நந்தினியின், ‘மூமூ’ என்ற அலறலைக் கேட்டு, ஆதி, ஆரியன் மற்றும் லூனா அதிர்ந்தனர். சில நொடிகள் என்ன நடந்தது என்றே புரியவில்லை.
அதற்குப் பிறகு தான் அவர்களுக்குத் தெரிந்தது மூமூ தனது சகோதரியைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே தியாகம் செய்து விட்டதென்று.
ப்ரொமேத்தியஸின் முகத்தில் கூட சிறிது அதிர்ச்சியின் சாயல் தென்பட்டது. நந்தினிக்குத்தான் தன்னுடைய இதயத்தை யாரோ பிழிவது போல இருந்தது. தாய், தந்தை, பூமி கிரகத்தில் இருக்கும் தனது பெற்றோர், இவர்கள் வரிசையில் மூமூவும் இப்போது சேர்த்தியா ? மனதின் கவலை அனைத்தும் கோபமாக மாறும் தருணம்,
திடீரென்று அந்த அறையின் வாயிலில், ஏதோ பேரிரைச்சல் கேட்க, அனைவரும் சத்தம் வந்த திசையைப் பார்த்தனர். அங்கே பொசய்டன் கம்பீரமாக நின்றிருந்தார். அவர் உடல் முழுவதும் போர் கவசங்களால் மறைக்கப்பட்டு இருக்க, அவருடைய முகம் மட்டுமே அனைவருக்கும் தெரிந்தது.
அவரைக் கண்டவுடன் நந்தினிக்கு ஒரு புறம் மகிழ்ச்சியும், மற்றொருபுறம் தைரியமும் தோன்றியது.
நந்தினியின் கையில் ஈரின் கல் இல்லாததையும், அருகில் ப்ரொமேத்தியஸ் நிற்பதையும் கண்ட பொசய்டன், உடனே தனது சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி தாக்க ஆயத்தமானார்.
ப்ரொமேத்தியஸ், “க்ரிசான்டா ! இங்கிருந்து போய்விடு” என்று கத்த, நந்தினியின் மனதில் சுருக்கென்றது.
“இந்தப் பெயரை இதே குரலில் தானே கனவில் கேட்டோம், அப்படியென்றால் என் கனவில் என்னைக் காப்பாற்றியது ப்ரொமேத்தியஸா ?” என்று அவளுடைய எண்ணங்கள் எங்கெங்கோ செல்ல, பொசய்டன் தன் சக்திகளைக் கொண்டு அவர்களைத் தாக்கினார்.
“தங்களை ஏன் பொசய்டன் தாக்குகிறார் ?” என்று நால்வரும் அதிர்ச்சியில் உறைய, அவர்களுக்கு முன் வந்த ப்ரொமேத்தியஸ், ஒரு கவசத்தை உருவாக்கி, அவர்களை அந்தச் சக்தி கதிர்கள் தாக்காமல் தடுத்தான்.
ப்ரொமேத்தியஸின் செயலில் அவர்கள் இன்னும் அதிர, ப்ரொமேத்தியஸோ, “லூனா ! சீக்கிரம் பெருங்கடல் கோட்டைக்குச் செல்ல சுரைவழி (Wormhole) ஒன்றை உருவாக்கு” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான்.
அந்த நிலையில் ப்ரொமேத்தியஸ் சொல்வதைக் கேட்பது தவிர தங்களுக்கு வேறுவழி இல்லாததை உணர்ந்த லூனா, சுரைவழியை உருவாக்கத் தொடங்கினாள்.
அதைக் கண்ட பொசய்டன், தனது தாக்குதலை மேலும் அதிகமாக்கினார். ப்ரொமேத்தியஸ் தனது டோக்-ஐ கொண்டுவராத தனது மடத்தனத்தை எண்ணி, தன்மீதே கோபப்பட, அதே சமயம் அந்தச் சக்தி கவசத்தில் விரிசல்கள் தோன்ற ஆரம்பித்தன.
வாயிலுக்கு வெளியே இருந்த பொசய்டன், தனது முழு சக்தியையும் கொண்டு அவர்களைத் தாக்க, அந்தச் சக்தி கதிர்கள் கவசத்தைச் சுக்குநூறாக்கி விட்டு ப்ரொமேத்தியஸைத் தாக்கின. ப்ரொமேத்தியஸின் அலறல் சத்தம், அந்த இடத்தில் எதிரொலிக்க, அதற்குள் நந்தினி ப்ரொமேத்தியஸை சுரைவழிக்குள் இழுத்திருந்தாள்.
அவர்கள் இருவரும் வந்தவுடன், லூனா சுரைவழியை மூடினாள். அங்கு பொசய்டன், இவ்வளவு தூரம் முயன்றும் தன் இலக்கு தவறிவிட்டதே என்று கோபத்துடன், அங்கிருந்து சென்றுவிட, இங்கு பெருங்கடல் கோட்டைக்கு அருகில் நால்வரும் ப்ரொமேத்தியஸை சுற்றி அமர்ந்தனர்.
ஆதி, “சனா ! நீ என்ன காரியம் செஞ்சிருக்க ? பொசய்டன அங்க விட்டுட்டு ப்ரொமேத்தியஸ காப்பாத்தி இருக்க ? உனக்கு என்னாச்சு ?” என்று கோபமாக கேட்டான்.
