மறுநாள் காலையில் உதயா கண்விழித்த போது உதய் டிப்டாப்பாய் தயாராகி இருக்க அவனை குழப்பமாய் பார்த்தபடி,
“எங்க உதய் கிளம்பிட்டீங்க..இவ்வளவு சீக்கிரம்..”
என்றாள் இன்னும் தூக்கம் விலகாத குரலில்..
“ம்ம்ம்..திருப்பூருக்கு…”
என்றதும் விழிகள் பட்டென்று மலர ஆனாலும் சிறு சந்தேகத்தோடு,
“நீங்க போறீங்களா..சசிண்ணா வீட்டுக்கோ..”
என்று அவள் இழுக்க அவனோ கைகடிகாரத்தை பார்த்து,
“இல்ல..என் மாமியார் வீட்டுக்கு..ஒரு ரெண்டு நாள் ஸ்டே பண்ண பேக் பண்ணியாச்சு..டிக்கெட் போட்டாச்சு..இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பணும்..நீ வரீயா..இல்ல இன்னும் தூங்கணுமா..”
என்று அவன் சொல்ல,
“ஹை..நிஜமாவா..”
என்று துள்ளி எழுந்த உதயா,
“2 மினிட்ஸ்..” என்று வேகமாய் குளியலறையை நோக்கி சென்றவள் அதே வேகத்தில் மீண்டும் வந்து அவன் தோளை பற்றி தன் உயரத்திற்கு இழுத்து கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட எதிர்பாரா முத்ததில் ஜிவ்வென்று இருந்தாலும்,
“ஏய்..சீ..பல்லே விளக்காம..டெர்ட்டீ கிஸ்..”
என்று அவன் முகம் சுளிக்க இடுப்பில் கையூன்றி,
“இது டெர்ட்டீ கிஸ்ஸா..அப்போ அன்னைக்கு நீ மட்டும்..”
என்று ஆரம்பித்தவள் ஏதோ சொல்ல வேகமாய் அவள் வாயை பொத்தி,
“தெரியாமல் சொல்லிட்டேன் ஆத்தா..போ..போ கிளம்பு..”
என்க கண்களில் குறும்போடு,
“அது..அந்த பயம்..” என்றவள் வேண்டுமென்ற மறுபடியும் ஒருமுறை அதே கன்னத்தை கடித்துவிட்டு செல்ல,
“ஸ்ஸ்..ஆ..ராட்சசி..”
என்று முனங்கினாலும் மீசைகடியில் மறைக்கப்பட்ட ரகசியப் புன்னகை பல அர்த்தம் சொன்னது.
ஒரு மாதம் கழித்து வந்த தங்கள் வீட்டு இளவரசியை ஏதோ பல வருடம் கழித்து பார்ப்பதுப்போல் மொத்த குடும்பமும் ஆர்பாட்டமாய் வரவேற்றது.
வந்ததுமே தந்தையின் கையை பற்றிக் கொண்ட உதயா,
“மிஸ் யூ ப்பா..” என்று செல்லம் கொஞ்ச அவள் கன்னம் வழித்து,
“வாடாம்மா உதயா..எனக்கும் தான் உன்னை பார்க்காமல் மனசே சரியில்லை..நல்லா இருக்கியா கண்ணு..”
என்று மகளிடம் பாசமாக கேட்டவர் மருமகனை வரவேற்கவும் தவரவில்லை.
“நீங்களாவது அங்க வரலாம்ல ப்பா..”
“நான் கூட மதிட்ட சொன்னேன் உதயாம்மா..ஒரு எட்டு சென்னை போயிட்டு வந்திடவான்னு..ஆனால் உங்க உடம்பு இருக்கிற நிலைல தூர பயணம் எல்லாம் சரி வராதுப்பான்னு சொல்லிட்டான்..”
என்று சொல்ல முன்புப்போல் தந்தையின் உடல்நிலை இல்லை என்பதை அறிந்திருந்த உதயாவும் மதி சொன்னதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.
மொத்த குடும்பமும் அவரவர் சார்பில் அழைக்க என்று வரவேற்பு படலம் ஓட்ட தங்கையை வாஞ்சையோடு அணைத்துக் கொண்ட மதி உதய்யிடம் ஒற்றை வார்த்தையோடு விலகி கொண்டான்.உதய்யும் அதேபோல் தலையசைப்பு மட்டுமே..!! ஆனால் எப்பொழுதும் மதியை பார்க்கும் போது தோன்றும் அலட்சியத்திற்கு பதில் ஒரு தயக்கம் இருந்தது.
