அத்தியாயம் – 31
நந்தினிக்கு மெல்ல மெல்ல சுயநினைவு திரும்ப தொடங்கியது. தனது உடலின் எடையைக் கூட உணர முடியாத weightlessness நிலையில் இருந்தாள் அவள். முதலில், தான் ஏதாவது நினைவுகளுக்குள் இருக்கிறோமா என்று எண்ணியவளுக்கு, டைட்டனுடன் சண்டை போட்டது நினைவுக்கு வர, தன்னிடம் ஈரின் கல் இல்லாததை உணர்ந்தாள். அந்த காற்றின் வேகம் அவளைத் திருப்பி விட, அவள் கண்களுக்கு ஓர் எரிமலை தெரிந்தது.
அதைக் கண்டு அதிர்ந்த நந்தினி, தன் கயா கிரக சக்திகளைப் பயன்படுத்த முயன்றாள். ஆனால், அவள் உடலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அப்படியும் மனம் தளராமல், வேறு ஏதாவது வழி கிடைக்குமா என்று யோசிக்க தொடங்கினாள்.
கீழே போர்க்களத்தில் துரிதமாக தங்கள் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருந்த லூனாவும், ஆக்கிலஸும் நந்தினி கீழே விழுவதைப் பார்த்து, அவளிடம் செல்ல முயல, நூற்றுக்கணக்கான விலங்குகள் அவர்கள் மேல் பாய்ந்தன. டிராகன்களையும் எழ விடாமல், அந்த விலங்குகள் கட்டுப்படுத்த, அவர்கள் அந்த இடத்தில் இருந்து அசையக்கூட முடியாத நிலைமைக்குச் சென்றனர்.
தாங்கள் உயிரோடு இருந்தும், நந்தினியைக் காப்பாற்ற முடியாத நிலையை எண்ணி கோபம் அடைந்த அக்கிலஸும் லூனாவும், அந்த உயிரினங்களை வேகமாகத் தாக்க ஆரம்பித்தனர். அங்கு, நந்தினிக்கு, “இதற்கு மேல் தன்னால் எதுவும் செய்ய முடியாது” என்று தோன்றவும், தனது மரணத்தைத் தைரியமாக எதிர்கொள்ளத் தயாரானாள்.
கண்களை மூடி, இதுவரை தன் மன பெட்டகத்தில் சேமித்து வைத்திருந்த ஒவ்வொரு நினைவையும் ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றாள். சிற்றரசர்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சேர்த்த ஆரியனும், ஆதியும் அங்கு திரும்பி போர்க்களத்திற்கு வந்தார்கள். அப்போது எதேச்சையாக ஆதி வானத்தைப் பார்த்திட, அங்கு யாரோ ஒருவர் விழுந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவனது உள்ளுணர்வு, அந்த உருவம் ‘நந்தினி’ என்று கூறியது.
ஆதி, “சனா !” என்று அலற, அப்போது தான் ஆரியனும் அந்தக் காட்சியைப் பார்த்தான். இருக்கும் அனைத்துத் தெய்வங்களையும் வேண்டிக் கொண்ட ஆரியன், ப்ரொமேத்தியஸின் கருவியை Activate செய்ய, அடுத்த நொடி அந்த விலங்குகள் அனைத்தும் சாந்தமாக மாறி, டிராகன்களைக் கண்டு ஓடின.
ஆரி, “ஹூர்ரே !” என்று கத்த, லூனாவும், அக்கிலஸூம் தங்கள் டிராகன்களை விண்ணை நோக்கிச் செலுத்தினர். ஆனால், அவர்கள் எவ்வளவு வேகமாகச் சென்றாலும், நந்தினி எரிமலைக்குள் விழுவதற்கு முன் பிடிக்க முடியாது என்று தோன்ற, தங்களது வேகத்தை இன்னும் அதிகரித்தனர்.
அவர்கள் எவ்வளவு விரைவாகச் சென்றும், நந்தினி அந்த எரிமலைக்குள் விழுந்தாள். லூனாவும், அக்கிலஸூம் அதிர்ச்சியில் நின்றுவிட, கீழே நின்றிருந்த ஆதிக்கும், ஆரியனுக்கும் என்ன நடந்தது என்று தெரியாததால், “ஏன் அவர்கள் இருவரும் அங்கேயே நின்று விட்டார்கள் ?”என்று சிந்தித்தனர். லூனா தான் எடுத்துக்கொண்ட சபதத்தில் தவறிவிட்டோம் என்று வேதனைக்கு உள்ளாக, அக்கிலஸ் அவளது முதுகைத் தட்டினான்.
அவள் அவனைத் திரும்பிப் பார்க்க, அவன் பேயறைந்தது போல் இருந்தான். லூனாவும் அவன் பார்த்துக் கொண்டிருந்த திசையில், தன் பார்வையைச் செலுத்த, அவளுக்கு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி ஏற்பட்டது. அங்கே நந்தினி ஒரு பறவையின் மீது பறந்து வந்து கொண்டிருந்தாள். கீழே இருந்த ஆதியும், ஆரியனும் மகிழ்ச்சியடைய, நந்தினியும், லூனாவும், அக்கிலஸூம் தரையிறங்கினர்.
