மாயாவி 4 ::-
என் குடும்பத்தை ஆள வந்த நீ !
என்னையும் என் மனதையும்..
உன் அன்பால் ஆள நினைக்கிறாயே!
என்னடி மாயாவி நீ !
அப்பாவின் மரண போராட்டத்தின் இடையே அவர் கேட்டதை தட்ட முடியாமல் திருமணத்திற்கு சம்மதம் சொன்னாலும் அந்த பந்தத்தை மனதார ஏற்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
“அவ சம்மதம் சொல்லமாட்டான்னு தப்பா கணக்கு போட்டு ,அப்பா மனசு கஷ்டப்பட கூடாதுன்னு கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்… ஏற்கனவே அவங்க வீட்ல என்னை மதிக்க மாட்டாங்க… இவளும் அதே மாதிரி தான் போல… ஏதோ பெரிய வேலைல வேற இருக்கறாளாமே… அந்த திமிர்ல தான் போகும் போது கூட என்கிட்டே சொல்லாம போயிருக்கா…“
“என் கல்யாணம் எப்படி எல்லாம் நடக்கணும்னு கனவு கண்டிருப்பேன்… பொண்ணு பார்க்க போறதுல இருந்து கல்யாண கலாட்டா வரைக்கும் எதுவும் இல்லாம என் கல்யாணம் முடிஞ்சு இரண்டு மாசம் ஆகிடுச்சு…“ என்று அவன் புலம்பிக் கொண்டிருக்கையிலேயே,
“அமுதா!” என்று அழைத்தபடியே மாறன் அவன் அறைக்குள் வந்தார்.
“ஹான் ! சொல்லுங்கப்பா… கூப்பிட்டு இருந்தா நானே வந்திருப்பேனே… நீங்க ஏன் நடக்கறீங்க…” என்று அவரின் கையை பிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்ததும், மாறனுக்கு தோன்றியது இதுவே, “பிள்ளைகளை பொறுப்பில்லாமல் தான் வளர்த்துட்டோம் ஆனால் பாசமானவர்களா தான் வளர்த்திருக்கோம்” என்றபடி அவனையே கனிவோடு பார்த்தவர்,
“அமுதா ! உனக்கு பிடிக்காம கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிட்டேன்னு வருத்தமாப்பா?” என்று அவர் கேட்டதும் அவன் அமைதியாக இருக்க, அதிலேயே அவன் பதிலை அறிந்தவர்,
“உனக்கு வரபோற பொண்ணு பத்தியும் உன் கல்யாணம் பத்தியும் உனக்குன்னு ஒரு விருப்பம் இருந்திருக்கும் அதை எல்லாம் நான் கேட்காமல் என் விருப்பத்துக்கு பண்ணிட்டு இப்ப வந்து கேட்கறது அபத்தமா தான் இருக்கு… ஆனால் மனசுல இருக்கறது பேசிட்டா எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்ப்பா… அதான் கேட்டேன்…”என்று வருந்தியவரைப் பார்த்தவன்,
“அப்பா ! நீங்க சொன்னது எல்லாமே சரி தான்…எனக்கு பிடிச்ச மாதிரி பொண்ணும் கல்யாணமும் நடக்கும்னு எனக்குள்ள எதிர்பார்ப்பு இருந்துச்சு… திடீர்னு இப்படி ஒரு சந்தர்ப்பத்துல கல்யாணம் நடந்தது ஏத்துக்க முடியல தான்… ஆனால் நீங்க இதெல்லாம் நினைச்சு கவலைப்படாதீங்க… இது எல்லாமே சரி ஆகிடும்…” என்று அவருக்கு ஆறுதலளித்தவனைப் பார்த்து,
“ஏன் அமுதா ? உனக்கு கருத்தம்மாவை பிடிக்கலையா? அதோட விவாகரத்து அந்த வாழ்க்கை பத்தி உனக்கு எதுவும் உறுத்தல் இருக்கா?” என்று அவர் தயங்கிக் கொண்டே கேட்டதும்,
“கருத்தம்மாவா?” என்று அவன் யோசனையோடு கேட்க, “நம்ப கார்குழலிப்பா… அது எனக்கு அப்படியே கூப்பிட்டு பழக்கமாகிடுச்சு….” என்றதும்,
“அப்பா ! அதை பத்தி எல்லாம் நான் யோசிக்கல… நீங்க ஏதோ எங்க இரண்டு பேரோட நல்லதுக்கு தான் இந்த கல்யாணம் பண்ணி வைச்சிருக்கீங்கன்னு புரியுது… ஆனால் எல்லாத்தையும் உடனே மனசுல ஏத்துக்க முடியல… வேற ஒண்ணுமில்லைப்பா…” என்று அவருக்கு நிம்மதி அளித்தவனின் மாற்றம் அவருக்கு புரிய,
“இப்ப அதை பத்தி யோசிக்கலன்னா அப்புறம் அதை பத்தி எதுவும் யோசிச்சு வாழ்க்கையை கெடுத்துப்பானா ?” என்று அவர் நினைத்தாலும், தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது மகனுக்கு ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை கொடுத்திருக்கிறது அதனாலே இந்த பொறுமை என்பதை அறிந்தவர், அதை அப்படியே பிடித்துக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை சரி பண்ணிவிடலாம் என்று கணக்கு போட்டதற்கு மகனே வழி அமைத்து கொடுத்தான்.
