு ப்ரூவ் பண்ணேன்” என்றாள் நந்தினி.
அதைக் கேட்டு ஆதி, “இது உனக்குத் தேவையா ? தேவையா ?”என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். நந்தினி வாய்விட்டு சிரிக்க, ஆதி அவளை அன்புடன் பார்த்தான்.
அவனது, பார்வை மாற்றத்தை உணர்ந்த நந்தினி, அதைத் திசை திருப்ப, “ஆதி, நான் உங்கள ஒன்னு கேட்டா, தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே. பார்த்துச் சரியாசொல்லணும்னா, மூணு நாட்கள் தான் ஆகி இருக்கும். அதுக்குள்ள எனக்காக ஏன் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கிறீங்க? ஆரியன் எனக்கு டீனேஜ் ஃபிரெண்ட். ஆனா, நீங்க ?” என்று தனக்கு விடை தெரிந்த வினாவை அவனிடம் கேட்டாள்.
ஆதியோ, “ஏன்னா நீ என்னோட …” என்று கூற வந்தவன், நல்லவேளை சரியான நேரத்தில் நிறுத்தினான்.
நந்தினி அவனை ஆர்வமாகப் பார்த்து,“நான் உங்களோட …?” என்று அதே கேள்வியைத் திருப்பிக் கேட்டாள்.
“ஏன்னா நீ என்னோட லவ்வர் மாதிரியே இருக்கியா, அதான். ஐ மீன் அவளும் உன்ன மாதிரி புத்திசாலி தான்” என்றான் ஆதித்யன்.
அவன் கூறியதைக் கேட்ட நந்தினி,“வாட் ?” என்று கத்த போனவள், தன்னை சமன்படுத்திக் கொண்டு, “ஓ” என்றாள்.
ஓர் எழுத்து வார்த்தைகள் பல உள்ளன. ஆனால், மகிழ்ச்சி, துக்கம், நக்கல் போன்ற அனைத்து உணர்வுகளையும் கூறும் ஒரே எழுத்து ‘ஓ’ தான்.
நந்தினியைக் கடைக்கண் பார்வையால் ரசித்தவன், “அதெல்லாம் ஜாலியான நாட்கள், நந்து. முதலில்brother-னு அவ என்னையகூப்பிடதும், அப்புறம் நான் அவளSister -னு கூப்பிட்டதும் அவ என்னோட லவ்வ ஒத்துகிட்டது, எல்லாம் மறக்க முடியாத நினைவுகள். அப்புறம் ஒரு நாள் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வர்றேன்னு போனவளுக்கு ஆக்சிடென்ட் ஆகி, அந்த இடத்திலேயே இறந்துட்டா” என்றான்.
அவனது கடைசி வாக்கியத்தில், ஏதோ மறைக்கப்பட்டிருந்த வலியை உணர்ந்தாள் நந்தினி. ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால், அவன் ஒரு படத்துடைய கதையைத் தன் சொந்த கதையைப் போலக் கூறுவதை அறிந்து இருப்பாள். ஆனால், நந்தினிக்குப் படங்களைப் பார்க்கப் பொறுமை இல்லாமல் தானே புத்தகத்தைத் தன்னுடைய உயிர்த் தோழனாக மாற்றிக் கொண்டாள்.
அதே நேரத்தில், “அடப்பாவி ! ஒரு படத்தோடக் கதைய அப்படியே ரீல் சுத்துறியேடா ?” என்ற குரலைக்கேட்டு, இருவரும் அதிர்ந்து திரும்பிப் பார்க்க, அங்கே ஆரியன் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான்.
அவனை இருவரும் முறைத்துப் பார்க்க, ஆரியன், “அவன் உன்னை ஏமாத்தப் பார்க்கிறான், நந்து. அது ஒரு படத்தோட கதை. இதுக்குத் தான் என் கூட படம் பார்க்க வான்னா, வரனும்றது” என்று அந்தக் கோபத்தை ஆதித்யன் புறம் பிளேட்டை திருப்பிப் போட்டான்.
நந்தினி ஆதியைச் சந்தேகமாகப் பார்க்க, “இல்ல நந்து, நீ கொஞ்சம் டிப்ரெஸ்டா இருந்தியா ? அதான் ஏதாச்சும் செஞ்சு சிரிக்க வைக்க ட்ரை பண்ணலாம்னு, சும்மா செஞ்சேன்”என்று கூறி முடிப்பதற்குள், நந்தினி அவனைத் துரத்த ஆரம்பித்திருந்தாள்.