அந்த இடத்திற்கு மற்ற இருவரும் வந்திருக்க, ஆதி அவளுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்து, எதுவுமில்லை என்றவுடன் சமாதானமானான். மற்றவர்கள் எதுவும் கேட்பதற்கு முன், நந்தினியே, அந்த ராட்சஸ பறவையைக் காண்பித்து, “மூமூ” என்றாள்.
அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைய, “ப்ரொமேத்தியஸ் எனக்குள்ள இருக்கிற சக்தியை வெளியே கொண்டு வரதுக்கு தான் என்னைய தாக்கியிருக்காரு. ஆனா, அது மூமூ மேலபட்டதால மூமூவுக்கு கயா கிரக சக்திகள் வந்திருச்சு” என்று நந்தினி கூற, மூமூ அவளது கன்னத்தைத் தன் முகத்தால் வருடியது.
ஆரியன், “நந்து, ப்ரொமேத்தியஸோட கருவி வேலை செஞ்சுருச்சு. இனிமே, டைட்டனுக்கு படையே கிடையாது” என்று கூற, நந்தினி அமைதியாகவே இருந்தாள். அவளது அமைதி அனைவருக்குள்ளும் பயத்தை விதைக்க, ஆதி, “சனா என்ன நடந்துச்சு ? நீ எப்படி கீழே விழுந்த ? அதாவது நீ ஏன் பறந்து வரல ?” என்று கேள்விகளை அடுக்கினான்.
நந்தினி கவலையுடன், “டைட்டன் என்னிடமிருந்து ஈரின் கல்லை எடுத்து விட்டான்” என்று கூறினாள். அந்த வாக்கியம் கொடுத்த அதிர்ச்சியில், அடுத்து அவர்களால் எதையுமே பேச முடியவில்லை. சிறிது நேரம் கழித்து அக்கிலஸ், “க்ரிசான்டா, இப்பொழுதும் ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. கன்வர்ஜென்ஸ் தொடங்குவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. நாம் அதற்குள் எப்படியாவது அவனை வென்று விடலாம்” என்றான்.
நந்தினி, “இப்போது அவனுக்கு அதிக சக்திகள் கிடைத்துவிட்டது. நம்மால் எவ்வளவு போராடினாலும் அவனை வெல்வது கஷ்டம் தான்” என்றாள்.
லூனா, “எல்லா பெரிய பிரச்சனைக்கும் ஒரு சின்ன தீர்வு தான் இருக்கும். ஏதாச்சும் யோசிப்போம்” என்றாள்.
நந்தினி, “இல்ல லூனா, இப்ப மறுபடியும் நாம டைட்டன ஜெயிச்சாலும், அவனோட ஒரு பகுதி நினைவு” என்று கூறிக் கொண்டிருந்தவளுக்கு, மின்னலென ஒரு யோசனை மனதில் தோன்றியது.
நந்தினி உடனே, “டைட்டனோட பெரிய பலமே, அவன் தன்னோட உடல மூன்று பாகமாகப் பிரிப்பது தான். நாம எவ்வளவு தான் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், டைட்டனோட நிழல் உருவத்தை ஜெயிக்க முடியாது. ஆனா, அவனோட நினைவுகளை ஒரு பாகமாக வச்சுகிட்டு, அவனுடைய சக்தியை அதிகமாக்குற கருவிய நாம அழிச்சோம்னா, டைட்டன வெற்றி பெறுவதற்குக் கொஞ்சம் வாய்ப்பு இருக்கு” என்றாள்.
அக்கிலஸ், “க்ரிசான்டா, டைட்டனோட அந்தக் கருவியை நாம இப்ப எங்கே தேடுவது ? டைட்டன் அதை இந்தக் கிரகத்தில் வைத்திருப்பானா என்பதே சந்தேகம் தான். அப்படி வைத்திருந்தாலும் அது வெலாரிஸ் கோட்டையில் இருக்கத் தான் அதிக வாய்ப்பிருக்கு. ஆனால், டைட்டன் வெலாரிஸ் கோட்டையையும் அழித்துவிட்டானே ?” என்று கேட்க,
நந்தினி, “நீங்க எல்லாரும் டைட்டன பத்தி இன்னமும் முழுசா புரிஞ்சுக்கல. டைட்டன் அவ்ளோ முக்கியமான கருவிய எல்லாருக்கும் தெரியக்கூடிய இடத்துலயா வச்சிருப்பான். அதனால் தான், டைட்டன் இத பத்தி சொல்லும் போது கொஞ்சம் தூண்டி விட்டேன். அப்ப அவன் பொசய்டனோட மனைவி அந்தக் கருவியைக் கண்டெடுத்ததா சொன்னான். அப்படின்னா அந்தக் கருவி இருக்கிற இடம்” என்று கூறியவளை இடைமறித்து,
அக்கிலஸூம், லூனாவும், “House of Knowledge” என்று ஒருமித்த குரலில் கூறினர்.