நந்தினி, “இல்ல ஆதி, எனக்கென்னமோ நான் வித்தியாசமா உணருற மாதிரி இருக்கு. அதே நேரத்துல அவரு நம்மள எதுக்கு தாக்கணும் ? ஏன் ப்ரொமேத்தியஸ் நம்பள காப்பாத்தணும் ? ஏன் அவரு க்ரிசான்டானு கூப்பிட்டது எனக்கு ஏற்கனவே கேட்ட மாதிரி இருந்துச்சு” என்று தனக்குத் தானே பேசிக் கொள்வது போலக் கூற, மற்ற மூவரும் அவளை அதிர்ந்து பார்த்தனர்.
அதற்குள் ப்ரொமேத்தியஸூக்கு விழிப்பு வர, தன் முன்னால் அமர்ந்திருந்த நந்தினியைப் பார்த்து புன்னகைக்க முயன்றான். பொசய்டனின் சக்தி தாக்குதல் அவனது நெஞ்சில் பெருங்காயத்தை ஏற்படுத்தியிருக்க, அதிலிருந்து தங்க நிறத்தில் ஒரு திரவம் கசிந்துக் கொண்டிருந்தது. அவனுடைய புன்னகை, போரில் இறுதி வரை சண்டையிட்டு மரண படுக்கையில் இருக்கும் போது, வெற்றி அடைந்த செய்தியைக் கேட்டு மகிழும் வீரனுடைய சிரிப்பை ஒத்திருந்தது.
இன்னும் சிறிது நேரத்தில் தன்னுடைய உயிர் அந்தச் சிறிய கூட்டை விட்டுப் பிரிந்து விடும் என்பதை உணர்ந்த ப்ரொமேத்தியஸ், நந்தினியைப் பக்கத்தில் அழைத்தான்.
நந்தினி அவனுக்கு அருகில் செல்ல, அவளை அன்புடன் பார்த்த ப்ரொமேத்தியஸ் அவளது கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, மிகவும் கடினப்பட்டு, “க்ரிசான்டா… க்ரி.. சான்டா… பிரம்ம கிரந்தம்” என்று கூறிவிட்டு, தன் கண்களை மூடிக் கொண்டான். அவனது உடலில் இருந்து வழிந்திருந்த தங்க நிற திரவம் இப்போது காற்றோடு கலந்து மறையத் தொடங்கின. ப்ரொமேத்தியஸின் முகத்திலிருந்த தேஜஸ் மெல்ல மெல்ல குறைந்தது.
நந்தினிக்கு வார்த்தையால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகள், அவளது மனதை ஆட்டிப் படைத்தன. ப்ரொமேத்தியஸின் முகத்தில் சிரிப்பு உறைந்து இருக்க, அவனைப் பரிசோதித்த லூனா தலையை இடமும் வலமுமாக ஆட்டினாள்.
நந்தினிக்கு ப்ரொமேத்தியஸை, பேரரசர் யூரஸ் அந்தப் பெருங்கடல் சிறைக்கு அனுப்பியது நினைவுக்கு வர, அவர் தங்களை இங்கு அழைத்து வந்ததற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று யோசித்தாள்.
அந்த நேரத்தில், அந்தப் பெருங்கடலே அதிருமாறு இரு டிராகன்கள் வேகமாக அவர்களை நோக்கி வந்தன. அவர்களுள் லூனா மட்டும் எச்சரிக்கையாக, அவற்றைத் தாக்கத் தயாராக, அந்த டிராகன்கள் அவர்கள் நால்வரையும் கண்டு கொள்ளாமல், ப்ரொமேத்தியஸிடம் வந்து, அவனை எழுப்ப முயன்றன. அவன் எந்தப் பிரதிபலிப்பையும் காட்டாமல் இருக்கவும் அவனுக்கு அருகில் மண்டியிட்டு அமர்ந்தன.
நந்தினியின் தலைக்குள் பல்லாயிரக்கணக்கான கேள்வி வீரர்கள் சந்தேகம் என்னும் ஆயுதத்தைக் கொண்டு படையெடுக்க, அவளுக்கு எதையும் புரிந்துக் கொள்ள முடியாமல் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.
பிறகு, அவள் அந்தக் கோட்டைக்குள் வேகமாகச் செல்ல, “நந்து”, “சனா”, “நந்தினி” என்ற அழைப்புடன், ஆரியன், ஆதி மற்றும் லூனா அவளைப் பின் தொடர்ந்தனர். நந்தினி அவர்களைக் கண்டு கொள்ளாமல், அந்தக் கோட்டையிலிருந்த ஒவ்வொரு அறையையும் தேடிச் செல்ல, அவள் தேடிய அறையும் இறுதியில் கிட்டியது.
அந்த அறையில் சுவர் முழுவதும் காகிதங்கள் நிறைந்திருந்தன. அந்தக் குறிப்புகளைப் பார்த்ததும் ப்ரொமேத்தியஸ் சிறைப்படுத்தப்பட்டிருந்த அறை அதுதான் என்று புரிந்தது. அந்த அறையைத் தன் கண்களால் துழாவினாள். அங்கிருந்த மேஜையில் ஒரு பெரிய புத்தகம் இருப்பது தெரிய, அதை நெருங்கினாள் நந்தினி.
அந்தப் புத்தகத்தின் தோல் உரையில் ஏதோ ஓவியம் தீட்டி இருந்தது. ஏழு சிற்றரசர்களும், அகஸ்டஸூம், செலினாவும் அதில் உயிருடன் இருப்பது போல தத்ரூபமாகக் காட்சியளித்தனர்.
நந்தினிக்குத் துளியும் சந்தேகமில்லாமல், அந்தப் புத்தகம் தான் ‘பிரம்ம கிரந்தம்’ என்று தெரிந்தது.