அந்த விண்கலத்தின் Artificial gravity – யின் மகிமையால், அவர்கள் ஓட, அதைக் கண்டு ஆரியன் விழுந்து விழுந்து சிரித்தான். ஒரு கட்டத்தில் அவர்கள் எதற்காக ஓட ஆரம்பித்தோம் என்பதையே மறந்து நிற்க, அப்பொழுது சிரித்துக் கொண்டிருந்த ஆரியன் அவர்களது இலக்காக மாறினான்.
ஒரு கட்டத்தில் அனைவரும் சோர்வாக அமர்ந்தனர். முன்னர் இருந்த மனநிலைக்கு, நந்தினியின் மனநிலை முற்றிலும் மாறி இருந்தது. குழப்பமான மனநிலை மாறி இப்போது கொஞ்சம் மகிழ்வாக உணர்ந்தாள்.
“நீ கேட்ட கேள்விக்குப் பதில் வேற ஒன்னும் இல்ல நந்து, நீ எந்தக் கிரகத்தில் இருந்து வந்திருந்தாலும், நீ என்னுடைய அத்தை பொண்ணு தான்” என்றான்.
அதைக் கேட்ட நந்தினி, “இப்பயும் சார் ஒத்துக்க மாட்டாராம்மா” என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.
பிறகு மூவரும் உறங்கச் செல்வதற்குத் தயாராக, மூமூ எதையோ பார்த்து பயந்தது போல காட்டு கத்தல் கத்தியது. அந்தச் சத்தம் கேட்டு, நந்தினி தன் அறைக்குசென்று பார்த்தாள். ஆனால், அங்கு மூமூவைத் தவிர வேறு யாரும் இல்லாததைக் கண்டு அவளுக்குக் குழப்பமாக இருந்தது.
ஆனால், மூமூ உடன் மனதால் உரையாடும் நந்தினிக்கு, அக்கிளி மிகவும் பயந்து போய் இருப்பது தெரிந்தது. ஆனால், காரணம் மட்டும் புரியவில்லை.
அவளைத் தொடர்ந்து வந்த ஆரியனும், ஆதியும் அந்த அறையைச் சுற்றிலும் பார்க்க, அவர்களுக்கு எந்த வேறுபாடும் தெரியவில்லை.
“ரொம்ப நேரம் தனியா இருந்தாலும் இந்த மாதிரி மூமூ கத்தி இதுவரைக்கும் பார்த்தது இல்லையே” என்று நினைத்தாள் நந்தினி.
“நீங்க ரெண்டு பேரும் போய் ரெஸ்ட் எடுங்க. எதுவா இருந்தாலும் நாளைக்கு காலைல பார்த்துக்கலாம்” என்றாள் நந்தினி மற்ற இருவரிடமும்.
இருவரும் அவளுக்கு, “குட் நைட்” சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல, நந்தினி சிறிது நேரம் கழித்து நித்ரா தேவியின் பிடியில் மூழ்கினாள்.
அடுத்த நாள், வாழ்க்கையில் முதல் முறையாகக் கதிரவன் இல்லாத விடியலுடன் அனைவரும் எழுந்தனர். அனைவரும் தயாராகி அங்கே வருவதற்கு முன் பொசய்டன் காத்திருந்தார். சுற்றிச் சூழ்ந்திருந்த கருமையை வைத்து, ‘காலை வணக்கம்’ என்று கூற முடியாமல், அனைவரும் அவருக்கு முன் வந்து அமர்ந்தனர்.
பொசய்டன், “சரி, இப்போது நாம் அடுத்த நினைவு சிதறலுக்குச் செல்லும் முன், உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். அதற்கான விடையில் தான் கயா கிரகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம் அடங்கி இருக்கிறது. சரி இப்போது சொல்லுங்கள், மனிதர்கள் ஏன் வாழ வேண்டும்” என்று கேட்டார்.
அவர் இறுதியாகக் கேட்ட கேள்வியில் அனைவரும் குழம்பி போயினர். “இது என்ன வித்தியாசமான கேள்வி ?” என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஓடியது.
ஆதித்யன், “இதுக்கு என்ன பதில் சொல்றது, பொசய்டன் ? நீங்க தானே எங்கள உருவாக்குனீங்க.ஒரு சமன்பாட்டை உருவாக்கத் தானே செலினா தனது படைப்பாற்றலைப் பயன்படுத்தி எங்கள மாதிரி மனிதர்களை உருவாக்குனாங்க?” என்று கேட்டான்.