நந்தினி, “ஆமாம் நாம இப்ப அடுத்து அங்கதான் போறோம்” என்று கூறியவள் தொடர்ந்து, “எல்லாரும் சீக்கிரம் ஏறுங்க, நமக்கு அதிக நேரம் இல்லை” என்று கூறிவிட்டு, தனது சகோதரன் மூமூவின் மேல் ஏறி அமர்ந்தாள். மூமூவும் நந்தினி எதுவும் கூறாமலே, பறக்கத் தொடங்கியது.
மற்ற நால்வரும் முன்னர் மாதிரியே, இரு டிராகன்களில் அமர்ந்து கொள்ள, டிராகன்களும் பறக்கத் தொடங்கின. சிறிது நேரத்தில் அனைவரும் அங்கு வந்துவிட, அந்தச் சின்ன வீடு போலிருந்த கட்டிடத்தை நோக்கி நடந்தனர். அதற்குள் நுழையும் முன், ஆரியன், “கண்டிப்பா இந்த இடத்தில அந்தக் கருவி இருக்கும்னு யாருமே நினைக்க மாட்டாங்க” என்றான்.
நந்தினிக்கு அந்த இடத்தை தன் நினைவலைகளில் முன்னரே பார்த்திருந்ததாலும், அந்தக் கருவியை எப்படிக் கண்டுபிடிப்பது என்று குழப்பம் ஏற்பட்டது. அவர்கள் நால்வரும் அந்த அறைக்குள் நுழைய, அங்கு புத்தக அடுக்குகள் எல்லையில்லாமல் பரந்து விரிந்திருந்தன. அதைக் கண்ட ஆதி மலைத்துப் போனான்.
அக்கிலஸ் அதை வாய் விட்டே, “அந்தக் கருவி எப்படி இருக்கும்னு தெரியாது. அப்புறம் எப்படி இவ்வளவு பெரிய இடத்தில் அதைக் கண்டு பிடிக்கிறது ?” என்று கேட்டான்.
நந்தினி, “முடிஞ்ச அளவுக்குப் பார்க்கிறதுக்கு ஏதாவது வித்தியாசமா இருக்கானு பாருங்க. அது ஒரு சின்ன குறியீடா இருந்தா கூட, அதை வச்சு அந்தக் கருவிய நாம சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம்” என்றாள்..
மற்ற நால்வருக்கும், அவள் கூறியதில் சிறிதளவு கூட நம்பிக்கை இல்லையெனினும், வேறு வழியும், நேரமும் இல்லாததால் பிரிந்து போய் தேட ஆரம்பித்தனர்.
நந்தினி அந்த இடத்திலிருந்த செலினாவின் சிலையைப் பார்த்தாள். “செலினா ! நீங்க எங்க இருக்கீங்கன்னு எனக்கு தெரியல. ஆனா, எப்பயும் விட இப்போ தான் கயா கிரகத்துக்கு உங்க உதவி அதிகமாக தேவைப்படுது. சீக்கிரம் வாருங்கள்” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
பிறகு அவளும் ஓர் இடத்திற்குச் சென்று தேட தொடங்கினாள். அப்படியே வினாடிகள் நிமிடங்களாக மறுவி கொண்டிருந்தன. எவ்வளவு தேடியும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
ஆதி நந்தினியிடம் வந்து, “சனா ! இனியும் நாம் டைம் வேஸ்ட் பண்ணக் கூடாது. சீக்கிரமா மத்த சிற்றரசர்களோடு சேர்ந்து, டைட்டன தடுக்கவாவது முயற்சி பண்ணலாம்” என்றான்.
நந்தினி யோசித்துக் கொண்டிருக்கும் போது, தூரத்தில் ஏதோ ஒரு கல்லறை இருப்பது தெரிய, நந்தினி அதை நோக்கி ஓடினாள். மற்ற நால்வரும் என்னமோ ஏதோ என்று அவளுக்குப் பின் ஓடிவர, அவள் அந்த கல்லறையைப் பார்த்தவுடன், அது டைட்டனோடது என்று புரிந்து கொண்டாள்.
ஆதி, “இங்க இந்த கல்லறை இருக்குனு உங்க ரெண்டு பேருக்கும் முன்னாடியே தெரியாதா ?” என்று அக்கிலஸிடமும், லூனாவிடமும் கோபமாகக் கேட்க, அக்கிலஸ் பதில் கூறுவதற்கு முன்,
நந்தினி, “ஆதி, ஏன் டென்ஷன் ஆகுற ? ப்ரொமேத்தியஸ் தான் இந்த house of knowledge -ஐ மூடி இருப்பார். அவர்களோட உயிர காப்பாத்திக்க போராடுன அந்த நேரத்தில அவங்க எப்படி இங்கலாம் வந்திருப்பாங்க ?” என்று கேட்டாள். ஆதிக்கு அவள் கூறியது புரிந்தாலும், அக்கிலஸை முறைப்பதை நிறுத்தவில்லை.
அவனைப் புன்சிரிப்போடு பார்த்த அக்கிலஸ், அந்த கல்லறையின் மூடியைத் தனது முழு பலம் கொண்டு திறந்தான். ஆனால், அதில் எந்த பொருளுமே இல்லை. அனைவரது நம்பிக்கையும் வடிந்து விட, நந்தினி தனக்கு இருந்த கடைசி வாய்ப்பும் கைநழுவி விட்டதை உணர்ந்தாள். அப்போது அந்த கல்லறையிலிருந்த ஒரு சின்ன குறியீடு அவளது கவனத்தைக் கவர்ந்தது.