அவள் அந்தப் புத்தகத்தைத் தொட்டவுடன், அது ஒளிர ஆரம்பிக்க, நந்தினியின் விழிகளும் தங்க நிறத்திற்கு மாறத் தொடங்கின. அவளுக்கும் அந்தப் புத்தகத்துக்கும் இடையே ஒரு இணைப்பு ஏற்படத் தொடங்கியது. அவளைத் தொடர்ந்து வந்த மூவரும், அவள் நின்றிருந்த நிலையைக் கண்டு அதிர்ந்தனர்.
அவர்கள் அவளை நெருங்க நெருங்க, பிரம்ம கிரந்தம் தங்க நிற ஒளியருவியைக் கொட்டத் தொடங்கியது.
அந்த இடத்தைச் சுற்றி ஒரு கவசம் உருவாக தொடங்க, மூவருக்கும் நந்தினியை எப்படி விடுவித்து தப்பிப்பது என்று புரியவில்லை. பின்னர், பூக்களிலிருந்து இதழ்கள் உதிர்வது போல, அந்தத் தங்க கவசம் உதிர்ந்தது.
அங்கு கண்ட காட்சியில், அவர்கள் அனைவரும் திகைக்க, சுற்றிலும் அங்குமிங்கும் பல மின்னல் கீற்றுகளாய் பாய்ந்துக் கொண்டிருந்தன நினைவு அலைகள்.
சிறிது நேரம், அவர்கள் பழையபடி நினைவலைகளில் மிதக்க, அதன்பின் அந்த இடத்தில் அழகிய காட்சிகள் தோன்ற ஆரம்பித்தன.
******
அதில் ஒரு சிறுவன் கவலையுடன் ஓர் அறையில் அமர்ந்திருப்பது தெரிந்தது. “அவனிடம் பேசலாமா ? வேண்டாமா ?” என்று சீரஸ் மனதிற்குள் ஒரு பெரிய போராட்டம் நடத்த, அவனுக்கு அருகில் நின்றிருந்த மினர்வா, இன்னும் எவ்வளவு நேரம் ஆனாலும், அவன் இப்படிதான் நிற்பான் என்பதை அறிந்து, அவனை அந்த அறைக்குள் தள்ளினாள். தன்னுடைய அறைக்கு முதல் முறையாக வந்த தன் தமையனைத் தாவி அணைத்துக் கொண்டான் ப்ரொமேத்தியஸ்.
“இதுவரை அவன் செய்யாத குற்றத்திற்கு, அவன் மேல் பழி சுமத்தி விட்டோமோ ?” என்று ஏற்கனவே சீரஸின் மனதில் இருந்த எண்ணம், இப்போது பெருக்கெடுக்க, ப்ரொமேத்தியஸ், “இனி நீ எப்பொழுதும் என்னுடன் பேசுவாய் என்று மினர்வா கூறியது உண்மையா, சீரஸ் ?” என்று கண்களில் எதிர்பார்ப்பைத் தேக்கிக் கொண்டு கேட்டான். சீரஸின் மனதில் பலங்கொண்டு தாக்கப்பட்டது போல உணர்ந்தான்.
செலினா கூறுவதைக் கூட கேட்காமல், தனக்கு கூறப்பட்ட செய்திகளை வைத்து தனது நண்பர்களோடு சேர்ந்து அவனை ஒதுக்கிவிட்டோமே என்று கவலையுற்றான். இப்பொழுதும், மினர்வா வற்புறுத்தி அவனைப் பற்றி கூறியிருக்காவிடில், அவனது பாசத்தை இழந்திருப்போம் என்று நினைத்து தேறிக்கொண்டான் சீரஸ்.
சீரஸ் மினர்வாவுக்குத் தன் கண்களால் நன்றி கூறியவன், “மேத்தியு ! இதுவரை உன்னை ஒதுக்கியதற்கு என்னை மன்னித்து விடு. அம்மாவின் இறப்பிற்கு உன் மேல் எந்தத் தவறும் இல்லை. அதேபோல், நீ டைட்டனின் மறுபிறப்பு என்று யார் கூறினாலும் கவலைப்படாதே. ஆனால்…” என்று பேச்சைத் தொடர முடியாமல் தடுமாற,
“நாம் இருவரும் இது போல் தனியாகவோ இல்லை மினர்வாவோடோ இருக்கும் போதுதான், என்னுடன் உன்னால் உரையாட முடியும். எதிர்காலத்தில், நீ பேரரசன் ஆகும் போது, உன்னுடைய நண்பர்கள் தான் சிற்றரசர்கள் ஆவார்கள். அதனால், அவர்களை நீ எதிர்க்க முடியாது. அவர்களும் என்னை ஒரு நாள் புரிந்துகொள்வார்கள். அப்போது நாம் எப்போதும் ஒன்றாகவே இருக்கலாம்” என்று சீரஸ் கூற நினைத்ததை ப்ரொமேத்தியஸ் கூற அவன் திகைப்புடன் தலையசைத்தான்.
சீரஸ், “உனக்கு எப்போதும் நாங்கள் துணையிருப்போம் என்பதையும் மறந்துவிடாதே, மேத்தியு” என்று கூற, ப்ரொமேத்தியஸ், அவனை இறுக அணைத்துக்கொண்டான்.