பொசய்டன் சற்று சிரித்து, “ஆரம்பத்தில் நீ சொல்வது போலத் தான் நடந்தது. ஆனால், அது இருக்கட்டும் உங்களுக்குப் புரியும் படியே கூறுகிறேன். உங்கள் கிரகத்தில் ஐந்து அறிவு கொண்ட ஆடு, கோழி போன்ற உயிரினத்தை எடுத்துக்கொள்வோம். அதன் கண்ணோட்டத்தில் இந்த உலகைப் பாருங்கள். அவை பிறக்கின்றன; வளர்கின்றன; இறுதியில் உங்களுக்கு உணவுப் பொருளாக மாறுகின்றன. ஆனால், அவை வாழும் வரை, தாங்கள் இறுதியில் கொல்லப்படுவதற்குத் தான் வளர்க்கப் படுகிறோம் என்பதுஅவற்றிற்கு தெரியுமா ? அவற்றைப் பொறுத்தவரை அவை வாழ்கின்றன. அவ்வளவு தான்” என்றார்.
அனைவரும் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போய் விட்டனர். “ஒரு சின்ன விஷயத்திற்குப் பின்னால், இவ்வளவு பெரிய உண்மை இருக்கின்றதா ?” என்று, யோசிக்கும் நிலையில் இருந்து வெளியே தள்ளப்பட்டனர். உண்மையில் எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் அதன் திறவுகோல் சிறியதாகத் தானே இருக்கின்றது. பிரச்சனை பெரிதாக இருப்பினும் அதன் தீர்வு சிறியதாகவே இருக்கும்.
அவர்கள் யோசிப்பதற்காக இடைவெளி விட்ட பொசய்டன், “அப்படியென்றால், எல்லா உயிரினமும் அதற்கு மேம்பட்ட உயிரினங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கின்றன. அதுபோல, மனிதர்களான நீங்களும் யாரோ ஒருவருக்குப் பயன்பட வேண்டும் அல்லவா ?” என்று கேட்டார் பொசய்டன்.
இம்முறை கண்கள் வெளியில் தெறித்து விடும் அளவிற்கு மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
“உண்மைதானே, அந்த ஆடுகளைப் போல தாங்களும் இந்த உலகில் பிறக்கின்றோம். அவரவர்க்கு ஏற்ப தத்தமது வாழ்க்கையை வாழ்கின்றோம். ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவங்கள் தான் மாறுபடுமே ஒழிய, மற்றபடி அனைவரும் இந்த வாழ்வை வாழ்கின்றோம். இன்பத்தை ஏற்று, துன்பத்தைத் தூற்றி எனப் பல நிகழ்ச்சிகளை அனுபவித்து, இறுதியில் இந்த உலக வாழ்வைத் துறக்கின்றோம். என்ன நம்மை நாமே உயர்ந்த உயிரினம் என்று மார்தட்டிக் கொண்டு வாழ்கின்றோம்”
ஆரியன், “நீங்க சொல்றத சரின்னு வெச்சுகிட்டாலும், நாங்க எந்த விதத்தில உங்களுக்கு பயன்படப் போகிறோம் ? அந்த விலங்குகளோட உடல்களை நாங்க பயன்படுத்துவோம். ஆனால், எங்களோட உடல்களை நீங்க எப்படிப் பயன்படுத்துவீங்க ?” என்று கேட்டான்.
“அழியக்கூடிய உடலை வைத்து நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் ? க்ரிசான்டா,இதற்குள் நீ ஏதாவது யோசித்து இருப்பாயே ?” என்று கேட்டார் பொசய்டன்.
நந்தினி சற்று யோசித்து, “இந்த உடலை வைத்து நீங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால், அதற்கும் மேலாக மனிதர்களுடைய ஆன்மாக்களை (soul)நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்” என்றாள்.