அதை அவள் உற்றுப் பார்க்க, அதில் ஒரு முக்கோணமும் அதற்குள் ஒளி சுடர்விடும் ஓர் ஒற்றைக் கண்ணும் இருந்தது. அதைப் பார்த்தவுடன், நந்தினிக்கு அதன் அர்த்தம் விளங்கிட, அதே குறியீட்டை அன்று வேறு எங்கோ பார்த்தது நினைவு வர, சில நொடிகளில் அது எந்த இடம் என்று விளங்கியது.
நந்தினி, உடனே செலினாவின் சிலையை நோக்கி ஓடினாள். இந்த முறையும் மற்ற நால்வரும் அவளைப் பின்தொடர, அவள் செலினாவின் சிலைக்கு அடியில் அதே சின்னம் இருப்பதைப் பார்த்துவிட்டு, “இந்த சின்னத்தை தான் நாம Eye of Providence-னு சொல்லுவோம். இது knowledge-அ குறிப்பதற்காக பயன்படுத்தப் படும் குறியீடு” என்று கூறி விட்டு, அதை அழுத்தினாள். ஒரு சிறிய ஒளி வெளிப்பட, அவரது சிலை மெல்ல உயர்ந்தது. அதற்கு அடியில் கையளவே உள்ள ஒரு சிறிய உருண்டையான பொருள் இருந்தது.
அனைவரும் அதை வியப்புடன் நோக்க, ஆதி, “கண்டிப்பா இது செலினாவோட சிலைக்கு அடியில இருக்கும்னு யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்” என்றான்.
நந்தினி அதைக் கவனமாக எடுக்கவும், அது ஒளிரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில், அது அவர்கள் கண்களைத் திறக்க முடியாமல் செய்ய, நந்தினி அதை ஓங்கி ஒரு இடத்தை அனுமானித்து தூக்கிப்போட, அது சிதறிய சத்தத்துடன், அங்கு ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. அக்கிலஸ் அவர்கள் அனைவரையும் மறைத்துவிட, மற்றவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. ஆனால், அவன் உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டான்.
மற்ற நால்வரும் பதறி, அவனைத் தூக்க முயல, அவன் சிரமப்பட்டு நந்தினியிடம், “க்ரிசான்டா ! இனி இதைக் கூறுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால், உங்களிடம் இதைச் சொல்லி விட்டேன் என்ற திருப்தியாவது எனக்குக் கிடைக்கும். நீங்கள் ஆதித்யனைக் காதலிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் நான் உங்கள் மீது பேரன்பு வைத்திருக்கிறேன்” என்று தான் கூற வேண்டியதை கூறி முடித்தவன் போல், கண் மூடினான் அக்கிலஸ்.
நந்தினிக்கு, தான் எப்படி உணருகின்றோம் என்றே தெரியவில்லை. “தன்னுடைய அவசரத் தனத்தால் தன் மீது மதிப்பு வைத்திருந்த ஒருவனின் இறப்புக்குக் காரணமாகி விட்டோமே” என்று நினைத்தவள், அவன் இறுதியாகக் கூறியதைக் கேட்டு வருந்தினாள்.
ஆனால், அப்போதைய நிலைமையை உணர்ந்தவள், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, “ஆரி, நீ அக்கிலஸ கூட்டிக்கிட்டு சீக்கிரம் மெட்லடன்ட்ட போ” என்றவள், மற்ற இருவரையும் பார்த்து, “வாங்க, நாம டைட்டனோட இறுதி அத்தியாயத்த எழுதலாம்” என்று கூறினாள்.
அந்த வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள், டிராகன் மீது ஏறி அமர்ந்தார்கள்.
ஆரியன், “இத எப்படி ஓட்டுறது ? அதாவது எப்படி கூட்டிட்டு போறது ?” என்று கேட்க, லூனா அந்த டிராகனின் தலையில் கை வைத்தாள். சில நொடிகளில் அது பேரிரைச்சல் வெளியிட்டதில், ஆரியனின் அலறல் மறைந்தது. அடுத்து நந்தினி மூமூவின் மீது ஏறிக்கொள்ள, ஆதியும், லூனாவும் மற்றொரு டிராகன் மீது ஏறிக் கொண்டார்கள்.
அவர்கள் அனைவரும் சோல் பாக்ஸை நோக்கிப் பறந்தனர். சில நொடிகளில், அவர்கள் அந்த இடத்துக்கு வந்து விட, அங்கே ஆர்கஸ், எரேகன் மற்றும் நிகேடர் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்க, அவர்களைச் சுற்றி வீரர்கள் நிறையப் பேர் நின்றிருந்தனர்.
டைட்டன் சோல் பாக்ஸிற்கு அருகிலேயே காத்திருந்தான். அவன் மனதில், “இன்னும் சில நிமிடங்கள்” என்ற வார்த்தைகளே ஒலித்துக் கொண்டிருந்தது. இனியும் தாமதிக்க கூடாது என்று நினைத்த நந்தினி, செலினாவை நினைத்துக் கொள்ள, அவள் உடலைச் சுற்றித் தங்க நிற கதிர்கள் தோன்ற ஆரம்பித்தன.