அன்று அவர்களுக்கு இடையில் ஒரு மறைமுகமான, ஆனால் பலமான சகோதரத்துவம் வேரூன்ற தொடங்கியது. இதற்கெல்லாம் காரணமான, மினர்வா அவர்கள் இருவரது பாசப் பிணைப்பையும் மகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சுற்றியிருந்தக் காட்சிகள் சூரியனைக் கண்ட பனித்துளிகள் போல மறைய ஆரம்பிக்க, அடுத்தக் காட்சிக்கான உருவங்கள் தோன்றத் தொடங்கின.
******
இந்த முறை அவர்கள் அனைவரும் எழுவர் மலைக்கு முன் நின்றிருந்தனர். அவர்கள் ஒரு அடி முன்னால் வைப்பதற்குள், வெகு வேகமாக அந்த மலைக்குள் இழுக்கப்பட்டனர். அங்கு ப்ரொமேத்தியஸ் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தான். யாருக்காகவோ காத்திருப்பது போல அவன் யோசனையில் மூழ்கி இருக்க, திடீரென்று அங்கே ஒரு மலர் தோன்றியது.
அதைக் கண்டு, அவன் புன்னகைக்க, அந்த மலர் ஒரு பெண்ணாக உருமாற்றம் பெற்றது. அதுவரை சந்தோசமாக இருந்த ப்ரொமேத்தியஸ் அந்தப் பெண்ணைக் கண்டவுடன் தன் முகத்தைக் கோபமாக வைத்திருப்பது போல மாற்றிக் கொள்ள, அந்தப் பெண் அவனருகில் வந்து, “கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது, மேத்தியு ! அதற்கு ஏன் கோபப்படுகிறாய் ?” என்று கேட்க,
ப்ரொமேத்தியஸ், “நம்முடைய உடன்படிக்கையின் படி, இன்று நீங்கள் தாமதமாக வந்ததால் உங்களுக்குத் தண்டனை காத்திருக்கிறது, செலினா” என்று கூற,
“பரவாயில்லையே, என் செல்ல மேத்தியுவுக்கு கோபமாக எல்லாம் பேச வருகிறதே. சரி, நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்” என்றார் செலினா.
ப்ரொமேத்தியஸ், “வழக்கம் போல இன்றும், என்னை யாரும் போர் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்த முறை வேண்டுமென்றே இளைய வல்கனை கொஞ்சம் தூண்டி விட்டேன். அவன் கூறிய பதில் என்ன தெரியுமா ?” என்று சுற்றி வளைத்துக் கேட்டு விட்டு, “டைட்டன்” என்றான்.
“சீரஸும் அதைப் பற்றிக் கேட்டால், தேவையில்லாத விஷயத்தைப் பற்றி ஏன் யோசிக்கின்றாய் என்று கேட்டு மழுப்பிவிடுகிறான்”
அந்தப் பெயரை, ப்ரொமேத்தியஸிடம் இருந்து எதிர்பாராத செலினாவின் முகம் உணர்வுகளை இழந்தது போல் ஆனது. அவனைச் சமாளிக்கும் விதமாக, “இப்போது அதைப் புரிந்துகொள்ளும் வயது உனக்கில்லை, மேத்தியு. ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்கிறேன். மற்றவர்கள் கூறுவது போல, உனக்கும் டைட்டனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நேரம் வரும்போது மற்றவர்களுக்கு தெரிந்ததைவிட உனக்கு அதிகமாக சொல்கிறேன். இப்போதைக்கு வேறு ஏதாவது சொல் செய்கிறேன்” என்றார் செலினா.
செலினா கூறினால், அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்பதை அறிந்திருந்த ப்ரொமேத்தியஸ், “சரி, அப்படியென்றால், என் தந்தை யூரஸிடம் எனக்கு பொசய்டனிடம் இருக்கும் அனைத்து புத்தகங்களையும் படிக்க அனுமதி பெற்றுத் தாருங்கள்” என்றான்.
செலினா, “பிரம்ம கிரந்தத்தைத் தவிர” என்றார்.
அவரை நோக்கி அர்த்தம் பொதிந்த பார்வையை வீசிய ப்ரொமேத்தியஸ், “புத்தகங்கள் தான் ஒரு மனிதனுக்குச் சிறந்த நண்பர்கள். அவர்கள் நம்முடன் சண்டை போடாமல் எப்போதும் நம்மோடு இருப்பார்கள் இல்லையா ?” என்று கண் சிமிட்டி கேட்க, யூரஸிடம் அன்றே விரிவாகப் பேசி ஒரு முடிவு எடுத்திட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் செலினா.
அங்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்குகள் அணைய, இருளரசன் தன் சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கத் தொடங்கினான். பின்னர், ஒரு சிறு ஜோதி தோன்றி எதிரி அரசனை புறமுதுகிட்டு ஓடச்செய்தது.
******
அந்தத் தளம் நீண்டு கொண்டே போக, அங்கே இரு இளைஞர்கள் பேசிக்கொண்டே நடந்தனர். அதில் ஒருவன் ப்ரொமேத்தியஸ் என்பதை நால்வரும் அறிந்துக்கொள்ள, மற்றொரு இளைஞனை எங்கேயோ பார்த்தது போல ஞாபகம் வந்தது. பார்ப்பதற்கு இளவயது உடல் கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், வயதான தோற்றம் அதை மட்டுப்படுத்தியது. ‘பொசய்டன்’ என்ற பெயர் மனதில் உதித்தது.
இளைய பொசய்டன், “உனக்குத் தைரியம் இல்லை என்பதை ஒத்துக் கொள் மேத்தியு” என்று சிரித்துக்கொண்டே கூற,
ப்ரொமேத்தியஸ், “இப்போது தான் மிகவும் கஷ்டப்பட்டு, எனக்குப் பிரம்ம கிரந்தம் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை வீணாக்கிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை, பொசய்டன்” என்றான்.