தன் வேலையை பற்றி கேட்டால் என்ன சொல்வது என்ற சங்கடம் உதய்யிடம் இருக்க அதற்கு மாறாய் அதனை குறித்து யாரும் பேசவே இல்லை.பொதுவான விஷயங்களையே பேசிக் கொண்டிருந்தனர்.
பெண்கள் உள்ளே சென்றுவிட மற்றவர்கள் கூடத்தில் அமர்ந்து விட்டனர்.
உதய் – மதிவாணனின் உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை.வழக்கம் போல் எதிரெதிர் துருவமாய் முகத்தை திருப்பிக் கொண்டனர்.தயாளன் தான் உதய்யிடம் பேச மதியும் அங்கேயே இருந்தாலும் அவர்கள் பேச்சில் கலந்துக் கொள்ளாது அர்ஜூனை மடியில் அமர்த்தி அவனோடு கவனமாய் இருந்தான்.
இதனை உள்ளிருந்தே கவனித்த உதயா,
“ம்க்கும்..எங்க அண்ணாட்ட விறைச்சிக்கிறதுல மட்டும் அக்காவும் தம்பியும் ஒரே மாதிரி இருக்காங்கப்பா..”
என்று சலிப்பாய் முணுமுணுத்தது அருகில் நின்ற வெண்பா,லாவண்யா காதிலும் விழுந்தது.
“என்னடி சொன்ன..”
என்று வெண்பா அவள் காதை திருக,
“ஆஆ..அண்ணி..சாரி அண்ணி…வாய் தவறி சரியா சொல்லிட்டேன்..”
உதயா சொல்ல காதை விடுத்து கன்னத்தில் தட்டிய வெண்பா,
“அப்போ முறைச்சதுக்கு எல்லாம் சேர்த்து தான் உங்க அண்ணா மேல இப்ப எனக்கு ஒரே பியார்..பியாரா பொங்குதே..அதே மாதிரி என் தம்பிக்கும் கொஞ்ச நாள் கழிச்சு பியார்..பியாரா வரும்..”
கூறி கண்சிமிட்டவும் அதற்கும் அயராது,
“ஹான்..மதிண்ணா மேல உங்க தம்பிக்கு பாசம் மட்டும் வந்தா போதும்..மத்தபடி அவரோட பியார்..பிரேமா..காதல் எல்லாம் எனக்கு மட்டும் தானாக்கும்..”
என்று நொடிக்க, “அது சரி..” என்று ஒரு மார்க்கமாய் தலையசைத்து கோரஸ் போட்டனர் அண்ணிமார்கள்..
சற்று நேரம் சென்றிருக்க பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்த தம்பியை,
“தயா..” என்று அழைத்த மதி ஏதோ ஜாடை காட்ட அதனை புரிந்து தயாவும்,
“நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் பாருங்க..ட்ராவல் பண்ணது டயர்டா இருக்கும்ல..நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க உதய்..”
என்றவன் உதயாவை அழைத்து உதய்யை கவனிக்க சொல்ல அனைத்தையும் பார்த்திருந்தவன்,
“யப்பா..எல்லாரையும் கண்ணசைப்புலே கட்டுப்பட வைப்பார் போல..”
என்று நினைத்துக் கொண்டு மனைவியோடு எழுந்து சென்றான்.
உதயாவின் அறையில் மெத்தை விரிப்பில் இருந்து அனைத்தும் மாற்றப்பட்டு படு சுத்தமாய் இருக்க,
“என் ரூமா இது..எவ்வளவு க்ளீனா இருக்கு..அண்ணியோட வேலையா தான் இருக்கும்..நாம வரோம்னு ஏற்கெனவே சொல்லிட்டீங்களா..”
என்று ஆச்சரியமாய் கூறியவள் அவன் பதிலை எதிர்பாராது,
“சரி..நீங்க ரெஸ்ட் எடுங்க..நான் கீழ போறேன்..”
என்க,
“ஹே..உனக்கு லீவ்ல கூட காலங்காத்தாலே எழுந்து கிளம்ப வைச்சுட்டேன்..உனக்கு டயர்டா இல்ல..”