அவள் மூமூவின் தலையைத் தொட, மூமூ ஓர் ராட்சஸ நெருப்புப் பறவையாக மாறியது. நந்தினி, “தாக்குங்கள்” என்று கத்தி விட்டு, கீழே குதித்தாள். அவளைக் கவனித்து விட்ட டைட்டன், ஈரின் கல்லைப் பயன்படுத்தி, மேலும் பல வீரர்களை உருவாக்கி அனுப்பினான்.
மூமூவும், டிராகனும் அக்னி வீழ்ச்சியை ஊற்றத் தொடங்க, நந்தினியும், லூனாவும் வீரர்களைத் தாக்கத் தொடங்கினர். அதிவேகமாக வீரர்களை அடித்துக் கொண்டே, சிற்றரசர்கள் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்ற ஆதி, அவர்கள் கையில் கட்டப்பட்டிருந்த, ஏதோ ஒரு alloy- யால் ஆன வலிமையான கயிற்றை அறுக்கத் தொடங்கினான்.
அந்த வீரர்களை அழிக்க அழிக்க, அந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே தவிர குறையவில்லை. நந்தினிக்கு தன் சக்திகள் குறைந்து கொண்டே வருவது போலத் தோன்றியது. டைட்டன் கன்வர்ஜென்ஸுக்கு இன்னும் சில வினாடிகளே இருக்க, சோல் பாக்ஸை திறக்கும் நினைவை அதற்குள் அனுப்பினான்.
நந்தினிக்கு தன் சக்தி முழுவதுமாக வடிந்தது போலிருக்க, அந்த வீரர்களைத் தாக்க முடியாமல் நின்றாள். ஆதியும், லூனாவும் அவளை கவனித்து விட்டு, அவள் அருகில் செல்ல முயற்சி செய்தனர். அப்போது ஆரியன், மற்றொரு டிராகனில் வந்து நந்தினியைத் தூக்கிக் கொண்டான்.
ஆரியன், “என்னாச்சு நந்து ? ஏன் சண்டை போடாம அப்படியே நின்னுட்ட ?” என்று கேட்க, அவள் உடல் முழுவதும் திடீரென்று தங்க நிறத்தில் ஜொலிக்க ஆரம்பித்து. வழக்கம் போல் இல்லாமல், அவள் வித்தியாசமாக உணர, அந்த டிராகனை விட்டுக் குதித்து, மூமூ மேல் ஏறிக் கொள்ள, மூமூவின் உடலிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.
ஆரியன், “நந்து ! நந்து !” என்று கூப்பிட்டுப் பார்த்து, அவள் கேட்காமல் போகவும், டிராகனை திருப்ப முயன்றான். அந்த டிராகன் அவன் திருப்பும் திசையில் திரும்பாமல், லூனாவை நோக்கிச் சென்றது.
அதற்குள் அந்த சோல் பாக்ஸிலிருந்து வந்த பேரொளி, சுற்றியிருந்த இடத்தை நிரப்பியது. சில நொடிகளில் டைட்டன் அந்த சோல் பாக்ஸ் இருந்த இடத்தை விட்டு வெளியே வர, அவன் உடலைச் சுற்றி Energy waves (சக்தி அலைகள்) உருவாகி இருந்தன.
சோல் பாக்ஸிலிருந்து சக்தியைப் பெற்றுக் கொண்டிருந்தான் டைட்டன். நந்தினி அதற்குள் முழுமையாக செலினாவின் ரூபத்திற்கு மாறி இருந்தாள். மூமூவும் சிவப்பும் தங்கமும் கலந்த விழிகளைக் கொண்டு, டிராகன்களைவிட பெரிதாக மாறியது.
டைட்டன், ஈரின் கல்லில் இருந்த நிகேடரின் சக்தி மூலம், ஒரு ராட்சஸ விலங்கை உருவாக்கினான். சரியாக அதே நேரம் நந்தினி அவன் முன் வந்து நிற்க, டைட்டன் வியப்பின் உச்சிக்கே சென்றான். அவன் வாய் தானாகவே, “செலினா” என்று முணுமுணுக்க, நந்தினிக்குள் இருந்த செலினா, விஸ்வரூபத்தை எடுத்து அவன் முன் நின்றார்.
“நீ இத்தனை ஆண்டுகள் எந்தக் கருவியை வைத்து என்னை அடக்கி வைத்திருந்தாயோ, அதை க்ரிசான்டா அழித்து விட்டாள், டைட்டன். இப்போது வா வந்து உன் திறமையைக் காட்டு” என்று செலினா கூற, டைட்டன் பாய்ந்து வந்தான். இரு விலங்குகளும் மோதிக் கொள்ள, நந்தினியும் (செலினாவும்), டைட்டனும் ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கினர்.