இளைய பொசய்டன், “சரி, நீ டைட்டனுடைய குறிப்புகளை எல்லாம் பார்க்க வேண்டாம், அந்த அறைக்குள் எப்படி நுழைவது என்று கூறினால் கூட, நீ கேட்ட மாதிரி நானும் என் தந்தையிடம் உனக்குத் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் பெற்றுத் தருகிறேன். இது உனக்கு லாபம் இல்லையா ?” என்று கேட்க,
ப்ரொமேத்தியஸ் யோசித்து விட்டு, “சரி” என்று ஒத்துக்கொண்டான். அவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே நடந்து செல்ல,
ஒரு குரல், “முட்டாள் ! ப்ரொமேத்தியஸ், எல்லோரும் உன்னை டைட்டன் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் நீ டைட்டனுடைய கால் தூசிக்குக் கூட சமமாக மாட்டாய். ஏனென்றால், டைட்டன் யாரையும் நம்ப மாட்டான். அதாவது நான் யாரையும் நம்ப மாட்டேன். இனி உன்னை வைத்துத் தான் என்னுடைய விளையாட்டைத் தொடங்கப் போகிறேன், ப்ரொமேத்தியஸ்” என்று கூறியது ப்ரொமேத்தியஸூக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.
ஆனால், நொடிப் பொழுது இளைய பொசய்டனின் குரல் டைட்டனுடைய குரலைப் போல இருப்பதை கவனித்த நால்வரும் அதிர்ந்தனர். “அப்படியென்றால், பொசய்டன் தான் டைட்டனா ? அதனால் தான் அவர் எங்களைத் தாக்கினாரா ?” போன்ற கேள்விகள் நால்வர் மனதிலும் எழ, அவர்களை அதற்குமேல் யோசிக்க விடாமல், அடுத்தக் காட்சி உயிர் பெற ஆரம்பித்தது.
******
இந்த முறை அவர்கள் முன் ஒரு சிறிய வீடு போலக் காட்சியளிக்கும் ஒரு கட்டடம் கம்பீரமாக நின்றது. அதற்குள் இவர்கள் நுழைய அங்கே முழுவதும் புத்தகங்கள் அடுக்கடுக்காக எல்லை இல்லாமல், நீண்டு கொண்டே சென்றது. நால்வரின் மனதிலும், “நம்மை விட அதிக அறிவைப் பெற்றவர்கள் ஏன் இன்னும் புத்தகத்தை வைத்திருக்கிறார்கள் ?” என்ற எண்ணம் தோன்றியது.
அங்கே எந்தவித கவலையுமின்றி, ப்ரொமேத்தியஸ் நின்றிருக்க, அவனுக்கு முன்னால் நின்றிருந்த தலைமை மந்திரி பொசய்டன் அவனைக் கோபமாக பார்த்துக்கொண்டிருந்தார். அப்படியே சிறிது நேரம் கழிய, அவனிடம் இருந்து எந்த பதிலும் வராது என்பதை உணர்ந்த பொசய்டன், “நேற்று இரவு நீ டைட்டனின் அறைக்குள் சென்றதைச் சேர்த்தால், எத்தனை முறை வரும் தெரியுமா, ப்ரொமேத்தியஸ் ?” என்று கோபத்துடன் கேட்க,
“மன்னித்து விடுங்கள், பொசய்டன். நான் இதையெல்லாம் கணக்கு வைத்துக் கொள்வதில்லை” என்று ப்ரொமேத்தியஸ் புன்னகையுடன் கூறினான்.
“பேசாதே ! எத்தனை முறை உன்னிடம் கூறுகிறேன், அந்த அறைக்குப் போகாதே என்று. இன்று உன் தந்தை என்னிடம் நேரடியாகவே கேட்டு விட்டார். அப்படி என்னதான் அந்த அறையில் செய்து கொண்டிருக்கிறாய் ?” என்று கேட்டார்.
ப்ரொமேத்தியஸ், “டைட்டன் புத்திசாலித்தனமாக இருந்தாலும், அவன் அதைத் தீய வழியில் தான் பயன்படுத்தினான். அதை நான் கொஞ்சம் சரியான வழியில் பயன்படுத்துகின்றேன். இதுவரை நீங்கள் உருவாக்கிய ஆயுதத்தில், நான் சின்ன மாற்றங்களைச் செய்தேன், அவ்வளவுதான். டைட்டனுடைய அறையில் தான் அதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருக்கின்றன” என்றான்.
பொசய்டன், “அப்படி என்ன மாற்றத்தைச் செய்தாய் ?” என்று கேட்க, ப்ரொமேத்தியஸ், “தொடராற்றல் (Perpetual Energy)” என்றான்.
அதைக் கேட்ட பொசய்டன் அதிர்ந்து பார்க்க, “ஆமாம், நாம் அந்த ஆயுதங்களுக்கு ஒருமுறை சக்திகளைக் கொடுத்தால் போதும். அதற்குப் பிறகு, அதில் முடிவேயில்லாமல் சக்திகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கும்” என்றான்.
“இதை நான் உன்னிடம் சொல்லக் கூடாது என்றுதான் இருந்தேன் ப்ரொமேத்தியஸ். ஆனால், இப்போது சூழ்நிலை அப்படி உருவாகிவிட்டது, உன்னுடைய கண்டுபிடிப்புகளால் கயா கிரகத்தின் பொற்காலம் தொடங்கப் போகிறது. உன் முயற்சியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் !” என்றவர் தொடர்ந்து,
“இருந்தாலும், நீ உன் தந்தையிடம் பேசலாம் அல்லவா, இப்போது அவர் தனது இயல்புகளைப் பெரிய அளவில் மாற்றிக் கொண்டுள்ளார்” என்றார்.