என்று கேட்டவனிடம்,
“டயர்டா எனக்கா..நெவர்..” என்று விளம்பர பாணியில் கூறி பின்,
“அது மட்டும் இல்ல..நான் இல்லாத போது நடந்த ஏதோ ஒன்ன என் மருமகப் புள்ள கண்டுப் பிடிச்சு வைச்சிருக்கு..அது என்னானு போய் தெரிஞ்சிக்கிட்டு வரேன்..”
என்று இரகசியமாய் சொல்லவும் சிரித்துவிட்டான்.
“ஆனாலும் நிலாவ நீ ஒரு மினி உதயாவா உருவாக்கிட்டு இருக்கடி..”
என்று மேலும் சிரிக்க,
“இன்னோர் உதயாவை எல்லாம் உலகம் தாங்காது உதயகுமாரா..நிலா எல்லாம் நமக்கு மேல..வேற லெவல்..”
என்று கூறி சிட்டாய் பறந்துவிட்டாள்.
அதே புன்னகையோடு கட்டிலில் சாய்ந்து அமர்ந்த உதய்யால் இந்த இடம் மாற்றம் மனதின் அலைபுறுதலை குறைத்து ஒரு அமைதியை கொடுப்பதை உணர முடிந்தது.
தான் எடுத்திருக்கும் முடிவை மீண்டும் எண்ணிப் பார்த்தவன் இதனை சொன்னால் மற்றவர்களிடம் என்ன மாதிரி பிரதிபலிப்பு இருக்கும் என்று யோசித்தபடி இருந்தான்.
உதயாவின் வருகைகாகவே காத்திருந்த நிலா அவள் அறையில் இருந்து வந்ததுமே அவள் கைப்பற்றி எங்கோ இழுத்து செல்ல,
“அப்படி என்ன சீக்ரேட் நிலா..வந்ததும் வராததுமா இழுத்துட்டு போற..”
என்று குரலை தாழ்த்தி ஹஸ்கி வாய்சில் கேட்கவும்,
“நாம என்ன திருடவா போறோம்..ஹஸ்கி வாய்ஸில் பேசி நீயே காட்டிக் கொடுத்திடுவ போல அத்தை..நார்மலா பேசு..”
என்று அவளுக்கே நோஸ்கட் கொடுக்கவும்,
“தேவை தாண்டி..” என்று தலையில் அடித்துக் கொண்டு அவளோடு நடக்க அவள் ஜெகனின் அறைக்கு அழைத்து சென்றாள்.
“இங்க என்ன நிலா..!! வாலு..ஜெகன் இல்லாதப்ப அவன் ரூமை நோண்டாதன்னு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன்..”
நங்கென்று தலையில் ஒன்று வைக்க,
“அய்யோ அத்தை..பிராமிஸ்..இது சித்தப்பா இருந்தப்ப தான் பார்த்தேன்..”
என்று தலையை தேய்த்துக் கொண்டே கூறியவள் கடகடவென ஏறி சென்று கப்போர்ட்டை குடையவும் , “பயபுள்ள எலி சேட்டை எல்லாம் பண்ணுதே..” என்று பார்த்து நின்றாள்.
தேடியது கிடைத்ததும் எடுத்துக் கொண்டு வந்து உதயாவிடம் நீட்ட அதனை வாங்கி பார்த்தவள்,
“இது ஸ்ருதி…அடியேய் இவளை நான் பார்த்ததே இல்லையா..இந்த ஃபோட்டோவை காட்ட தான் இம்புட்டு அலப்பறையா..”
என்று கேட்டாள்.ஸ்ருதி – அத்தை மகள்களுள் ஒருத்தி..!!
அவளை முறைத்த சின்ன வாண்டு,
“மங்குனி அத்த..அது ஸ்ருதி சித்தின்னு எனக்கும் தெரியும்…அந்த ஃபோடோவை நல்லா பாரு..”
என்று சொல்ல உத்து உத்து பார்க்கவும் தான் அது புரிந்தது.
அந்த புகைப்படம் உதயாவின் வரவேற்பன்று எடுத்திருக்க வேண்டும்.ஏனெனில் மண்டப முகப்பில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ‘உதய் வெட்ஸ் உதயா..’ என்று வைக்கப் பட்டிருந்த பலகை அருகில் நின்று எடுத்திருக்கிறாள்.