ஏற்கனவே பல அதிர்ச்சிகளைச் சந்தித்து விட்டதால், ஆதிக்கும் ஆரியனுக்கும் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
“சரியாகச் சொன்னாய், க்ரிசான்டா. ஆனால், ஒரு சின்ன திருத்தம். உங்களைப் பொருத்தவரை தான் அவை ஆத்மா. உண்மையில், அவை உங்கள் நினைவுகளில் சேர்க்கை. அவ்வளவுதான்” என்று கூறிவிட்டு, பின்னர், “நினைவுகள்… அவற்றுக்கு இருக்கும் சக்தியே தனிதான். ஒரு வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு ஏற்படும் அத்தனை அனுபவங்களின் சேர்க்கை தான் நினைவுகள். அதன் மூலம் எங்களுக்குக் கிடைக்கும் சக்திகளே எங்களுடைய உயர்வுக்குக் காரணம்” என்றார் பொசய்டன்.
ஆதித்யன், “அப்படினாஒரு மனிதன் இறந்த பிறகு அவனோட ஆத்மாவை நீங்கபயன்படுத்திஅதிலிருந்து சக்திகளை உருவாக்குறீங்க. எங்களோட மனித இனத்தை இப்படித்தான் பயன்படுத்துறீங்களா?”என்று கேட்டான்.
“இன்னும் நீங்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளவில்லை. உங்களுக்குத் தான் அதன் பெயர் ஆன்மா, பேய் போன்றவை எல்லாம். ஆனால், எங்களைப்பொறுத்தவரை அவை வெறும் நினைவுகள். உதாரணத்துக்குக் கூறினால், நீங்கள் ஒரு புத்தகம் படித்தால், அதில் உள்ள சில கருத்துக்கள் உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சாதாரண புத்தகத்துக்கே, இவ்வளவு சக்திகள் இருந்தால், அந்த மொத்த மனித வாழ்க்கையையும் வாழ்கின்ற ஒரு நினைவு கூட்டுக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கும் ? அந்தச் சக்திதான் கயா கிரகத்தின் அடித்தளம்” என்றார் பொசய்டன்.
இந்த அண்ட சராசரத்தில், நம்மை அறியாமலே நம்மைச் சுற்றி எத்தனை வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன ? இதை எல்லாம் நாம் புரிந்து கொள்வதற்கு இன்னும் பரிணாம வளர்ச்சி அடைய வேண்டுமோ என்னமோ ?
“இதுவரை நீங்கள் தெரிந்து கொண்டது நல்லது. இனிமேல் இந்த ஒற்றை யோசனையால் ஏற்பட்ட பின் விளைவுகளைப் பற்றிக் காண்போம்” என்ற பொசய்டன், தன் இரு கைகளையும் நீட்டினார்.
அதை மற்றவர்கள் பிடித்துக்கொள்ள நினைவு வெள்ளத்தில், அனைவரும் நீந்த தொடங்கினர்.
ஆனால், இந்த முறை அனைவருக்கும் கொஞ்சம் பழக்கப்பட்டு இருந்தது. தங்களைச் சுற்றி எண்ணில் அடங்கா எண்ண அலைகள் சென்று கொண்டிருக்க, தங்களை யாரோ ஒருவர் இழுத்துச் செல்வது போல உணர்ந்தனர்.
மூவரும் சென்ற முறை நினைவுகளில் கயா கிரகத்திற்குவந்தபோதுஇருந்ததை விட இப்போது அந்த இடத்தில் பல்வேறு மாற்றங்கள் தெரிந்தன. விண்ணை முட்டும் கோபுரங்களும், அவற்றை சுற்றி மாளிகைகளும் என்று அந்த இடமே ஜெகஜோதியாக விளங்கியது.
திடீரென்று, மூவரும் ஒரு சிறிய மலைக்கு முன்னர் நிறுத்தப்பட்டனர். அந்த மலைக்கு அருகில் இருந்த ஒரு கல் மேடையில் அனைத்து அரசர்களும் அமர்ந்து இருந்தனர். அவர்கள் உடல் முழுவதையும் கவசங்கள் மறைத்து இருக்க, அவர்களது கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தது. கயா கிரக மக்கள் பலரும்அங்கே குழுமி இருந்தனர்.
எல்லாம் க்ரோனனால் நிகழ்த்தப்பட்டது.மக்கள் அனைவரின் நினைவுகளையும் சிறிது மாற்றி அமைத்து இருந்தார் க்ரோனன்.
வானில் செலினா பறந்து கொண்டிருக்க, மற்ற அரசர்கள் அனைவரும் தங்களது சபதங்களை பிரமானம் செய்து கொண்டிருந்தனர்.