இங்கு மாறன் தன் மகனின் மனதை குழலியின் பக்கம் திருப்பி அவர்கள் வாழ்க்கையை சரி செய்ய முயற்சி எடுக்க , அந்த பக்கம் கவி குழலியின் மனதை மாற்ற முயற்சி எடுக்க என எல்லாவற்றின் பலன் என்னமோ பூஜ்யம் தான்… ஆனால் இவர்களை மீறிய சக்தி ஒன்று இருக்கே… அது என்ன முடிவெடுத்திருக்கோ….
அந்த சக்தியின் பலனாக இன்று எழிலமுதன் தன் தந்தையோடு அவன் மனைவி வேலை செய்யும் அலுவகத்தில் அவளுக்காக காத்திருந்தான்… ஆர்வமாக அல்ல எரிச்சலாக…
அன்று தந்தை பேசும் போது வேலையை பற்றி தானே வாயை விட்டது தனக்கே இன்று ஆப்படித்தது…
“அப்பா ! என் பிரெண்ட் ஒருத்தன் பெங்களூருல வேலை பார்த்து வைச்சிருக்கானாம்… என்னை வர சொல்லியிருக்கான்… நான் அடுத்த வாரம் போகலாம்னு இருக்கேன்…” என்று சொன்னதும் அவர் முகம் மலர்ந்தது.
“நல்லது அமுதா! கல்யாணம்னு ஒன்னு நடந்தா எல்லோருக்குமே தானா பொறுப்பும் வந்திடும் போல…” என்று அவர் சொல்ல,
“கல்யாணம் நடந்தெல்லாம் எனக்கு பொறுப்பு வரல… திடீர்னு அவளை கூட்டிட்டு வந்து இங்கயே இருக்க வைச்சிட்டு உனக்குன்னு குடும்ப வந்தாச்சு, நல்ல வேலைக்கு போ, உனக்குன்னு பொறுப்பிருக்குன்னு தினம் தினம் பாடம் எடுப்பீங்க… நமக்கு அதெல்லாம் ஒத்து வராது அதான்… அதுக்கு முன்னாடி நானே இடத்தை காலி பண்றேன்…” என்று மனதோடு நினைத்தவன் வெளியே அவருக்காக புன்னகைத்தான்.
ஆனால் அவனின் அந்த நிம்மதிக்கு ஆயுள் ஒரு நிமிடம் கூட இல்லாமல் தந்தை சொன்னதை கேட்டு அதிர்ந்தான்.
“அப்ப நீயும் கருத்தம்மாவும் இனி ஒண்ணா இருப்பீங்க… ஏற்கனவே இருக்க வீடே உங்க இரண்டு பேருக்கும் போதும் , இருந்தாலும் வேற வீடு பார்க்கலாம்… வாரத்துக்கு ஒரு முறை நீங்க வந்து போங்க இல்லைன்னா நான் தம்பியை கூட்டிட்டு வந்து உங்களை பார்த்துட்டு வரேன்…” என்று அவர் அடுக்கிக் கொண்டே போக, இவனுக்கு தலை சுற்ற ஆரம்பித்ததும் சுதாரித்தவன்,
“அப்பா ! முதல்ல எனக்கு வேலை கிடைச்சு கொஞ்சம் எல்லாம் செட்டில் ஆன அப்புறம் அவளை கூட்டிட்டு போறேன்… அவளை வேலையை விட்டு நிறுத்தி பெங்களூர் கூட்டிட்டு போகணும்னு இப்ப என்ன அவசியம் வந்துச்சுப்பா…” என்று கடுப்போடு சொன்னவனை பார்த்து அவர் சிரிக்க, இவனோ அவர் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் குழப்பமாக பார்த்தான்.