அந்த புகைப்படத்தில் உதய் என்றதை அடித்து கீழே ஜெகன் என்றும் உதயா என்றதை அடித்து கீழே ஸ்ருதி என்றும் இன்னும் சற்று கீழே ‘வில் சூன்..’ என்று எழுதியிருந்தது.
கண்கள் வெளியே வந்து விழுந்துவிடும் அளவு விரித்து ஆச்சரியமாய் பார்த்த உதயா,
“அடப்பாவி ஜெகன்..சும்மா சைட் தான் அடிச்சேன்னு நினைச்சேன்..நீ ஒரு படமே ஓட்டியிருக்க..”
என்றெண்ணி அதிர்ந்தவள், “பாவி..எவ்வளவு நேக்கா மறைச்சிட்டான்..இன்னைக்கு கால் பண்ணுபோது இருக்கு அவனுக்கு..”
என்று நிலாவை பார்த்து,
“ஆமா..நீ போட்டு கொடுக்கணும்னா முதல்ல போய் உங்க அப்பாட்ட தானே வத்தி வைப்ப..இப்ப என்ன அமைதியா என்னுட்ட மட்டும் சொல்ற..போகும் முன்னாடி உன் சித்தப்பா சொல்லாமல் இருக்க தனியா கவனிச்சிட்டானோ…”
என்று சொல்ல தோளை குலுக்கி,
“எனக்கு தெரியும்னு சித்தப்பாக்கே தெரியாது..” என்றவள்,
“அப்பாட்ட சொன்னா அம்மாக்கு தெரிஞ்சிடும்..அப்புறம் அம்மா, ‘உன் வயசு என்ன…பேசுற பேச்சு என்ன… சின்ன கழுதைனு..’ என் முதுகுல டின் கட்டிடுவாங்க..தேவையா எனக்கு..”
என்று விவரமாய் சொன்ன தன் மருமகளை கண்டு சிரிப்பு தான் பொங்கியது.
“இனி நீயாச்சு சித்தப்பா ஆச்சு..நான் தான் போட்டு கொடுத்தேன்னு யாருட்டையும் சொல்லாத த்தை..”
என்றவள்,
“பிங்கி பிராமிஸ் பண்ணு..” என்று சத்தியம் வாங்கிக் கொண்டு ஓடிவிட,
ஸ்ருதி ஜெகனிற்கு பொருத்தமானவள் தான் என்று சிரிப்போடு நினைத்துக் கொண்டாள் உதயா.
மதியம் உணவு வேளை தடபுடலாய் சென்றது.ஆழிக்கண்ணன்,தயாளன்,வெண்பா என்று அனைவரும் உதய்யை விழுந்து விழுந்து கவனிக்க திணறியவன் உதவிக்கு மனைவியை பார்க்க அவளோ தன் தட்டில் ஆழ்ந்து விட்டாள்.
யாரையும் கடிய முடியாமல் தன் தமக்கையை பார்த்து,
“நான் என்ன மறுவீட்டுக்கா வந்திருக்கேன்..ஏன் இப்படி..”
என்று பாவமாய் கேட்கவும்
“ஆமா..நீயே அபூர்வமா தான் இந்த பக்கம் தலைய காட்டுற..அப்ப எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சு தான் கவனிக்கணும்..”
என்று கிண்டலாய் சொல்ல, ‘கடவுளே..சோத்த போட்டு பழி வாங்கிறது இது தானா..’ என்று எண்ணியவன் உண்டு முடிப்பதற்குள் போதும் போதும் என்றானது.
அன்று முழுவதும் உதயாவை கையிலே பிடிக்க முடியவில்லை. லாவண்யாவை சீண்டி வெண்பாவோடு வம்பிழுக்கும் உதயா, காணொலியில் மட்டுமே பார்த்திருந்த அர்ஜூன் தவழ்ந்து வரும் காட்சியை நேரில் பார்த்து பூரிக்கும் உதயா, நிலாவோடு சேட்டை செய்யும் உதயா, தந்தை காலடியில் அமர்ந்து கதை பேசும் உதயா, அண்ணன்களோடு செல்லம் கொஞ்சும் உதயா என்று அவளையே அவன் கண்கள் சுற்றி சுற்றி வந்தது.
“முகத்தில் டௌசண்ட் வால்ட் பல்ப் எரியுது…இவ்வளவு மிஸ் பண்ணும்போது..ஏண்டி வீம்பா நான் வந்தா தான் வருவேன்னு அடம்மா ஊருக்கு வராமலே இருந்த..”