அடுத்த காட்சி மாறியது. ஒரு பெரிய கோட்டை தெரிந்தது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக, அதீத ரசனையுடன் கட்டப்பட்டு இருந்தது. பிறகு அவர்கள் அந்தக்கோட்டைக்குள்ளே செல்ல, அங்கே எட்டு சிம்மாசனங்களில் எட்டு அரசர்களும் அமர்ந்து இருந்தனர்.
அங்கு இருந்த மக்களின் குறைகளைக் கேட்டு, அதற்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தார் போல் தெரிந்தது. அவர்களது மொழி ஆரியனுக்கும், ஆதித்யனுக்கும் புரியாவிட்டாலும், நந்தினிக்குப் புரிந்தது. அது கயா கிரகத்தினரின் ஆதி மொழி போலத் தோன்றியது.
அந்தக் காட்சி சட்டென்று மாறி, அடுத்த காட்சியில், ஓர் இருட்டு அறையில் இருப்பது போல் தோன்றியது. அங்கு இரண்டு நபர்கள் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. அவர்கள் பேசிக்கொண்டதை வைத்துப் பார்க்கும் போது, அவ்விருவரும் வல்கன் மற்றும் டைட்டன் என்று தெரிந்தது.
வல்கன், “நீ சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, டைட்டன். நீ கூறும் யோசனைப்படி செய்தால், அது செலினா இயற்றிய விதிகளைத் தகர்க்கும்”என்றார்.
டைட்டனோ, “நான் உன்னிடம் அனுமதி கேட்கவில்லை, வல்கன். உன்னிடம் செய்தியைக் கூறுகிறேன். அவ்வளவு தான். இது என்னுடைய மாபெரும் கண்டுபிடிப்பு. என்னுடைய யோசனையின் படி இறந்து போனவர்களின் சிந்தனைகளைத் தானே, எனக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன். நான் எந்த ஒரு உயிரையும் அழித்து, இதை நிறைவேற்றவில்லையே. இறந்து போகின்ற அவர்களின் நினைவுகளைச் சக்தியாக மாற்றுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? ஒருவர் மாறி ஒருவர் வந்து என் நேரத்தை வீணடிக்கிறீர்கள்” என்றார்.
அதே பதிலைப் பலரிடம் கூறியதால் ஏற்பட்ட அலுப்புத்தன்மை அவர் குரலில் தெரிந்தது.
பிறகு வல்கன், “இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை, டைட்டன். இந்தச் சக்தியைத் தனி நபர் ஒருவரின் பொறுப்பில் விடுவது சாலச் சிறந்தது அல்ல. இதை வேறு யாராவது தவறாகப் பயன்படுத்தினால், நம் அனைவரின் சக்தியும் வீண் தான்” என்று பணிவாகச் சொன்னார்.
“அப்படியென்றால், என் ஒருவனிடம் இந்த தனித்துவமான சக்தி இருப்பது தான்உங்களுக்குள் பொறாமையை ஏற்படுத்துகிறது.அதனால் தான் என்னுடைய கண்டுபிடிப்பைத் தடுக்கப் பார்க்கிறீர்கள். நான் நாளை செலினாவைச் சந்திக்கப் போகின்றேன்.இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை” என்றார் டைட்டன்.
இனி தான் பேசி எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த வல்கன், அங்கிருந்து வெளியேறினார். வாசலில் அவருக்காக மற்ற அரசர்கள் ஆவலுடன் காத்திருக்க, இவர் அவர்களிடம் மறுப்பாகத் தலையசைத்தார்.
டைட்டனின் பிடிவாதத்தை அவர்களால் இந்த விஷயத்தில் சுத்தமாக ஏற்க முடியவில்லை. இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களைச் செலினாவிடம் கூறி, இதைத் தடுப்பது தான் ஒரே வழி என்று முடிவெடுத்தனர்.
மீண்டும் காட்சி மாறியது. மறுபடியும், அதே மலை அடிவாரம் தோன்றியது. அந்தச் அரசர்கள் அனைவரும் தனித் தனியாக நின்று கொண்டு, தங்கள் யோசனையில் மூழ்கி இருந்தனர்.
வல்கன், அப்பொழுதுமுன்னே வந்து,“கயா கிரகத்தின் பரம்பொருளே செலினா ! தங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்துள்ளோம்” என்றார்.
திடீரென்று அங்கு இருந்த மலர்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து, ஒரு பெண்ணின் வடிவம் எடுக்க, செலினா அங்கே தோன்றி இருந்தார்.