“அமுதா! கருத்தம்மா பெங்களூருல தான் வேலை செய்யுது… உனக்கு தெரியாதா… நீ அவ கூடவே தங்கி உன் வேலையை தேடு.. உனக்கும் அங்கே கிடைச்சிடுச்சுனா ரெண்டு பேரும் அங்கேயே இருந்துடுங்க…”
“ரெண்டு பேரும் இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படியே இருக்க முடியும்… ஒண்ணா இருந்தீங்கன்னா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்டு உங்க வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பீங்க…” என்று அவர் சொல்ல,
“என்னது பெங்களூரா? ஏன்டா இப்படி நீயே சொந்த செலவுல ஆப்பு வைச்சுக்கிட்ட….இப்ப என்ன பண்றது….” என்று யோசித்தவன் ,
“அப்பா! பிரெண்ட் இன்னும் வேலையை முடிவா சொல்லல… அவன் சொன்னதும் நான் பெங்களுர் போய் பார்த்துகிறேன்ப்பா…” என்றான்.
“பெங்களூர்ல இல்லாத கம்பெனிகளா அங்க இல்லாத வேலையா… போகணும்னு எடுத்த நல்ல முடிவை தள்ளி போடாத… நானே உன்னை கூட்டிட்டு போய் விடறேன்… எதுவும் சொல்லாம வா… அடுத்த வாரம் நம்ப போறோம் அவ்வளவு தான்…” என்று முடிவோடு சொல்லி இதோ இன்று கூட்டியும் வந்து விட்டார்.
எப்படி இந்த இக்கட்டில் இருந்து தப்பிப்பது என்று யோசனையில் இவன் இருக்க, மாறனோ மருமகள் வேலை செய்யும் இடத்தை பெருமையாக பார்த்துக் கொண்டிருந்தார். இவர்களை நோக்கி வந்த கவி,
“வாங்க அங்கிள்! எப்படி இருக்கீங்க? வாங்க அமுதன்!” என்று மாறனிடம் கைகூப்பி வணக்கம் சொன்னவன், அமுதனை கட்டியணைத்து கைகுலுக்கி வரவேற்க, இருவரும் அவனை அறியாப் பார்வை பார்த்தனர்.
“தம்பி நீங்க !…..” என்று மாறன் இழுக்க,
“நான் கவி அங்கிள் ! காரு பிரெண்ட்….” என்று புன்னகையோடு சொன்னவனை பார்த்து,
“ஹான் ! அது நீங்க தானா தம்பி… கருத்தம்மா உங்களை பத்தி சொல்லியிருக்கு… இப்ப தான் உங்களை நேர்ல பார்க்கிறேன்…ஆனால் உங்களுக்கு எங்களை ஏற்கனவே தெரியும் போல இருக்கே…”என்று அவரும் புன்னகையோடு சொன்னார்.
“ஹா ஹா ! நீங்க காருவை காலேஜில் வந்து பார்க்கும் போது பார்த்திருக்கேன் அங்கிள்… இவங்க உங்க பையன்னு பார்க்கும் போதே தெரியுது…” என்றவன் சில நொடி அமைதியாகி, ”கல்யாணத்தை பத்தி காரு சொன்னா அங்கிள்…” என்று நிறுத்தி அமுதனின் முகத்தை ஆராய அவனால் எதையும் கண்டறிய முடியவில்லை…
அங்கிருந்த அமைதியை கலைத்த மாறன், “கருத்தம்மா எங்க தம்பி..?” என்று கேட்டதும்,
“பாதியிலே விட்டுட்டு வர முடியாத அளவுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் கால் அங்கிள்…நீங்க எதுவும் தப்ப நினைச்சுக்காதீங்க… ஒரு பத்து நிமிஷத்துல முடிஞ்சுடும்… அதுவரைக்கும் நம்ப உள்ளே போய் வெயிட் பண்ணலாம் வாங்க… வாங்க அமுதன்…” என்று இருவரையும் அழைக்க,
“இல்ல எனக்கு ஒரு கால் பேசணும்…” என்று கவியிடம் சொன்ன அமுதன், “நீங்க உள்ள போங்கப்பா நான் வரேன்…” என்று சொல்லிவிட்டு அவன் வெளியேற இவர்கள் இருவரும் உள்ளே சென்றனர்.