தனியாய் சிக்கியபோது அவளை பிடித்து நிறுத்தி கேட்க,
“இப்ப ரொம்ப ஹேப்பியா தான் இருக்கேன்..ஒத்துக்கிறேன்..ஆனா நீங்க கூட இல்லைன்னா அங்க தனியா என்ன பண்றீங்களோன்னு என் மனசு கிடந்து அல்லாடும்..உங்க நினைப்புல யாரிடமும் முகம் கொடுத்துக் கூட பேசியிருக்க மாட்டேன்..ம்ச்..அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது உதய்..”
என்று புன்னகையோடு சொல்லி சென்றாள்.
அதனை நினைத்து பார்த்து சிரித்துக் கொண்டவன் எப்போதிலிருந்து இவள் மேல் பித்துக் கொண்டோம் என்று யோசித்துப் பார்த்தாலும் பதில் கிடைக்கவில்லை.ஆனால் நாடி நரம்பு அனைத்திலும் உதயாவே நிறைந்திருக்க இவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது.
“என்ன உதய்..வந்ததில் இருந்து எதோ யோசனையிலே இருக்கீங்க..”
என்று அருகில் தயாளன் அமர,
“ஆங்..அப்படி எதுவும் இல்ல மாமா..”
என்றவனை ஆழமாய் பார்த்தவன்,
“நான் உங்களுட்ட ஒன்னு சொல்லலாமா உதய்..”
என்று கேட்கவும், “சொல்லுங்க மாமா..அதுக்கு ஏன் பர்மிஷென் எல்லாம் கேட்கறீங்க..”
என்று புன்னகையோடு சொல்ல,
“நான் பாட்டுக்கு சொன்னதும்..நீங்க உங்களுட்ட வந்து அட்வெய்ஸ் கேட்டேனான்னு சொல்லிட்டா…அதான் முன் கூட்டியே கேட்டுக்கிட்டேன்..”
என்றதும் அந்த புன்னகை மறைய அவனை சங்கடமாய் ஏறிட்டான்.
“எனக்கு எப்படி தெரியும்னு பார்க்குறீங்களா..? அன்னைக்கு நீங்க மதிண்ணாட்ட பேசும்போது நானும் கேட்டேன்..அப்ப நீங்க பேசினது கேட்டு செம்ம கோபம்..அந்த நேரம் நான் பேசியிருந்தால் பிரச்சனை வேற மாதிரி ஆகியிருக்கும்..அதான் தெரியாத மாதிரியே இருந்துட்டேன்..”
என்று சொல்ல அமைதியாகவே கேட்டுக் கொண்டான்.என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
“ஆனால் அப்படியே விடவும் எனக்கு மனசு இல்லை உதய்..உங்களையும் உங்க வேலையையும் அண்ணா கீழா பார்க்கிறதா நீங்க நினைக்கிறீங்க..அது அப்படி இல்ல உதய்..தப்பா போயிட்டால் நீங்க சஃபர் ஆகுவீங்களே என்ற அக்கறை மட்டும் தான்..தன்னைவிட தன்னை சார்ந்தவங்க நல்லா இருக்கணும்..அவங்களுக்கு எல்லாம் சரியா இருக்கணும்னு ரொம்பவே யோசிப்பார்..அந்த மாதிரி அன்பை யாராலும் கொடுக்க முடியாது..”
“கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க..அக்கறைன்ற பேருல உங்களை எல்லாம் அதிகாரம் பண்றார்ன்னு உங்களுக்கு புரியலையா மாமா..”
“அதிகாரமா..???”
“ஆமா..அவருக்கு சரினு படுறது தான் நீங்க எல்லாரும் செய்யணும்னு நினைக்கிறது அதிகாரம் இல்லாம வேறென்ன..”
என்றதை கேட்டதும் தயாளனிற்கு சிரிப்பு தான் வந்தது.சிரிப்புடன் மறுத்து தலையசைத்தவன்,
“நீங்க மேலோட்டமா பார்த்து பேசுறீங்க உதய்..நீங்க நினைக்கிறா மாதிரி எதுவுமே கிடையாது..”