அவர் வந்தவுடன், அனைவரும் அவர் முன் மண்டியிட்டு வணங்க, செலினா, “எழுக, அரசர்களே !கயா கிரகத்தின் வளர்ச்சி என்னை ஆச்சரியப்படுத்துகிறது. என்னை இப்பொழுது இங்கே அழைத்ததன் நோக்கம் ?” என்று கேட்டார்.
அவரிடம் வல்கன், அனைத்துப் பிரச்சனைகளையும் கூறியவுடன், டைட்டன் தன் பக்க நியாயத்தைக் கூறினார்.
“செலினா வாழ்க ! என்னுடைய கண்டுபிடிப்பில், எந்த உயிரினமும் பாதிக்கப்படாது. இறந்து போன உயிரினங்களின் நினைவுகளைத் தான், நான் சக்தியாக மாற்றுகிறேன். அது மட்டுமில்லாமல் ஒரு படைப்பாளியான உங்களுக்குத் தான் ஒரு கண்டுபிடிப்பின் அருமை தெரியும். என்னுடைய இந்தக் கண்டுபிடிப்புக்குத் தேவையான சிந்தனைகளைப் பயன்படுத்தும் திறன் எனக்கு வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்கின்றேன்” என்றார் டைட்டன்.
“உன்னுடைய அறிவுத் திறனை நான் மெச்சுகிறேன், டைட்டன். ஒரு படைப்பாளிக்கு தேவையான அத்தனை அம்சங்களும் உன்னிடம் இருக்கின்றது. வல்கன்,ஒரு நியாயமான வேண்டுதலை என்னால் மறுக்க இயலாது. சில சமயம் நாம் துணிந்து எடுக்கிற முடிவு தான் எதிர்பாராத அளவுக்கு வெற்றியைத் தரும். இது உங்களுடைய கிரகத்துக்கு ஒரு புதிய மாற்றமாக இருக்கலாமே ?” என்று கேட்டார்செலினா.
அனைத்துச் அரசர்களுக்கும், சிறிது நேரம் யோசிக்க அவகாசம் கொடுத்தவர், மீண்டும் தொடர்ந்தார்.
“டைட்டன், எப்படி நான் உனக்கு வேண்டியதைக் கொடுக்க வேண்டுமோ, அது போல அவர்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கின்றது. இந்தச் சக்திகள் ஒரு தனி நபருக்கு மிகவும் அதிகம். இதை உனக்கு மட்டும் கொடுப்பதற்கும் உன்னை இந்தச் கிரகத்துக்குச் சர்வாதிகாரியாக மாற்றுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை சக்திகளை நீங்கள் எட்டு பேரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.
அவர் கூறியதைக் கேட்ட டைட்டன் கொதித்து எழுந்தார். “செலினா அவர்களே ! இது என்னுடைய கண்டுபிடிப்பு. இதை எப்படி நான் அவர்களுடன் பங்கிட்டுக் கொள்வது ?” என்று கேட்டார்.
சாதாரணமாக நம்முடைய உழைப்பின் பயனைப் பிறருக்குக் கொடுத்தால் வரும் நியாயமான கோபமே டைட்டனுக்கும் வந்தது.
“இதை நீ ஒப்புக் கொள்ளாவிட்டால், நீ கேட்பது உனக்கு கொடுக்கப்படாது, டைட்டன்” என்று அழுத்தமாகக் கூறினார் செலினா. தனக்கு வேறு வழி இல்லாததை உணர்ந்த டைட்டன், அந்த முடிவில் துளியும் விருப்பம் இல்லாமல் ஒத்துக் கொண்டார்.
நினைவுச் சிதறல்களை விட்டு வெளியே இழுக்கப்பட, அந்த விண்கலத்திற்கு மறுபடியும் இழுத்து வரப்பட்டார்கள் ஆதி, ஆரியன், மற்றும் நந்தினி.
அவர்கள் கேட்கப் போகும் கேள்வியை உணர்ந்த பொசய்டன், “ஒரு பெரிய தேக்குமர காட்டைத் தீக்கு இரையாக்குவதற்கு, ஒரு சிறிய தீக்குச்சியே போதும். அதுபோல, பெரிய பிரச்சனைகளுக்குச் சின்ன காரணமே போதும். அது விதையாக விழுந்து, வேர்விட்டு மரமாகி விட்டால் அதனை வீழ்த்துவது அத்துனை சுலபமல்ல” என்றார்.