அவர்கள் இருவரும் தாக்கிக் கொள்வது, இரு மத யானைகள் சண்டையிடுவது போலிருந்தது. ஆனால், சிறிது நேரத்திலே செலினாவின் ஆன்மா நந்தினியை விட்டு விலகிவிட, அவரைப் பார்த்துச் சிரித்த டைட்டன், “கன்வர்ஜென்ஸ் முழுமை அடைந்து விட்டது, செலினா. இனி சில நிமிடங்கள் உங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறிவிட்டு நந்தினியை நோக்கி சக்தி கதிர்களை எறிந்தார்.
நந்தினிக்கு, “அப்படியென்றால் இவ்வளவு வருடம் செலினா எனக்குள் தான் இருந்தாரா ?” என்ற கேள்வி எழ, அப்போதைக்கு அதைத் தள்ளி வைத்து விட்டு, எதிர்த் தாக்குதல் நடத்தினாள்.
அதற்குள் கயா கிரகத்திலிருந்த சிற்றரசர்களும், அங்கு வந்து சேர, அந்த சிறு கோளில் இருந்த, அனைத்து வீரர்களையும் அழித்தனர். அதற்குள் நந்தினிக்கும், டைட்டனுக்கும் நேரிடையாகவே சண்டை தொடங்கியிருக்க, எதையும் செய்ய முடியாத தவிப்புடன் நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார் செலினா.
ஏழு சிற்றரசர்களும் சேர்ந்து, “செலினா தங்கள் முன்னோரிடம் அவர்கள் ஏழு பேரும் இணைந்தால் ஈரின் கல்லைப் பிரிக்க முடியும்” என்று கூறியதை நினைவில் கொண்டு, அதைச் செயல்படுத்த வட்டமாக அமர்ந்து, தங்களது நினைவுகளை ஒன்றாகச் சேர்க்க ஆரம்பித்தனர்.
நந்தினி, ஆதி, ஆரியன் மற்றும் லூனா டைட்டனை எல்லா திசையிலிருந்தும் தாக்கத் தொடங்கினர். அவனது சக்திகளும் சோல் பாக்ஸால் அதிகரித்துக் கொண்டே இருக்க, அவர்கள் நால்வரும் அவனைச் சமாளிக்க முடியாமல் தடுமாறினர். அப்போது திடீரென்று டைட்டனை ஒரு சக்தி கதிர் தாக்க, அவன் வலியில் துடித்தான். அவன் உடலிலிருந்து ஈரின் கல்லைப் பிரித்து, மீண்டும் அதை நந்தினிக்குள் செலுத்தினர் ஏழு சிற்றரசர்களும்.
நந்தினி மறுபடியும் கவசங்களோடு மாறிட, டைட்டன் தனக்கு வந்த கோபத்தை அடக்க முடியாமல், தன் சக்திகளை ஒன்று திரட்டி ஆரியன் மேல் எறிந்தான். கண் மூடி கண் திறக்கும் நேரத்தில் இது நடந்துவிட, ஆரியன் தான் இறக்கப் போவதை நினைத்து, லூனாவை மனதில் நினைத்தான். அந்தச் சக்தி கதிரை விட வேகமாகச் சென்ற லூனா, ஆரியனுக்கு முன் வந்து நின்றாள். சரியாக அதே சமயம் லூனாவை தாக்கியது, அந்தச் சக்தி கதிர்.
லூனாவின் அலறல் சத்தம் அந்த இடத்தை அதிர செய்ய, அவள் தூக்கி எறியப்பட்டாள். இவையெல்லாம் இரண்டு நொடிகளிலேயே நடந்து முடிந்துவிட,
ஆரியன், “லூனா !” என்று கத்திக் கொண்டு, அவளை நோக்கி ஓடினான். அதைப் பார்த்த நந்தினியின் கண்கள் சிவக்க, தன் மொத்த சக்திகளையும், ஈரின் கல்லுடைய சக்திகளையும் சேர்த்துத் துளி கூட விடாமல், டைட்டன் மீது செலுத்தினாள். அந்தச் சக்தியையும் டைட்டன் உறிஞ்ச ஆரம்பிக்க, ஏற்கனவே சோல் பாக்ஸிலிருந்து வந்த சக்தியும் சேர்ந்து அவன் உடலில் சேர தொடங்கியது.
ஆதித்யன் தன் சக்திகளைச் செலுத்த, சிற்றரசர்களும் அவனைத் தாக்கினார்கள். டைட்டனின் சக்திகளைச் சேகரித்துப் பயன்படுத்த வைத்திருந்த கொள்கலன்கள் நிரம்பத் தொடங்க, இரு டிராகன்களும் மூமூவும் தங்கள் பங்கிற்கு டைட்டன் மீது அக்னி ஜுவாலைகளால் அபிஷேகம் செய்ய, சில நிமிடங்களில் டைட்டன் அலறத் தொடங்கினான்.
திடீரென்று நந்தினிக்கு ப்ரொமேத்தியஸ் இறக்கும் போது கூறிய வார்த்தையான, ‘பிரம்ம கிரந்தம்’ நினைவுக்கு வர, அவள் ஒரு புதிய திட்டத்தைத் தீட்டினாள். தன் மனதில் பிரம்ம கிரந்தத்தை நினைக்க, அது கயா கிரக பேரரசியின் முன் தோன்றியது. அதில் பல நூற்றாண்டுகளாகச் சேமித்து வைக்கப் பட்டிருந்த நினைவுகளை, ஈரின் கல்லின் உதவியுடன் சக்தியாக மாற்றி டைட்டன் மீது செலுத்தினாள். அதுவரை லூனாவின் அருகிலிருந்து அவளை எழுப்ப முயன்ற ஆரியனும், டைட்டனைத் தாக்க அந்த container- கள் வெடிக்கத் தொடங்கின.