என்றுவிட்டு,
“நான் காலேஜ் முடிச்சதும் என் ஃபிரெண்ட்ஸோட சேர்ந்து பிஸ்னெஸ் பண்ண போறேன்னு வந்து நின்னேன்..அப்பாக்கோ அண்ணனுக்கோ பிஸ்னெஸ்ஸில் எல்லாம் அனுபவமே இல்ல..எடுத்த உடனே பிஸ்னெஸா..? வேலை பார்த்த அனுபவமே இல்லாம எப்படிடா சமாளிப்பீங்க..? அதுவும் லோன் எடுத்து செய்ய போறீங்களா..நஷ்டம் வந்தால் என்ன செய்வீங்கன்னு அண்ணா சரமாரியா கேள்வி கேட்டாங்க..அது நான் கஷ்டப்பட கூடாதேன்ற அக்கறையில் தான்..
அப்புறம் என் இஷ்டம் அது தான் என்றதும் லோன் எல்லாம் வேணாம்டானு சொல்லி அவரோட சேவிங்ஸ் மொத்ததையும் எனக்காக கொடுத்துட்டார்…
ஜெகனுக்கும் அப்படி தான்..அவன் வேலை இல்லாமல் திரிஞ்சப்ப திட்டிட்டே இருப்பார்..இந்த வேலை செய்..அந்த வேலை செய்னு சொல்லிட்டே இருப்பார்..அவன் கூட பல சமயம் கடுப்பாகி இருக்கான்..ஆனால் அவன் ஆர்மில செலக்ட் ஆன பிறகு அவனுக்கு ட்ரைனிங் முடிஞ்சு அவன் டியூட்டில ஜாயின் பண்ற வரை அவனோட ஒவ்வொரு தேவையையும் பார்த்து பார்த்து செஞ்சார்..
அவ்வளவு ஏன் உதயாக்கு…!! அவளை படிக்க கூட வெளியூர் அனுப்பல..ஆனால் கேம்பஸ் இண்டர்வியூல செலெக்ட் ஆகி சென்னைல வேலை கிடைச்சதும் முதலில் பயந்தார் தான்..ஆனால் அதற்கப்புறம் அவ ஆபிஸ் இருந்து பிஜி வரை எல்லாத்தையும் தானே பார்த்து திருப்தி ஆன பின்னாடி தான் அவளை அனுப்பி வைத்தார்..
இந்த மாதிரி உதாரணம் சொன்னால் சொல்லிட்டே போகலாம்…நாம தவறிட கூடாதேன்னு எச்சரிக்கை பண்ணுவாரே தவிர நாம இஷ்டப்பட்டதுக்கு எப்பவும் தடையா இருக்க மாட்டார்..இதெல்லாம் ஏன் உங்களுட்ட சொல்றேனா..அன்னைக்கு அப்படி பேசினதும் இதே மாதிரி உங்க மேல உள்ள அக்கறையில் தான்..நீங்க தான் சரியா புரிஞ்சிக்கல உதய்.. இப்பவும் உங்களுக்கு நான் சொல்ல வரது புரியுதா தெரியல..ஆனா ஒன்னு..அவர் மனசு வருத்தப்படுறா மாதிரி என்னைக்கும் பேசிடாதீங்க..”
என்று தயாளன் சொல்லி முடிக்க பேச்சற்றவனாய் திகைத்து நின்றான்.நிச்சயம் இந்த கண்ணோட்டத்தில் அவன் யோசித்ததே இல்லை.
அந்நேரம் அங்கே வந்த உதயா,
“நாங்க எல்லாம் மாடில பட்டம் விட்டுட்டு இருக்கோம்..நீங்க மட்டும் என்ன இங்கேயே இருக்கீங்க..வாங்க வாங்க..”
என்றழைத்து விட்டு செல்ல அசையாது நின்ற உதய்யின் தோளின் கைவைத்து,
“வாங்க உதய்..” என்று அழைத்து வந்தான் தயா.
மாடியில் ஆளுக்கு ஒருப்புறம் நின்று பட்டம் விட மகளை தன் கைவளைவில் நிறுத்திக் கொண்டு சிரிப்போடு நூலை பிடித்துக் கொண்டு அவளுக்கு பட்டம் விட சொல்லிக் கொடுக்கும் மதியை பார்த்தான்.
மதிவாணன் என்ற மனிதனை நாம் தவறாகவே உருவகப்படுத்தி விட்டோமோ என்று முதன் முறையாய் ஞானோதயம் பிறக்க எங்கே தவறினோம் என்று தீவிரமாய் யோசிக்க தொடங்கினான் உதய்.