மாறனும் கவியும் சேர்ந்து தங்கள் இருவருக்கும் பின்னும் வலையை அறியாமல் இவன் வெளியேற அவளோ வேலையில் மூழ்கியிருந்தாள்.
கவி மாறனிடம் அமுதனை பற்றியும் அவன் வேலையையும் விசாரிக்க, அவர் சொல்ல சொல்ல அவனுக்கு புரிந்தது ஒன்றே கட்டாயத்தின் பேரில் மணந்திருந்தாலும் இருவரும் சேர்ந்து வாழ்வது என்பது கடினமானதே… அதிலும் மாறன் முற்றிலும் குழலிக்காகவே இந்த திருமணத்தை நடத்தியிருக்கிறார்.
அமுதனைப் பற்றி அவர் சொன்னதை கேட்டவனுக்கு எல்லாம் மலைப்பாகவே இருந்தது. இன்ஜினியரிங் படித்திருக்கிறான், பெரிய அளவில் மார்க் இல்லை. இருந்தும் கிடைக்கின்ற எந்த வேலையிலும் இரண்டு மாதம் இருந்தாலே அதிகம். அதனாலேயே எட்டாயிரம் சம்பளத்தில் பாலிடெக்னீக் கல்லூரியில் ஊரிலேயே வேலை செய்கிறான்.
யாரும் கேள்வி கேட்டால் அறிவுரை சொன்னால் பிடிக்காது. குடும்பத்தை மொத்தமாக மாறன் பார்த்துக் கொண்டிருந்ததால் குடும்பத்தின் பொறுப்பு, வரவு, செலவு, தந்தை வாங்கியிருக்கும் கடன் என்று இது எதைப் பற்றியும் அரிச்சுவடி கூட தெரியாது…
மொத்தத்தில் மனதிற்கும் உடலிற்கும் பெரிதாக உழைப்பு கொடுக்காமல் கிட்டத்தட்ட முப்பது வயது வரை வாழ்க்கையை சுகமாக எந்த சுமையையும் தாங்காமல் சந்தோஷமாக வாழ்கிறான் என்று அறிந்ததும், “நமக்கு மேல இருப்பார் போலவே…” என்று கவி பெருமூச்சு விட்டவாறே,
“மாறன் அங்கிள் இவ்வளவு நாள் வேலைக்கு போனதுல எதுவும் சேர்த்தும் வைக்கல ,கடனும் நிறைய வாங்கியிருக்காரு போல… இப்ப ஆபரேஷன் வேற பண்ணியிருக்கறதால இனி வேலைக்கு போக முடியாது… அமுதனும் இப்ப இங்க வேலைக்குன்னு வந்திருக்கறதும் நிலை இல்லை…”
“இப்பவும் இப்படியே இருந்தா குடும்பம் என்னத்துக்கு ஆகுறது…. நம்ம பூனை இவருக்கு எதிரா அப்படியே மிஸ்டர் ஃபர்பெக்ட் பார்க்கற ஆளாச்சே… இதுல இவங்களை எப்படி சேர்த்து வைக்கிறது… இப்பவே கண்ணை கட்டுதே…” என்று மனதோடு புலம்பினாலும், ஏதாவது வழி கிடைக்கிறதா என்று கவி யோசித்துக் கொண்டிருக்கையிலேயே குழலி அவர்கள் இருந்த அறைக்கு வந்து மாறனிடம் நலம் விசாரிக்க, அதை பார்த்தவனுக்கு மின்னலென ஐடியாக்கள் குவிந்தது.
“அங்கிள் அமுதனுக்கு கால் பண்ணி இங்க வர சொல்லுங்க…” என்று கவி சொல்லவும்,
“என்ன்ன? மாமா மட்டும் தான் என்னை பார்க்க வந்திருக்காருன்னு நினைச்சேனே? அவங்களும் வந்திருக்காங்களா?..” என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அவன் உள்ளே நுழைய திடீரென அவளுள் ஒரு படபடப்பு.
அவனை நேரெதிரே பார்க்க முடியாமல் திணறியவளை மாறனும் கவியும் மட்டுமல்ல அவளின் கணவனும் கண்டுக் கொண்டான்.