டைட்டனின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட, அவன் உடலிலிருந்த அதிகமான சக்திகள் சோல் பாக்ஸூக்குள் செல்லத் தொடங்கின. சிறிது நேரத்தில், டைட்டன் உடல் முழுக்க காயத்துடன், அவர்கள் முன் மண்டியிட, அவன் உடலிலிருந்து அனைத்து சக்திகளும் சோல் பாக்ஸூக்குள் சேமிக்கப்பட்டன.
வல்கன் அந்த சோல் பாக்ஸுக்கு அருகே சென்று, அதில் ஏதோ செய்ய, அதிலிருந்த கோடிக்கணக்கான மலர்கள் கயா கிரகத்தை நோக்கிப் பறந்து செல்ல தொடங்கின. இதை அனைத்தையும், யாராலும் பார்க்க முடியாமல் அரூபமாக நின்று, கவனித்துக் கொண்டிருந்தார் செலினா. மெட்லடன் லூனாவுக்கு தன்னிடம் இருந்த அமிர்தத்தைக் கூட கொடுத்துப் பார்க்க, அப்பவும் லூனா எழவில்லை.
க்ரோனன், தன் மகளை அந்த நிலையில் கண்டு கண் கலங்கி நின்றார். ஆரியன், லூனாவை மடியில் போட்டுக் கொண்டு, எதுவும் கூறாமல் அமர்ந்திருந்தான். அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை.
அவன் நிலையைக் கண்டு, ஆதி அவனைச் சமாதானப்படுத்த முயல, “நான் எதற்குக் கவலை படனும், ஆதி ? இது வரை என் கூட வர முடியாதுன்னு சொன்ன லூனா, இப்போ என் நினைவுகளோடு கலந்துட்டா, எனக்கு அது போதும்” என்றான். அவன் கூறியதில் பின் பாதியை மட்டும் புரிந்து கொண்ட ஆதி, அவனைத் தட்டிக் கொடுத்தான், தனக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்.
கன்வர்ஜென்ஸின் வீரியம் குறையத் தொடங்க செலினா மறுபடியும் உருவம் பெறத் துவங்கினார். நந்தினிக்கு அருகில் வந்தவர், “க்ரிசான்டா உன்னிடம் பேரரசிக்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது. நீ கயா கிரகத்தை மட்டும் காப்பாற்றவில்லை. என்னையும் சேர்த்து இந்த அண்டச் சராசரத்தையே காப்பாற்றி இருக்கிறாய். அதற்கு நாங்கள் அனைவரும் உனக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். சரி, அதற்கு முன் நாம் டைட்டனின் நினைவுகளையும் சேர்த்து அழித்து விடுவோம்” என்றார் தரையில் வெறும் நினைவுகளோடு மிஞ்சியிருந்த டைட்டனை பார்த்து.
நந்தினி, தன் முன்னால் உடல் அழிந்து உடலோடு நினைவுகள் மட்டும் ஒட்டப்பட்டிருந்த டைட்டனைக் கண்டு, “என்னால் முடியாது, செலினா” என்றாள். அனைவரும் அவளை அதிர்ச்சியோடு பார்க்க, அதுவரை அமைதியாக இருந்த ஆரியன், அவள் முன் வந்து, “நந்து ! அங்க பாரு லூனா எப்படி கிடக்குறானு, நம்ம எல்லாரோட உயிரைக் காப்பாற்றின லூனாக்கு நீ கொடுக்கிற மரியாதை இதுதானா ?” என்று கோபமாக் கேட்டான்.
ஆதியும், “சனா நீ என்ன சொல்ற ?“ என்று கேட்க, மற்ற அனைவரும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை. பின்னே யாரை அழிப்பதற்காக அனைவரும் இருபத்து நான்கு ஆண்டுகளைத் தியாகம் செய்தனரோ அவனைக் கொல்ல வேண்டாம் என்று கூறினால் ?
செலினா, “க்ரிசான்டா, நீ தவறான ஆள் மீது இறக்கம் காட்டுகிறாய். இனியும் டைட்டனை அழிக்காமல் விட்டால், அது நம் அனைவருக்கும் ஆபத்து” என்றார்.