அதுவரை புன்னகை தவழ்ந்த ப்ரொமேத்தியஸின் முகம் இறுக்கமானது. “இனி இந்த விஷயத்தை பற்றி என்னிடம் பேசாதீர்கள்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து வெளியேறியவனைக் கண்டு, அவனை என்ன சொல்லி மாற்றுவது என்று ஆயாசமாக உணர்ந்தார் பொசய்டன்.
வேகமாக திரும்பி வந்தவன், “அதேபோல், என்னை எதுவும் செய்ய முடியாததால் இளைய பொசய்டனைக் கடிந்து கொள்ளாதீர்கள். எனக்கிருக்கும் சக தோழன் அவன் ஒருவனே” என்று புன்னகையுடன் கூறிவிட்டு சென்றான்.
இதை எல்லாம் மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருந்த ஒரு உருவம், “பரவாயில்லை, ப்ரொமேத்தியஸ் நான் நினைத்ததை விட நீ அறிவாளியாகத் தான் இருக்கிறாய். நான் உன் கண்களில் படுமாறு வைத்திருந்த காகிதத்தைப் பார்த்து நான், நீ செய்ய வேண்டும் என்று நினைத்ததை செய்யத் தொடங்கிவிட்டாயே” என்று மனதில் மெச்சிக் கொண்டது.
நந்தினியின் கனவில் வந்த பூக்கள், மேலிருந்து மாரிப்போல பொழியத் தொடங்க, அவ்வண்ணமயமான மலர்கள் அடுத்தக் காட்சியாய் மாறத் தொடங்கின.
******
அந்த அறை முழுவதையும் அந்தகாரம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இருள் நீயிருக்க, ஒளி ‘நானிருக்க கூடாதா’ என்று போட்டி போட்டுக்கொண்டு அவ்வறையின் நடுப்பகுதியில் இருந்த ஒரு மேடையின் மேல் தனது ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருந்தது.
அங்கே ஓர் உருவம், செயற்கையாக ஒரு உயிரினத்திலிருந்து சக்திகளை எடுக்க முயன்று கொண்டிருந்தது. அதற்கு அது ஒரு பெண்ணை வைத்து பரிசோதனை செய்ய, இறுதியில் வந்த முடிவுகள் அதற்கு சாதகமாக இல்லையென்பதை அதன் கோபம் மூலம் அறிந்துக்கொண்டனர் நால்வரும்.
அந்தப் பெண்ணும் உயிருக்குப் போராடும் நிலையில் இருக்க, அதன் மனதில் மற்றொரு திட்டம் உருவானது. இதுவரை ப்ரொமேத்தியஸை மற்றவர்களின் பார்வையில் தவறாகக் காட்டிய அவ்வுருவம், இப்போது ப்ரொமேத்தியஸின் கோபத்தை மற்றவர்கள் பக்கம் திருப்ப ஒரு திட்டத்தைத் தீட்டியது.
சமீப காலமாக, அவனுடைய ஆராய்ச்சிகள் தனக்கு எதிராக திரும்பிக் கொண்டிருப்பதை உணர்ந்த அவ்வுருவம், அவனை எப்படியாவது இங்கிருந்து அகற்ற வேண்டும் என்று யோசிக்க, அதன் மனதில் அந்த திட்டம் உருவானது.
தவறே செய்யாத போது ப்ரொமேத்தியஸின் மீது குற்றத்தைச் சுமத்தினால், அவன் அதனை ஒத்துக்கொள்ளாமல் எதிர்ப்பான், அதனை வைத்து அவனுக்கும் யூரஸிற்கும் இருக்கும் பிரிவினையில் மேலும் விரிசல் உருவாக்கலாம் என்றும் நினைத்தது அவ்வுருவம்.
அந்தப் பெண்ணின் உடலை வேகமாக ப்ரொமேத்தியஸின் அறைக்குக் கொண்டு சென்று சேர்த்தது. தன் வேலையை விரைவில் முடித்து விட்ட அவ்வுருவம், அங்கிருந்து வெளியேற, சிறிது நேரத்தில், ப்ரொமேத்தியஸ் தனது அறைக்கு வந்தான்.
தன் அறையில் ஒரு பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ந்த ப்ரொமேத்தியஸ், இப்போது இந்தப் பெண்ணை யார் இங்கு சேர்த்திருப்பார்கள் என்று யோசிப்பது வீண் என்று நினைத்தவன், அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளிக்க ஆரம்பித்தான்.
இளைய பொசய்டன் வேகமாக ப்ரொமேத்தியஸின் அறையை நோக்கி ஓடுவதை, தோட்டத்தில் நடந்துக் கொண்டிருந்த தலைமை மந்திரியும், இளைய வல்கனும் பார்த்துவிட, அவர்கள் அவனை அழைத்து, “பொறுமை, பொசய்டன். எதற்காக இவ்வளவு வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறாய் ?” என்று கேட்க,
பொசய்டன் இளைய வல்கனைப் பார்த்துவிட்டு, “ஒன்றுமில்லை தந்தையே…” என்று மழுப்பும் விதமாக கூற, வல்கனுக்கு ப்ரொமேத்தியஸ் தொடர்புடைய ஏதோ ஒரு விஷயத்தை பொசய்டன் மறைக்கிறான் என்று தோன்ற,
வல்கன் தலைமை மந்திரியிடம், “உங்கள் மகனுக்கு என் முன்னர் உண்மையைச் சொல்ல விருப்பம் இல்லாதது போல் தெரிகிறது. நான் நேரடியாக ப்ரொமேத்தியஸிடமே கேட்டு தெரிந்துக் கொள்கிறேன்” என்று புன்னகையுடன் கூற,
தலைமை மந்திரியின் பார்வையில் கனம் கூட,
பொசய்டன், “ப்ரொமேத்தியஸ்… யாரோ ஒரு பெண்ணைச் சுமந்து சென்றது போல் தெரிந்தது. நிச்சயம் அவன் தவறாக எதையும் செய்திருக்க மாட்டான். இருப்பினும் என்ன பிரச்சனை என்பதை தெரிந்துக் கொள்வதற்காக சென்றுக் கொண்டிருக்கிறேன்” என்று வல்கனைப் பார்க்காமல் எப்படியோ கூறிமுடித்தான்.
ப்ரொமேத்தியஸைச் சிக்க வைப்பதற்கு கிடைத்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்று முடிவு செய்த வல்கன், “தலைமை மந்திரி, வாருங்கள் ! நாம் உடனே ப்ரொமேத்தியஸின் அறைக்குச் சென்று பார்ப்போம்” என்று அவரைக் கோபத்துடன் இழுத்துச் செல்லாத குறையாக அழைத்துக் கொண்டு போக, பொசய்டன் என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானிக்க முடியாமல், ப்ரொமேத்தியஸ் எந்தப் பிரச்சினையையும் இழுத்து வைத்திருக்க கூடாது என்று நினைத்துக் கொண்டே அவர்களைப் பின்தொடர்ந்தான்.
வேகமாக தனது அறையின் கதவைத் திறந்து கொண்டு முன்னறிவிப்பின்றி, அங்கு வந்து நின்ற வல்கனையும், தலைமை மந்திரியையும் அதிர்ச்சியுடன் பார்த்தான் ப்ரொமேத்தியஸ். அவர்களுக்குப் பின்னால் பொசய்டனும் இருப்பது தெரிய, அவனுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.
அவன் அந்தப் பெண்ணிற்குச் சிகிச்சை அளிப்பதை சோதனை செய்வதாகக் கருதிய வல்கன், அவனது அதிர்ச்சியைக் கண்டு தவறாகப் புரிந்து கொண்டு, அவனைத் தன் சக்திகள் மூலம் சிறைபிடித்தான். அந்தப் பெண்ணின் நிலையைக் கண்ட தலைமை மந்திரிக்கு, ப்ரொமேத்தியஸ் நல்லவன் என்று ஒருபுறம் நிச்சயமாக தெரிந்திருந்தாலும், கண் முன்னால் இருந்த சாட்சி வல்கனைத் தடுக்க மறுத்தது.
வல்கன், மேலும் ப்ரொமேத்தியஸ் அங்கு சோதனை செய்து கொண்டிருந்த ஆயுதங்களையும் கண்டுவிட, ப்ரொமேத்தியஸின் குற்றங்கள் அதிகரித்ததன. அதற்குப் பின்னர், அவனுக்கு யூரஸ் தண்டனை அளித்து விட, அதைக் கண்டு சீரஸ், மினர்வா, தலைமை மந்திரி மற்றும் பொசய்டன் நால்வவரும் மனதுக்குள் வருந்தினர்.
அப்படியும் சீரஸ், ப்ரொமேத்தியஸிடம் தனியாக, “மேத்தியு ! உன் மீது குற்றம் இருக்காது என்று எனக்கு தெரியும். நான் வேண்டுமானால் தந்தையிடம் பேசி பார்க்கட்டுமா ?” என்று கேட்க,
ப்ரொமேத்தியஸ், “வேண்டாம் சீரஸ். எனக்கு என்னுடைய சோதனைகளை நடத்த ஒரு தனிமையான இடம் தேவைப்படுகிறது. அதற்கு அந்தக் கோட்டைதான் சரியான இடம். அங்கு எனக்கு பிடித்த டிராகன்கள் கூட இருக்கும். அதனால், நான் மகிழ்ச்சியாகவே இருப்பேன்.
அதுமட்டுமில்லாமல், எங்கள் இருவருக்கும் சிறிது காலம் இடைவேளி தேவைப்படுகிறது. மேலும், என்னால் உங்களுக்குள் பிரிவு ஏற்பட வேண்டாம்” என்று கூற, சீரஸ் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டான்.
இந்த முறை, தன்னுடைய வெற்றிக்கான முதல் படியை எடுத்து வைத்ததாக நினைத்துக் கொண்டாது அவ்வுருவம். ஆனால், அவ்வுருவம் சீரஸுக்கும் ப்ரொமேத்தியஸிற்கும் இடையே இருந்த சகோதரப் பாசத்தையும் நட்பையும் பற்றி அறிந்திருக்கவில்லை. அந்த இடத்தில் தான் அவ்வுருவம் முதல் முறையாகத் தவறு செய்தது.
நந்தினிக்கு தன்னைச் சுற்றி நடந்துக் கொண்டிருந்த நிகழ்வுகளை வைத்து பொசய்டன் தான் டைட்டனின் மறுபிறப்பு என்பதை, அவளது மூளை அவளுக்கு வலிக்க வலிக்க உணர்த்திக் கொண்டிருந்தது.