நந்தினியின் மனதில், ப்ரொமேத்தியஸ் கூறிய ‘TITAN LIVES ‘என்ற வாசகமே எதிரொலிக்க, ஒரு முடிவெடுத்து விட்டு, “நான் பேசுவதில் ஏதாவது தவறு இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள், செலினா. ஆனால், நீங்கள் அனைவரும் ஒரு விஷயத்தை யோசிக்கவில்லை. டைட்டன் இப்படி ஆவதற்குக் காரணம் யார் ? நாம் தான். அவர் கண்டுபிடிப்பைப் பற்றிக் கூறிய போது, அதன் மொத்த தாக்கத்தைப் பற்றி நீங்கள் யோசித்து அவருக்கு விளக்கிப் புரிய வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், அந்தத் திட்டத்தை முழுவதுமாக மறுத்திருக்க வேண்டும். ஆனால், நீங்களோ அந்தச் சக்திகளை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து, டைட்டனின் இயல்பை மாற்றி விட்டீர்கள். அவன் செய்த ஒரு தவறைப் பற்றி யோசித்த நீங்கள், அதற்கு முன் அவனால் இந்த கயா கிரகம் எந்த அளவு வளர்ச்சி அடைந்தது என்று ஒரு முறையாவது யோசித்துப் பார்த்தீர்களா ?” என்று கேட்க,
செலினா உட்பட அனைவரும் வாயடைத்துப் போயினர். நந்தினி தொடர்ந்து, “முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும். ஆனால், டைட்டனுடைய நினைவுகளை நல்ல வழியில் பயன்படுத்தினால், அதனால் ஏற்படும் லாபத்தை யோசித்துப் பாருங்கள்” என்று கூறி முடித்தாள்.
செலினா, “நான் நினைத்ததை விட நீ புத்திசாலி, க்ரிசான்டா” என்று மறைமுகமாக தன் சம்மதத்தைத் தெரிவித்தார். மற்ற சிற்றரசர்களும் அந்த முடிவிற்கு ஒத்துக்கொள்ள, ஆரியன், “இவரது நினைவுகளை எதில் அடைத்து வைப்பது, நந்து ?” என்று கேட்க, அவனைத் தாவிக் கட்டிக் கொண்ட நந்தினி, “தாங்க்ஸ், ஆரி !” என்று கூறியவள், அனைவரிடமும் பிரம்ம கிரந்தத்தைக் காட்டினாள்.
செலினாவும் நந்தினியும் சேர்ந்து, டைட்டனின் நினைவுகளைப் பிரம்ம கிரந்தத்திற்குள் செலுத்தினர். அந்த புத்தகத்தில் ஒரு மாபெரும் கிரகத்தையே ஆட்டிப்படைத்த வீரனின் நினைவுகள் நிரப்பப்பட்டன. பிறகு செலினா நந்தினியிடம் சென்று, ஏதோ கூற அவள் அதை கேட்டு எந்தவிதமான அதிர்ச்சியும் அடையவில்லை.
ஆரியனைப் பார்த்து, “அன்று நீயும் லூனாவும் பேசிக்கொண்ட பிறகு நீ உன்னோட அறையில புலம்புனத நான் கேட்டுட்டேன், ஆரி” என்று கூற, அவன் அதிர்ச்சி அடைந்தான்.
என்ன விஷயம் என்று புரியாது முழித்த ஆதியிடம், அனைத்தையும் கூறினான் ஆரியன். அதைக் கேட்டு, ஆதி, “நோ !” என்று கத்திவிட்டு, நந்தினியிடம் வந்து, “ஆரியா சொல்றதெல்லாம் உண்மையா சனா ?” என்று தன் மொத்த நம்பிக்கையையும் கண்களில் தேக்கிக் கேட்க, நந்தினி தலையசைத்து விட்டு, குமுறி அழத் தொடங்கினாள்.
இவ்வளவு நேரம் கம்பீரமாகப் பேசியவள், தன்னால் இப்படி ஆகிவிட்டாள் என்ற எண்ணம் ஆதிக்குத் தோன்ற, கண்களைத் துடைத்துக் கொண்டு, அவன் அவள் அருகில் வந்து, ”என் கண்ணைப் பார், சனா” என்று கூறியவுடன், நந்தினி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
ஆதி, “நம் காதல் எப்பவுமே உன்னை சப்போர்ட் பண்ணனும். உன்ன பலவீனப் படுத்தக் கூடாது. நாம் இரண்டு பேரும் ஒண்ணா கழித்த நினைவுகளே எனக்கு போதும், சனா. இனி நீ க்ரிசான்டா மட்டும் தான்” என்று கூறியவன், அவளை ஒரு முறை தன் மனதில் நிரப்பிக் கொண்டு, செலினாவின் முன் சென்று நின்றான். லூனாவை கடைசி முறையாகப் பார்த்துக் கொண்ட ஆரியனும், அவர் முன் வந்து நிற்க, இருவரும் நந்தினியைப் பார்த்து, “Good bye Nandhini” என்று கூறிவிட்டு, செலினாவை வணங்கினர்.
அதற்குள் செலினா ஒரு porthole-ஐ உருவாக்கியிருக்க, அதற்குள் இருவரும் நுழைந்தனர். நந்தினி வேகமாகச் சென்று, செலினாவிடம் ஏதோ சொல்ல, அவளைப் பரிவுடன் பார்த்தவர், தலையாட்டினார்.
நந்தினியும், ஆதித்யனும் ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டு தொலைவிலிருந்தாலும், அவர்களது காதல் இன்டர்ஸ்டெல்லர் முழுவதும் நிரம்பி இருந்தது.
இன்டர்ஸ்டெல்லர் காதல் முற்றுப்பெற்றது…