நினைவுகள் தென்றலில் இருந்து புயலாக மாறி, அந்த நால்வரையும் ஒரு நிலையில் இருக்க விடாமல், வேகமாக அடுத்த காட்சிக்கு தூக்கிச் சென்றது.
******
சுற்றியிருந்த சூழல் மறைந்து, எழுவர் மலை உருவாகத் தொடங்கியது. மலையின் உள் குடையப்பட்டிருந்த குகை அறையின் நடுவே, ஒரு பெரிய தங்கப் பெட்டியில், நிர்மலமான முகத்துடன் யூரஸ் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவரைச் சுற்றி எண்கோண கட்டத்தில், ஏழு சிற்றரசர்களும் தலைமை மந்திரியும் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தனர்.
யூரஸுக்கு நேர் உயரே செலினா பறந்துக் கொண்டிருக்க, இதே அமைப்பில் அவர்களது வாரிசுகள் அமர்ந்திருந்தனர். சீரஸின் முகத்தில் வேதனையின் சாயல் இருந்தாலும், தனக்கு இருக்கும் கடமையை எண்ணி தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தான்.
குகைக்கு வெளியே கயா கிரக மக்கள் தங்கள் வருங்கால அரசர்களின் வருகைக்காக காத்திருந்தனர். இது அவர்கள், செலினாவின் வரவுக்கு பிறகான பலநூறு மில்லியன் ஆண்டுகளாக பின்பற்றி வரும் சடங்கு தான்.
இதற்கு பெயர் உருபோரஸ் ( OUROBORUS ). இதன் சின்னம் கயா கிரகத்தின் இலச்சினையான டிராகன் ஒன்று, தனது வாலைத் தானே கடிப்பது போல இருக்கும். அதாவது வாழ்க்கை என்பதற்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை என்பதை குறிக்கிறது. கயா கிரகத்தின் பேரரசர் இயற்கையாக இறந்துவிட்டாலோ அல்லது சிற்றரசர்கள் மற்றும் தலைமை மந்திரியின் ஒப்புதலுடனோ, தங்களது வாரிசுகளிடம் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு, தங்களது உயிரைத் தியாகம் செய்வர்.
பிரம்ம கிரந்தத்தில் சேமிக்கப்படும் நினைவுகள் தவிர மீதமுள்ளவை சோல் பாக்ஸிற்கு அனுப்பப்பட்டு ஆற்றலாக மாற்றப்படும். அதேசமயம், செலினாவால் அவர்களது மூதாதையர்களுக்கு வழிவழியாக கடத்தப்பட்ட சக்திகள் புதிய அரசர்களுக்குக் கிடைக்கும்.
ஆற்றலில் இருந்து உருவானவர்கள் இறுதியில் ஆற்றலாகவே மாற்றப்படுவார்கள் என்பது தான் அந்தச் சின்னத்தின் உள்ளர்த்தம். ஆனால், பெரும்பாலான கயா கிரக மக்களுக்கு, இந்த விஷயம் தெரியாது.
செலினா அந்தச் சடங்கின் இறுதி கட்டமான, சக்திகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தத் தொடங்க, வெகு தூரத்தில் அமைந்திருந்த வெலாரிஸ் கோட்டைக்குள் வெகு காலம் கழித்து நுழைந்தான் ப்ரொமேத்தியஸ். காவலர்களில் பெரும்பாலானோர் எழுவர் மலையிலிருக்க, இங்கிருப்போரை ஏமாற்றி உள்ளே சென்றது அவனுக்கு பெரிய காரியம் இல்லை.
கயா கிரகத்தின் முன்னாள் பேரரசரும், தனது தந்தையுமான யூரஸின் அறைக்குள் உணர்ச்சி துடைத்த முகத்துடனும், கனத்த இதயத்துடனும் ப்ரொமேத்தியஸ் சென்றான். அவர் வழக்கமாக அமரும் இடத்தை நோக்கி கண்கள் செல்ல, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அங்கிருந்த சாய்வான மேடையில் வைக்கப் பட்டிருந்த ‘பிரம்ம கிரந்தத்தை’ நோக்கிச் சென்றான்.
அதை திறந்தவுடன், அவன் கண்கள் தங்க நிறத்தில் ஒளிரத் தொடங்க, அவனுக்கும் பிரம்ம கிரந்தத்துக்கும் இணைப்பு உருவாக ஆரம்பித்தது. அவன் யூரஸின் நினைவுகளுக்குள் சென்று பார்க்க, பெரும்பான்மையான நினைவலைகள் இவனைப் பற்றியே இருந்தது.
கண்கள் கலங்க, அவற்றை ஒவ்வொன்றாக பார்க்க பார்க்க, யூரஸின் மறைமுகமான பாசத்தைக் கண்டு மகிழ்வதா அல்லது கடைசி வரை தன்னுடன் ஒரு தந்தையாக, ஒரு தோழனாக, ஒரு வழிகாட்டியாக நடந்துக்கொள்ளவில்லையே என்று வருத்தப்படுவதா என்று சிலை போல அப்படியே அமர்ந்துவிட்டான்.
சில மணிநேரங்கள், சீரஸ் வரும் வரை அப்படியே உட்கார்ந்திருந்தவன், அவனையும் மினர்வாவையும் கண்டவன், கதறி அழத்தொடங்கினான்.
அவர்கள் முன்னிருந்த மூவரும் மறைய, தங்களது கால்கள் தண்ணீரில் நனைவதை உணர்ந்தனர். நீரின் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து, அவர்களை அதில் மூழ்கச் செய்ய, அடுத்தக் காட்சி பிறந்தது.